12 January 2015

பிரபல கொலை வழக்குகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நேற்று இன்று என்ற திரைக்காவியத்தை காண நேர்ந்தது. வீரப்பனின் மரணத்திற்குப்பின் அவர் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் பெரும் பொருட்செல்வத்தை தேடி நிறைய பேர் காட்டுக்குள் அலைந்து திரிந்ததாக கேள்விப்பட்டிருப்போம். அதன் அடிப்படையில் ஒரு கதையை புனைந்திருக்கிறார்கள். கதையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் (நேற்று), தற்கால காட்சிகளும் (இன்று) மாறி மாறி வருகிறது. படத்தின் தலைப்பிற்கு நீதி கற்பித்தல்.

கதையின் இரு தடத்திலும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தை வைத்து சும்மா விளையாடியிருக்கிறார் இயக்குநர். பிட்டு இல்லை தான் என்றாலும் பிட்டு இருப்பது போலவே 'பெப்' ஏற்றும் கலை இயக்குநருக்கு தெரிந்திருக்கிறது. இதுவரை எத்தனை படங்களில் ஹீரோயின் அறிமுகக்காட்சி பார்த்திருப்போம். ஹீரோயினுடைய நவரசங்களையும் க்ளோஸப்பில் ஸ்லோ மோஷனில் காட்டுவார்கள். அதனை ஹீரோ பார்த்து ஃப்ரீஸ் ஆகி நிற்பார் அல்லவா ? நேற்று இன்றில் அருந்ததிக்கு அல்வாத்துண்டு மாதிரி ஒரு அறிமுகக்காட்சி வைத்திருக்கிறார்கள். ஃப்ரெஷ்ஷா இருக்கு. அந்த காட்சிக்குப் பிறகு, படம் முழுவதும் அருந்ததியின் காஸ்டியூம் ஒரேயொரு பனியன் மட்டும்தான். அதுவும் கை வைக்காதது.

எப்படியும் 'தொட்டால் தொடரும்' வெளியானபின் அருந்ததி பிரபலமாகி விடுவார். என்னுடைய சந்தேகமெல்லாம் 'நேற்று இன்று' படத்தை கே.கே.நகர் விஜயாவில் என்ன பெயரில் வெளியிடுவார்கள் என்பதுதான் !

பிரபல கொலை வழக்குகள் - இந்த புத்தகம் என் கைக்கு வந்த கதையே ஒரு தனி எபிசோட். போராடி வாங்கியிருக்கிறேன். அவ்வளவு ஆர்வத்திற்கு காரணம் அதிலுள்ள ஆளவந்தான் கொலை வழக்கு. சில வருடங்களுக்கு முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில் ஆளவந்தான் கொலை வழக்கு பற்றி படித்திருக்கிறேன். என்னை ஒருமாதிரி அதிர்ச்சியடைய வைத்த பகுதி அது. அதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவே பிரபல கொலை வழக்குகளின் மீது இவ்வளவு ஆர்வம். ஆனால் புத்தகத்தில் அந்த கொலை வழக்கினை பற்றி மொத்தமே மூன்று பக்கங்கள் மட்டுமே உள்ளன என்பது வருத்தத்திற்குரியது.

பரவாயில்லை. எதையோ படிக்கப் போய் வேறு சில அற்புதமான விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். முதலில், ஆஷ் கொலை வழக்கு. குறிப்பிட்ட அந்த கொலையை மட்டும் கவர் செய்யாமல் அதைச் சார்ந்த இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கதிகளையும் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார் ஆசிரியர். இதை படிக்கும்போது இந்திய சுதந்திர போராட்டத்தின் மீது மரியாதை கூடுகிறது. குறிப்பாக, வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களின் மீது.

இன்னொரு பெரிய ஆச்சரியம், மர்ம சந்நியாசி வழக்கு. கிட்டத்தட்ட பாதி புத்தகத்தை நிறைத்திருக்கிறது. சுருக்கமாக – சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு சமஸ்தானத்தின் இளவரசர் மர்மமான முறையில் இறக்கிறார். அது அவருடைய மைத்துனரும், மனைவியும் செய்த சதி என்றும் நம்பப்படுகிறது. இறந்தவரை அவசர அவசரமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இறுதி ஊர்வலத்தின் போது மிகக்கடுமையாக மழை பெய்கிறது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு மழைக்காக ஒதுங்குகிறார்கள். மழை நிற்கிறது. பிணம் காணவில்லை.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். அவருடைய தோற்றமும் செயல்பாடுகளும் இறந்துபோன இளவரசரை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவரேதான் இளவரசரா ? வாய்ப்பு கிடைத்தால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
200 பக்கங்கள் – விலை ரூ.150
புத்தகக் காட்சி அரங்கு எண்: 634

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

3 comments:

  1. நாளை புக் ஃபேர் வரலாம்னு இருக்கேன்! 150 ரூபா செலவு வச்சிருக்கீங்க! வாங்கிடுவோம்!

    ReplyDelete
  2. பதிவை விட பதிவுல இருக்க புகைப்படம் செம....



    ஏலே தம்பி இந்த வருசமாவது ஏதாவது புத்தகம் வாங்கி அனுப்பு டா....


    புத்தகத்த வாங்கிட்டு எவ்வளவு ன்னு மட்டும் சொல்லு பணத்த... நீ சொல்லுற accountla போடுறேன்....




    ReplyDelete
  3. பதிவு செம...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete