10 January 2013

வேளாங்கண்ணி தேவாலயம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படிக்க: ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்

சென்ற பாகத்தின் இறுதியில் “வேளாங்கன்னி” என்று குறிப்பிட்டிருந்தேன். விக்கிபீடியா “வேளாங்கண்ணி” என்று சொல்கிறது. அதே விக்கிபீடியா “Virgin of Velai” என்று ஆங்கிலத்தில் சொல்கிறது. இதுபற்றி யாராவது விம் போட்டு விளக்கவும்.


நாங்கள் நாகையிலிருந்து சுமார் அரைமணிநேர பேருந்து பயணத்தில் வேளாங்கண்ணியை சென்றடைந்தோம். கூட்டம் திருவிழா போல இருந்தது. இருப்பினும் இது வழக்கத்தை விட மிக குறைவு என்று  மூத்த ஆதீனம் சொன்னார். ஆலயத்தை நோக்கி நடைபோட்ட பாதையின் இருபுறங்களும் கடைகள். பெரும்பாலும், கிறித்துவ துதிப்பாடல் கேசட்டுகள், கிறித்துவ பரிசுப்பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. “இங்கு மொட்டையடிக்கப்படும்” பலகைகள் தொங்குகின்றன. இயேசு, மாதா உருவங்களுக்கு அருகே நின்று புகைப்படமெடுக்கும் கடைகள் என்று நிரம்பியிருக்கிறது. இவை தவிர்த்து தங்கும் விடுதிகள்.

நடுத்திட்டு என்று சொல்லப்படும் ஒரு இடத்திற்கு ஆதினம் நம்மை அழைத்துச் சென்றார். அங்கிருந்து திரும்பிப் பார்த்த போது அதிசயித்தேன். ஏதோ வாடிகன் நகரத்திற்குள் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வு. சுற்றிலும் பளீரென வெண்ணிற ஆலயங்கள். தேவாலயங்களும் மக்கள் கூட்டமும் ஞாயிறு காலையை நினைவு கூர்ந்தன.

வழிபாடுகள் விந்தையாக இருக்கின்றன. மெழுகுவர்த்தி ஏற்றலாம், தேங்காய் உடைக்கலாம், மொட்டை அடித்துக்கொள்ளலாம், மரத்தில் தொட்டில் கட்டி விடலாம், மாதாவுக்கு பட்டுப்புடவை சாத்தலாம் - பக்தர்களுக்கு வளைந்துக்கொடுக்கக்கூடிய திருத்தலம். கெடா வெட்டி பொங்கல் வைக்கலாமா என்று தெரியவில்லை. ஆதினம் அவருடைய பங்குக்கு சில மெழுகுவர்த்திகளை வாங்கி வந்தார்.

பளிங்கு மாளிகைக்குள் நுழைந்தோம். கிறிஸ்தவ பாரம்பரிய இசை, கம்பீரமான குரலில் வழிபாடு, மனமுருகி முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கும் பக்தர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது யாருக்காவது பரவசநிலை ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். முன்னே நகர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாதா உருவத்தை கண்டோம். ஆதினம் தனது மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துவிட்டு, நம்மிடம் இரண்டை திணித்தார். பின்னர், வேறு வழியில்லாமல் அதையும் அவரே ஏற்றினார்.

வேளாங்கண்ணியின் சிறப்பே அதன் சமத்துவம் தான். அனைத்து மதத்தினரும் வரலாம். விரும்பியபடி கடவுளை கும்பிடலாம். சாதி பாகுபாடுகள் இல்லை என்று சில நிறைகளை பட்டியலிட்டார் மூத்த ஆதினம். எனக்கென்னவோ வியாபார யுக்தியாகத்தான் தோன்றுகிறது. எல்லா மதத்தினரும் வரலாம் என்றாலும் கூட சில வரைமுறைகள் உண்டுதானே. தேவாலயத்திற்குள் விநாயகர் சிலையை அனுமதிப்பார்களா ? தவிர, இங்கு கூடும் கூட்டத்தின் பெரும்பகுதி வாய்வழி பிரச்சாரத்தின் மூலம் வரவழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய சடங்குகளில் “புது நன்மை" என்ற ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அதை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு வேளாங்கண்ணி செய்யுமா என்று தெரியவில்லை.

அடுத்ததாக, அங்கிருந்த க்ரில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. திருட்டுப்போன பொருள் கிடைக்கவேண்டி / கிடைத்துவிட்டால் பூட்டு தொங்கவிடுவார்கள் என்று மூத்தவர் சொன்னார். சற்று தொலைவில் புனித நீர் வழங்கப்படும் குடில் காணக்கிடைத்தது. காலை டிபனுக்கு பிறகு திரவ உணவு எதுவும் உட்கொள்ளாததால் நாவரண்டிருந்தது. வேகமாக உள்ளே நுழைந்து ஒரு குவளை புனித நீரை வாங்கிப் பருகினோம். ம்க்கும்... குறைந்தபட்சம் நன்னாரி சர்பத் மாதிரியாவது இருக்க வேண்டாமா ? சாதா தண்ணிக்கும், புனித நீருக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. வெளியே, குடிநீர் இங்கே உள்ளது புனித நீரை வீணாக்க வேண்டாம் என்ற பலகை வேறு. மாட்டு மூச்சாவை குடிக்கச்சொல்லாதது வரை ஓகே.

அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் பழைய தேவாலயம் அமைந்திருக்கிறது. அந்த ஒரு கி.மீ மணல்வெளியில் முட்டிப்போட்டபடி பலர் நேர்த்திக்கடன் / வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். வருத்தப்பட்டு பாரம் சுமந்தால் பலன் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது வலியில் அவஸ்தைபடக்கூடும். வெயிலோ மழையோ வேலையை காட்டினால் நிலைமை படுமோசமாகிவிடும்.

வேளாங்கண்ணி கடற்கரை. சென்னையை விட அசுத்தமாக இருப்பதில் ஒரு ஆறுதல். கூட்டமும் சேர்ந்து கும்மியடிப்பதால் கடலை ரசிக்க முடியவில்லை. கடமைக்காக கனநேரம் நின்றுவிட்டு திரும்பினோம். மறுபடியும் இருபுறமும் கடைகள். சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் கொண்டு செய்யப்படும் பொருட்களின் மீது எனக்கு எப்போதும் ஆர்வமில்லை. ஒரு பொருள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிறபோதே அது அதன் தனித்தன்மையை இழந்துவிடுகிறது. வேளாங்கண்ணியிடமிருந்து விடை பெற்றோம்...!

அன்றைய தினம் பக்ரீத்...! அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் நாகூர் தர்கா...!!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

14 comments:

  1. பிரபா உன்னைப்போல் புதிதாக வருபவர்களுக்கும் வெளியூர்காரர்களுக்கும் மட்டுமே அது புனிதத்தலம். சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு அது கில்மா பிரதேசம். அங்கு இருக்கும் 90% லாட்ஜுகள் முக்கிய தொழிலாக செய்வது விபச்சாரம் தான். அதுவும் இருட்டி விட்டால் கடற்கரையில் அரவாணிகள் தொல்லை தாங்க முடியாது.

    ReplyDelete
  2. வேளாங் "கண்ணி" பதிவில் வழக்கமான பிரபாவின் நக்கல் டச் தெரிகிறது.

    ReplyDelete
  3. "வேளாங்கண்ணி கடற்கரை. சென்னையை விட அசுத்தமாக இருப்பதில் ஒரு ஆறுதல். கூட்டமும் சேர்ந்து கும்மியடிப்பதால் கடலை ரசிக்க முடியவில்லை."

    கடலை ரசிக்கமுடியவிலையா? கடலைபோடமுடியவில்லையா?

    "வேளாங்கண்ணியின் சிறப்பே அதன் சமத்துவம் தான். அனைத்து மதத்தினரும் வரலாம். விரும்பியபடி கடவுளை கும்பிடலாம். சாதி பாகுபாடுகள் இல்லை என்று சில நிறைகளை பட்டியலிட்டார் மூத்த ஆதினம். எனக்கென்னவோ வியாபார யுக்தியாகத்தான் தோன்றுகிறது. "

    அரேபியர்களின் சாம்ராணி வியாபாரத்தை வீழ்த்துவதற்காக ஏற்பாடுத்தப்பட்ட ஏரபாடுதான் மெழுகுவர்த்தி வழிபாடு.
    துணிச்சலான பதிவு நண்பா!

    ReplyDelete
  4. ஆரூர் மூனா செந்தில், மேலதிக தகவல்களுக்கு நன்றி. ஆதினம் இதுபற்றி சொல்லவில்லையே. அரவாணிகள் அட்ராசிட்டி என்பது சென்னையிலும் இருட்டிய பிறகு பல இடங்களில் நடக்கிறது.

    நன்றி கோவை ஆவி...

    நன்றி அகலிகன்...

    ReplyDelete
  5. //பளிங்கு மாளிகைக்குள் நுழைந்தோம். கிறிஸ்தவ பாரம்பரிய இசை, கம்பீரமான குரலில் வழிபாடு, மனமுருகி முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கும் பக்தர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது யாருக்காவது பரவசநிலை ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். // படிக்கும் போதே பரவசம் வருகிறது.

    ReplyDelete
  6. கெடா வெட்டி பொங்கல் வைக்கலாமா என்று தெரியவில்லை.// வைக்கலாம் நண்பா (கோவிலுக்கு சோறாக்கி போடுவது என்பார்கள்) பொங்கல் தனியாக வைப்பார்கள்.. தேவாலயத்திற்குள் விநாயகர் சிலையை அனுமதிப்பார்களா ? // இது என்ன கேள்வி??? பொதுவில் அனைத்து மதத்தவரும் வரலாம். இதற்காக நான் என வழிபாட்டு உருவங்களை கொண்டு வரலாமா என்றால் என்ன சொல்வது???? "புது நன்மை" அதை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு வேளாங்கண்ணி செய்யுமா என்று தெரியவில்லை // கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு எங்கேயும் புது நன்மை கொடுக்க மாட்டார்கள்..சாதா தண்ணிக்கும், புனித நீருக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. வெளியே, குடிநீர் இங்கே உள்ளது புனித நீரை வீணாக்க வேண்டாம் என்ற பலகை வேறு.//தண்ணீரை சில ஜெபகங்களுக்கு பின் தருவது புனித தண்ணீர்.உங்களுக்கு சாதரணமாக தெரிவதது சிலருக்கு புனித தண்ணீர் அவ்வளவுதான். மாட்டு மூச்சாவை குடிக்கச்சொல்லாதது வரை ஓகே.// எங்கேயாவது அப்படி குடிக்கச் சொல்கிறார்களா என்ன???

    ReplyDelete
  7. பார்த்து எழுதுங்க தம்பி ....பதிவை உங்க மாமனார் படிச்சிட்டு பொண்ண தர மாட்டேன்னு சொல்லிட போறாரு ...................


    //தேவாலயத்திற்குள் விநாயகர் சிலையை அனுமதிப்பார்களா ?

    விநாயகருக்கும் உனக்கும் என்ன வாய்க்கா தகராறா ......

    செவனேன்னு பால் கொழுக்கட்டையும் லட்டும் சாப்பிட்டுகிட்டு இருக்கிறவர ...ஏன்டா வம்புக்கு இழுக்கிற ............


    //வருத்தப்பட்டு பாரம் சுமந்தால் பலன் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது வலியில் அவஸ்தைபடக்கூடும். வெயிலோ மழையோ வேலையை காட்டினால் நிலைமை படுமோசமாகிவிடும்.

    கர்த்தருக்கு இல்லாத கருணை உனக்கு எதுக்குடா ....

    ReplyDelete
  8. ராபர்ட், நேரடியான பதில்களுக்கு நன்றி. எனினும் நீங்கள் மிகவும் வெள்ளந்தியாக இருக்கிறீர்கள்...

    வேளாங்கண்ணியில் நிலவும் சமத்துவம் என்பது புதிதாக திறந்த ஷாப்பிங் மாலில் கொடுக்கப்படும் introductory offer போன்றது. அது ஒரு கவர்ச்சியான விளம்பரம் மட்டுமே.

    புது நன்மை ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு தரக்கூடாது ?

    ReplyDelete
  9. பொன் மகேஸ், மாமனாரை சமாளிப்பதெல்லாம் சல்ப்பி மேட்டர்...

    ஆமாய்யா, விநாயகர் என்னைக்கு கொழுக்கட்டையும் லட்டும் சாப்பிட்டாரு... அவரு பேரை சொல்லி நீங்கதானய்யா மொக்குறீங்க...

    ReplyDelete

  10. வேளாங்கண்ணியில் நிலவும் சமத்துவம் என்பது புதிதாக திறந்த ஷாப்பிங் மாலில் கொடுக்கப்படும் introductory offer போன்றது. அது ஒரு கவர்ச்சியான விளம்பரம் மட்டுமே.// அறிந்த வரை எந்த ஒரு வழிபாட்டுத் தலங்களுக்கும் யாவரும் செல்லலாம்.(விலக்காக சில இடங்கள் இருக்கக்கூடும்.)நீங்கள் குறிப்பிட்டு சொல்வது போல"வேளாங்கண்ணியில்" மட்டுமே சமத்துவம் நிலவவில்லை. மற்றபடி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் முழுக்க முழுக்க வணிக மயமாகி நெடுங்காலம் ஆகி விட்டது.
    புது நன்மை ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு தரக்கூடாது ? // புதுநன்மை எடுப்பதற்கு முன் அவர்கள் ஞானஸ்தானம், போன்ற சில பூர்வாங்க கடமைகளை செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே புது நன்மை தரப்படும். (முதல் முறை தருவது மட்டுமே புது நன்மை மற்றவை அனைத்தும் நன்மை என்றே சொல்லப்படும்.) புது நன்மை எடுக்காத கிறிஸ்தவர்களுக்கும் நன்மை தரப்பட மாட்டாது.

    ReplyDelete
  11. ராபர்ட், நன்மையோ, புது நன்மையோ அதை தரக்கூடாது என்றுதான் சொல்கிறீர்கள்... ஏன் தரக்கூடாது ? தரக்கூடாது என்று பைபிளில் சொல்லியிருக்கிறதா ? அப்படி அதையும் மீறி தந்தால் என்ன நடக்கும் ?

    ReplyDelete
  12. ஞானஸ்தானம் என்பது பிறந்தவுடன் கிறிஸ்தவக் குழந்தைகளுக்குத் தருவது.அதுதான் அடிப்படை. இது இல்லாததால் மற்றவர்களுக்குத் தருவது இல்லை. அதையும் மீறி வாங்குவதால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. உங்களுடைய ஆசை நிறைவேறிய திருப்தியைத்தவிர.....

    ReplyDelete
  13. Praba...

    Since I have known you for quite sometime...I can take the liberty to advise you on this...

    When writing about any religion please be sensitive as any immature/ignorant comment would hurt many...

    Equally disgusting were some of the comments made by some readers...

    Take care man...Look forward to your future posts...

    ReplyDelete