16 January 2015

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

புதுவருட சபதம் போல ஒவ்வொரு முறையும் இனி இயக்குநர் ஷங்கர் படங்களை பார்க்கவே கூடாது என்று நினைக்கும் ஆள் நான். ஆனால் படம் வெளியாவதற்குள் எப்படியும் ஏதாவது ஒரு தனிமம் என்னை காமன் மேன் ஜோதியில் ஐக்கியமாக்கி விடும். படம் பிடிக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். இம்முறை அத்தகைய பிரத்யேக தனிமங்கள் விக்ரமின் தோற்றம் மற்றும் நோய்க்கிருமி சமாச்சாரம்.

இந்த கால்பந்தில் எல்லாம் ‘கோல்’ அடித்தவுடன் எதிரணி ரசிகர்களை பார்த்து ‘சத்தம் போடாதே’ என்று சைகை காட்டுவார்களே, அதுபோல விக்ரம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வாயடைக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் சீனியரை நினைவூட்டுகிறார். உதாரணமாக, எமியிடம் உங்க ஸாரியை நான் ஏத்துக்கிட்டேன். நீங்க போகலாம் என்று சொல்லும்போது எனக்கு அன்பே சிவம் படத்தில் கமல் சந்தான பாரதியிடம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. விக்ரமுடைய அபார நடிப்பையும், உழைப்பையும் போலவே ஒப்பனைக்காரர்களும், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஆட்களும், ஒளிப்பதிவாளரும் போற்றப்பட வேண்டியவர்கள். அத்தனையும் விக்ரமிற்கும் படத்திற்கும் பலம் கூட்டியிருக்கிறது.

உமி நீக்கிய தானியமாய் எமி. எமியின் அந்த உதடுகள்... அடடா எப்படி இத்தனை நாட்கள் கவனிக்காமல் போனேன் ? உயிரூட்டப்பட்ட ஆரஞ்சு சுளைகள். திரையில் எமி தோன்றிய காட்சிகளில் எல்லாம் நான் அந்த சுளைகளை மட்டும்தான் பார்த்தேன். நம்ப முடியவில்லை அல்லவா ? சரி, எமியின் கழுத்துக்கு கீழே காட்டாத காட்சிகளில் என்று படித்துக்கொள்ளுங்கள்.

விளம்பர உலகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படத்துக்கு அல்வா மாதிரி ஸ்பான்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். படச்செலவுக்கு பணமும் ஆச்சு, விளம்பரமும் கிடைத்த மாதிரி ஆச்சு. 

ஷங்கர் இம்முறை சமூக பிரச்சனைகளில் வாயை வைக்காதது என் போன்றவர்களுக்கு பெரிய ஆறுதல். குளிர்பான சர்ச்சை தொடர்பாக ஒரு காட்சி வந்ததும், போச்சுடா பொது மக்கள் ஆவேசமாக கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பயந்தே போனேன்.

என்னோடு நீ இருந்தால் என்ற பாடல் நெஞ்சே எழு’வையும் (மரியான்) அடியே’வையும் (கடல்) சேர்த்து பிசைந்தாற் போல இருக்கிறது. காலத்திற்கும் நிற்கக்கூடிய பாடல் அது. மற்ற பாடல்கள் பார்த்து ரசிக்கக் கூடியவை.

ஷங்கர் படங்கள் ஒரு மேஜிக் போன்றவை. பது மலர்ச்சியாக பார்க்கும்போது பரவசப்படுத்தும். சில வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்தால் இப்படியா தாழம்பூவை காதில் வாங்கி சொருகிக்கொண்டோம் என்று நமக்கே சங்கடமாக இருக்கும். ஐ’யிலும் அப்படி நிறைய. Influenza நோய்க்கிருமி தாக்கிய ஒருவர் பல சாகசங்கள் புரிகிறார். கதாநாயகியை தூக்கிக்கொண்டு குழாய் வழியாக மாடியிலிருந்து இறங்குகிறார், ஓடும் ரயிலின் மீது தாவி குதித்து சண்டை போடுகிறார். சண்டைக்காட்சிகளில் இயற்பியல் விதிகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறுகிறார்கள். Well, இப்பொழுதெல்லாம் சினிமாக்களில் யாரும் தர்க்கம் பார்ப்பதில்லை, பார்த்தால் சக சினிமா ரசிகர்களே உதைக்க வருவார்கள்.

(கிட்டத்தட்ட) கதை என்னவென்று சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்துவிட்டது ஐ’க்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக போய்விட்டது. ஒருவேளை அப்படி கசியவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளை யூகிப்பது பெரிய சிரமமில்லை. சுரேஷ் கோபி எமியிடம் ‘என்னை அங்கிள்’ன்னு கூப்பிடாதே’ என்று சொல்லும்போது அந்த எந்தபெத்த சஸ்பென்ஸ் உடைபட்டுவிடுகிறது. 

நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அலுப்பு தட்டவில்லை. வேண்டுமானால், பவர் ஸ்டார், சந்தானம் காட்சிகளை கொஞ்சம் கத்தரிக்கலாம். கிட்டத்தட்ட படம் முடிவுறும் தருவாயில் வரும் சந்தானத்தின் “நல்லா இருந்தேன். நாசமா போயிட்டேன்” காமெடியை எல்லாம் தவிர்த்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தும்.

இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வாங்குவதற்காக டெல்லி வரை சென்றார்கள் என்று ஊடகங்களில் தெரிந்துக்கொண்டேன். நல்லவேளையாக கொடுக்கவில்லை. நியாயமாக ‘ஏ’ சான்றிதழ் பெற வேண்டிய படம். கவர்ச்சிக்காக அல்ல. வன்முறை என்று சொல்வதை விட, இத்தனை கோரமான காட்சிகளை எல்லாம் சிறார்கள் பார்த்தால் மனதளவில் பாதிக்கப்படக்கூடும். 

குறைகளை மீறி திரையில் தோன்றும் படத்தில் விரவிக்கிடக்கும் ஒரு செழிப்பான தோற்றம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொதுவாக வில்லன்கள் என்றால் அடித்து கை, காலை உடைப்பார்கள், சுடுவார்கள், கொல்வார்கள். அந்தமாதிரி இல்லாமல் நோய்க்கிருமியை செலுத்துவது, பதிலுக்கு கதாநாயகன் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்படி செய்வது ஒரு அதிர்ச்சியான வசீகரத்தை ஏற்படுத்துகிறது. சில ஸைக்கோ படங்கள் எல்லாம் பார்த்தால் ஒருவித போதை ஏறும் இல்லையா, அதுபோல ஐ ஒரு விலக்கப்பட்ட பரவச உணர்வை ஏற்படுத்துகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 January 2015

பிரபல கொலை வழக்குகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நேற்று இன்று என்ற திரைக்காவியத்தை காண நேர்ந்தது. வீரப்பனின் மரணத்திற்குப்பின் அவர் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் பெரும் பொருட்செல்வத்தை தேடி நிறைய பேர் காட்டுக்குள் அலைந்து திரிந்ததாக கேள்விப்பட்டிருப்போம். அதன் அடிப்படையில் ஒரு கதையை புனைந்திருக்கிறார்கள். கதையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் (நேற்று), தற்கால காட்சிகளும் (இன்று) மாறி மாறி வருகிறது. படத்தின் தலைப்பிற்கு நீதி கற்பித்தல்.

கதையின் இரு தடத்திலும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தை வைத்து சும்மா விளையாடியிருக்கிறார் இயக்குநர். பிட்டு இல்லை தான் என்றாலும் பிட்டு இருப்பது போலவே 'பெப்' ஏற்றும் கலை இயக்குநருக்கு தெரிந்திருக்கிறது. இதுவரை எத்தனை படங்களில் ஹீரோயின் அறிமுகக்காட்சி பார்த்திருப்போம். ஹீரோயினுடைய நவரசங்களையும் க்ளோஸப்பில் ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள். அதனை ஹீரோ பார்த்து ஃப்ரீஸ் ஆகி நிற்பார் அல்லவா ? நேற்று இன்றில் அருந்ததிக்கு அல்வாத்துண்டு மாதிரி ஒரு அறிமுகக்காட்சி வைத்திருக்கிறார்கள். ஃப்ரெஷ்ஷா இருக்கு. அந்த காட்சிக்குப் பிறகு, படம் முழுவதும் அருந்ததியின் காஸ்டியூம் ஒரேயொரு பனியன் மட்டும்தான். அதுவும் கை வைக்காதது.

எப்படியும் 'தொட்டால் தொடரும்' வெளியானபின் அருந்ததி பிரபலமாகி விடுவார். என்னுடைய சந்தேகமெல்லாம் 'நேற்று இன்று' படத்தை கே.கே.நகர் விஜயாவில் என்ன பெயரில் வெளியிடுவார்கள் என்பதுதான் !

பிரபல கொலை வழக்குகள் - இந்த புத்தகம் என் கைக்கு வந்த கதையே ஒரு தனி எபிசோட். போராடி வாங்கியிருக்கிறேன். அவ்வளவு ஆர்வத்திற்கு காரணம் அதிலுள்ள ஆளவந்தான் கொலை வழக்கு. சில வருடங்களுக்கு முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில் ஆளவந்தான் கொலை வழக்கு பற்றி படித்திருக்கிறேன். என்னை ஒருமாதிரி அதிர்ச்சியடைய வைத்த பகுதி அது. அதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவே பிரபல கொலை வழக்குகளின் மீது இவ்வளவு ஆர்வம். ஆனால் புத்தகத்தில் அந்த கொலை வழக்கினை பற்றி மொத்தமே மூன்று பக்கங்கள் மட்டுமே உள்ளன என்பது வருத்தத்திற்குரியது.

பரவாயில்லை. எதையோ படிக்கப் போய் வேறு சில அற்புதமான விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். முதலில், ஆஷ் கொலை வழக்கு. குறிப்பிட்ட அந்த கொலையை மட்டும் கவர் செய்யாமல் அதைச் சார்ந்த இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கதிகளையும் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார் ஆசிரியர். இதை படிக்கும்போது இந்திய சுதந்திர போராட்டத்தின் மீது மரியாதை கூடுகிறது. குறிப்பாக, வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களின் மீது.

இன்னொரு பெரிய ஆச்சரியம், மர்ம சந்நியாசி வழக்கு. கிட்டத்தட்ட பாதி புத்தகத்தை நிறைத்திருக்கிறது. சுருக்கமாக – சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு சமஸ்தானத்தின் இளவரசர் மர்மமான முறையில் இறக்கிறார். அது அவருடைய மைத்துனரும், மனைவியும் செய்த சதி என்றும் நம்பப்படுகிறது. இறந்தவரை அவசர அவசரமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இறுதி ஊர்வலத்தின் போது மிகக்கடுமையாக மழை பெய்கிறது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு மழைக்காக ஒதுங்குகிறார்கள். மழை நிற்கிறது. பிணம் காணவில்லை.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். அவருடைய தோற்றமும் செயல்பாடுகளும் இறந்துபோன இளவரசரை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவரேதான் இளவரசரா ? வாய்ப்பு கிடைத்தால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
200 பக்கங்கள் – விலை ரூ.150
புத்தகக் காட்சி அரங்கு எண்: 634

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது. உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக் பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள் (இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’ யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.

கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன் லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.

வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.

சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’ என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ? என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில் புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.

இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும் ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார். ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார் என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில் எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட, அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.

ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள் ‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.

ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன. என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !

ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 January 2015

டைரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


டைரி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால அவா என்றாலும் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மனம் தளராமல் தொடர்ச்சியாக எழுத வேண்டும். யார் கையிலும் சிக்கி விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். அப்படியே பாதுகாத்தாலும் கூட ஒரு insecured feeling இருக்கும். அதனால் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக எழுத முடியாது. சரி, சங்கேத மொழியில் எழுதலாம் என்றால் அது பின்னாளில் நமக்கே புரியாமல் போகக்கூடிய அபாயம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவதற்கு தேவையான அரை மணிநேர தனிமை கிடைக்காது. இது போன்ற காரணங்களுக்காக நான் இதுவரையில் ஹார்ட் காப்பியாக டைரி எழுதியது கிடையாது. (கூகுள் நோட்புக் என்ற சேவை இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் சாஃப்ட் காப்பியாக டைரி எழுதியிருக்கிறேன்).

தேடிக் கண்டுபிடித்து வாங்கிய நோட்புக்
சமீபகாலமாக ஒரு எண்ணம். டைரி எழுதினால் வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை பதிவு செய்யலாமே என்று தோன்றுகிறது. குறிப்பாக எனது மகளுடைய குழந்தை பருவத்தை எனது வார்த்தைகளில் பதிவு செய்து வளர்ந்த பிறகு அவளிடம் காட்ட வேண்டும் என்கிற பேராவல். நியாயமாக பார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டைரி எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும் சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வரிசையாக தேதி போட்டு, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அரைநாள் மட்டும் ஒதுக்கும் ஒழுங்குமுறை டைரிகள் ஒத்துவராது. சுதந்திரமாக எழுத வேண்டும். தேவைப்பட்டால் ஆறு பக்கமும், இல்லையென்றால் அரை பக்கமும் எழுதிக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அதற்காகவே தேடிக் கண்டுபிடித்து ஸ்பெஷலாக ஒரு நோட்டு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கீ-போர்டில் நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment