21 July 2014

சதுரங்க வேட்டை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு மனக்குழப்பம். என்ன படம் பார்ப்பது என்பதைப் பற்றியது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து (என்னளவில்) நீண்டகாலம் ஆகிறது. கடைசியாக பார்த்தது யாமிருக்க பயமே. இதுவரையில் இந்த ஆண்டில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். கட்டாயமாக படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமயம் என்னிடமிருந்த தேர்வுகள் – வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்ல (படத்தின் பெயர்தான்). பெயரில் தொடங்கி ட்ரைலர் வரை முதலில் ஈர்த்தது இருக்கு ஆனா இல்ல. வேலையில்லா பட்டதாரி நன்றாக இருந்தாலும் பார்ப்பதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் தாமதமாக பிடிக்க ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. சின்னச் சின்ன விளம்பரங்கள் காட்டியே ஈர்த்துவிட்டார்கள். ஒரு சாமானிய ரசிகனை படம் பார்க்க வைக்க திரைப்படக்குழு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தயக்கத்துடனேயே எடுத்த முடிவு, முதல்நாள் விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பார்த்தே தீர வேண்டும் என தெளிவுற்றேன்.

Based on true events என்ற வரிகளை பார்த்ததும் சற்று கடுப்பானேன். கொஞ்ச நேரத்தில் ஏன் அப்படி என்று புரிய ஆரம்பித்துவிட்டது. மண்ணுளி பாம்பு, எம்.எல்.எம், ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என்று தமிழகத்தை கலக்கிய பிரபல மோசடி சம்பவங்களை தொகுத்திருக்கிறார்கள். 

பணத்திற்காக பல மோசடி சம்பவங்களை அரங்கேற்றுபவன் (தினத்தந்தி பாஷையில் மோசடி மன்னன்) காந்தி பாபு. ஒரு முறை காவல்துறையில் சிக்கி அல்லல்படுகிறான். பணம் அவனை காப்பாற்றுகிறது. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவன் ஒருவனால் மரணம் வரை செல்ல நேரிடுகிறது. அதிலிருந்து திருந்தி வாழ முயலும் காந்தி பாபுவுக்கு சமூகம் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.

காந்தி பாபுவாக நடித்திருக்கும் நடராஜை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை. பாலியுட்டில் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ், தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மட்டரகமான மசாலா படங்களில். சதுரங்க வேட்டைக்கு பிறகு முந்தய வாசகத்தில் ஒரு வார்த்தையை மட்டும் அடித்துவிடலாம். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழியாலும் கவர்ந்துவிடுகிறார். அவரது மிகைப்படுத்தாத நடிப்பிற்கு விடுதலை கிடைத்ததும் நீதிமன்றத்தில் இருந்து நடந்துவரும் காட்சி ஒரு உதாரணம்.

சரோஜா தேவி புத்தகங்களின் வர்ணிப்பு பகுதியில் ‘வாளிப்பான உடல்’ என்கிற வாக்கியத்தை அடிக்கடி படித்திருக்கிறேன். அதற்கான பொருளை இஷாராவை பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம். ச்சும்மா பப்பாளி போல இருக்கிறார். ஆனால் ‘ஸ்கோப்’ இல்லாத கதாபாத்திரம். கூடிய விரைவில் இஷாராவை உப வேடங்களிலும் மூன்றாம் தர கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.

கவிஞர் பிறைசூடனின் பெயரை படம் முடிந்ததும் டைட்டிலில் பார்த்தேன். எப்போது வந்தார் என்று நீண்ட நேரம் யோசித்தபிறகு விடை கிடைத்தது – ஜட்ஜய்யா !

ஷான் ரோல்டனின் இசையில் முன்னே என் முன்னே பாடல் கொஞ்சம் பிடிக்கிறது. அதன் இடையே வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அபாரம். அதையே படத்தின் இறுதியில் டைட்டில் க்ரெடிட்ஸ் போடும்போது பயன்படுத்தியது நல்ல யுக்தி. என்னைக் கேட்டால் அந்த டைட்டில் க்ரெடிட்ஸ் இசையே படத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.

வசனங்கள் படத்தின் அசுர பலம். அப்புறம் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன சர்காஸ்டிக் சுவாரஸ்யங்கள். ஒரு காட்சியில், ஃப்ரீயா கட்டிங் கொடுக்குற மனசு மதுரக்காரனுக்கு தான்டா வரும், மதுரக்காரன் என்னைக்குடா தண்ணியூத்தி அடிச்சிருக்கான் என்று செம ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அப்புறம் ரைஸ் புல்லிங் பற்றி காவியுடையணிந்த காந்தி பாபு பேசும் வசனம் செம்ம அட்ராசிட்டி. 

எல்லாம் இருந்தும் படத்தில் உணர்வு குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. காந்தி பாபு ஒரு அக்மார்க் அயோக்கியன் என்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அதனாலோ என்னவோ அவரை நையப்புடையும்போது கூட எந்தவித பதட்டமும் பரிதாபமும் வர மறுக்கிறது. உலகத்தில் பணம் மட்டுமே க்ளிஷே கிடையாது என்று தத்துவம் உதிர்க்கிறார் காந்தி பாபு. ஆனால் எல்லா சினிமாக்களிலும் வருவது போல காந்தி பாபுவுக்கு ஒரு சோக ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. திடீரென காந்தி பாபு திருந்தி வாழும்போது கூட, உண்மையில் திருந்திவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நிறைய இடங்களில் துல்லியம் தவறவிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கதாபாத்திரம் தூய தமிழிலேயே பேசுகிறது. (அது என்ன எழவுக்காக அப்படி பேசுகிறது என்று புரிபடவில்லை). ஆனால் சில காட்சிகளில் தன்னையே மறந்து ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறது. அதே போல காந்தி பாபு தன்னுடைய சிறுவயது சம்பவங்களைப் பற்றி சொல்லும்போது மட்டும் திடீரென மெட்ராஸ் பாஷையில் பேசுகிறார். நாயகியின் கொங்கு சொல்லாடலிலும் அதே மெத்தனம் தெரிகிறது.

ஒரு கட்டுரையின் முதல் சில வரிகளும், ஃபினிஷிங் டச் எனப்படும் முத்தாய்ப்பான முடிவும் மட்டும் இருந்தால் அதன் நடுவே உள்ள குறைகளை வாசகர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எழுத்துக்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். சதுரங்க வேட்டையும் அப்படித்தான். அதன் முன்னோட்டங்கள் நம்மை திரையரங்கிற்குள் இழுத்துப் போடுகின்றன, அதன் இறுதிக்காட்சி க்ளிஷே என்பதையும் தாண்டி ஒரு சிறிய தாக்கத்தை(யாவது) ஏற்படுத்துகிறது. மற்றபடி இடையில் வரும் காட்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்ய மிகுதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சதுரங்க வேட்டை – புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஒரு சுமாரான பொழுதுபோக்கு படம். மிகைபடுத்தப்பட்ட விமர்சனங்களையும் பட முன்னோட்டத்தையும் வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 July 2014

இடியட் பாக்ஸ் !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கவலைப்படாதீர்கள். விஜய் அவார்ட்ஸில் ஆனந்த யாழுக்கு விருது கொடுக்காதது பற்றியோ, சரவணன் – மீனாட்சி திருமணம் செய்து கொண்டது பற்றியோ அல்லது கனெக்ஷன்ஸ் ஜகன் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்பதைப் பற்றியோ எழுதி போரடிக்க மாட்டேன். இக்கட்டுரையானது அலுவலக கேண்டீனில் (கார்ப்பரேட் மொழியில் பேண்ட்ரி அல்லது கேஃபெடெரியா) வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி பற்றியது.

நான் முன்பு பணிபுரிந்த அலுவலக கட்டிடத்தில் தொலைக்காட்சி கிடையாது. கேண்டீன் என்று சொல்லப்பட்ட அந்த அறையில் ஒரே சமயத்தில் முப்பது பேர் நின்றாலே மூச்சடைக்கும். போதாத குறைக்கு கேரம் போர்டும், டேபிள் டென்னிஸும் இருந்தன. எனினும் அலுவலகம் அறிவாலயத்திற்கு எதிரே அமர்ந்திருந்தமையால் கேண்டீனுக்கு வெளியே நின்று பார்த்தால் ஹயாத் கட்டிடம் அட்டகாசமாக தெரியும், அப்படியே கீழ் நோக்கினால் அண்ணாசாலையின் அழகை ரசித்துக்கொண்டே தேநீர் பருகலாம். திடீரென அலுவலகம் அலேக்காக கிண்டிக்கு மாற்றப்பட்ட போது கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் புது அலுவலகம் குறித்த ஆர்வ குறுகுறுப்பும் இருந்தன. சில ஏமாற்றங்கள், நிறைய ஆச்சரியங்கள். அந்த ஆ’க்களில் ஒன்றுதான் கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி.

அங்கிருந்த தொலைக்காட்சியில் பெரும்பாலும் டைம்ஸ் நவ் தான் ஓடிக்கொண்டிருக்கும், அதுவும் ம்யூட்டில். அதற்கு உரித்தான ரிமோட் என்கிற வஸ்து யாரிடமிருக்கும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. திடீரென இரண்டு நாட்கள் NDTV ஓடும், அப்புறம் பழையபடி டைம்ஸ் நவ் வரும். யார் இதையெல்லாம் மாற்றுகிறார்கள், ஏன் வேறு சேனல் வைக்க மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் நான் கேள்வி எழுப்பியதில்லை. 

நாட்டில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டால் நியூஸ் சேனல்காரர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாவது ஒரு ஃபூடேஜை லவட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதையே ரிபீட் மோடில் நாள் முழுக்க போட்டுக்காட்டுவார்கள். சில சமயங்களில் வெறுமனே அரை நொடி ஃபூட்டேஜ் மட்டுமே கிடைத்திருக்கும். அசரமாட்டார்கள். அதையே ஸ்லோ மோஷனில் வைத்து, ரிபீட்டில் ஓட விடுவார்கள். ஃபூட்டேஜில் குறிப்பிட்ட இடத்தில் வட்டமிட்டு காட்டுவார்கள். அந்த வட்டத்திற்குள் அப்படியொன்றும் விசேஷமாக இருக்காது என்பது வேறு விஷயம். அய்யா, ஃபூட்டேஜே கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சிவகாசி பட்டாசு நிறுவன விபத்து என்று நினைக்கிறேன். அப்போது ஆங்கில செய்தி சேனல்களுக்கு ஃபூட்டேஜ் கிடைக்கவில்லை. ஒன்றுமில்லை, இந்தியா மேப்பை லாங்க்ஷாட்டில் காட்டத்துவங்கி அப்படியே ஜூம் பண்ணி கொண்டு வந்து சிவகாசியில் ஒரு சிகப்பு புள்ளி வைப்பார்கள். மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. மறுபடியும் இந்தியா மேப், ஜூம், சிவகாசி, சிகப்பு புள்ளி. நீங்களாகவே ஒரு சில நூறுமுறை காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

செய்தி சேனல்களால் சில அனுகூலங்களும் இருந்தன. நியூஸ் ஹவரில் அர்னாப் கோஸ்வாமி வாயசைத்து சத்தம் வராமலிருக்கும் அரிய காட்சியை கண்டுகளிக்கலாம். அர்னாபை ம்யூட்டில் பார்க்கும் கொடுப்பினை யாருக்கு கிடைக்கும். மற்றொன்று, கேண்டீனில் எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அறிவு ஜீவி இமேஜ் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் இருக்கும் சமயங்களில். நான்கைந்து யுவதிகள் கூட்டாக அமர்ந்துகொண்டு, யார் அலுவலகத்தில் அக்குளை ஷேவ் பண்ணாமல் ஸ்லீவ்லெஸ் அணிந்து வருகிறார்கள், டீம் அவுட்டிங்கில் யார் யாரோடு கூத்தடித்தார்கள் போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கே சென்று அவர்களை சுத்தமாக கண்டுகொள்ளாமல் டிவியையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கதான் ஹீரோ!

கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டும் தொலைக்காட்சியில் சேனல் மாற்றி வைக்கப்படும். தோனியோ ரவீந்திர ஜடேஜாவோ அல்லது யாரோ சிக்ஸர் அடித்திருப்பார்கள். உடனே கேண்டீனிலிருந்து ஓ’வென ஒரு அலறல் சத்தம் கேட்கும். குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், கிரிக்கெட் பார்ப்பதால் அறிவுஜீவி இமேஜ் கிடைக்காது. எனவே கிரிக்கெட் ஓடும் தருணங்களில் கமுக்கமாக அமர்ந்து வேலை பார்ப்பது உத்தமம். உண்மையிலேயே கிரிக்கெட் ஆர்வம் இருந்தால் க்ரிக்பஸ், க்ரிக்கின்ஃபோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் லைவை விட முன்கூட்டியே அப்டேட் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். மேட்ச் முடிந்ததும் மொத்தக்கூட்டமும் கேண்டீனில் இருந்து திரும்பி வரும். அச்சமயத்தில் ‘ஏ ஐ ஹேட் கிரிக்கெட்யா... கிரிக்கெட் இஸ் நாட் அட் ஆல் எ ஸ்போர்ட்... சும்மா நின்ன எடத்துல இருந்துக்கிட்டு பந்தை அடிக்கிறானுங்க சோம்பேறிங்க’ன்னு பீட்டர் விடலாம். தேவைப்பட்டால் 11 fools are playing, 11000 fools are watching என்கிற ஜானகி ஷாவின் தத்துவத்தை எடுத்துவிடலாம். அப்புறம் எந்த ஸ்போர்ட் பார்க்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது, ஃபுட்பால், டென்னிஸ், ஃபார்முலா 1. டென்னிஸ் பார்ப்பவர்கள் லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி போன்ற உள்ளூர் ஆட்டக்காரர்களின் பெயர்களை உச்சரிப்பது மகாபாவம். சம்பாஷனைகள் ஃபெடரர், ராடிக் லெவலிலேயே இருக்க வேண்டியது அவசியம். பேஸ்கட்பால் ஆட்டக்காரர்கள் சிலருடைய பெயரை தெரிந்து வைத்திருப்பது நல்லது. எப்படியும் வேறு யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆங் தொலைக்காட்சி... சமீபத்தில் யாரோ 'என் ரிமோட் என் உரிமை' புரட்சி போராட்டம் நடத்தியிருப்பார்கள் என தெரிகிறது. ரிமோட் பொதுவில் வைக்கப்பட்டு விட்டது. தற்சமயம் தொலைக்காட்சி ஊரான் வீட்டு நெய். அதுவும் அலுவலகத்தில் யாராவது ஃபூடி ஆசாமிகள் பணிபுரிந்தால் கிழிந்தது. ஃபூடி ஆசாமிகள் என்பவர்கள் ஆபீஸில் வேலை ஒன்பது மணிநேரம் என்றால் அதில் பத்தரை மணிநேரம் எதையாவது சாப்பிட்டுக்கொண்டும், கேண்டீனுக்கும் டெஸ்க்குக்கும் எதையாவது (அநேகமாக விசித்திர நிற திரவம்) தூக்கிக்கொண்டு அலைவதுமாக இருப்பார்கள். இடையில் கொஞ்சம் நேரம் கிடைத்தால் டிவிக்கு முன்பு வந்து அமர்ந்துகொண்டு ஃபாக்ஸ் ட்ராவலர் சேனலில் சமையல் குறிப்பு நிகழ்ச்சி பார்க்கத் துவங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பிடிக்கிறதா ? வேறு யாரேனும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்களா ? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை கிடையாது. நல்லவேளையாக வேலைநேரம் இரவு பத்து மணியோடு முடிந்துவிடுகிறது. இல்லையென்றால் ஃபூடி ஆசாமிகள் உட்கார்ந்து சமையல் மந்திரம் நிகழ்ச்சி பார்க்க நேரிடலாம்.

என்னதான் தொலைக்காட்சி தொழில்நுட்ப பணியாளர்களுக்காக வைக்கப்பட்டாலும் அதனை அதிக நேரம் பயன்படுத்துவது என்னவோ ஹவுஸ்கீப்பிங் பணியாளர்கள் தான். ரிமோட் இவர்கள் கையில் சிக்கினால் ஆதித்யா அல்லது சிரிப்பொலி. இதில் சில சிக்கல்கள் உள்ளன. அர்னாப் கோஸ்வாமியை ம்யூட்டில் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அதற்கு நேர்மாறான உணர்வினை ஏற்படுத்தக்கூடியது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவையை ம்யூட்டில் பார்ப்பது. இன்னொன்று, பெட்ரமாஸ் லைட்டு காமெடி சீன் வந்தால் நம் வீடு மாதிரி கெக்கே பிக்கே என்று சிரிக்க முடியாது.

எப்போது என்று நினைவில்லை, முன்பைப்போல ம்யூட்டில் அல்லாமல் தொலைக்காட்சியில் வால்யூம் வைத்து பார்க்கத் துவங்கிவிட்டார்கள். சக பணியாளர்களில் வடா பாவ் ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்கள் ஒன்றுகூடினால் B4U மியூசிக் என்கிற ஹிந்தி பாட்டு சேனலை வைத்துவிடுவார்கள். அடடடடா சும்மா சொல்லக்கூடாது, தமிழ் நடிகைகள் எல்லாம் ஹிந்தி நடிகைகள் வீட்டு மொளகு ரசத்தை வாங்கிக் குடிக்க வேண்டும். பிபாஷா பாசுவோ, தீபிகா படுகோனோ ஆடினால் அல்லது ஷீலா கி ஜவானி பாடலை ஒளிபரப்பினால் நானும் தற்காலிக வடா பாவ் ஆசாமியாக மாறிவிடுவதுண்டு.

ஆரியர்கள் அப்படி என்றால் திராவிடர்களை பற்றி சொல்லவா வேண்டும். இருக்கவே இருக்கிறது சன் மியூசிக், இசையருவி. அதுவும் உச்சி வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்கிற சமயத்தில் இவர்கள் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலான பாடல்களை ஒளிபரப்பி நம்மை மெர்சலாக்குவார்கள். 

'மத்தியான நேரம் பாய் போடச் சொன்னால் மாட்டேன்னு சொல்லுவியா’ - ரஜினி ரவுசு விடுவார்.

பதிலுக்கு மீனா - ‘மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள்’ என்று சிணுங்குவார்.

அப்புறம் ரஜினி மீனாவை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் தொப்பென கட்டிலில் போடுவார். ஜிங்கு சாக்கு ஜிங்...! ஜிங்கு சாக்கு ஜிங்...!

இப்பொழுதெல்லாம் ஹவுஸ்கீப்பிங் ஆட்கள் மத்தியான நேரத்தில் கே டிவியில் படமே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்றவாரத்தில் ஒருநாள் விஜயகாந்த், பானுப்பிரியா நடித்த படமொன்று ஓடிக்கொண்டிருந்தது. பழைய பானுப்பிரியாவை சிக்கென புடவையில் பார்த்ததும் எனக்கு நிலைகுத்திக் கொண்டன. கண்கள். கதை இதுதான். விஜயகாந்தும் பானுப்ரியாவும் கணவன் மனைவி. என்றாலும் பானுப்ரியாவுக்கு விஜயகாந்தை பிடிக்கவில்லை. ஆனால் பானுப்ரியாவின் தாத்தாவான நம்பியார் சொத்துகளை எல்லாம் விஜயகாந்தின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். பானுப்ரியாவுக்கு சொத்தின் மீது ஆசை. உடனே மனோரமா ஆபத்பாந்தவனாக நுழைந்து ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது விஜயகாந்தை செட்யூஸ் செய்து அவருடன் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டால் குழந்தையை வைத்து சொத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று. என்ன ஒரு யோசனை. செட்யூஸ் என்றதும் ஏதோ பானுப்ரியா அவருடைய ஆஸ்தான ஸ்டைலான கருவிழிகளை ஒரு சுற்று உருட்டி, (அவருடைய) உதட்டை கடித்து, அப்படியே கண்களை சொக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக அந்த நேரம் பார்த்து தோழி ஒருவர் எதிரில் வந்து அமர்ந்தமையால் நாகரிகம் கருதி தொலைக்காட்சியிலிருந்து பார்வையை அகற்றிக்கொண்டேன். சில விநாடிகள் கழித்து எதேச்சையாக திரும்புவது போல தொலைக்காட்சியை பார்த்தபோது விஜயகாந்த் பானுப்ரியாவின் தொப்புளில் எண்ணெய் விட்டு தடவிக்கொண்டிருந்தார்.

குறிப்பு: பார்வைக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment