31 January 2014

சி.ஐ.டி நகர் பாபு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது.

உங்களுக்கு சர்பத் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா...? தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் அடிக்கடி ஓமத்திரவம் வாங்கி குடிப்பீர்களா...? ஆமாம் என்றால் உங்களுக்கு நிச்சயமாக சி.ஐ.டி.நகர் பாபுவை தெரிந்திருக்கும். நீங்கள் சி.ஐ.டி நகர் பக்கம் தலை வைத்துக்கூட படுத்ததில்லை என்றாலும் பரவாயில்லை. சி.ஐ.டி. நகர் பாபு என்பவர் தமிழகத்தின் எல்லா நியாயவிலை கடைகளிலும் காணப்படும் ஒரு சராசரி உயிரினம் தான். அதற்காக, டேபிளுக்கு பக்கத்தில் கையில் வெறும் கிளாஸோடு தயங்கியபடியே வந்து நின்று தலை சொறிவார்களே அந்த கூட்டத்தோடு பாபுவை சேர்த்துவிட வேண்டாம். அண்ணன் கொஞ்சம் யூனிக். பாபு அண்ணனைப் பற்றி அடையாளம் சொல்வதென்றால், ஐந்தரை அடி உயரம், உறுத்தாத உடல்வாகு, வயது முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். அங்கொன்று இங்கொன்று என்றே தலையிலுள்ள பாதி மயிர் நரைத்துவிட்டது. மங்காத்தா படம் வெளிவந்தபிறகு அவருடைய தலைச்சாய செலவு மிச்சமாகிவிட்டது. சிக்ஸ் பேக் இருக்கவேண்டிய இடத்தில் சிறிய அளவிலான ஸ்கூல் பேக். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவார் இல்லை. யூத்தாக தன்னை நிறுவிக்கொள்ள டீ-ஷர்டையும் ட்ராக்ஸையும் எடுத்து மாட்டிக்கொள்வார். பார்ப்பதற்கு நடிகர் மயில்சாமி போலவே தோற்றமளிப்பார். அவருக்கு தண்டபாணி என்ற புனைப்பெயரும் உண்டு...!

ஏதேனும் விடுமுறை நாளாக இல்லாத பட்சத்தில் காலை பத்து மணிக்கு முன்பு பாபு அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பமாட்டார். அதே சமயம் பத்து மணிக்கு மேல் வீட்டிலிருக்கவும் மாட்டார். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு...! 

பாபுவுக்கு நிரந்தர நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இன்றைய தினம் அவர் யாருடைய நண்பர் என்பது அவருக்கே தெரியாத சுவாரஸ்யம். அழுக்கு பிடித்த அந்த கடையின் பின்புறத்தில் உள்ள சிறிய அறைக்குள் அவர் நுழைந்ததுமே அவருடைய பழைய நண்பர்கள் கொஞ்சம் மிரளுவார்கள். சுற்றி அமர்ந்துள்ள மனிதர்களை ஒரு சில மணித்துளிகள் நோட்டம் விடுவார். அவர் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது உச்சபட்ச மர்ம முடிச்சு. அறையின் மூலையில் தனியாக அமர்ந்திருக்கும் ரிக்ஷாக்காரன், தீவிரமாக இலக்கியமோ பிஸினஸோ என்ன எழவோ பேசிக்கொண்டிருக்கும் ஜெண்டில்மென், மத்திய வயதினருக்கு மத்தியில் நீளமாக மயிர் வளர்த்திருக்கும் அந்த இளைஞன், ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்புல என்கிற ரீதியில் அமர்ந்திருக்கும் பொடியன்கள் எல்லோரையும் ஒரு எட்டு பார்வையால் வலம் வருவார். மோட்டுவளையை பார்த்தபடி கணநேரம் உக்கிரமாக சிந்திப்பார். தீர்க்கமான முடிவொன்றை எடுத்தவராக தன்னுடைய புதிய நண்பரை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார். புதிய மனிதர்களிடம் பேசத்துவங்குவது அவருக்கு ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. வெள்ளை நிற ஜிப்பா, காதில் அணிந்திருக்கும் கடுக்கன், நீளமான தலைமயிர் என்று எதையாவது காட்டி சூப்பர் பாஸ் என்றபடி கச்சிதமாக பேச்சை துவங்கிவிடுவார். புகழ்ச்சிக்கு மயங்காத ஆண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன...? கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும். சமர்த்தாக ஒரு ஸ்டூலை எடுத்துவந்து போட்டு உங்கள் அருகிலேயே அமர்ந்துவிடுவார். சொற்பொழிவை ஆற்ற தொடங்குவார்.

உங்க பேரென்ன பாஸ்...? எங்க வேலை பாக்குறீங்க...? என்பது போன்ற சம்பிரதாய கேள்விகளுடன் தான் ஆரம்பிப்பார். பேச்சினூடே அடிக்கடி அவருடைய முதல் வசனமான ஜிப்பா சூப்பர் பாஸை சொல்லிக்கொல்வார். முடிந்தால் நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க என்ற பிட்டையும் போட்டுவிடுவார். நிம்மதியான வேலை. இத்தனை அட்ராசிட்டியையும் உங்களுடன் வந்த நண்பர் யாரேனும் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தால் சந்தேகமே இல்லாமல் அவர்தான் காமெடியன். கூட்டத்தில் யாராவது குறுந்தாடி வைத்திருந்தால் அவர் டைரக்டர். முரட்டுத்தனமாக யாரேனும் தோற்றமளித்தால் வில்லன். வில்லனைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அவருடைய கையாட்கள். இந்த மூஞ்சிகளை எல்லாம் வச்சி படம் எடுக்குற ப்ரொட்யூசர் யாரென்று தானே கேட்கிறீர்கள்...? அது ஷாத்ஷாத் அந்த பாபு அண்ணனே தான்...! ப்ரொட்யூசர் சரி... பணம்...? என்ன பாஸ் வெளையாடுறீங்க...? படம் எடுக்கத்தானே பணம் தேவை. சும்மா ஒரு பேச்சுக்கு பணம் தேவையில்லை தானே...? பேச்சுக்கு இடையே சமயத்தில் ஹீரோவே காமெடியனாகவும், ப்ரொட்யூசர் வில்லனாகவும், டைரக்டர் ஹீரோவாகவும் மாறி மாறி அவதாரம் எடுப்பார்கள். புரியலையா...? இந்த கதையில எல்லாருக்கும் டபுள் ரோல்... போறுமா...?

பாபு அண்ணன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் அலாதியானது. நம்முடைய வலது கையை எடுத்து அவருடைய வலது கையில் பற்றிக்கொள்வார். அந்த பற்றுதலில் ஒரு கரிசனம் இருக்கும். அச்சமயத்தில் அவருக்கு எப்போதெல்லாம் அன்பு ஊற்றெடுக்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய புறங்கையை கடித்து வைப்பார். யாராவது நம்மை கடித்தால் வலிக்கும் தானே...? ஆனால் பாபு அண்ணன் கடித்தால் வலிக்காது. அது அன்புக்கடி. பாம்பு கொத்தி வைத்தாற்போல புறங்கையில் பல் பதிந்து அதிலிருந்து சிகப்பு நிற திரவம் கூட வழியும். அது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஏதோ கே.எப்.சி கோழி கறித்துண்டை கடித்த களிப்புடன் பாபு அண்ணன் அமர்ந்திருப்பார். அதுதான் பாபு அண்ணன்...!

இவ்வளவு அன்பாக பழகும் பாபு அண்ணன் யார் தெரியுமா...? அவர் எங்கே பணிபுரிகிறார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். டைடல் பார்க்...! ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து M70 என்ற பேருந்தை பிடித்தால் ஒரு மணிநேரத்தில் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிடலாம் என்று சொல்ல வந்தேன். அங்கே எம்ஜியார் ஒரு கையால் ரோப்பை பிடித்துக்கொண்டே மறுகையால் வாள் வீசுவது போலவோ அல்லது எம்ஜியார் ஜெயலலிதாவின் தோள்பட்டைகளை தாங்கிப்பிடித்திருப்பது போலவோ ஒரு பதாகை இருக்கும். அதற்கு கீழே எம்ஜியார் பக்தர்கள் குழு என்று எழுதியிருக்கும். அதற்கும் கீழே சில ப(க்)தர்களின் திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் இடமிருந்து வலம் மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது எம்ஜியார் பாபு என்றும் அழைக்கப்படும் பாபு அண்ணன் தான். ஆமாம், பாபு அண்ணன் ஒரு தீவிர எம்ஜியார் பக்தர்.

அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டரும் கூட. எந்த அளவிற்கு தீவிரம் என்றால் நீங்கள் ரோஸ்மில்க் குடித்துக்கொண்டிருக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அட ரோஸ்மில்க் என்னய்யா ரோஸ்மில்க். ஒரு ஆப்பிள் மில்க்ஷேக்கோ, ஸ்ட்ராபெர்ரி ஜூஸோ குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்கே பாபு அண்ணா வருகிறார். நீங்கள் அவருக்கும் சேர்த்து ஒரு ஆப்பிள் மில்க்ஷேக் சொல்லுகிறீர்கள். அவர் அதை குடிப்பார் என்றா நினைக்கிறீர்கள்...? அம்மாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் அவர் அதனை குடிக்க மாட்டார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஏழைகளின் பானமான அம்மா குடிநீர் தவிர்த்து வேறு எந்த திரவத்தையும் ஒரு மிடறு கூட குடிப்பதில்லை. அம்மா குடிநீரை சுமார் நூற்றியெண்பது மில்லி மட்டும் பருகக்கொடுத்தால் போதும். நடுத்தெரு என்றாலும் கூட கவலைப்படாமல் அம்மாவே நேரில் காட்சியளித்ததாக கருதிக்கொண்டு சாஷ்டாங்கமாக குப்புற விழுந்து வணங்கிவிடுவார். சில சமயங்களில் அப்படி விழுந்து வணங்கினார் என்றால் சில மணிநேரங்கள் ஆனாலும் கூட விழுந்தது விழுந்தபடியே தான் இருப்பார்.

நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது கூட உங்கள் காலில் யாரேனும் ஒரு சி.ஐ.டி. பாபு இடரலாம். அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்கள். அதுதான் நல்லது... உங்களுக்கு...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2014

வாசித்தவை - 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புக் மார்க்ஸ்
புத்தகக்காட்சி முடிந்த கையோடு முதலில் துவங்கிய புத்தகம். எழுத்தாளர்களைப் பற்றியும், புத்தகங்களை பற்றியும் சுவாரஸ்யமான துணுக்குகள் அடங்கிய தொகுப்பு. ‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது...?, சீத்தலை சாத்தனார் பெயர்க்காரணம், தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் என நிறைய தகவல்கள், சுவையான நிகழ்வுகள், ஆதாரங்களோடு. சீவக சிந்தாமணியில் வரும் தாமரைக் கண்ணால் பருகினார்கள் என்ற சொற்றொடரைப் பற்றிய பத்தி மாஸ்டர் பீஸ்...!

சில கைவினைப் பொருட்கள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் சிறப்பாக இருக்காது. ஆனால் அது அதிக உழைப்பில் உருவாகியிருக்கும். அதுபோல புக் மார்க்ஸ் பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லாத புத்தகம் என்றாலும் அத்தனை தகவல்களை தொகுக்க என்.சொக்கன் எத்தனை புத்தகங்களை படித்திருப்பார் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. 

புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

தமிழா! நீ ஒரு இந்துவா?
பொதுவாக எனக்கு பிரசார வகைமை புத்தகங்களின் மீது ஈடுபாடு கிடையாது. நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தமிழா நீ ஒரு இந்துவா என்ற புத்தகத்தை தேடி, அது எங்கேயும் கிடைக்கவில்லை. திடல்லயே இல்லையாம்...! புத்தகக்காட்சிக்கு சென்றிருந்தபோது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் இருக்கிறதா என்று ஒரு வார்த்தை கேட்டுப்பார்த்தேன். உடனடியாக கிடைத்துவிட்டது.

சங்ககாலத்திலிருந்து தமிழனின் வழிபாட்டு முறைகள், பிரிவுகள் (சாதிகள் அல்ல), திருமண முறைகள் என்று துவங்கி ஆரியர்களின் வருகை, அவர்களுடைய வளர்ச்சி, தமிழனின் வழிபாட்டு முறைகள் கடவுள் வழிபாடாக மாறியது என்று அறுபத்தைந்து பக்கங்களில் தேவையற்ற தகவல்கள் ஏதுமின்றி நீட்டாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் சங்ககால பாடல்களை ஆதாரங்களாகக் கொண்டும் விளக்கியிருக்கிறார். அதன்பிறகு மனுஸ்மிருதியில் உள்ள சமஸ்கிருத வேதங்களை தமிழில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். நான் ஹிந்து தமிழன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழா! நீ ஒரு இந்துவா? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும்
இதுவும் கிட்டத்தட்ட முந்தய புத்தகத்தை போன்றது தான். தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் மிகவும் குறைந்த அளவில் ஆதாரங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், லெமுரியா,  சுமேரியா, மினோயன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் எல்லாமே அடிப்படையில் தமிழ் நாகரிகம் தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகிப் போய்விட்டது. கிரேக்க கடவுள்களையும் ஹிந்து கடவுள்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் பகுதி கொஞ்சம் ரசிக்க வைத்தது. சுஜாதா விருது பெற்ற நூல் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் சொல்வதற்கில்லை.

குமரிக்கண்டமா ? சுமேரியமா ? தமிழரின் தோற்றமும் பரவலும் – பா.பிரபாகரன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.125 – ஆன்லைனில் வாங்க

கி.பி.2087இல்...
நான் சிறுவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதைகள் அடங்கிய நூல். ஒருவேளை நூல் வெளியான சமயத்திலேயே வாசித்திருந்தால் விரும்பியிருக்கக்கூடும். பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கைந்தை கூட முழுமையாக வாசிக்கவில்லை. 

கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25

திசை கண்டேன் வான் கண்டேன்
வாத்தியாருடைய சயின்ஸ் ஃபிக்ஷன். நோரா என்ற கிரகத்தினர் விண்வெளியில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக பூமியை அழிக்க திட்டமிடுகிறார்கள். அது குறித்து பூமியின் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும்பொருட்டு பாரி என்னும் நோராவாசியும் அவனுடைய வாகனமும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பூமியின் எதிர்ப்பு நடவடிக்கை என்ன...? பூமி அழிந்ததா தப்பித்ததா...? என்பது கதை. மளமளவென வாசிக்க முடிந்தது. எனினும், இயந்திரா, ஜீனோ, சொர்க்கத்தீவு போன்ற அளவிற்கு ஈர்க்கவில்லை.

திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா - கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 January 2014

பட்டியல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி அவற்றை லிஸ்ட் போடும் ஆசாமி கிடையாது. மிகவும் செலக்டிவ். எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது, புத்தகங்கள் வாங்குவதில் கூட. புத்தகக்காட்சியை எடுத்துக் கொண்டால், முதலில் ஒருநாள் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாளாக சென்று ஒன்றிலிருந்து தொடங்கி எல்லா கடைகளையும் பார்வையிட்டு ஒரு சுற்று வருவேன். இடையிடையே நல்லதாக ஏதாவது கண்ணில் பட்டால் (புத்தகங்கள் தான்) குறித்து வைத்துக்கொள்வேன். இரண்டாவது நாள், யாராவது ஒரு நண்பருடன் சென்று அவர் புத்தகங்கள் வாங்குவதையும் கையில் எடுத்து பார்த்துவிட்டு நிராகரிக்கும் செய்கைகளையும் மானிட்டர் செய்வேன். அவர் புத்தகங்கள் பற்றி ஏதாவது சொன்னால் அதை வாங்கி காதில் போட்டு வைத்துக்கொள்வேன். மூன்றாவது நாள், காலையிலேயே துரிதமாக சென்று நான் ஏற்கனவே குறித்து வைத்திருந்த பதிப்பகங்களிலிருந்தும் முக்கியமானவை எனக் கருதப்படும் பதிப்பகங்களிலிருந்தும் விலைப்பட்டியல்களை சேகரிப்பேன். அன்றிரவு எல்லா விலைப்பட்டியல்களையும் ஆராய்ந்து வாங்க வேண்டிய புத்தகங்களை பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல ஷார்ட்லிஸ்ட் செய்வேன். நான்காவது நாளில், பட்டியலிட்ட புத்தகங்களை சமர்த்தாக வாங்கிவிடுவேன். வளவளவென மொக்கை போடாமல் சுருங்கச் சொல்வதென்றால் – புத்தகங்கள் வாங்குவதில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் போல. எல்லா இனிப்பு வகைகளையும் ஒரு டின்னில் கொட்டச் செய்து அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு என்று அசடு வழிவேன்.

அப்படி ஷார்ட்லிஸ்ட் செய்து நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் :-
திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.75
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140
ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் – ரூ.75
புக் மார்க்ஸ் – என்.சொக்கன் – மதி நிலையம் – ரூ.75
பாம்புத்தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100
இழந்த நாகரிகங்களின் இறவாக்கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145
கி.பி.2087இல்... – முனைவர் மலையமான் – அன்புப் பதிப்பகம் – ரூ.25
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன் – புரட்சிக்கனல் வெளியீடு – ரூ.30
கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60
ஒரு சிப்பாயின் சுவடுகளில் – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.100
சூப்பர் சுப்பு 3D (இரண்டு கண்ணாடிகளுடன்) – ரூ.200
அலமாரி – மாத இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.50
ஃபெமினா தமிழ் – மாத(ர்) இதழ் – ஓராண்டு சந்தா – ரூ.180

கிளம்பிவிடாதீர்கள். பினாமி பெயரில் வாங்கிய பட்டியல் இரண்டு உள்ளன. தோழர் செல்வின் இம்முறை மிகவும் குறைந்த அளவில் புத்தகங்கள் வாங்கினாலும் அறிவியல் சார்ந்த புத்தகங்களாக வாங்கினார்.

அவருடைய லிஸ்ட்:
பூமி எனும் கோள் – ஜார்ஜ் கேமாவ் – தமிழில் தி.ஜானகிராமன்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா
எப்போது அழியும் இந்த உலகம் ? – ராஜ் சிவா
விஞ்ஞானத்தில் சில விந்தைகள் – முனைவர் மெ.மெய்யப்பன்
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

சில புத்தகங்களை வாங்கலாம் என்ற ஆவல் இருக்கும், ஆனால் கொள்ளை விலை இருக்கும். அல்லது இதைப்போய் காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும். அல்லது வாங்கியபின் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது என்ற அவநம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் நமக்காக வாங்கிக் குவிக்க ஒரு ஆபத்பாந்தவன் இருந்தால் எப்படி இருக்கும்...?

தோழர் ஆரூர் மூனா என் பரிந்துரையின் பெயரில் வாங்கிய புத்தகங்கள் :-
வெள்ளையானை - ஜெயமோகன்
ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
கொசு - பா.ராகவன்
நாயுருவி - வா.மு.கோமு
பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
எட்றா வண்டிய - வா.மு.கோமு
மரப்பல்லி - வா.மு.கோமு
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா.மணிகண்டன்
அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
தண்ணீர் - அசோகமித்திரன்
வெல்லிங்டன் – சுகுமாரன்

பட்டியல் முடிந்தது. அடுத்த சிக்கல் வாசிப்பை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதுதான். பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 January 2014

வீரமான ஜில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தின் தைப்பொங்கல் தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவின் இருபெரும் துருவ நட்சத்திரங்களான அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. ரசிகர்கள் தீபாவளியும் பொங்கலும் ஒரே நாளில் அமைந்தது போல கொண்டாட்ட மனநிலையுடன் இருக்க, திரையரங்க உரிமையாளர்களை பொறுத்தமட்டில் ஒரு சிறிய பின்னடைவு. இருவேறு தினங்களில் தனித்தனியாக வெளியாகி இரட்டை வசூல் பொன் முட்டைகளை தர வேண்டிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ஒரேயொரு பொன் முட்டை மட்டுமே சாத்தியம். பன்திரை வளாகங்களுக்கு பிரச்சனையில்லை. பல ஒற்றைத்திரை அரங்குகள் வேறு வழியின்றி ‘தலைக்கு’ இரண்டு காட்சிகள் காட்டின. ஒரு புறம் தலயா ? தளபதியா ? என்ற போட்டி இருந்தாலும், இருவருக்கும் பொதுவான மசாலாப்பட பிரியர்கள் அடுத்தடுத்து இரண்டு படங்களையும் பார்த்து ஆனந்தக்கூத்தாடினர். எல்லாம் சரிதான். ஆனால் இந்த படங்கள் இரண்டும் உண்மையாகவே நன்றாக இருந்ததா என்று சற்று உணர்ச்சிவசப்படாமல் பார்க்கலாம்.

வீரம், ஜில்லா படங்கள் வெளியாகி முழுமையாக ஏழு நாட்கள் ஆகிவிட்டதால் கதை எல்லாம் சொல்லத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

ஜில்லா – பார்த்து பார்த்து சலித்த கதை இல்லை என்றாலும் ஏற்கனவே வேறு பரிமானங்களில் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட ‘தீனா’ பாணி கதை. விஜய்யும் மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க அவர்கள் இருவருடைய பிரஸ்தாங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, தேவர் மகன் படத்தில் கமல் எப்படி நடிகர் திலகத்தை பயன்படுத்திக் கொண்டாரோ அதே போல மோகன் லாலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். ஜில்லாவின் காரணமாக மலையாள தேசத்தில் விஜய்யின் புகழ் ஓங்கியிருக்கக்கூடும். லாலேட்டன் நடித்திருப்பதாலோ என்னவோ பின்னணி இசையில் பெரும்பாலும் 'செண்டை மேளம்' பயன்படுத்தியிருக்கிறார்கள். மோகன் லால் விஜய்யை விட பெரிய காமெடி பீஸாக இருப்பார் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நான் சிவன்டா என்று கத்திக்கொண்டே இருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் கமிஷனர் போல ஏதோவொரு பதட்டத்துடனேயே வசனம் பேசுகிறார். ரவி மரியா கதாபாத்திரத்தை அடிக்கடி குறுகுறுவென காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கு சந்தேக மசுறை ஏற்படுத்துறாங்களாமாம். இறுதியில் வில்லன் யார் என்பதில் டுவிஸ்ட் வைத்து, சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஜில்லாவின் நாயகி காஜல். இறுக்கமான காவலர் உடுப்பில் தோன்றி கிறக்கமூட்டுகிறார். ஜில்லாவில் காஜலின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று பாடல்களில் தோன்றி களிப்பூட்டுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இலவச இணைப்பாக நிவேதா தாமஸை தேர்ந்தெடுத்தமைக்கு விஜய் மச்சானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரம் – அண்ணன் தம்பிகள் கதை. கேட்டதும் சலிப்பாக இருக்கிறது அல்லவா...? படமும் ஏறத்தாழ அப்படித்தான் இருக்கிறது. அஜித்தின் தம்பிகளாக விதார்த் உட்பட நான்கு சுமார் மூஞ்சிகள் நடித்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஆளு. நீயும் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி தானா என்று கேட்ட பாவத்திற்காக கல்லூரி படிப்பு முடிக்காமலே கூட ஐந்தாவது தம்பிக்கொரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக அஜித் அட்டகாசத்தில் முயற்சித்தது போல வட்டார வழக்கு எதையும் முயற்சிக்கவில்லை. வசனங்களை அழுத்தம் திருத்தமாக பேசாமல் கொஞ்சம் லூஸ் விட்டு பேசுகிறார். வழக்கமான மசாலா படங்களில்லாத புதுமை ஒன்று வீரத்திலிருக்கிறது. துவக்கத்திலிருந்தே அஜித் பக்கம் ஒரு உயிர்பலி கூட ஏற்படுவதில்லை. ஒரு சறுக்கல் கூட இல்லை. எல்லோரையும் போட்டு துவம்சம் செய்கிறார். அந்த ஊரில் இனி அடிக்க ஆட்கள் இல்லையென்றதும் தமன்னாவின் ஊருக்கு போய் அங்கே ஒரு கும்பலை புரட்டி எடுக்கிறார். கடைசியில் மீண்டும் அதுல் குல்கர்னி என பழைய வட இந்திய வில்லனை அழைத்துவந்து சாகடித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

காஜலோடு ஒப்பிடும்போது வீர நாயகி ஒரு படி மேல். சிற்பங்களை பராமரிப்பவள் என்ற புதுமையான பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் தீபங்களுக்கு இடையே தேவதை போல காட்சியளிக்கிறார். ஏதோவொரு பனி பிரதேசத்தில், நோகாமல் கோர்ட்டு சூட்டு போட்டு ஆடும் அஜித்துடன் குறைந்தபட்ச ஆடைகளுடன் ஆடி சூடேற்றுகிறார். தமன்னாவின் தொப்புளை பார்க்கும்போது அவருடைய மார்க்கெட் சுணக்கமாக இருக்கிறதென்று நம்ப முடியவில்லை.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் சராசரி அக்ஷன் மசாலா படங்கள். இரண்டும் மொக்கை. பிரதீப் ராவத், தம்பி ராமையா, வித்யுலேகா ராமன், ஸ்டண்ட் சில்வா என இரண்டிலும் சிலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரதீப் ராவத் என்ற வட இந்திய நடிகர். பார்ப்பதற்கு வலைப்பதிவர் பபாஷாவிற்கு வயதானது போல இருப்பார். முன்பொரு காலத்தில் கஜினி, தொட்டி ஜெயா என ஒரு சுற்று வந்தவர். அவரை வலியச் சென்று அழைத்துவந்து சிரிப்பு வில்லன், குணச்சித்திர வேடங்களை கொடுத்திருக்கிறார்கள். ஜில்லாவில் பிரதீப் ராவத் தோன்றும் போதெல்லாம் பிண்ணனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. ஒரு காட்சியில் கூட, வடமொழியில் பேசுகிறார். ஒருவேளை பிரதீப் ராவத்தை, திராவிட நாயகர்களான மோகன் லாலையும் விஜய்யையும் எதிர்க்க வந்த ஆரிய சக்தியாக சித்தரித்திருக்கிறார்களோ என்னவோ...? ஸ்டண்ட் சில்வா பாவம். இரண்டு நாயகர்களிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். இரண்டு படங்களுக்கும் எப்படி ‘யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதை எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. ஜிங்குனமணி பாடலில் ஆட்டக்காரிகளின் மாராப்பை மறைத்தால் மட்டும் போதுமா...? வன்முறை காட்சிகள்...? காட்சி நேர்த்தியாக வரவேண்டி ரத்தத்தை பார்வையாளர்களின் முதுகு வரைக்கும் தெறித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், பாடல் காட்சிகள் என சரிவிகித வார்ப்புருவில் பொருத்தப்பட்டுள்ளன. ஜில்லாவில் சூரி வந்து புட்டத்தில் குத்து வாங்கி சிரிக்க வைக்க முயற்சித்து படுத்தி எடுக்கிறார். வீரத்தில் கொஞ்சம் ஆறுதல். சந்தானத்தின் வசன வெடிகள் உண்மையாகவே ரசித்து சிரிக்க வைக்கின்றன.

வாய்வழி பிரச்சாரம் என்று ஒன்று இருக்கிறது (எதுவும் கெட்டவார்த்தை இல்லை) ஆங்கிலத்தில் word of mouth marketing என்பார்கள். அதன்படி இரண்டு படங்களும் வெளியான தினத்திலிருந்தே ஜில்லா படத்தை மொக்கையென்றும், வீரத்தை ஹிட்டென்றும் யாரோ ஒரு மகானுபாவர் கிளப்பிவிட அதையே மற்றவர்களும் பின்பற்றி கிட்டத்தட்ட அதுதான் உண்மை என்பது போலாக்கிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரம், ஜில்லா இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டில் எது பரவாயில்லை என்று கேட்டால் வீரத்தை சொல்லலாம், சந்தானத்திற்காக.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 13012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீரம் படத்துக்கு டிக்கெட் எடுத்த தள்ளு முள்ளில் தான் கவனித்தேன். செங்கல்பட்டில் லாரெல் மால் என்கிற பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. அடடே, நாம பொரண்டு வளர்ந்த மண்ணாச்சே. செங்கல்பட்டுல எங்க’ன்னு தேடினா இன்னும் ஆச்சரியம். மாமண்டூரில் சரியாக ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிரில் லாரெல் மால் அமைந்திருக்கிறது. அந்த அத்துவானக் காட்டில் யார் மாலுக்கு வந்து ஷாப்பிங் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஈ.சி.ஆரில் இருந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அண்டையில் உள்ள மகேந்திரா சிட்டி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, கற்பக விநாயகர் கல்லூரி, நம்மோட ஆண்டாள் அழகர் அப்புறம் செங்கல்பட்டு பொதுஜனம் போன்றவர்களை நம்பித்தான் காம்ப்ளக்ஸ் இயங்கக்கூடும்.

ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு போய் லாரெல் மாலை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் தான். ஆனால் உள்ளே சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொன் மகேஸ் மாதிரி யாராவது எம்ஜியாரு டைப்பு ஆசாமியை உடன் அழைத்துச் செல்லலாம்.
******************************

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பார்த்தேன். சராசரிக்கு மேல் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம். இதைப்போய் ஏன் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒரு படத்தில் இடையிடையே வரும் இருபது நிமிடக்காட்சிகள் மொக்கையாக இருந்ததென்றால் அந்த படத்தையே மொக்கை என்று சொல்லிவிடலாமா...? ஜில்லா, வீரம் போன்ற அரைத்த மாவு குப்பைகளோடு ஒப்பிடும்போது இ.ஆ.பா நூறு மடங்கு தேவலாம். விஜய் சேதுபதி வட சென்னை ஹவுஸிங் போர்ட் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்வாதி, நந்திதா இருவரும் க்யூட். ஸ்வாதிக்கு டப்படித்த மானசிக்கு (டைட்டில் க்ரெடிட்ஸ் ஓடவிட்டு அவருடைய பெயரை கண்டுபிடித்தேன்) குடோஸு. திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் தொடங்கி நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் பார்த்து குபுகுபு’வென சிரித்திருக்கிறேன். ஆனால் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மலையாளியென்ன தமிழனென்ன என்றொரு மேனேஜர் செண்டிமெண்ட் காட்சி செய்திருக்கிறார் பாருங்கள். கண்ணுல வேர்த்துவிட்டது.

******************************

ஓவர் டூ ஒய்.எம்.சி.ஏ...!

சனிக்கிழமை ஸோலோவாக சென்றிருந்தேன். டிஸ்கவரி வாசலில் வா.மணிகண்டன் நின்றுக்கொண்டிருந்தார். அடித்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். நிறைய பேரை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்த வினை. காலச்சுவடு (என்று நினைக்கிறேன்) அரங்கில் இருந்தவரை எங்கேயோ நினைவிருக்க, அவரிடமே கேட்டு அவர்தான் கிருஷ்ண பிரபு என்று உறுதி படுத்திக்கொண்டேன். அவருக்கு என்னை அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை. சினிமா பத்தியே நிறைய எழுதுவீங்களோ...? என்றார். அங்கிருந்த சில எளிய இலக்கிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதென்ன இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர் என்றாலே ஒருவித கேலி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் சினிமாவை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. சினிமாவையே தொடாமல் எழுதும் எழுத்தாளர் கூட ஜனவரி பத்தாம் தேதி வேண்டுமென்றே தன்னுடைய பதிவிற்கு வீரம் என்று பெயர் சூட்டுகிறார். சினிமாவையே ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் (!!!) கூட அவருடைய வலைப்பூவிற்கு சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை வைத்திருந்தார். கடைசியில், சினிமா என்பதும் எழுத்தைப் போல கலையின் ஒரு வடிவம்தானே...?

லெக்கின்ஸ் அணிந்த தோழி ஒருவர் கார்க்கி மனோகரன் சாயலில் தெரிந்தார். கோயமுத்தூர் மோனி சாயல், சரவணக்குமார் சாயல் என சிலரிடம் அடையாளங்கள் தெரிந்தாலும் நாமாகவே போய்ப் பேசி அவர் வேறு யாராகவோ இருந்து பல்பு வாங்கிவிட வேண்டாமென அடக்கியே வாசித்தேன். ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு வந்தபின்பும் வா.ம டிஸ்கவரி வாசலிலேயே இருந்தார். மனிதர் கிளம்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பித்தேன். இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டாவது, அவர் இணையத்தில் எழுதுவது போல அடாவடியாக தெரியவில்லை. தட் அந்த கொழந்தையே நீங்கதான் சார் மொமண்ட். அவரை சந்தித்த மற்ற நண்பர்களும் அதையே வழிமொழிந்தனர். இணையத்தில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு அக்செஸிபிளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தது தான் அவர் மீதான தவறான புரிதல்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

யாராவது கொலைப்பசியில் இருந்துவிட்டு சாப்பிடுவதை கவனித்திருக்கிறீர்களா ? வள்ளு வதக்குன்னு அள்ளிச் சாப்பிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடத்தை ரணகளமாக்கி விடுவார்கள். இன்னொரு உதாரணமாக, யானை வெண்கலக்கடைக்குள் புகுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆரூர் மூனா புத்தகங்கள் வாங்கியது அப்படித்தான் இருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். பாய்ந்து பாய்ந்து முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை என்னுடைய பரிந்துரைகள். சில புத்தகங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும், சில புத்தகங்கள் படிக்க ஆசையாக இருந்தாலும் கொள்ளைக்காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும் அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஆரூரார் ஜஸ்ட் லைக் தட் வாங்கிவிட்டார். நல்ல மனுஷன்.

நேற்று சிங்கம் உடன் வந்திருந்தார். சில விளம்பரங்கள் காரணமாக, மினி மெல்ட்ஸ் ஐஸ்க்ரீமுடன் இனிதே துவங்கினோம். சிங்கம் தேடித் தேடி அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கினார். மாலைக்கு மேல் வழக்கம் போல நண்பர்கள் கூடி கும்மியடிக்க தொடங்கியாயிற்று. இத்தோடு அடுத்த வாரயிறுதியில் தான் புத்தகக் காட்சிக்கு செல்ல முடியும்.

நித்யானந்தாவின் பம்ம பம்மதான் பாடலின் முழு பதிப்பை நான் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். புத்தகக் காட்சியில் அவர்களுடைய ஸ்டாலை பார்த்ததும் சட்டென உள்ளே புகுந்து அந்த ஆல்பத்தின் பெயரைச் சொல்லி அது இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை. ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டார்கள். அடுத்த வாரம் கிடைக்கும் என்றார்கள். இப்போதைக்கு நித்தியானந்தா படம் பொறிக்கப்பட்ட ஒரு கொட்டையை கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரையில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment