4 February 2013

பிரபா ஒயின்ஷாப் - 04022013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

“ஒரூவா இருந்தா குடு நைனா...”, “ஒரு ரெண்டு ரூவா இருக்கான்னு பாரு சார்...” - என்று கேட்பது பிச்சைக்காரர்கள் அல்ல, பேருந்து நடத்துனர்கள். சில்லறை தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. ஒன்பது ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் நோட்டை நீட்டினால் கூட, நான்கு ரூபாய் சில்லறை கேட்கிறார்கள். நடத்துனர்களை சொல்லி குற்றமில்லை. பாவம், அவர்களும் என்னதான் செய்வார்கள். ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு வேறு விதம். 5, 10, 15 என்று டிக்கெட் விலையை ரவுண்ட்-அப் செய்திருக்கிறார்கள். பல இடங்களுக்கு விலை கூடவும், சில இடங்களில் குறையவும் செய்திருக்கிறது. ரிசர்வ் வங்கி இதனை கருத்தில் கொண்டு, புத்தகக்காட்சியில் செய்தது போல நகரின் பிரதான இடங்களில் “காயின் மேளா” நடத்தினால் என் போன்ற ஏழைகளுக்கு ஏதுவாக இருக்கும்.



*****

பேய், பிசாசு, ஆவிகள் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் ஆவிகள் குறித்த கதைகளை கேட்பது, படிப்பது எத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் விடுதியில் தங்கி படித்த சமயம். பின்னிரவில் நண்பர்கள் தத்தம் அமானுஷ்ய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். நான், “மூடிட்டு படுங்கடா நொன்னைகளா...” என்று சொன்னாலும் என் காதுகள் மட்டுமாவது அங்கே ஆஜராகி விடும். ஒருவன் அவனுடைய பெரியப்பாவிற்கு பேய் பிடித்துவிட்டது என்றும், பின்னர் அவருடைய பெரியம்மாவிற்கு சாமி வந்து அவரை, ஐ மீன் பேயை அடித்து விரட்டினார் என்று சொல்ல, அந்த காட்சிகள் அப்படியே என் மனக்கண்ணில் ஓடும். கார்ப்பரேட் வாழ்க்கையில் அதுபோல கதைகளை கேட்க முடிவதில்லை. கடந்த வாரம் பீச் ஸ்டேஷனில் ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் கண்ணில்பட பட்டென்று லபக்கிக்கொண்டேன். படித்தேன். என்ன இருந்தாலும் நண்பர்கள் சொல்லும் அளவிற்கு த்ரில் இல்லை.

*****

சிக்கல் ஒன்று ஏற்படும்போது முடிவெடுக்க தெரியாமல் திண்டாடுபவர்களை அல்லது இருபக்கம் முடிவெடுத்தாலும் நட்டம்தான் என்ற நிலையில் இருப்பவர்களை இருதலைக்கொள்ளி எறும்பு என்று சொல்வார்கள். அதாவது கொள்ளிக்கட்டையின் இருபுறமும் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது, எறும்பு எந்தப்பக்கம் சென்றாலும் மரணம் தான். ஆமாம், இந்த கொள்ளிக்கட்டை என்ன அந்தரத்திலா தொங்கிக்கொண்டு இருக்கிறது. நிச்சயமாக இல்லை. கொள்ளிக்கட்டையை யாராவது பிடித்திருக்க வேண்டும் அல்லது எதன்மீதாவது நட்டு வைத்திருக்க வேண்டும் அல்லது கயிற்றிலாவது கட்டி தொங்க விட்டிருக்கவேண்டும். மொத்தத்தில் பிடிமானம் ஒன்று கட்டாயம் இருந்தே ஆகவேண்டும். எறும்பு ஏன் அந்த பிடிமானத்தின் வழியாக வந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளக்கூடாது.

நீதி: எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு ஒன்று கட்டாயம் இருக்கும்.



*****

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். நாங்கள் அப்போதுதான் புதிதாக வீடு கட்டி குடிபெயர்ந்திருந்தோம். புதுமனை புகுவிழாவிற்கு தி.க தலைவர் வீரமணி வந்திருந்தார். என்னுடைய டியூஷன் வாத்தியார் என் அப்பாவுக்கு கொள்கை ரீதியில் நண்பர். எப்படியோ அவரை விழாவிற்கு அழைக்க அப்பா மறந்திருக்கிறார். மறுநாள் டியூஷனுக்கு சென்றதும், வாத்தியார் என்னை அழைத்து, “நேத்து உங்க வீட்டுக்கு ஆசிரியர் வந்திருந்தாரா ?” என்றார். எனக்கு ஒரு மண்ணும் புரியலை. என்னுடைய மொழியில் ஆசிரியர் என்றால் ஸ்கூல் டீச்சர், என் எதிரில் அமர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பவர். அவர் வீட்டுக்கு வந்தாரான்னு அவரே ஏன் கேட்கிறார் என்று பேந்த பேந்த விழித்தேன். ஒருவாறாக அவரே புரிந்துக்கொண்டு நேரடியாக கேள்வி கேட்டதும் பதிலளித்தேன். கவிஞர் என்றால் கலி பூங்குன்றனார், இனமான நடிகர் என்றால் சத்யராஜ் என்று கழகமொழிகள் சில உண்டு.

எதற்காக மேற்படி சம்பவத்தை நினைவு கூறுகிறேன் என்றால், சமகாலத்தில் ஆளாளுக்கு கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் அப்படி இப்படின்னு பத்து ஸ்கின் ப்ராப்ளம்ஸ் மாதிரி ஏதாவது ஒரு டைட்டிலை அவர்களாகவே வைத்துக்கொள்கிறார்கள். பெயருக்கு முன்னால் கவிஞர் என்று போட்டுக்கொள்வதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா என்று தெரியவில்லை. சும்மாதான்னா நானும் கூட போட்டுக்கலாம்ன்னு இருக்கேன்.


*****

சில வரிகளை எழுதிவிட்டு பின்னாளில் வருந்தியிருக்கிறேன். சமீபத்தில் துப்பாக்கி பற்றிய பதிவில் காஜலுக்கு சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பூட்டுகிறது என்று எழுதியிருந்தேன். உண்மையில் காஜலுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் சூப்பர் சிங்கர் ராகிணிஸ்ரீ என்று நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். மறுபடியும் ஒருமுறை படம் பார்த்தபோது தான் எவ்வளவு அபத்தமாக எழுதியிருக்கிறேன் என்று புரிந்தது. நமக்கு பிடிக்காதவர்கள் செய்த சமையலை சாப்பிட்டு பார்க்காமலே நன்றாக இல்லையென்று சொல்லிவிடலாம். அதுபோல மேம்போக்காக எழுதியிருக்கிறேன். உண்மையில் ராகிணிஸ்ரீ குரல் செம கிக். குறிப்பாக முதல் டேட்டிங் முடிந்ததும் விஜய்யிடம் கிஸ் கேட்கும் காட்சி. கட்டிங் கூரியர் நெப்போலியனை கடக்கென்று குடித்ததுபோல ஜிவ்வுன்னு இருக்கு.

*****

பதிவுலக ‘எவர் யூத்’ நட்சத்திரங்கள் ராஜன், கார்க்கி, பரிசல் மூவரும் இணைந்து SOB Network என்கிற யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார்கள். சினிமா விமர்சனங்கள், கெடா வெட்டு என்று ஜாலியாக போய்க்கொண்டிருக்கும் சேனலில் சமீபத்தில் வெளிவந்த தேவர் மகன் நையாண்டி...!


அடுத்து வருவது: தஞ்சை கோவில்


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

10 comments:

  1. நல்ல சம்பவக்கோர்வைகள்,
    வாழ்த்துக்கள்.கரண்ட் வந்த பிறகு பேய்கள் நடமாட்டம் இல்லை என்கிறார்கள்.

    ReplyDelete
  2. தத்துவக் கவிஞர் பிரபாகரன்?

    ReplyDelete
  3. இருதலைக்கொள்ளி எறும்புக்கு அர்த்தம் வேறு..

    நாம் ஊரில் பயன்படுத்தும் விறகுக்கட்டைகளை அடுப்பில் வைத்து எரிக்கும் போது விறகின் மறுபக்கத்தில் மெழுகு போன்ற வஸ்து உருகி கொழகொழவென்று வெளியேறும், அது விறகில் உள்ள நீர், உயிர்ச்சத்து போன்ற ஒரு நீர்மப்பொருள். விறகில் அமர்ந்திருக்கும் எறுப்பு சூட்டுக்கதகதப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருக்கும். சிறிது நேரம் கழித்து சூடு அதிகமானதும் தப்பிக்க நினைக்கும், அப்போதுதான் இரண்டு பக்கமும் தப்பிக்க முடியாது என்று அதற்குத்தெரியும். ஒரு பக்கம் கனன்று எரியும் நெருப்பு, மற்றொரு பக்கம் கொதிக்கும் அந்தத்திரவம். இதுதான் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை.

    இதை பள்ளியில் படிக்கும் போது என் ஆசிரியர் சொன்னது. அதை மறுநாளே வீட்டில் கவனித்தும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான விறகுகளில் அந்த சூடான கொழ கொழ திரவம் வெளியேறும்..

    ReplyDelete
  4. சூப்பர் சிங்கர் ராகிணிஸ்ரீ யின் முகத்தை பார்த்தபிறகுதானே ( பார்ட்டி பார்க்க சூப்பராய் இருக்கவும் தானே) இந்த முடிவு?

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி எஸ்கா... நீங்க வேணுமுன்டே எறும்பை புடிச்சு கொள்ளியில போட்டு பார்த்திருப்பீங்க போல :)

    அகலிகன்... ஏற்கனவே ராகிணிஸ்ரீயை சூப்பர் சிங்கரில் சைட் அடித்திருக்கிறேன்... ஆனால் அவருடைய பெயரெல்லாம் எனக்கு அப்போது தெரியாது... துப்பாக்கி மேட்டர் தெரிஞ்சதும் கூகுள் செய்து பார்த்ததும், ஓ நீதானா அது என்று மனதிற்குள் மணி அடித்தது...

    ReplyDelete
  6. எங்கேயோ ஏதோ தப்பு நடக்குறா மாதிரி தெரியுதே... அலெக்ஸ் பாண்டியன், பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிலுக்கு சுமிதா இவங்கள்லாம் யாருய்யா ?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ***சில வரிகளை எழுதிவிட்டு பின்னாளில் வருந்தியிருக்கிறேன். சமீபத்தில் துப்பாக்கி பற்றிய பதிவில் காஜலுக்கு சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பூட்டுகிறது என்று எழுதியிருந்தேன். உண்மையில் காஜலுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் சூப்பர் சிங்கர் ராகிணிஸ்ரீ என்று நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். மறுபடியும் ஒருமுறை படம் பார்த்தபோது தான் எவ்வளவு அபத்தமாக எழுதியிருக்கிறேன் என்று புரிந்தது. நமக்கு பிடிக்காதவர்கள் செய்த சமையலை சாப்பிட்டு பார்க்காமலே நன்றாக இல்லையென்று சொல்லிவிடலாம். அதுபோல மேம்போக்காக எழுதியிருக்கிறேன். உண்மையில் ராகிணிஸ்ரீ குரல் செம கிக். குறிப்பாக முதல் டேட்டிங் முடிந்ததும் விஜய்யிடம் கிஸ் கேட்கும் காட்சி. கட்டிங் கூரியர் நெப்போலியனை கடக்கென்று குடித்ததுபோல ஜிவ்வுன்னு இருக்கு.****

    Some mistakes are FATAL ERRORS! You can not "fix" them. But you might think that you fixed them! by offering some "nonsensical justification" This error you made is also a fatal one, unfortunately! :(

    Let me get this straight.. You HATE chinmayi and so, you wrote the "voice" was intolerable. Now the same "voice", you find it "sexy"? Because it is someone else whom you like?!! LOL

    ReplyDelete
  9. பேய் படத்துக்கு ஏன் பாஸ் சரன்யா மோகன் போட்டோவை போட்டு இருக்கீங்க

    ReplyDelete