2 May 2013

சூது கவ்வும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.

அரைகுறை கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.

நயன்தாராவுக்கு கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில் அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில் படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம் நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய் சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும் பின்பற்றிவிடக் கூடாது.

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும் இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.

மற்ற காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத் தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில் சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி. இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள். அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.

பாடல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான் முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும் மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.


ஆள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை. டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.

டிராவிட் போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும் சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2013

பெண் பார்க்கும் படலம்

அன்புள்ள மனைவிக்கு,

அது ஒரு ஞாயிறு மாலை. நான் என்னுடைய குடும்பத்துடன் உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தேன்.

“ஹே........ மாப்ள வந்துட்டாரு....!” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டே சில வாண்டுகள் எங்களை முந்திச் சென்றன. எங்களுடைய வருகையை உள்ளே இருப்பவர்களுக்கு முன்னறிவிப்பு செய்திருக்கக்கூடும். எட்டுத் திக்கிலிருந்தும் யாரோ எங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பதை போன்றதொரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இதமான மாலைத்தென்றலில் கூட வியர்த்துக் கொட்டியது. அண்டை வீட்டு வாசல்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் என்று எங்கெங்கிலிருந்தும் மனித கண்கள் எங்களை, குறிப்பாக என்னை நோட்டமிட்டபடி இருந்தன. அவற்றில் பெரும்பாலும் பெண்கள். ஒருத்தி நைட்டி மீது குற்றால துண்டு ஒன்றினை தற்காலிக துப்பட்டாவாக சூடியிருந்தாள். அவள் முகத்தில் அர்த்தம் புரியாத ஒரு சிரிப்பு வியாபித்திருந்தது. அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து “வாங்க... வாங்க... வாங்க... வாங்க...” என்று ஒரு ஹை-பிட்ச் குரல் எகிறி வந்தது. உன்னுடைய தந்தை தான். கார்டனுக்குள் நுழைந்த அமைச்சர் போலவே பம்மியபடி வந்து எங்களை உள்ளே அழைத்தார். உன் தந்தையைக் கண்டதும் ஏனோ என் மனக்கண்ணில் ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம் தோன்றி மறைந்தது.

கதவைச் சுற்றி கோவில் வாசல் போல செருப்புகள் இரைந்து கிடந்தன. உன்னுடைய அப்பா யாரையோ கூப்பிட்டு செருப்புகளை ஓரம்தள்ளி வைக்காதமைக்காக கடிந்துக்கொண்டார். மிகவும் கண்டிப்பாக பேர்வழியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்றினாலும் கூட ஒரு நமுட்டுச்சிரிப்பும் கூடவே வந்துத்தொலைத்தது. வாசற்காலில் தலை இடித்துவிடாதபடி கவனமாக உள்ளே நுழைந்தேன். அந்த குறுகிய அறைக்குள் சுமார் ஐம்பது மனித தலைகளாவது தென்பட்டிருக்கும். நாங்கள் நுழைந்ததும் சட்டென வாத்தியார் நுழைந்த வகுப்பறை போல நுன்னமைதி. எங்களுக்கென சோபாவில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்யாத தரைப்பகுதியில் லட்டு, பாதுஷா, மைசூர் பாகு போன்ற லெமூரியா காலத்து பட்சணங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.

என் கண்கள் என்னையே அறியாமலும் வேறு வழியில்லாமலும் உன் வீட்டுச் சுவற்றை மேய்ந்துக் கொண்டிருந்தன. ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒருத்தர் கோட்டு-சூட்டு போட்டு டையெல்லாம் கட்டி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். உன்னுடைய மூதாதையராக இருக்கக்கூடும். இதயவேந்தன் ரசிகர் மன்றம் சார்பாக கொடுக்கப்பட்ட தினசரி நாட்காட்டி பல மாதங்களாக தேதி கிழிக்கப்படாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பீரோ கண்ணாடியில் கர்த்தர் ஜீவித்துக்கொண்டிருந்தார். நானில்லாத உங்களுடைய குடும்ப புகைப்படம். அதில் உன்னுடைய வெட்கச்சிரிப்பு. ஷோ கேஸ் சாயலில் இருந்த அலமாரியில் சில கைவினை பொருட்கள். இன்னொரு அலமாரியில் ஒருக்களித்து சாத்தி வைக்கப்பட்டிருந்த தடிமனான மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். அருகிலேயே உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையிலிருந்து கொஞ்சம் மின்விளக்கு வெளிச்சம் கசிந்துக்கொண்டிருந்தது. சர்வநிச்சயமாக நீ அந்த அறைக்குள்ளே தான் இருக்கவேண்டுமென எனக்குள்ளிருக்கும் விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். ஒரு முழு சுற்றை முடித்துக்கொண்டு என் பார்வை தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, கீழே அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டார்கள். ஏதாவது ஜோக் அடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதற்குள் உன் அப்பாவிற்கு அருகில் அமர்ந்திருந்த உறவினர் உன்னைப்பற்றிய பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பிக்க, என்னுடைய கவனம் ஆங்கே நிலை கொண்டது. நீ சின்ன வயதிலிருந்தே படிப்பில் ரொம்ப சுட்டியாமே ! டீச்சருக்கே சொல்லிக் கொடுப்பியாம். பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் நீதான் பாத்துப்பியாம். ஒருமுறை ஸ்கூலுக்கு அப்துல் கலாம் வந்தபோது உன்னைப் பாராட்டி பேனா பரிசளித்ததை உன் தந்தையார் உறவுக்காரருக்கு நினைவூட்டும் தொனியில் என்னிடம் தெரிவித்தார். நீயே எம்ப்ராய்டரி போட்டது என்று ஒரு ஃப்ரேம் செய்த மயில் படத்தையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் தலையணை உரையையும் காட்டி சிலாகித்துக்கொண்டிருந்தார் உன் தந்தை. மேலும், உன்னை மருத்துவச்சியாக்க வேண்டுமென நீ பிறந்தபோதே முடிவெடுத்து விட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த கனவு நினைவான சந்தோஷமும் பெருமையும் அவருடைய கண்களில் தெரிந்தன. சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஒரு சிநேகமான புன்னைகையை உதிர்த்தார் உன்னுடைய அம்மா. அநேகமாக என்னுடைய காத்திருப்பின் வலியை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.

நம்மவர்களுக்கு பேச்சை எங்கே தொடங்கினாலும் சினிமாவிலோ அரசியலிலோ கொண்டுவந்து விடும் கெட்டப்பழக்கம் எப்பொழுதும் உண்டு. கப்பலோட்டிய தமிழனில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி உன்னுடைய அப்பாவும், நாடோடி மன்னனில் எம்.ஜி.யாரின் கத்தி சண்டையைப் பற்றி என்னுடைய அப்பாவும் சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் மொக்கை போட்டுக்கொண்டிருந்தது எனக்கு அசுவாரஸ்யத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தியது. சண்டை போடாதீங்க ஏட்டய்யா என்று ஆட்டையை கலைக்க எத்தனித்தாலும் நாகரிகம் கருதி அடக்கியே வாசித்தேன். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி ? பொண்ண வரச்சொல்லுங்கப்பா என்று சபையில் எனக்காக ஒரு மீசை குரல் எழுப்பியது. மீசைக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்க முடியாவிட்டாலும் ஒரு குவாட்டராவது வாங்கித்தர வேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

அடர் சிகப்பு நிற பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் நீ அன்னநடை போட்டு அறையிலிருந்து வெளிவந்த தருணம் மின்சார கனவு போல இருந்தது. பிண்ணனியில் ஸ்ட்ராபெர்ரி கண்ணே... விண்வெளி பெண்ணே... என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு மட்டும் ஏற்பட்டது. வீட்டு வாசலில் ஏன் கோவில் போல செருப்புகள் இரைந்து கிடந்தன ?, பட்சணங்களுக்கு மத்தியில் ஏன் ஜாங்கிரியை வைக்கவில்லை ? போன்ற உண்மைகள் புரிந்தன. “Hi... Im Prabhakar...” என்று கம்பீரமாக எழுந்து நின்று உன்னுடன் கைகுலுக்க வேண்டுமென என் வீட்டுக்கண்ணாடி முன்பு இருபத்தேழு முறை ஒத்திகை பார்த்திருந்தேன். ஆனால் உன்னைக் கண்டதும் நாக்கு குறழ... ச்சே... குழற ஆரம்பித்துவிட்டது. நான் உன்னை பார்க்கிறேனா என்று என்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பா, “டேய்... பொண்ணை சரியா பாரேன்டா...” என்று என் காதில் கிசுகிசுத்தார். “நான் பாத்துக்குறேன் பா... நீங்க மொதல்ல அந்தப்பக்கம் திரும்புங்க...” என்று பெருசை ஆஃப் செய்தேன். பையன், பொண்ணுக்கிட்ட தனியா நாலுவார்த்தை பேசணும்ன்னு ஆசைப்படுறான் மறுபடியும் அதே மீசைதான். டேய் நான் எப்படா சொன்னேன் மீசைக்கு குவாட்டர் கேன்சல். உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும்கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது.

நேர்முகத் தேர்விற்கு செல்லும் பணியாளனின் மனநிலையில் தான் அறைக்குள் நுழைந்தேன். நான் உன்னைப் பார்க்கும்போது நீ மண்ணையும், நான் மண்ணைப் பார்க்கும்போது நீ என்னையும் பார்ப்பதிலேயே பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன. யார் முதலில் பேச்சை துவங்குவது என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய மரணப்படுக்கையில் பக்கம் அமரப்போவது நீயேதான் என்று மட்டும் உள்ளுணர்வு ஆணித்தரமாக சொல்கிறது. அருகில் வந்து உன்னை இறுக்கி அனைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்து எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ? என்று கேட்டுவிட்டேன். அதை உன்னுடைய காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லாத அளவிற்கு மெதுவாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவு திரும்பிய போது மீண்டும் சோபாவில் அமர்ந்து உன்னுடைய பதிலுக்காக காத்திருந்தோம். நீ என்னம்மா சொல்லுற ? என்றார் என் மாமனார். சரி என்ற சொல்லுக்கேற்ப ஒரு மெல்லிய தலையசைப்பு. சட்டென்று மக்காவ் டவரிலிருந்து பஞ்ஜி ஜம்ப் அடித்தது போன்றதொரு ஜில்லிப்பு. அந்த நொடியிலிருந்து நான் வாழத் துவங்கியிருந்தேன்.

அன்று உங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது உன் அப்பாவின் கையை பற்றிக்கொண்டு “தேங்க்ஸ் மாமா...” என்று சொன்னேன். ஒரு அழகு பதுமையாய் பெற்றெடுத்து எனக்கே எனக்காக கொடுத்ததற்குத்தான் தேங்க்ஸ் சொல்கிறேன் என்ற பேசிக் நாலேஜ் கூட இல்லாத என் மாமனார் ஒன்றும் புரியாமல் தலை சொறிந்தபடி சரிங்க மாப்ள என்று அசடு வழிந்தார்.

இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment