21 March 2012

கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் படத்தை சாந்தி திரையரங்கில் பார்ப்பது என்பது சிங்கத்தை அதனுடைய குகையில் சென்று சந்திப்பதை போன்றது. அப்படியொரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாமா அவர்களே... (இது பலே பாண்டியா ஸ்டைல்) உங்களுக்கு எனது நன்றிகள்.

ஆறரை மணிக்கு தொடங்க இருந்த காட்சிக்கு கிட்டத்தட்ட ஐந்து மணிக்கே அட்டன்டன்ஸ் போட்டாச்சு. மாமா அவர்கள் அதற்கு முன்பே அங்கே பூரித்துக்கொண்டிருந்தார். எனது மாமா மட்டுமல்லாமல் மற்றுமுள்ள உறவினர்கள் மத்தியில் நமக்கு ஒரு பத்திரிக்கையாளர் இமேஜ் இருப்பதால் அதை கட்டிக்காக்கும் விதமாக தம்மாத்தூண்டு மொபைல் கேமராவை வைத்துக்கொண்டு என்.டி.டி.வி. ரிப்போர்ட்டர் மாதிரி சுற்றிச்சுழன்று சீன் போட்டுக்கொண்டிருந்தேன். இனி...

ஒரு சாம்பிள் பேனர்
- சாந்தி திரையரங்க வளாகம் முழுவதும் பேனர்கள் குவிந்திருந்தது, சைஸ் வாரியாக இருந்த பேனர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஐம்பதை தாண்டும். “இதயராஜா சிவாஜி பித்தர்கள்”, “கலைத்தாயின் தெய்வமகன் சிவாஜி மன்றம்”, “சிவாஜியின் சித்தர்கள் கலைநிலா சிவாஜி மன்றம்”, “இதயவேந்தன் வாசகர் வட்டம்” என விதவிதமான பெயர்களில் மன்றங்கள்.

- இவை போதாதென்று சுவரெங்கும் சிவாஜி பற்றிய செய்தித்தாள் சேகரிப்புகள், “இதயராஜா”, “இதயவேந்தன்”, “தெய்வமகன்” போன்ற இதழ்களின் அட்டைப்படங்கள். செய்தித்தாள்களில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகள் ஒருசேர வந்திருக்கும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் பெயரை மட்டும் லாவகமாக மையிட்டு அழித்திருந்தார்கள்.

- நான் உள்ளே நுழைந்த சமயம் கம்பீரமாக பேண்டு வாத்தியங்கள் முழங்க, பிரம்மாண்டமாய் பிரம்மாண்டமாய் ஒரு மாலையை சிவாஜியின் மெகா பேனருக்கு சூட்டும்பொருட்டு உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் நின்றுக்கொண்டிருந்தார்கள் சில சிவாஜி ரசிகர்கள். இந்த பிரம்மாண்ட மாலையின் ஏற்பாட்டாளர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவாஜி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- அடுத்து நீளமானதொரு பத்தாயிரம் வாலா சரவெடியை வாசலில் இருந்து ரோடு வரைக்கும் சிவப்பு கம்பளமாக விரித்து பற்ற வைத்தார்கள். வெடியின் சத்தம் அடங்குவதற்கு மட்டுமே மூன்று நிமிடங்கள் ஆனது.

- சிறிது நேரத்தில் பரபரப்பாக ஒரு இன்னோவா உள்ளே நுழைய, யாரு யாருன்னு எல்லோரும் பதட்டத்துடன் பார்க்க உள்ளே இருந்து இறங்கியவர் ஜூனியர் சிவாஜி (!!!) துஷ்யந்த். அவரைச் சுற்றி சில ரசிகர்கள் சூழ்ந்துக்கொள்ள, மற்றசில ரசிகர்கள் “தாத்தா இடத்தை நீயில்லை... எவனாலயும் நெருங்க முடியாது...” என்று அவர் காதுபடவே கோஷமிட்டார்கள்.

ஜூனியர் சிவாஜி
- சரசரவென திரையரங்க வாயிலை நோக்கி விரைந்த துஷ்யந்த், அங்கே இதயரஜா சிவாஜி பித்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான விழாவை தன் கரங்களால் தொங்கிவைத்துவிட்டு சென்றார்.

- கோவில் திருவிழாக்களில் வீக்கான சிலருக்கு மட்டும் சாமி வருமே. அதேபோல ஒரு ரசிகருக்குள் சிவாஜி வந்துவிட அவர் தொடர்ந்து சிவாஜி பாடல்களை ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டே பாடிக்கொண்டிருந்தார். அதற்கும் பக்கத்திலிருந்த டாஸ்மாக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நம்புவோமாக...!

- இன்னொரு சிவாஜி ரசிகர் கரகாட்ட கலைஞரை போல தனது தலையில் டர்பன் ஒன்றினை வைத்து ஆடிக்கொண்டிருந்தார். ஆர்வமிகுதியில் அவர் தன் தலையில் சூடம் ஏற்ற முயற்சிக்க, அருகிலிருந்த கடமை தவறாத போலீஸ் அதிகாரி எஸ்.பி.செளத்ரி “வேண்டாம் சார்... ரிஸ்க்” என்று எச்சரித்து கலைஞரை தீக்குளிப்பிளிருந்து காப்பாற்றினார்.

- “உட்லண்ட்ஸ்ல குடியிருந்த கோயில் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாமே...” என்று சிவாஜி ரசிகர்கள் யாரையாவது சீண்டினால், “அது டுபாக்கூர் ப்ரிண்டுங்க”, “தியேட்டர்ல ஈ ஓட்டுறாங்களாம்”, “வேணும்னே தொப்பித்தலையன் படத்தை போட்டிக்கு ரிலீஸ் பண்ணியிருக்குறானுங்க” என்று ஏகத்துக்கும் பொங்குகிறார்கள்.

- படம் தொடங்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்த தருவாயில் மற்றொரு வி.ஐ,பி கார் வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கியவர் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் மட்டுமே அன்றைய ஷோவிற்கு அறுபது டிக்கெட்டுகள் புக் செய்திருந்ததாக தகவல்.

- அவரைத் தொடர்ந்து வருகை தந்தவர் விவேக்கின் “சாத்தப்பன்” காமெடி நடிகர். சாத்தப்பன் மட்டும் வந்ததும் நேரே உள்ளே நுழையாமல் போட்டோ எடுக்க விரும்பியவர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

- வருவார், வருவார், வந்திருப்பார், வந்திருக்கார் என்று பலரும் பலவிதமாக சொல்லிக்கொண்டே இருந்த மற்றொரு வி.ஐ.பி. இயக்குனர் சேரன். அவர் வந்ததாகவும் ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.

- ஒவ்வொரு முறை சிவாஜியை க்ளோசப்பில் கட்டும்போது, சிவாஜி சிரிக்கும்போது, சிவாஜி கர்ஜனையாக வசனம் பேசும்போது, சிவாஜி வெட்கப்படும்போது என்று தொடர்ந்து திரையரங்கில் கை தட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன.

- படத்தில் ஜெயலலிதாவின் அம்மா, கனகாவின் அம்மா, வி.எஸ்.ராகவன், இடிச்சப்புளி செல்வராஜ், சண்முகசுந்தரம் என பல பழம்பெரும் நடிக, நடிகைகளை காண முடிந்தது.

- படத்தில் சிவாஜிக்கு எதிரான பத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் தொடர்ச்சியாக வசைமொழிகளை வாங்க வேண்டியிருந்தது. குறிப்பாக சிவாஜியின் மாமனார் கேரக்டரில் நடித்தவரை நாலைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து திட்டினார்கள்.

- இரண்டாம் பாதி தொடங்கி படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, படம் பார்க்க வந்த எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் எம்.ஜி.ஆரை உயர்வாக சொன்னதாலோ / சிவாஜியை தரக்குறைவாக பேசியதாலோ (என்னவென்று தெரியவில்லை) சுமார் இருபது பேர் கொண்ட குழுவால் சட்டை கிழிக்கப்பட்டு, அடித்து, உதைத்து, தரதரவென்று வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்.

- படத்தின் பழைய ப்ரின்ட்டை நான் பார்த்திராததால் அது பற்றிய வித்தியாசங்களை என்னால் கூற முடியவில்லை. ஆனால் சில இடங்களில் ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு மாறும்போது பிரிண்ட் வித்தியாசம் அப்பட்டமாக தெரிகிறது.

- பல வருடங்கள் கழித்து சிவாஜி படம் ஒன்றினை புதுபித்து ரிலீஸ் செய்ய நினைத்தவர்கள், சிவாஜி இறப்பது போன்ற கதையமைப்பை கொண்ட படத்தை தேர்ந்துடுக்காமல் இருந்திருக்கலாம் என்பது நிறைய ரசிகர்களின் வருத்தம்.

- இதனினை ஒரு நல்ல தொடக்கமாக வைத்துக்கொண்டு இனி சிவாஜி படங்களை மெருகேற்ற நினைப்பவர்கள் புராண படங்களை புறந்தள்ளி, பராசக்தி போன்ற சமூகப்படங்களையோ, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சரித்திர படங்களையோ அல்லது உத்தமபுத்திரன், பலே பாண்டியா போன்ற ஜாலி டைப் படங்களையோ புதுபித்தால் சிறப்பாக இருக்கும்.

- படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறிகொடுத்துவிட்டதாக தர்மத்தாய் அழுது புலம்புகிறார். நியாயப்படி கலைத்தாயும் தானே அழுதிருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

46 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த படம்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.. பொறாமையாக உள்ளது..

    ReplyDelete
  2. ஐ.. நான் தான் ஃபர்ஸ்ட்.. நான் தான் ஃபர்ஸ்ட்..

    ReplyDelete
  3. நான் கர்ணன் போல் வாழ வேண்டும் என்பதே ஆசை.. தர்மத்தின் தலைவனாக.. நட்பின் இலக்கணமாக.. 

    ReplyDelete
  4. எம்.ஜி.ஆர். ரசிகருக்கு உதையா? இப்ப இருக்கற நண்டு,நசுக்கான் ஹீரோக்களே நல்லா பாத்துக்கங்க. மாஸ்னா இது!

    ReplyDelete
  5. அசத்தல் போஸ்ட் பிரபா. நேரடியாக சாந்தி தியேட்டரில் இருந்த உணர்வு.'சத்யமாக' மிஸ் செய்துவிட்டேன். கலக்குலே தம்பி!!

    ReplyDelete
  6. கட்டுரை நல்லா இருக்கு :)

    ReplyDelete
  7. //தன கரங்களால் தொங்கிவைத்துவிட்டு சென்றார்.//பிழையை கவனிக்கவும் அன்பரே

    ReplyDelete
  8. பழைய படங்களையும் பார்க்கும் உங்கள் மன வலிமை பாராட்டதக்கது

    ReplyDelete
  9. @ ஷர்மி
    // எனக்கு மிகவும் பிடித்த படம்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.. பொறாமையாக உள்ளது.. //

    யோசிச்சு பார்த்தேன் மேடம்... எனக்கும் கூட பரிதாபமா தான் இருக்கு... டிவிடி வாங்கிப் பார்த்தா கூட இந்த எபக்ட் கிடைக்காது...

    // ஐ.. நான் தான் ஃபர்ஸ்ட்.. நான் தான் ஃபர்ஸ்ட்.. //

    இதென்ன ரேஷன் கடையா... போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வையுங்க மேடம்...

    // நான் கர்ணன் போல் வாழ வேண்டும் என்பதே ஆசை.. தர்மத்தின் தலைவனாக.. நட்பின் இலக்கணமாக.. //

    அதுக்கு தமிழ்ல வேற பெயர் இருக்கே...

    ReplyDelete
  10. @ ! சிவகுமார் !
    // எம்.ஜி.ஆர். ரசிகருக்கு உதையா? இப்ப இருக்கற நண்டு,நசுக்கான் ஹீரோக்களே நல்லா பாத்துக்கங்க. மாஸ்னா இது! //

    No Comments...

    // அசத்தல் போஸ்ட் பிரபா. நேரடியாக சாந்தி தியேட்டரில் இருந்த உணர்வு.'சத்யமாக' மிஸ் செய்துவிட்டேன். கலக்குலே தம்பி!! //

    நன்றி தல...

    ReplyDelete
  11. @ அருண்மொழித்தேவன்
    // கட்டுரை நல்லா இருக்கு :) //

    மிக்க நன்றி தல...

    ReplyDelete
  12. @ PREM.S
    // பிழையை கவனிக்கவும் அன்பரே //

    திருத்திவிட்டேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...

    // பழைய படங்களையும் பார்க்கும் உங்கள் மன வலிமை பாராட்டதக்கது //

    உண்மையில் எனக்கு படம் சலிப்பு தட்டவே இல்லை...

    ReplyDelete
  13. மிகவும் பிடித்த படம். தியேட்டரில் போய் பார்க்கவேண்டிய அவஸ்தையை தூண்டிவிட்டீர்கள்.
    :))

    ReplyDelete
  14. தங்கள் பதிவை தினமும் எதிர்பார்த்தேன்.
    ரசிகர்களின் கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பாக இருந்தது தங்கள் பதிவு.நன்றி பிரபா...

    //படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறிகொடுத்துவிட்டதாக தர்மத்தாய் அழுது புலம்புகிறார். நியாயப்படி கலைத்தாயும் தானே அழுதிருக்க வேண்டும்.//
    இந்த வரிகள் சிவாஜியின் ரசிகனாகிய என்னை நெகிழ வைத்து விட்டது.

    ReplyDelete
  15. நடிப்பு என்பதின் விளக்கத்தை தேடினால் அது சிவாஜிகணேசன் என்று இருக்கும்..பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. நல்லா எழுதியிருக்க பிரபா.. தியேட்டரில் பார்க்கனும்..

    ReplyDelete
  17. நீங்க ஏன் சார் புராண படமா பார்க்கிறீங்க...நட்புக்கு இலக்கணமான நண்பன் படம் மாதிரி நினைச்சிக்குங்க...

    கர்ணன் படத்தை எடுத்ததுக்கு காரணம் எல்லா படங்களை விட ஒரிஜினல் பிரிண்ட் பக்காவா இருக்கும் பிராபா என்கிட்ட பழைய பிரிண்ட் சிடி இருக்கு இன்னும் பளிச்சின்னு இருக்கு...வேலை சுளுவா முடியுமல்ல...

    ஆமா சிவக்குமாரை விட்டுட்டு போயிட்டீரே பாவம் குழந்தை அழுவுது!

    ReplyDelete
  18. சினிமா இருக்கும் வரை சிவாஜி இருப்பார் என்பதே சத்தியம்...!

    ReplyDelete
  19. செமையா எழுதி இருக்கீங்க பாஸ்! :-)

    ReplyDelete
  20. ம்.....

    நேரடி ஒளிபரப்போ?

    ReplyDelete
  21. Congratulations on getting
    .com domain

    ReplyDelete
  22. பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR படம் ரிலீஸ் ஆச்சுனா ரஜினி பட ஒபெநிங் இருக்கும் போல ...

    ReplyDelete
  23. விசிடி ல் பார்க்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் தங்களின் விமர்சனம் தியேட்டரில் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டுள்ளது.(சொந்த டொமைனில் ".com" தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி)

    ReplyDelete
  24. //சிவாஜியின் மாமனார் கேரக்டரில் நடித்தவரை நாலைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து திட்டினார்கள்.//

    அப்பிடினா.. கெட்ட வார்த்தையா..? அச்சச்சோ....:)

    ReplyDelete
  25. //படத்தின் இறுதிக்காட்சியில் தன்னுடைய ஒரே மகனை பறிகொடுத்துவிட்டதாக தர்மத்தாய் அழுது புலம்புகிறார். நியாயப்படி கலைத்தாயும் தானே அழுதிருக்க வேண்டும்.//
    கலைத்தாயின் தலைமகனல்லவா?கதறி அழாமல் இருந்திருப்பாள கலைத்தாய்?சிவாஜி,சிவாஜிதான்!

    ReplyDelete
  26. இன்னும் பார்க்கவில்லை நண்பா... விரைவில் பார்த்துவிடுகிறேன்...

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  27. வேணும்னே தொப்பித்தலையன் படத்தை போட்டிக்கு ரிலீஸ் பண்ணியிருக்குறானுங்க”///
    .
    .
    இதை பிரபா மாமாதான் சொன்னாரு என எனக்கு தெரிந்த ஒரு சிறுமி காதை கடித்தாள்!உண்மையா பிரபா?
    *
    *
    சேரன். அவர் வந்ததாகவும் ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.///
    .
    .
    ரஜினியை வாய்க்கு வாய் கண்டிக்கும் சேரன் ரஜினி பாணியில் இப்படி வெட்டி சீன் போட வேண்டியதன் அவசியம் என்ன?
    *
    *
    சுமார் இருபது பேர் கொண்ட குழுவால் சட்டை கிழிக்கப்பட்டு, அடித்து, உதைத்து, தரதரவென்று வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்./
    .
    ஒரு வேளை அது நம்ம பாரு மாமாவா இருக்குமோ?புக்சைல் நாவல் எழுத வந்திருப்பாரோ?

    ReplyDelete
  28. @ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
    // மிகவும் பிடித்த படம். தியேட்டரில் போய் பார்க்கவேண்டிய அவஸ்தையை தூண்டிவிட்டீர்கள்.
    :)) //

    பாருங்க ஷங்கர்... அது அவஸ்தை இல்லையே ஆனந்தம் தானே...

    ReplyDelete
  29. @ உலக சினிமா ரசிகன்
    // தங்கள் பதிவை தினமும் எதிர்பார்த்தேன்.
    ரசிகர்களின் கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பாக இருந்தது தங்கள் பதிவு.நன்றி பிரபா... //

    மிக்க நன்றி தல... உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைக்கிறது...

    ReplyDelete
  30. @ விக்கியுலகம்
    // நடிப்பு என்பதின் விளக்கத்தை தேடினால் அது சிவாஜிகணேசன் என்று இருக்கும்..பகிர்வுக்கு நன்றி! //

    உண்மைதான் விக்கி... மிக்க நன்றி...

    ReplyDelete
  31. @ மணிஜி......
    // நல்லா எழுதியிருக்க பிரபா.. தியேட்டரில் பார்க்கனும்.. //

    மிக்க நன்றி தலைவா...

    ReplyDelete
  32. @ வீடு K.S.சுரேஸ்குமார்
    // நீங்க ஏன் சார் புராண படமா பார்க்கிறீங்க...நட்புக்கு இலக்கணமான நண்பன் படம் மாதிரி நினைச்சிக்குங்க... //

    எதுக்கு நண்பன்... தளபதி படத்தை எடுத்துக்கலாமே... ஆனால் முத்துராமன் விடும் அம்பு கனகாம்பர பூவாக மாறுவதை தற்கால இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது...

    /// கர்ணன் படத்தை எடுத்ததுக்கு காரணம் எல்லா படங்களை விட ஒரிஜினல் பிரிண்ட் பக்காவா இருக்கும் பிராபா என்கிட்ட பழைய பிரிண்ட் சிடி இருக்கு இன்னும் பளிச்சின்னு இருக்கு...வேலை சுளுவா முடியுமல்ல... //

    ஓஹோ ஒருவேளை அப்படி இருக்குமோ...

    // ஆமா சிவக்குமாரை விட்டுட்டு போயிட்டீரே பாவம் குழந்தை அழுவுது! //

    நீங்க வேற... அவர்தான் என்னை விட்டுட்டு சத்யம் தியேட்டருக்கு போயிட்டார்...

    ReplyDelete
  33. @ MANO நாஞ்சில் மனோ
    // சினிமா இருக்கும் வரை சிவாஜி இருப்பார் என்பதே சத்தியம்...! //

    உண்மைதான் தல...

    ReplyDelete
  34. @ ஜீ...
    // செமையா எழுதி இருக்கீங்க பாஸ்! :-) //

    மிக்க நன்றி ஜி...

    ReplyDelete
  35. @ NAAI-NAKKS
    // :))))))))))) //

    :)))))))))))

    ReplyDelete
  36. @ மனசாட்சி
    // நேரடி ஒளிபரப்போ? //

    ஆமாம் சாரே...

    ReplyDelete
  37. @ சமுத்ரா
    // Congratulations on getting
    .com domain //

    மிக்க நன்றி தல...

    ReplyDelete
  38. @ "ராஜா"
    // பாஸ் சிவாஜிக்கே இப்படினா MGR படம் ரிலீஸ் ஆச்சுனா ரஜினி பட ஒபெநிங் இருக்கும் போல ... //

    ஏன் பாஸ் பத்த வைக்குறீங்க...

    ReplyDelete
  39. @ மயிலன்
    // அப்பிடினா.. கெட்ட வார்த்தையா..? அச்சச்சோ....:) ///

    ம்க்கும்... அதேதான்...

    ReplyDelete
  40. @ சென்னை பித்தன்
    // கலைத்தாயின் தலைமகனல்லவா?கதறி அழாமல் இருந்திருப்பாள கலைத்தாய்?சிவாஜி,சிவாஜிதான்! //

    நன்றி செ.பி சார்...

    ReplyDelete
  41. @ கவிதை காதலன்
    // இன்னும் பார்க்கவில்லை நண்பா... விரைவில் பார்த்துவிடுகிறேன்... //

    பாருங்க தல... நன்றி...

    ReplyDelete
  42. @ வடக்குபட்டி ராம்சாமி
    // இதை பிரபா மாமாதான் சொன்னாரு என எனக்கு தெரிந்த ஒரு சிறுமி காதை கடித்தாள்!உண்மையா பிரபா? //

    ஒரு திருத்தம்... பிரபா மாமா அல்ல... பிரபாவுடைய மாமா...

    // ரஜினியை வாய்க்கு வாய் கண்டிக்கும் சேரன் ரஜினி பாணியில் இப்படி வெட்டி சீன் போட வேண்டியதன் அவசியம் என்ன? //

    அதை விடுங்க... மனுஷன் பெரிய ஆப்பை அவருக்காக அவரே தயார் செஞ்சிக்கிட்டார்... முன்னர் தன் பேட்டிகளிலும் ஆனந்த விகடனில் வெளிவந்த தன் வாழ்க்கை வரலாற்றிலும் தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக முன்னிலைப்படுத்திக்கொண்டவர், கர்ணன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவாஜிக்கு மற்றவர்களை போல நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாததால் அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை என்று திருவாய் மலர்ந்ததன் காரணமாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவர்மீது கொலைவெறி கொண்டிருக்கிறார்கள்...

    ReplyDelete
  43. மாப்பு இந்த வீடியோவுல சிவாஜி பேசுறாரு, [பாக்கியராஜுக்கப்புரம்] பாரு. அடிச்சுக்கிறது ரசிகர்கள் மட்டும்தான், பெரிய லெவலில் இவனுங்களை அடிச்சுக்க விட்டுவிட்டு அவனுங்க நல்லா மஜா பண்ணுறானுங்க. இந்த இளிச்சவா பசங்க என்னைக்குத்தான் திருந்துவானுங்களோ தெரியலை.

    http://www.youtube.com/watch?v=EYv45Zs9bzA

    ReplyDelete
  44. பதிவு நல்லா வந்திருக்கு. பழைய படத்தை இவ்வளவு வரவேற்போடு தியேட்டரில் சென்று பார்ப்பது வித்தியாசமான அனுபவம்தான்!

    ReplyDelete
  45. eppadiyaa unnakku mattum neram kidaikuthu padam pakka athai pittapoda pathivaa poda mudiyalappa pirabaaaaaaaaaa ........ nice ...

    ReplyDelete