28 June 2016

மாண்ட்யா ராணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2002. சிம்பு ஹீரோவாக அறிமுகமாகியிருந்த சமயம். அப்போது அவர் நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் ‘சாணக்யா’ பாடல் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது. சொல்லப்போனால் சிம்புவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய ரசிகைகளை தேடிக்கொடுத்த பாடல் அது. ரொமாண்டிக்கான கடற்கரை, சிம்புவும் கதாநாயகி ரக்ஷிதாவும் செய்யும் சில்மிஷங்கள், சாதனா சர்கமின் கிறங்கடிக்கும் குரல் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தமிழகத்தை கலங்கடித்தது அந்தப்பாடல். தம் படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'குத்து' படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஏ.வெங்கடேஷ் சாணக்யாவை போலவே ஒரு சூப்பர்ஹிட் பாடல் தர நினைத்திருக்கக்கூடும். அதே சிம்பு, அதே போன்றதொரு கடற்கரை, அதே சாதனா சர்கம், கதாநாயகி மட்டும் ரக்ஷிதாவுக்கு பதில் ரம்யா. நிபுணா நிபுணா என்று தொடங்கும் அந்தப்பாடல் சாணக்யாவை பிரதி எடுத்தது போலவே இருந்தது. ஆனால் இந்தமுறை ரசிகைகளை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. காரணம் ரம்யாவும் அவருடைய செக்ஸியான எக்ஸ்பிரஷன்களும் தான். அதிலிருந்து தமிழில் அந்த கதாநாயகியின் பெயரே ‘குத்து’ ரம்யா என்றாகிவிட்டது. அந்தப் பெயரில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு, ‘என்னை குத்து ரம்யா என்று அழைக்காதீர்கள்’ என்று பேட்டிகளில் பலமுறை சொல்லியும் அந்தப் பெயரை மீடியாவோ ரசிகர்களோ மாற்றிக்கொள்ளவே இல்லை. ஆம், ரம்யா என்பது ஒரு பெயர். ‘குத்து’ ரம்யா என்பது ஒரு உணர்வு !

ரம்யா பிறக்கும்போதே ரம்யா இல்லை. அவருடைய இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. 1982 நவம்பர் 29ம் தேதி கன்னட தேசத்தில் அவதரித்தார். பெங்களூரில் பிறந்திருந்தாலும் ரம்யாவின் பூர்விகம் பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே உள்ள மாண்ட்யாதான். ஜெயலலிதா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பிரபல அரசியல்வாதிகளை ஈன்றெடுத்த மாவட்டம். ரம்யாவுக்கும் அரசியல்ரீதியான பின்புலம் உண்டு. ரம்யாவின் தாத்தா போரேகவுடா மாண்ட்யாவின் நகராட்சி தலைவராக இருந்திருக்கிறார். ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸில் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். வளர்ப்புத்தந்தை நாராயணன் நேரடியாக அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா வரையில் செல்வாக்குள்ளவர். கர்நாடக டென்னிஸ் சங்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

ரம்யா தன்னுடைய பள்ளிப்பருவம் முழுவதையும் தமிழகத்தில்தான் கழித்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை ஊட்டி புனித ஹில்டா பள்ளியில் படித்த ரம்யா படிப்பு தவிர்த்து கலை, விளையாட்டுத்துறையில் படுசுட்டி. மேடை நாடகங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் விரும்பிப் பங்கேற்கும் ரம்யா பள்ளி ஆண்டுவிழாவில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த துணை நடிகைக்கான பரிசைப் பெற்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தடகளத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கும் ரம்யா, ஆறாம் வகுப்பு படிக்கும்போது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முப்பதே நொடியில் ஓடி சாதனை படைத்ததை பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரம்யா ஒரு கவிதாயினியாக இருந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை பற்றிய அவருடைய கவிதையொன்று அவருடைய ஸ்கூல் மேகஸினில் பிரசுரமாயிருக்கிறது. ரம்யா தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை சர்ச் பார்க் பள்ளியில்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ரம்யாவுக்கு முதன்முதலில் கிடைக்க இருந்த ‘நினக்காகி’ கன்னட படவாய்ப்பு எதிர்பாராவிதமாக ‘குட்டி’ ராதிகா வசம் போய்விட்டது. அடுத்து கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிய அப்பு படத்தில் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்தபிறகு அந்த வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப் பறித்தார். அப்படி பறித்தது வேறு யாருமில்லை, நிபுணா நிபுணாவுக்கு முன்னோடியாக சாணக்யாவில் ஆட்டம் போட்ட ரக்ஷிதாதான். ரம்யா துவண்டுவிடவில்லை. புனித் ராஜ்குமாரின் இரண்டாவது படமான ‘அபி’யில் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமாரான காதல் கதைதான். ஆனால் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து ரம்யா நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைய, ஒரு கட்டத்தில் ‘கன்னட சினிமாவின் தங்கமகள்’ என்று அழைக்கப்பட்டார் ரம்யா.

இதற்கிடையே தான் தமிழில் சிம்புவுடன் குத்துவில் அறிமுகம். தமிழில் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும் தனுஷுடன் ரம்யா நடித்த பொல்லாதவன் படம் சக்கை போடு போட்டது. படத்தைப் பார்த்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினர். தன்னுடைய ‘குத்து’ ரம்யா என்ற தமிழ் சினிமா பெயரை அடியோடு வெறுத்த ரம்யா கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் திவ்யா ஸ்பந்தனாவாக மறு-அறிமுகமானார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றளவும் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம் என்கிறார் ரம்யா. அதில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி என்ற பாடலை ரசிகர்களாலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவிற்கும் ரம்யா ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காட்டிய தாராள கவர்ச்சியை அவர் கன்னட சினிமாக்களில் நாசூக்காக தவிர்த்திருக்கிறார். இது குறித்து பேட்டிகளில் கேட்டபோது கூட, கன்னடத்தில் அப்படியான வாய்ப்புகள் வருவதில்லை என்று மட்டும் நைச்சியமாக சொல்லி தப்பித்திருக்கிறார். கன்னட, தமிழ் சினிமாக்களில் ரம்யாவின் சொந்தக்குரலை பயன்படுத்துவதில்லை. ஆனால் நான்கு தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி, ஆங்கிலம் ஆறு மொழிகளை எழுத, படிக்க, பேசவும் தெரியுமாம் ரம்யாவுக்கு. இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறார். சஞ்சு வெட்ஸ் கீதா படத்திற்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சுற்று வந்த ரம்யா அடுத்த அதிரடியாக அரசியலில் குதிக்க ஆயத்தமானார். அதன் துவக்கமாக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்த ரம்யா 2011ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். இந்த தகவல் கர்நாடக காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கெல்லாம் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது என்று சொன்னால் மிகையாகாது. 2013 மாண்ட்யா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ரம்யாவுக்கு சீட் கிடைத்தது. ரம்யா வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களில் அவருடைய வளர்ப்புத்தந்தை மாரடைப்பில் காலமானார். ரம்யா தளர்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் ரம்யாவின் உண்மையான தந்தை குறித்து கேள்வி எழுப்பின. ரம்யாவை டெஸ்ட் ட்யூப் பேபி என்று விமர்சித்தனர். அதற்கெல்லாம் அசரவில்லை ரம்யா. கடைசியில், வாக்காளர்கள் குத்து குத்து என குத்திய குத்தில் நாற்பத்தி ஏழாயிர சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினரானார் ரம்யா.

வெறும் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினராக இராமல் சபையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது, கேன்சர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சார்பாக நாற்பத்தைந்து கோடி நிதியுதவி பெற்றுத்தந்தது உள்ளிட்ட பலப்பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்தாலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மாண்ட்யாவில் போட்டியிட்ட ரம்யா ஐயாயிரத்து சொச்ச வாக்குகளில் தோல்வியுற்றார். தோல்வி நிரந்தரமில்லை என்றாலும் இடைவெளியை பூர்த்தி செய்ய மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ரம்யா. ரம்யா சமீபத்தில் நடித்த நாகரஹாவு அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. 2019 ரம்யாவுக்காக காத்திருக்கிறது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 June 2016

பெங்களூரு தினங்கள் - 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பெங்களூரு வந்து மூன்று வாரங்களாகி விட்டன. எல்லா வார இறுதிகளிலும் தவறாமல் சென்னை வந்துவிடுகிறேன். முதல்முறையாக சென்னையை விட்டு கிளம்பியது ஒரு துயரம் என்றால் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையை விட்டு கிளம்புவது பெருந்துயரம். சனிக்கிழமை எப்படி, எங்கே போனதென்றே தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மதியத்தை தாண்டியதும் மனச்சலனம் துவங்கிவிடும்.

மனப்போராட்டங்கள் ஒருபக்கம் என்றால் ரயிலில் / பேருந்தில் டிக்கட் எடுப்பது, பயணிப்பது எல்லாம் இன்னொரு வகையான போராட்டம். முதல் வார இறுதிக்கு, சில மாதங்கள் முன்பே ரயில் டிக்கட் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்சனையில்லை. அடுத்தடுத்த வாரங்களுக்கு தட்கல் டிக்கட் புக் செய்ய வேண்டியிருந்தது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது ஒரு கலை. இதுகுறித்து BLADEPEDIAவில் விரிவாக எழுதியுள்ள பதிவு நல்ல பலனளித்தது. காலையில் பத்தரை மணியளவில் குளித்து முடித்து சுத்தமாக, கடவுள் நம்பிக்கை இருந்தால் தொழுதுவிட்டு கணினி முன்பு வந்து அமர்ந்துகொள்ள வேண்டும். சோர்ஸ், டெஸ்டினேஷன் ரயில் நிலைய மூன்றிலக்க குறியீடுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ரயில், எந்த தேதி, எந்த நேரம் என்பதையெல்லாம் கவனமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பயணம் செய்பவர்களின் பட்டியலை முன்கூட்டிய மாஸ்டர் பாசஞ்சர்ஸ் லிஸ்டில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக பத்து ஐம்பத்தி எட்டுக்கு ஒருமுறை லாக் அவுட் செய்து லாகின் செய்துகொள்வது நலம். IRCTC சர்வரில் சரியாக பதினோரு மணியானதும் துரித கதியில் டிக்கெட் புக் செய்ய வேண்டும். பெங்களூருக்கு பரவாயில்லை. அதிக போராட்டங்கள் இல்லாமல் கிடைத்துவிடுகிறது.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் இளைஞர்கள் ‘வாரணம் ஆயிரம்’ சமீரா போல தங்களுக்கு ஒருபோதும் சகபயணி அமைவதில்லை என்று புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஒருவேளை சமீரா போன்ற சகபயணி கிடைத்தால் இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரு செல்லும் இரவு ரயிலை பொறுத்தவரையில் சமீரா மாதிரி அல்ல, சமீராவே வந்தாலும் பிரயோஜனமில்லை. ஏனென்றால் ரயில் கிளம்பிய அடுத்த நிமிடமே அனைவரும் அவரவர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொள்கின்றனர். அத்தோடு கண்டோன்மென்ட் வந்ததும் தான் துயில் எழுகின்றனர். இருந்தாலும் சார்ட்டில் நம் கம்பார்ட்மென்டில் யுவதிகள் யாரேனும் உளரா பார்ப்பதில் ஒரு கிக் இருக்கிறது. ஒருமுறை இப்படி சார்ட் பார்க்கும்போது F28 ஒன்று இருந்தது. ஆளை பார்க்கும் ஆவலில் பெர்த்தில் ஏறி படுக்காமல் காத்திருந்தேன். ரயில் கிளம்பும் தருவாயில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அம்மாள் வந்து நான் எதிர்பார்த்த பெண்ணுக்குரிய சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்தான் அந்த F28 என்பதை ஜீரணிக்கவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ரயில் டிக்கட் புக் செய்யும்போதாவது உங்கள் உண்மையான வயதை குறிப்பிட்டுத் தொலைக்கலாமே லேடீஸ்? அடுத்தமுறை ஒரு F26 இருப்பதை கவனித்தேன். நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக சீட்டில் அமர்ந்து ரயில் கிளம்புவதற்காக காத்திருந்தேன். இந்தமுறை நிஜ யுவதிதான். பவ்யமாக என்னிடம் வந்து என்னுடையது மிடில் பெர்த், அதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் அப்பர் பெர்த்தை எனக்கு தர முடியுமா என்று வினவினார். அழகான பெண்கள் கேட்டால் அப்பீல் உண்டா. ஒரு நொடிகூட தாமதிக்காமல் மாற்றிக்கொண்டேன். இன்னொரு முறை எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சார்ட்டில் எல்லோரும் பெருசுகள் என்பதால் வெளியில் காத்திருந்து ரயில் கிளம்புவதற்கு ஒரு நொடிக்கு முன் ஏறினேன். என் பெர்த் அருகே சென்றதும் எதிர் லோயரில் இருந்த முதியவர், அவருடைய மனைவி பக்கத்து கோச்சில் தனியே இருப்பதால் என்னை அங்கே மாற்றிக்கொள்ளுமாறு பணித்தார். சரி என்றதும் விறுவிறுவென பக்கத்து கோச்சுக்கு நடந்து, அங்கு லோயர் பெர்த்தில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு அம்மாளை எழுப்பினார். அவர் எழுந்து சில நொடிகளுக்கு முதியவரை முறைத்துப் பார்த்தார். பெரியவர் ஏதோ நினைவுக்கு வந்தவராய் அடுத்த கம்பார்ட்மென்ட் லோயர் பெர்த்துக்கு போய் அங்கிருந்த அம்மாளை எழுப்பினார். முதலில் எழுப்பியது அவருடைய மனைவி இல்லை போலும்.

IRCTC ஒரு பக்கம் என்றால் SETCயில் டிக்கெட் புக் செய்வது இன்னொரு வகையான தலைவலி. SETC தளத்திற்கு சென்றால் ஆறரை, ஏழு, ஏழரை என்று அரைமணிக்கொரு பேருந்து இருப்பதாக காட்டுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நாய் மாதிரி காத்திருந்தால் ஆறே முக்காலுக்கு வர வேண்டிய பேருந்து ஏழு இருபதுக்கு சாவகாசமாக வருகிறது. தாமதமாக வருவது குறித்த குற்ற உணர்ச்சி துளிகூட ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் டிக்கெட் குறைவாக புக் ஆகிற காரணத்தினால் ஆறரை, ஏழு மணி பேருந்துகளை ஒரே பேருந்தாக்கி விடுகின்றனர். KSRTC பேருந்துகள் மாலை நேரங்களில் சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதுவரையில் தனியார் பேருந்துக்கு முயற்சி செய்யவில்லை. IRCTC, SETC இரண்டும் காலை வாரும்போது தனியாரிடம் தான் செல்லவேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரு பரிட்சயமாகி வருகிறது. மடிவாளா என்பது நம்ம ஏரியா என்று மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது. இது அதிகம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. சுலபமாக கிடைக்கும் பீஃப் பிரியாணி இதனை உறுதிப்படுத்துகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் ஹனுமான் சிலைதான் இந்த ஏரியாவுக்கு நம்மை வரவேற்கிறது. திப்பு சுல்தானுக்கு விழா எடுக்கிறார்கள். மொட்டை மாடியில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் உண்டு. திடீரென அம்பேத்கர் பேந்தர்ஸ் சார்பாக கூட்டம் நடக்கிறது. மொத்தத்தில் மடிவாளா ஒரு லிட்டில் இந்தியா என்றுதான் சொல்லவேண்டும். இப்போது கொஞ்சம் ஏரியா பழக்கமாகிவிட்டதால் எங்கெங்கே என்னென்ன கிடைக்கும் என்று தெரிகிறது. BDA காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு பேக்கரியில் அற்புதமான லெமன் டீ கிடைக்கிறது. பொமனஹல்லி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள வண்டிக்கடையில் அட்டகாசமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கிடைக்கிறது. 

இவை தவிர்த்து, பெங்களூருக்கென சில பிரத்யேக வாசனைகள் உள்ளன. தெருவோரத்தில் மாம்பழம் விற்கும் கடைகளை கடக்கும்போது கும்மென்று ஒரு வாசம் வரும். மறுபடியும் ஒருமுறை அந்தப்பக்கம் நடந்து போகலாமா என்று தோன்றும். அடுத்தது, பானிப்பூரி வாசனை. கடுந்தவம் புரியும் முனிவரிடம் இந்த பானிப்பூரி வாசத்தை காட்டினால் தவம் கலைந்துவிடும். பெரும்பாலான டீக்கடைகளில் லெமன் டீ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் இது அரிதாக சில டீக்கடைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சென்னை சத்யம் திரையரங்கின் எதிரில் மசாலா பெப்ஸி என்று ஒன்று கிடைக்கும். பெரிய விசேஷமில்லை. பெப்ஸியில் ஜல்ஜிரா மசாலாவை கலந்தால் மசாலா பெப்ஸி. பெங்களூரில் இது ரெடிமேடாகவே கிடைக்கிறது. பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா என்கிற பெயரில் கிடைக்கும் இந்த பானம் கர்னாடகத்தின் காளிமார்க். டீ / ஜுஸ் கடைகளிலும் ஜல்ஜிரா டீ, மசாலா கோக், மசாலா 7UP போன்றவை கிடைக்கின்றன.

பெரிய பெரிய ஸ்டார்கள் எல்லாம் செருப்பு விளம்பர பதாகைகளில் சிரிக்கிறார்கள். லுனாருக்கு உபேந்திரா, பாரகனுக்கு சுதீப் மற்றும் சமந்தா, வி.கே.சி. பிரைடில் கன்னுக்குட்டிக்கு பதிலாக திவ்யா ஸ்பந்தனா. இந்த பதாகைகள் ஹைவேஸில் இருநூறுக்கு அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. செருப்புகளுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

புதிய வேலை என்பதால் அலுவலகத்தில் அதிகம் வாட்டுவதில்லை. பெங்களூர் சூழலும் கொஞ்சம் இலகுவாகி வருவதால் தினசரி ஒரு புத்தகம், அரை சினிமா, பக்கத்து ஏரியாவுக்கு போய் நைட் ஷோ படம் பார்ப்பது என்று செட்டில் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அலுவலகத்திலிருந்து ஒரு (இன்ப) அதிர்ச்சி கொடுத்தார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 June 2016

பெங்களூரு தினங்கள் - 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மே 23ம் தேதி புதிய அலுவலகத்தில் முதல்நாள். கத்தையாக விண்ணப்பப் படிவங்களிலும் சாசனங்களிலும் சலிக்காமல் கையொப்பமிட வேண்டியிருந்தது. ‘ஆறாவது’ முறையாக தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட அதே சமயத்தில் இன்னொரு பதவியேற்பு விழாவும் ஆர்பாட்டமில்லாமல் நடந்து முடிந்தது.

தொடர்கிற பத்தியை படித்துவிட்டு இவனெல்லாம் உருப்படவே மாட்டான் என்று நீங்கள் நினைக்கலாம். நினைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் அலுவல் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால் எதிர்த்தரப்புக்கு தமிழ் தெரியும் பட்சத்தில் நான் தமிழிலேயே பதிலளிப்பேன். இதில் உள்ள ‘கம்ஃபர்ட்’ ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. வேறு வழியே இல்லாத சூழல்களில் மட்டும்தான் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை கையில் எடுப்பேன். நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தமிழகத்திலேயே இருந்தாலும் ஏர்போர்ட்டுக்கோ, போஷான உணவகத்திற்கோ, ரெஸார்ட்டுக்கோ சென்றால் அங்கே ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் பேசினால்தான் மரியாதை என்று கற்பனை செய்துகொண்டு நாவை சுழட்டிக்காட்டுவார்கள். நான் இப்படிப்பட்ட வணிகம் சார்ந்த இடங்களில் துளி கூட யோசிக்காமல் தமிழிலேயே பேசுவேன். நம்மூருக்கு வந்து வியாபாரம் செய்பவர்கள் நமது மொழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் பிழைக்கப் போன இடத்தில் இப்படிப்பட்ட குறிக்கொழுப்பு பேச்செல்லாம் பேச முடியுமா ?

பெங்களூர் அலுவலகத்தில் சம்பாஷனைகள் எல்லாம் இப்போதைக்கு ஆங்கிலம்தான், எதிர்தரப்புக்கு தமிழ் தெரிந்திருந்தாலும் கூட. என்ன ஒன்று, இங்கே யாரும் நம்மை மிரட்டுவதற்காகவே ஆக்ஸ்போர்டிலேயே இல்லாத வொக்கபிலேரியை பயன்படுத்துவதில்லை. அக்சென்ட் என்ற பெயரில் உள்ளூர்க்காரர்களிடமே சுழட்டிக் காட்டுவதில்லை. தெளிவான இந்திய / ஹிந்திய ஆங்கிலம்தான். இருப்பினும் நாள்முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது என்பது தண்டனைதான். இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘சாப்ட்டீங்களா தம்பி’ என்று தமிழில் கேட்டபடி ஒருவர் ஆதரவாக தோளில் கை வைத்தால் எப்படி இருக்கும் ! அதுவும் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு நபர். ‘இல்லை’ என்றதும் அருகிலுள்ள நல்ல உணவகங்களுக்கு வழி சொன்னார். 

சில விஷயங்களைப் பொறுத்தவரையில் நாமே எக்ஸ்ஃப்ளோர் செய்வதுதான் சுவாரஸ்யம். முதல்நாள் மதியம் கொஞ்ச தூரம் நடந்தபிறகு ஒரு சைவ உணவகத்தில் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் இன்னொரு கடையில் ஆம்பூர் பிரியாணி 60ரூ என்றிருந்ததை கவனித்தேன். அடுத்தடுத்த நாட்களில் அதே பகுதியில் பல ஆம்பூர் பிரியாணி கடைகள் உள்ளதை கண்டுகொண்டேன். இந்தக் கடைக்காரர்களுக்கு எல்லாம் தமிழக வரைபடத்தில் ஆம்பூர் எந்த திசையில் உள்ளது என்று கேட்டால் கூட சொல்லத் தெரியாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் பிரியாணியின் சுவை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது, ஆனால் எங்கேயும் பிரியாணி மாதிரி இல்லை. வாயிலேயே வைக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. இதே பிரியாணியை சென்னையில் விற்றால் கண்டிப்பாக 80 அல்லது 90 ரூபாய் வாங்குவார்கள். இங்குள்ள போட்டியின் காரணமாகவோ என்னவோ 50 அல்லது 60 ரூ மட்டும் வாங்குகிறார்கள்.

அலுவலகம், தங்குமிடம் தவிர்த்து பொது இடங்களில் வியாபாரிகளும், வழிப்போக்கர்களும் பரவலாக தமிழில் பேசுவதைக் காண முடிகிறது என்பதால் ப்ரியா ஆனந்த் போல ‘ஹேய்... நீங்க தமிழா ?’ என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே சமயத்தில் தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பலர் தாராளமாக மூன்று அல்லது நான்கு மொழிகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே தாய்மொழி தவிர்த்து வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாத அதிக அப்பாவிகள் உள்ள ஊர் தமிழகமாகத்தான் இருக்கும்.

பெங்களூர் பற்றி மற்றவர்கள் அதிகம் பயம் காட்டிய விஷயம் – சினிமா டிக்கட் விலை. நம்மூர் மாதிரி 120 வரையறை இங்கு இல்லை. அதுவும் வார இறுதிகளில் டிமாண்டை பொறுத்து விலையை ஏற்றி இறக்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு பொருந்தும். ஆனால் எனக்கு கிடைத்த நற்பேறு என்னவென்று பாருங்கள். நான் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டு கி.மீ சுற்றளவிலேயே நான்கு ஒற்றைத்திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் இரண்டிலாவது தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய / மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டும்தான். இங்கே பார்ப்பது போல ஜீரோ, களம் எல்லாம் அங்கே முடியாது.

புது ஊருக்கு போனால் அங்குள்ள கலாசாரத்தை அறிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும். அவற்றில் முதலாவது திரையரங்கம். பெங்களூரில் முதல் படமாக என்ன சினிமா பார்க்கலாம் ? வரவேற்று உற்சாகமளித்த காஜல் அகர்வால் படமா அல்லது மண்ணின் மொழியான கன்னட படமா ? கன்னட படமே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். லூஸியா இயக்குநரின் படம் என்பது பிரதான காரணம். இங்குள்ள திரையரங்குகளில் சாதாரணமாகவே தினசரி ஐந்து காட்சிகள் ஓட்டுகிறார்கள். ஒற்றைத்திரைகளில் டிக்கட் கட்டணம் நூறு அல்லது நூற்றைம்பது இருக்கிறது. முதல் படம் பார்த்த தியேட்டர் – பாலாஜி. முன் சீட்டு ஆசாமியின் தலை திரையை மறைக்க வாய்ப்பே இல்லாத வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாரநாள் என்றாலும் அரங்கு நிறைந்திருந்தது. பெரும்பான்மை கார்ப்பரேட்களில் பணிபுரியும் ஆண்-பெண் குழுமங்கள். வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். முதல் சீனில் சப்-டைட்டிலை பார்த்ததும் பலர் உற்சாகமாக கத்தியதை வைத்து சொல்கிறேன். கேண்டீனில் கொள்ளையடிப்பதை பொறுத்தவரையில் தமிழகத்தைவிட மோசம். அஞ்சு, பத்து சில்லறை எல்லாம் தருவதில்லை. கடலைபருப்பையும், பட்டாணியையும் சில்லறைக்கு பதிலாக தள்ளிவிட்டு ஏமாற்றுகிறார்கள். ஆனால் திரையரங்கில் பார்த்த முதல் கன்னட சினிமா ஏமாற்றவில்லை.

புது ஊர் கலாசாரத்தை தெரிந்துகொள்ள சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் இல்லையா. முதலாவது, திரையரங்கம். இரண்டாவது என்ன என்று யூகித்திருப்பீர்கள். அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 June 2016

பெங்களூரு தினங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

பெங்களூரு. புது ஊர், புது மாநிலம், புது வேலை, புது மனிதர்கள். ஒரு பக்கம் பதட்டமாகவும், மறுபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்துவிடும். வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே என்கிற நம்பிக்கையில் தான் பெங்களூருக்கு சென்றிருக்கிறேன்.

பெங்களூரில் நான் தங்கப்போகிற இடத்தின் பெயர் மடிவாளா என்று முகவரி கொடுத்திருந்தார்கள். லேண்ட்மார்க் சந்தியா டிஜிட்டல் தியேட்டர் அருகில். முதலில் ஏனோ எனக்கு இது சினிமா தியேட்டர் என்பது ஸ்ட்ரைக் ஆகவில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாத டாக்ஸி டிரைவரிடம் ஜிப்ரிஷில் வழி சொல்லி சந்தியா தியேட்டர் வாசலில் வந்து இறங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் சினிமா தியேட்டர் :) அதுவும் காஜல் அகர்வால் படம் (பிரம்மோத்சவம்). ஆனால் இதனை நினைத்து நினைத்து அகமகிழும் மனநிலை அப்போது இல்லை. 

இளைப்பாறிவிட்டு அருகிலிருக்கும் நண்பன் வீட்டைத் தேடியபடி பெங்களூரு தெருக்களில் ஒரு சுற்று வந்தேன். எங்கு பார்த்தாலும் PG for Gents, PG for ladies என்று போர்டுகள் தொங்குகின்றன. முதலில் எனக்கு PGயின் விரிவாக்கம் என்னவென்று தெரியவில்லை. நண்பனிடம் கேட்டு Paying Guest என்று தெரிந்துக்கொண்டேன். ‘மெய்ன் ஹூன் நா’ படத்தில் ஷாருக் தனது கல்லூரி நண்பர் / தம்பி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குவார். அதாவது பெயருக்கேற்ப அந்த வீட்டில் நம்மை ஒரு விருந்தினர் போல கவனித்துக் கொள்வார்கள். ஆனால் தின்பதற்கும் தூங்குவதற்கும் மட்டும் பணம் கொடுத்துவிட வேண்டும். இது சினிமா :) மெய்ன் ஹூன் நா PGக்கும் பெங்களூரு நிஜ PGகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இது கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் செட்டப். கொஞ்சம் சுதந்திரமான ஹாஸ்டல். 

PG போர்டுகளுக்கு அடுத்த படியாக அதிகம் தொங்குவது அகலக்கற்றை சேவை விளம்பரங்கள். இதில் பெங்களூருவாசிகளுக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. இவை தவிர்த்து, ஹேர் லாஸ், வெயிட் லாஸ், யோகா கிளாஸ், பேக்கர்ஸ் & மூவர்ஸ் போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஆசாமிகளுக்கான சேவைகள் குறித்த விளம்பரங்கள். இந்த விளம்பரத்தட்டிகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன.

ஒன்று, இது வந்தேறிகளின் நகரம். இரண்டாவது, இந்த வந்தேறிகள் பெரும்பாலும் ஐ.டி துறையினர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக சில சமயங்களில் யோசிப்பதுண்டு. பெங்களூரை பார்க்கும்போது அப்படி யோசிப்பதே மகாபாவம் என்று தோன்றுகிறது. இங்கே அலுவலகத்தில் கன்னடர்களை தேட வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

நண்பன் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் கூகுள் மேப்ஸ் திணறியது. தொலைக்காட்சி நாடகமொன்றில் எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் கே.கே.நகரை தேடியலைவார்கள். கடைசியில் தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் பொங்கலுக்கு செல்வார்கள். நான் முதன்முதலில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அண்ணா நகர் நிறுவன முகவரியை கையில் வைத்துக்கொண்டு ஏறத்தாழ மொத்த ஏரியாவையும் சுற்றிவிட்டேன். யாரைக் கேட்டாலும் ‘எந்த ப்ளாக் ?’ என்று கேட்கிறார்கள். எனக்கென்ன தெரியும். என்னிடமுள்ள முகவரியில் ப்ளாக் எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட மதியம் வரை தேடியபின் முகவரியில் டோர் நம்பர் S51 என்று இருப்பதை கவனித்து, எஸ் ப்ளாக்கை தேடி கண்டடைந்தேன். அதன்பிறகு வாழ்க்கையில் நான் அண்ணா நகருக்கே செல்வதில்லை என்று சபதம் ஏற்றுக்கொண்டேன். டிவியில் அண்ணா நகர் முதல் தெரு போட்டால் கூட பார்க்கமாட்டேன். பெங்களூரை பொறுத்தவரையில் எல்லா ஏரியாவும் அண்ணா நகர் தான். 4th க்ராஸ், 2nd மெயின் என்று தாலியருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மேப்பில் பார்க்கும்போது தெருக்கள் எல்லாம் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நேர்த்தியாக இருக்கின்றன.

பெங்களூரில் முதல் தினம், நண்பரின் தயவால் அவருடைய இல்லத்தில் தரமான அசைவ உணவுடன் சிறப்பாக கழிந்தது. பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும். அடேயப்பா, நான் எப்பர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் தெரியுமா ? நானெல்லாம் வாரத்தில் எட்டு நாட்கள் (முட்டையை கணக்கிடாமல்) அசைவம் சாப்பிடுபவன் அய்யா. வேறு வழியில்லாமல், அந்த சிக்கன் மசாலா தண்ணீரை சோற்றில் குழைத்து முதல் வாய் வைக்கும்போது என் மாமியார் சமைக்கும் அற்புதமான இறால் பிரியாணியை நினைத்துக்கொண்டேன்.

இந்த துக்கங்களுக்கு மத்தியில் தனிமையும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது. தனிமை இனிமையானது, அது நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்கும்போது மட்டும். என் வாழ்வில் பல உன்னதமான தருணங்களை தனிமை எனக்கு கொடுத்திருக்கிறது. (சுய இன்பத்தை பற்றி சொல்லவில்லை). அதே தனிமைதான், இப்போது என்னை வதைக்கிறது. இயல்பில், நான் ஹோம்சிக்கெல்லாம் கிடையாது. நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறேன். ஆனால் இப்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த காதல், கல்யாணம், மனைவி, குழந்தை போன்ற லெளகீக விஷயங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். குறிப்பாக நிலாவைப் பற்றி நினைக்கும்போது கண்ணீர் துளிர்த்துவிடும் போல இருந்தது. நிற்க. இத்தனைக்கும் என் பெங்களூர் வாசம் நிரந்தரமில்லை. பெங்களூருக்கும் சென்னைக்கும் ஆறுமணிநேர பயணம். எல்லா வாரயிறுதிகளிலும் சென்னைக்கு வந்துவிடப் போகிறேன். இப்படியெல்லாம் தீர்க்கமான மனநிலையில் இருக்கும் எனக்கே இப்படி இருக்கிறதென்றால் எங்கேயோ அமீரகத்திலோ, மலேசியா, சிங்கப்பூரிலோ எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது இந்தியாவுக்கு திரும்புவோம் என்பதே தெரியாமல் மெளனமாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும் ? மனதை திடப்படுத்திக்கொண்டு பெங்களூர் தினங்களின் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கும் முன் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் அனைவரையும் மானசீகமாக நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment