30 April 2010

சுறா - புட்டு புட்டு வச்சிருக்கேன்...!

வணக்கம் மக்களே...

உங்களுள் பலரது உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஏன் உயிரையும் பொருட்படுத்தாமல், நண்பர்கள் பலரது எதிர்ப்பையும் மீறி, ஏன் தன்மானத்தை எல்லாம் இழந்து இந்தப் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்த்துவிட்டு சுடச்சுட பதிவிடுகிறேன். எளிதாக டிக்கெட் கிடைத்து விடுமென்ற காரணத்தினால் அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தை தேர்ந்தெடுத்தேன். நண்பர்கள் யாரும் தைரியமாக முன்வராததால் தனியாகவே சென்றேன். ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.

திரைக்கு முன்...
- இந்த பால் வடியும் முகத்தைப் பாருங்கள். (பேனரில் பீய்ச்சியடித்த பால்தான் முகத்தில் வடிகிறது). இந்த பச்சைமண்ணுக்கு என்னங்க தெரியும். ஐவரும் விஜய் ரசிகராம்...!

- திரையரங்கு வாசலில் ஒரு குழு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது. அதுசரி, எங்கே கூட்டம் கூடுகிறதோ அங்கே தானே எடுக்க முடியும். அவர்களில் குறிப்பாக விஜய் பேனரை காட்டி, "இது எங்க அண்ணன் படம்" என்று சொல்லி பிச்சை எடுத்த பெண்ணின் யுக்தி எனக்கு பிடித்திருந்தது.
 - மற்றுமொரு பேனரில் விஜய் ஹெலிகாப்டரில் இருந்து தலைமை செயலகத்தின் மொட்டைமாடியில் இறங்குவது போல கிராபிக்ஸ் செய்திருந்தார்கள். அப்படியே விஜய் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டேன்.

- நல்லவேளையாக திரையரங்கில் எனதருகில் அமர்ந்திருந்தவர் என் இனமாகவே இருந்தார். விஜய்யின் அறிமுகக் காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டோம்.

கதைச்சுருக்கம்
 யாழ் நகர் என்ற மீனவ கிராமத்திற்கு அறிவிக்கப்படாத தலைவராகவும், அவங்க வீட்டு பிள்ளையாகவும் இருந்து வருகிறார் விஜய். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் கான்க்ரீட் வீடுகள் கட்டிகொடுக்க வேண்டுமென்பதே விஜய்யின் லட்சியம். (ரசிகர்களையெல்லாம் கிறுக்கனாக்குவது கூட விஜய்யின் லட்சியம்தான்... இருப்பினும் நான் சொல்வது கதையில் அவர்கொண்ட லட்சியத்தை பற்றி மட்டும்தான்). தீம் பார்க் கட்டுவதற்காக மீனவ கிராமத்தையே ஆட்டையை போட திட்டமிடுகிறார் வில்லன். விஜய் வில்லனின் திட்டத்தை முறியடித்தாரா...? தனது லட்சியத்தை நிறைவேற்றினார என்பதே மீதிக்கதை.
மீண்டும் விஜய் நடிப்பில் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். "விஜய்க்கு என்ன ஆச்சு...?" என்று ஒட்டுமொத்த கிராமமே படபடத்துக்கொண்டிருக்கும்போது கடலுக்குள் இருந்து சுறாநீச்சல் போட்டபடி விஜய் அறிமுகமாகும் காட்சியிலிருந்தே அபத்தம் ஆரம்பித்துவிடுகிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் வரிசையாக வடிவேலு, தமனா, வில்லன் தேவ் கில் என்று என்று அறிமுகப் படலம். அல்லக்கையாக வந்து அடிவாங்கிக்கொண்டே இருக்கும் கேரக்டரில் வடிவேலு. பல இடங்களில் சலிப்பூட்டினாலும் சில இடங்களில் டைமிங்கில் பின்னி எடுக்கிறார்.

நாய்க்குட்டி காணாமல் போனதால் தற்கொலை முயற்சி செய்யும் தமனா, எப்போதும் போல தமிழ் சினிமாவின் லூசுப்பெண். நான்கு பாடல்களில் மட்டும் தோன்றியிருக்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வில்லன் என்று வித்தியாசமே இல்லாத ஒரு வில்லனை அறிமுகப்படுத்துவார்கள். இதப் படத்திலும் அப்படித்தான்.

படத்தின் முதல்பாதி முடிவதற்குள் பலமுறை கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டேன். அப்படி ஒரு இழுவை. இரண்டாம் பாதி ஆரம்பித்தபிறகு லாஜிக்கெல்லாம் எதுவும் கிடையாது. தீயில் எரிந்தபிறகும் கூட விஜய் உயிருடன் வருகிறார்.
டாக்டர் விஜய்
முற்றிலும் மாறுபடாத கதாப்பாத்திரத்தில் விஜய். இந்தப் படத்தில் திடீரென சுயமரியாதை, தன்னம்பிக்கை, தமிழன் என்று என்னென்னவோ பிதற்றியிருக்கிறார். பல்லைப் பிரிக்காமல் பன்ச் டயலாக்குகள் பேசியபடி வருகிறார். போக்கிரியில் பார்த்த அதே அசால்ட் ஆறுமுகம். பட்டும்படாமலும் அரசியல் பேசியிருக்கிறார். ஆங்காங்கே சூப்பர்ஸ்டாரை இமிடேட் செய்ய முயன்றிருக்கிறார். சிலர் விஜய் காமெடி காட்சிகளில் சிறப்பாக நடிப்பதாக கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரையில் விஜய் திரையில் தோன்றினாலே காமெடிதான்.
தங்கத்தாரகை தமனா
பூர்ணிமா என்னும் பணக்கார வீட்டுப்பெண் கேரக்டரில் தமனா. ஒரு கோடி கேட்ட தமனாவை தெருக்கோடியில் நிற்க வைத்துவிடுவார்கள் போல. பாடல் காட்சிகளிலாவது கொஞ்சம் காட்டியிருக்கலாம். (நடிப்பை சொன்னேங்க). புடவை கட்டிக்கொண்டு வரும் ஒரே ஒரு பிரேமில் மட்டும் அழகாக தெரிகிறார். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை.
வைகைப்புயல் வடிவேலு
அம்ப்ரெல்லா எனும் கதாப்பாத்திரத்தில் விஜய்யின் எடுபிடியாக வடிவேலு. வடிவேலுவின் காமெடி, செய்ததையே செய்தது போல இருந்தாலும் விஜய்யின் தலைவலி காட்சிகளுக்கு மத்தியில் சற்றே ஆறுதல் தந்தது.
புதுமுக வில்லன் தேவ் கில்
வழக்கமான தமிழ் சினிமா வில்லன்தான். மந்திரியாக இருந்துக்கொண்டு அண்டர்கிரவுண்ட் வேலைகளில் ஈடுபடுகிறார். முதல் பாதியில் கொஞ்சமாக கவர்ந்தாலும் இரண்டாம் பாதியில் கத்தியே சாகிறார்.
மற்றும் பலர்
வில்லனின் கைக்கூலிகளாக ஸ்ரீமன், இளவரசு.ஸ்ரீமனுக்கு பார்த்து சலித்த பாத்திரம். மங்குனி அமைச்சர் இளவரசு வில்லனருகில் இருந்துக்கொண்டு அவ்வப்போது வசனங்களால் சேம் சைடு கோல் போட்டபடி வளம் வருகிறார். இது தவிர்த்து ராதா ரவி, மதன் பாப், யுவராணி, விஜய்யின் அம்மாவாக வரும் குணச்சித்திர நடிகை என்று பலர் நடித்திருந்தாலும் யாருக்கும் அதிக காட்சிகள் இல்லை.
பாடல்கள்
எப்போதும் விஜய் படத்தில் பாடல்களெல்லாம் ஹிட்டாகி விடும். இந்த முறை சன் பிக்சர்ஸ் என்பதால் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் உட்காரவில்லை. தெலுங்கு பில்லாவில் இருந்து ஆட்டையை போட்ட "நான் நடந்தால் அதிரடி..." பாடலும் விஜய்யின் நடனமும் மட்டும் சூப்பர். "தஞ்சாவூர் ஜில்லாக்காரி..." பாடலில் "பொம்மாயி..." வரிகள் மட்டும் காதுகளில் குளிர்ந்தது. அனாலும் தமனாவின் டவுசரை விஜய் ஏற்றி ஏற்றி இறக்கியது அசிங்கமாக இருந்தது.

எனக்கு பிடித்த காட்சி:
விஜய் ஒரு காட்சியில் ராதா ரவியிடம் மீனவர்களின் வாழ்க்கை நிலை பற்றி சொல்வார். அந்தக் காட்சி உண்மையில் உருக்கமாக இருந்தது. இதே வசனத்தை வேறு எந்த நடிகராவது சொல்லியிருந்தால் கண்ணீர் கசிந்திருக்கும். விஜய் சொன்னதால் சிரிப்புதான் வந்தது. இருப்பினும் படத்தில் உருப்படியான ஒரு காட்சியென்று இந்தக் காட்சியை சொல்லலாம்.

தீர்ப்பு
எல்லோரும் சரியாக கதை கேட்பதில்லை என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கவலை, அட்வைஸ் எல்லாமே விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அறியாமைக்கூட்டத்திற்குத்தான். உங்கள் தறுதளபதியின் போதைக்கு நீங்கள் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறீர்கள். உங்களை உசுப்பேற்றி அந்த உஷ்ணத்தில் உங்கள் தலைவர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்களெல்லாம் உணர்ந்துக்கொள்ளும் வரை உங்கள் தலைவன் திரையில் சொன்னது போல தமிழன் சுயமரியாதை இல்லாமல்தான் இருப்பான்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

27 April 2010

கட்டிலறை கட்டளைகள் (18+)

வணக்கம் மக்களே...

(பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே படிக்க வேண்டுமென சொன்னால் கேட்கவா போகிறீர்கள். படியுங்கள். படித்து தொலையுங்கள்)

எழுதலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஒரு வித தயக்கத்துடனே இந்தப் பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, உங்கள் எண்ணங்களை ஓரத்தில் இருக்கும் ஓட்டுப்பெட்டியில் சொல்லிவிடுங்கள். தொடர்ந்து இதுப்போன்ற பதிவுகளை எழுதலாமா என்பது நீங்கள் சொல்லும் முடிவில் தான் இருக்கிறது.

நாதியற்ற ஒரு மாலைப்பொழுதில் மெரீனா கடற்கரைக்கு சென்றிருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலர்கள் ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கண்கள் என் பேச்சை கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தது. ஒரு வழியாக கட்டுபடுத்திக்கொண்டு ஆளரவமற்ற ஒரு கட்டுமரத்தில் ஏறி மல்லாந்து படுத்தேன். பறந்து விரிந்த ஆகாயத்தை பார்த்து வியந்துக் கொண்டிருந்தேன். ஆகாயத்தை மறைத்தபடி என் தலைக்கு நேரே ஒரு உருவம் தென்பட்டது. கடலை விற்கும் சிறுவன் பல்லைக் காட்டினான். என் தனிமைக்கு தடையாய் இருந்த அவனை அப்புறப்படுத்துவதற்காக கடலை பொட்டலத்தை கையில் வாங்கினேன். கடலை போட்டுக்கொண்டிருந்தவர்களை ரசித்தபடி கடலையை கொறித்தேன், கடலலையை வெறித்தேன். கடலை காலியான பின் தான் கவனித்தேன், கடலை மடித்து தந்த காகிதத்தில் அட்டகாசமான ஒரு பெண்ணின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. ஓவியத்தை ஒதுக்கிவிட்டு செய்தி என்னவென்பதை படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு வந்த ஆனந்த விகடனின் பக்கம் அது. எழுத்துருக்கள் இடாலிக்ஸில் இருந்ததால் கவிதையாக இருக்குமென்று எண்ணிக்கொண்டேன். ஏதோவொரு படத்தின் பாடல் வரிகள் அவை. வைரமுத்துவின் வரிகள் விளையாடி இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். வரிகளை படித்து முடித்தபோது ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்துவிட்டதாகவே தோன்றியது.

*****
ஆண்:
மீசை முத்தம் வேண்டுமா...?
மீசையில்லாத முத்தம் வேண்டுமா...?

பெண்:
அப்படின்னா...?

ஆண்:
மீசை முத்தம் என்றால் பெண்ணே
நான் உனக்கு தருவது
மீசையில்லாத முத்தம் என்றால்
நீ எனக்கு தருவது...

*****
பெண்: 
தண்ணீர் முத்தம் வேண்டுமா...?
தரையின் முத்தம் வேண்டுமா...?

ஆண்:
அப்படின்னா..?

பெண்:
தண்ணீர் முத்தம் என்றால் அன்பே
தடயமில்லாமல் இடுவது
தரையின் முத்தம் என்றால்
கொஞ்சம் தடயத்தோடு விடுவது...

*****
பெண்: 
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டளைப்படியே செய்வாயா...?

ஆண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

பெண்:
என்னை மெதுவாய்த் துடிக்கவிடு...
எச்சில் மாற்றி உண்டுவிடு...
உடையை மெல்ல உதறிவிடு...
உன்னை எனக்கு உடுத்திவிடு...
சிவந்த பாகம் வெளுக்கவிடு...
கறுத்த பாகம் சிவக்கவிடு...
எந்தன் உயிரை உறிஞ்சிவிடு...
உந்தன் உயிரால் நிரப்பிவிடு...
எந்த நிலையிலே நான் கிடப்பெனோ
அந்த நிலையிலே தூங்கவிடு...
இந்த நிம்மதி நிரந்தரமென்று
எனது காதிலே ஒதிவிடு...

*****
ஆண்:
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டுப்பட்டு நடப்பாயா...?

பெண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

ஆண்:
நயனம் இரண்டும் மூடிவிடு...
நான்கு புலன்கள் திறந்துவிடு...
கூறைப் புடவை கலைந்துவிடு...
கூந்தல் சேலை உடுத்திவிடு...
என்னைக் கொஞ்சம் ஆளவிடு...
எதிர்ப்பது போல வளைந்துகொடு...
கவிதைபோல் சில உளறிவிடு...
கட்டில் கடன்கள் திருப்பிக் கொடு...
எந்த சுகங்களை நீ ரசித்தாயோ
அந்த சுகங்களைப் பேசிவிடு...
அந்த சுகங்கள் மீண்டும் தொடர
அரைமணி நேரத் தவணை கொடு...

*****
என்ன ஒரு ரசனை. இப்படி ஒரு ரசனையுடன் தாம்பத்தியத்தை அனுபவிக்க தமிழனால் (உண்மைத் தமிழன் பற்றி நான் எதுவும் சொல்லலைங்கோ...) மட்டுமே முடியும். நானும் ரசித்தேன். அட... கவிதையை சொன்னேங்க...

வாசகர்களுக்கு ஒரு சின்ன போட்டி. வைரமுத்து எழுதி திரைப்பட பாடலாக வெளிவந்த இந்த வாழ்க்கை தத்துவம், எந்த திரைப்படத்தில் இடம் பெற்றதென யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.சரியான விடையை முதலில் குறிப்பிடும் அதிர்ஷ்டசாலி அல்ல... புத்திசாலி நேயருக்கு சுஜாதா எழுதிய "என் இனிய எந்திரா..." புத்தகத்தின் PDF பதிப்பு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பதிவுக்கும் சுஜாதா எழுதிய புத்தகத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று பதிலை சொன்னவர் விரும்பினால் அவர் எதிர்பார்க்கும் அந்த மாதிரியான புத்தகம் ஒன்றும் இலவச இணைப்பாக அனுப்பப்படும்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

25 April 2010

ஒரிஜினல் ரஜினிகாந்த்...!

 கண்ணா... இப்புடு சூடு...


அய்... இது எப்டி இருக்கு...!

டிஸ்கி: புகை பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது.

Post Comment

23 April 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 2

வணக்கம் மக்களே...

இந்தப் பதிவை எனது 25வது பதிவாக வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் பொன் மகேஷ், sweet பிரபாகரன், சாமியார் தினேஷ், CSE ரமேஷ் மற்றும் சக பதிவர்கள் சைவக்கொத்துப்பரோட்டா, சேட்டைக்காரன் உள்ளிட்ட பெயர் குறிப்பிட மறந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

இந்த வலைப்பூ என் வலிகளில் இருந்தெல்லாம் தொடர்ந்து எனக்கு விடுதலை அளித்து வருகிறது. நான் சொல்ல முடியாமல் தயங்குவதை எல்லாம் என் வலைப்பூ சொல்லிக்கொண்டு இருக்கிறது. இப்போது பட்டாம்பூச்சியைப் பற்றிய உணர்வுகளை பட்டாம்பூச்சியிடமும், சுரேஷைப் பற்றிய கருத்துக்களை அவரிடமும் சொல்லி முடிந்தாகி விட்டது. இன்னமும் நிறைய பேரிடம் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.

இரண்டாம் பாகமாக எழுதப்பட்டுள்ள இந்த கவிதைப்பதிவின் முதல் பாகத்தை படிக்காத அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
பட்டாம்பூச்சி பதிவின் முதல் பாகத்தை தீட்டியபோது அந்தப் பட்டாம்பூச்சியே நேரடியாக வந்து இந்த வலைப்பூவை மொய்க்குமென நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் பின்னூட்டம் போடுவது, அடிக்கடி விசிட்டடிப்பது என்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துவருகிறாள். இது மட்டுமில்லாமல், சுரேஷ், நிரஞ்ஜ், வந்தனா (அதே வந்தனா தான்...!) என்று எனக்கு பிடித்தவர்களெல்லாம் பின்னூட்டம் போட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஏற்கனவே, முதல் பாகத்தில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் புதிதாக படிப்பவர்களுக்கு சொல்லிவிடுகிறேன். இங்கே இருக்கும் கவிதைகள் அனைத்தும் ஆட்டையைப் போட்டவை தான். ஆனால் அவற்றில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் அனைத்தும் எனது உண்மை உணர்வுகளே. முதல் பாகத்தில் படித்ததை விட கொஞ்சம் பவர்புல்லான கவிதைகள் இங்கே:-

முன் குறிப்பு: சில கவிதைகளை கூர்ந்து படித்தால் பட்டாம்பூச்சி யாரென்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். ம்ம்ம்... புரிந்துக்கொள்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.

சின்ன வயசில் நிறைய 
சிலேட்டு குச்சிகளை 
முழுங்குவேனாம்...!
இருபது வயதுகளில் 
இப்படியெல்லாம்
உன்னைப்பற்றி
எழுதத்தானோ...?
*****
எத்தனையோ பொய்களை 
எளிதாகச் சொல்லிவிட்டேன்...
உன்னிடம் ஒரே ஒரு உண்மையைச் சொல்ல
காலங்காலமாய்த் தயங்கிக் கொண்டிருக்கிறேன்...!
*****
பொம்மைக் கடைப்பக்கம் போகாதே 
என்றால் கேட்கிறாயா பார்...
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு 
என்று அடம் பிடிப்பதை...!
*****
ஒரு வழியாய் தைரியம் வரவழைத்துச் 
சொல்லிவிட்டேன் காதலை 
சலனமற்றிருக்கிறது
உன் புகைப்படம்...!
*****
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது - 
"ஏன் இந்தப்பூ
நகர்ந்துக்கொண்டே இருக்கிறது...?"
*****
கும்பலில் எல்லாம் 
நீ போகாதே...
யார் யாரோ மிதிக்கிறார்கள் 
உன் நிழலை...!
*****
கல்லூரிக்கு நீ
பிரயாணிக்கும் அரசுப்பேருந்து 
நீ ஏறியவுடன் 
அரசிப்பேருந்தாகிறது...!
*****
பயணம் முடிந்ததும் 
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு 
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தது...
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து...!
*****
நீ ஒட்டப்போகும்
ஸ்டிக்கர் பொட்டுக்காக 
காத்திருக்கிறது 
என் குளியலறை...!
*****
நம் வீட்டில் நடக்கும் எல்லா 
நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் 
உன்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறேன் நான்...!
*****
கடைசி நாள் பிரேயரில்
தேசிய கீதத்துக்கு ஏன் 
தேம்பித் தேம்பி அழுதேன் என்று 
எனக்கு மட்டும்தான் தெரியும்...!
*****
கை சூப்பும் குழந்தையின் விரலை 
எடுத்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தாய்...
மறுபடி மறுபடியும் கை சூப்பினாள்...
முதலில் நீ
கையை எடுத்துவிடுவதை நிறுத்து...
உன் கையின் சுவை 
அதன் விரலில் படவும்தான்
மறுபடி மறுபடியும் சூப்புகிறது...!
*****
நீ கெட்ட வார்த்தைகளே பேசியதில்லையாம்...
இப்போது புரிகிறதா...?
அந்த வார்த்தைகள் ஏன் கெட்டனவென்று...!
*****
என்னை ரொம்ப ரொம்ப உருக வைத்த இரண்டு பீலிங் கவிதைகள்:-
சொந்தம் மறந்தவனென்று
உறவுகள் தூற்றட்டும் 
இறந்தவர் வீட்டுக்கெல்லாம்
வரவேமாட்டேன்...
நீ
அழுதுக்கொண்டிருப்பதை
பார்க்கமுடியாது என்னால்...
*****
நீ யாருக்காகவோ சிந்திய
கண்ணீர்த் துளிகளைப் பார்த்ததும்...
எனக்கும் செத்துவிடத் தோன்றியது...
*****
கடைசியாக ஒரு சூழ்நிலைக் கவிதை:-
எல்லா கவிதைகளுமே 
உன்னைப் பற்றியவைதாம் எனினும் 
ஒரு கவிதைகூட 
உன்னை மாதிரி இல்லையே...!
*****

பட்டாம்பூச்சி யாரென்பதை உணர்ந்துக்கொண்ட நண்பர்கள் கட்டாயம் பின்னூட்டம் போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏய் பட்டாம்பூச்சி... உனக்கும்தான்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

21 April 2010

பட்டப்பகலில் பயங்கரம் - பட்டமளிப்புவிழா பகிர்வுகள்

வணக்கம் மக்களே...

(இது முழுக்க முழுக்க என் கல்லூரி நண்பர்களுக்காக எழுதப்பட்ட பர்சனல் பதிவு. மற்றவர்கள் படிக்க விரும்பவில்லை என்றால் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம்.)

கிட்டத்தட்ட கல்லூரிக்காலம் முடிந்து ஓராண்டுக்குப் பின்னர் அந்த சம்பவம் நடந்தேறியது. ஏப்ரல் 10ம் தேதி நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

- வழக்கமாக நண்பர்கள் என்றாலே தாமரை இலைதன் நீர்போல ஒட்டியும் ஒட்டாமலிருக்கும் நான் இந்த முறை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கப்போகிறோம் என்பதாலோ, என்னவோ, இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன்.

- எப்போதும் என் குடும்பத்தில் யாரேனும் பட்டம் வாங்குகிறார் என்றால் அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று ஒரு பெரிய குடும்ப கும்பலே ஆஜராகிவிடும். இந்த முறை நண்பர்களோடு செலவிடப்போகும் கடைசி நாளை வீணடிக்க வேண்டாமென்ற காரணத்தினாலும், இந்த பாழாய்ப்போன டிகிரியை வாங்குவதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை என்ற காரணத்தினாலும் குடும்ப கும்பலை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். தாய் - தந்தையையும் தடுத்துவிட்டேன்.
- இது நான் எதிர்ப்பார்த்த ஒன்றுதான். என்னைக் கண்ணால் கண்டதும் பிரின்சிபால் முதல் வாட்ச்மேன் வரை எல்லோருமே ஏதோ ஸ்பீல்ஸ்பெர்க் படங்களில் வரும் விசித்திர பிராணியைக் கண்டது போல உணர்ச்சி காட்டினார்கள். விமர்சனங்கள் ஒரு புறம் குவிந்தாலும் மறுபுறம் தோனி, டாவின்சி கோட், "அஞ்சாதே" பிரசன்னா, "காளை" சிம்பு, சவுரப் திவாரி, இஷாந்த் ஷர்மா என்று ஏதேதோ பாசிடிவ் கமெண்ட்ஸ் வந்து காதுகளில் விழுந்தது, குளிர்ந்தது. அதிலும் பிரின்சி, "ஜீசஸ் கிரிஸ்ட்" என்று கமென்ட் அடித்தது உச்சக்கட்டம்.

- நண்பர்களைக் கண்டதும் புன்னகைத்தேன், கை குலுக்கினேன், நலம் விசாரித்தேன். ஆனால் "என்ன செய்கிறாய்...?" என்று மட்டும் அறிந்தோ அறியாமலோ யாரிடமும் கேட்டு விடவில்லை. பதிலுக்கு அதே கேள்வியை அவர்கள் என்னிடம் கேட்டால் நான் எங்க போவேன்...? எனக்கு யாரத் தெரியும்...? (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

- சில நண்பர்கள் விழாவிற்கு வருகை தராதது பெருத்த ஏமாற்றம். "சினிக்கூத்து சித்தன்" நூர்கான், எஸ்.பி.விஜய், சர்வேஸ்வரன், துலுக்காணம் உள்ளிட்ட நண்பர்கள் வராததால் விழா பெரிய அளவில் சோபிக்கவில்லை. வகுப்புத் தோழிகளில் பலகாரப்பெண்ணும், என் பேவரிட் சேவரிட்டும் வராதது வருத்தமளித்தது.

- படித்த நான்காண்டுகளில் பரிட்சயமாகாத, ஆனால் வலைப்பூவின் மூலமாக என்னை அறிந்துக்கொண்ட மனோஜ் குமார் (சி.எஸ்.இ), ரமேஷ் (சி.எஸ்.இ), மோகன் ராஜ் (ஐ.டி) உள்ளிட்டவர்கள் முகம் பார்த்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆர்குட்டில் சன் பிக்சர்ஸ் சினிமாவைப் போல எனது வலைப்பூவைப் பற்றி விரட்டிபிடித்து விளம்பரப்படுத்தி இருந்ததால் பெரும்பாலானவர்கள் எனது எழுத்துப்பணிகளை பற்றி அறிந்திருந்தார்கள்.

- மேடிட்ட வயிறுகளையும், மெட்டியிட்ட கால்களையும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 
"ஒரு குழந்தையே
குழந்தையை
சுமக்கின்றதே...!"
என்றெல்லாம் ஹைக்கூ கவிதை சொல்லத் தோன்றியது.

- டிகிரி வாங்கத் தயாரானபோது கந்தசாமி படத்தில் வடிவேலு மாட்டிக்கொண்டு வருவதைப் போல ஒரு கறுப்பு உடுப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அதற்காக நூறு ரூபாயை ஆட்டையைப் போட்டதற்காகத்தான் இடுகைக்கு இப்படியொரு தலைப்பை வைக்க நேரிட்டது. பட்டப்பகலில் பயங்கரம். இருந்தாலும் ஒரு ஆங்கிளில் இருந்துப் பார்த்தால் சிட்டிசன் படத்தின் அறிமுகக் காட்சியில் வரும் அஜித்தைப் போல இருந்ததால் ஆறுதலடைந்தேன்.

- கேப்டன் டி.வி ஆரம்பக்கட்ட வேலைகளாலும், இடையறாத சமூகப்பணிகளாலும் (!!!) கேப்டன் அவர்கள் விழாவிற்கு வராததால் குழந்தைகள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. வழக்கமாக வந்துபோகும் அண்ணியாரும் இந்த முறை மிஸ்ஸிங். கேப்டன் டி.வியின் "மானாட மயிலாட" பாணி நிகழ்ச்சிக்கு மார்க் போட போய்விட்டார்போல.

- சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலையின் துணைவேந்தர் திரு. மன்னர் ஜவஹர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். "UNEMPLOYED, UNDER EMPLOYED, EMPLOYED" என்றெல்லாம் பாகுபாடுகளைச் சொல்லி அவர் ஆற்றிய சொற்பொழிவு உற்சாகமூட்டும் விதமாக இல்லாமல் பெரும்பாலானவர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.

- அடுத்ததாக பட்டமளிக்கும் படலம். பல லட்சம் செலவிட்டு படிக்கவைத்த பெற்றோர்கள் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள். முன்னதாக துணைவேந்தர் கைகளிலிருந்து சான்றிதழ்களை வாங்குவது போல ச்சும்மா உல்லுல்லாயி போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். அதன்பிறகு ஈ.சி.ஈ. டிபார்ட்மென்டுக்கே உரிய ரேஷன் கடை வரிசை முறை அமலானது.

- பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த சான்றிதழை கையில் வாங்கிய நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். சான்றிதழில் இருந்த புகைப்படத்தில் நான் குங்குமப்பொட்டோடு அலங்கோலமாக காட்சியளித்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம். என் வாழ்வில் நடந்த எத்தனையோ வரலாற்று பிழைகளுள் இதுவும் ஒன்று. அந்த போட்டோவை மட்டும் குறிப்பிடவில்லை, அந்த போட்டோவில் நான் குங்குமம் வைக்க காரணமாக இருந்த சம்பவங்களையும்தான்.

- பல மாதங்கள் கழித்து நண்பர்களை சந்தித்த இந்த விழா ஆட்டம், பாட்டம், கல்யாணி, நெப்போலியன் என்று எதுவுமே இல்லாமல் சத்யஜித் ரே படம் மாதிரி இருந்ததால் சுத்தமாக மூட் ஸ்பாயில் ஆகிவிட்டது. இனிவரும் பட்டமளிப்பு விழாக்களிலாவது கல்லூரி நிர்வாகம் இவற்றை பரிந்துரை செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு புகைப்பட கனவு இருந்து வந்தது. அகாடெமிக் பிளாக்கின் மொட்டை மாடி, கல்லூரி நூலகம், டிபார்ட்மென்ட் வாசல், ஹாஸ்டல், டி.வி. ரூம், மெஸ் வராண்டா, இரவு வெளிச்சத்தில் பரோட்டா கடை என்று மாமண்டூர் மாநகரத்தையே வளைத்து வளைத்து கிளிக்க வேண்டுமென்பதே அந்தக் கனவு. அது கடைசிவரை நிறைவேறாமல் போனது.

- எனது தற்காலிக தாயைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சிறுகதை என்று சொல்லிக்கொண்டாலும் என்னைப் பொறுத்தவரையில் அவள் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறாள். அவள் என்னை யாரென்றே தெரியாதது போல காட்டிக்கொண்டதும், நித்தியானந்தர் விவகாரத்தில் அவமானப்பட்ட அந்த பிரபல எழுத்தாளரின் பெயரில் முதல் பாதியைக் கொண்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டதும் என்னுள் மரண வலியை ஏற்படுத்தியது.

- சில நாட்களாகவே நண்பர்களிடம் சொல்லிவிடு... சொல்லிவிடு... என்று என் உள் மனதில் முள் தைத்துக்கொண்டிருந்த அந்த விஷயத்தைப் பற்றி கடைசிவரை யாரிடமும் வாய் திறக்கவில்லை. பதிவாக எழுதிவிட முயல்கிறேன்.

- அன்றைய தினம் முழுவதையும் நன்பர்களுடனே செலவிட வேண்டுமென நினைத்தாலும் அன்றாடப் பணிகள் அழைத்ததால் மதியத்திற்குள்ளாகவே பிரிய நேரிட்டது.

- இரண்டு நாட்களுக்குப் பின்னர் விடுபட்டுப் போன ஒரு மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக மீண்டும் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். சலனமற்று கிடந்தது கல்லூரி வளாகம். வரிசையாக பேருந்துகள், அவரவர் பணிகளில் ஊழியர்கள், ரெகார்ட் நோட்டோடு டிபார்ட்மென்ட்டுக்கு செல்லும் மாணவர்கள் என்று அவர்களைப் பொறுத்தவரையில் அது மற்றுமொரு நாளே...!

- நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், எனது புகைப்பட கனவு பலியானது பற்றி கூறியிருந்தேன். உங்களிடம் இருக்கும் நமது கல்லூரி, நண்பர்கள் பற்றிய அரிய புகைப்படங்களைத் தவறாமல் "nrflyingtaurus@gmail.com" என்ற முகவரிக்கு அனுப்பிவிடுங்கள்.

- மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் சம்பவம் நடந்த அன்று என் மனதில் தோன்றிய உணர்வுகள்...! இது போல ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் இருக்கும். உங்கள் உணர்வுகளை மறக்காமல் கமெண்ட்ஸ் எழுதி தெரிவித்துவிடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

20 April 2010

அ.தி.மு.கவில் அனுஷ்கா . . . ! ! ! ? ? ?

போடுங்கம்மா ஓட்டு...! ரெட்டை இலைய பாத்து...!!

(பி.கு: வாசகர்களுக்கு ஒரு போட்டி. மேலுள்ள படத்திற்கு பொருத்தமான கமென்ட் அடிக்கும் வாசகருக்கு 50 தமிழ் நடிகைகளின் ஜில் ஸ்டில்ஸ் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் மெயில் ஐடியை மறக்காமல் குறிப்பிடவும்)

Post Comment

13 April 2010

எனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்

வணக்கம் மக்களே...

திறந்த வீட்டில் ஏதோ நுழைந்தது போல, பிரபல பதிவர்கள் எழுதிக்கொண்டிருந்த இந்த தொடர்பதிவில் நானும் இணைந்திருக்கிறேன். நான் இந்த பதிவை எழுத அனுமதி அளித்த முகிலனுக்கு நன்றிகள்.

இந்த பதிவுத்தொடரின் முந்தைய எபிசோடை படிக்க கீழுள்ள தொடுப்பை சொடுக்கவும்.


விதிகள்: 
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

நடிகர்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் நான் எப்போதும் என்னை தல ரசிகன் என்றே சொல்லுவேன். ஆனால் எனக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி சிந்தித்தபோது ஒரு தல படம் கூட என்னை கடுமையாக பாதித்ததில்லை என்று உணர்ந்துக்கொண்டேன். மாறாக பத்தில் பாதி கமல் படங்களாக இருந்தது. இது தவிர்த்து நிறைய படங்கள் என் மனதை பாதித்து, ஆனால் முதல் பத்துக்குள் வர முடியாமல் போனது. சிகப்பு ரோஜாக்கள், மைக்கேல் மதன காம ராஜன், குடைக்குள் மழை, சுவரில்லாத சித்திரங்கள், நிழல் நிஜமாகிறது, சுப்ரமணியபுரம், நந்தா, விருமாண்டி, ஜாதிமல்லி, புன்னகை மன்னன், வானமே எல்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், உன்னால் முடியும் தம்பி, அஞ்சாதே உள்ளிட்ட படங்கள் அந்த வரிசையில் அடங்கும்.

நான் ஒன்றிலிருந்து தொடங்காமல் பத்திலிருந்து தொடங்குகிறேன். ஏறத்தாழ இந்த படங்களில் எனக்கு பிடித்த காட்சி என்றால் அது க்ளைமாக்ஸ் காட்சி தான். எனவே க்ளைமாக்ஸ் தவிர்த்து எனக்கு பிடித்த காட்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

10. தூறல் நின்னு போச்சு
பாக்யராஜ் படங்கள் என்றாலே எனக்கு பிடிக்கும். (அட... அந்த சமாச்சாரத்துக்காக இல்லைங்க) அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த படம் "தூறல் நின்னு போச்சு". படத்திற்கு கவிதையாய் தலைப்பு தேர்ந்தெடுப்பதில் பாக்யராஜ் திறமைசாலி. படம் கொண்ட கருத்தை தலைப்பிலேயே சொல்லியிருப்பார். கதாநாயகியை பெண் பார்ப்பதில் ஆரம்பித்து அவளை மணமுடிக்கும் வரை ஏற்படும் சிக்கல்களையே படமாக எடுத்திருப்பார்கள். சுலக்ஷனா திரும்பத் திரும்ப அழுது௮ வடியும் காட்சிகள் அலுப்பு தட்டினாலும் படத்தில் பாக்யராஜ் - நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருக்கும். இறுதிக்காட்சியில் செந்தாமரைக்கு எதிராக அவரது மனைவி பேசும் வசனங்கள் அழுத்தமானது. கடைசியில் நாயகியின் தந்தை மனம் மாறும்போது, வசனங்களால் எதையும் விவரிக்காமல் வேறு ஒருவருடன் நடக்க இருந்த திருமணத்தின் அழைப்பிதழ்களை கிழித்து போடுவது போல காட்டுவது கவிதையாய் இருக்கும்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
வழக்கமாக தமிழ் சினிமாவில் பெண் பார்க்கும் படலம் என்றாலே சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். கிழவி, புரோக்கரை மாப்பிள்ளை என்று நினைத்து பாக்யராஜை கலாய்ப்பது, பாக்யராஜ் குழந்தையின் உடை, பொட்டில் சில மாற்றங்களை சொல்வதை கேட்டு சுலக்ஷ்னா மாற்றங்கள் செய்து கொள்வது போன்ற காட்சிகள் அருமையாக இருக்கும்.

9. இயற்கை
கப்பல், துறைமுகம், கலங்கரை விளக்கம் என்று புதியதொரு கதைக்களம். பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இருப்பது போல காட்டுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் நாயகி இரண்டு காதல்களுக்கு மத்தியில் தவிப்பது போல காட்டியிருந்தது புதுமை. ஷாமின் ஹீரோயசம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் ஷாம் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், என்னை பொறுத்தவரையில் ரஜினி, அஜித் தம்மடிக்கும் ஸ்டைலை விட சிறப்பாக இருக்கும். கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் குட்டி ராதிகா, அந்த காதல் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். படத்தின் இறுதிகாட்சி மகிழ்ச்சியானதா சோகமானதா என்று கேட்டால், சோகமானது என்றே சொல்லுவேன். ஏனென்றால் படத்தை நான் ஷாமின் இடத்தில் இருந்தே பார்த்தேன்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
படத்தின் ஆரம்பத்தில் வொயின் ஷாப்பில் வரும் காட்சிகள். முன்னர் சொன்னது போல ஷாமின் ஹீரோயசத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. வெள்ளைக்காரர்களுடன் சீட்டுக்கட்டு விளையாடுவதும், பின்னர் அதற்கேற்றாற்போல் கருணாஸை பாடச் சொல்லும் காட்சிகள் பிடித்திருந்தது.

8. அன்பே சிவம்
நீண்ட நாட்கள் வரை இந்தப் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஒரு முறை பிதாமகன் படம் பார்த்தபோது அதில் ஒரு காட்சியில் நாயக நாயகியர் திரையரங்கத்தில் அன்பே சிவம் படத்தின் உச்சகட்ட காட்சியை பார்ப்பது போல காட்டியிருப்பார்கள். அந்த காட்சியை பார்த்ததும் ஒரு அபரிமிதமான ஆவல் ஏற்பட்டு படத்தை டி.வி.டியில் பார்த்தேன். கமல், அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவ்வப்போது மிகப்பெரிய தத்துவங்களைஎல்லாம் சாதாரணமாக உதிர்ப்பார்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நிறைய காட்சிகள் இருக்கின்றன, எதைச் சொல்வது என்று தெரியவில்லை. முக்கியமாக பிளாஷ்பேக்கில் கமல் மற்றும் குழுவினர் அரங்கேற்றும் தெருக்கூத்து, கமலை ஒரு தலையாக காதலிக்கும் உமா ரியாசின் காட்சிகள், யூகி சேது மாதவனை ஏமாற்றும் காட்சி ஆகியவைகளை சொல்லலாம்.

7. கற்றது தமிழ்
இந்தப் படத்தை நான் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், படத்தில்  நாயகனின் பெயர் பிரபாகர். அதிலும் எனக்கு முன்பு படத்தை பார்த்த நண்பர்கள், நாயகனின் சிறு வயது பாத்திரமாக வரும் சிறுவன் என்னைப்போலவே இருப்பதாக கூறியதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ஒரு கூட்டத்துடன் ஆரவாரமாக மதுராந்தகம் அலங்காரில் படம் பார்க்க சென்றோம், ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது எல்லோரிடமும் ஒரு இறுக்கம். படத்தின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் படம் அருமையாக கம்யூனிசம் பேசியிருந்தது.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சந்தேகமே இல்லை. படத்தில் பிரபாகருக்கும் தமிழ் ஆசிரியருக்கும் இடையில் இருக்கும் அந்த பாசம். அவர்களிருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. காட்சிகளை விட "பர பர பட்டாம்பூச்சி..." என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்ததோடு மட்டுமில்லாமல் மிகவும் ஏங்க வைத்தது.

6. வறுமையின் நிறம் சிகப்பு
இந்தப் படத்தில் எனக்கு பிடிக்காத காட்சி என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு பிரேமும் அனாயாசமாக தத்துவங்களை உதிர்த்துவிட்டுச் செல்லும். படத்தில் கமல், தந்தையிடம் தத்துவம் பேசும் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் சரி, உன்னால் முடியும் தம்பி படத்திலும் சரி, கமலுக்கும் அவரது தந்தைக்குமான உறவை ஒரே மாதிரி காட்டியிருப்பார்கள்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சத்தியமா என்னால முடியலைங்க. இதையெல்லாம் எழுத பக்கங்கள் போதாது. கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்து பார்த்ததில் மனதில் தோன்றிய இரண்டு காட்சிகளை குறிப்பிடுகிறேன். கமல், தான் இதற்கு முன் பார்த்த வேலைகளை பற்றி ஸ்ரீதேவியிடம் குறிப்பிடுவார். அந்த ப்ளாஷ்பேக் புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மற்றொரு காட்சியில் கமல், பாரதியார் கவிதை சொல்வதை கேட்டு  சலூனுக்கு வந்த தேங்காய் சீனிவாசன் அலறியடித்து ஓடுவார். அந்தக் காட்சியும் பிடிக்கும்.

5. ரத்தக்கண்ணீர்
பிறரது வாய்மொழியில் கேட்டுக் கேட்டே பிடித்துப் போன திரைப்படம். நீண்ட தேடலுக்குப்பின் படத்தின் டி.வி.டி கிடைத்தது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. எம்.ஆர்.ராதா எக்கச்சக்கமாக நடித்திருப்பார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் கருத்தாழம் மிகுந்ததாக இருக்கும். சில வசனங்களில், அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் வேடிக்கைகளை கொஞ்சம் இடித்து பேசியிருப்பார். அத்தகைய வசனங்கள் புரியவில்லை என்ற போதிலும் ரசிக்க முடிந்தது. படம் சொல்ல வந்த கருத்து தற்போதைய காலகட்டத்திற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் விதவை மறுமணத்தை பற்றி படமெடுத்ததெல்லாம் மிகப்பெரிய புரட்சி.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
கடைசி அரை மணி நேர காட்சிகள். ராதா அவர் மனைவியிடமே சென்று பிச்சை எடுக்கும் காட்சியும், அதன்பிறகு, எஸ்.எஸ்.ஆரிடம் நாத்திகம் பேசும் காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. ஒரு காட்சியில் ரோட்டோரத்தில் கொட்டி வைத்திருக்கும் ஜல்லி கற்கள் தடுக்கி கீழே விழும் ராதா, "ரோடு போட மூணு வருஷமாகுது... ரெண்டு பக்கமும் கல்ல மட்டும் கொட்டி வச்சிருக்கானுங்க..." என்று குறிப்பிடுவார். இப்போதைய காலகட்டத்திற்கு கூட இந்த வசனம் அருமையாக பொருந்தும்.

4. நாயகன்
பொதுவாக மணிரத்னம் படங்கள் என்றால் எனக்கு பிடிக்கும், ஆனால் மணிரத்னத்தை பிடிக்காது. அவரது படங்களில் மிகச்சிறந்த படம் என்று இந்த படத்தை சொல்லலாம். கமல் நடிப்பில், சிறு வயது முதல் பேரன் பெறும் வயது வரை நல்ல மாடுலேஷன் காட்டியிருப்பார். பாடல்களை காட்சியாக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அதிலும் குயிலி போட்ட ஆட்டத்தை எல்லாம் மறக்க முடியுமா.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நிழல்கள் ரவியிடம் "நாயக்கரே... எடுத்துக்கங்க..." என்று கமல் வெத்தலை பெட்டியை நீட்டும் காட்சி, "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல..." என்று தன் மகளிடம் கமல் விளக்கும் காட்சி இந்த இரண்டு காட்சிகளுமே என் ஆள் டைம் பேவரிட்.

3. தேவர் மகன்
சிவாஜி கணேசன் என்னும் மிகப்பெரிய கலைஞனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். கமல் தான் நடிகர் திலகத்தின் கலை வாரிசு என்று இந்த படத்தின் மூலமே கமல் நிரூபித்துவிட்டார். சிவாஜிக்கும் கமலுக்கும் இடையேயான தந்தை மகன் உறவு, கமலுக்கு ரேவதி மீது கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கும் காதல் ஆகியவை படத்தில் சிறப்பாக இருக்கும்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சிவாஜி - கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவற்றில் ஊரின் நிலைமை பற்றி எடுத்துக்கூறி, கமலுக்கு சிவாஜி அட்வைஸ் செய்யும் காட்சி மிகவும் அற்புதம்.

2. புதுப்பேட்டை
லேட்டஸ்டாக வந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விவரித்திருப்பார் செல்வராகவன். தனுஷ் நடித்த படங்களில் அவரது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பளித்த படம் இந்தப் படம் தான். அக்மார்க் அரசியல்வாதியாக அழகம் பெருமாள் நடித்திருப்பார். இறுதிக்காட்சியில் டைட்டில் போட்டபடியே பேக்ரவுண்டில் தனுஷ் பேசும் வசனங்களில் தற்கால அரசியலை இடி இடியென இடித்திருப்பார்கள்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
ரவுடி கூட்டத்தில் இணைந்தபின் அவர்களுடன் அமர்ந்து தனுஷ் மது அருந்தும் காட்சி. "யாருக்கு பிடிக்காது... நாய்க்கு பூனைக்கு கூட தான் அம்மான்னா பிடிக்கும்" என்று ஆரம்பித்து தனுஷ் தனது தாயை பற்றி, போற்றி விவரிக்கும் காட்சி கண்களை கலங்க வைத்தது.

1. ஆளவந்தான்
எவ்வளவோ படங்கள் இருந்தாலும் இந்த படத்தை ஏன் எனக்கு இந்த அளவிற்கு பிடித்ததென்று எனக்கே தெரியவில்லை. படத்தில் இரண்டு கமல் இருந்தாலும், ஏன் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் நந்து கமல் மட்டும் தான். ஆழ் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சில இடங்களில் காட்சிகளாக காட்டியதால் படம் புரியாதது போலத் தோன்றும். "அன்புள்ள டைரிக்கு..." என்று டைரியின் முதல் வரிகளில் எழுதுவது எனக்கு பிடித்திருந்தது. இன்றளவும் ஏன் டைரிக்குறிப்புகளில் நான் அன்புள்ள டைரிக்கு என்றுதான் ஆரம்பிக்கிறேன்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நந்து கமல் அறிமுகமாகும் காட்சி. ரவீனாவை பார்க்காமல் இருப்பதற்காக ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு நந்து பேசுவது பிடித்திருந்தது. அந்தக் காட்சியில் கமல் பேசும் வசனங்களும் கவிதைகளும் அருமை.

பதிவை வேறு யார் வேண்டுமானாலும் தொடருங்கள். ஆனால் நான் விரும்பும் சிலரது பெயர்களை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் தொடர்ந்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.
1. சேட்டைக்காரன் 
2. SUREஷ் பழனியிலிருந்து
3. வால் பையன்
4. சைவகொத்துபரோட்டா
5. அவிய்ங்க ராசா
யார் தொடர்ந்தாலும்  உங்களது பதிவின் இணைப்பை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள். 

என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

9 April 2010

வேலு பிரபாகரனின் காதல் கதை சொன்ன தத்துவங்கள்

வணக்கம் மக்களே...

கடவுள், புரட்சிக்காரன் உட்பட சில பகுத்தறிவு திரைப்படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் "காதல் அரங்கம்" என்ற பெயரில் ஆரம்பித்த கலகம் அது. சிலபல வருடங்கள் கழித்து கழிந்தபிறகு, கருமாறி உருமாறி "வேலு பிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரில் வெளியானது. வெளியான முதல் நாளே உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் ஆஜராகிவிட்டேன், ஆனால் நான் அப்போது மேஜராகிவிட்டேனா என்று தெரியவில்லை.அரங்கம் நிரம்பிய கூட்டம். ஆனால் மொத்தக்கூட்டமும் கதையை நம்பி வராமல் சதையை நம்பியே வந்திருக்கிறது என்று உணர முடிந்தது. வழக்கமாக ஷகிலா படங்களில் கூட ரசிகர்களுக்கு ஏதாவது மெசேஜ் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட மெசேஜ் நிறைய இருக்கிறது. "பெண்களை நம் சமூகம் காமக்கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" என்ற கருத்தையும் சில உபகருத்துக்களையும் வலியுறுத்தியதோடு நில்லாமல் மூன்று பிட்டுக்கதைகளையும் படத்தில் சொருகியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

வே.பி இந்தப் படத்தை இரண்டு நோக்கத்தில் எடுத்திருக்கலாம். முதலாவது, வெறுமனே கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு டாக்குமெண்டரி எடுத்தால் ரீச் ஆகாது. சில ஜல்சா காட்சிகளை இணைத்தால் சொல்ல வந்த கருத்துக்கள் நிறைய பேரை சென்றடையும் என்று நினைத்திருக்கலாம். அல்லது, வெறுமனே ஆபாசக் காட்சிகளை வைத்து படமெடுத்தால் விமர்சனங்கள் எழும், சென்சாரில் சுக்குநூறாக்கி விடுவார்கள் அதனால் நடுநடுவே கருத்து என்ற பெயரில் எதையாவது பிதற்றிவிட்டுச் சென்றால் தேவலை என்று நினைத்திருக்கலாம். முதலாவது உண்மையாக இருந்திருந்தால் வே.பியை பாராட்டலாம். இல்லையெனில் ஷங்கர், மணிரத்னம் வகையறாக்களில் சேர்த்துவிட வேண்டியதுதான். வே.பி எதை மெயின் டிஷ்ஷாக வைத்து எதை ஊறுகாயாக்கினார் என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்து நான் வடிகட்டி எடுத்த சில தத்துவங்கள்:-

விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் என்று கதை ஆரம்பிக்கிறது. மூன்று பிட்டுக்கதைகள் என்று சொன்னேன் அல்லவா. முதலாவதாக காதல் போதையில் தவறான பாதையில் செல்லும் ஒரு ஜோடி. பண்ணையார் மகன் - தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் இருவரும் காதலிக்கிறார்கள். பையன் பொண்ணை பார்க்கும் போதெல்லாம் ஹஸ்கி வாய்ஸில் காதல் வசனம் பேசி கவிழ்க்கிறான். பெண்ணோ, பையன் கை வைக்கும் போதெல்லாம் கண்களை மூடி போதையில் திளைத்துவிட்டு டைரக்டர் கட் சொன்னதும் "ச்சீ... போடா..." என்று சிலுப்பிக்கொண்டு ஓடுகிறார். கடைசியில் காதலர்கள் பலியாகவே செய்கிறார்கள். அவர்களும் இந்த சமூகமும் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பது காதல் அல்ல, அதன் அடிப்படையே காமம் தான் என்று இயக்குனர் இறுதியில் விளக்கம் கொடுக்கிறார்.

இரண்டாவது, வேலைக்காரியிடம் வேலையைக் காட்டும் வாத்தியார். இவர் கணக்கு வாத்தியார் அல்ல, கணக்கு பண்ணும் வாத்தியார். ஏற்கனவே காதலனால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட அந்த வேலைக்காரியை பலவந்தப்படுத்தி, பின்னர் ஆசைக்காட்டி வேட்டையாடுகிறார். வேலைக்காரி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவே விரசம். தமிழ் சினிமாக்களிலும் ஜோக்குகளிலும் வேலைக்காரியை இப்படித்தானே காட்டுகிறார்கள். கடைசியில் தன் அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறிவிட்டு வேலைகாரி தங்கத்திடம் இருந்து விடைபெறுகிறார் வாத்தியார். இந்தக் காட்சி முடிந்ததும் தங்கம், சாமி சிலை என்று கூறப்படும் கல்லில் கட்டியிருக்கும் தாலி என்று கூறப்படும்  மஞ்சள் கையிற்றை அறுத்தெறிகிறார், கூடவே தாலி சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளையும். அதன்பின்னரும் தங்கம் அந்த கல்லின் மீது மண்ணள்ளி தூற்றுவது, சிலையை சிதைப்பது என்று புரட்சிகள்.

மூன்றாவது, பண்ணையாரும் பண்ணையாள் மனைவிக்கும் நடக்கும் (கள்ளக்)காதல். பண்ணையாள் மனைவியாக பாபிலோனா. பாபிலோனா ஏற்கனவே இதுபோன்ற படங்களில் நடித்து பழக்கப்பட்டவர் என்பதால் நல்ல பெர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த பிட்டு சொல்லும் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது இதை வார்த்தைகளால் விவரிக்காமல் அந்தப்படத்தில் வரும் காட்சியாக விவரிக்கிறேன். பண்ணை வீட்டில் பண்ணையாரும் பாபியும் கூடுகின்றனர். கூடி முடித்து களைப்பாக படுத்திருக்கும்போது வரும் வசனம்:-
பாபி: ஏன்யா...? இதுதான் கள்ளக்காதலா...?
பண்ணை: காதல்ல ஏது டீ நல்லக்காதல்... கள்ளக்காதல்... எல்லாமே காமம் தான்...

இவைதான் வேலு பிரபாகரனின் காதல் கதை சொல்லும் முத்தான மூன்று தத்துவங்கள். அதுசரி படத்திற்கு ஏன் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று பெயர் வைத்தார்கள். படத்தின் பிற்பாதியில் வே.பி அவரது சொந்தக்கதையை புலம்பித் தள்ளியிருக்கிறார். முக்கியமாக "சில்க்" சுமிதாவுடனான அவரது உறவைப் பற்றி தைரியமாக சொல்லியிருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும்.

இது தவிர்த்து படத்தில் ஆங்கங்கே வே.பி தோன்றி பிரச்சார வசனம் பேசியிருக்கிறார். இவற்றில் முக்கியமான ஒரு காட்சி, பெரியார் வேடமிட்டு வே.பி தோன்றும் காட்சி. இவர்கள் சந்தித்தால் பாணியில் பெரியாரும் ஆதி சங்கராச்சாரியும் சந்தித்தால் எப்படி இருக்குமென்று ஒரு சின்ன கற்பனை. பெரியார் சங்கிடம், "கடவுள் தான் இல்லைன்னு சொல்ல மாட்டீங்க... ஆனா ஜாதிகள் இல்லைன்னு சொல்லலாமே அய்யா..." என்று கேட்கிறார். அதற்கு சங்கு, "இது காலங்காலமா நமது பெரியவாளெல்லாம் கடைபிடிச்சு வர்ற ஆச்சார அனுஷ்டானங்கள்... இது பகவன் படச்சது... பாவாத்மாக்களுக்கு புரியாது... உணர்த்தவும் முடியாது..." என்று பிதற்றுகிறார்.

இப்படியெல்லாம் வே.பியின் காதல் கதை சொன்ன தத்துவங்களை விட ஒரே ஒரு பிரேமில் ஹைக்கூ கவிதை போல ஒரு மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்தியது. அந்த தத்துவம்: -


கடந்த படங்களில் கடவுள் இல்லை என்று உணர்த்திவந்த வே.பி இந்தப் படத்தில் காதலும் இல்லையென்று உணர்த்தியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டிய படம். டி.வி.டி வாங்கியாவது பாருங்கள்.
அனுபவமும் - பகிர்வும்,
NR PRABHAKARAN

Post Comment