25 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 25112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இணையவெளியில் மாஸ் ஹீரோ படங்கள் தவிர்த்து இதுபோல பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவருவதை முதன்முறையாக பார்க்கிறேன். இரண்டாம் உலகம் பற்றி தான் சொல்கிறேன். விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால், அதாவது சினிமா விமர்சனம் மட்டுமல்ல அரசியல் அல்லது whatever, ஒரு விமர்சனம் என்பது அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அது டைம்ஸ் ஆப் இந்தியாவாக இருந்தாலும் சரி, டைம்பாஸுக்காக எழுதும் வலைப்பதிவர்களாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் அதே விதிதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆயிரத்தில் ஒருவன் பிடித்தவருக்கு இரண்டாம் உலகம் பிடிக்காமல் போகலாம் அல்லது வைஸ் வெர்ஸா. சிலருக்கு இரண்டுமே பிடிக்காமல் போகலாம். ஆனால் இணையவெளியில் பொதுவாகவே நிறைய பேர் (என்னையும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளலாம்) தங்களுடைய விமர்சனத்தை justify செய்வதற்கு எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. படம் பிடித்தவர்கள் படத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு படம் பிடிக்காதவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகிறார்கள். மறுபடியும் வைஸ் வெர்ஸா. இன்னென்ன திரைப்படங்களை இன்னென்ன வகை ஆட்களுக்கு மட்டுமே பார்க்கத் தகுதியிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். சில சமயங்களில் அதுவே ரொம்ப சீரியஸாகிப் போய் அந்த படத்தை நல்லாயிருக்கு’ன்னு சொல்பவர்களெல்லாம் மனப்பிறழ்வு ஏற்பட்டவர்கள் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.

BTW, இரண்டாம் உலகம் பார்த்து முடித்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஏன் கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையணும். எதுக்காக ஹாலியுட்டு படங்களை பார்த்து அங்கெங்கு என தாக்கம், தழுவல் என்று சொல்லி கதை செய்ய வேண்டும். பேசாமல் வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?


கிழக்கு அதிரடி சேலில் எப்போதோ வாங்கிய சில புத்தகங்களை படிக்க நேரம் கிடைத்தது. முதலில், தத்தக்கா புத்தக்கா. எழுதியவர் ஜே.எஸ்.ராகவன். பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு சுவாரஸ்யமில்லை. மனிதர் ஆட்டோக்களை பற்றியும் அதன் ஓட்டுனர்களை பற்றியும் நிறைய ஆராய்ந்திருப்பார் போல. மொத்தம் முப்பது கதைகள். அவற்றில் பத்து ஆட்டோ சம்பந்தப்பட்டது. குறிப்பாக ஆட்டோக்காரருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் லொள்ளுத்தனமான உரையாடல்கள். இரண்டாவது, சோம. வள்ளியப்பன் எழுதிய திருமண கைடு. திருமண மேலாண்மை (!) புத்தகம். பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் என்பதால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். கடைசியாக, டாக்டர். ஷாலினியின் பெண்கள் மனசு. உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உதாரணங்களோடு சொல்லி, அவற்றிற்கான காரணம், தீர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பெண்கள் மனசு என்பது எனக்கு கொஞ்சம் அவுட் ஆப் ஃபோகஸ் டாபிக் என்றாலும் உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் முழுமையாக வாசிக்க முடிந்தது. நல்லவேளையாக இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் முழுத்தொகை கொடுத்து வாங்காமல் சல்லிசு காசில் வாங்கினேன்.

நேற்று டிவியில் எதிர்நீச்சல் பார்த்தேன். விஜய் டிவியில் வாரம் இரண்டு முறை ஒளிபரப்புவார்கள் போலிருக்கிறது. சமகால காமெடி படங்களைப் போலவே தொடங்கி அப்படியே சீரியஸான விஷயங்களை லேசாக உரசி முடித்திருக்கிறார்கள். தடகள வீராங்கனை சாந்தி விவகாரத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து சேர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம் வரவேற்கலாமா என்று குழப்பமாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் சில கருத்துகளை கோடிகளில் செலவிட்டு செய்யும்போது அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது அதற்கான களப்பணிக்காக பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் செங்கல் சூளையில் பணிபுரியும் சாந்திக்கு உதவியாக இருந்திருக்கும். சாந்தி அரசு உதவியில் தடகள பயிற்சியாளராக இருப்பதாக கடைசியாக ஏதோவொரு பேட்டியில் படித்த ஞாபகம். உறுதியாக தெரியவில்லை. எதிர்நீச்சலின் க்ளைமேக்ஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் தொடர்பான தமிழ் படங்களில் க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும். சக போட்டியாளர் நாயகனை தோற்கடிக்க சதி வேலைகள் செய்வார். ப்ளேட் வைத்து கீறுவது, காலை வாரிவிடுவது, அவருடைய உணவுப்பொருளில் எதையாவது கலப்பது என்று ஏதாவது. மேலோட்டமாக பார்த்தால் சினிமா சுவாரஸ்யத்திற்காக என்றாலும் இதுபோன்ற காட்சிகள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. சக போட்டியாளரை காலை வாரிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று நினைப்பவன் இரண்டாவது இடத்தை கூட பெற முடியாது. இறுதியாக, படம் பெயரில் என்ன இருக்கிறது எல்லாம் வாழ்ந்து காட்டுவதில் தான் என்பது போன்ற மாரலோடு நிறைவடைகிறது. ஆனால் படத்தின் முற்பகுதியில் சில காட்சிகளில் பெயரை வைத்துதான் நகைச்சுவை செய்கிறார்கள் என்பது நகைமுரண்.

பேசாம போறியா ? வாயில கத்திய விட்டு சுத்தவா ?
என்னுடைய திருமணத்திற்கு என்னைப் பெற்றவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சில பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் ஒருவகையில் சுயமரியாதை மீறல்தான். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துவிட்டாயிற்று. வேறு வழியில்லை. ஏதோ நடந்து முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...? பொதுபுத்திக்காரர்கள் மத்தியில் அப்படி இருக்க முடியவில்லை. நம் பின்னணி தெரியாத சில நண்பர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்கள் எப்போதாவது விளையாட்டாக பேசும்போதெல்லாம் உனக்கென்னப்பா உங்கப்பா கட்சியிலெல்லாம் இருக்கிறார். பணத்துக்கு பஞ்சமிருக்காது என்று விளையாட்டாகத்தான் என்றாலும் சீண்டுகிறார்கள். ஒரு வகையில் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சீண்டிப்பார்ப்பதில் ஒரு சுகம். அல்லது ஒருத்தர் ஒரு கட்சியில், ஏதாவதொரு லெட்டர் பேடு கட்சியில் இருந்தால் கூட அவர் பல சைபர் போட்ட கோடிகளில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பார் என்று நினைக்கிறார்களா என்று புரியவில்லை. அவ்வளவு மக்குகளா...? தமிழக கட்சிகளில் பதவி, அந்தஸ்து கிடைத்து பணம் சம்பாதிப்பவர்களை விட நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், இன்னும் சொல்வதென்றால் தன்னுடைய கைக்காசை போட்டு போஸ்டர் ஓட்டும் கடைநிலை தொண்டர்கள் தான் அதிகம். என்னைப் பெற்றவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான். இதுபோலவே, பொதுபுத்திக்காரர்களில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஆனால் இப்போது வேண்டாம். ஓவர் புலம்பல் ஒடம்புக்கு ஆகாது...!

வ.வா.ச படத்தில் பாக்காத பாக்காத அய்யயோ பாக்காத என்றொரு பாடல். வரிகள் தான் அப்படியே தவிர பாடல் முழுவதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பாடலின் இறுதியில் ஸ்ரீதிவ்யா படியேறி முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சிவகார்த்தி கீழிருந்து அவரை வரச்சொல்லி சைகை காட்டுகிறார். அப்போது திவ்யா பதிலுக்கு வரமுடியாது என்று ஒரு சைகை காட்டுகிறார் பாருங்கள். சொத்தை எழுதிவைத்துவிட்டு சந்நியாசியாக போய்விடலாம். நீங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2013

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 November 2013

கோவை நேரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகளுக்கு விமர்சனம் எழுதிய நேரம், ஆளாளுக்கு என் பொஸ்தவத்தையும் அடிச்சு தொவச்சு கும்மு கும்மு’ன்னு கும்முங்க ஏட்டய்யான்னு ஏகப்பட்ட ஈமெயில்கள். அதிலும் வலைப்பதிவர் ஜீவானந்தம் அவருடைய புத்தகத்தை கூரியரில் அனுப்பவே செய்துவிட்டார். அவருடைய வலைப்பூவின் பெயரே புத்தகத்தின் பெயரும் கூட – கோவை நேரம். கோவில்கள், சுற்றுலா தளங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

பதிவுலகில் ஜீவா என்னுடைய நெருங்கிய நண்பர் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. அதிகம் பழகவில்லை. மானசீக நண்பர் என்று வைத்துக்கொள்ளலாம். விவரமான மனிதர். கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் வெட்டி வியாக்கியானம் பேசிக் கொண்டிராமல் பிழைப்புவாதத்திற்கு எது தேவையோ அதை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர். ஏன் கோவில்கள் என்ற வறட்சியான வகையறாவை தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன். எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அப்படி கேட்கவில்லை. பதிப்பகத்தார்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது கிழக்கு பதிப்பக அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி விற்பனையாவதில்லை. அதனால் தான் அப்படி கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் வெளிப்படையானது. கோவில்களை பற்றி எழுதியிருப்பதால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இளவயதில் கோவில்களை பற்றி எழுதியிருக்கிறார் என்று நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கூட கெளரவித்தார்கள். அதுதான் அவர் கூறிய பதில். போதும். அவரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டு புத்தகத்தை விமர்சிக்கலாம்.

சங்கவியைப் போலவோ மற்ற பதிவர்களைப் போலவோ ஜீவாவின் புத்தகம் துக்கடா தாளில் அச்சிடப்படவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஆனால் வேறு சில விஷயத்தில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்ப்பதற்கு முன்பு புத்தகத்தில் உள்ள கொஞ்சூண்டு நல்ல விஷயங்கள் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

புத்தகத்தின் முதல் பாதி கோவில்களைப் பற்றியது. தமிழகத்தில் உள்ள அதிகம் பிரசித்தி பெறாத பன்னிரண்டு சிறிய கோவில்களை பற்றி சுருக்கமாய் எழுதியிருக்கிறார். பிற்பகுதி சுற்றுலா தளங்கள் பற்றியது. போலவே தமிழகத்திலுள்ள அதிகம் பிரசித்தி பெறாத சிறிய சுற்றுலா தளங்கள் பற்றியது. முதல் பாதியில் ஸ்தல வரலாறு, ஊர்களின் பெயர்க்காரணம் என சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. மற்றும் கோவிலை அருகிலிருக்கும் டவுனிலிருந்து எப்படி சென்றடையலாம் என்று எளிதாக சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலை வையாவூர் பற்றி புத்தகத்திலிருந்து :- ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்தபோது ஒரு இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறு கைக்கு மலையை மாற்றிக்கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்னும் பொருளில் மலை வையாவூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கெடாவெட்டு பகுதிக்கு போகலாம். ஒரு புத்தகம் எழுதுபவர் எழுத்தாளராக இருக்க வேண்டும். ஆனால் ஜீவா புத்தகத்திலும் வலைப்பதிவராகவே இருக்கிறார். அதுதான் பிரச்சனை. வலைப்பதிவில் எழுதியவற்றை புத்தகமாக வெளியிடும்போது அவற்றை பட்டி பார்த்து டிங்கரிங் செய்ய வேண்டுமென பதிவுலக ஆசான்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜீவா அப்படி எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. 

வலைப்பதிவுகளில் டிஸ்கி, முஸ்கி போன்ற கந்தாயங்கள் பார்த்திருப்போம். அதையெல்லாம் கூட புத்தகத்தில் நீக்காமல் அப்படியே வெளியிட்டு தொலைத்திருக்கிறார். அப்புறம் ஆங்காங்கே அடைப்புகுறிகளுக்குள் சிபி ஸ்டைல் சுய எள்ளல்கள். சுற்றுலா பகுதியில் ‘அம்மணிகள்’ என்ற வார்த்தை அடிக்கடி தென்படுகிறது. அங்கே அம்மணிகள் குளிக்கிறார்கள், இங்கே அம்மணிகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், குளிர்ச்சியாக இருக்கிறது, எச்சச்ச கச்சச்ச என ஒரே அம்மணி புராணம். நீ ரொம்ப யோக்கியமா ? என்று கேட்கப்பிடாது. அம்மணிகளை பற்றி எழுதுவதில் பிரச்சனையில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் பற்றிய புத்தகம் என்று சொல்லிவிட்டு அம்மணிகளை பற்றி எழுதினால் என்ன அர்த்தம். வேண்டுமென்றால் அம்மணிகள் பற்றி ஒரு தனி புத்தகம் போட்டுக் கொல்லலாமே ? தவிர, இவையெல்லாம் ஏதோ வலைப்பதிவில் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடலாம். காசு கொடுத்து யாராவது வாங்கிப் படித்தால் அவருடைய மனநிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். 

புத்தகம் முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்கள். ஒரு பக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் குட்டி குட்டியாக நான்கு அல்லது ஆறு புகைப்படங்கள் உள்ளன. அவற்றை நீக்கிவிட்டால் அரை பக்கத்திற்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இத்தனைக்கும் புகைப்படங்கள் பெரும்பாலும் அநாவசியமானதாகவே இருக்கின்றன. வெவ்வேறு ஆங்கிளில் ஒரே கோவில், சுற்றுலா தளங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், டூப்ளிகேட் மினரல் வாட்டர் பாட்டில், மீன் வறுத்தெடுக்கும் எண்ணைச்சட்டி என பல அரிய புகைப்படங்களை காண முடிகிறது.

எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அடடா அபாரம்...! மொத்தமே இரண்டரை பக்கங்கள். அதில் இரண்டு பக்கங்களுக்கு புகைப்படங்கள். மீதமுள்ள அரை பக்கத்தில் ஒரு பாரதியார் பாடலிலிருந்து சில வரிகள். நல்லவேளை பாரதியார் தற்போது உயிரோடு இல்லை. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் இல்லம் குறித்த கட்டுரையும் அல்மோஸ்ட் அப்படித்தான்...!

மொத்தத்தில் ஜீவாவின் கோவை நேரம் புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள், அச்சு பிச்சு சமாச்சாரங்கள், ஜல்லியடித்தல்கள் போன்றவற்றை நீக்கிவிட்டால் ஒரு பத்து பக்கங்கள் மட்டும் உருப்படியாக இருக்கலாம். அவ்வளவுதான்...! ஜீவா அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதே புத்தகத்தை கலரில் கொண்டுவர இருப்பதாக கூறினார். தயவு செய்து அந்த முயற்சியை கைவிட்டுவிடுவது நல்லது. நமக்கு...!

கோவை நேரம்
ஜீவானந்தம்
கோவை பதிவர் பிரசுரம்
விலை ரூ.110/-

ஆன்லைனில் வாங்க

அடுத்து வருவது: இரண்டாம் உலகம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 November 2013

Nuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யாருக்கு யாரோ ஸ்டெப்னி என்கிற உன்னதமான சினிமா 2007ம் ஆண்டு வெளிவந்தபோது அதனை ரசிகர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. திரை மொழியை மிகச்சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளின் மூலம் பல தகவல்களையும் சிந்தனைகளையும் குறியீடுகளாக உணர்த்திய அத்திரைப்படத்தை தமிழர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். அவைகளை விளக்கும் பொருட்டு இதோ என்னுடைய கோனாரு உரை !

- முதலில் படத்தின் தலைப்பு. படத்தின் கதைக்கருவான முக்கோண காதலை குறிக்கும்படி ‘யாருக்கு யாரோ’ என்ற பதத்தையும், காருக்கு பின்னால் உள்ள ஸ்டெப்னி என்பதோடு சேர்த்து மிக பொருத்தமாக ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி ?’ என்று சூட்டியிருக்கிறார்கள். தலைப்பில் ஸ்டெப்னி என்ற சொல் கதை நாயகிகளை குறிக்கிறது. பெண்களை ஸ்டெப்னி என்று குறிப்பிட்டு இழிவு படுத்தியிருப்பதாக எண்ணுதல் தவறு. கதைப்படி நாயகன் டேவிட்டின் கனவு கார் தொழிற்சாலை அமைப்பது. அவ்வாறாக கார் என்பது டேவிட்டின் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கிறது. காருக்கு பிற்பகுதியில் ஸ்டெப்னி இருக்கிறது. அதுபோல டேவிட் என்ற மனிதனுக்கு பின்னால், அவனுடைய வெற்றிக்கு பின்னால் இருக்கக்கூடிய பெண்ணை ‘ஸ்டெப்னி’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

- அடுத்தது படத்தலைப்பு திரையில் தோன்றிய விதம். வெகுஜன சினிமாக்களில் தோன்றுவது போல ரகளையான கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. மிக ரம்மியமான பின்னணி இசையினூடே தலைப்பு தோன்றுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, ‘யாருக்கு யாரோ ஸ்டெப்னி’ என்ற தலைப்பு திரையில் அலைபாய்ந்தபடி தோன்றுகிறது. அது டேவிட்டுடைய மனது தீபா, ஜோதி காதல்களுக்கிடையே அலைபாய்வதற்கான குறியீடு. தலைப்பில் ‘ஸ்டெப்னி’ என்ற சொல் ஆங்கிலத்தில் ‘STEPNEE’ என்று காட்டப்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தையுடைய ஸ்பெல்லிங் ‘STEPNEY’ என்று இயக்குநருக்கு தெரியாமலா இருந்திருக்கும். டேவிட் வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளின் STEP NEE என்பதனால் அப்படி காட்டியிருக்கிறார்.

- கதையின் நாயகன் டேவிட்டின் அறிமுகக்காட்சி. தீபாவின் கழுத்துச்சங்கிலியை சமூக விரோதிகள் பறித்துக்கொண்டு பைக்கில் பறக்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கே டேவிட் வருகிறார். கீழே விழுந்து கிடக்கும் தீபாவை பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்துகிறார். இக்காட்சியின் மூலம் டேவிட் உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை காட்டிலும் தர்க்கரீதியாக சிந்திப்பதை விரும்புபவன் என்று ரசிகர்கள் மனதில் பதியப்படுகிறது. கூடவே, அவனுடைய அபார நினைவாற்றல், துறை சார்ந்த அறிவு, இசை நாட்டம், கொடை பண்பு போன்றவற்றையும் நேர விரயம் செய்யாமல் எளிமையாக சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

- படம் முழுக்க கருப்பு நிறத்தை அறிவின் குறியீடாகவும், சிகப்பு நிறத்தை அன்பின் குறியீடாகவும் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். டேவிட் கருப்பு நிற ஸ்கூட்டியையும், தீபா சிகப்பு நிற ஸ்கூட்டியையும் பயன்படுத்துகிறார். அதே சமயம் டேவிட் தீபாவின் மீதும், செயின் திருடர்கள் மீதும் அன்பு செலுத்தும் காட்சிகளில் சிகப்பு நிற சட்டை அணிந்து தோன்றுகிறார். தீபாவும் அன்பை வலியுறுத்தும் பாடலோடு தான் அறிமுகமாகிறார். முக்கியமான காட்சிகள் அனைத்திலும் சிகப்பு நிற உடையணிந்து வருகிறார். மற்றொரு நாயகியான மஞ்சு, கனடாவிலிருந்து சிகப்பு நிற காரில் வந்து இறங்குகிறார். டேவிட்டும் மஞ்சுவும் உணர்வுகளால் சங்கமிக்கும் காட்சியில் இருவரும் சிகப்பு நிற உடை அணிந்துள்ளனர்.

- என்னதான் கதை கார், காதல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அதன் கரு மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘யாருக்கு யாரோ’ என்ற தலைப்பினைக் கூட யாருக்கு யாரோ கடவுளாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று குறிப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஹிந்துப்பெண் தீபா கிறிஸ்தவ துதிப்பாடலை பாடுவதாக படம் துவங்குகிறது. மற்றொரு காட்சியில் கிறிஸ்தவரான டேவிட்டை பார்த்து ‘கண்ணா, நீ எங்கே...?’ என்று தீபா பாடுகிறார். டேவிட் அணிந்துள்ள சிலுவை குறியீடு கொண்ட சங்கிலியை தீபாவுக்கு கொடுக்கிறார். இந்த சிலுவை டாலர் தான் படத்தின் உயிர்நாடி...! எப்படி என்பதை பின்னால் பார்க்கலாம்.

- பாடல்கள், அதில் நடிகர் / நடிகை வெளிப்படுத்தும் நடனம் அருமையானதொரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் ஓவராக ஆட்டம் போடக்கூடாது அல்லவா ? அதை உணர்த்தும்பொருட்டு அளவாக ஆடுகிறார் டேவிட். வாழ்க்கை எத்தனை எளிமையானது என்பதை உணர்த்துவதற்காகவே டேவிட் மிகவும் எளிமையான நடன அசைவுகளை செய்து காட்டுகிறார் என்று புரிந்துக்கொள்ளலாம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடல்கள் அனைத்தும் நம் மன-உளைச்சலை போக்கி ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

- ஒரு காட்சியில் கடற்கரையில் வைத்து தீபாவும், டேவிட்டும் சந்திக்கிறார்கள். டேவிட் தன்னுடைய தொழிற்சாலையை துவங்க கடன் கிடைக்க இருப்பதாக சொல்கிறான். அதைக் கேட்ட தீபா மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுகிறாள். டேவிட் அவளை பின்தொடர்ந்து ஓடுகிறாள். அப்போது அவனுக்கு இடையூறாக ஒரு கட்டுமரம் எதிர்ப்படுகிறது. அதாவது தீபா – டேவிட் காதலுக்கு ஏதோவொரு இடையூறு இருக்கிறது என்ற எச்சரிக்கை ஊட்டப்படுகிறது. இரண்டாவது பாதியில் மஞ்சு கதைக்குள் நுழைந்து தீபா – டேவிட் காதலுக்கு இடையூறு செய்வதன் மூலம் அது ஊர்ஜிதமாகிறது.

- ‘ராசாத்தி என் ஆசை ராசாத்தி’ என்றொரு பாடல். காதலிக்கும்போது பொங்கியெழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமாக துள்ளிசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோ ஸ்டேன்லி. பாடலில் ஒவ்வொரு முறை ‘ராசாத்தி’ என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதும் வெவ்வேறு தொனியில் வெவ்வேறு உணர்ச்சிகளை பாடகர் வெளிப்படுத்துவதை உன்னிப்பாக கவனித்து கேட்டால் உணர முடியும். பாடலின் இடையிடையே வண்ண வண்ண உடைகளணிந்து தீபாவும் டேவிட்டும் ஓடுவதாக காட்சியாக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய காதல் வாழ்க்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஓடுவதற்கான குறியீடு.

- கார் தொழிற்சாலைக்கு கடன் வழங்கும்பொருட்டு ஃபைனான்சியர் வருகிறார். டேவிட்டும் நண்பர்களும் ஆளுயுர மாலையோடு அவரை வரவேற்கின்றனர். ஃபைனான்சியர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கே உரிய பாணியில் டேவிட்டின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் பற்றி விசாரிக்கிறார். அவருக்கு முழு திருப்தியில்லை. கடன் வழங்க முடியாது என்ற தன்னுடைய நிலையைச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். காட்சி சோகமயமாகிறது. அப்போது ஒரு கதாபாத்திரம் ஃபைனான்சியருக்கு போட்ட மாலையை எடுத்துச்சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கார் படத்திற்கு போட்டுவிட்டு சோகமாக நிற்கிறார். இது குவென்டின் டொராண்டினோ பாணியிலான ப்ளாக் காமெடி !

- ‘லவ் ப்ரோபோசல்’ காட்சியில் இயக்குநர் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கவித்துவமான காட்சியமைப்பை பயன்படுத்தியுள்ளார். ‘ஐ லவ் யூ’ – ‘லவ் யூ டூ’ போன்ற அபத்தங்கள் இல்லை. தீபா டேவிட்டிடம், தீடிரென ‘உங்க லைப் பார்ட்னரு யாரு ?’ என்று கேட்கிறார். டேவிட் நேரடியாக பதில் சொல்லவில்லை. ‘கார் படத்தை எனக்கு கொடுத்த மகாராணி !’ என்று குறிப்பால் உணர்த்துகிறார். தீபா அதனை கச்சிதமாக புரிந்துக்கொள்கிறார். உடனே டூயட் பாட ஓடிவிடாமல் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் டேவிட் – தீபா தம்பதியர்.

- டேவிட்டின் மனநிலை மாற்றங்களைக் கொண்டு நமக்கெல்லாம் ஒரு ஜென் நிலையை சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர். கார் தொழிற்சாலைக்கு கடன் கிடைக்க இருப்பது, அது ரத்தாகி போவது, தீபாவுடன் காதல் பரிமாற்றம், மஞ்சுவின் வருகை, தீபாவின் பிரிவு என்ற சகல விதமான காட்சிகளுக்கும் டேவிட் அழுகையோ, சிரிப்போ அல்லது எந்தவிதமான உணர்ச்சிகளையோ வெளிக்காட்டாமல் புத்தரைப் போல காட்சியளிக்கிறார். நாமும் அதைப்போல வாழ்க்கையில் எத்தகைய இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

- டேவிட்டின் சிலுவை டாலர் கதையின் உயிர்நாடி என்று கூறினேன் அல்லவா ? இங்கே சிலுவை என்பது மனது அல்லது காதலை குறிக்கின்றது. முதலில் மஞ்சு தன்னுடைய மனதை, அதாவது சிலுவை டாலரை டேவிட்டிடம் கொடுக்கிறார். பின்னர், அதனை டேவிட் தீபாவிடம் கொடுக்கிறார், தீபா முதலில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். டேவிட்டை புரிந்துக்கொண்டபிறகு தீபாவே அதனை விரும்பிக்கேட்டு வாங்கிக்கொள்கிறார். இறுதியில் தீபா அந்த டாலரை மஞ்சுவிடமே ஒப்படைத்துவிடுகிறார். அதாவது டேவிட்டின் காதல் மஞ்சுவிடம் சேர்பித்து விடப்படுகிறது. டாலர் மஞ்சுவிடமிருந்து மஞ்சுவிற்கே திரும்ப கிடைப்பதன் மூலம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

- உச்சக்கட்ட காட்சி. தீபா சிலுவை டாலரையும், ஸ்டெப்னியையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். சிறிய ஊடலுக்கு பின்னர் டேவிட்டும் மஞ்சுவும் இணைகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஹுண்டாய் காரை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். அதாவது தங்களின் தொழிலான காரையே கடவுளாக கருதி சுற்றி வருவதோடு படம் முடிந்து திரை இருள்கிறது.

அடுத்து வருவது: கோவை நேரம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 November 2013

வில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீட்ஸா பாகம் 2 என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் அரசியலை சில மாதங்களுக்கு முன்பாகவே கேபிள் சங்கர் மூலமாக அறிந்துக்கொள்ள முடிந்தது. வில்லா படத்திற்கு பீட்ஸாவின் பெயரை சூட்டுவதை கார்த்திக் & தீபன் இருவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு நல்ல படைப்பாளியாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வியாபாரி...? அதுதான் நடந்திருக்கிறது. படத்தின் ட்ரைலரில் “இது சீக்வலா...?” என்று ஒரு கதாபாத்திரம் கேட்க, “இல்ல சார், டோட்டலா வேற கதை” என்று கதாநாயகன் வாயிலாக மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார் இயக்குநர். அப்போதே வில்லாவில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறந்துவிட்டது. இருப்பினும், வில்லா பார்க்கப் போகிறவர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும்.

1. பீட்ஸா என்பதை சுத்தமாக மறந்துவிடுங்கள். யாராவது பீட்ஸா என்றால் என்னவென்று கேட்டால் கூட சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிடக்கூடிய வஸ்து என்று சொல்லுமளவிற்கு மறந்துவிடுங்கள்.

2. எல்லா ஹாரர், ஃபேண்டஸி படங்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு பகுத்தறிவு என்று ஏதாவது இருந்தால் தயவு செய்து அதனை இரண்டு மணிநேரங்களுக்கு செயலிழக்கச் செய்துவிடுங்கள்.

அசோக் தொழில் நட்டம், தந்தையின் உயரிழப்பு ஆகியவற்றைக் கடந்து பாண்டிச்சேரியில் தந்தையின் பெயரிலிருக்கும் ஒரு வில்லாவிற்கு அதனை விற்கும் நோக்கத்துடன் செல்கிறான். அசோக்குடைய காதலி சஞ்சிதாவிற்கு வில்லா மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அசோக் சஞ்சிதாவின் முடிவுடன் சமாதானமாக இருக்கும்போது வில்லாவில் ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் ஓவியங்களில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும், நடக்க இருக்கிற சம்பவங்களும் காணப்படுகின்றன. அதன்பிறகு நடப்பவற்றை பார்வையாளர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

முதலில், ஹாரர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கவனித்துவிடலாம். ஹாரர் என்ற சொல்லுக்கு அதீத பயம் என்று பொருள். ஒரு ஹாரர் படம் என்பது பார்வையாளர்களுக்கு பயமூட்டுவதாக அமைய வேண்டும். ஆனால் பொதுவாகவே, வேறு சில ஜானர்களையும் ஹாரர் படங்களோடு சேர்த்துவிடும் பழக்கம் விக்கிபீடியா காலம் தொட்டே இருந்துவருகிறது. இது ஒரு புறமிருக்கட்டும் படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றாலே வேலைக்காரி விநோதமாக சிரிப்பது, வாட்ச்மேன் முறைத்து பார்ப்பது, அப்புறம் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சொல்வாரே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். வில்லா அத்தகைய படங்களிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த படம் குறுக்கெழுத்து புதிரை நிரப்புவது போல சுவாரஸ்யமானது என்று நண்பர் ஒருவர் விளக்கினார். வில்லாவும் கிட்டத்தட்ட அதுபோல தான். படத்தின் துவக்கத்திலிருந்தே ஆங்காங்கே நமக்கான ஹிண்ட்ஸ் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதனை புரிந்துக்கொள்ளும்போது பரவசமடைகிறோம். கதை மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே நகர்கிறது. அதுதானே கிக் ! ரகசிய அறையில் உள்ள ஓவியங்களை கதாநாயகன் கண்டுபிடித்ததும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு ஒரு அதிரடியை காட்ட வேண்டுமென்பதற்காக கிராபிக்ஸில் பொருட்கள் எல்லாம் விழுவதும், பறப்பதுமாக காட்டுகிறார்கள். அங்குதான் துவங்குகிறது வினை, படத்திற்கு !

தமிழ் சினிமா ஹாரர் படங்களில் இன்னொரு பொதுவான விஷயம் உள்ளது. ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் பெனஞ்சு அடிச்சு ஆன்மிகமும் அறிவியல் தான் தெரியுமோ ? குனிஞ்சு நிமிந்து கோலம் போட்டா பூர்வாங்க உட்கட்டாசனா என்றெல்லாம் க்ளாஸ் எடுக்க துவங்கிவிடுவார்கள். அதுபோக யாராவது ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு கபடியெல்லாம் ஆடுவார்கள். சமகாலத்தில் சாமியாரை எல்லாம் காட்டினால் போங்கடா நொன்னைகளா என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் ஃபிரெஞ்சு சூனியக்காரன், witchcraft என்றெல்லாம் பாலிஷ்டாக சொல்லி அங்கிருந்து பில்லி, சூனியம், மாந்திரீகம் என்று படிப்படியாக இறங்கி வருகிறார்கள். அதாவது விடுதலைக்கு முன்பு பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நரபலியெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கொடூரமான ஃபிரெஞ்சு சூனியக்காரன் கட்டிய வில்லா அது. அதனால் அந்த வீடு முழுக்க நெகடிவ் சக்தி நிறைந்து கிடக்கிறது. நெகடிவ் சக்திகளை அழிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு வருவது கிளைமேக்ஸ்.

ஹீரோ அசோக் செல்வனை பார்த்துவிட்டு நிறைய பேரு யாரு ? என்றே கேட்கிறார்கள். சூது கவ்வும் படத்தில் பொட்டி தட்டுபவராக நடித்தாரே என்று சொல்லி விளக்க வேண்டியிருக்கிறது. அதிகம் நடிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம். உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார். அவதார் முக நாயகி சஞ்சிதாவை மறுபடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு இதுவே கடைசி படமாக அமையக் கடவது.

ஒரு கதாபாத்திரம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக காட்டும்போது பார்வையாளர்களுக்கு கதை சொல்ல ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அதற்கு அந்த கதாபாத்திரம் யாரிடமாவது போன் பேசுவது போலவோ, டைரி எழுதுவது போலவோ வைப்பார்கள். அது மாதிரியோ என்னவோ ஒரு ஹீரோ நண்பன் கதாபாத்திரம் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 7G ரெயின்போ காலணி உட்பட சில படங்களில் நடித்தவர். பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறேன். படத்தை தன் பங்குக்கு எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்திருக்கிறார். அப்புறம் நாசர், சில குறும்பட முகங்கள், ஒரே ஒரு காட்சிக்காக எஸ்.ஜே.சூர்யா !

இயக்குநர் தீபன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு நல்வரவு. சில தகவல்களை மேலோட்டமாக தூவிவிட்டு விருப்பமிருந்தால் நீயே தேடி தெரிந்துக்கொள் என்று பார்வையாளர்களின் கையில் விட்டுவிடுவது இவருடைய சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை நன்றாகவே கடத்தியிருக்கிறார் அதன் பிறகு தான் தடுமாற்றங்கள் துவங்குகின்றன. குறிப்பாக அடுத்த பாகத்திற்கு எப்படி தொடுப்பு கொடுப்பது என்று யோசித்து யோசித்தே அதனை மட்டும் திறம்படச் செய்துவிட்டு இந்த பாகத்தின் முடிவை கோட்டை விட்டிருக்கிறார். அப்புறம், சஞ்சிதாவின் கேரக்டர் என்ன மாதிரியானது என்று சரிவர சொல்லப்படவில்லை. அவருக்கு அந்த வில்லா மீதும் அதன் மர்மங்கள் மீதும் ஆசையா அல்லது பணத்தாசையா அல்லது உண்மையில் அசோக்கை காதலிக்கிறாரா ? என்று கடைசி வரை புரியவே இல்லை.

இறுதியாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பொதுவாக, ஹாரர் படங்களில் ஒரு முடிச்சு இருக்கும், பின்பு அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு சிக்கல்கள் துவங்கும், இறுதியில் அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் அல்லது தீர்க்கப்பட்டது போல தோன்றி அடுத்த பாகத்திற்கான தொடுப்பு வைத்து முடிக்கப்படும். ஆனால், வில்லாவில் இறுதிவரை தீர்வு என்பதே இல்லாமலிருப்பது தான் மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை அதுதான் மாற்று சிந்தனை என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ...? அல்லது விஸ்வரூபம் போல அடுத்த பாகத்தையும் சேர்த்துதான் ஒரு கதையாக பார்க்க முடியுமோ என்னவோ...?

இரண்டு, படத்தின் எந்த காட்சிகளும் பயமூட்டுவதாக இல்லை. முதல் பத்தியில் படம் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வலியுறுத்தினேன் அல்லவா...? அதனோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வில்லா ஒரு ஹாரர் படம் கிடையாது. வேண்டுமென்றால், மிஸ்ட்ரி வகையறாவில் வைக்கலாம். அந்த எண்ணத்தோடு வில்லா’வை பார்த்தால் ரசிக்கலாம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதற்காக வரவேற்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 November 2013

அப்ரைசல் பற்றி கபிலர் !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கக்கால மன்னர்கள் அள்ளிக்கொடுப்பதில் கலியுக கங்காணிகளுக்கு நேரெதிர் மனோபாவம் கொண்டவர்கள். யாராவது தேடி வந்து பூ மாரி தென் மாரி என்று பாடிவிட்டால் போதும், பொற்காசுகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். சங்கக்கால மன்னர்களுள் யார் சிறந்தவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்களை வைத்து நாம் எந்தவொரு முடிவுக்கும் வந்து விட முடியாது. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என ஐடியா கொடுக்கும் மங்குனி அமைச்சர் வாய்த்தவர்கள் உப்புமா புலவர்களை வைத்தேனும் பாடல்களை பாடி வைத்திருக்கலாம். உண்மையில் நல்லாட்சி புரிந்த மன்னர்களுக்கு ஆள் செட்டப் செய்து பாடல் இயற்றுவதற்கெல்லாம் நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். எல்லாம் ‘கலாம்’ தான். உண்மை என்னவென்று யாருக்குத் தெரியும் ?

மலையமான் திருமுடிக்காரி. அவரைப் பற்றி ஓரளவுக்கு விரிவாக ஏற்கனவே பார்த்திருந்தோம். ஒரு உபரித்தகவல். காரி கொடை குணத்தில் சிறந்தவன் என்று தெரியும். எவ்வளவு சிறந்தவன் என்றால் போற்றிப் பாடி பரிசில் பெற வரும் புலவர்களை சீர்த்தூக்கி பாராமல் எல்லோருக்கும் சகட்டுமேனிக்கு கொடை அளிப்பவன். அதாவது ஃபெர்பாமன்ஸ் பேஸ்ட் அப்ரைசல் கிடையாது. கற்றுத்தேர்ந்த புலவரானாலும் கற்றுக்குட்டி புலவரானாலும் ஒரே வகையான பரிசில் தான். இது காரியுடன் கூடவே சுற்றிய கபிலர் போன்ற திறமைசாலிக்கு உறுத்தியிருக்க வேண்டும். தன்னுடைய அப்ஜெக்ஷனை புறநானூற்றில் பதிந்திருக்கிறார்.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!

(புறம் – 121)

அதாவது, “மிகுந்த வண்மை குணம்கொண்ட தலைவனே...!  வள்ளியோன் ஒருவன் இருந்தால், நான்கு பக்கங்களிலிருந்தும் மக்கள் பலர் பரிசிலை நாடி அவனிடம் வருவார்கள். அவர்களின் தராதரத்தை அறிதல் மிகவும் அரிது. அவர்கட்குப் பொருள் ஈதல் மிகவும் எளிது. நீ அவ்வரிசையறிதலை நன்கு அறிந்தாய் ஆயின், புலவர்களிடம் வரிசை கருதாது ஒரு தரமாகப் பார்ப்பதை விட்டுவிடுக...” என்கிறார். சுருங்கச் சொல்வதென்றால், “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்கிறார்.

கேட்டாரா காரி ? புலவர் கூறியதை அவன் மனம் சிறிதும் கொள்ளாமல் மடமையிலேயே இருந்தது என்கிறது வரலாறு.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment