30 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 30122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். 2013 முழுவதும் அப்படி நான் படித்து பிடித்து பகிர்ந்த இடுகைகளின் இணைப்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த சேமிப்பில் இருந்து முத்தான பத்து இடுகைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன். நல்ல எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் பயன் பெறட்டும். அதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் :- இந்த செக்ஷனில் லக்கி, அதிஷா, சமுத்ரா, வா. மணிகண்டன், சேட்டைக்காரன் போன்ற ஜாம்பவான்களின் (ராஜன், டுபுக்கு மன்னிக்க) இடுகைகளை நான் ஏதோ பரிந்துரைப்பது போல வெளியிடுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, அவர்களுடைய பதிவுகள் நீங்கலாக என்னுடைய முத்து பத்து (வரிசை படுத்தவில்லை, ஷார்ட் லிஸ்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது) :-


இரண்டு படங்கள் பார்த்தேன். பிரியாணி, கல்யாண சமையல் சாதம். இரண்டும் இணைய விமர்சகர்களின் கூற்றை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம். அல்லது விமர்சனங்களை படித்துவிட்டு பார்த்ததால் எதிர்பார்ப்பு விகிதம் குறைந்து, படம் நன்றாக இருப்பதாக தெரிந்திருக்கலாம்.

முதலில் கல்யாண சமையல் சாதம். இது ஒரு மாதிரி கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும், மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) வர்க்கத்திற்கும் மட்டும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. காசுக்கு கஷ்டப்படுபவர்கள் படத்தைப் பார்த்தால் வயிற்றெரிச்சலுக்கு உத்தரவாதம். என் போன்ற ஏழைகளுக்கும், பழைய பஞ்சாங்க ஆசாமிகளுக்கு ஒத்துவராது. அந்த வகையில் எனக்கு நிறைய காட்சிகள் எரிச்சலூட்டியது. ஆயிரத்தெட்டு கதாபாத்திரங்கள். சதா லொட லொடவென்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நிறைய மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. பிரசன்னாவிற்கு முக்கியமான கட்டத்தில் எழுச்சி ஏற்பட மறுக்கிறது. அந்த சிக்கலை வைத்தே வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேகா வாஷிங்க்டன் முகம் க்ளோசப்பில் மட்டுமல்ல, லாங் ஷாட்டில் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அட்லாஸ்ட், மனதுவிட்டு சிரிக்க வைத்ததால் க.ச.சா ஒரு ஃபீல் குட் படம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அடுத்து பிரியாணி. வெளியான சமயம் சென்னையில் இருந்திருந்தால் முதல் நாளே பார்த்திருப்பேன். அதன்பிறகு, விமர்சனங்களை படித்து சற்று சுதாரித்துக்கொண்டாலும், மந்தி டக்கர் மட்டும் மனதிற்குள் குடிகொண்டு மக்கர் செய்துக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்துவிட தயாரானோம். ‘னோம்’ என்றால் நானும் சிங்கமும். அவரும் மந்தி டக்கருக்கு விழுந்திருப்பாரோ என்னவோ...? பிகு பண்ணாமல் வந்துவிட்டார். படம் ஃபிகரு, ஜொள்ளு என நன்றாகத் துவங்கி ஆங்காங்கே சில சுமார் ஜோக்குகள் என நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மந்தி டக்கர் வருகிறார். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கலாம். கிறங்கடித்துவிட்டு போய்விட்டார். மந்திக்கு குரல் கொடுத்தவர் யாரென்று விசாரிக்க வேண்டும். அப்புறம், படம் அசுர வேகத்தில் தடதடக்கிறது. எல்லாம் சரி, இறுதி இருபது நிமிடங்கள் மட்டும் படு கேவலமான சொதப்பல். க்ளைமாக்ஸில் யாருமே யூகிக்கமுடியாத ஒரு ட்விஸ்டை வைக்க வேண்டுமென வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். அதற்காக இப்படியா பூமாலையை போட்டு குதறுவது...? பிரேம்ஜி நாசராக நடிப்பதை எல்லாம் ஸ்கூல் பசங்க கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி இருபது நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரியாணி சரோஜா லெவலுக்கு இல்லையென்றாலும் ஒகே ரகம்.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 December 2013

கனவுக்கன்னி 2013 - பாகம் 2

05. காஜல் அகர்வால்
ன்னுக்குட்டி காஜலுக்கு தமிழில் அழகுராஜா மட்டும் தான் வெளிவந்திருக்கிறது. அதிலும் மகா மட்டமான கேரக்டர். பாடல் காட்சியில் கூட சேலையை கட்டிக்கொண்டு தங்கு புங்கு'ன்னு குதிக்க விட்டிருக்கிறார்கள். கன்னுக்குட்டியின் குத்தமில்லை என்றாலும் வருந்தக்கூடிய விஷயம். மற்றபடி தெலுங்கில் காஜல் நடித்து வெளிவந்த பாட்ஷா, நாயக் இரண்டும் விஷுவல் விருந்து. ஜில்லாவில் மறுபடி துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல சீறணும்...!

04. நஸ்ரியா
ல்ல நேரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மீண்டுமொரு கேரள வரவு. தமிழ் சினிமாவில் துரிதமாக பிரபலமாகி அதைவிட துரிதமாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி என அடுத்தடுத்து படங்கள். ஜெனிலியா ரக குறும்புத்தனம் நஸ்ரியாவின் சிறப்பம்சம். சிலருடைய முகவெட்டு புகைப்படங்களுக்கு பொருந்தாது. அதுபோல நஸ்ரியாவின் முகவெட்டு புகைப்படங்களிலும், குறும்புத்தனம் காட்டும்போதும் மட்டுமே ஈர்க்கிறது. தொப்புள் சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் உயரத்தை எட்டியிருப்பார்.
03. டிம்பிள் சொபேட்
ராத்திய மண்ணில் பிறந்த மல்லிகைப்பூ. நல்லவேளையாக மராத்தி சினிமாவில் டிம்பிளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலிவுட்டிலும் வத வத'ன்னு வந்து போகும் நடிகைகள் போல ஒரே படத்தில் காணாமல் போய்விடுவார் போல டிம்பிள். துரதிர்ஷ்ட வசமாக டிம்பிளின் நடிப்பில் வெளிவந்த யாருடா மகேஷும் கவனிக்கப் படவில்லை. எடுப்பான முகம், அளவான உடல், தாராள கவர்ச்சி என எல்லாம் இருந்தபோதும் கூட டிம்பிளை கண்டு கொண்டாரில்லை. இதுபோல கைவிடப்பட்டவர்கள் தெலுங்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருவது வழக்கம். பார்க்கலாம். பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்கணும்.

02. மனிஷா யாதவ்
ழக்கு எண்ணில் கவனித்து, பேசப்படக்கூடிய வேடம் இல்லை என்றாலும் மனிஷா தனக்கென சில வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார். மனிஷா நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் வருடத்தின் சிறந்த படங்களுள் ஒன்று மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் என் மனம் கவர்ந்த படமும் கூட. ஜன்னல் ஓரம் பார்க்கவில்லை. தோற்றம் காரணமாக இவரைத் தேடி ஒரு மாதிரி சின்னப்பெண் கேரக்டரே கிடைக்கிறது போல. தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டு படங்களுக்கென நேர்ந்து விடப்பட்ட நடிகையாக மாறிவிடும் அபாயம் வேறு இருக்கிறது. பட்டைய கெளப்பணும் மனிஷா...!

01. பார்வதி
ரு படம். அவரா இவர் என்று எல்லோரையும் தோற்ற மாற்றம் காரணமாக மிரள வைத்துவிட்டார். என்னதான் பூ நல்ல படம் தான் என்றாலும், பார்வதி அவார்டுகளை அள்ளினார் என்றாலும் அப்படி ஒன்றும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது சில பல டிங்கரிங் வேலைகள் செய்து சிக்கென திரும்பி வந்திருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளிவந்த மரியான் தோல்வியடைந்தாலும் அவர் தோல்வி அடையவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன ? என்று கேட்ட குத்தத்திற்காக மனதில் டெண்ட் அடித்துவிட்டார்.

Post Comment

28 December 2013

கனவுக்கன்னி 2013 – பாகம் 1

10. லக்ஷ்மி ப்ரியா
ங்கர் சிமெண்ட், ஏர்செல் விளம்பரங்கள் மூலம் யாரு சாமீ இவ ? என்று தேட வைத்தவர். சுட்டகதை படத்தில் சினிமா அறிமுகம். ஆறு வயது பையனின் அம்மா, புதிதாய் திருமணமான மணப்பெண், மலைவாழ் இனப்பெண் என எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தபடி தோற்றம் தரக்கூடியது லக்ஷ்மியின் ஸ்பெஷாலிட்டி. தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நடிப்பும் கைவருகிறது. கிரிக்கெட், ஃப்ரிஸ்பீ விளையாட்டுகளில் ஆர்வமுள்ள லக்ஷ்மி இந்திய 'B' அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
09. ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யாவின் எழுச்சி என்று ஒரு கட்டுரையே எழுதலாமா எனக் கருதும் அளவிற்கு ஒரே படத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். ஆந்திர வரவு. குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நடிகை போன்ற பரிமாணங்களை கடந்து, கதாநாயகியாக சில தெலுங்கு படங்களில் நடித்தவர். தற்போது வ.வா.ச வெற்றியின் காரணமாக ஜி.வி.பிரகாஷ் படம் உட்பட நான்கைந்து தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பாவாடை தாவணி திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி. பாக்காத பாடலில் முடிவில் காட்டுவது போல சின்னச் சின்ன முகபாவனைகளில் மனதை அள்ளிவிடுகிறார்.
08. விஷாகா
ல் திவ்யா தூள் இப்ப திவ்யா ஆயிட்டா என்பதுதான் க.ல.தி.ஆ பார்த்தவர்களின் ஒருமித்த குரல். பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியும் விஷாகா அபுதாபியில் பிறந்த பஞ்சாபி. க.ல.தி.ஆ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு போய்விட்டார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டு மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜாவில் நடிக்க இருக்கிறார். கொஞ்சம் கோதுமை நிறத்தில் ஜொலித்தாலும் Dark is Beautiful என்கிற கேம்பெயினில் பங்கெடுத்திருக்கிறார்.
07. ரெஜினா
ண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்காவின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் ரெஜினா. அதிகம் கவனிக்கப்படாத நிர்ணயம் என்ற லோ பட்ஜெட் படத்திலும் நடித்தார். நிர்ணயம் படத்தைப் போலவே ரெஜினாவின் மீள் வருகையும் கவனிக்கப்படாமல் போனது வருத்தம். தற்சமயம் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் மும்மொழியில் தயாராகும் என் சமையல் அறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா பாப்பா.
06. மிர்த்திகா
செதுக்கி வைத்த சிலை போல் தோற்றமளிக்கும் மிர்த்திகா 555 படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் கேரளத்து பைங்கிளி. நதியா, ஷாலினி போல திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பட்சியின்  லட்சியம். இயல்பில் மிர்த்திகா ஒரு பாடகி மற்றும் நடனப்பிரியை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரை இயக்குநர் சசி கண்டுபிடித்து நடிப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார். சசி ரசனைக்காரர். மற்ற கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை மிர்த்திகா மீது படாதது அவர்களுடைய துரதிர்ஷ்டம்.

Post Comment

23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 09122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒலிம்பியா வாசலில் உள்ள சிட்டிபேங்க் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிலை இருக்கிறது. ராமரோ, பெருமாளோ யாரென்று தெரியவில்லை. முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்...? சட்டென ஒரு பெண் அந்த சிலைக்கு முன் வந்து நின்று சிலையுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அதாவது சினிமாவில் எல்லாம் ஹீரோயின்கள் கடவுளை நண்பனாக பாவித்து பேசுவார்களே (உ: ரோஜாவில் மதுபாலா) அதுபோல. நான் அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தசமயம் என்னையே அறியாமல் என் உதட்டோரத்தில் லேசாக புன்னகை கசிந்திருக்கும் போல தெரிகிறது. அவள் எதார்த்தமாக என்னைப் பார்த்ததும் நாக்கை கடித்துக்கொண்டு டெம்ப்ளேட்டாக கைகூப்பி, கண்களை மூடி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டாள். அப்புறமென்ன, ஃபிகர் சுமாராக இருந்ததால் என் முகத்திற்கு நேரே ப்ரொப்பெல்லர் காற்று வீசி, முன்னம்மயிரெல்லாம் சிலுசிலுத்து, டங்’கென மணியோசை எல்லாம் கேட்டு என்றெல்லாம் எழுத முடியவில்லை.

கொஞ்சநேரத்திற்கு டைம்பாஸ் செய்ய ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று என்னுடைய பெட்டகத்தை துழாவியபோது கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா கிடைத்தது. 2008ன் இறுதியில் துவங்கி 2009 வரை கேபிளார் எழுதிய கொத்து பரோட்டா பதிவுகளின் தொகுப்பு. வருங்காலத்தில் ‘ஒயின்ஷாப்பை’ புத்தகமாக வெளியிட்டால் (!!!) அது எப்படியிருக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்வதற்காக அந்த புத்தகத்தை வாங்கியதாக நினைவு. உல்டாவாக எப்படி இருக்கக்கூடாது என்று சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. அடல்ட் ஜோக்குகள் தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் உருப்படியாக கிடையாது. கேபிளே புத்தகத்தை பற்றி சும்மா ‘டைம்பாஸ்’ மச்சி என்று சொல்லியிருப்பது பொருத்தம். கொ.ப வாங்கிப் படித்ததில் ஒரேயொரு நல்ல விஷயம் – ஒருகாலத்தில் கேபிள் கூட அமெச்சூராகத்தான் எழுதியிருக்கிறார். கலவை இடுகைகள் விஷயத்தில் கேபிளை ரோல் மாடலாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல். அம்புட்டுதேன்...!

கொ.ப.வில் டக்கீலா பற்றி கேபிள் சங்கர் :-
மெனுகார்டில் டக்கீலாவை பார்த்ததும் ஷகீலாவை பார்த்தவன் போல் உற்சாகமாகி ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன் ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன் ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான். எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ’அப்படியே சாப்டணும்னுஎன் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல ஒரே ஷாட்டில் அடித்தேன். நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு 'பக்' என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய் உப்பை எலுமிச்சையில் தோய்த்து நாக்கில் வைத்து தேய்க்க, சூப்பர். டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்...!

நையாண்டி பார்த்தேன், தொப்புள் காட்சி உட்பட. நஸ்ரியா கதாபாத்திரம் அரை லூசெல்லாம் இல்லை. முழு லூஸு. அதற்கு மிக பொருத்தமாக ஓவியாவுக்கு வாய்ஸ் கொடுப்பவரே டப்பிங் பேசியிருக்கிறார். படத்தில் புன்முறுவல் அளவுக்கு ஆங்காங்கே சிரிப்பு வருகிறது. மனம் விட்டு சிரித்த ஒரே காட்சி சத்யனின் லுங்கி டான்ஸ் மட்டும்தான்.

குடிப்பழக்கம் உள்ள ஒருவன் மதுக்கூடத்திற்கு சென்று ஒரு துளி கூட குடிக்காமல், குடிப்பவரை வாய்பார்த்து விட்டு வருவது எவ்வளவு மோசமான அனுபவம். சனியன்று மாலை கிடைத்தது. சிறுதூறல், சில்லென காற்று, சில்ட் பீர் கிடைத்தால் எப்படி இருக்கும்...? ஆனால் பார்க்க மட்டும் என்றால்...? சிங்கம் ஒரு கிங்ஃபிஷர் பியரோடு என் முன்னால் அமர்ந்திருந்தார். எனக்கு அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒன்று, பியரை எடுத்து ‘பாட்டம்ஸ் அப்’ அடிக்க வேண்டும். அல்லது பாட்டிலை எடுத்து சிங்கத்தின் மண்டையில் அடிக்க வேண்டும். மிகுந்த சிரத்தை எடுத்து பொறுத்துக்கொண்டேன். கூடுமான வரை சிங்கத்திடம் பேச்சு கொடுக்காமல், குறிப்பாக வரலாறு சம்பந்தமாக பேச்சு கொடுக்காமல் உட்கார்ந்திருந்து வேடிக்கை மட்டும் பார்த்தேன். FYI, நான் திரவ உணவு உட்கொள்வதை நிறுத்தி / நிறுத்தப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது :)

சனியிரவு தூர்தர்ஷனில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாத காலகட்டத்தில் எனக்கு கிடைத்த ஒன்றிரண்டு பொ.போ நிகழ்ச்சிகளில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி இன்னமும் (பன்னிரண்டு வருடங்களாக) தொடர்ந்துக் கொண்டிருப்பது சர்ப்ரைஸ். சுமந்த் சி ராமன் நிகழ்ச்சியை நடத்திச்செல்லும் விதம் அலாதியானது. ஒருமணிநேர நிகழ்ச்சி என்றால் அதில் விளம்பர இடைவேளை தவிர்த்து ஒரு நொடியைக் கூட வீணாக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்ன ஒன்று, சில நேயர்கள் லைன் கிடைத்து பதில் தெரியாமல் நேர விரயம் செய்கிறார்கள். அது போன்றவர்களை அல்லையில் போட்டு மிதிக்கலாம். சுமந்த் சி ராமன் அதிகம் கவனிக்கப்படாத ஒரு லெஜன்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

வணக்கம் சென்னை படத்தின் ஒசக்க பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்படியொரு பாடல் ‘மொக்கை’ சிவாவிடம் வந்து கிடைத்திருப்பது காலக்கொடுமை. அதிலே குற்றாலத்துண்டை வைத்து ஒரு பெசல் ஸ்டெப் போடுகிறார் பாருங்கள் அடடா அவசியம் பார்க்கவும்.

வருகிற சனிக்கிழமை துவங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு புனே வாசம். ஒயின்ஷாப் திறக்கப்படாது என்பதை அறிக :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 02122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிங்கம் 2 அவ்வப்போது பிட்டு பிட்டாக பார்த்ததை முன்னிட்டு சில வரிகள். இப்பொழுதெல்லாம் முனுக்குன்னா ஏதாவதொரு அமைப்பு கேஸ் போட்டுவிடுகிறார்களே. அதனை தவிர்க்க ஹரி எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். ஒரு வில்லனை இஸ்லாமியராக சித்தரித்ததை சரி கட்டுவதற்காக மன்சூர் அலிகான் கதாபாத்திரம். ஒரு கிறிஸ்தவ தலித் ராஜேந்திரனுக்கு பதிலாக சந்தானம் கதாபாத்திரம். மன்சூர் அலிகானை உருவத்தை முன்னிட்டு ‘காட்டெருமை’ என்று அழைக்கவேண்டிய வசனத்தை வேண்டுமென்றே ‘பைசன்’ என்று மாற்றியிருக்கிறார். இன்னொரு காட்சியில் ‘பொட்டை’ என்று வரவேண்டிய வசனம் ‘பேடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில் யாராவது கோபத்தில் இருக்கும்போது ‘பேடி’ என்று திட்டி பார்த்திருக்கிறீர்களா...? எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தவர்கள் டேனி விஷயத்தில் மட்டும் கவனக்குறைவாக விட்டிருக்கிறார்கள். சூர்யா ஒரு காட்சியில் டேனியை ‘African Animal’ என்று திட்டுகிறார். ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் தமிழ் படம் பார்த்து கேசெல்லாம் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ...?

பழைய தமிழ் சினிமாக்களில் மெயின் ஹீரோயின் ஒருவர் இருக்கும்போது இரண்டாவதாக ஒருவர் ஹீரோவை ஒருதலையாக காதலிப்பார். ஹீரோவுடன் ஒரு கனவுப்பாடலில் ‘திறமை’ காட்டுவார். ஹீரோவுக்கு உதவிகள் செய்து, படம் முடியும் தருவாயில் அற்பாயுசில் போய்ச் சேர்ந்துவிடுவார். அந்தமாதிரி ஒரு வேடம் ஹன்சிகாவுக்கு. சித்தப்பாவின் ஐபோன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி சூர்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். ஹன்சிகாவுக்கு பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டது என்ற காரணத்திற்காக குடும்பத்திலேயே அவரை விஷம் வைத்து கொன்றுவிடுகிறார்கள். அடப்பாவிகளா...! ஐபோன் பாஸ்வேர்ட் தெரிஞ்சிடுச்சு’ன்னா மாத்திக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன்டா ஹன்சிகாவை போட்டீங்க...? பச்ச மண்ணுடா அது...!

மறுபடியும் சுஜாதாவிடமே திரும்பியாயிற்று. முதலில், கொலை அரங்கம். அப்புறம், ஒரு நடுப்பகல் மரணம். இரண்டும் க்ரைம் த்ரில்லர்கள். முதலாவதில் கணேஷ் – வசந்த் வருகிறார்கள். ஒரு சொத்து, நான்கு வாரிசுகள். ஒருவர் மட்டும் சொத்தை முழுமையாக அபகரிக்க முயற்சிக்கிறார். அது யாரென்பதை சஸ்பென்ஸ் கலந்து, எண்பதுகளில் நடைபெற்ற இலங்கைத்தமிழர் போராட்டத்தை லேசாக உரசி சொல்லியிருக்கிறார். கணேஷ் – வசந்தை படிக்கும்போது ‘அந்த’ இரட்டையர்கள் நினைவுக்கு வந்தார்கள். குறிப்பாக வசந்த் கணேஷை ‘பாஸு’ என்று விளிப்பதும், ஃபிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதும் பைலட்டை நினைவூட்டியது. உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு கணேஷும் ஒரு வசந்த்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் இண்டலிஜென்ஸ், கொஞ்சம் ஜொள்ளு, கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் விளையாட்டுத்தனம் எல்லாம் கலந்தவன் தானே மனிதன். ஒரு நடுப்பகல் மரணம் அதைவிட சுவாரஸ்யமான கதை. புதுமண ஜோடியொன்று தேனிலவுக்கு செல்கிறது. கணவன் கொல்லப்படுகிறான். வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு முன்னூறு பக்கங்களில் க்ளைமாக்ஸை எட்டுகிறது. 

க்ரைம் த்ரில்லர் நாவல், க்ரைம் த்ரில்லர் சினிமா என்றெல்லாம் பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாக இருக்கிறது. யாரும் நம்மை டாட்டா சுமோவில் அரிவாளோடு துரத்துவதில்லை...? யாரும் நம்மை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைப்பதில்லை...? ஒரு போலீஸ் விசாரனையில்லை. ஒரு கோர்ட், கேஸ் இல்லை. தூங்கி விழிப்பது, சாப்பிடுவது, அலுவலகம் செல்வது. ச்சே என்ன வாழ்க்கை இது...?

6174 நாவலுடன் தொடர்புடைய மிங்குன் ஆலயம்
அலுவலகத்தில் தோழி ஒருவர், அவரிடம் யவன ராணி முதல் பாகம் மட்டும் இல்லையென்று ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொண்டிருந்தார். புத்தகத்தின் விலை 210ரூ. 250க்கு மேல் வாங்கினால் இலவச டோர் டெலிவரி. என்ன செய்வது என்று யோசித்தவரிடம் 6174 என்ற நாவலைப் பற்றி நான் கேள்விப்பட்ட அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி வாங்க வைத்துவிட்டேன். வேறெதற்கு...? இரவல் வாங்கி படிக்கத்தான். புத்தகம் தற்போது என் கைவசம்...!

இரவல் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சாட்டில் அறிமுகமானார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் கடந்து, ‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா...?’ என்றொரு கேள்வியை கேட்டார். எனக்கு புரியவில்லை. ‘ஏன் கேட்கிறீர்கள்...?’ என்றேன். ‘இரவல் வாங்கி படிக்கத்தான்...!’ என்று பதிலளித்தார். எனக்கு பக்’கென்று ஆகிவிட்டது. அத்துடன் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். சென்ற வாரத்தில் ஒருநாள் ராஜ் குமார் என்ற வாசகர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்களிடம் நிறைய புக்ஸ் இருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். அதே ‘பக்’. அதெல்லாம் இல்லைங்க. ரீடிங்கில் நானொரு பிகினர் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய புத்தகங்களை நான் இரவல் கொடுப்பதில்லை. கூடாது என்றில்லை. இரவல் வாங்கும் 99.9 சதவிகிதக்காரர்கள் அதனை திருப்பிக்கொடுப்பதில்லை. அதுகூட பிரச்சனையில்லை. கொடுத்து சிலநாள் கழித்து புத்தகத்தை கேட்டால் அதுவா..? அது இங்கதான் எங்கேயோ இருந்துச்சு... தெரியல மச்சான்... என்று அலட்சியமாக பதில் வரும். அட்லீஸ்ட் படிச்சியா...? என்று கேட்டால் எங்க மாப்ள...? வண்டி கழுவுறதுக்கு கூட நேரமில்லை என்று சலித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன மா’ன்னாவுக்குடா புக்கை வாங்கின’ன்னு கடுங்கோபம் வரும். இப்படித்தான் சென்ற புத்தகக்காட்சியில் சிங்கம் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்த மூன்று புத்தகங்களை வாங்கினார். அதை இரவல் வாங்கி படித்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்குள் அவருடைய நண்பர் யாரோ முந்திவிட்டார். இப்ப புக்கு எங்கடா’ன்னா என் சின்னாத்தாளோட மாமியா பொண்ணு கட்டிக்கிட்ட பையனோட சித்தப்பன் வீட்டுல இருக்குங்குறார். எங்க போய் முட்டிக்கிறது...? புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்...!

நீ மட்டும் இரவல் வாங்கலாமா...? என்று கேட்கலாம். இரவல் வாங்குவதில் நான் மற்றவர்களிடம் என்ன மாதிரியான டீசன்ஸியை எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களிடமும் பின்பற்றுகிறேன். இரவல் வாங்கிய புத்தகத்திற்கு ப்ரையாரிட்டி கொடுத்து படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆரூர் மூனா வீட்டிலிருந்து பத்து, பதினைந்து புத்தகங்கள் எடுத்து வந்திருப்பேன். அவற்றில் இன்னும் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி. முடித்ததும் வீடு தேடிச்சென்று கொடுத்துவிடுவேன். அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. திரும்பக் கொடுத்தால் தான் அடுத்த செட்டு புத்தகங்கள் இரவல் கிடைக்கும்.

தீபிகாவுக்காக சில சமயங்களில் யூடியூபில் பார்க்கிற பாடல். அப்படியொரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது பாடலின் மீதான ஈர்ப்பிற்கு பாடகியும் ஒரு காரணம் என்று புரிந்தது. கணீரென்ற குரல். யாரென்று கூகுள் செய்தேன். சுநிதி செளஹான். தமிழில் கூட சில பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் எதுவும் ‘டில்லி வாலி’ போல வசீகரிக்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 December 2013

விடியும் முன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். என்னுடைய ஆலோசனை - தயவு செய்து ‘விடியும் முன்’ பார்ப்பதென்றால் எந்த விமர்சனங்களையும் படிக்காமல் பாருங்கள். அந்த ஆலோசனையை புறந்தள்ளுபவர்கள் மட்டும் மேலே படிக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு லோ பட்ஜெட் படங்களின் ஆபத்பாந்தவன் உண்மைத்தமிழன் அண்ணாச்சி தொலைபேசினார். விடியும் முன் படம் பார்க்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். அண்ணனின் வழக்கமான ‘ப்ரோ’ (PRO) வேலைதான் என்றாலும், போன் செய்து பார்க்கச் சொல்வதெல்லாம் டூ மச். அதற்காகவே பார்க்க முடிவு செய்தோம். அண்ணன் சொல்வது போல படம் நன்றாக இருக்கலாம். அல்லது நல்லாயில்லை என்றாலும் மொக்கைக்கு ஆச்சு என்று ரசித்துவிட்டு வரலாம் என்ற தைரியத்துடன் அரங்கம் சென்றோம்.

மார்க்கெட் இழந்த விலைமாது ஒருத்தி ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஓடுகிறாள். அவர்களை வெவ்வேறு காரணங்களுக்காக சிலர் துரத்துகின்றனர். அவர்கள் ஏன் துரத்துகிறார்கள்...? துரத்திப் பிடித்தார்களா...? என்பதை அட்டகாசமான க்ரைம் த்ரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக மனித மனதிற்கு வக்கிரமான செய்திகளை தெரிந்துக்கொள்ளும் ஒரு ரகசிய ஆசை உண்டு. விதிவிலக்குகள் இருக்கலாம். செய்தித்தாள்களில் காணப்படும் கள்ள உறவுக்கதைகள், கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம் போன்றவை முக்கால் பக்கத்திற்கு வெளியாவதற்கு மேற்கண்ட உளவியல் ஒரு முக்கியமான காரணம். அப்பாவே மகளை... போன்ற செய்திகளைக் கூட சட்டென எதிர்கொள்ளும்போது ச்சே எவ்வளவு கேவலம்...? என்று நினைத்துக்கொண்டால் கூட அதனை விரிவாக தெரிந்துக்கொள்ளும் ஒரு ஆர்வக்குறுகுறுப்பு இருக்கும். அந்த ஆர்வக்குறுகுறுப்பு தான் விடியும் முன் படத்தின் மிகப்பெரிய பலம் என்று கருதுகிறேன். படம் தொடங்கி சில நிமிடங்களிலிருந்தே அந்த சிறுமியை கிழவன் அல்லது கிழவனை சிறுமி என்ன செய்திருப்பார் என்ற படபடப்பு தொற்றிக்கொள்கிறது. அதனை கிட்டத்தட்ட இறுதிவரை காப்பாற்றியிருப்பது படத்தினை பிடிக்க வைத்துவிடுகிறது. 

படத்தில் ஹீரோ என்று யாருமில்லை. பிரதான வேடம் என்றும் தனியாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. பூஜா தமிழ் சினிமாவில் ஒரு பத்து குப்பையிலாவது நடித்திருப்பார். எல்லாவற்றிற்கும் சேர்த்து ‘கடைசியாக’ ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டார். கொஞ்சும் தமிழ் பூஜாவின் ஸ்பெஷல். அது அவருடைய வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறது. சிறுமி மாளவிகா, தங்கமீனை நினைவூட்டும் தோற்றம். வயதை மீறிய நடிப்பு. சின்னய்யா வேடத்தில் ‘நான் மகான் அல்ல’ வினோத். அதிர்ஷ்டம் வாய்த்தவர். அதிகம் நடிக்கத் தேவையில்லை. வசனங்களும் குறைவு. கேமராவைக் கூட பார்க்க வேண்டியதில்லை. விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாலே போதும், ஆனால் பேசப்படக்கூடிய வேடம். ஜான் விஜய் அவருடைய வழக்கமான ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். ஸ்ரீரங்கத்து தேவதை. ஏற்கனவே சில படங்களில் நகைச்சுவை வேடமேற்று நடித்த துணை நடிகர்கள் சீரியஸான வேடங்களில். ஆனாலும் உறுத்தவில்லை.

படம் நெடுக நிறைய ஈர்ப்புகள். அட்டகாசமான வசனங்கள், அருமையான காட்சியமைப்புகள் என தொடங்கி, நிறைய விஷயங்கள். விஷப்பாம்புடன் விளையாடும் துரைசிங்கத்தின் ஆட்கள், டபுள் கேம் விளையாடும் லங்கன், கொட்ட-கொடூரமாக கொலைகள் செய்யும் சின்னய்யா என பண்புரு வருணனைகள் அபாரம். நிறைய விஷயங்களை பார்வையாளரின் யூகத்திற்கு விட்டிருப்பது கூட படத்தின் பலம்தான். உதாரணமாக, பூஜாவுக்கும் துரைசிங்கத்திற்கும் என்ன உறவு...? துரைசிங்கத்திற்கு உடலளவில் என்ன பிரச்சனை...? தெய்வநாயகி ஏன் பாலியல் தொழிலை விட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினாள்...? போன்றவற்றை குறிப்பிடலாம். சில ‘ஏன்’களை சொல்லி சோகஜூஸ் பிழியவில்லை. விலைமாதுக்களுக்கு நியாயம் கற்பிக்கவில்லை. இரண்டாம் பாதியின் பின்னணி இசையும் ஸ்லோ மோஷன் காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மதுவருந்தும் போதையை தருகிறது.

இயக்குநர் பாலாஜி குமார்
விடியும் முன் நிறைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நினைவூட்டுகிறது. ஒரு சிறுமியைக் காப்பாற்ற வேண்டிய மையக்கரு. தன்னுடைய இயல்பான கெட்ட குணத்திலிருந்து மாறுபட்டு சிறுமியை காப்பாற்ற முனையும் ஓநாய் கதாபாத்திரம். ஓரிரவு துரத்தல் என நிறைய ஒற்றுமைகள். முன்னதைப் போலவே இதற்கும் நிறைய தர்க்கரீதியிலான கேள்விகள் கேட்கத் தோன்றுகின்றன. கொடூர கொலைகள் செய்யும் சின்னய்யா ஏன் அவருடைய தந்தையை கொன்றுவிடவில்லை...? சிறுமியை ஏன் அவ்வளவு தீவிரமாக துரத்த வேண்டும்...? காப்பாற்றுவதற்கு என்றால் துரைசிங்கத்தின் கொலை மட்டும் போதுமே...! இவை ஒருபுறமிருந்தாலும், ஓ.ஆவையும், வி.முவையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிட முடியவில்லை. சினிமாத்தனமான க்ளைமாக்ஸை மட்டும் ஒதுக்கிவிட்டு, ஒரு புதிய இயக்குநரின் அதிக அலட்டலில்லாத படைப்பு என்ற வகையில் விடியும் முன் படத்தை மனதார வரவேற்று பாராட்டுகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment