30 December 2016

கொல்லிமலை – பயணக்குறிப்புகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலை ஒரு பேச்சுலர்’ஸ் பேரடைஸ் என்றுதான் சொல்லவேண்டும். கொல்லியில் நீங்கள் கோவில்களைத் தவிர மற்ற போக்கிடங்களுக்கு சென்றால் அங்கே குழுவாக மது அருந்திக்கொண்டிருக்கும் ஆடவர்களை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஆங்காங்கே காலி மது புட்டிகள் வீசப்பட்டிருக்கும். இதனாலும் வேறு சில காரணங்களாலும் இங்கே குடும்பமாக அதிகம் பேர் செல்வதில்லை. செல்லக்கூடாது என்றில்லை. சில கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்பவர்கள் செல்லலாம்.

எப்படி செல்வது...?
சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ. சொந்த வாகனத்தில் சென்றால் எட்டிலிருந்து ஒன்பது மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம் வழியாக செல்லலாம். ஒரு ஐம்பது கி.மீ கூடுதலாக சுற்ற தயாராக உள்ளவர்கள் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக வரலாம். இந்த வழியில் சிறப்பம்சம் ரோடு அட்டகாசமாக இருக்கிறது. 

பேருந்தில் அல்லது ரயிலில் செல்பவர்கள் நாமக்கல் சென்று அங்கிருந்து செம்மேடு அல்லது நேரடியாக அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பேருந்தை பிடிக்கலாம். ஆனால், மலை மீது உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க தனி வாகனம் இருந்தால் தான் சரியாக இருக்கும். எனவே நாமக்கல்லிருந்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பிடித்துக்கொள்ளலாம்.

எங்கே தங்குவது...?
பெரும்பாலான தங்கும் விடுதிகள் செம்மேட்டையும் அதனை ஒட்டியும் அமைந்திருக்கின்றன. முன்பே ஒருமுறை சொன்னது போல கொல்லியில் ரிஸார்ட் என்கிற வார்த்தையே ஒரு மாயை. குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் பாங்கான விடுதியில் தங்க விரும்பினால் P.A.Holiday Innல் தேர்ந்தெடுக்கலாம். ஓரளவிற்கு கெளரவமான இடத்தில் தங்க விரும்பும் நல்ல தம்பிகள் நல்லதம்பியில் தங்கலாம். தண்ணிவண்டி தம்பிகளுக்கு ஏரோ மேன்ஷன், SKGV லாட்ஜ். இவற்றில் SKGV லாட்ஜ் மட்டும் செம்மேட்டில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இதில் சாதக, பாதகங்கள் உண்டு. ஒரு அவசரத்திற்கு பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கக்கூட கடை இருக்காது. ஆனால் மனித நடமாட்டம் குறைவான பகுதியில் தனிமையாக பொழுதைக் களிக்கலாம். 

எத்தனை நாட்கள்...?
மூன்று நாட்கள். வெள்ளி காலை கிளம்பி மாலை சென்றடைந்து, சனி சுற்றிப் பார்த்து, ஓய்வெடுத்து, ஞாயிறு திரும்புவது கச்சிதமான திட்டம். நேரமில்லாதவர்கள் இரண்டு நாட்களில் பயணத்திட்டத்தை சுருக்கிக்கொள்ளலாம்.

என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம். 


10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)


முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ பார்க்கலாம்.

எப்போது செல்லலாம்...?
ஆகாயகங்கையில் வருடம் முழுக்க நீர்வரத்து இருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால் தட்ப வெப்பம் செமத்தியாக இருக்கும். எல்லா அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கோவில்கள் மீது விருப்பம் உள்ளவர்கள், கொங்கலாய் அம்மன் கோவில் திருவிழாவை காண விழைபவர்கள் ஏப்ரலில் செல்லலாம். வருடாவருடம் நடைபெறும் வல்வில் ஓரி திருவிழாவை பார்க்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் செல்லலாம்.

எங்கே வாங்கலாம்...?
கொல்லி செல்லும்போது ஒரு முழு பகார்டி பாட்டிலை இங்கிருந்து சுமந்துச் சென்றோம். அங்கே சென்று பார்த்தால் செம்மேட்டில் அழகாக, அளவாக ஒரு டாஸ்மாக் இருக்கிறது, அங்கே பகார்டி கிடைக்கவும் செய்கிறது. பொதுவாகவே கொல்லிமலை குடிகாரர்களின் சொர்க்கம் போல தோன்றுகிறது. எந்த மூலைக்கு திரும்பினாலும் சுற்றுலாவாசிகள் மறைவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் காலி புட்டிகள். குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளின் மீது வீசி சிதறடிப்பது இங்குள்ளவர்களின் கைப்பழக்கம் போலிருக்கிறது. 

முடிந்தவரைக்கும் சுற்றுச்சூழலை, இயற்கையை நாசம் செய்யாமல், சக சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் கொல்லியைக் கொண்டாடுங்கள். இத்துடன் கொல்லிமலை பயணக்கட்டுரைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுகிறது. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 December 2016

லெனின் உறங்குகிறார் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மம்மியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எகிப்திய மம்மியைச் சொல்கிறேன். காலத்தால் அழிக்கமுடியாதபடி பாதுகாக்கப்படும் உயிரினங்களின் சடலங்களை மம்மி என்கிறார்கள். சில வேதிப்பொருட்களின் உதவியாலும், கடுங்குளிரான உஷ்ணநிலையை பேணுவதின் மூலமும் சடலங்களை பாதுகாப்பது பண்டைய எகிப்தியர்களின் பழக்கம்.

பண்டைய காலத்தில் மட்டுமில்லாமல் நவீன யுகத்தில் கூட சடலங்கள் தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ பராமரிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டுகிறது. ‘எம்பால்மிங்’ என்கிறார்கள். மேலை நாடுகளில் எம்பால்மிங் என்பது ஒரு வழக்கமான நடைமுறை போலாகிவிட்டது. இதற்கென தொழில்முறை ஆட்கள் இருக்கிறார்கள். யாரேனும் இறந்தால் சடலத்தை இவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். சடலம் எளிதில் கெடாமல், துர்நாற்றம் வீசாமல், காயங்கள் ஏதேனும் இருந்தால் வெளியே தெரியாமல், தசைகள் இறுகிப்போய்விடாமல், முக அமைப்பை சீராக்கி சிரித்த முகத்துடன் இருப்பது போல தயார் படுத்தி இறுதிச்சடங்கிற்கு அனுப்புவது இவர்களுடைய வேலை. இதற்கென பிரத்யேக வேதியியல் திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலே சொன்னது தற்காலிகமாக சில மணிநேரங்களோ, சில நாட்களோ தாக்குப்பிடிக்கக்கூடியது. மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ கூட சடலத்தை எம்பால்மிங் செய்து பாதுகாக்க முடியும். இதன் வழிமுறையை கேட்டால் பயங்கரமாக இருக்கிறது. உடலில் துளையிட்டு ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, அதே துளைகள் மூலம் எம்பால்மிங் ரசாயனங்களை உள்ளே செலுத்துவதே அந்த முறை. இம்முறையை பயன்படுத்தி மறைந்த சோவியத் யூனியன் தலைவர் லெனினின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 92 ஆண்டுகளாக !

லெனின் 1924ம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் லெனின். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பக்கவாதத்துடன் பேசவும், எழுதவும் கூட பழகிக்கொண்டார். இருப்பினும் 1924 ஜனவரி மாதம் இருபத்தியோராம் தேதியன்று லெனின் மூளையில் தமணி வெடித்து, கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். அடுத்த நாள்தான் சோவியத் அரசாங்கம் அவருடைய மரணச்செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்தது. 

முதலில் லெனின் சடலத்தை பாதுகாக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார்கள். சொல்லப்போனால் லெனினை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அதிலிருந்த சில ரத்தக்குழாய்களை நீக்கியிருக்கிறார். ஒருவேளை சடலம் இத்தனை காலம் பதனிட்டு வைக்கப்படும் என்று தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ‘எம்பால்மிங்’ முறையில் சீரமைக்கப்பட்ட பிணங்களில் ரத்தக்குழாய்கள் வேதிய ரசாயனங்களை தசைகளுக்கு கடத்தும் வேலையைச் செய்யும்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு லெனின் உடல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக நான்கு தினங்கள் வைக்கப்பட்டது. ஆனால் நான்கு தினங்கள் கடந்தபின்னரும் லெனினின் உடலைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ந்து மக்கள் குவிந்தபடி இருந்ததால் அரசாங்கம் அதனை செஞ்சதுக்க அருங்காட்சியகத்திற்கு மாற்றியது. இயல்பாகவே ரஷ்யா குளிர்பிரதேசம் என்பதால் அவருடைய உடல் குலையாமல் ஐம்பத்தியாறு நாட்கள் வரை இருந்தது. அதன்பிறகு அங்கே கோடைக்காலம் தொடங்கியபோது லெனினை நிரந்தரமாக பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

அப்போதும் எம்பால்மிங் முறை குறித்து அரசாங்கம் யோசிக்கவில்லை. உறைபனி உஷ்ணநிலையில் உடலை பதமாக வைத்திருப்பது தான் திட்டம். இதற்காக ஜெர்மனியிலிருந்து குளிர்பதன உபகரணங்கள் வரவழைக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த வேளையில் ரஷ்யாவின் புகழ்பெற்ற வேதியியல் ஆய்வாளர்கள் இருவர் ‘எம்பால்மிங்’ முறையை பரிந்துரைத்திருக்கின்றனர். எம்பால்மிங் செய்தால் உடல் கெடாமல், நிறம் மாறாமல், உருக்குலையாமல் பாதுகாக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம். பல்வேறு விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகு அரசாங்கம் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டது.

இதற்குள் காலத்தின் கோலத்தால் லெனினுடைய தோல் கறுத்திருந்தது. அதனை பழைய நிறத்திற்கு கொண்டு வருவதற்காக வேதியியல் ஆய்வாளர்கள் இரவு பகலாக உழைத்தனர். இறுதியாக லெனின் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எம்பால்மிங் செய்யப்பட்ட அவருடைய உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. உருக்குலையாமல் இருந்த அவருடைய உடலைக் கண்டு மக்கள் நிஜமாகவே வியந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு தொடர்ந்து அவருடைய உடலை பராமரிப்பதற்காக இரண்டாயிரம் வல்லுநர்கள் உழைத்திருக்கிறார்கள். அவருடைய எலும்புக்கூடு, தசைகள், தோல் ஆகிவற்றை பாதுகாக்கப்பட்டன. அதே சமயம், உள்ளுறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. அவருடைய மூளை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்டுவிட்டது. 

ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் உலகெங்கிலும் பேசப்பட்டது. அதன்பிறகு வியட்நாம் தலைவர் ஹோ சி மின் உட்பட பல உலகத்தலைவர்கள் இறந்தபிறகு எம்பால்மிங் முறை கையாளப்பட்டது. சோவியத்தை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்டாலினின் உடலும் அவர் இறந்தபிறகு எட்டு ஆண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டது.

தற்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனாலும் லெனின் உடலை பராமரிப்பது நுட்பமான பணியாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை ஆய்வாளர்கள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. உடல் வைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தின் உஷ்ணநிலை, ஒளியமைப்பு, ஈரத்தன்மை போன்றவற்றை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை உடலை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. அவருடைய உடலில் செயற்கை கண்ணிமைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மூக்குப்பகுதி செயற்கையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபிறகு சில ஆட்சியாளர்கள் அருங்காட்சியகத்தை நிரந்தரமாக மூட முயற்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் மக்கள் பெருந்திரளாக அருங்காட்சியகம் முன்பு கூடி, தங்கள் தலைவரை காப்பாற்றியிருக்கிறார்கள். இன்னொரு சமயம் லெனின் உடலை பராமரிப்பதற்கு தேவைப்படும் நிதியை காரணம் காட்டி அருங்காட்சியகத்தை மூட முயன்றிருக்கிறது அரசு. அப்போதும் கம்யூனிஸ இயக்கம் மக்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்து தன் எதிர்ப்பைக் காட்டி அருங்காட்சியகத்தை காப்பாற்றியிருக்கிறது.  

இவற்றைப் பற்றியெல்லாம் கவலையேதும் இல்லாமல் லெனின் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார், 92 ஆண்டுகளாக !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment