25 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 25062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வாரம் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். (காலா இல்லை).

முதலாவது – ஆந்திரா மெஸ் !

நான்கு வருடங்களுக்கு முன்பு (சரியாகச் சொல்வதென்றால் ஐந்து) வரவேண்டிய திரைப்படம். தமிழில் ஆரண்ய காண்டம் வருகைக்குப்பின் நிறைய ஹீஸ்ட் படங்கள் வரத்துவங்கின. அதாவது சின்னச் சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபடுபவர்கள் பெருசா ஒரு முறை அடிச்சிட்டு செட்டில் ஆக முனையும் கதைகள். ஆ.கா.விற்கு பிறகு இந்த எட்டு வருடங்களில் குறைந்தது நூறு படங்களாவது இதேபோன்ற கதையுடன் வெளிவந்திருக்காது ? ஆனால் நாம் அவற்றையெல்லாம் பார்த்து பார்த்து சலித்தபின் சாவகாசமாக வெளிவந்திருக்கிறது ஆந்திரா மெஸ். க்வெர்க்கியான வில்லன் – அதாவது கோமாளி. ஒரு காட்சியில் மிகவும் சீரியஸான செய்தியை அடியாட்கள் வந்து வில்லனிடம் சொல்கிறார்கள். நம்ம ஆள் வித்தியாசமான வில்லன் அல்லவா. அதனால் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் வறுத்த மீனை சப்பி சப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் க்ளோஸப் ஷாட்டில், சப்பும் போது ஸ்லர்ப் ஸ்லர்ப் என்று சத்தம் வேறு. வில்லன்கள் என்றாலே ஏ....ய் என்று உச்சஸ்தாயியில் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த சமயத்தில் இதுபோன்ற காட்சி வந்திருந்தால் ரசித்திருக்கலாம். இப்போது இதையெல்லாம் பார்க்கும்போது எரிச்சலும், அருவருப்பும் வருகின்றன. சரி விடுங்கள், இதுபோன்ற படங்களை ஏற்கனவே போதுமான அளவிற்கு கழுவி ஊற்றிவிட்டமையால் ஆந்திரா மெஸ்ஸில் உள்ள பாஸிடிவ் விஷயங்களை மட்டும் பார்க்கலாம்.

ஒளிப்பதிவு
முகேஷ் என்பவர் (அநேகமாக அறிமுகம்) ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் ஒளியாற்றலை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். டைட்டில் போடத்துவங்கியதிலிருந்தே இவரது ஒளிப்பதிவு திறமைகள் தனியாகத் தெரிவதை கவனிக்கலாம். படத்துவக்கத்தில் ஒரு மொக்கையான நகைச்சுவை காட்சி. அதிலே கூட ஒளிப்பதிவாளர் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. உச்சகட்டமாக சித்தம் பாடலைச் சொல்லலாம். 

படத்தில் ஒரு காட்சி
கலை
இங்கே கலை என்று குறிப்பிட்டிருப்பது முதலில் அரங்கு வடிவமைப்பு, இடத்தேர்வு போன்றவற்றை. கதை நடக்குமிடம் புரவிப்பாளையம் ஜமீன்தாரின் இல்லம் என்பதால் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஒருமுறை ஏற்காடு சென்றிருந்தபோது இண்டேகோவின் விடுதியில் தங்கியிருந்தோம். அங்கே அல்லது அதன் கிளை விடுதிகளில் ஒன்றில்தான் இதனை படமாக்கியிருக்க வேண்டும். பொதுவாகவே படம் முழுக்க ரசனை சார்ந்த விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன. ஓவியங்கள், அலங்காரங்கள், வசனம், இசை, நடன அசைவுகள். புரவிப்பாளையம் ஜமீனாக நடித்திருக்கும் அமரேந்திரன் கூட ரசனையாக வாழ்வது குறித்து அவ்வப்போது வசனம் பேசுகிறார். (வசனம் – மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார்). மறுபடியும் சித்தம் பாடல் எவ்வளவு ரசனையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டுகிறேன்.


திட்டமிடல் ஏதுமில்லாமல் ஆந்திரா மெஸ்ஸை எஸ்கேப்பில் முதல்நாள் முதல்காட்சி பார்த்தேன். மொத்த படக்குழுவும் எனக்குப் பின்னால் அமர்ந்துதான் படம் பார்த்தது. ஹீரோ வேறு கல்யாண வீட்டில் மணப்பெண்ணின் சகோதரர் போல குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்தார். அனைவரும் புதுமுகங்கள் என்பதால் கொஞ்சம் கூகுள் செய்து பார்த்ததில் இரண்டு ஆச்சர்யமான மனிதர்களைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

1. ஏ.பி.ஸ்ரீதர்
படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ இவர்தான். நிஜத்தில் பிரபல ஓவியர் மற்றும் சிலிக்கான் சிற்பக்கலைஞர். சில வருடங்களுக்கு முன் சென்னை ஈ.சி.ஆரில் துவங்கப்பட்ட 3D ஆர்ட் மியூஸியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். பார்வையாளர்களுடன் சேரும்போது முற்று பெறக்கூடிய வகை ஓவியங்களைக் கொண்ட அந்த மியூஸியத்தின் நிறுவனர் இவர்தான். 

3D மியூஸியம்
அது மட்டுமல்லாமல், சென்னையில் பழமையான கேமராக்கள் அருங்காட்சியகம் மற்றும் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம் இரண்டையும் இவர் நிறுவி, நடத்தி வருகிறார். அப்துல் கலாம், அன்னை தெரஸா, அமிதாப், மைக்கேல் ஜாக்சன், தோனி, சார்லி சாப்ளின், ஜாக்கி சான், அர்னால்ட் போன்றவர்களின் சிலிக்கான் சிலைகளை இவர் வடிவமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் நெருங்கிய நண்பர்.

கலாம் சிலையுடன் ஏ.பி.ஸ்ரீதர்

Click Art Museum
Vintage Camera Museum
Live Art Museum

2. தேஜஸ்வினி
டபுள் பேரல் கண்னை கையில் தாங்கியபடி கம்பீரமாக அறிமுகமாகிறார் தேஜஸ்வினி. 

தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு இன்டீரியர் டிஸைனர். லிங்குசாமி அலுவலகம், தோட்டாதரணி வீடு (தோட்டாதரணிக்கே !), ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கம் போன்றவை இவரது இன்டீரியர் டிஸைனில் உருவானவை. சினிமாக்காரர்களுக்காக வேலை பார்த்து அவர்களில் யாரேனும் பார்ப்பதற்கு ச்சும்மா ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க, நடிக்கலாமே என்று உசுப்பேத்தி விட்டிருக்கக்கூடும். இவர் ஒரு பகுதி நேர ஓவியரும், விலங்கு ஆர்வலரும் கூட. முக்கியக் குறிப்பு இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதுதான்.

படம் முடிந்தபிறகு ஸ்ரீதரை சந்தித்து சில வார்த்தைகள் பேசினேன். வழக்கம் போல ஹீரோயின் அம்மையாரைச் சுற்றி ஒரு ராணுவப்படை போல படக்குழுவினர் பாதுகாத்து வந்ததால் அவருடன் பேச முடியவில்லை. 

இரண்டாவது படம் – டிக் டிக் டிக் !

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என்கிறார்கள். அதற்கு ஒரு சாரார் எம்.ஜி.ஆர் நடித்த கலையரசி (1963) தான் முதல் ஸ்பேஸ் படம் என்றும், இன்னொரு சாரார் கலையரசி ஏலியன் படம்தான் ஸ்பேஸ் படமல்ல என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ‘இந்தியாவின்’, ‘முதல்’, ‘ஸ்பேஸ்’ என்பதை எல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்துவிடுவோம். முதலில் இது படமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. திரையரங்கிற்கு வருபவர்கள் அனைவரும் முட்டாள்கள் அல்லது இந்த ரசிகர்களுக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கும் ஒருவரால் மட்டும்தான் இவ்வளவு கேவலமாக படம் எடுக்க முடியும்.

ஏற்கனவே படத்தின் டிரைலரில் சில சமிஞ்சைகளை கொடுத்திருந்தார்கள். அதன்படி இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று ஒரு யூகம் வைத்திருந்தேன். ஆனால் என் யூகத்தை பொய்யாக்கி அதைவிடவும் மோசமாக அமைந்திருக்கிறது டிக் டிக் டிக். முதலில், சினிமாக்காரர்கள் சில தொழில்களைப் பற்றி (குறிப்பாக தொழ்ல்நுட்பம் சார்ந்த) ஸ்டடி செய்ய வேண்டும். 

எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்பவர் தந்திரமாக நம் கண்களுக்கு தெரியாமல் சில வித்தைகளைச் செய்பவர். உதாரணத்திற்கு, எஸ்கேப் ஆர்டிஸ்டின் கையில் விலங்கு போடப்பட்டிருந்தால் அவரது கையில் அல்லது வேறெங்கோ மறைத்து வைத்திருக்கும் குண்டூசி அளவிலான சாதனத்தைக் கொண்டு பார்வையாளர்களுக்கு தெரியாமல் விலங்கை அவிழ்ப்பார். மாறாக நம் சினிமாக்களில் (டிக் டிக் டிக் மற்றும் மெர்சல்) சட்டென ஒரு நொடியில் ஹீரோ கையிலிருக்கும் விலங்கு வில்லன் கைக்கு மாறுவதெல்லாம் எஸ்கேப் ஆர்ட்டில் சேராது. அதற்கு பெயர் ஓழ். பத்தடி தூரத்தில் ஹீரோவுக்கு தொடர்பில்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் மகனின் பாக்கெட்டில் ஹீரோ பொருளை வைக்கிறார். கேட்டால் எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்கிறார்கள்.

அடுத்து ஹேக்கர்கள். ஏற்கனவே ஏராளமான படங்களில் ஹேக்கர்கள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர்களைப் போதுமான அளவு வைத்து செய்திருக்கிறார்கள். இதிலே உச்சகட்டம். ஒரு காட்சியில் டிவியில் இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரன் அவுட் அப்பீல் மூன்றாம் நடுவருக்குப் போய் பேட்ஸ்மேன் செளகர்யமாக ரீச் ஆகியிருக்கிறார். உடனே நம் ஹேக்கர் கையில் ஒரு சின்ன உட்டாலக்கடி சாதனத்தை வைத்துக்கொண்டு மூன்றாம் நடுவரின் சிக்னலை ஹேக் செய்து ‘அவுட்’ காட்டுகிறார். சரி தொலையட்டும் என்று விட்டால் அதே உட்டாலக்கடி சாதனத்தை வைத்து சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் சிக்னலையே ஹேக் செய்கிறார்கள். கொடுமை !

இவை தவிர்த்து நிலாவில் கேஷுவலாகப் போய் லேண்ட் ஆவது (இடைவேளை டுவிஸ்டாம்), அப்புறம் ஸ்கூட்டி ஓட்டும் பேரிளம் பெண் போல அங்கிருந்து டேக் ஆஃப் ஆவது, சீன ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து மிஸைலை திருடுவது, விண்வெளி ஓடத்தில் ஃபைட் சீன், வில்லன்கள், மகனைக் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவது, சென்டிமென்ட், தேசப்பற்று என்று அப்பப்பா. அதிலே பாருங்கள். வில்லன் ஹீரோவின் மகனை கடத்தி வைத்துக்கொண்டு மிஸைலை அவரிடம் ஒப்படைக்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். தர்க்கப்படி மிஸைலை வில்லனிடம் ஒப்படைக்காவிட்டால் மகன் மரணமடைவான். ஒப்படைத்தால் மகனுடன் சேர்த்து நான்கு கோடி மக்கள் மரணம் அடைவார்கள். நம்ம கேனை மச்சான் ஜெயம் ரவி என்னவென்றால் மகனைக் காப்பாற்ற வேண்டுமென வில்லனுக்கு சாதகமாக செயல்படுகிறார். 

சில பேர் இன்டர்ஸ்டெல்லார், கிராவிட்டியுடன் ஒப்பிடக்கூடாது என்கிறார்கள். ஆல்ரைட் ஒப்பிடவே இல்லை. அப்படி ஒப்பிட்டால் கூட இந்திய தரத்துக்கு, பட்ஜெட்டுக்கு, மார்க்கெட்டுக்கு கிராபிக்ஸ் அபாரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் கதை, திரைக்கதையில் எல்லாம் பார்வையாளர்களை உட்கார வைத்து மொட்டை போட்டிருக்கிறார்கள். 

ஷக்தி செளந்தர்ராஜன் என்கிற ஆசாமி ஒவ்வொரு ஃபர்னிச்சராக போட்டு உடைத்துவிட்டு, தான் மட்டும் அந்த பாதிப்பிலிருந்து லாவகமாக தப்பித்துக் கொள்கிறார். முதல் ஸ்பேஸ் படம் என்று எப்படியோ பார்வையாளர்களை ஏமாற்றி திரையரங்கிற்கு வர வைத்தாகிவிட்டது. அதனால் இப்படம் வசூலில் பாதிப்பிருக்காது. ஆனால் தமிழில் அடுத்த பத்து வருடத்துக்கு யாரும் ஸ்பேஸ் படத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியாதபடி அந்த உடைமையை நாசம் செய்தாயிற்று. அடுத்து நம்ம ஆள், ஃபர்ஸ்ட் வேம்பயர் மூவி, ஃபர்ஸ்ட் மான்ஸ்டர் மூவி என்று ஏதாவது ஃஃபர்னிச்சரை உடைக்கக் கிளம்புவார்.

டிக் டிக் டிக் பார்த்தபிறகு எனக்கு ஆந்திரா மெஸ் அபாரமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 18062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ப்ளட் சட்னி ! ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. நான் எப்போதும் இரண்டாவது வகையே. ஒரு விஷயம் வைரலாகி, அதனை அக்கக்காக பிரித்து மீம்ஸ் போட்டபிறகு அந்த மீம்களில் இருந்து ஒரிஜினல் செய்தியை அறிந்துகொள்வதே வாடிக்கையாகிவிட்டது. அப்படி நடிகர் கார்த்திக் குமாரின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை அறிந்து, அது அமேஸான் ப்ரைமில் இருந்ததால் பார்க்கலானேன். நிகழ்ச்சியின் பெயர் – ப்ளட் சட்னி!

ஸ்டாண்ட் அப் காமெடி. என்னைப் பொறுத்தவரையில் ஸ்டாண்ட் அப் காமெடி என்றால் மதுரை முத்து, ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா. அவ்வளவுதான். ஒரேயொரு முறை பாபா சி.ஜே என்பவருடைய நகைச்சுவையை சில நிமிடங்கள் கேட்டிருக்கிறேன். அந்த வகையில் கார்த்திக் குமாரின் நிகழ்ச்சி எனக்கு நிறைய ஆச்சர்யங்களைக் கொடுத்தன. முதலில், ஒரு மனிதர் ப்ரேக் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் ஏறக்குறைய ஒன்றேகால் மணிநேரம் (நகைச்சுவையாக) பேசிக்கொண்டே இருப்பது ஒரு ஆச்சர்யம். அவற்றை எவ்வித தடையுமின்றி கவனிக்கும் பார்வையாளர்கள் இன்னொரு ஆச்சர்யம். அட்டென்ஷன் ஸ்பான் என்று ஒன்று இருக்கிறது. அட்டென்ஷன் ஸ்பான் மனிதர்களின் வயது, திறன் பொறுத்து எட்டு நொடிகளிலிருந்து இருபது நிமிடங்கள் வரை அமைகிறது. அத்தனை நேரம் வரை மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்த முடியும். அதனால்தான் நம் பள்ளிக்கூட வகுப்பறைகளில் (நல்ல) ஆசிரியர்கள் பாடத்துக்கு இடையே நம்மை ஆசுவாசப்படுத்தும் வகையில் பாடத்துக்கு அப்பாற்பட்ட டாபிக்குகளை பேசுவார்கள். கார்த்திக் குமாரின் ஷோவை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு பத்து நொடிகள் இடைவெளி கூட விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். திரைப்படங்களில் விடுவது போல இடைவேளை கூட இல்லை. (ஒருவேளை ப்ரைமில் இடைவேளை காட்டப்படவில்லையா ?) இடைவேளை இல்லையென்றால் சபாக்காரர்கள் எப்படி காண்டீனில் லாபம் பார்ப்பார்கள்.

சபா என்றதும் நினைவுக்கு வருகிறது. இவ்வகை சபாக்களில் கர்னாடக சங்கீத / பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். எஸ்.வி.சேகர், கிரேசி மோகன் நாடகங்கள் நடைபெறும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் பார்ப்பனர்கள் மட்டும்தான் வருகிறார்கள் (விதிவிலக்குகள் இருக்கலாம்). அதே போல இந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே. எஞ்சியிருப்பவர்கள் கார்ப்பரேட் கலாசாரத்தில் ஊறிப்போன நவபார்ப்பனர்கள். நிகழ்ச்சியின் இடையே ‘எனி தம்ப்ராம் ஹியர் ?’ என்று கார்த்திக் கேட்க, கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தம்ப்ராம் என்றால் எதோ சென்னையின் புறநகர் பகுதி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தமிழ் + பிராமின்ஸ் என்பதன் சுருக்கம்தான் தம்ப்ராமாம் !

கார்த்திக் தன் நிகழ்ச்சியின் ஊடே நடிகர் ராமராஜனைப் பற்றி ஒரு விஷயம் (ஜோக்) சொல்கிறார். அதாவது ராமராஜனிடம் ஒரு பசு உள்ளது என்று சொல்லிவிட்டு நான் அவரது மனைவி நளினியைச் சொல்லவில்லை என்று சிரிக்கிறார். இது மாதிரி ஷோவின் இடையிடையே நிறைய இரட்டை அர்த்த நகைச்சுவைகள். மனதைத் தொட்டு சொல்வதென்றால் நாம் நமது நண்பர்கள் மத்தியில் தனிப்பேச்சில் இதுபோன்ற அல்லது இதைவிட கேவலமான இரட்டை / நேரடி அர்த்த நகைச்சுவைகளை பேசியிருப்போம். ஆனால் ஒரு பிரபலம், அதுவும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர், ஒரு பொது மேடையில் இப்படியெல்லாம் பேசுவது பொலிடிக்கல்லி தவறு ! இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஜோக் தானேப்பா ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதைக் கூட இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதா என்று தோன்றவும் செய்கிறது. 

இந்த ஷோவின் பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று சூப்பர் ஸ்டார் பற்றியது. சிம்புவை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். எதை வைத்து என்று தெரியவில்லை. ஒருவேளை நயன்தாரா இருவருடனும் நடித்திருப்பதால் அவருக்கு இருவருடைய சைஸும் தெரிந்திருக்கும் என்கிறார். அப்புறம் சன்னி லியோனியைப் பற்றி ஒரு பத்து நிமிட பேச்சு. குறிப்பாக சன்னி பார்ன் படங்களில் முழு உடலைக் காட்டிவிட்ட பிறகும் கூட அவர் உடைகளுடன் நடிக்கும் பாலிவுட் படங்களைப் பார்க்க மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள், முழுக்கப் போர்த்திக்கொண்டு சன்னி ஏதேனும் திறப்பு விழாவுக்கு (மாலை திறக்க வர்றாடா, மாரை திறக்க வரலை) வந்தால்கூட ஏன் கூட்டம் கூடுகிறது என்பது குறித்த கார்த்திக்கின் சந்தேகங்கள். ஒரு கதை உண்டு. ஒருமுறை பிரசித்தி பெற்ற ஒரு நிர்வாண நடிகை துணிக்கடைக்கு சென்றாராம். உடைகளை தேர்ந்தெடுத்த பிறகு டிரையல் ரூம் எங்கே என்று பணியாளரிடம் கேட்டாராம். அதற்கு பணியாளர் உங்களுக்கு எதற்கு டிரையல் ரூம் என்றாராம். அந்த பணியாளரின் மனநிலையும் கார்த்திக்கின் மனநிலையும் ஒன்றே !

அடுத்து பார்ப்பனர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் வெறுத்துபோன கலைஞரின் மரணத்திற்கு வருகிறார். குறிப்பாக, ஸ்டாலின் பாவம், கலைஞர் மரணமடையாததால் காத்துக்கொண்டே இருக்கிறார் என்பவர்களைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் வீட்டில் தப்பித்தவறி வயதானவர்கள் யாரேனும் இருந்திருந்தால் இவர்களுடைய எண்ணமெல்லாம் எப்படி இருந்திருக்கும். சொல்ல முடியாது இவர்களே மூச்சு முட்டவைத்து கொன்றாலும் கொன்றிருப்பார்கள். 

அப்புறம் சுச்சி லீக்ஸ் சம்பவம் குறித்து, அவரது திருமண வாழ்க்கை, சினிமா வாய்ப்புகள் குறித்து என்று நிறைய சுய பகடிகள். முறுக்கிக்கொள்ளாமல் இலகுவாக எடுத்துக்கொண்டால் கார்த்திக்கின் ப்ளட் சட்னியை ருசிக்கலாம். இந்த ஷோவை நேரில் பார்ப்பதற்கு டிக்கட் விலை ரூ.500 என்று நினைக்கிறேன். அமேஸான் ப்ரைமுடன் கிடைக்கிறது.

**********

கார்த்திக்கின் ஷோ பார்த்தபிறகு இன்னும் இரண்டு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை ப்ரைமில் கண்டேன். ஒன்று, எஸ்.ஏ. என்பவரின் மதராஸிடா. இன்னொன்று அஷ்வின் ராவ் குழுவின், புட் சட்னி.

எஸ்.ஏ.வின் மதராஸிடா மறுபடியும் டிபிக்கல் பார்ப்பனர்களுக்கான ஷோ. இதன் போஸ்டரில் எஸ்.ஏ. கையில் ஃபில்டர் காபியுடன் போஸ் கொடுக்கிறார். எஸ்.ஏ. கார்த்திக்கைப் போல சினிமா பிரபலம் கிடையாது என்பதாலும் அவரது ஷோவின் பெயர் மதராஸிடா என்பதாலும் அவரது நகைச்சுவைகள் முழுக்க தமிழ் பார்ப்பன வாழ்வியல் முறைகளைப் பற்றியே உள்ளன. பார்ப்பன நகைச்சுவை என்பது என்னவென்றால் –

1. GRE / TOEFL உள்ளிட்ட தேர்வுகள் பற்றி
2. அமெரிக்கா போவது பற்றி
3. எப்போதும் அட்வைஸ் செய்யும் அத்திம்பேர் பற்றி
4. ஹிந்து பேப்பர் படிப்பது பற்றி
5. NRIகள் பற்றி
6. பார்ப்பன சடங்குகள் பற்றி

பெரும்பாலும் இந்த பார்ப்பன நகைச்சுவைகள் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் புரிந்து தொலையாது. 


புட் சட்னி ஷோ, மற்ற இரண்டைப் போல சோலோ ஷோ கிடையாது. மூன்று பேர் தலா இருபத்தைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் பெர்ஃபார்ம் செய்கிறார்கள். முதலில் வந்த அஸ்வின் ராவ் தொடங்கும்போதே தானொரு மிடில்கிளாஸ் பார்ப்பனர் என்று ஜாதி சான்றிதழைக் காட்டிவிட்டுத்தான் நிகழ்ச்சியை துவங்கவே செய்கிறார். அடுத்து வந்த பாலகுமாரனைப் பார்த்ததும் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. அதனால் தானோ என்னவோ இவருடைய ஜோக்குக்கு யாரும் அவ்வளவாக சிரிக்கவில்லை. இவர்களுடைய வாழ்வியல் முறையும் ஒரு காரணம். உதாரணமாக, பாலகுமாரன் தன் ஷோவில் எத்தனை பேர் ஸ்டேட் போர்ட் ? எத்தனை பேர் சி.பி.எஸ்.ஈ என்று கேட்கிறார். பின்னர் சி.பி.எஸ்.ஈ படித்தவர்களை நான் வெறுக்கிறேன் என்கிறார். அரங்கில் அமைதி. எஸ்.ஏ.வின் மதராஸி ஷோவில் இதே விஷயம் உல்டாவாக அதாவது ஸ்டேட் போர்ட் படித்தவர்களை நக்கலடிக்கிறார்கள். அதற்கு அரங்கம் ஹோவென கூச்சல் எழுப்புகிறது.

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுவாக கவனித்த இன்னொரு விஷயம் நிகழ்ச்சியின் இடையிடையே கெட்டவார்த்தை பேசுவது. பாவம், கெட்டவார்த்தை பேசுவதே ஒரு ஜோக் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


**********

ரம்ஜானை முன்னிட்டு பதிவுலக நண்பர் சிராஜுதீன், என்னையும் பதிவுலக நண்பர்கள் சிலரையும் பிரியாணி விருந்துக்கு அழைத்திருந்தார். சென்னையைப் பொறுத்தவரையில் சாலையில் இறங்கி, பத்தடிக்கு மிகாமல் நடந்து, நூறு ரூபாய் கொடுத்தால் பிரியாணி கிடைத்துவிடும். அவ்வளவு சிம்பிள் ! அப்படியிருக்க வட சென்னையிலிருந்து தென் சென்னை வரை பயணித்து இந்நிகழ்வில் கலந்துகொண்டோம் என்றால் அது பிரியாணிக்காக மட்டுமில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ரீ-யூனியன் மாதிரி இந்நிகழ்வு நடந்தது. கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஆரூர் மூனா செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், அஞ்சாசிங்கம் செல்வின், விக்கியுலகம் வெங்கட் (வியட்நாம்), உணவு உலகம் சங்கரலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரியாணி விருந்து என்றால் பிரியாணி மட்டுமல்ல என்று இம்முறை தெரிந்துகொண்டேன். முதலில், லைம் மிண்ட் ஜூஸ். அப்புறம் தம்ரூட் கேக் (கொஞ்சமாக சாப்பிடுங்கள் வயிற்றை அடைக்கும்), அதன்பின் வாழை இலையில் மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், மட்டன் கோலா உருண்டை, இறால் தொக்கு, அவித்த முட்டை என்று ஒரு படத்தில் விவேக் சொல்வது போல பறக்குறது, நீந்துறது, ஓடுறது, ஓடுறது போடுறது என்று எல்லாம் இலையில் வந்துவிட்டன. இவை போக மாதுளை போட்ட தயிர் வெங்காயம், பிரியாணியுடன் சேர்த்துக்கொள்ள தால்ச்சா, பிரியாணிக்கு பிறகு சாப்பிட பீரனி என்னும் பாயசம். சாப்பிட்டு முடித்தபின் அகரகர், ஆப்பிள் துண்டுகள், மங்குஸ்தான், மலை வாழைப்பழம் மற்றும் இன்னொரு சுற்று லைம் மிண்ட் ஜூஸ் என்று அசத்திவிட்டனர் சிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர். இனி ஒவ்வொரு ரம்ஜானுக்கும் பிரியாணி கேட்டு சிக் ஜோக்ஸ் அடிக்க வேண்டியதில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 11062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சரவணன் சந்திரன், லஷ்மி சரவணக்குமார் மற்றும் இவ்வருட பு.கா.வின் சூப்பர் ஸ்டார் தமிழ்ப் பிரபா என்று படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய பட்டியலில் இருக்கின்றன. இருப்பினும் கிண்டிலில் அவ்வப்போது இலவசமாகக் கிடைக்கும் சில நூல்களை படிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

முக்கியமாக இவ்வகை நூல்கள் மீதுள்ள ஈர்ப்புக்கு காரணம் இவற்றை எழுதுபவர்கள் செய்யும் பரிட்சார்த்த முயற்சிகளே. உதாரணமாக சமீபத்தில் படித்த மாயுத்ரி (கிண்டில் வடிவ நாவல்). மாயுத்ரி என்பது பண்டைய லெமூரிய பேரரசு. வரலாற்று கற்பனை நாவல் ! ஆசிரியரைப் பற்றிய குறிப்பு அதனினும் சுவாரஸ்யம். பெயர் ஆதித்யா, வயது 16. ஆசிரியரின் முதல் நாவல். குறுகிய கால சலுகையாக விலையில்லாமல் கிடைத்ததால் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

கதைப்படி தமிழகத்தை களப்பிரர்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் தமிழகத்திற்கு தெற்கே லெமூரியாவில் மாயுத்ரியின் அரசு. அறிவும் ஆற்றலும் கொண்ட படைத்தளபதி ஆருத்ரா கதையின் நாயகன். மாயுத்ரியின் எல்லையில் ரோகில்லர்கள் என்கிற கொள்ளையர்கள் கூட்டம். ஒரு கட்டத்தில் ரோகில்லர்கள், களப்பிரர்களுடன் சேர்ந்து மாயுத்ரி மீது போர் தொடுக்க முடிவெடுக்கின்றனர். அதனை படைத்தளபதி ஆருத்ரா எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே கதை. அக்காலகட்டத்திலேயே மாயுத்ரி அரசு பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் சாதனங்களை வைத்திருந்தன என்கிற ரீதியில் கதை போகிறது. இடையிடையே படைத்தளபதி ஆருத்ரா - காதலி புகழினி ரொமான்ஸ் காட்சிகள்.

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் மற்றும் அவ்வப்போது ஞாபக மறதியில் எழுதிய கொச்சைத் தமிழ் (செவிள்லயே ஒன்னு விட்டார்) தவிர்த்து பாதகமில்லா லைட் ரீடிங் குறுநாவல். அறுபது நிமிட வாசிப்பில் முடித்துவிடலாம். என்னுடைய கணிப்பு சரியென்றால் இந்நாவல் பாகுபலி திரைப்படம், விகடனின் சந்திரஹாசம் மற்றும் அமிஷ் திருபாதியின் ஷிவா முத்தொகுதி நூல்களின் பாதிப்பில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் என்று சொல்லப்படும் தம்பி ஆதித்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். மாயுத்ரியை நிஜமாகவே இவர்தான் எழுதியிருப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை. பதினாறு வயது சிறுவன் சரித்திர நாவல் எழுதக்கூடாது / முடியாது என்றில்லை. ஆனால் ஒருவன் நூறு பக்க நாவல் எழுதுகிறான் என்றால் அவன் அதற்குமுன் ஆயிரம் பக்க குப்பைகளையாவது எழுதியிருக்க வேண்டும். சாதித்து விட்டோம் என்கிற கர்வம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். பள்ளியில் / லோக்கல் இலக்கிய மன்றத்தில் ஏதாவது பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். ஆதித்யாவின் பக்கத்தில் இருப்பவை எல்லாம் சில்லறை / ஆர்வக்கோளாறு பதிவுகள் மட்டும்தான். ஒருவேளை என் சந்தேகத்தை மீறி நிஜமாகவே ஆதித்யா இந்நாவலை எழுதியிருந்தால் அது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

மாயுத்ரி தற்போது சலுகைக்காலம் முடிந்து நூறு ரூபாய் விலையில் அமேஸானில் (கிண்டில் வடிவம்) கிடைக்கிறது.

**********

சமீபத்தில் படித்த இன்னொரு இலவச கிண்டில் நூல் – யாரோ (ஆசிரியரின் பெயரே அதுதான்) எழுதிய சரித்திரம் பேசுகிறது (முதல் பாகம்). ஆசிரியரின் பெயரைத் தவிர்த்து இது முந்தைய நூலைப் போல பின்னணியில்லா தனி மனிதனின் படைப்பல்ல. குவிகம் என்றொரு சிற்றிதழ் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் சார்பாக அவ்வப்போது இலக்கியக் கூட்டங்கள் கூட நடைபெறுகின்றன. அவ்விதழில் எழுதப்பட்ட சரித்திரம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அச்சுப்பிரதி கண்டிருக்கிறது என நினைக்கிறேன். இப்புத்தகத்தில் புதிய சில தகவல்களும், ஆச்சர்யங்களும் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு, ராமாயணத்தின் வெவ்வேறு வடிவங்கள் பற்றிய ஒரு கட்டுரை. ராமாயணத்தின் ஆதிவடிவத்தை வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதினார். அதன்பிறகு துளசிதாசர் எழுதியது, தமிழில் கம்பர் எழுதியது உட்பட ஏறக்குறைய முன்னூறு விதமான ராமாயணங்கள் உள்ளன என்கிறார். அவற்றுள் சிலவற்றில் சீதைக்கு ராமன் சித்தப்பாதானாம். பெளத்த ராமாயணத்தில் புத்தரின் முன்பிறவி அவதாரம் ராமன். சீக்கிய வடிவத்தில் ராமன் ஒரு புரட்சியாளர், கடவுளெல்லாம் இல்லை. சமண வடிவத்தில் ராமனுக்கு நான்கு மனைவிகள். மலேசிய வடிவத்தில் ராமனை விட லக்ஷ்மணனுக்கு முக்கியத்துவம் உள்ளது. தாய்லாந்து வடிவத்தில் சீதை ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த மகள் என்று நீள்கிறது அந்த கட்டுரை. பிற்சேர்க்கையாக இக்கட்டுரையில் காலாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு கட்டுரை புத்தர் காலத்தில் வாழ்ந்த ஆம்ராபலி என்ற பெண்ணைப் பற்றியது. கி.மு. 500 சமயத்தில் வைசாலி நாட்டில் (தற்போதைய பிஹார்) வாழ்ந்த பேரழகி ஆம்ராபலி. அவரை மணந்துகொள்ள பல செல்வந்தர்களும் இளவரசர்களும் போட்டி போட்டார்கள். பழங்கால இந்தியாவில் நகர்வது (நகரத்தின் மணப்பெண்) என்கிற முறை இருந்தது. அதன்படி நாட்டின் அழகான பெண் அனைவருக்கும் பொது. புரியும்படி சொல்வதென்றால் செல்வந்தர்கள், மன்னர்கள், இளவரசர்கள் மற்றும் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் (காரணம் நகர்வதுகளின் ஒருநாள் விலை அதிகம்) என யார் வேண்டுமானாலும் அவரோடு உறவு கொள்ளலாம். ஆம்ராபலியை அடைய முயன்று முடியாமல் போன வைசாலியின் மன்னன் மனுதேவ் அவரை நகர்வதுவாக அறிவித்தார். 

பின்னாளில் ஆம்ராபலியின் அழகைப் பற்றி மகத நாட்டு மன்னர் பிம்பிசாரர் கேள்விப்பட்டு, ஆம்ராபலிக்கு பிம்பிசாரர் மூலமாக ஒரு மகன் பிறக்கிறான். அதே பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு (வேறொரு மகாராணிக்கு பிறந்தவர்) ஆம்ராபலியின் மீது கொண்ட காதலினால் வைசாலியின் மீது போர் தொடுத்து, அந்நகரத்தையே எரித்து ஆம்ராபலியை விடுவித்தான். ஆனால் ஆம்ராபலியோ அஜாதசத்ருவின் காதல், அவர் பெற்றுத்தந்த விடுதலை இரண்டையும் ஏற்கவில்லை. 

ஒருமுறை ஆம்ராபலி வசித்த ஊருக்கு புத்த துறவி ஒருவர் வந்திருந்தார். ஆம்ராபலி அவரைச் சென்று சந்தித்தார். தன்னுடைய அழகை சற்றும் சட்டை செய்யாத துறவியின் குணம் ஆம்ராபலிக்கு திகைப்பூட்டியது. ஆம்ராபலி அவரை தன் அரண்மனைக்கு விருந்தினராக அழைத்தார். அவரோ என் குருவிடம் அனுமதி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு மாம்பழத்தை கொடுத்து தான் வரும்வரை அதனை கெடாமல் பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறார். நாட்கள் கடக்கின்றன. குருவிடம் அனுமதி பெற்றபிறகு துறவி வருகிறார். ஆம்ராபலியிடம் மாம்பழத்தை கேட்கிறார். அது அழுகியிருந்தது. அதனுள்ளிருந்து மாங்கொட்டையை பிரித்தார். பழம் – உடல். அழியக்கூடியது. கொட்டை – ஆன்மா. ஒரு புதிய மரத்திற்கு வித்தாகக்கூடியது என்பதை விளக்கினார். ஆம்ராபலி பேச்சிழந்தார். தொடர்ந்து அத்துறவி நான்கு மாதங்கள் ஆம்ராபலியின் விருந்தினராக தங்கியதில் ஆம்ராபலி புத்த சமயத்தில் சேர விரும்பினார். அப்போது புத்த சமயத்தில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அது துறவிகளின் தவ வாழ்க்கையில் சலனம் ஏற்படுத்தலாம் என்பதற்காக. ஆனால் ஆம்ராபலியின் மனதிடத்தைக் கண்ட புத்தர் பெண்கள் சமயத்தில் இணைய அனுமதியளித்தார். ஆம்ராபலி புத்தப்பிக்ஷினி ஆனார்.

ஆம்ராபலியாக வைஜெயந்திமாலா
ஹிந்தி சினிமாவில் ஆம்ராபலி 1966ம் ஆண்டு வைஜேந்தி மாலாவின் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் ரீமேக் உரிமை ஷாருக்கானின் ரெட் சில்லீஸிடம் உள்ளதால் சீக்கிரமாக தீபிகா படுகோனை ஆம்ராபலியாக பார்த்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

குவிகம் பதிப்பகத்தின் சரித்திரம் பேசுகிறது முதல் பாகம் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அமேஸானில் இலவசமாகக் கிடைக்கிறது. குறுகிய காலச் சலுகை !

**********

சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஹயாத் ஹோட்டலில் கூகுள் தமிழ் ஆட் சென்ஸ் பற்றிய கூட்டம் நடந்தது. அதன் இரண்டாவது நிகழ்வு கடந்த சனியன்று கோவிலம்பாக்கத்தில் உள்ள ஸோன் ஹோட்டலில் நடைபெற்றது. வீட்டிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தூரம். கூடவே திருமண வாழ்க்கைக்குப் பிறகு கிடைக்கும் நிபந்தனை சுதந்திரத்தை இதுபோன்ற மொக்கை நிகழ்வுகளுக்கு வீணாக்கக்கூடாது என்று நினைத்தால் விதி விடுவதாக இல்லை. சென்ற நிகழ்வில் இரண்டு வேளை உணவு, இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்று தடபுடலான விருந்து கொடுத்தது எனது மனதை சலனப்படுத்தியது. ஆனால் இம்முறையோ மிகச்சிறிய அரங்கு. ஐம்பது பேர் தாராளமாக உட்காரக்கூடிய அந்த அரங்கில் நூற்றியைம்பது பேர் சேர்ந்துவிட்டார்கள். அதே அரங்கிலேயே ஹை-டீ. அசைவம் கிடையாது. வெஜிடபிள் சான்ட்விச், கொஞ்சம் வெங்காயப் பகோடா, சில பட்டர் பிஸ்கட்டுகள். அவ்வளவுதான். இடைவேளை முடிந்ததும் நைஸாக அரங்கிலிருந்து வெளியேறினோம்.

சென்னையில் இதுவரை வாசகசாலை நிகழ்வுகள் ஐம்பதுக்கும் மேலே நடந்திருக்கின்றன. திடலில் திராவிடம் 2.0 சில கூட்டங்கள் நடந்துவிட்டன. அவற்றில் எல்லாம் கலந்துகொள்ள முயலாமல் இதுபோன்ற மொக்கை நிகழ்வுக்கு சென்று வெங்காய பகோடாவை சாப்பிட்டுவிட்டு வருவது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகத்தான் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 04062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ்மகன் வேங்கை நங்கூரத்தில் பற்ற வைத்த தீயொன்று மெல்ல பரவி ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழனிடம் அழைத்து வந்திருக்கிறது.

சோழர்களைப் பற்றி நான் வாசித்த முதல் முழுநீள நூல் இதுவாகத்தான் இருக்கும். எப்படி கி.மு., கி.பி. என்று இருக்கிறதோ அதே போல சோழர்கள் வரலாற்றிலும் இருவேறு காலகட்டங்கள் இருக்கின்றன என்பதையே மிகத் தாமதமாக தெரிந்துக் கொண்டிருக்கிறேன். சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், கரிகாலன் போன்றவர்கள் சங்க காலச் சோழ மன்னர்கள். ராஜராஜன். ராஜேந்திரன் எல்லாம் இடைக்காலச் (அதாவது கி.பி.) சோழர்கள் (பிற்பாடு சோழ மன்னர் ஒருவருக்கு வாரிசு இல்லாமல் சாளுக்கிய – சோழ கலப்பு வம்சாவழி வந்தவர்கள் சாளுக்கிய சோழர்கள்). கடைச் சங்ககாலத்திற்கு பிறகு சுமார் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை, தென்னிந்தியாவை களப்பிரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அத்தோடு கி.பி. 850ல் தான் சோழர்கள் மீண்டும் சீனுக்கு வருகிறார்கள். சோழர்களின் மீள்வருகைக்கு காரணமான மன்னன் - விஜயாலய சோழன். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது மகன் முதலாம் ஆதித்தன் பல்லவர்களோடு போரிட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் சோழர்கள் ஆட்சியை நிறுவுகிறார். பிற்பாடு தொடர்ந்து வந்த சோழ மன்னர்களுள் சிகரம் என்றால் அது ராஜராஜன்தான். முதல் சில அத்தியாயங்களில் சோழர்களின் சுருக்கமான முன்கதையையும், கடைசி அத்தியாயத்தில் ராஜராஜனுக்குப் பிறகு சோழர்கள் படிப்படியாக வீழ்ந்த கதையையும் சொல்லிவிட்டு இடைப்பட்ட பகுதியில் ராஜராஜனை விரிவாக விவரித்திருக்கிறார் ச.ந.கண்ணன்.

குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வரும் முன் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை விவரிக்கிறார். சுந்தர சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டிய ஆதித்த கரிகாலன் அவரது சித்தப்பாவான உத்தம சோழனின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். (இந்நிகழ்வை கல்கி தனது பொன்னியின் செல்வன் நூலில் மேலோட்டமாக ஆதித்த கரிகாலன் மர்ம சதியால் கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறார்). ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பிறகு உத்தம சோழனின் சுமார் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறார்.

ராஜராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்
ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் சோழர்களின் ராஜ்ஜியம் இலங்கை வரை விரிவடைந்திருக்கிறது. ராஜராஜனுக்கு குறைந்தது பதினைந்து மனைவிகளாவது இருந்திருக்க வேண்டுமென கல்வெட்டுக் குறிப்புகளை வைத்துச் சொல்கிறார்கள். அவற்றில் ஒருவர்தான் உலகமகாதேவி. (சமீபத்தில் திருடுபோய் மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமகாதேவி சிலைகளைப் பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்). 

களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு சோழர்கள் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ராஜராஜன் சைவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் பிற சமயங்களை மதிக்கவும், வளர்க்கவும் செய்தார். இலங்கையில் போரிட்டு வென்ற ராஜராஜன் அங்கே சைவ ஆலயங்கள் கட்டினாலும் பெளத்தர்களிடையே சைவ சமயத்தைப் பரப்ப சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. அதே சமயத்தில் ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கும் வேளாளர் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பாக அப்போதே பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ராஜராஜன் / சோழர்கள் வரலாற்றில் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள். முதலாவது, போர்கள். தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துக்கொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். நாடு தாண்டி தன் எல்லைகளை விரிவுபடுத்த எண்ணிய ராஜராஜனுக்குக் கப்பற்படை பெரிதும் உதவியது. மாலத்தீவு, இலங்கை போன்ற பகுதிகளை சோழர்கள் கைப்பற்றியதற்கு முக்கியக் காரணம் கப்பற்படையே. ஆனால் ராஜராஜன் எந்தவொரு ஒரு போரையும் நாடுபிடிக்கும் ஆசையில் நிகழ்த்தவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாதிரியாக சோழர்களின் சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக்கொள்ளவே போர்களைப் புரிந்திருக்கிறார். இதுகுறித்து நூலாசிரியர் கூறுகையில் – ராஜராஜனின் முத்திரைகளாக இருக்கும் எந்தப் புகழ் பெற்ற போரும் அவை நிகழ்ந்திருக்காவிட்டால் ராஜராஜனின் ஆட்சி மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யமே உடனே கவிழ்ந்திருக்கும் என்கிறார். சில போர்கள் உறவுகளை பலப்படுத்தவும், சில போர்கள் உறவுகளை அறுத்தெறியவும், சில போர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், சோழப்பேரரசின் பாதுகாப்புக்காகவும் தொடங்கப்பட்டன. அரச வாழ்க்கை என்பதே ஒரு பந்தயம். நாம் முதலிடம் வர வேண்டுமென்றால் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும். அதைத்தான் ராஜராஜன் செய்தார். மக்கள்நலம், நாட்டு நலன் கருதி, அடைக்கலம் தேடி வந்த சிற்றரசர்களின் பாதுகாப்புக்காகவும், நட்புக்காகவும் முக்கியமாக தடையில்லா கடல் வணிகத்துக்காகவும் தொடங்கப்பட்ட போர்கள் தான் பெரும்பாலானவை.

சோழர்கள் வரலாற்றில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், அவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இருந்த தீராத பகை. எந்த சோழ மன்னர் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் கருதினார்கள். அவர்களின் ஒரு கண், எப்போதும் பாண்டிய மன்னர்கள் மீதுதான் இருந்தது. ஆனாலும், பாண்டியர்களை எவ்வளவுதான் வெட்டி வெட்டி விட்டாலும் அவர்கள் அங்குமிங்கும் முளைவிட்டு, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது பாண்டியர்களால் சோழர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்வரை தொடர்ந்த பகைமை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு சோழ அரசுக்கு தேய்பிறை தொடங்க ஆரம்பித்தது. இருமுறை போரில் பாண்டியர்களை ஓட ஓட விரட்டிய மூன்றாம் குலோத்துங்க சோழன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியனோடு மோத வேண்டிய சூழல் அமைந்தது. குலசேகரனின் படைகள் பேரழிவிற்கு ஆட்பட்டு போரிலிருந்து பின்வாங்கின. குலசேகரன் தன் தம்பியுடன் மதுரையை விட்டே ஓடினார். மூன்றாம் குலோத்துங்கனுக்கு அப்போதும் வெறி அடங்கவில்லை. மதுரையில் உள்ள மாளிகைகளையும், அரண்மனைகளையும் அழித்தார். அத்தோடு நில்லாமல் பாண்டியர்களை அவமானப்படுத்தும் பொருட்டு மதுரையில் கழுதைகளைக் கொண்டு ஏர் உழுது, கதிர் விளையா வரகினை விதைத்தார். தீராப்பகையோடு காத்திருந்த பாண்டியர்கள் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டின்மீது படையெடுத்து உறையூரையும் தஞ்சையையும் தீயிட்டு அழித்தனர். குறிப்பாக, மதுரை எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதே பாணியில் தஞ்சையும் அழிக்கப்பட்டது. இறுதியாக சாளுக்கிய – சோழ மன்னர்களின் வழித்தோன்றலான மூன்றாம் ராஜராஜனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சோழ சாம்ராஜ்யம் எழவே இல்லை. சோழர்கள் – பாண்டியர்களின் தீராத பகையை முன்வைத்து செல்வராகவன் அவரது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.

உடையாளூரில் அமைந்துள்ள ராஜராஜன் நினைவிடம்
ராஜராஜனின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர் தனது கடைசி இரண்டு வருடங்களில் (1012 – 1014) தன் மகன் ராஜேந்திர சோழனுடன் ஆட்சியை பகிர்ந்துக் கொண்டார். பின்னர் கி.பி. 1014ல் காலமானார். அவரது உடல் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூர் என்கிற கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ராஜேந்திர சோழர் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரம்மதேசத்திற்கு ஒரு விசிட் பெண்டிங்கில் உள்ளது. அத்தோடு இப்போது உடையாளூரும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழன் அமேஸான் கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ.90. நான் வாங்கிய சமயம் தள்ளுபடியில் ரூ.29 !

**********

ஹாட்ஸ்டாரில் என்னென்ன படங்கள் உள்ளன என்று எக்ஸ்ப்ளோர் செய்துக்கொண்டிருந்தபோது கணேஷ் – வசந்த் என்கிற டெலிஃப்லிம் இருப்பதை கவனித்து பார்க்கலானேன். சுஜாதாவின் இதன் பெயரும் கொலை என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரை சித்திரம். அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ நான் இதுவரையில் இதன் பெயரும் கொலை படித்ததில்லை. ஒரு தொலைக்காட்சி நடிகையின் கணவன் மரணமடைகிறார். அதன்பிறகு நடிகையைச் சுற்றி மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அவற்றின் பழி நடிகையின் மீது விழுகிறது. ஆனால் உண்மையான கொலைக் குற்றவாளி யார் என்பது கிளைமாக்ஸ். இயல்பிலேயே மிகவும் வீக்கான கதை இது. இதைப் போய் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் சுஜாதாவின் க்ரைம் நாவல்களைப் பொறுத்தவரையில் அவற்றின் ஸ்பெஷாலிட்டி கதை கிடையாது, வாசிப்பின்பம். அதனை சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ பார்வையாளர்களுக்கு கொடுப்பது பெரும் சிரமம். எவ்வளவு முயன்றாலும் என்ன இருந்தாலும் டெக்ஸ்ட் அளவிற்கு இல்லை என்கிற ஏமாற்றமே மிஞ்சும். எனவே சினிமா, சின்னத்திரை ஆட்கள் இனிமேலாவது ஃபர்னிச்சர் மீது கை வைக்காமல் இருப்பது நல்லது.

கணேஷ் – வசந்த் ! கணேஷாக விஜய் ஆதிராஜ். முன்பொரு சமயம் தூர்தர்ஷனில் கணேஷ் – வசந்த் தொடராக வெளிவந்தபோது அதிலே வசந்தாக நடித்தவர் விஜய் ஆதிராஜ் என்று நினைக்கிறேன். அதனால் அவர் ஓரளவுக்கு கணேஷ் – வசந்த் படித்திருக்கலாம். கூடவே சின்னத்திரை அனுபவமும் உள்ளதால் ஓரளவுக்கு சமாளிக்கிறார். பொதுவாக, கணேஷாக நடிப்பதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அண்டர்ப்ளே செய்தாலே போதும் என்பதால் விஜய் ஆதிராஜ் தப்பிவிடுகிறார். வசந்தாக அமித் குமார். இவர் சக்கரகட்டி படத்தில் சாந்தனுவின் நண்பனாக நடித்திருப்பார் (ராகுல் டிராவிட், லேட் பிக்கப்). வசந்த் என்றால் லூஸு என்றும், பெண்கள் விஷயத்தில் அல்பம் என்றும் யாரோ இவருக்கு தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இவருக்கு உரிய தண்டனை என்னவென்றால், இவரை ஒரு தனியறையில் பூட்டி கணேஷ் – வசந்த் தொகுதி முழுவதையும் வாசிக்க வைக்க வேண்டும். முழுவதும் வாசித்து முடித்தபின் அவராகவே குற்ற உணர்வு தாளாமல் தற்கொலை செய்து கொள்வார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment