20 September 2010

மதிய நேரத்து மயக்கம்...!

வணக்கம் மக்களே...
கால் சென்டரில் ஓர் இரவு, வாய்கள் பேசி அடங்கியிருந்ததன. கண்கள் ரிச்சர்ட் எப்போது கிளம்புவார் என்று காத்திருந்தன. ஒரு வழியாக மனிதர் வீட்டுக்கு கிளம்புவதற்காக ஹெல்மெட்டை கையில் எடுக்க, சில நிமிடங்களில் விழிகளில் இருள் கலந்தது. இதுதான் எனது வாழ்க்கை. தொடர்ச்சியாக நைட் ஷிப்டில் பல மாதங்கள் இருந்து தூக்கத்தை தொலைத்திருந்தேன். அவ்வப்போது அவைலபிலிட்டி இருக்கும் போது ஐந்து நிமிடங்கள், பேருந்து பயணத்தில் ஜன்னல் கம்பியில் தலை இடித்துக்கொள்ளும் வரை ஒரு பத்து நிமிடங்கள், வீடு திரும்பியதும் சிற்றுண்டி தயாராகும் வரை ஒரு சிறு தூக்கம், பதினோரு மணிக்கு காலர் டியூன் வாங்கலையோ சாமி என்று டோகோமோவில் இருந்து கால் வரும்வரை ஒரு தூக்கம், மதிய உணவை சாப்பிடுவதற்கு தங்கை மண்டையில் அடித்து எழுப்பும் வரை மறு தூக்கம், மாலை வெயில் ஜன்னல் வழியாக உள்ளே வரும்வரை ஒரு தூக்கம், மீண்டும் பேருந்தில் ஏறியதும் என்னவளிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வரும்வரை குட்டித்தூக்கம். இப்படியாக தவணை முறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் கண்கள் விஜயகாந்தின் கண்கள் போல மாறி வருகின்றன.
மேலே உள்ள படத்திற்கும் ரிச்சர்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...!!!
சரி விஷயத்துக்கு வருவோம். என்னைப்போல அலுவலகத்தில் தூக்கத்தை தவிர்க்க முடியாமல் சிரமப்படும் அன்பர்களுக்காக ஒரு பயனுள்ள பதிவை வெளியிட விரும்பியதன் விளைவே இந்தப் பதிவு. நைட் ஷிப்டில் மட்டும்தான் இந்த அக்கப்போர் என்றில்லை. பகல் ஷிப்டில் வேலை செய்வோருக்கும்கூட மதிய உணவை சாப்பிட்டபின் ஒரு மயக்கம் ஏற்படும். இந்த சமயத்தில் உடல் உணவை ஜீரணிக்கும் வேலையில் பிசியாகி விடுவதால் மற்ற ஆணிகளை புடுங்க முடிவதில்லை. இது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்றாலும் நீங்கள் தூக்கக்கலக்கத்தில் உங்கள் அலுவலக தரவுகளை தாறுமாறாக மாற்றி அமைக்கும் அபாயமும் உண்டு. எனவே தூக்கத்தை கலைத்துவிட்டு பின்வரும் ஆலோசனைகளை கவனமாக படித்து செயல்படுங்கள்.

1. அளவுச்சாப்பாடு:
வீட்டில் இருந்து அடுக்கு டிபன் பாக்ஸில் வரும் அசைவ உணவை ஒரு பிடி பிடிப்பது, ஆக்ஸ் போட்டுவிட்டு ஆந்திரா மெஸ்ஸில் போய் ஒரு வெட்டு வெட்டுவது இவற்றையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மதிய உணவிற்கு பதிலாக காலை உணவில் கவனம் செலுத்தினால் சிறப்பு. மதிய உணவையும் கூட ஒரேயடியாக சிங்கிள் சிட்டிங்கில் சாப்பிடாமால் இரண்டு அளவுச்சாப்பாடாக பிரித்துக்கொள்ளலாம். புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொண்டால் நல்லது.

2. உடற்பயிற்சி:
தினசரி உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். சிலர் நேரமில்லை என்று அலட்டிக்கொள்வார்கள், சிலர் ஏழுகழுதை வயதான பிறகு எக்சர்சைஸ் என்ன வேண்டி கிடக்கு என்று அலுத்துக்கொள்வார்கள். படுத்து எழுந்து உருண்டு தான் உடற்பயிற்சி செய்யவேண்டுமென்ற அவசியமில்லை. முந்தய ஸ்டாப்பிங்கில் இறங்கி நடப்பது, லிப்டுக்கு பதிலாக படிக்கட்டை பயன்படுத்துவது (நம்மூரில் என்னைக்கு லிப்டு வேலை செஞ்சிருக்கு) இவை கூட உடற்பயிற்சி தான்.

3. வேலைகளை பிரித்தறிதல்:
கஷ்டமான ஆணிகளை எல்லாம் காலையில் புடுங்கிவிட்டு சுலபமான ஆணிகளை எல்லாம் மதிய உணவிற்குப்பின் புடுங்கலாம். எது கஷ்டமான ஆணி எது சுலபமான ஆணி என்று எப்படி பிரித்தறிவது. (மொத்தத்தில் நம்ம புடுங்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்). செயற்குழு கூட்டம், முக்கியமான சந்திப்புகள் போன்றவற்றை முதல் பாதியில் வைத்துக்கொண்டு கோப்புக்களை ஆராய்வது, மெயில் அனுப்புவது போன்றவற்றை இரண்டாவது பாதியில் வைத்துக்கொண்டால் அலுப்பு தெரியாது.
 


4. சுற்றுப்புறம் பேணுதல்:
உங்கள் கேபினை உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாகவும் வைத்திருத்தல் வேண்டும். உங்கள் குடும்பத்தினர்களின் புகைப்படம், பூக்கள், உற்சாகமூட்டும் வாசகங்கள் இவ்வாறாக உங்கள் மனதிற்கு பிடித்த எதுவாக இருந்தாலும் ஓகே. இந்த டெக்னிக்கை அறிந்து வைத்திருக்கும் அதிகாரிகள் சிலர் டாட்டூ ஒட்டிக்கொண்டு இடுப்பு காட்டும் டோகோமோ பெண்ணின் படத்தை கேபினில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

5. குட்டித்தூக்கம்:
மிகவும் சிரமப்பட்டு தூக்கத்துடன் சண்டை போடுவதைவிட கொஞ்சமாக தூங்கிவிடுவது நல்லது. மெத்தை தலையணை எல்லாம் தேவையில்லை. சாதாரணமாக டேபிளில் அல்லது சேரில் சாய்ந்துக்கொண்டோ கூட தூங்கலாம். எதுவுமே இல்லை என்றால்கூட வெறுமனே கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் இத்தகைய செயல்களை செய்யும்போது ஆள்காட்டி விரலால் கீபோர்டின் டேப் பட்டனை விட்டுவிட்டு அழுத்திக்கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கும்.

6. கொஞ்சம் தியானம்:
தியானம் உடலை இளமையாக வைத்திருப்பதாக மருத்துவம் கூறுகிறது. மதிய நேரத்தில் கண்கள் சொருகும்போது சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். தியானம் செய்கிறேன் பேர்வழி என்று அப்படியே மட்டையாகி விடவேண்டாம். சீரான மூச்சுபயிற்சி செய்தால் உடலும் மனதும் புத்துணர்ச்சி அடையும். உங்கள் மனதிற்கு பிடித்தமான அல்லது உற்சாகமூட்டும் பாடல்களை கேட்கலாம்.

7. சிறு நடைபயணம்:
ஒரேயிடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தால் சோம்பல் சேர்ந்துக்கொண்டே இருக்கும். அதற்கு பதிலாக உங்களுக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்களை கண்காணிப்பது போலவே அலுவலகத்தை சுற்றி ஒரு ராஜநடை நடக்கலாம். மொட்டை மாடி வரை ஒரு முறை வேகமாக ஓடிவிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

8. முகம் கழுவுதல்:
தூக்ககலக்கம் அதிகரிக்கும்போது அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிட்டு வரலாம். இதுபோல கழுவும்போது உள்ளங்கையில் நீரை வைத்துக்கொண்டு அந்த நீருக்குள் கண்களை சில நொடிகள் வைத்திருந்து மூடி மூடி விழித்தால் பெரிய வித்தியாசத்தை உணருவீர்கள். அப்படியே ஆளுயர கண்ணாடி முன் நின்று உங்கள் அழகை ரசித்தால் பயத்தால் உங்கள் தூக்கம் தொலைய வாய்ப்புகள் உள்ளன. 

9. பதிவுலகம்:
பெரும்பாலானவர்களது பணி கணினியும் கணினி சார்ந்ததாகவுமே இருக்கின்றன. எனவே தூக்கம் துரத்தும் போது நான் எழுதிய மொக்கை பதிவுகளை எல்லாம் படித்துவிட்டு பக்கம் பக்கமாக பின்னூட்டம் போடலாம். என்னது...? ரொம்ப ஓவரா இருக்கா... ரைட்டு விடுங்க. பதிவுலகில் "அவிய்ங்க", "சேட்டைக்காரன்", "ஜில்தண்ணி" என்று எத்தனையோ நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களது பதிவை படித்தும் பயன் பெறலாம்.

10. காபியும் அரட்டையும்:
காபி - சிலருக்கு தூக்கத்தை கொடுக்கும், சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும். தூக்கத்தை கொடுக்கும் என்று நினைப்பவர்கள் அவித்த வேர்க்கடலையை மாற்றாக பயன்படுத்தலாம். காபியை அணு அணுவாக ரசித்து குடிப்பதை விட பக்கத்து கேபினில் இருக்கும் அனுவுடன் அரட்டை அடித்தபடி குடித்தால் நன்று. டென்ஷனை குறைக்கிறேன் என்று சிகரெட்டை பற்ற வைத்தால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். 

எப்படி... தூக்கத்தை குறைக்க நான் சொன்ன பத்து கட்டளைகள் பயனுள்ளதாக அமைந்ததா...? முக்கியமான ஒன்றினை சொல்ல மறந்துவிட்டேன். இந்தப் பதிவிற்கு இன்ட்லியில் ஓட்டு போடாவிட்டாலோ, பின்னூட்டம் எழுதாவிட்டாலோ நிச்சயமாக உங்களுக்கு இரவில் கூட தூக்கம் வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் கனவில் நான் ரத்த காட்டேரியாக வருவேன்.

இந்தப் பதிவுடன் நமது நைட் ஷிப்ட் நண்பர்கள் சிலரது ரியாலிட்டி படங்களை இணைக்க விரும்பினேன். அவ்வாறாக இணைத்தால் சுரேஷ் வருத்தப்படுவார் என்பதனாலும் சுரேஷ் அணியின் நண்பர்களை இழக்க நேரிடும் என்பதாலும் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவை படித்தபின்பாவது என்னை டே ஷிப்டுக்கு மாற்றுவார்கள் என்ற...
நம்பிக்கையுடன்,
N.R.PRABHAKARAN

பி.கு: மேலே குறிப்பிட்டுள்ள பத்து கட்டளைகளும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. எதையாவது செயல்படுத்துகிறேன் பேர்வழி என்று அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அடிவாங்கினால் நானோ, தத்துபித்துவங்கள் வலைத்தளமோ பொறுப்பல்ல.

17 September 2010

வெங்காய பக்கங்கள்...!

வணக்கம் மக்களே...

இன்று என் தமிழ் மக்களை தலை நிமிர வைத்த தன்னிகரற்ற தலைவனின் 132-வது பிறந்தநாள். போஸ்டர் அடித்து, கட்-அவுட் வைத்து, பேனர் கட்டி, மாலை அணிவித்து, கிரீடம் வைத்து, வீர வாளை பரிசாக தந்து, கேக் வெட்டி கொண்டாடுவதற்கு இது தமிழகத்தின் வருங்காலம் என்று சொல்லப்படும் நடிகர்களின் பிறந்தநாளோ, காலம்காலமாக தமிழகத்தின் இருண்டகாலமாக இருந்துவரும் அரசியல்வாதிகளின் பிறந்தநாளோ இல்லை. பிறந்தநாள் என்பது ஒருவரது கருத்துக்களை பரப்புவதற்கும், பாராட்டுவதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும். எனவே அய்யாவை பற்றி ஏதேனும் எழுதலாமென்று கடந்த ஒரு வாரகாலமாக சிந்தித்து வந்தேன். அய்யாவின் கோடானு கோடி சிந்தனைகளில் எதைப் பற்றி எழுதுவது என்று விளங்கவில்லை. அதுமட்டுமல்ல, எழுதும் பதிவு பெருவாரியான மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமெனில் கொஞ்சமேனும் மெனெக்கெட வேண்டும்.


அய்யாவின் கருத்துக்களில் அதி முக்கியமானது கடவுள் மறுப்பு தத்துவம்.

"கடவுள் இல்லை... கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை...
கடவுளை கற்பித்தவன் முட்டாள்...
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்...
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி..."

இவை வெறும் வார்த்தைகள் அல்ல. சின்ன வயதில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு ஒரு முறை சென்றிருந்தபோது தோழர் ஒருவர், மேற்கூறிய வாசகங்கள் ஒவ்வொன்றினையும் விளக்கிச் சொன்னார். முன்னதாக அய்யாவே 40 வருடங்களுக்கு முன்னர் உண்மை இதழில் இவை பற்றி விளக்கம் கொடுத்து கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த உரையை படித்தவர்களோ, கேட்டவர்களோ கண்டிப்பாக மறுக்க முடியாது, மழுப்ப வேண்டுமானால் செய்யலாம். அதனினை எல்லோரும் படித்திட செய்ய வேண்டுமென எண்ணினேன். ஆனால் கட்டுரையில் இருந்த வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக இருந்தன. மாற்றுகருத்து கொண்டவர்களே ஆனாலும் அவர்கள் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை. நீங்களாகவே படிக்க விரும்பினால் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கிப் படித்துக்கொள்ளலாம்.



நான்காண்டுகளுக்கு முன்பு பெரியார் திரைக்காவியம் வெளியானது. வழக்கமாக நம்மூர் இளைஞர்கள் குத்து பாட்டு, குட்டைப்பாவாடை ஹீரோயின் இதையெல்லாம் தானே பார்ப்பார்கள் என்று நானும் முன்பதிவு ஏதும் செய்யாமல் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக சென்னை ஆல்பட் திரையரங்கத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே ஹவுஸ்புல் போர்டில் லைட் எரிந்துக்கொண்டிருந்தது. அங்கே நின்றிருந்தவர்களில் பலர் கருஞ்சட்டை அணிந்திருந்தனர். அதிலும் இளைஞர்கள் நிறைய பேர் பெரியார் மற்றும் சே குவேரா படங்கள் பொறித்த பனியன்களை அணிந்து வந்திருந்தனர். எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எப்படியோ ப்ளாக் ஷர்ட்ஸ் போட்டவர்களுக்கு மத்தியில் பிளாக்கில் டிக்கெட் எடுத்து படத்தை பார்த்துவிட்டேன். படத்தில் சொன்ன கருத்துக்களையும் வசனங்களையும் விட அதற்கு கைதட்டிய மக்களை அதிகம் ரசித்தேன்.

நான் கடந்து வந்த பள்ளி, கல்லூரி நாட்களில் நண்பர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் பெரும்பாலான இளைஞர்கள் மனதில் கடவுள் மறுப்பு, சம தர்மம் போன்ற பகுத்தறிவு கொள்கைகள் குடிக்கொண்டிருக்கும். ஆனால் இறுதிவரை அவர்கள் இதே நிலைப்பாடுடன் இருப்பார்களா என்றால் இல்லை. காலங்கள் கடக்க சமுதாயம் அவர்களது சிந்தனைகளை சவக்குழியில் தள்ளுகிறது. மூடநம்பிக்கைகள் அவர்களது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகி விடுகின்றன. கோவிலுக்கு செல்வது என்பதை கழிவறைக்கு செல்வதைப் போல அவசியமாக கருதுகிறது இந்த வெங்காய சமூகம். அப்பா அம்மா பேச்சை தட்ட முடியாமல் வரதட்சணை வாங்க ஆரம்பிக்கும் ஆண், தாலி கட்டுவது, காது குத்துவது, மொட்டை போடுவது என்று என்னவெல்லாமோ செய்ய சமுதாயம் அவனை உந்துகிறது. நானும் இதற்க்கெல்லாம் விதி விலக்கல்ல என்று நினைக்கும்போது எனது இயலாமையை நினைத்து மல்லாக்க படுத்து துப்பிக்கொள்ளலாமா என்றே தோன்றுகிறது. ஒரு வார்த்தை சொன்னால் உறவினர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. என் தந்தைக்கு உடல்நிலை குணமடைந்தால் எனக்கு குலதெய்வ கோவிலில் மொட்டை எடுப்பதாக வேண்டிக்கொண்ட அத்தை ஏன் தனக்கு மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டிக்கொள்ளவில்லை என்று எனக்கு கடைசி வரை புரியவே இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகும் உரிமைக்காக திராவிடர் கழகம் போராடிக்கொண்டிருந்தது. அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த  பக்தர் ஒருவர், "நீங்கள் தான் கடவுளே இல்லை என்று கூறுகிறீர்களே... பிறகு எந்த பிரிவினர் அர்ச்சனை செய்தால் உமக்கென்ன ஓய்..." என்று விதண்டாவாதம் பேசினார். கழகம் போராடுவதே உங்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகத்தானே என்று சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்யத் தோன்றியது. ஆனால் சொன்னவர் என் உறவினர் என்பதால் பொத்திக்கொண்டேன். நூறாண்டுகளுளுக்கு முன்பு நெல்லை, கழுகுமலை கிராமத்தில் எனது அந்த உறவினர்  பெருமையாக சொல்லிக்கொள்ளும் அவரது சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அப்பகுதியில் வாழ்ந்த அந்த சமூகத்தினர் அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துவிட்டார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரியார் என்ற ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் இன்றும் அவர் செருப்பில்லாமல் நடந்துக்கொண்டும், உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்களை காணும்போதெல்லாம் சைக்கிளை விட்டு இறங்கி உருட்டிக்கொண்டும் தான் இருந்திருப்பார்.

சரி, கடவுள் மறுப்பைப் பற்றி பேச வேண்டாம் அதைத்தவிர பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தீண்டாமை, சுய மரியாதை என்று ஆயிரம் பக்கங்கள் உள்ளன அய்யாவின்  அரிச்சுவட்டில். கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்னபிற கருத்துக்களை பற்றியாவது சிந்திக்க வேண்டும். இன்னும் என்னென்னவோ எழுத வேண்டுமென தோன்றுகிறது. ஆனால் பக்கம் பக்கமாக எழுதினால் படிக்க நினைப்பவர்கள் கூட படிக்காமல் போகும் அபாயம் உள்ளதால் நிறுத்திக்கொள்கிறேன். இதுபோன்ற பதிவுகள் எழுதும்போது பக்தகேடிகள் சிலர் வசைமொழி பாடி பின்னூட்டம் போடுவார்கள். அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கிளம்பி வாருங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN


பிறப்பு: 21.02.1907                                                                       இறப்பு: 17.09.1979

பி.கு: இன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களது 31-வது நினைவு நாள் என்பதால் அவரைப் பற்றி சில வரிகள் எழுத நினைத்தேன். ஆனால் சில வரிகள் எல்லாம் அவருக்கு போதாது என்பதால் நாம் பிறிதொரு நாளில் அவரது நினைவில் மூழ்கலாம்.

9 September 2010

சாம்பியன்ஸ் லீக் 2010 - அறிந்தும் அறியாமலும்

வணக்கம் மக்களே...

நேற்றைக்கு "அறியாத முகங்கள்" என்ற பெயரில் பெரும்பாலானவர்கள் அறிந்திராத பத்து வீரர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நான் எழுதிய அந்த முதல் கிரிக்கெட் பதிவிற்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் தோற்றுப்போய் விடுவதாக இல்லை. கடைசி பந்து வரை முயற்சி செய்யத்தான் போகிறேன். எனவே முன்னர் திட்டமிட்டது போலவே இன்று அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் பத்து வீரர்களைப் பற்றி எழுதுகிறேன். ஏன் இந்தத் தலைப்பு...? சில வீரர்களின் பெயரைக் கேட்டதும் எங்கேயோ கேள்விப்பட்டது போல தோன்றும் ஆனால் அதிகம் பரிட்சயம் இருக்காது. அப்படிப்பட்ட நினைவினோரத்தில் இருக்கும் வீரர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

1. Mathew Sinclair (Central Stags)
பழம்பெரும் வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே இரட்டை சதமடித்து அதிரடி காட்டினார். சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபின் மறுபடி ஒரு இரட்டை சதம். ஆனால் அதன் பிறகு இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக எதுவும் சாதிக்காததால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். அவ்வப்போது நியுசிலாந்து அணியில் முக்கிய வீரர்களுக்கு எதிர்பாரா காயம் ஏற்படும்போது மாற்றுவீரராக களம் காணுவார். எனினும் இதுவரை தேசிய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.

2. Brandon Diamanti (Central Stags)
டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம். முக்கியமான தருணங்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தும் அணியின் வெற்றிக்கு பலமாக விளங்கும் ஆல் ரவுண்டர். பெளலிங்கை பொறுத்தவரையில் அவ்வப்போது ரன்களை வாரி இறைத்தாலும் நேர்த்தியாக பந்து வீசும் ஆற்றல் கொண்டவர். மிதமான வேகத்தில் பந்தை ஸ்விங் செய்வதில் கெட்டிக்காரர்.

3. Justin Kemp (Chennai Super Kings)
அற்புதமான ஆல் ரவுண்டர், ஆனால் ஏனோ இதுவரை தோனி இவரை சரிவர பயன்படுத்தவில்லை. முதலில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனாகவே அறிமுகமானார். பின்னர் காலப்போக்கில் மிதவேகப்பந்து வீசுவதில் திறமை காட்டினார். உள்ளூர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கவுண்டி, தென் ஆப்பிரிக்கா, ஐ.பி.எல் என்று அதிக அனுபவம் வாய்ந்தவர். இப்போது துஷாராவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.

4. Neil McKenzie (Highvield Lions)
முன்னர் குறிப்பிட்ட சின்க்லேர் எப்படியோ அப்படித்தான் இவரும். திறமை இருந்தும் அதிகம் பேசப்படாத வீரர். கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் வல்லவர். தென் ஆப்பிரிக்காவில் இவரைவிட திறமை வாய்ந்த வீரர்கள் நிரம்பி வழிந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதென்று சொல்லலாம்.

5. Ryan McLaren (Mumbai Indians)
தென் அப்பிரிக்கா அணியின் கல்லிஸ் போல சீம் பெளலிங்கிலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும் அசத்தும் திறமை கொண்ட ஆல் ரவுண்டர். சமீபத்திய சீசனில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஈகிள்ஸ் அணியிலும் இங்கிலாந்தின் கென்ட் அணியிலும் இவர் காட்டிய திறமை இவருக்கு மும்பை அணியில் இடம் வாங்கி தந்துள்ளது.

6. Cameron White (Royal Challengers Bangalore)
பல்வேறு திறமைகளை பெற்ற வீரர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், லெக் ஸ்பின்னர், சில நேரங்களில் விக்கெட் கீப்பர் இவ்வாறாக பன்முகம் காட்டுபவர். கொஞ்சம் சிரமப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்திருப்பவர், இப்போது ஆஸ்திரேலியாவின் டி-20 துணை கேப்டன். ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொண்டாலும் ஆஸ்திரேலியாவில் போதிய அளவில் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிட்டுவதில்லை.

7. Callum Ferguson  (South Australian Red Backs)
20 வயதில் உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் சீசனிலேயே எக்கச்சக்கமாக ரன்களை குவித்தவர். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது போதாத காலம், கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் ட்ராபியின் போது கால் மூட்டில் காயம் ஏற்பட்டு இப்போது ஒரு வழியாக மீண்டு வந்திருக்கிறார்.

8. Shane Harwood (Victorian Bushrangers)
தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஒரு பழம்பெரும் வேகப்பந்து வீச்சாளர். ஏற்கனவே விக்டோரியா அணியில் பல பெளலர்கள் இருப்பதால் இவர் பயன்படுத்தப்படுவது சந்தேகமே. எனினும் வயதிற்கு அப்பாற்ப்பட்ட திறமை படைத்தவர். ராஜஸ்தான் அணிக்காக இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை சாய்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கூட ஆட்டம் காண வைப்பவர்.

9. Juan Theron (Warriors)
கிடைத்தற்கரிய பெளலர் என்று சொல்லலாம். டி-20 போட்டியின் இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தும் விதமாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பும் வல்லமை கொண்டவர். லைன் அண்ட் லெந்தில் பந்து வீசியும் திடீரென மித வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேனை நிலைகுலைய வைத்துவிடுவார். ஐ.பி.எல்லில் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட விளையாடிய முதல் போட்டியிலே ஆட்ட நாயகன் விருதைப் பெற்று அசத்தியவர்.

10. Jehan Mubarak (Wayamba Elevens)
வயம்பா அணியின் தற்போதைய கேப்டன். சரியான நேரத்தில் சோபிக்காததால் தேசிய அணியில் வாய்ப்பை இழந்த போதிலும் தொடர்ந்து வயம்பா அணிக்காக ரன்களை குவித்து வருபவர். ஆப்-ஸ்பின்னிலும் பீல்டிங்கிலும் கூட சிறந்து விளங்குபவர். வயம்பா அணியை இவர் கை ஆளும் விதத்தை கண்ட சில வர்ணனையாளர்கள் இவர்தான் வருங்கால இலங்கை அணியின் கேப்டன் என்று கூறி வருகின்றனர்.

இன்னும் இரு தினங்களில் சாம்பியன்ஸ் லீக் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நாளைக்கும் இதைப்போல ஒரு பதிவை எழுத விரும்புகிறேன். ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. நீங்கள் ஏதாவது ஆலோசனை தெரிவித்து அப்படியே மறக்காமல் உங்கள் ஓட்டினையும் போட்டுவிட்டு சென்றால் சிறப்பு.

என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

8 September 2010

சாம்பியன்ஸ் லீக் 2010 - அறியாத முகங்கள்

வணக்கம் மக்களே...

முதல்முறையாக என்னிடமிருந்து ஒரு கிரிக்கெட் பதிவு. பதிவுலகிற்கு வந்ததில் இருந்தே கிரிக்கெட் பதிவு எழுத வேண்டுமென்றொரு அவா. பதிமூன்று வருடங்களாக கிரிக்கெட் பார்த்து வந்தாலும் எனக்கு அதில் பெரிய அளவில் தொழில்நுட்ப ஞானம் கிடையாது. இப்பொழுது கூட என்னுடைய கேள்வியறிவையும் சில தளங்களில் திரட்டிய தகவல்ககளை ஒருங்கிணைத்தும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். கிரிக்கெட் பற்றி தொடர்ந்து பதிவெழுதி வரும் ஞானிகள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இன்னும் சில தினங்களில் சாம்பியன்ஸ் லீக் துவங்க இருக்கிறது. இருப்பினும் ஐ.பி.எல் அளவிற்கு சாம்பியன்ஸ் லீக்கிற்கு பெரிய அளவில் ஆரவாரமும் வரவேற்பும் இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் முக்கியமானது வீரர்கள் பெரும்பாலானாவர்கள் அறிமுகமில்லாதவர்கள். ஆயினும் திறமையில் குறைந்தவர்கள் என்று யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட திறமை நிறைந்த ஆனால் நம்மூர் மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத சில வீரர்களை இந்தப் பதிவின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன்.

1. பீட்டர் இங்க்ராம் (Peter Ingram)
பார்ப்பதற்கு சிங்கம் படத்தில் வரும் சூர்யாவைப் போல முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் இவர், சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணியின் சீனியர் ப்ளேயர். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர் சமீபத்தில் வங்காளதேசம் உடனான தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்றார். இவர் அதிரடியாக ஆடக்கூடிய தொடக்க ஆட்டக்காரர். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சர்வதேச அணியில் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

2. வாக்ன் வான் ஜார்ஸ்வெல்ட் (Vaughn Van Jaarsveld)
ஹைவீல்ட் லயன்ஸ் அணியின் நட்சத்திர வீரர். கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் ஜொலிக்கும் திறமை படைத்தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சர்வதேச களம் கண்டார். அந்தத் தொடரில் இவர் பெருமளவில் சோபிக்கவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களில் ஒருவர். சமீபத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்தவரும் இவரே.

3. ஆரோன் பிஞ்ச் (Aaron Finch)
கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் போட்டியை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். கடைசி வரை களத்தில் இறக்கப்படாமல் டக்-அவுட்டில் அமர்த்தப்பட்டிருந்த வீரர். அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் ராயல் அணி ஏலத்தில் எடுத்திருக்கும் வீரர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் எப்படியோ அதுபோல விக்டோரியா அணிக்கு பிஞ்ச். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை திசை திருப்பும் வல்லமை படைத்தவர். இதுவரை சர்வதேச களம் காணாதவர் ஆனால் விரைவில் களம் காணுவார் என்று நம்பப்படுகிறது.

4. ஜான் ஹாஸ்டிங்ஸ் (John Hastings)
இவருடைய கதையும் மேலே குறிப்பிட்டது போல தான். சென்ற ஆண்டு விக்டோரியா அணியில் இடம் பெற்று ஆனால் சாம்பியன்ஸ் லீக்கில் களம் காணாதவர். இவர் ஒரு திறமை மிக்க ஆல்ரவுண்டர். சமீபத்தில் நடந்த உள்ளூர் சீசனில் அனைத்து பரிணாமங்களில் கலக்கோ கலக்கென்று கலக்கியவர். பேட்டிங்கை பொறுத்தவரையில் பிஞ்ச்சை போலவே இறுதிகட்டத்தில் களம் காணுபவர். அவரைப்போல அதிரடியாக விளையாடாவிட்டாலும் அதிரடியாக விளையாடும் சக வீரருக்கு துணை நிற்கும் ஆற்றல் படைத்தவர்.

5. அல்விரோ பீட்டர்சன் (Alviro Pieterson)
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இவர் ஹைவீல்ட் லயன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன். திறமையான பேட்ஸ்மேன் என்று சொல்வதை விட திறமையான கேப்டன் என்று சொல்லலாம். எதிரணியின் பலவீனத்தை புரிந்துக்கொண்டு செயல்படுவதில் கெட்டிக்காரர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்வதேச களம் கண்ட இவர் அந்த ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார். 

6. டேனியல் கிறிஸ்டியன் (Daniel Christian)
ரெட் பேக்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி ஆட்டக்காரர், ஆல் ரவுண்டரும் கூட. இயற்கையான ஆல் ரவுண்டர் என்று க்ரிக்கின்போ (Cricinfo) தளத்தால் வர்ணிக்கப்பட்டவர். தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் டி-20 அணியில் இடம் பெற்றுள்ள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தன்மைக்கேற்ப அவ்வப்போது பெளலிங்கிலும் சோபிக்கும் திறமை கொண்டவர். நடந்துமுடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் மூன்று ஆட்டங்களில் விளையாடினாலும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கததால் இவரது திறமை வெளிப்படவில்லை.

7. டேனியல் ஹாரிஸ் (Daniel Harris)
ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ரெட் பேக் அணிக்காக விளையாடி வருபவர். கிரிக்கெட்டில் இவருடைய புனைப்பெயர் "மாஸ்". இதிலிருந்தே மேற்படி நபர் எப்படிப்பட்டவர் என்று உணர்ந்துக்கொள்ளலாம். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் புயலாக பாய்ந்து ஓட்டங்களை சேமிக்கும் ஆற்றல் பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்து முழு பார்மில் இருக்கிறார்.

8. டேவிட் ஜேகப்ஸ் (David Jacobs)
வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர், கேப்டன், விக்கெட் கீப்பர் அனைத்தும் இவரே. ஆரம்பகாலத்தில் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடியவர். தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். இதுவரை சர்வதேச களம் காணும் வாய்ப்பு கிட்டாதது வருத்தம் தான். விக்கெட் கீப்பிங் திறமையும் இருப்பதால் கூடிய விரைவில் சர்வதேச அணியில் இடம் பிடிக்கக்கூடும். 

9. கிளிப்பி டீகான் (Cliffie Deacon)
ஹைவீல்ட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர். பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் சரிசமமான திறமை படைத்தவர். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டக்கூடியவர். வேகப்பந்து வீசி விக்கெட் எடுப்பதில் வல்லவர். விக்கெட்டுக்களை வீழ்த்துவது ஒரு புறமிருந்தாலும் ரன்களை கட்டுபடுத்துவதில் சிறந்தவர். டி-20 பரிணாம கிரிக்கெட்டில் இவரது எகானமி 5.8 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

10. ஜெமி ஹவ் (Jamie How)
சிறந்த பேட்ஸ்மேன், கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் சிறந்து விளங்கக்கூடியவர், புத்திசாலித்தனமான கேப்டன் என்று பல்வேறு பெருமைகளை பெற்றவர். அவ்வப்போது சர்வதேச போட்டிகளிலும் தலை காட்டி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் அணியின் கேப்டன் என்ற முறையில் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே மூன்று ஐ.பி.எல்லில் பார்த்து பழகிவிட்டதால் ஐ.பி.எல் அணி வீரர்களைப் பற்றியும் நம்மூர் வீரர்களைப் பற்றியும் எழுதவில்லை. திறமை இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் மேலே குறிபிட்டுள்ள வீரர்களுக்கு இணையாக கயானாவில் வீரர்கள் இல்லை. வயம்பா அணியில் திறமைசாலிகள் இல்லை என்று சொன்னால் இலங்கை பதிவர்கள் என்னை அடிக்க வருவார்கள் என்று தெரியும் ஆனாலும் அவர்களும் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட வீரர்கள் என்ற காரணத்தினால் எழுதவில்லை.

இதனை தொடர்ந்து நாளையே மற்றுமொரு கிரிக்கெட் பதிவு எழுதும் எண்ணம் உள்ளது. ஆனால் அது உங்களிடமிருந்து வரும் வரவேற்பை பொறுத்தே இருக்கிறது. அதனால் தாராளமாக உங்கள் ஓட்டுக்களை போட்டுவிட்டு பின்னூட்டங்களையும் பதிவு செய்துவிட்டு திட்டவேண்டுமென்று தோன்றினால் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டும் செல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN