23 November 2013

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

19 comments:

  1. பத்து வருடம் கழித்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ
    இப்போதைக்கு வேணாம்
    மச்சான் வேணாம்

    ReplyDelete
  2. Worth review prabha

    ReplyDelete
  3. பிரபா,

    Back to future and time machine இரண்டு படத்தோட கதையும் மிக்ஸ் செய்து இரண்டாம் உலகம்னு ஃபேன்சியா எடுத்துட்டாரு போல செல்வா அவ்வ்.

    Back to future இல் ஒரு பையன் பழைய காலத்துக்கு போயிடுவான்,அங்கே அவனோட அப்பா,அம்மா இப்போ பையனோட வயசில இளமையா,படிச்சுக்கிட்டு காதல் & மோதலா போகும் ,அம்மாவுக்கு பையன் மேலவே கிரஷ் வரும்,ஆனால் பையனுக்கு உண்மை தெரியும் என்பதால் ,அப்பா,அம்மா காதலை சேர்த்து வைக்க முயற்சித்து வெற்றியுடன் மீண்டும் திரும்புவான்.

    இதே போல டைம் மெசின் கதையில செத்து போன மனைவிய காப்பாத்த இறந்த காலத்துக்கு போய் முயற்சி செய்வார் ஹீரோ.

    இது போல டைம் மெசின் கதைகள் ஏராளம் இருக்கு, அதை எல்லாம் பார்த்துட்டு ஃபேண்டசியா ஒரு குழப்ப படத்தை "செல்வா" எடுத்துட்டார் போல,முதலில் டிவிடி இல்லாத ஒரு எடத்துல கட்டிப்போட்டு ஒரு படத்துக்கு கதை எழுத சொல்லனும் இவனுங்களை அவ்வ்!

    # லூப்பர் என்ற புரூஸ் வில்லீஸ் படத்துல கூட டைம் டிராவல் செய்து ,செத்தவங்க கூட எல்லாம் கதை நடக்கும், ஒருவரே அவரோட பல வயது தோற்றத்தோட பேசும் நிலைனு குழப்பும்.

    ReplyDelete
  4. ஹி...ஹி எனக்கு என்னமோ படத்தோட ரெண்டாம் பாகம்னு எடுத்தால், இரண்டாம் உலகத்துக்கு போகிற ஆர்யா தான் , எதிர்காலத்தில் பொறக்க்கப்போற இரண்டாம் உலகம் ஆர்யா- அனுஷ்கா பையனு காட்டிடுவார்னு தோனுது :-))

    ReplyDelete
  5. //இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.


    தம்பி அவர்கள் மணம் செய்து கொள்ள வில்லை..அவள் வலுக்கட்டாயமாக மணம் செய்து வைக்கப் படுகிறாள்...

    // ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம்.


    படத்துல அந்த சீன்ஸ் தான் நல்லா ரசிக்கிற மாதிரி இருந்திச்சி...


    அப்பறம் அனுஷ்காவுக்கு காதல்னா என்னன்னு வகுப்பு எடுக்குற காட்சிகள் அருமை....
    அந்த நாடு அரசனை குப்பை அரசன் என்று திட்டும் இடங்கள் அருமை..
    மொத்தத்தில் படம் எனக்கு ஓகே..


    ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்பறம் இப்ப தான் செல்வா ராகவன் நல்ல படம் எடுத்திருப்பதா எனக்கு தோணுது...மேலும் புதுபேட்டை படத்த கணக்கில் கொள்ளும் போது இந்த படம் ௧௦௦௦(1000) டைம் பெட்டர்ன்னு தோணுது....


    படத்தின் பின்னணி இசை இந்த படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங்...
    செல்வா மறுபடியும் யுவன் கூட கூட்டணி வச்சா தான் நல்லா இருக்கும்.....

    ReplyDelete
  6. நம்மூரிலேயே எத்தனையோ பஞ்சதந்திர, யக்சி, விக்கிரமாதித்தன் கதைகள் என எவ்வளவோ இருக்கு, அதை எவனும் எடுத்து படமாக்க மாட்டேங்கிறாங்கோ, அமெரிக்கா, ஜப்பான், கொரியா என வெளிநாட்டுப் படங்களைச் சுட்டு வடை போட்டு ஏன் சாமி எங்களை கொல்றானுவே!!! முடியலை..!! ஆயிரத்தில் ஒருவனிலே நாம் பாதி செத்திட்டோம், மிச்ச மீதியையும் தீர்த்துக் கட்டிடுவார் போலிருக்கே. :/

    ReplyDelete
  7. செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம்.

    Yaaradi Nee mohini is directed by Mr Jawahar.

    ReplyDelete
  8. யாரடி நீ மோகினி செ.ரா கதை, திரைக்கதை மட்டும்தான், இயக்குநர் மித்ரன் ஜவகர்.

    ReplyDelete
  9. 'மித்ரன்னு தெரியும். அதை யாரு சரியா கண்டுபிடிக்கறாங்கன்னு டெஸ்ட் பண்ணேன்'.

    உன் கமன்ட்டை நானே போட்டுட்டான்யா.

    ReplyDelete
  10. வவ்வால்,

    படத்தின் இறுதியில் ஆர்யா மூன்றாவது உலகத்திற்கு செல்வது போலவும், அங்கேயும் ஒரு அனுஷ்கா இருப்பது போலவும் வைத்து முடித்திருக்கிறார்கள்...

    ReplyDelete
  11. // படத்துல அந்த சீன்ஸ் தான் நல்லா ரசிக்கிற மாதிரி இருந்திச்சி... //

    Exactly பொன் மகேஸ்... அதைத்தான் அடுத்த வரியில் சொல்லியிருக்கிறேன்... ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும்.

    புதுபேட்டை அட்டகாசமான திரைப்படம்... இதுவரை செல்வராகவன் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்தது அதுதான்...

    ReplyDelete
  12. அவ்வளவு ஏன் விவரணன் ? நம்ம வாத்தியார் கதைகள் இருக்கே... அதுல ஒன்னை ரைட்ஸ் வாங்கி படமாக்கியிருக்கலாம்...

    ReplyDelete
  13. அப்படியில்லை சிவா, யாரடி நீ மோகினியை இயக்கியது வேற டைரக்டரு'ன்னு எனக்கும் தெரியும்... ஆனா தெலுங்குல அதோட ஒரிஜினலை டைரக்ட் பண்ணது யாரு ? நம்ம பய தானே...

    அதுவுமில்லாம இது அன்பே சிவம் படத்தை டைரக்ட் பண்ணது கமல் இல்லை, சுந்தர்.சி'ன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு :))))

    ReplyDelete
  14. பிரபா,

    பேக் டு பியூச்சரிலும்- 3 பாகம் இருக்கு , பார்ட் -2 வில் அடுத்து 30 ஆண்டுகள் முன்னர் போய் ,ஹீரோ பசங்களுக்கு உதவி செய்வார் :-))

    முதல் பாகம் முடியும் போது அடுத்த பயணம் ஸ்டார்ட் ஆகிடும்.

    ஒரு பார்ட் தான் பார்த்ததால், இன்னொரு பாகம் சரியா தெரியலை, இப்போ விக்கியில் பார்த்தேன்.

    டைம் டிராவல்/பேரலல் யுனிவர்ஸ் வகை எல்லா படத்திலும் இப்படி ஒரு தொடர்ச்சிக்கு லூப் வைப்பாங்க.

    எனக்கென்னமோ இரண்டாம் உலகம்,பார்ட் -2 எடுத்தால், இன்செப்சப்ஷன் போல கனவுனு முடிச்சிடுவாங்கனு தோனுது,ஆனால் கனவா,நினைவானு தெளிவாக சொல்லாமல் ஒரு சஸ்பெண்சன் வச்சிடுவாங்க :-))

    ஹாலிவுட்ல எல்லா வகையிலும் ஏற்கனவே படம் எடுத்தாச்சு :-))

    ReplyDelete
  15. ஆளை விடுங்கப்பா...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு தியேட்டர் பக்கம் போகாமலே ஓடி வந்துட்டேன்.

    ReplyDelete
  16. படத்தின் கதையை ஓரளவு புரிந்து கொண்டது நீங்கள்தான் என நினைக்கிறேன்

    ReplyDelete
  17. படம் போச்சா....
    ஐய்யய்யோ... தப்பிச்சேன்... காப்பாத்திட்டீங்க...
    வித்தியாச முயற்சிக்காக இணையத்தில் பார்க்கலாம்ன்னு தோணுது...

    ReplyDelete