28 June 2013

தற்போதைய சைட்டுகள் – 001


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எரிக்கா ஃபெர்னான்டெஸ் – தினசரி பீச்சு டூ தாம்பரம் ரூட்டில் பயணம் செய்பவர்கள் எரிக்காவை எளிதாக கடந்துசெல்ல முடியாது. ஏதோ ஒரு பட்டுப்புடவை / நகைக்கடையின் மாடல், கடையின் பெயர் நினைவில் இல்லை. ரயிலிலிருந்து இறங்கி ஏதோ மன அழுத்தத்தோடு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு விரைந்துக்கொண்டிருப்போம். சட்டென சுவரோடு ஓட்டிக்கொண்டே வெட்கப்பட்டபடியே நம்மைப் பார்க்கும் எரிக்காவின் எரித்துவிடக்கூடிய பார்வை அத்தனை டென்ஷன்களையும் விரட்டியடித்துவிடும். மிஸ் மகாராஷ்டிரா 2011. ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தாயிற்று. பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் 555 படத்தில் எரிக்காதான் நாயகி. அதில்லாமல் இன்னுமிரண்டு தமிழ் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சன் மியூசிக் ஜெர்ரி – காலையில் தொலைக்காட்சியை உயிர்பித்ததும் முதலில் ஜெர்ரியின் முகத்தில் தான் விழிக்கிறேன். அதன்பின்பு அணைக்கத்தான் முடியாது, தொலைக்காட்சியை. பத்திலிருந்து பதினோரு மணிவரை சன் மியூசிக்கில் ஜெர்ரியின் ராஜாங்கம். நம்மை அலுவலகத்திற்கு கிளம்பவிடாமல் உட்கார வைப்பதில் ஜெர்ரிக்கு அவ்வளவு சந்தோஷம். ஆரம்பத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி ஏதோவொன்றை தொகுத்து வழங்கியதாலோ என்னவோ ஜெர்ரி இன்னமும் குழந்தை போலவே பேசுகிறார். ஜெர்ரியிடம் ஒரு கெட்டபழக்கம். நிகழ்ச்சியின்போது அடிக்கடி பக்கத்தில் நிற்கும் ஆண் தொகுப்பாளரின் முகத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். சக தொகுப்பாளரை லைவாக சைட்டடிப்பதில் ராஜ் டிவி சந்தியாவையே மிஞ்சிவிடுவார் ஜெர்ரி. எப்போதாவது ஜெர்ரி தனியாக ஷோ செய்யும்போது மட்டும் வயிற்றெரிச்சல் இல்லாமல் சைட்டடிக்கலாம்.

தனுஷா – இன்னமும் வெளிவராத ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை. ஐடில்ப்ரெயின் கண்டுபிடித்துக் கொடுத்த அழகி. ஒருநாள் தழைய தழைய புடவை கட்டி தலைநிறைய மல்லிப்பூவுடன் வணக்கம் சொல்லுவார். அப்புறம் சுடிதார் அணிந்து சற்று பாந்தமாக, திடீரென உள்பனியனை கழட்டிடட்டுமா என்று கண்ணாலேயே கேட்பார், என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போட்டோஷூட்டுகளுக்கு போஸ் கொடுத்து வருகிறார். வயது மட்டும் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் போல இருக்கிறது. அதனாலென்ன, ஐ டோண்ட் கேர் !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 June 2013

கடையேழு வள்ளல்கள் – அதியமான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரே முடியுடை வேந்தர்கள். அவர்களைத் தவிர சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் மூவேந்தர்களிடம் பரிசாகப் பெற்ற நாடுகளை ஆண்ட அரசர்களும், அரிய ஆற்றல் கொண்டு தாமே புதிதாக நாடுகோலியோ, வேறு நாட்டைக் கைப்பற்றி ஆண்ட வேந்தர்களும் வீற்றிருந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சேரநாட்டில் அதியை எனும் சிற்றூர் இருந்தது. அவ்வூரை ‘அஞ்சி’ என்பவன் ஆண்டு வந்தான். அவனை எழினி என்றும் கூறுவர். அக்காலத்தில் சேர நாட்டை சூழ்ந்து, சிறு நாடுகள் பல இருந்தன. அவற்றுள் குதிரைமலைக்கு அருகே அமைந்துள்ள தகடூரும் ஒன்று. அச்சமயம் தகடூர் நாட்டை ஆண்டுவந்த சிற்றரசன் இறந்துவிட்டான். உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அமைதியகன்றது. தாமே அரசன் என்று ஆளாளுக்கு பறை சாற்றினர். தகவல் எழினிக்கு சென்றடைந்து, அவன் சேனைகளுடன் தகடூரை அடைந்தான். கலகத்தலைவர்களை அடக்கினான். அடங்காதவர்களைக் கொன்றான். எழினி அந்நாட்டிற்கு முடிமன்னன் ஆனான். எழினி, அதியை என்ற ஊரிலிருந்து வந்திருந்தமையால் தகடூர் மக்கள் அவனை அதியமான் என்று வழங்கினர்.

அதியமான் உடல்நலம், தேகப்பயிற்சியில் ஈடுபாடு கொண்டவன் என்ற செய்தி புறநானூற்றில் பதியப்பட்டுள்ளது. விற்பயிற்சி, வாட்பயிற்சி பயின்றிருந்தான். நல்ல பலசாலியாகவும், வீரனாகவும் விளங்கினான்.

அதியமானின் உடல் வலிமை பற்றி அவ்வையார் பாடியது :-

‘போற்றுமின் மறவீர் ! சாற்றதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தான்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளைமன் என்றிகழின் பெறலரிது ஆடே !

(புறம் – 104)

விளக்கம்: அதியமான் முழவெனப் பருத்த தோள்களை உடையவன். எட்டுத் தேர்களை ஒரே நாளில் செய்ய வல்ல ஒருவர், முப்பது நாட்கள் முயன்று திட்டமிட்டு ஒரு திண்ணிய தேர்க்காலை மட்டும் செய்தால் அது எந்த அளவிற்கு வலிமை கொண்டதாக இருக்குமோ அதுபோன்று உரமும் உருவமும் கொண்டவன். போர் என்றால் காலம், இடம், மாற்றார் வலிமை போன்றவற்றை நன்கு அறிந்து செயல்படும் திறன் பெற்றவன். ஆற்றல் மிகுந்த கடாவால் போகமுடியாத துறையும் உளதோ ? அதுபோல நீ களம் புகுந்தால் எதிர்ப்பாரும் இருக்கிறார்களா ?

எல்லோரிடத்தும் சாலப்பரிவோடு நடந்துக்கொள்ளும் நற்பண்பு அதியமானிடம் இயல்பிலேயே அமைந்திருந்தது. அதனால் அவன் குடிமக்களிடமும் மிக்க அன்புடன் நடந்துக்கொண்டான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அச்சமற்று களிப்புற்று வாழ்ந்தனர். தன்னிடத்தில் யார் எச்சமயத்தில் வந்து எப்பொருள் கேட்பினும் இல்லை என்றுரையாமல் ஈந்துவந்தான். அவன் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னிடம் வரும் புலவர் பெருமக்களிடம் அளவிலா அன்புடன் அளவளாவி வரைவிலாப் பொருளளிப்பான். அப்புலவர்களும் அவனை பாடி அவனுடைய புகழை நாடெங்கும் பரப்பினர். அதியமான் சிற்றரசனாயினும் அவனுடைய அரசியல் முறையை பேரரசர்களும் கண்டு வியந்தனர். எனினும் நாடெங்கும் பரவியிருந்த அதியமானின் புகழ் அவர்களை பொறாமை கொள்ள வைத்தது.

அவ்வையார் என்ற சரித்திரப்புகழ் வாய்ந்த மூதாட்டியார் அதியமானின் காலத்தில் தான் வாழ்ந்து வந்தார். அவர் அதியமானின் பெருங்குணத்தை அறிந்து, காண விழைந்தார். தகடூரை நோக்கி பயணித்தார். வாகன வசதிகளற்ற காலம். எங்கே செல்வதென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். செல்வந்தர்களிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவ்வையிடம் அது இல்லாததால் நடந்தே தகடூரை சென்றடைந்தார். அதியமான் ஒவ்வொரு வேளை புசிப்பதற்கு முன்பும் தன் மாளிகைக்கு வெளியே வந்து ஏழை எளிய மக்கள் யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று சுற்றிப்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பார்க்கும்போது அவனுடைய கண்களுக்கு அவ்வையாரின் வருகை தென்பட்டது. அதுதான் அவ்வையாருக்கும் அதியமானுக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு. எவர் தன்னிடம் வரினும் வரவேற்று உபசரிக்கும் உத்தம குணம் வாய்த்த அதியமான், வந்திருப்பது அவ்வையார் என்பதை அறியாமலே, அவருக்கு உணவளித்து, உபசரித்து, உண்ட களைப்பில் உறங்க இடம்கொடுத்துவிட்டு பின் தானும் புசிக்கச் சென்றான். பின்னர், அவ்வையாரை அறிந்துக்கொண்டபின் அவரை அங்கேயே தங்கிவிடும்படி அதியமான் வலியுறுத்தினான். அதியமானின் விருந்தோம்பும் பண்பு அவ்வையை கவர்ந்துவிட்டது. ஆயினும் அதியமானின் பெருங்குணத்தை மென்மேலும் பரப்ப வேண்டும் என்று விரும்பிய அவ்வை, அடிக்கடி வருவதாக கூறிவிட்டு அதியமானிடம் இருந்து புறப்பட்டார்.

கூறியதை போலவே அவ்வையார் பலநாட்கள் பரிவுடன் வந்து அதியமானிடம் தங்கியிருந்தார். அதனைப் பற்றிய புறநானூற்றுப் பாடல் :-

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விரும்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே;
யருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்கவன்றாளே !

(புறம் - 101)

விளக்கம்: அழகிய பூனணிந்த யானையையும் ஒழுங்காயமைந்த தேரையும் உடைய அதியமானிடம் யாம் ஒருநாளன்று, இருநாளன்று, பலநாள் பலரோடு சென்று தங்கினோம். அங்ஙனம் சென்றபோதும் அவன் எம்மை முதல்நாள் கண்டபோது காட்டிய அன்பையே என்றும் காட்டி உபசரித்தான். அதியமானிடம் பரிசில் பெறும் காலம் நீண்டாலும் அது யானை தன் தந்தங்களுக்கிடையே வைத்துள்ள கவளம் போன்று தம் கைக்குரிய தப்பாததாகும். ஆகையால், அதனை உண்ண விரும்பும் நெஞ்சே நீ வருந்த வேண்டாம். அவன் தாள் வாழ்க !

ஒருமுறை மூதறிஞர் ஒருவர் அதியமானை நாடி வந்திருந்தார். அதியமானும் வழக்கம்போல அவர் மனம் மகிழும்படி உபசரித்தார். அதியமானின் உபசரிப்பில் மயங்கிய மூதறிஞர் அவருக்கு குதிரைமலை ரகசியத்தை கூறினார். அதாவது, குதிரைமலையின் மீது பெரிய சரிந்த பிளவு ஒன்று உண்டு. அப்பிளவில் ஒரு நெல்லிமரம் உண்டு. அதில் பல்லாண்டுக்கொருமுறை இரண்டொரு கனிகள் உண்டாகும். அம்மரத்திற்கு அருகில் அத்தனை எளிதாக யாரும் செல்ல முடியாது. அரிய பெரிய முயற்சி எடுத்து அம்மரத்திலிருந்து நெல்லிக்கனியை பறித்து உண்டால் நீண்ட நாட்கள் வாழலாம். நீ தக்கபடி முயன்றால் அதனைப் பெறுவாய் என்று அதியமானிடம் கூறிவிட்டுச் சென்றார். அதியமான் அன்றிலிருந்து அந்த நெல்லிமரத்தை கண்டுபிடிக்க முயன்றான். ஒருநாள் ஆபத்தான பெரும்பிளவை கண்டான். அச்சரிவில் தவறி விழுந்தவன் பாதாளம் புக்கொழிவான். இடையிடையே முட்புதர்கள் கொண்ட அப்பிளவில் சிக்குண்டால் உடல் சல்லடைக்கண்கள் ஆகிவிடும். அப்பிளவில் தன் ஏவலாளரை இயக்கினால் ஆபத்து என்றெண்ணிய அதியமான் தானே பக்குவமாய் இறங்கி மரத்திலிருந்த ஒரே கனியை பறித்துக்கொண்டு தனது மாளிகையை நோக்கி திரும்பினான்.

வழக்கப்படி அன்று அதியமானைக் காண வந்திருந்த அவ்வையார், அதியமானின் வருகைக்காக காத்திருந்தார். அச்சமயம் அங்கே வந்த அதியமான் முகமலர்ந்து இன்சொல் பகர்ந்தான். அவ்வையாருடைய முகவாட்டத்தைக் கண்டான். அவர் பசியினால் களைத்திருக்கிறார் என்று உணர்ந்துக்கொண்டான். உடனே தான் கொண்டுவந்த நெல்லிக்கனியை அவ்வையிடம் கொடுத்து உண்ணும்படி வேண்டினான். அவ்வையாரும் அவ்வண்ணமே உண்டு களைப்பையோட்டினார். கனியின் சுவையை வியந்த அவ்வை அதியமானிடம் அதைப்பற்றி வினவினார். அதியமான் அக்கனியின் வரலாற்றைக் கூறினான். அக்கனியை தான் உண்ணுவதைக் காட்டிலும் அவ்வை உண்டால் அது அவர் உலகிற்கு பல நற்போதனைகளை செய்ய உதவும் என்று உரைத்தான். அதியமானின் மேன்மை கண்டு அவ்வையார் உவகையுற்றார்.

அதுகுறித்து அவ்வையார் பாடிய புறநானூற்றுப் பாடல் :-

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான் !
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன்னிலைப்
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே

(புறம் - 91)

விளக்கம்: வெற்றி தரும் கூரிய வாளேந்திப் போர்க்களத்தில் பகைவர் இறந்துபட வெட்டி வீழ்த்தி, கழலணிந்த வீரனே ! வீரவளை அணிந்த பெரிய கையினையும் மிகுந்த ஆரவாரத்தைச் செய்யும் முரசினையும் உடைய அதியர்களுக்குத் தலைவனே ! பகைவரை வெல்லும் வீரச்செல்வத்தை விளக்கும் பொன்னால் செய்யப்பட்ட வாகைப்பூ மாலையை சூடிய அஞ்சியே ! தொன்றுதொட்டு புகழப்பட்டு வரும் நன்னிலைமையை உடைய பெரிய மலையின்மேல் உள்ள ஆழ்ந்த பிளவில் வளர்ந்த சிறிய இலைகளையுடைய கரிய நெல்லிமரத்தினது இனிய கனியை, மீண்டும் அத்தகைய கனியைக் பெறுவதற்கு அரிதென்று கருதாமலும், அதனால் பெறும் பெரும்பயனை அரிதென்று கருதாமலும், அதன் பெரும்பயனை எமக்கு முன்னதாகக் கூறாமலும் உன்னுள்ளத்துள் அடக்கிக்கொண்டு எமது சாதலை ஒழிக்க அளித்தாய். ஆதலால் பெருமையோனே, நீ பால்போன்ற வெண்மையான பிறைமதியையும், நெற்றிக்கு அழகாக பொலிவுறும் திருமுடியினையும், நீலமணி போலும் கரிய திருக்கண்டத்தையும் உடைய ஒப்பற்ற பரமசிவனைப் போல நிலைபெறுவாயாக.

அதியமான், அவ்வையாருக்கு அருங்கனியளித்த செய்தி நாடெங்கும் பரவியது. அது மூவேந்தர்களுக்கும் எட்டிற்று. அதனால், அவர்கள் முன்னையினும் மிகுந்த பொறாமையுற்றார்கள். அவர்கள் கூடி அதியமானை ஒழிக்க முடிவுசெய்து, அதற்கேற்ற நேரம் கருதி காத்திருந்தார்கள். குறுநில மன்னர்கள் சிலரும் அதியமானிடம் பொறாமை கொண்டிருந்தார்கள். அவர்களில் கடையேழு வள்ளல்களில் இன்னொருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர். காரி, அதியமானுக்கு எதிராக வேற்றரசரிடம் மித்திரபேதம் செய்துவந்தான். அச்செயலை அறிந்த அதியமான் தன் சேனைகளை மலையமாநாட்டுக்கு அனுப்பி பயமுறுத்தி அவன் கொட்டத்தை அடக்கினான். மேலும், காஞ்சிமாபுரியை ஆண்டுவந்த தொண்டைமான் என்கிற வேந்தன் அதியமானிடம் மாற்றெண்ணம் கொண்டு போர்புரியக் கருதினான். அதனை அறிந்த அதியமான் அவ்வையாரை தூது அனுப்பி தொண்டைமானின் பிள்ளைப்புத்தியை போதித்து போக்கும்படி பணித்தான். தொண்டைமானும் அவ்வையாரின் வேண்டுகோளை அங்ஙனமே ஆகுக என்று ஏற்றுக்கொண்டான்.

அடுத்த ஆபத்து இரும்பொறை வடிவத்தில் வந்தது. அப்போது சேரநாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பேரரசன் ஆண்டுவந்தான். அதியமானுக்கு அவ்வை போல இரும்பொறைக்கு அரிசில்கிழார் என்னும் புலவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தை பாடியிருக்கிறார், தம் முரசுக்கட்டிலில் களைத்து உறங்கிக்கொண்டிருந்த மோசிக்கீரனார் எனும் செந்நாப்புலவருக்கு (அப்படி உறங்குபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை) அருகில் நின்று சாமரம் வீசிய பெருமை இரும்பொறைக்கு உண்டு. இரும்பொறை அக்காலத்தில் சோழனையும் பாண்டியனையும் வென்றவன். மற்றொரு வள்ளலான வல்வில் ஓரியை வென்று கொல்லிமலையைக் கொண்டவன். அவனுடைய ஆட்சி எல்லை தகடூரை நெருங்கிவிடவே அதியமானுக்கு அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. அதியமான் இரும்பொறையை எதிர்க்க தயாரானான். அப்போது அரிசில்கிழார் அதியமானுடைய நலன்கருதி, இரும்பொறையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அதியமானிடம் சென்று போரிடாமல் இருப்பதே அவனுக்கும் தகடூர் மக்களுக்கும் நல்லது என்று எடுத்துரைத்தான். அவருடைய அறிவுரையை அதியமான் மறுத்துவிட்டான். அரிசில்கிழார் சென்ற தூது அற்பத்தனமாகி விட்டதால் பெருஞ்சினம் கொண்ட இரும்பொறை தகடூர் மீது போர் தொடுத்தான்.

ஒரு சமயம் அதியமானால் பாதிக்கப்பட்ட மலையமான் திருமுடிக்காரியும் தன் படைகளுடன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இணைந்துக்கொண்டான். இரு படைகள் இணைந்து போரிட்டதால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்க ஆரம்பித்தது. முடிவில் அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் வாள் பாய்ந்து வீரமரணம் அடைந்தான். தன்னால் கொலையுண்ட அதியமான் நெடுமானஞ்சிக்கு இறுதியாகச் செய்யும் கடன்களை சேரமானே முன்னின்று செய்தான். உண்மையிலேயே வீரத்திலும் ஈரத்திலும் சிறந்த அதியமானின் மனம் எதிரியே ஆனாலும் அவனது ஏற்றமிகு ஆற்றலைப் போற்றும் மாற்றுக்குறையாப் பண்பாளனான சேரமானின் நெஞ்சில் கழிவிரக்கத்தைச் சுரக்கச் செய்தது போலும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 June 2013

தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் NECROPHILIA !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தீக்குளிக்கும் பச்சை மரம், சற்றே இலக்கிய நயம் மிகுந்த தலைப்பே என்னை திரையரங்கிற்கு இட்டுச்சென்றது. மற்றபடி படத்தைப் பற்றி யாதொரு தகவலும் யான் அறியேன், கதாநாயகி சராயு என்கிற வல்லிய கேரளத்து பெண்குட்டி என்பதைத் தவிர. ஆனால் கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது போஸ்டரிலேயே தெரிந்தது. திரையிடும் நேரத்தை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு அகஸ்தியா திரையரங்கிற்கு போன் செய்தேன். அழைப்பை ஏற்றவர் படத்தின் தலைப்பை தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட தலைப்பை போல பிழையோடு சொன்னார். காலைக்காட்சிக்கு அகஸ்தியா சென்றபோது திரையரங்கில் வழக்கத்தை விடவே அதிகமான ஜனத்திரள் தென்பட்டது. அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். அப்போது அங்கே வந்த திரையரங்க பணியாள் தன்னுடைய நண்பரான ஒரு உழைக்கும் வர்க்கத்திடம் “படம் பார்த்தா நீ கண்டிப்பா அழுதுடுவ... எப்பேர்ப்பட்ட கல்லு மனசா இருந்தாலும் கடைசி சீனுல அழுதுடுவ...” என்று சொல்லிவிட்டுப் போனார். அதுதான் படத்தின் மீது என் முன்பு வைக்கப்பட்ட முதல் விமர்சனம்.

ஒரு விவசாயியுடைய தற்கொலை, பள்ளிச்சிறார்கள் இணைந்து ஆசிரியரை அடித்துக்கொல்வது என்று சற்று ரணகளமாகத்தான் படம் துவங்கியது. ஆனால், அது உண்மையான ‘ரணகளம்’ அல்ல என்பதை இரண்டாம் பாதியில் தெரிந்துக்கொண்டேன்.

விவசாயி நிழல்கள் ரவி, அவருடைய வெத்துவேட்டு தம்பி, அராத்து தம்பி மனைவி என்று வளவளவென்று கதை சொல்ல அலுப்பாக இருக்கிறது. அதனால் கதையின் முன்பகுதியை ஸ்கிப் செய்துவிடுகிறேன். Good, Bad and Evil – மாதிரி மூன்று பள்ளிக்கூட சிறுவர்கள் நட்பாக திரிகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மூவரும் சேர்ந்து அவர்களுடைய ஆசிரியரை கொன்றுவிட, சீர்திருத்தப் பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு பின்பு வெளியே வருபவர்களில் இருவர் தவறான பாதைக்கு செல்ல, நாயகன் மட்டும் நல்லிதயத்தோடு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கே நாயகியுடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொள்கிறார் என்பது மெயின்ஸ்ட்ரீம் கதை அல்ல. அதன் பின்பு நாயகன் பிழைப்புக்காக பிணவறையில் பணிக்கு சேர்ந்து அங்கே நடைபெறும் குரூரமான சம்பவங்களும் அது நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே பிரதான கதை.

கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை. பெரிய சுவாரஸ்யங்கள் இல்லையென்றாலும் இந்தக்காட்சிக்கு ஏதாவது குறியீடு இருக்கக்கூடும், அந்தக்காட்சி படத்தின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஏதேனும் சம்பவத்திற்கான தொடுப்பாக இருக்கலாம் என்று நாமாகவே எதையாவது யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாயகன் நேர்மையாக வாழுகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் சோற்றுக்கு என்ன செய்கிறார் என்று சொல்லப்படவில்லை. அவரு ரொம்ப நல்லவருன்னு அப்பா சொன்னாரு என்ற மொன்னையான காரணத்தை வைத்துக்கொண்டு நாயகனை வளைய வரும் வழக்கமான நாயகி. இடையிடையே தான் காதலிக்கு ஏற்ற இணையில்லை என்பதை உணர்ந்து விலகும் காதலன், தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருதி காதலை நாகரிகமாக மறுக்கும் பெண் என்று ஆங்காங்கே சில நெகிழ்வான காட்சிகள். நாயகன் – நாயகி திருமணத்திற்கு பிறகு, குடும்ப சூழ்நிலை கருதி, அதிக பணம் கிடைக்கும் பிணவறை பணியாளாக வேலைக்கு சேர்கிறார். பணியில் சேர்ந்து முதல் பிணத்தை அறையில் இறக்கி வைத்ததும் அப்படியே ஃப்ரீஸ் செய்து இடைவேளை போடுகிறார்கள். முதல் பாதியை பொறுத்தவரையில் பருத்தி வீரன் காலம்தொட்டே பார்த்து சலித்த கதைதான் என்றாலும் கூட படத்திற்கு செய்த விளம்பரங்களோடு ஒப்பிடும்போது நல்ல படமாகவே தோன்றியது.

நாயகனாக சன் மியூசிக் பிரஜின். சத்தியமாக அடையாளம் தெரியவில்லை. ஆரண்ய காண்டம் சோமசுந்தரத்தை நினைவூட்டும் தோற்றம். சராயுவின் ஸ்பெஷாலிட்டி அவருடைய இரண்டு பெரிய கண்கள். ஆனால் சந்திரிகா வேடத்திற்கு அவர் பொருத்தமில்லை. குறைந்தபட்சம் கார்வண்ண ஒப்பனையாவது செய்திருக்கலாம். பிரஜின் சித்தியாக வரும் நடிகை ஒரு good find ! மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. படத்தில் டாப்பு டக்கரு டாப்பு டக்கரு என்றொரு பாடல் வருகிறது. அதன் துள்ளிசையும் நடன அசைவுகளும் நம்முடைய சதையையும் லேசாக அசைத்துப் பார்க்கின்றன.

இடைவேளையில் வாங்கிய கோக்கை குடித்து முடிப்பதற்குள் கதை பிணவறைக்குள் நுழைந்து குரூரமான காட்சிகள் திரையில் விரிகின்றன. குமட்டிக்கொண்டு வருகிறது. சில தொழிலை சாராயம் உள்ளே சென்றால்தான் செய்ய முடியும் என்கிற பிணவறை பணியாளரின் வசனம் எத்தனை உண்மை. போலவே, தீ.ப.ம.வை பார்க்கும் ரசிகர்களும் போதையேற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். முதலில் பிரேத பரிசோதனை. அப்புறம் இறந்தவர்களின் உறுப்புகளை திருடுவது, கொலைகளை மறைத்து பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதுவது, உச்சக்கட்டமாக இறந்த உடலுடன் உறவு கொள்வது என்று தொடர் அதிர்ச்சி கொடுத்து மிரள வைக்கிறார்கள். அதீத வன்முறை காட்சிகளுடன் திரைப்படம் நிறைவுபெறுகிறது.

பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த பொல்லாங்கு திரைப்படத்தில் கிட்டத்தட்ட அப்படியொரு காட்சி இருந்தது. மேலை நாடுகளை பொறுத்தவரையில் எண்பதுகளிலேயே நெக்ரோபிலியாவை மையமாக கொண்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரையில் முதன்முறையாக அப்படியொரு காட்சியை பார்க்கும்போது பகீரென்று இருக்கிறது. பிணவறை பணியாளர் ஒரு முப்பதை கடந்த பெண் உடலுக்கு நகச்சாயம், உதட்டுச்சாயம் பூசி மல்லிகைப்பூ வைத்து விடும்போதே அடுத்ததாக வரப்போகிற காட்சி புரிந்து அதிர்ச்சியூட்டுகிறது. நெக்ரோபிலியா மட்டும்தான் என்றில்லை. படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே பிணத்தை அறுப்பது, மனைவியின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்யும்படி கணவனை கட்டாயப்படுத்துவது, கட்டிங் மிஷின் வைத்து ஆணின் அந்த இடத்தை அறுப்பது, இறுதியில் அதே மிஷினை பயன்படுத்தி தலைகொய்து தற்கொலை செய்துக்கொள்வது என்று திரையெங்கும் தக்காளி ஜூஸு. எப்படி இப்படியொரு படம் சென்சாரை தாண்டி வந்திருக்கிறது என்று புரியவில்லை.

எதற்காக இத்தனை வன்முறை ? படத்தின் வாயிலாக இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார் ? ஒரு மசுருமில்லை. சொம்மா வித்தியாசமாக, பரவலாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டது போல தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் தேர்ந்த பிணவறை பணியாள் ஒருவர் புதிய பணியாளருக்கு தொழில் கற்றுக்கொடுக்கிறார். எப்படியென்றால் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆங் மண்டைய அப்படித்தான் பொளக்கணும், அப்படியே நெஞ்சை கிழிக்கணும், கொடலை உருவி வெளிய போட்றனும் என்றெல்லாம் வசனம் பேசியபடி. அந்தவகையில் தீக்குளிக்கும் பச்சை மரம் மேற்கத்திய கல்ட் படங்களை பார்த்து அதன் சாயலில் எடுக்க வேண்டுமென்று முனைந்து புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை !

அதேசமயம் தனிப்பட்ட முறையில் தீக்குளிக்கும் பச்சை மரம் படத்தில் சில அனுகூலங்களும் தென்படுகின்றன. சிறு வயதில் நம் மீது சேற்றை வாறி இறைத்த சக மாணவன், பிரம்படி கொடுத்த வாத்தியார் போன்றவர்களின் மீதான நம்முடைய கோபத்திற்கு தீ.ப.ம படத்தின் வன்முறை காட்சிகள் ஒரு வடிகாலாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த GROTESQUE என்கிற ஜப்பானிய திரைப்படம் இன்றளவும் கூட என்னுடைய வெளிப்படுத்த இயலாத கோபங்களுக்கு வடிகாலாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இனி தீக்குளிக்கும் பச்சை மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் நெக்ரோபிலியாவை காட்சி படுத்தியமைக்காக மட்டும் பாராட்டலாம். இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 June 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவை விரும்பிப் பார்க்கும் யாரும் அமைதிப்படையை புறக்கணித்திருக்க வாய்ப்பில்லை. அதில் இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கை காட்சி காலத்தை வென்ற நகைச்சுவை. தமிழ்த்திரையில் அரசியல் நையாண்டிக்கு ஒரு உச்சப்பட்ச எடுத்துக்காட்டாக அமைதிப்படையை குறிப்பிடலாம். அதன் வெற்றிக்கு காரணம் இரண்டு பேர். ஒருவர் நடிகர் சத்யராஜ், இன்னொருவர் இயக்குநர் மணிவண்ணன்.

எனக்கு விவரம் தெரிந்து நான் திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் ‘அமைதிப்படை’. நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் நான் உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா என்னை சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அந்த சமயத்தில் ‘திருடா திருடா’ வெளியாகி அதன் பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தன. சினிமா என்றதும் திருடா திருடாவிற்கு கூட்டிச்செல்லும்படி அப்பாவிடம் கேட்டேன். என் அப்பா சாமர்த்தியமாக அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஏமாற்றி என்னை அமைதிப்படைக்கு அழைத்துச்சென்றார். சமீபத்தில் நாகராஜ சோழன் வெளிவந்தபோது ஒரு மாறுதலுக்காக நான் அப்பாவை அழைத்துச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது ஒரு சுபமுகூர்த்த வாரயிறுதியில் வெளிவந்ததால் சாத்தியப்படவில்லை. நல்லவேளை !

மணிவண்ணனும் திராவிடர் முன்னேற்ற கழக பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார். மணிவன்னனுடைய தந்தையார் தி.மு.க.வின் சூளூர் நகர செயலலாராக பணியாற்றியிருக்கிறார். அதனாலேயே அவர் திராவிட கொள்கைகளை கற்று வளர்ந்திருக்கக்கூடும். தன்னுடைய இளமைப்பருவத்தில் தீவிர கம்யூனிச சிந்தனையாளராக மட்டுமில்லாமல் போராளியாக வாழ்ந்திருக்கிறார் மணிவண்ணன். முக்கியமான நக்ஸலைட்டுகளை காவல்துறை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த போது அந்த பட்டியலில் முதல் பெயராக மணிவண்ணின் பெயர் இருந்திருக்கிறது. அவருடைய நண்பர்கள் அவரை சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். திரைத்துறையில் நுழைந்தபின்னர் கலைஞரின் ஆதரவாளராக அறியப்பட்ட மணிவண்ணன், பின்னாளில் வைகோவுடன் வெளியேறி ம.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றிய மணிவண்ணன் கடைசியாக கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் கூட தான் இறந்துவிட்டால் தன்னுடைய உடலை இயக்குநர் சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மணிவண்ணனை இயக்குநராக அமைதிப்படை தவிர்த்து அதிக படங்களில் ரசித்ததில்லை என்றாலும் நடிகராக அவருடைய உடல்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். “மாமிக்கும் எனக்கும் ஒரே சுபாவம்... கூச்ச சுபாவம்” என்று சொல்வதாகட்டும், மிலிட்டரி ஆபீசரான சுந்தர்ராஜன் முன்பு குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக ஆகட்டும், ராயர் அய்யாவிடம் ரவுசு செய்துவிட்டு ‘எஜ்ஜூஸ் மீ’ என்று பம்முவதாகட்டும் அவருக்கென்று ஒரு தனித்தன்மை தெரியும். அவருடைய வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கத்தில் ஒரு குசும்பு ஒளிந்திருக்கும்.

திரையிசை கானா பாடல்களில், மணிவண்ணன் ஆட்டம் போட்ட கானா பாடல்கள் இன்னும் ஸ்பெஷல். லவ்வாப்பழம் புடுங்கித் தந்து நைஸு பண்ண பார்த்தேன் பார்த்தேன்’ என்று விசித்திராவுடன் மணிவண்ணன் ஆடும் எட்டுப்பட்டி ராசா பாடலை மறக்க முடியுமா ? இன்னொரு படத்தில் அஜித்துக்கு அப்பாவாக நடித்திருப்பார். காதல் தோல்வி சோகத்தில் இருப்பார் அஜித். மணிவண்ணன் அவரை சமாதானப்படுத்தும் பொருட்டு தன் பரிவாரங்களுடன் சேர்ந்து கானா பாடுவார். அவரும் அவரது ஆட்களும் அஜித்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஒருவழியாக, இரண்டு பல்லவி முடியும்போது அஜித் சரக்கு பாட்டிலை வாங்கி ராவாக குடிப்பார். நட்புணர்வு கொண்ட தந்தை வேடங்களில் அவரை அதிகம் ரசித்திருக்கிறேன். வசீகரா, ஆதி படங்களில் விஜய்யின் தந்தையாக நடித்திருப்பார். விஜய் அவரை அப்பா என்றழைக்காமல் மணி என்று பெயர் சொல்லி அழைப்பார், இரண்டு படங்களிலும்.

மணிவண்ணன் அடிக்கடி என்னுடைய தந்தையை நினைவூட்டுவார். இருவருக்கும் நிறைய உடல்மொழி ஒற்றுமைகள். இருவரும் நக்கல் பிடித்த பேர்வழிகள். கொள்கை ரீதியாகவும் கூட இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கலாம். இருவருடைய தந்தையும் தி.மு.க.விற்காக பணியாற்றியிருக்கிறார்கள். இருவரும் அரசியல்ரீதியாக தவறான தலைமையை தேர்ந்தெடுத்தவர்கள். ‘இன்னும் இருபத்தைந்து படங்கள் எடுத்து உங்களையெல்லாம் இம்சை பண்ணுவேன்’ என்று நாகராஜ சோழன் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் மணிவண்ணன். அப்படியிருக்கும்போது அவருடைய திடீர் மரணம் உண்மையில் என்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம் போல துக்கத்தில் ஆழ்த்துகிறது.

விகடன் பேட்டியின் காரணமாக நிறைய பேர் பாரதிராஜாவை விமர்சிக்கிறார்கள். மணிவண்ணனின் மறைவிற்கே கூட பாரதிராஜா ஒரு காரணம் என்கிறார்கள். எனக்கென்னவோ அது அப்படியொன்றும் ஏற்புடையதாக தோன்றவில்லை. திரைத்துறையை பொறுத்தமட்டில் மைக் கிடைத்துவிட்டால் தமக்கு உண்மையில் பிடிக்காதவர் என்றாலும் கூட எப்படியெல்லாம் பாராட்டி சீராட்டி புளுகுவார்கள் என்று நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அது அவர்களுடைய சூழ்நிலை என்று கூட சொல்லலாம். உச்ச நடிகர் ஒருவரிடம் போய் இடிச்சபுளி செல்வராஜை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் கூட அவர் ஒரு சிறந்த நடிகர் என்றுதான் சொல்லியாக வேண்டும். எனக்கு ரஜினியை பிடிக்காது என்று சொல்லிவிட்டு எந்த புதுமுக நடிகரும் இங்கே நடித்துவிட முடியாது. அப்படியிருக்கும் போது பாரதிராஜா அவருடைய மனதில் தோன்றியது தோன்றியபடியே பேசியிருப்பது கண்டனத்திற்குரிய செயல் அல்ல. என்ன ஒன்று அவருடைய கோபத்தை பொதுவெளியில் பகிராமல் நேரடியாக மணிவன்னனிடமே வெளிப்படுத்தியிருக்கலாம். அது பாரதிராஜாவுடைய பண்பு என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். எழுத்தாளர் ஞாநி சொன்னதுபோல அரண்மனை சோறு ஒத்துக் கொள்ளாத பிச்சைக்காரன் என்று பாரதிராஜா சொன்னது மணிவண்ணன் மீதான வசவு அல்ல. அது அவருக்கான நிஜமான பாராட்டு. ஏனென்றால் அரண்மனைகளுக்குள் தன் உடல் நுழையும் வாய்ப்பு கிடைத்தபோதும் மணிவண்ணன் மனம் சக பிச்சைக்காரர்களுக்காகவே சிந்திக்கக் கூடிய மனம்.

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 June 2013

கடையேழு வள்ளல்கள்



அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. கிட்டத்தட்ட என்னுடைய குருநாதருக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் போலவே இருந்தது. நெல்லையிலிருந்து செந்தில் என்பவர் அனுப்பியிருந்தார். அவர் என்னுடைய வாசகர் என்றும், கடையேழு வள்ளல்களை பற்றியும் அவர்கள் ஏன் வள்ளல்கள் ஆனார்கள் என்றும் எழுதும்படி பணித்திருந்தார். அதாவது மயிலுக்கு போர்வை தந்த பேகன், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மாதிரி ஒவ்வொரு வள்ளலுக்கும் பின் உள்ள வரலாற்று சம்பவத்தை குறித்து கேட்டிருக்கிறார். “அது ஏன்டா என்னைப் பார்த்து அந்த கேள்விய கேட்ட !” என்று செந்திலை பளார் விடும் கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வாட் எ கோ-இன்ஸிடென்ஸ், நம்முடைய வாசகர் பெயரும் செந்தில் தான் ! இருப்பினும் என்னையும் நம்பி ஒரு ஜீவன் ஒரு வாசகர் விருப்பத்தை முன் வைத்திருப்பதால் தாமதமானாலும் கூட அதனை முடிந்த வரைக்கும் நிறைவேற்றலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் படித்து இன்புற அன்னார் அனுப்பிய குறுந்தகவல்.

புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, லொட்டு லொசுக்கு போன்ற சங்க இலக்கியங்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தை கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுக்கப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் இருபத்தியொன்று. ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றிய தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. தவிர, செந்தில்நாதர் கடையேழு வள்ளல்களைப் பற்றி மட்டும் கேட்டிருப்பதால் மற்றவர்களை வசதியாக புறக்கணித்து விடலாம். சிறு குறிப்பாக :-

முதலேழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

சரி, கடையேழு வள்ளல்கள் ? பாரி, அதியமான், பேகன்.... அப்புறம்... அப்புறம்... ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ? கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன். ஏன் பாரி, அதியமான், பேகன் - மூவரை மட்டும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது ? ஏன் கடையேழு வள்ளல்களில் மற்றவர்கள் அவ்வளவு ஃபேமஸ் இல்லை. எனக்குத் தெரிந்த முக்கியமான காரணம், நம்முடைய பாடத்திட்டம். பள்ளிக்கூட கல்வித்தமிழில் பாரி, அதியமான், பேகன் பற்றி படித்திருக்கிறோம். மற்றவர்களை பற்றி அதிகம் படித்ததில்லை. அப்படியே படித்திருந்தாலும் அவை பதினாறு மதிப்பெண் கேள்விகளில் கேட்கப்படுவதில்லை. மறுபுறம், முன்னரே குறிப்பிட்டது போல இவர்கள் மூவருக்கும் இருப்பதைப் போல ஸ்பெஷல் வரலாற்றுச் சம்பவம் மற்றவர்களுக்கு பதியப்படவில்லை / முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர்கள் எதன் அடிப்படையில் வள்ளல்களாக தெரிவு செய்யப்பட்டனர் ? யார் இதையெல்லாம் தெரிவு செய்தார்கள் ? போலவே கோர்வையாக நிறைய கேள்விகள் ஏழத் துவங்கிவிட்டன. இதுகுறித்து சில புத்தகங்கள், இணையத்தரவுகளை படித்து / சேகரித்து வருகிறேன். பெரிய ஆய்வு, ஆராய்ச்சி அளவில் இல்லையென்றாலும் கூட செந்தில் அவர்களுடைய கேள்விக்கு விடை சொல்லும் வகையில் அடுத்த சில வாரங்களுக்கு போதிய இடைவெளியில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகள் தொடராக வெளிவரும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1: தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர் செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு 2: இதுகுறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள் கிடைத்தன. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 June 2013

ரம்பாயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இ-ங்-கு ப-ணி-யா-ர-ம் வி-ற்-க-ப்-ப-டு-ம் :- கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருந்தேன். பேசாமல், மீன் மார்க்கெட்டில் வடிவேலுவிடம் பார்த்திபன் செய்வதைப் போல லந்து செய்யலாமா ? மறுபடியும் எதோ ஒரு யோசனை தோன்ற பலகை வாசகத்தை கவனித்தேன் - பணியாரம். இப்போது எனக்கு அவருடைய ஞாபகம் வந்தது. என்னது யாரா ? ரம்பா சார் ரம்பா ! ஒரு தட்டு பணியாரத்தை வாங்கி அதனோடு சேர்த்து ரம்பாவின் நினைவுகளையும் அசை போடத் துவங்கினேன்.


மிகச்சரியாக முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ரம்பா பூமியில் அவதரித்தார். ஆந்திர மாநில விஜயவாடா அன்று முதல் புண்ணியஸ்தலம் ஆகப்பெற்றது. அவரிடம் விஷயம் உள்ளது என்பதை குறிப்பால் உணர்ந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் அவருக்கு விசயலட்சுமி என்று பெயர் சூட்டினர். ஆமாம், அதுதான் அவருடைய இயற்பெயர். சினிமாவிற்காக அமிர்தா என்று மாற்றியிருக்கிறார். பின்னர் அவருடைய அழகில் சொக்கிய இயக்குனர் / தயாரிப்பாளர் யாரேனும் ரம்பா என்ற பெயரை சூட்டியிருக்க வேண்டும்.

பொதுவாக யாரும் அதிகம் கண்டுகொள்ளாத கன்னட சினிமாதான் முதன்முதலில் ரம்பாவை கண்டுக்கொண்டது. சர்வர் சோமன்னா என்கிற கன்னட படத்தில் பதினாறு வயது ரம்பா மழையில் நனைந்தபடி போட்ட ஆட்டத்திற்கு கர்நாடக மாநில நிலப்பரப்புகளில் சூடு கிளம்பியிருக்க வேண்டும். ஆந்திராவில் உருவாகிய புயல் கன்னட தேசம் வழியாக கேரளம் கண்டு மீண்டும் தெலுங்கு தேசம் சென்று கடைசியாகத்தான் தமிழகத்தை தாக்கியது. தெலுங்கில் ரம்பா முதன்முதலில் ராஜேந்திர பிரசாத்துடன் ஜோடி சேர்ந்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழில் ரம்பாவுடைய முதல் படம் உழவன். அப்போது ரம்பாவின் வாளிப்பைக் கண்ட வாலிபக்கவிஞர் தன் வரிகளால் வாலிபால் விளையாடிவிட்டார்.

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ !

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ !

என்று துவங்கி உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து தள்ளிவிட்டார் மனிதர். நியாயத்திற்கு ரம்பாவின் புகழ் உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனினும் அந்த படத்தில் நடித்த மற்றொரு நாயகி ராக்கோழியாக மாறி கவன ஈர்ப்பு செய்துவிட்டார். கிடைத்த கேப்பில் ரம்பா தாய்தேசம் திரும்பி சிரஞ்சீவி, வெங்கடேஷ் என ஒரு சுற்று வந்தார்.


அப்போது காமெடி ஸ்பெஷலிஸ்டுகளின் ஒருவரான சுந்தர்.சி கண்களில் ரம்பா சிக்கினார். ரம்பாவைக் கண்ட சுந்தர்.சிக்கு குஸ்காவிற்குள் லெக்பீஸ் கிடைத்தது போல இருந்திருக்க வேண்டும். உடனடியாக தன்னுடைய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நாயகியாக்கி விட்டார். கூடவே அழகிய லைலா என்ற அழகிய அறிமுகப் பாடலை ரம்பாவுக்கு வைத்து, அதில் அவரை மர்லின் மன்றோ பாணியில் நடனமாட விட்டு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். ரம்பாவின் வருகையைக் கண்டு மற்ற நடிகைகள் தொடை நடுங்கியிருக்கக்கூடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் தீம் பார்க்குகள் அப்படியொன்றும் பிரபலமில்லை. அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக நடுத்தர வர்க்கம் கருதிக்கொண்டிருந்தது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ என்றொரு பாடல், MGM பார்க்கில் படம் பிடிக்கப்பட்டது. படம் வெளிவந்ததும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக MGMமிற்கு படையெடுத்தனர். இதுதான் ரம்பா ஓடிவந்த இடம், இதுதான் ரம்பா தொடை வைத்திருந்த பெஞ்ச் என்று கண்டு களித்து இன்புற்றனர். 


அதுமுதல் ரம்பாவிற்கு ஏறுமுகம் துவங்கியது. 1997ல் வி.ஐ.பி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. இரட்டை நாயகிகள் கதையம்சம். ஒருவர் ரம்பா, இன்னொருவர் சிம்ரன். ஒரே கல்லில் இரண்டு மாங்கா. மயிலு மயிலு மயிலம்மா பாடலில் ரம்பாவும் சிம்ரனும் போட்டி போட்டுக்கொண்டு திறமை காட்டினர். இருப்பினும் கொழு கொழு ரம்பாவின் ஆட்டத்திற்கு முன் கொத்தவரங்காய் சிம்ரனின் ஆட்டம் செல்லுபடியாகவில்லை. ரம்பாவின் புகழ் ஓங்கியது. உச்ச நடிகரின் பட வாய்ப்பு, அஜித்துடன் ராசி என்று அந்த ஆண்டு முழுவதும் ரம்பாவுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.

டாகுடர் விஜய்க்கும் ரம்பாவுக்கும் அப்படியொரு பொருத்தம். விஜய் தன்னுடைய கனவில் இடுப்பில் மச்சம் வைத்த பெண்ணொருத்தியை அடிக்கடி காண்கிறார். முகத்தை பார்க்க முடியவில்லை. கனவில் வந்தவள் யாரென்று மணிவண்ணன் விசாரிக்கிறார். மனிஷா கொய்ராலா, மாதுரி தீட்சித் தொடங்கி பானுப்ரியா வரைக்கும் அத்தனை பேரையும் கேட்டுப் பார்த்தாயிற்று. கடைசியில் விஜய்யுடைய கனவில் வந்தவர் யார் ? ஷாத்ஷாத் நம்ம ரம்பாவே தான் ! அங்கே தொடங்குகிறது அவர்களுக்குள்ளான வேதியியல். விஜய்யும் ரம்பாவும் மூன்று படங்களில் ஜோடியாக நடித்தார்கள் என்பது செய்தி.


கிட்டத்தட்ட எல்லா முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்ட ரம்ஸுக்கு கடைசியாக அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ஆம், கமல் பட வாய்ப்பு. காதலா காதலா படத்தில் ரம்பா கமலுக்கு ஜோடியாக நடிக்காவிட்டாலும் செளந்தர்யாவைக் காட்டிலும் பிரதான வேடம். நகைச்சுவையிலும் தடம் பதித்திருப்பார். பொதுவாகவே, கமல் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்று திரையுலகில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு மித். ஆனால் ரம்பா விஷயத்தில் அது துரதிர்ஷ்டவசமாக உண்மையாகிவிட்டது.

ரம்பாவின் மார்க்கெட் சரிய துவங்கியது. பாலிவுட்டில் முயற்சித்துப் பார்த்தார். கோவிந்தா கோவிந்தா ஆகாதது தான் மிச்சம். விபரீத முடிவாக தமிழில் சொந்தப்படம் எடுத்து கையையும் தொடையையும் சுட்டுக்கொண்டார். எனினும் மனம் தளராமல் பெங்காலி, போஜ்புரி என்று கிடைக்கிற ஜீப்பில் தொற்றிக்கொண்டு பயணித்தபடி இருந்தார் ரம்பா. தெலுங்கில் ரம்பாவின் முதல் நாயகன் ராஜேந்திர பிரசாத் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? சொல்லி வைத்தாற்போல மீண்டும் ராஜேந்திர பிரசாத்துடன் க்விக் கன் முருகனில் ரம்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ரம்பாவின் கடைசி படம் அதுதான்.


2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய சுட்டிகள்:
நக்மாயிசம்
ஆல்ப்ஸ் மலைக்காற்று

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment