28 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 28102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கலவை இடுகை என்பது எழுதுவது நின்றுபோய் விடக்கூடாது என்பதற்காக நானாகவே ஏற்படுத்திக்கொண்ட கமிட்மென்ட். எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட டைரி எழுதுவது போல எதையாவது பதிந்து வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அதையும் மீறி கடந்த வாரம் எழுத முடியாத அளவிற்கு அலுவலகத்தில் ஆணி. ரிவெட் என்றுகூட சொல்லலாம். வாரத்துவக்கத்தில் இரண்டு நாட்கள் காலையிலிருந்து இரவு வரை பன்னிரண்டு மணிநேரம் பணிபுரிய வேண்டிய சூழல். பன்னிரண்டு மணிநேரம் என்பதில் சிக்கல் இல்லை. போக வர பயண நேரத்தையும் சேர்த்தால் பதினாறு மணிநேரம். ஆனால் இந்த இரண்டு நாட்களில், பீக் அவர்ஸில் அலுவலகம் நோக்கி பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர முடிந்தது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற சங்கடம் உள்ளவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்தால் பூரண குணமாகிவிடும். அவை இல்லாதவர்கள் பயணம் செய்தால் எல்லா வலியும் வந்து சேர்ந்துவிடும். பேச்சிலர் ரூம்களில் இருக்கும் டூத்பேஸ்டை போல பிதுக்கிவிடுகிறார்கள். கிண்டி சுரங்கப்பாதை அருகில் நடந்து செல்பவர்களிடையே கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், சில கூறு கெட்ட குக்கர்கள் முண்டியடிக்கும் நோக்கில் எதிரில் வருபவர்களுக்கான பாதையில் புகுந்து அட்ராசிட்டி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை ட்ராபிக் போலீஸ் மடக்கி லைசென்ஸ் இருக்கா ? என்று கேள்வி கேட்கப்போகிற நாள் வந்தாலும் வரலாம்.

ஆரூரார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் முதலாவதாக சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி வேட்டையை துவங்கினேன். ரேகா மணவயதை அடைந்த ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்து பெண். மணமகன் தேடுதல் நடைபெறுகிறது. கை நிறைய சம்பளம் வாங்கும், கெட்ட பழக்கங்களில்லாத என்று சொல்லப்படும் அர்ஜுனுக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அர்ஜுன் மேலைநாட்டு நாகரிகத்துடன் வாழ்பவன். அவனுக்கு சீட்டாட்ட, சிகரெட், மது, மாது பழக்கங்கள் இருப்பது ஒவ்வொன்றாக ரேகாவுக்கு தெரிய வருகிறது. அர்ஜுனின் நடத்தைகளால் நிம்மதியின்றி தவிக்கிறாள் ரேகா. இறுதியில் விவாகரத்து என்னும் புரட்சிகரமான முடிவை எடுக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. அப்போதைய காலகட்டத்திற்கு விவாகரத்து என்பதே புரட்சியானதாக இருந்திருக்கலாம். சமகாலத்தோடு ஒப்பிட்டால் ரேகாவின் விவாகரத்து முடிவை இயற்கையான எதிரொலிப்பு என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமானால் ரஞ்சனி செய்ததை புரட்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்து படிக்க வேண்டிய லிஸ்டில் இருப்பவை :- ஜே.கே, ஒரு நடுப்பகல் மரணம், கொலை அரங்கம், நிர்வாண நகரம். பரிசீலனைகள் வரவேற்கப்படுகின்றன.

கலிபோர்னியாவில் புதியதாக ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. சரி அதற்கென்ன என்கிறீர்களா ? உணவகம் கழிவறையுடன் தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் வடிவமைப்பில் இருக்கைகள், Golden Poop Rice, Smells like Poop, Bloody Number Two போன்ற உணவுவகைகள். பதறாதீர்கள் உணவுவகைகளின் பெயர் மட்டும்தான் இப்படி. உதாரணத்திற்கு Black Poop என்கிற பெயர் கொண்டது உண்மையில் Chocolate Sundae என்ற சுவையான ஐஸ்க்ரீம் ! உணவுகளும் ஒரு மினியேச்சர் டாய்லெட் பவுல் வடிவில் உள்ள ப்ளேட்டில் படைக்கப்படுகின்றன. தைவான், ஜப்பான் உட்பட பன்னிரண்டு நாடுகளில் ஏற்கனவே பிரபலமான கழிவறை கான்செப்ட் தான் இப்போது அமெரிக்காவில் என்ட்ரி அடித்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் வராதா என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். இங்கே சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு சாப்பிட்டால் கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிற உணர்வு தாராளமாக கிடைக்கும். புகைப்படங்கள்.

மூடர் கூடம் பார்க்கக் கிடைத்தது. அபவ் ஆவரேஜ் என்று சொல்லலாம். கதாபத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள், ஆங்காங்கே சிறுசிறு காட்சிகள் என ரசிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படத்தில் ஒரு பத்து வசனங்கள் க்ளாப்ஸ் அடிக்க வைக்கிற ரகம். அவை தவிர நிறைய சலிப்பூட்டுகின்றன. எனினும் படத்தில் சிந்திக்க வைக்கிற விஷயங்கள் சில இருக்கின்றன, நேரமில்லை. ஓவியாவின் தங்கையாக வரும் குட்டியை பிடித்துவிட்டது. இன்னும் நான்கே வருடங்களில் அட்டகாசமான ஹீரோயினாக வருவார் பாருங்கள். டவுன்லோட் செய்த வெர்ஷனில் ஃபஸானா போர்ஷன் வரவில்லை. 

வார இறுதியில் சுட்ட கதை படம் பார்த்தேன். நேரம் கிடைப்பின் தனி இடுகை எழுதுகிறேன். ஆரம்பம் படத்திற்கு FDFS டிக்கெட் எடுத்தாயிற்று !

Hunt for Hint விளையாடிய அனுபவத்தை சொல்லியாக வேண்டும். முதல் ஆண்டு அந்த பக்கமே போகவில்லை. இரண்டாம் ஆண்டு விவரம் தெரியாமல் மெதுவா விளையாடிக்கலாம் என்று ரெஜிஸ்டர் மட்டும் செய்துவிட்டு சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். இந்த ஆண்டு, தேதிக்காக காத்திருந்து விளையாடத் துவங்கினேன். சில லெவல்கள் கடந்தபின்பு தான் புலி வாலை பிடித்துவிட்டதை உணர்ந்தேன். இரண்டு நாட்கள் கணினியை விட்டு எங்கேயும் நகரவில்லை / நகர முடியவில்லை. அப்படி இப்படியென போராடி இருபது லெவல்களை தாண்டியிருந்தபோது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்திருந்தன. ஒன்று, திங்கட்கிழமை விடிந்து அலுவலகத்திற்கு அழைத்தது. இரண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மூளை சரிவர வேலை செய்யாமல் போனது. குடும்ப நலன் கருதி அத்துடன் விளையாட்டை நிறுத்திக்கொண்டு இனி வரும் வருடங்களில் ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாடுவதாக இருந்தால் அலுவலகத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு, தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டபடி ஹாயாக விளையாட வேண்டும். HFHஐ தயார் செய்த குழுவினருக்கும், வெற்றி பெற்ற மூளைக்காரர்களுக்கும் வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 October 2013

கபிலரின் கலாய்த்தல் திணை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலில், பொதுவாக மப்பில் இருப்பவர்கள் மத்தியில் நிகழும் சில உரையாடல்களைப் பற்றி பார்ப்போம். நண்பர்கள் புடைசூழ போதையை போட்டுக் கொண்டிருக்கும்போது குழுவில் யாரேனும் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு “மச்சான்... நான் போதையில சொழ்றன்னு நினைக்காத....” என்று ஆரம்பிப்பார். உடனே அவருக்கு ஏறிவிட்டது என்கிற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு சிலர் நண்பராவது மண்ணாவது உனக்கு சீக்கு வந்தா எனக்கென்ன என்கிற ரீதியில் பழகுவார்கள். ஆனால் போதையேறி விட்டால் நண்பர் மீது பாசமழை பொழிவதும் கொடைவள்ளலாக பணத்தை வாரியிறைப்பதும் நடக்கும். அந்த மாதிரி ஒரு போதை நண்பர் வாழும் வள்ளலாக மாறிக்கொண்டிருக்கும்போது அவரிடம், “மச்சான்... சில பேர் போதையில தான் கன்னாபின்னான்னு செலவு பண்ணுவாங்க... ஆனா நீ எவ்வளவு சரக்கடிச்சாலும் தெளிவா இருக்க மச்சான்...” என்று உசுப்பேற்றி விட்டால் எப்படி இருக்கும் ?

ஓகே, இப்போது கடையேழு வள்ளல்கள் சீரிஸின் முந்தைய பதிவான மலையமான் திருமுடிக்காரியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பார்ப்போம். ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். அப்போது காரி, தன்னை எளியரும் காணும்படி வெளியிடத்தில் அமர்ந்திருந்தான். தன்னைப் புகழ்ந்து பாடும் புலவரை எதிரில் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள், தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவந்தீர்கள்; மீண்டும் அவ்வாறு நடவற்க: இத்தேர்மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்க.” என்று மிக்க மகிழ்ச்சியுடன் கூறி மற்றும் வேண்டிய பொருள்கள் பல அளித்து அனுப்பினான். அதனை நேரில் கண்டுகொண்டிருந்த கபிலர் ஒரு பாடலை பாடினார். அது புறநானூற்றில் 123வது பாடலாக பதியப்பட்டுள்ளது.

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே !
புறம் 123

விளக்கம்: உலகிலுள்ள மக்கள் சிலர் மது அருந்துகிறார்கள். அதனால் மதிமயங்கிப் போகிறார்கள். அவ்வமயம் அவர்கள் இன்னது செய்யவேண்டும். இன்னது நீக்கவேண்டும் என்று ஓராமல் என்னென்னவோ செய்துவிடுகிறார்கள். அச்செயல்களுள் கொடைச்செயலும் ஒன்று. வெறிகொண்டபோது அளவுகடந்த கொடை செய்வது குடியர் எல்லோருக்கும் இயல்பு. தேர் முதலிய பொருள்களை அளிப்பார்கள். அங்ஙனம் மயக்கச் சேர்க்கையால் செய்யும் கொடை இயற்கையாகாது. அது செயற்கை கொடையாகும். காரி அவ்வாறு செய்பவன் அல்லன். இன்று காலை புதிதாய் கொணர்ந்த மதுவை உண்டான். ஆனால், அதன் மயக்கத்திற்கு ஆட்படவில்லை. அதுவும் அவன் மதியை ஆட்கொள்ளவில்லை. அவன் நல்லுணர்வுடனே தேரைப் புலவருக்கு அளித்தான். அவ்விதம், அவன் தேரை அளிக்கையில் வெறியர் போல மகிழவும் நகைக்கவும் இல்லை. ஆகையால், அக்கொடை இயற்கையையேச் சாரும்.

கபிலரின் வரிகளை கொஞ்சம் காம்பாக்ட்டாக புரிந்துக்கொள்வதென்றால் “மச்சான்... சில அயோக்கியப்பயலுக அப்படியெல்லாம் செய்வாங்க மச்சான்... ஆனா நீ யோக்கியன்டா...” என்று மறைமுகமாக கலாய்த்திருப்பது தெரிகிறது. கூடவே மன்னர்களின் கொடைபண்பு குறித்த உண்மைகளும், கபிலரின் ஹியூமர் சென்ஸும் புலப்படுகின்றன. நாம் முந்தய சில பதிவுகளில் வாசித்த புலவர்களைப் போல அல்லாமல் கபிலர் கொஞ்சம் ப்ராக்டிக்கலாகவும், தைரியமாகவும் மன்னர்களிடம் நடந்திருக்கிறார். அடுத்த பதிவில் அப்ரைசல் பற்றி கபிலர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 14102013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நய்யாண்டியை முன்வைத்து சில விஷயங்கள்...
நய்யாண்டி படத்திற்கு இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களின் முதல் பத்தியை மட்டும் படித்துப்பார்த்தால் நம்மையறியாமல் ஒரு நமுட்டுச்சிரிப்பு வந்து விடுகிறது. களவாணி ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம், வாகை சூட வா சமூக சிந்தனையுடன் கூடிய அருமையான திரைப்படம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மைதான். ஆனால் இப்போது ஏன் அதையெல்லாம் எழுதுகிறார்கள் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை, அடிப்பதற்கு முன்னால் தெளிவாக இருப்பதற்காக நடைபெறும் வழக்கமான சோடா தெளிப்பு சடங்கு தான்.

இயக்குநரின் களவாணி வணிக ரீதியில் வெற்றிப்படம் தான் என்றாலும் அதை நல்ல சினிமா என்று சொல்லிவிட முடியாது. கடைசியில், அதுவும் ஒரு வேலை வெட்டியில்லாத பொறுக்கியின் கதை தான். இறுதிக்காட்சியில் நாயகனுக்கு திடீர் பொறுப்பு வெளக்கெண்ண துளிர் விடுவதால் மட்டுமே அதை நல்ல சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்குநரின் அடுத்த படமான வாகை சூட வா முதல் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்ட வேண்டிய மரியாதைக்குரிய படைப்பு. அதிலும் வணிக ரீதியான வெற்றிக்கு தேவைப்பட்ட நகைச்சுவை காட்சிகள், கதைக்கு தேவையே இல்லாத இனியா போர்ஷனெல்லாம் இருந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை.

விமல் என்று ஒரு அற்புதமான கலைஞன். ஹீரோயினை ரொமாண்டிக்காக சைகையில் அழைக்க வேண்டிய காட்சியில் கூட, அய்யே பாஸ் மூச்சா போயிட்டாரு என்பது போன்ற ரியாக்சன் கொடுப்பவர். அவர் சற்குணத்தின் படங்களில் மட்டும் நல்ல நடிப்பை வழங்கிவிடுவது ஒரு புதிராக இருக்கிறது. அதைப்பற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.

வாகை சூட வா படத்தை நான் வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் பார்த்தேன். திரையரங்கில் அதிகபட்சம் இருபது பேர் இருந்திருக்கக்கூடும். வாகை சூட வா சமூக சிந்தனையுள்ள படம். தேசிய விருது பெற்ற அற்புதமான காவியம் என்றெல்லாம் நய்யாண்டி விமர்சனத்தில் எழுதுபவர்களெல்லாம் அந்த படத்தை விஜய் டிவியிலோ அல்லது டவுன்லோட் செய்தோ தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவர்களெல்லாம் திரையரங்கில் பார்த்திருந்தால் வாகை சூட வா ஏன் தோல்வியடைய வேண்டும் ? அந்த தோல்வி தந்த விரக்தியின் காரணமாகத் தான் சற்குணம் தற்பொழுது கமர்ஷியல் சாக்கடையில் குதித்திருக்கிறார். வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை !

*********************************************

சனிக்கிழமை மாலை, மணலி அருகே ஒரு அரசாங்க மதுக்கூடம். நானும் சிங்கமும் ஒரு பியரை வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். ஏற்கனவே காலையிலிருந்து நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் பியரை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்கு எதிரே ஒரு முதியவர் கார்டினல் குவாட்டருடன் வந்து அமர்ந்தார். எனக்கு பொதுவாக இதுபோன்ற அனானி ஆசாமிகளிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சுவாரஸ்யம். ஆனாலும் பெரும்பாலும் சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரிதாக எப்பொழுதாவது தனியாளாக மதுக்கூடம் சென்றால் அங்கே ஏற்கனவே ஒத்தையில் இருக்கும் யாருடனாவது சென்று அமர்ந்துக் கொள்வேன். நாமாக பேச்சு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அங்கே சென்று அமர்ந்ததும் அவர்களே புலம்பத் துவங்கிவிடுவார்கள். சரி, எதிரே கார்டினல் முதியவர் அமர்ந்தார் இல்லையா ? பாட்டிலை திறந்தவர் ஒரே மூச்சில் ஒரு கட்டிங்கை காலி செய்தார். பெரியவர் முக சாயலிலும், மதுக்கூட பணியாளரை விரட்டிய விதமும் என்னுடைய செத்துப்போன தாத்தாவை நினைவூட்டியது. செத்துப்போன தாத்தா என்றதும் உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கலாம். ஆனால், நான் செண்டிமெண்ட் ஆகிவிட்டேன். முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் செண்டிமெண்ட் ஆகியிருக்கலாம். இதில் நகைமுரண் என்னவென்றால் சிங்கம் இருக்கிறாரே, அவர் மதுக்கூடத்தில் எளியவர்கள் யாராவது வந்து சைட் டிஷ் கடன் கேட்டாலே கோபப்படுவார். அவருக்கும் அந்த பெரியவரை பார்த்ததும் அவருடைய தாத்தா ஞாபகம் வந்துவிட்டது. எல்லாம் எம்.சி செய்கிற வேலை. தாத்தா எஞ்சியிருந்த கட்டிங்கையும் ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட தாத்தாவிற்கு இன்னொரு குவாட்டர் வாங்கிவரும் படி பணித்தார் சிங்கம். இந்தமுறை ஒரு கட்டிங்கை மட்டும் துரிதமாக குடித்துவிட்டு பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டார் தாத்தா. அவருக்கு வயது 99. குடிப்பதற்கு யாராவது நோபல் பரிசு தருவார்களானால் அதை அந்த தாத்தாவிற்கே தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 

*********************************************

அதே சனிக்கிழமை காலை, ஆரூர் மூனா வீட்டிற்கு சென்றோம். மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக். ஆரூர் மூனாவை ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன் நான். சும்மா போனேன் வந்தேன் பிரியாணி சாப்பிட்டேன் என்று பொதுவான விஷயங்களை சுமாரான எழுத்துநடையில் எழுதுவார். ஆனால் அவருடைய தளத்தின் பக்கவாட்டில் சே குவேரா படம் இருக்கும். சரி, எல்லோரும் ஃபேஷனுக்காக வைத்துக்கொள்கிறார்களே அப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் அதுபற்றி கேட்கவில்லை. மற்றொரு நாள் அவரை புத்தக சந்தையில் வைத்து பார்த்தபோது கைநிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். கொஞ்ச நேரம் அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் எவ்வளவு பெரிய வாசிப்பாளர் என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட தமிழின் முக்கியமான புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்திருப்பார் போல. பாவம் புத்தகங்களை அடுக்கி வைக்க இடமில்லாமல் சிரமப்படுகிறாரே என்று அவரிடமிருந்து சில சுஜாதா நாவல்களையும், சில நக்கீரன் பதிப்பக கிசுகிசு ரக புத்தகங்களையும் லவட்டிக்கொண்டு வந்தாயிற்று.

*********************************************

பார்த்த படம்... யா யா !
தன்ஷிகா இருக்கிறாரே என்ற ஒரு நம்பிக்கையில் தான் படம் பார்த்தேன். படுமொக்கை. சிரிப்பே வரவில்லை. ஆனால் சீரியஸ் என்று நினைத்து எடுத்திருக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு மூட்டுகிறது. ஒரு காட்சியில் தன்ஷிகா “விளையாட்டா நினைச்சேன்... திரும்பிப் பார்த்தா மனசு பூரா அவன்தான் இருக்கான்...” என்று சிவாவுடனான காதலை விவரிக்கிறார். தன்ஷிகாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. காதல் சந்தியா காமெடி சந்தியா ஆகிவிட்டார். முதன்முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பார் போல. அவருடைய குரலில் செம கிக். குரலில் மட்டும்தான். சந்தானம் காமெடியெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. யாரோ ஒரு நண்பர் விமர்சனத்தில் எழுதியிருந்தது போல, படத்தில் பவர் ஸ்டார் வரும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. 

யா யா படத்தில் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக ஒரு துணை நடிகை நடித்திருக்கிறார். பெயர் ரிதி மங்கள். அவரை இதற்குமுன்பு ஏதோவொரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். சும்மா அவரை கூகுள் செய்ய அவர் நடித்த சைலன்ட் வேல்லி (Silent Valley) என்ற மலையாள படத்தைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. ஏதோ லெஸ்பியன் சம்பந்தப்பட்ட சைக்கோ த்ரில்லர் கதை போலிருக்கிறது. இணையத்தில் தரவிறக்க கிடைத்தால் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 October 2013

கடையேழு வள்ளல்கள் – காரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.

படம்: இணையத்தில் இருந்து பெறப்பட்ட சித்தரிக்கப்பட்ட படம்
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது. 

ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான். 

காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.

அக்காலகட்டத்தில் வடநாட்டில் அரசர்களாய் இருந்த ஆரிய வேந்தர்கள் சிறுகச் சிறுகத் தென்னாட்டின்மேல் படையெடுக்கலானார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள் திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதனை பறித்துக்கொள்ள எண்ணினார்கள். உடனே திரண்ட சேனையுடன் வந்து திருக்கோவலூரைச் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள். தகவல், காரியின் காதுகளுக்கு எட்டியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய சேனைகளை சேர்த்துக்கொண்டு போர்க்களம் பூண்டான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. ஆரியர்கள் பலர் மாண்டனர். மற்றவர்கள் அஞ்சியோடினார்கள்.

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி ஆங்கு 

விளக்கம்: ஆரியர் நெருங்கிச் செய்த போரில், பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்தில், பலருடன் சென்று உறையினின்றும் உருவிய ஒளி வீசும் வாட்படையை உடைய மலையனது வேற்படைக்கு அஞ்சி அவ்வாரியப்படை ஓடியது.

ஒருநாள் ஒரு புலவர் காரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவன் திருமனையை அடைந்தார். காரி தன்னை புகழ்ந்து பாடும் புலவரைக் கண்டான். உடனே எழுந்து சென்று தன் தேரை அவரிடம் ஒப்படைத்து, “அருங்கலைப்புலவரே ! தாங்கள் தங்கள் திருவடிகள் வருந்த நடந்துவராதீர்கள். தேர் மேல் அமர்ந்து இன்பமாய்ச் செல்லுங்கள்...!” என்று மகிழ்ச்சியுடன் கூறி அவருக்கு தேரையும் மற்ற வேண்டிய பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். இதுபோலவே, நிறைய புலவர்களுக்கு தேர் கொடுத்திருக்கிறான் காரி. அவனுடைய தேர்க்கொடையின் காரணமாக அவனுக்கு தேர்வண்மலையன் என்ற பெயரும் உண்டு.

மேற்கூறிய சம்பவத்தைப் பற்றி கபிலர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். (புறம் 123). அது சற்றே எள்ளல் தொனி கலந்த பாடல் என்பதால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். அது குறித்து யாருக்கேனும் ஏற்கனவே தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும்.

காரிக்குக் கொடையாலும் படையாலும் வரவரப் பெரும்புகழ் வளர்வதைக்கண்ட சில சிற்றரசர்கள், அவன்மீது அழுக்காறு கொண்டார்கள். சில குறுநில மன்னர்களின் சூழ்ச்சியால் காரிக்கும் அதியமான் அஞ்சிக்கும் பகைமை நேர்ந்தது. அதன் காரணமாக, ஆற்றல் படைத்த அஞ்சி காரியின்மேல் படையெடுத்துத் திருக்கோவலூரை முற்றுகையிட்டான். காரியோ அஞ்சினான். ஆயினும், தன்னிடம் உள்ள சேனைகளைக் கொண்டு எதிர்த்து அவனோடு போரிட்டு பார்த்தான். தனக்கு வெற்றி ஏற்படாது என்று உணர்ந்துக்கொண்டான். அவன் சேனைகளுள் மிகுதியும் மாண்டொழிந்தன. முடிவில் காரி உயிர் தப்பினால் போதுமென திருக்கோவலூரை விட்டு சேரநாட்டிற் புகுந்தொளிந்தான். பிறகு அஞ்சி திருக்கோவலூரைப் பிடித்துக்கொண்டு, தன் நாட்டுடன் சேர்த்தாள்வானாயினன்.

அப்போரில் அஞ்சிக்கு புறமுதுகு காட்டிய காரி சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தஞ்சம் புகுந்தான். சேரனும் காரியை ஏற்றுக்கொண்டு நல்லுரை பல நவின்றான். மீண்டும் அவன் நாட்டை அதியனிடமிருந்து மீட்டுத் தருவதாய் வாக்களித்தான். காரியும் சற்று மனந்தேறினான். ஆயினும், அவன் தனது நாட்டைப் பெறுங்காலம் நோக்கிச் சாலத்துயர் உற்றிருந்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பிலிருந்தே சிற்றரசனான ஓரியின் மீது வெறுப்பு இருந்து வந்தது. அவன் காரியைக் கொண்டு ஓரியைத் தொலைத்துவிட எண்ணினான். சேரனே நேரடியாக ஓரியின் மீது போர் தொடுக்கலாம் எனினும் அது முறையாகாது. ஓரி சேரனுடன் சமபலம் பொருந்தியவனில்லை. அவ்வாறு சமபலமில்லாதவனிடம் போரிட்டு வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதனால் வசையே ஒழிய இசையேற்படாது. எனவே காரியை அழைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான். அதனை ஏற்றுக்கொண்ட காரி, இரும்பொறையின் பெருஞ்சேனைக்கு தலைமை தாங்கிச் சென்று கொல்லிமலையை முற்றுகையிட்டான்.

ஓரியுடனான காரியின் போர் பலநாள் நீடித்தது. அதனை சிறுபாணாற்றுப்படை காரிக்குதிரை காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும் என்று கூறுகிறது. பின்னர் ஓரி இப்போர் சேரனால் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டான். போரின் முடிவில் காரி மிகத் தந்திரமாக ஓரியை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தான். 

ஓரி அகன்றுவிட்டதைக் கேள்விப்பட்ட இரும்பொறை தன் கவலையை ஒழித்தான். காரிக்கு உதவி செய்ய முற்பட்டான். உடனே பெருஞ்சேனையைத் திரட்டிக்கொண்டு தானே சேனைத்தலைவனாக அமர்ந்து அதியமானின் தகடூரை முற்றுகையிட்டான். அதியமானும் குகையிலிருந்து வெளிப்படும் சிங்கம் போல நேருக்கு நேராக போரில் இறங்கினான். ஆயினும் இரும்பொறையுடன் காரியும் சேர்ந்து போரிட்டமையால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. இறுதியில் இரும்பொறை அதியமானை போரில் கொன்று வீழ்த்தி அவனுடைய நாட்டை தன்னுடையதாக்கிக் கொண்டான். வெற்றிக்களிப்பில் மிதந்த சேரன் காரிக்கு அவனது ஆட்சிப்பகுதியான முள்ளூர் மலை நாட்டை தந்தான்.

கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே !
அழல்புறந் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலை நீ பெருமிதத்தையே !
(புறம் 122) 
 
விளக்கம்: பழந்தமிழ் திருந்தடிக் காரி ! நின்னாடு கடலாலும் கொள்ளப்படாது. பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது. மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள் நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின்துணைவியை மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி நீ பெருமிதமுடையவனாய் இருக்கிறாய் ?

இங்ஙனம், இழந்த நாட்டினை திரும்பப் பெற்றுவிட்ட மலையமான் திருமுடிக்காரி தன்னாட்டை முன்புபோல நன்கு ஆட்சி புரிந்தான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 07102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்கச்சொல்லி சிங்கம் வற்புறுத்தியது. பதிவுலகம் என்பது சற்றே விந்தையானது. இங்கே ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஏறத்தாழ எல்லோருக்குமே ஒரு திரைப்படம் பிடிப்பது அபூர்வ நிகழ்வு. அந்த வகையில் ஓ.ஆ.வை தவறவிட விரும்பவில்லை. கூடவே சிங்கத்தையும் அழைத்துக்கொண்டேன். ஒன்றுமில்லை, ஏதேனும் குறியீடுகள் தென்பட்டால் எடுத்துக்கொடுப்பார் அதற்குத்தான். ஆரூர் மூனாவையும் அழைத்தோம். சாய் சாந்தி திரையரங்கம். ஒரு புறம் சிங்கம், மறுபுறம் ஆரூர் மூனா, இடையில் அடியேன்.

சத்யம் திரையரங்கில் சிறுநீர் கழிக்கும்போது நமக்கு முன்பாக ஒரு டிஜிட்டல் போர்டு இருப்பதை பார்த்திருக்கலாம். அதில் இதுவரைக்கும் எதுவும் படம் காட்டி பார்த்ததில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் விளம்பரங்கள் காட்டவேண்டி வடிவமைத்திருக்கலாம். ஆனால் சாய் சாந்தியிலே இப்பொழுதே விளம்பரங்கள் பார்க்கலாம். டிஜிட்டலில் இல்லை. ஐட்டம், மாமா போன்ற குறியீடுகளுடன் பத்து இலக்க எண்கள் கிறுக்கப்பட்டுள்ளன. ஆரூர் மூனா நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நேரே சுவற்றில் “குதி” என்று எழுதியிருந்ததை நல்லவேளையாக அவர் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் குதித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

படம் முடிந்து வெளியேறும்போது நிசப்தம். பார்க்கிங்கில் வந்து அவரவர் வண்டிகளை கிளப்பும் வரைக்கும் யாரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டியை முறுக்கிவிட்டு “எங்கே ?” என்றபடி மெளனத்தை கலைத்தார் ஆரூர் மூனா ! “எக்மோர்” என்றது சிங்கம். சென்னையில் பிரசித்தி பெற்ற அரசாங்க மதுக்கூடம் அது. “தெரிலையே மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்...!” காட்சி படமாக்கப்பட்ட மதுக்கூடம். “படம் ஒன்னும் அவ்வளவு சூப்பரால்லாம் இல்ல பாஸு...!” என்று ஆரம்பித்தேன். வெகு நாட்களாக அனைவரையும் “ஜீ” என்று விளித்து சலிப்படைந்திருந்தமையால் பாஸுக்கு மாறியிருக்கிறேன். ஆரூர் மூனா தான் விளக்கினார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு குறுக்கெழுத்து புதிரை போன்றது. நிரப்பியவர்களுக்கு பிடிக்கிறது என்றார். அப்படியெனில் எனக்கு நிரப்பத் தெரியவில்லை என்பதை என்னால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி விவாதிக்க நிறைய இருந்தாலும் கூட அதை நான் விரும்பாததால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அக்டோபர் மாத அந்திமழை இதழ் சமூக ஊடகங்களில் செயல்படும் புதிய மற்றும் திறமையான இளைஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களில் அடியேனும் ஒருவன். உடன் கோவை நேரம் ஜீவா, கார்க்கி, தோட்டா, சோனியா, டிமிட்ரி ஆகியோரைப் பற்றிய பத்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அதிஷாவிற்கும் அந்திமழை நிர்வாக ஆசிரியர் அசோகன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஆகாயச்சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் என்றொரு பாடல் கேட்கக் கேட்க பிடிக்கக்கூடியது. பாடலுக்கு இடையே ஆண்குரல் இப்படி பாடுகிறது – என்னைக் கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ? டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே ! அதென்ன டோரா போரா மலைகள் ? புதிதாக ஏதேனும் ஒன்றைக் கேள்விப்பட்டதும் அதனை கூகிளிடுவது தானே ஒலகவழக்கம். செய்தேன். டோரா போரா (Tora Bora) என்பது ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு மலைக்குகை. செப்டம்பர் 11 சம்பவத்தின் காரணமாக அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்த போது தாலிபான், அல்-காயிதாவிற்கு டோரா போரா நல்லதொரு மறைவிடமாக அமைந்திருந்தது. குறிப்பாக ஒசாமா இங்கே தான் மறைந்திருந்ததாக நம்பப்படுகிறது. ஆகாயச்சூரியன் பாடலை எழுதியவர் வைரமுத்து. இரட்டை கோபுரம் தாக்குதல் நிகழ்ந்த வருடம் 2001. சாமுராய் வெளிவந்தது ஜூலை 12, 2002. வைரமுத்து ரொம்ப ஃபாஸ்ட் !

போலவே, போரா போரா (Bora Bora) என்றொரு தீவு இருக்கிறது. நேரமிருப்பின் கூகுளிட்டு பார்க்கவும்.

பாரதிராஜா, பாலச்சந்தரெல்லாம் டொக்கு ஆகிவிட்டால் ஓரமாக உட்கார வைத்துவிடுகிறோம். ஆனால் சச்சினை மட்டும் இன்னமும் நிறைய பேர் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சாம்பியன்ஸ் லீக்கில் சச்சினுடைய அணி வென்றுவிட்டது என்று சொல்வதெல்லாம் அபத்தம். நிற்க. நான் ஒன்றும் “சச்சின் ஹேட்டர்” கிடையாது. சும்மா சொல்லணும்’ன்னு தோனுச்சு. நேற்றோடு சச்சினுடைய T20 வாழ்க்கை முடிந்திருக்கிறது. சச்சினுக்காக ஒரு ட்ரிப்யூட் வீடியோ (பழையது தான்) :-


தலைவா படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை கொஞ்சம் தாமதமாகத் தான் கேட்க முடிந்தது. ஆனால் கேட்டால் அன்று முழுக்க முனுமுனுக்க வைக்கிற ரகம். பாடியிருப்பவர்கள் பொருத்தமாக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி.

இந்த பாடலை படமாக்கும்போது இயக்குநர் விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன் – வேணாம் ப்ரோ... ஊரான் வீட்டு மாங்காயில ஊறுகா போடுறது தப்பு ப்ரோ !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 October 2013

ராஜா ராணி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் குட்டிக்கர்ணம் அடித்து காட்டியாவது மக்களை திரையரங்கிற்கு வரவழைத்து விடுகிறார்கள். வார இறுதியில் தொலைக்காட்சியை உயிர்பித்தால் வரிசையாக நான்கைந்து நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். வாய் காதுவரை நீளும் அளவிற்கு கதை அளக்கிறார்கள். ஒரு ஷோவில் ஹீரோயின் இடுப்புல கை வச்சா டக்குன்னு சிரிச்சிடுவாங்கன்னு ஹீரோ சொல்கிறார். சொல்வது மட்டுமில்லாமல் இடுப்பில் கை வைத்தும் காட்டுகிறார். ஒரு செய்தித்தாளில் ஏதோ ஒலிம்பிக் நடைபெறவிருப்பது போல நாளுக்கு நாள் கவுண்டவுன் போடுகிறார்கள். கடுபேத்துறாங்க மை லார்ட் ! எனினும் கடைசியில் நானும் ஒரு பொது ஜனம் தானே ? ராஜா ராணி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டில் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் மிஸ்கின் மீதுகொண்ட அவ-நம்பிக்கையின் காரணமாக ராஜா ராணியை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

ட்ரைலரை மட்டும் போட்டுக் காட்டினால் போதும் பக்கத்து வீட்டு மாலினி பாப்பா கூட கதையை சொல்லிவிடும். ஒரு கல்யாணம், அதற்குள் மடித்து வைக்கப்பட்ட இரண்டு காதல் கதைகள் என ஒரு காம்போ பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் அட்லீ !

படம் தொடங்கி சில நிமிடங்கள் வரை, சமகாலத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கும் மொக்கை காமெடி படவரிசையில் இன்னொன்று என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலியை பெருக்கி வைத்து குத்துப்பாடல்கள் கேட்பது, குடித்துவிட்டு சலம்புவது என்று பார்க்கும் நமக்கே கடுப்பானால் நயன்ஸுக்கு கடுப்பாகாதா ? ஜெய் – நயன் காதல் எபிசோடு துவங்கியதும் கொஞ்சம் ஆசுவாசமானேன். குறிப்பாக ஜெய்யின் வாடிக்கையாளர் சேவை மைய காட்சிகள் என்னுடைய டோகோமோ நாட்களை நினைவு கூர்ந்தன. இரண்டாம் பாதியில் ஆர்யா – நஸ்ஸு பகுதி. கொஞ்சம் தொய்வாகவே நகர்ந்து சோகமாக முடிகிறது. திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழ்நிலையில் கொஞ்சம் ஜவ்வென இழுத்து தமிழ் சினிமா செண்டிமெண்ட் இலக்கணப்படி ஏர்போர்ட்டில் வைத்து ஆர்யாவும் நயன்தாராவும் ஒன்று சேர்கிறார்கள்.

பொண்ணுக்காக தான் அடிச்சிக்கக்கூடாது. ஃப்ரெண்டுக்காக அடிக்கலாம். என்றபடி நான்கே அடியில் அந்த ஜிம் பாடியை அடித்து வீழ்த்தும் ஆர்யா சற்றே மெர்சலாக்குகிறார். நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் ஈயென்று இளித்து தொலைக்கிறார். சகிக்கல. ஒரு படத்தில் ஒரு வேடத்தில் நடித்தால் தொடர்ச்சியாக அதே போன்ற வேடமளிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு ! கிட்டத்தட்ட எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அதே வேடம் ஜெய்க்கு. ஆனாலும், நான் ஒன்னும் அழுவலையே, கண்ணுல வேர்க்குது’ன்னு சொல்லும்போது நமக்கு கண்ணுல தண்ணி வருது சிரிச்சு.

த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் தாங்கள் டொக்கு ஆகிக்கொண்டிருப்பதை உணர்ந்தால் உடனே கேரள மசாஜ் மகிமையில் புத்தம் புதிய பூவைப் போல மீண்டு வருகின்றனர். இது நயன்தாராவின் முறை. ஆனால் க்ளோசப் ஷாட்டில் அழுவதை எல்லாம் காட்டியிருக்க வேண்டாம். நஸ்ஸுக்குட்டி ! ஒட்டுமொத்த படத்திலும் அதிகமாய் ஸ்கோர் செய்வது நஸ்ஸு தான். எந்த ஹீரோயினுக்கும் இப்படியொரு அறிமுகக்காட்சி வைத்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். மலையாளம் கலந்த சொந்தத்தமிழ் வேறு கிறங்கடிக்கிறது. எம்.ஜி.யார் படங்களில் அவர் இறப்பது போன்று காட்சிகள் அமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அந்த ஆங்கிளில் இருந்து பார்த்தால் ராஜா ராணியையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சந்தானம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர் ஜெய் – நயன் போர்ஷனில் இடம்பெற முடியாத நிலை. ஏதோவொரு பேட்டியில் சந்தானம் ராஜா ராணியில் ஏதோ ஜெயசித்ராவோ குணச்சித்திராவோ அப்படி நடித்திருப்பதாக சொல்லியிருந்தார்கள். அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. நயனிடம் உருக்கமாக பேசும் ஓரிரு வரிகளில் கூட சந்தானம் காமெடி செய்வதைக் காட்டிலும் அதிக சிரிப்பு வருகிறது. சந்தானம் முழுமுதல் காமெடியில் செட்டாகி விட்டார். அவரை குணசித்திர வேடத்தில் எல்லாம் பார்க்க முடியவில்லை. போலவே, சத்யன் காமெடிக்கெல்லாம் சிரிப்பு வரவில்லை.

ஷங்கர் தன்னுடைய சிவாஜி படத்தில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்துவிட்டாராம். அந்த சத்யராஜ் என்ற மானஸ்தரை இப்பொழுது தேடினாலும் கிடைக்கவில்லை. சென்னை எக்ஸ்பிரஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தமைக்கு சத்யராஜ் வருத்தப்பட்டே ஆகவேண்டும். தலைவா படத்தில் ஒரு வசனம் சொல்லுவார், ஒருமுறை கத்தி நம்ம கைக்கு வந்துடுச்சுன்னா ஒன்னு காக்கும். இல்லை அழிக்கும். அதே மாடுலேஷனில் ராஜா ராணியிலும் ஒரு வசனம் கொல்லுகிறார்... சாரி சொல்லுகிறார். முந்தய படங்களை ஒப்பிடும்போது சத்யராஜூக்கு கெளரவமான வேடம்தான். பெண்களுக்கு பிடிக்கக்கூடும். ஈன்னா வான்னா அப்பான்னா யாருக்குத்தான் பிடிக்காது.

பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. ஆனால் பாடல் காட்சிகளை பார்க்கும்போது இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர் என்று நினைவுக்கு வருகிறது. ஆர்யாவின் கையிலிருந்து காராசேவு தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் ஷங்கர் டச். 

படத்தின் பலம் என்று எது கருதப்படுகிறதோ அதுவே படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது வேதனை. இரண்டே முக்கால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை முழுமையாக சொல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் மூன்றையுமே அழுத்தமில்லாமல் சொல்லியிருக்கிறார். ஹீரோயின் புட்டத்தை ஆட்டிக்கொண்டு வருவதைப் பார்த்தால் உடனே காதலா ? எனக்கு எங்க அப்பாவை பார்த்தா தான் பயம். மத்தபடி ஐ லவ் யூங்க என்று அசால்ட்டாக சொல்கிறார் இன்னொரு நாயகன். ஆர்யா – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் எத்தனை உணர்வுப்பூர்வமாக வந்திருக்க வேண்டும் ? ஆனால் நமக்கென்னவோ சேரத்தானே போறீங்க ? சேர்ந்து தொலையுங்க என்ற சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய், அனன்யா. ராஜா ராணியில் நஸ்ரியா.

மொத்தத்தில் ராஜா ராணியை நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். ஆனால் அது எப்படி விளம்பரப்படுத்தப் படுகிறதோ அப்படியில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திருமணமான எல்லோரும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், ஆண் – பெண் புரிதல் சார்ந்த படம் போன்ற பூ சுற்றல்களை எல்லாம் காதில் வாங்கிப் போட்டுக்கொள்ளாமல் பார்த்தால் ஒருமுறை ரசிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment