26 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 26022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கிண்டிலில் நம்மிடமுள்ள PDF புத்தகங்களையும் வாசித்துக் கொள்ளலாம் என்று தெரிந்துக்கொண்டேன். வேலை மிகவும் சிம்பிள். கிண்டில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு போனால் அதற்கென்று இருக்கும் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை காட்டும். அம்முகவரிக்கு உங்களிடமுள்ள PDF கோப்பை அனுப்பினால் போதும், நிமிடங்களில் PDF இடம் பெயர்ந்துவிடுகிறது. இதனை தெரிந்துக்கொண்ட பின் என் ஹார்ட் டிஸ்கை துழாவினால் ஆங்கிலமும் தமிழும் கலந்து நூற்றி சொச்ச PDF கோப்புகளை எப்போதாவது தேவைப்படலாம் என்று சேமித்து வைத்திருக்கிறேன். இவற்றை நான் சேமித்த காலகட்டம் 2009 – 2011. ஆனால் அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றதை தொட்டுக்கூட பார்த்ததில்லை. சோதனையோட்டமாக அவற்றிலிருந்து வாத்தியாரின் தங்க முடிச்சு நாவலை கிண்டிலுக்கு அனுப்பிப் பார்த்தேன். கச்சிதம் !

தங்க முடிச்சு ஒரு சினிமா நடிகையின் கொலை பற்றிய எளிய நாவல். கணேஷ் – வசந்த் கிடையாது. யூகிக்கக்கூடிய முடிச்சுதான். ஆனால் நாவலின் துவக்கத்தில் வரும் அக்கால சினிமா வாழ்க்கை பற்றிய விவரணைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

**********

சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள அம்மையார் சிலையை இணையத்தில் யாரோடெல்லாம் ஒப்பிட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

வளர்மதி
ஜெ. தீபா
கலா மாஸ்டர்
சசிகலா
நிர்மலா பெரியசாமி
திருமதி. பழனிச்சாமி
காந்திமதி
வடிவுக்கரசி
கே.பி.சி.லலிதா
பண்டரி பாய்
கே.பி.சுந்தராம்பாள்

இன்னும் நான்கைந்து ப்ளாக் & ஒயிட் காலத்து குணச்சித்திர நடிகைகள். ஆனால் ஒருவர் கூட அது சம்பந்தப்பட்ட நபர் மாதிரி இருப்பதாகக் கூறவில்லை.

**********

இவ்வாரம் தொடர்ச்சியாக நிறைய துயரச்செய்திகள். கேரளாவில் மது என்கிற ஆதிவாசி இளைஞர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், விழுப்புரத்தில் நடந்த சாதிப் படுகொலைகள் (இச்செய்தியை தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள்), சிரியா உள்நாட்டுப் போர் என எல்லை பேதமின்றி துயரங்கள். சோஷியல் மீடியாவைத் திறந்தாலே சங்கடம் ஏற்படுத்துகிற புகைப்படங்களை கடந்துதான் போக வேண்டியிருக்கிறது.

இவற்றில் தனிப்பட்ட முறையில் என்னை ஒருமாதிரி உறைய வைத்த செய்தி காஞ்சிபுரம், சாலவாக்கத்தில் உள்ள ஒரு முதியோர் / கருணை இல்லத்தில் ஆதரவற்றவர்களை, இறந்தால் கேட்பதற்கு ஆளில்லாதவர்களைக் தேடிப்பிடித்து அவர்களை பட்டினி போட்டுக் கொன்று, அவர்களது எலும்புகளை வியாபாரம் செய்கிறார்களாம். இச்செய்தி இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும் வேனில் சடலம் கடத்தல், அதிலிருந்து மூதாட்டி கூச்சல், டிரைவர் தப்பியோட்டம் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேலும் கடந்த ஏழு வருடங்களில் மொத்தம் 1590 சடலங்களை புதைத்திருப்பதாகவும், ஆனால் சட்ட விரோதமெல்லாம் இல்லை என்கிறார் இல்லத்தை நடத்தும் மத போதகர். ஏழு வருடத்தில் 1590 என்றால் தோராயக் கணக்காக பார்த்தால் கூட, ஒரு கருணை இல்லத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் இயற்கை எய்தினார் என்பது நம்பும்படியாக இல்லை. 

கொலம்பாரியச் சுவர்கள் என்கிற சுவற்றில் லாக்கர் போன்ற கல்லறைகள் அமைத்திருக்கிறார்கள். அதற்குள் ஒரு சடலத்தை குச்சியால் தள்ளும் காணொளியைப் பார்த்தேன். சடலத்தில் இருந்து எலும்புகளை சேகரிப்பதற்காக இருபது அடியாழத்தில் ஒரு குழி வைத்திருக்கிறார்களாம். இச்செய்தியில் உள்ள தீவிரத்தை கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

**********

ஆறு அத்தியாயம் பார்த்தேன். ஆறு குறும்படங்கள், முதலில் அவற்றை க்ளைமாக்ஸ் மட்டும் இல்லாமல் வரிசையாக காட்டுகிறார்கள். பின்னர் கிளைமாக்ஸ்கள் வருகின்றன. இம்முறை உலகிலேயே புதுசு என்கிறார்கள். 

சூப்பர் ஹீரோ: கேபிள் சங்கர் இயக்கியது. ஒரு மனநல மருத்துவருக்கும், அவரிடம் வரும் நோயாளிக்கும் இடையே நடைபெறும் உரையாடல். அதன் விளைவாக மருத்துவர் எடுக்கும் ஒரு முடிவு க்ளைமாக்ஸ். ஆறு படங்களிலேயே மிகக் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டது இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். எஸ்.எஸ்.ஸ்டான்லியை க்ளோஸப் ஷாட்டில் பார்க்கும்போது கே.ஆர்.பி.செந்தில் சாயல் தெரிகிறது. பேசாமல் இரண்டாமவரை அறிமுகப்படுத்தியிருந்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல குணச்சித்திர / வில்லன் நடிகர் கிடைத்திருப்பார்.

இனி தொடரும்: சைல்டு அப்யூஸ் பற்றிய கதை. ஆறில் மிகவும் மொக்கையான ஷார்ட் இதுதான். குறிப்பாக இதன் க்ளைமாக்ஸ் அப்பப்பா ஸ்வாமி ! யூனிட்டில் யாரோ ப்ரொட்யூசர் சாரிடம், சார் நீங்களே ஒரு படம் டைரக்ட் பண்ணலாம் என்று உசுப்பேத்தி விட்டிருக்கிறார்கள். அனுதாபங்கள்.

மிசை: ஒரு காதல் தோல்வியைப் பற்றிய கதை. ஆறில் ஹாரர் / அமானுஷ்ய எலிமன்ட் குறைவான கதை இதுதான். இக்கதையில் ஓர் அறையில் தங்கியிருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றியும் அவர்களுக்குள் இருக்கும் மனத்தடங்கல்களைப் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான இழை வருகிறது. க்ளைமாக்ஸ் மொக்கை.

அனாமிகா: கேபிளின் உதவியாளர் சுரேஷ் இயக்கியது. சினிமா கதை எழுதும் இளைஞன் ஒருவன் ஒருநாள் கதை எழுதுவதற்காக அவரது மாமா வீட்டுக்கு செல்கிறார். அப்போது மாமா அவசரமாக சின்ன அத்தையைப் பார்க்க சென்றுவிடுகிறார். வீட்டில் வேறு யாரும் இல்லை. அன்றிரவு இளைஞன் சந்திக்கும் விஷயங்கள் தான் கதை. என்னைக் கேட்டால் ஆறு படங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட படம் இது. முன்னே, பின்னே, கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கலாம். விவகாரமான மாமாவாக கேபிள் சங்கர் நடித்திருக்கிறார்.

சூப் பாய் சுப்பிரமணி: ஒரு இளைஞன் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு பெண்ணோடு நெருக்கமாகும் போதும் ஏதோ ஒரு சக்தி அவனை அப்பெண்ணிடம் இருந்து பிரித்து வைத்துவிடுகிறது. ஒரு மாந்திரிகரின் உதவியுடன் சிக்கலிலிருந்து இளைஞன் மீள்வதே கதை. இப்படத்தின் இயக்குநர் தியேட்டருக்கு ஒரு கும்பலை சிரிப்பதற்காக அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் அடக்க முடியாமல் சிரிப்பது போல பாவனை செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி சுமாரான படம்.

சித்திரம் கொல்லுதடி: சற்று ஆழமான கதையம்சம் மற்றும் நீளமான படம் இது. சங்க காலத்தில் வாழ்ந்த கோகிலா என்கிற பெண்ணைப் பற்றி ஒரு எழுத்தாளர் புத்தகம் எழுதுகிறார். அந்த எழுத்தாளர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தொடர்ச்சியாக அப்புத்தகத்தை படிக்கும் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள். காரணம், அப்புத்தகத்தில் கோகிலாவின் கண்களைப் பற்றிய ஓர் வர்ணனை வருகிறது. அதனைப் படிப்பவர்கள் அவர்களையே அறியாமல் அக்கண்களை வரைந்து பார்க்க முயல்கிறார்கள். கோகிலாவின் சாபத்தின்படி அவளது கண்களைப் பார்க்க முயலும் ஒவ்வொருவரும் கொல்லப்படுகிறார்கள். ஓவியங்கள், செய்யுள்கள் என்று நிறைய வொர்க் செய்திருக்கிறார்கள்.

இக்கதை எனக்கு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பதிமூன்றாம் பக்கம் பார்க்க என்ற திரைப்படத்தை நினைவூட்டியது. இப்படத்தின் கதையில் ஒரு புத்தகம் வருகிறது, அதன் பதிமூன்றாம் பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் பேய் வந்து மந்திரம் உச்சரித்தவரை கொன்றுவிடும்.

பொதுவாக ஆறு அத்தியாயம் படத்தில் மிகப்பெரிய லெட் டவுன் என்று நான் கருதுவது படங்களின் க்ளைமாக்ஸ் தான். ஒவ்வொரு படமும் கிளைமாக்ஸுக்கு முன்பு வரை ஏதோ ஒரு வகையில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால் க்ளைமாக்ஸ் ப்பூ இவ்வளவுதானா என்று ஏமாற்றம் ஏற்படுத்துகிறது. என்னளவில் இப்படங்களின் தரவரிசை :- அனாமிகா, சித்திரம் கொல்லுதடி, சூப் பாய் சுப்பிரமணி, சூப்பர் ஹீரோ, மிசை ! வரிசையில் இனி தொடரும் எங்கே எனக் கேட்காதீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 19022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கிண்டிலில் முதல் புத்தகமாக ம்ரின்சோ நிர்மலின் ஸ்மார்ட் உலகத்து கதைகள் வாசித்தேன். நிர்மல் அதனை முதல் ஒரு வாரத்திற்கு இலவசமாக கொடுத்தபோது வாங்கியது. பன்னிரண்டு குட்டிக் குட்டி கதைகள் அல்லது ஒரே கதையின் பன்னிரண்டு சிறிய பகுதிகள். இக்கதைகளில் இரண்டு விஷயங்கள் மையமாக இருக்கின்றன. ஒன்று, எதிர்கால தொழில்நுட்பங்கள் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பது பற்றிய அனுமானங்கள். இரண்டாவது, ஃபேஸ்புக் பயனாளர்களைப் பற்றிய பகடிகள். இரண்டாவது விஷயத்தை மிகவும் ரசித்தேன். 

தினசரி காலையில் குட் மார்னிங் போஸ்ட் போடுவது, ஃபேக் ஐடி கலாசாரம், லைக்குக்கு லைக் மொய் வைப்பது, அன்ஃப்ரென்ட் / ப்ளாக் சில்லறைத்தனங்கள், ஹாஷ்டாக் போராட்டங்கள் என்று எல்லாவற்றையும் போகிறபோக்கில் ஜாலியாக கலாய்த்து வைத்திருக்கிறார். துவக்கத்தில் கிண்டிலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வாசிப்புக்கு தயாராக வைக்கலாம் என்றுதான் கையில் எடுத்தேன். ஆனால் அடுத்த அரை மணிநேரத்தில் புத்தகத்தை படித்தே முடித்துவிட்டேன். அவ்வளவு சிறிய புத்தகம். கொஞ்சம் மெனக்கெடல், மெருகூட்டல் எல்லாம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். அவசர அவசரமாக புத்தகமாக்க அப்படி என்ன முனைப்போ தெரியவில்லை. நான் பரவாயில்லை, இலவசமாக தரவிறக்கினேன். மூன்று பேர் இப்பதிப்பினை 63ரூ கொடுத்து வாங்கியிருப்பதாக நிர்மல் சொல்கிறார். அம்மூவரை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

கிண்டில் புத்தகங்களுக்கு எதை வைத்து விலை நிர்ணயிக்கிறார்கள் என்பதே மர்மமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, சுமார் 350 பக்கங்கள் தரமான தாளில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தின் விலை 400 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். கிண்டிலில் இதன் விலை 300 என்கிறார்கள். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து விலை வெறும் 9ரூ தான். சில பதிப்பகங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அச்சுப்பிரதியில் இருந்து கிண்டில் பிரதியின் விலை குறைந்தது ஐம்பது சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதனை வாங்குவதற்கு பதிலாக அச்சுப்பிரதியையே வாங்கிவிடலாம் என்பேன். 

**********

சென்றவாரம் சவரக்கத்தியைப் பற்றி எழுதியதில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டுப் போயிற்று. படம் நிறைவடைந்த பிறகு வரும் டைட்டில் கிரெடிட்ஸில் ஒவ்வொரு துணை நடிகர்களின் பெயரும் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்கிற விவரத்தோடு வருகிறது. கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர், வழி சொல்பவர் என்று சின்னச் சின்ன வேடங்களைக் கூட தவறவிடாமல் பதிவு செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதை மிகப்பெரிய விஷயமாகவும், நடிகர்களுக்கு நல்ல அங்கீகாரமாகவும் கருதுகிறேன். ஸ்க்ரோலின் வேகத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். போலவே, பின்னணி பணியாற்றியவர்களைப் பற்றி குறிப்பிடும்போதும் ஓரளவிற்கு விவரம் தரலாம். பெரும்பாலான படங்களில் டப்பிங் கலைஞர்களின் பெயரையே போடுவதில்லை. அப்படியே போட்டாலும் எந்தெந்த நடிகருக்கு யார் குரல் கொடுத்தார்கள் என்று விளக்கமாக போடுவதில்லை. 

**********

ரேண்டம் ப்ளேலிஸ்ட் தயார் செய்வது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதனை செயல்படுத்தியதில் எனது கலெக்ஷனில் ஒளிந்திருந்த சில அரிய பாடல்கள் வெளியே வந்தன. அதுவும் முதல் பாடலே ஒரு ஹிட்டன் ஜெம். ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு... என்று மனோ, சித்தாரா குரலில் பாடல் ஒலிக்க, ஆல்பம் ஆர்ட் பார்த்தால் மைக்கேல் மதன காம ராஜன் என்றிருந்தது. என்ன அந்த படத்தை குறைந்தது ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன். அப்படி ஒரு பாடல் உறுதியாகக் கிடையாதே. ஒருவேளை ஆல்பம் ஆர்ட் போட்டோ எதுவும் கொலாப்ஸ் ஆகிவிட்டதா என்று கூகுள் செய்தால் அது படத்தில் இடம்பெறாத பாடல் போலிருக்கிறது. ஆனால் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் எப்படிப் பொருத்தினாலும் பொருந்தாத பாடல் இது. 

மேலும் கூகுள் செய்ததில் கிடைத்த தகவல் – அபூர்வ சகோதரர்களுக்குப் பிறகு கமல் – கெளதமி நடிப்பில் தென்மதுரை வைகைநதி என்கிற கிராமத்துக் கதையை பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கலானார். அப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடல் இது. ஆனால் ஏனோ சில காரணங்களுக்காக அப்படம் டிராப் ஆகிவிட்டது. அதனால் அதற்குப் பின் எடுக்கப்பட்ட மை.ம.கா.ரா.வில் ஆடிப்பட்டம் பாடல் சேர்ந்துகொண்டது. 

அதே போல ராஜா ராணி படத்தில் இடம்பெறாத அஞ்ஞாடே பாடலை கேட்க நேர்ந்தது. சக்திஸ்ரீ டார்லிங்கின் குரல். ஏன் இத்தனை அருமையான பாடலை படத்தில் வைக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் எப்படி இப்பாடலை இத்தனை நாட்கள் தவறவிட்டேன் என்றே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

**********

இந்தாய் ஹஸா என்கிற பாடகியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சக்கரகட்டி படத்தில் வரும் மிஸ் யூ மிஸ் யூடா பாடலில் பாடகியின் குரல் விஸ்கி மாதிரி இருந்ததால் யாரென்று தேடியதில் சின்மயி மற்றும் இந்தாய் ஹஸா என்றிருந்தது. இதுகுறித்து சின்மயி அவரது வலைதளத்தில் எழுதியிருக்கும் சிறுகுறிப்பு படிக்கக் கிட்டியது. இந்தாய் ஹஸா என்று ஒரு ஆள் இல்லவே இல்லையாம். அது சின்மயியின் ஆல்டர் ஈகோவாம். மிஸ் யூ பாடலின் இடையே வரும் ஈமினீ ஈமினீ பிட்டுக்கு ரஹ்மான் கொடுத்த புனைப்பெயர் தான் இந்தாய் ஹஸா என்கிறார் சின்மயி. ஆனால் அப்பெயருக்கு என்ன அர்த்தம் என்று சின்மயிக்கு தெரியவில்லை. சின்மயிக்கே தெரியவில்லை.

இதுபோல எனக்குத் தெரிந்து இன்னொரு பிரபல ஆல்டர் ஈகோ பாடகி இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு பெயர் கிடையாது. அப்பாடகியின் இயற்பெயர் அனுராதா ஸ்ரீராம் ! 

ஒரு உதாரணம் சொல்கிறேன் – வாலி படத்திலிருந்து வானில் காயுதே வெண்ணிலா, நிலவைக் கொண்டுவா இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேட்டுப் பாருங்கள். இரண்டையும் பாடியது அனுராதா ஸ்ரீராம் தான். ஆனால் இரண்டாவது பாடலில் கொஞ்சம் வெஸ்டர்ன் த்வனி மற்றும் முதலிரவு எக்ஸைட்மென்ட் கலந்த அதிரடிக்குரலில் பாடியிருப்பார். இது மட்டுமல்ல, ஒரே பாடலில் முதல் வரியை ஒரு குரலிலும் சட்டென அடுத்த வரியில் யூ-டர்ன் போட்டு, டேபிளை உடைத்து வேறொரு குரலில் பாடும் வித்தை அனுராதாவிடம் உண்டு. எஸ்.பி.பி. தன்னுடைய பாடல்களில் எல்லாம் இடையில் ஒருமுறை சிரிப்பது போல நிறைய அனுராதா பாடல்களில் இந்த டிரான்ஸ்ஃபார்மேஷனை கவனிக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 February 2018

கோவா – ரயில் பயணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

முந்தைய பகுதி: கோவா - தொடக்கம்

கோவா ரயில் பயணத்தின் பிரதான அம்சம் – துத்சாகர் அருவி !

கோவாவிற்கு சென்னையிலிருந்து ஒரேயொரு ரயில் மட்டும்தான் செல்கிறது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை (வெள்ளிக்கிழமை மட்டும்). ரயிலின் பெயர் வாஸ்கோ ட காமா எக்ஸ்பிரஸ். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு செண்டிரலில் இருந்து கிளம்பி மறுநாள் மதியம் 1 மணிக்கு கோவாவின் வாஸ்கோ நிலையத்தை அடைகிறது. ரயிலில் போக வேண்டும் என்பதற்காகவே எங்கள் திட்டத்தை வெள்ளியன்று துவங்குமாறு வகுத்துக்கொண்டோம். ரயிலில் டிக்கட் விலை ரூ.480 (ஸ்லீப்பர்). 

கோவாவிற்கு ரயில் டிக்கட் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இறங்க வேண்டிய ரயில் நிலையம். மர்கோவா, வாஸ்கோ என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மர்கோவா சென்றுவிடும். 1 மணிக்கு வாஸ்கோ. இரண்டுக்கும் இடையே சுமார் முப்பது கி.மீ. தூரம். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மர்கோவாவில் இறங்கிவிடுகிறார்கள். எனது கணிப்பின் படி இது தவறு. நீங்கள் மீண்டும் ரயிலிலேயே திரும்பப் போகிறீர்கள், தெற்கு கோவாவை மட்டும்தான் சுற்றிப் பார்க்கப் போகிறீர்கள் என்றாலொழிய மர்கோவாவில் இறங்குவது தவறான முடிவு.  

ஏன் ? கோவாவை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை டூ-வீலரில் தான் சுற்றிப்பார்ப்பார்கள். வாடகை டூ-வீலர்களை நீங்கள் எங்கிருந்து பெறுகிறீர்களோ மீண்டும் அதே இடத்தில் கடைசி நாள் விட வேண்டும். மர்கோவாவில் எடுத்தால் மர்கோவாவில். வாஸ்கோவில் எடுத்தால் வாஸ்கோவில். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மர்கோவாவில் டூ-வீலர் வாடகைக்கு எடுத்தால் அதனை திரும்பவிடும் சமயத்தில் உங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் தோன்றும். ஒன்று, நீங்கள் டூ-வீலரை திரும்ப விடுவதற்காக மர்கோவா வரை வந்துவிட்டு, பின்னர் வாஸ்கோ செல்ல வேண்டும். (விமான நிலையம் அமைந்திருப்பது வாஸ்கோவில் !). நேர விரயம் மற்றும் டென்ஷன். இரண்டாவது, மர்கோவாவிலிருந்து வாஸ்கோ செல்ல டாக்ஸி செலவு தோராயமாக ஆயிரம் ரூ. ஆகும் (கோவாவில் ஓலா / ஊபர் கிடையாது). எனவே ரயிலில் வாஸ்கோ வரை சென்றுவிட்டு அங்கிருந்து டூ-வீலர் வாடகைக்கு எடுப்பதே சரியான முடிவாக இருக்கும். வாஸ்கோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் சுமார் நான்கரை கி.மீ. தூரம். ஆட்டோ பிடித்தால் நூறு ரூபாய். 

படம்: ட்ரிப் அட்வைசர்
நாங்கள் கோவா சென்றபோது எங்கள் எதிர் சீட்டில் கோவாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு பெரியவர் வந்திருந்தார். அவர் ஏற்கனவே சிலமுறை கோவா சென்றிருப்பதால் அவரிடம் சில தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கும் கிளம்பும் ரயில் இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூரு (எஸ்வந்த்பூர்) சென்றடைகிறது. பெங்களூரில் நல்ல உணவு கிடைக்கும் என்று காத்திருந்து, காத்திருந்து கடைசியில் கறித்துண்டு ஒன்று புதைக்கப்பட்ட புளி சோறு கிடைத்தது. ஒழிக பெங்களூரு ! 

கேஸில் ராக் (படம்: மை கோலா)
பெங்களூரில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த பன்னிரண்டு மணிநேரங்களுக்கு கர்நாடகாவின் பல பகுதிகளை சுற்றிவந்து சனிக்கிழமை காலை சுமார் ஒன்பதரை மணிக்கு கர்நாடகாவில் கேஸில் ராக் (Castle Rock) என்கிற நிலையத்தை சென்றடைகிறது. இங்கிருந்துதான் உங்கள் கோவா பயணம் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது. கேஸில் ராக் நிலையத்தில் ரயில் சுமார் பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை நிற்கும். காரணம், மலையேற்றத்திற்கு உகந்த வகையில் ரயில் பெட்டியில் கூடுதல் என்ஜின் இணைக்கப்படும். DSLRகாரர்கள் எல்லாம் ஜெர்கின் – கேமரா சகிதம் இறங்கிவிடுகிறார்கள். 

கேஸில் ராக் - குலெம் ரயில் பாதை
இப்போது நாம் கோவாவை பெனிட்ரேட் செய்யப் போகிறோம். கேஸில் ராக்கில் இருந்து அடுத்த ரயில் நிலையம் குலெம் (கோவா). இரண்டிற்கும் இடையே சுமார் இருபத்தியாறு கி.மீ. தூரம். இந்தியாவில் உள்ள ரசனைமிகுந்த ரயில் பாதைகளில் ஒன்று இந்த இருபத்தியாறு கி.மீ. பாதை. காரணம், துத்சாகர் அருவி ! (துத்சாகர் என்றால் பாற்கடல்). ஏற்கனவே மலைப்பாதையில் ரயில் போகிறது. அதற்கிடையே அருவியின் அழகு வேறு. 

குகைப்பாதை (படம்: அட்வென்ச்சர் 365)
கேஸில் ராக் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதும் நிறைய பயணிகள் வந்து படிக்கட்டுகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். மெல்ல மலை மீது ஏறும் ரயில் அடுத்த நிலையத்தை அடையும்வரை பதினெட்டு குகைப்பாதைகளை கடக்கிறது. ஒவ்வொரு முறை குகைப்பாதையை கடக்கும்போதும் மொத்த ரயிலும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்கிறது. நிறைய பேர் படிக்கட்டுகளில் தொங்கியபடி வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அந்த ஒரு தருணத்தில் மதம், இனம், சாதி, மொழி எல்லாம் மறந்து எல்லோரும் கோவா போகிற கேங் என்கிற ஓரணியில் இணைகிறார்கள் ! 

துத்சாகர் அருவி ! (படம்: த்ரில்லோஃபிலியா)
துத்சாகர் அருவியை சில நொடிகள் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கேஸில் ராக் – குலெம் பாதையில் பதினோரு குகைப்பாதைகளை கடந்தபிறகு காட்சியளிக்கிறது துத்சாகர் அருவி ! மலையின் மீதிருந்து ஊர்ந்துவரும் வெண்ணிற சர்ப்பம் போல ! பின்னர் சில நிமிடங்களில் ரயில் மலைப்பாதையை சுற்றி வரும்போது வேறொரு கோணத்தில் மீண்டும் துத்சாகர் அருவி தெரிகிறது. 

சுமார் பதினொரு மணிக்கு ரயில் குலெம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மலையேற்றத்திற்காக இணைக்கப்பட்ட என்ஜின் விடுவிக்கப்படுவதால் இங்கேயும் கூடுதலாக சில நிமிடங்கள் நிற்கிறது. பின்னர் பன்னிரண்டு மணிக்கு மர்கோவா ரயில் நிலையத்தை அடையும்போது அநேகமாக மொத்த ரயிலும் காலியாகிவிடுகிறது. அடுத்த ஒரு மணிநேரத்திற்கு ரயில் பேட்டியின் மீது நீங்கள் முழு உரிமை எடுத்துக்கொள்ளலாம். 

ஹோலண்ட் கடற்கரை (படம்: கோவா வில்லா)
மர்கோவா – வாஸ்கோ ரயில் பயணம் கட்டிடக்கலை மீது ஈடுபாடு கொண்டோருக்கு ஒரு வரப்பிரசாதம். இப்பாதையில் நீங்கள் போர்த்துகேய காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களையும், வீடுகளையும் பார்க்கலாம். ஆரவாரங்களில்லாத கோவாவை பார்க்கலாம். அமைதியான கேரள கிராமங்களை நினைவூட்டும் இந்த ரயில் பாதையில் பயணிக்கும்போது இதுதான் கோவாவா என்று நீங்கள் சோர்வடைகிறபோது, பருவப்பெண் தனது புடவையை சரி செய்துகொள்ளும்போது மின்னலென தோன்றி மறையும் இடையழகைப் போல சிலீரென ஹோலண்ட் கடற்கரை தனது எழில்தோற்றத்தை காட்டிவிட்டு மறைகிறது. தொடர்ந்து கோவா விமான நிலையத்தை கடந்து செல்லும் ரயில் அடுத்த சில நிமிடங்களில் வாஸ்கோ ரயில் நிலையத்தை சென்றடைகிறது ! 

அதிகாரப்பூர்வமாக கோவா மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் ! அடுத்த கட்டுரையில் கோவாவின் மிக முக்கியமான அங்கமாக நான் கருதும் கர்லீஸ் பற்றி பார்க்கலாம். 

அடுத்து வருவது: கோவா – கர்லீஸ் 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 12022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சவரக்கத்தி பார்த்தேன். மிஷ்கின் – ராம் என்பது டெட்லி காம்போ, லிட்ரல்லி. ஆனால் இயக்குநர் இருவருமில்லை. இரண்டு நிமிடங்கள் படத்தைப் பார்த்தாலோ அல்லது டிரைலரைப் பார்த்தாலோ கூட இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். உண்மைத்தகவல் அதைவிட சற்று கூடுதல் சிறப்பு – இயக்குநர் G R ஆதித்யா மிஷ்கினின் சகோதரராம்.

மங்கா (மிஷ்கின்) முரடன். இரக்கமில்லாதவன். பரோலில் வெளிவந்திருக்கிறான், அவனது பரோல் காலம் அன்றைய தினம் மாலை ஆறு மணியுடன் நிறைவடைகிறது. பிச்சை (ராம்) சவரத்தொழிலாளி. வாய்ச்சவடால் அதிகம். வாய் மட்டும் இல்லையென்றால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பது மாதிரியான ஆள். மங்காவுக்கும், பிச்சைக்கும் ஒரு சிறியத்தகராறு ஆகிவிடுகிறது. முரட்டுக்கிறுக்கனான மங்கா அவனை கொலைவெறியுடன் துரத்துகிறான். 

படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு (அநேகமாக இடைவேளைக்கு பின் சிறிதுநேரம் வரை கூட) என்னங்கடா லூஸுக்கூதி மாதிரி எடுத்து வச்சிருக்கீங்க என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக இதில் மங்கா என்கிற கதாபாத்திரம் செய்யும் கிறுக்குத்தனங்களைப் பார்த்தால் ஒன்றிரண்டு தகாத வார்த்தைகளை சேர்த்து எழுத வேண்டுமென்று தான் தோன்றுகிறது. அதன்பிறகு படம் கொஞ்சம் அதன் போக்கிலிருந்து விலகி சில நெகிழ்வூட்டும் காட்சிகள் வருகின்றன. ஒருமாதிரியாகப் போய் இறுதியில் ஒரு சிறுகதை போல நிறைவடைகிறது படம்.

சவரக்கத்தியின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைப்பது ராம் கதாபாத்திரம் தரும் பாஸிடிவ் எனர்ஜிதான். வாழ்க்கை துரத்துகிறது. அத்தனை துரத்தல்களையும் சளைக்காமல் எதிர்கொள்கிறான். ஒருபோதும் துவண்டு போய் சரணடைந்துவிடாமல் சமயோசிதமாக சிக்கல்களிடமிருந்து தப்பிக்கிறான். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே இவனை எதுவும் செய்ய முடியாது என்று வெறுத்துபோய் விட்டுவிடுகிறது. 

மிஷ்கினின் சிடுசிடு கதாபாத்திரத்தை பார்க்கும்போது அதனை நிஜ மிஷ்கினோடு ஒப்பிடத் தோன்றுகிறது. மிஷ்கினைச் சுற்றி எப்போதும் நான்கு அடியாட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிஷ்கினிடம் ஏதாவது சொல்வது என்றால் பயம், அது நல்ல விஷயமாக இருந்தால் கூட. ஏனென்றால் மிஷ்கின் ஒரு முரட்டு முட்டாள் ஆயிற்றே. சும்மா சொல்லக்கூடாது. இயக்குநர் தம்பி மிஷ்கினை செமத்தியாக பகடி செய்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

பூர்ணா டார்லிங் முதல்முறையாக சொந்தக்குரலில் பேசி இருக்கிறார். எரிச்சலூட்டும் ஒரு வேடம் பூர்ணாவுக்கு. ஆனால் அது பூர்ணா என்பதால் ஏனோ எரிச்சல் ஏற்படவே இல்லை. ஷாஜி வசனம் பேசும் மாடுலேஷனுக்கு முதல்முறையாக பொருத்தமான வேடம் கிடைத்திருக்கிறது.

படத்தின் பலவீனம் என்றால் கொஞ்ச நேரத்திலேயே ராமுக்கும் பூர்ணாவுக்கும் ஒன்றும் ஆகிவிடாது என்று தெளிவாக தெரிந்துவிடுகிறது. பின்னணி இசையும் அதனை உறுதிப்படுத்தி விடுகிறது. அதனாலேயே வழக்கமாக ஏற்படவேண்டிய பதைபதைப்பு ஏற்பட மறுக்கிறது. மாறாக இதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிப்பார்கள் அல்லது மங்கா மனசு மாறிவிடுவானோ என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

மிஷ்கின் படம், குறியீடு என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பார்த்தால் சவரக்கத்தி நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். சிம்பிளாக சொல்வதென்றால் டாம் & ஜெர்ரி பார்த்தது போன்ற உணர்வு. 

**********

நீண்ட நாட்களாக என் பக்கெட் லிஸ்டில் இருந்த அனிதாவின் காதல்கள் நாவலை வாசித்தேன். ஒரு பெண்ணின் மனக்குழப்பங்கள் தான் கதைக்கரு. 

கனவுகள் நிறைந்த இளம்பெண் அனிதா. திடீரென ஒருநாள் செல்வம் கொழிக்கும் ஒரு இளம் தொழிலதிபனின் காதல் பார்வை அவள் மீது விழ, அதே சமயத்தில் அவளது வீட்டில் அவளை ஒரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்கிறார்கள். இடையில் அனிதாவை மனதிற்குள் வைத்து பூஜிக்கும் முறைப்பையன் என்று போகிறது அனிதாவின் காதல்கள். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பம், அதிரடி செயல்பாடுகள் கொண்ட பணக்கார இளைஞன், வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஒரு மாடர்ன் பெண் என்று நிறைய சுஜாதா கிளிஷேக்கள். வழக்கமாக சுஜாதாவின் நாவல்கள் படித்தால் சுரக்கக்கூடிய ஒரு ரசாயனம் ஏனோ அனிதாவின் காதல்களை படித்து முடிக்கும் வரையில் ஒருமுறை கூட சுரக்கவே இல்லை. குறிப்பாக நாவலின் முடிவு அத்தனை செயற்கைத்தனமாக இருந்தது.

அனிதாவின் காதல்கள் நாவலில் கவனிக்கத்தகுந்த ஒரு அம்சம் அது ஹர்ஷத் மேதா ஊழலை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது. முதலில் இது வழக்கம் போல சுஜாதாவின் ஈ.எஸ்.பி என்று நினைத்தேன். இல்லை. இவ்வூழல் வழக்கு பரபரப்பான காலகட்டம் 1992. அனிதாவின் காதல்கள் முதற்பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1993. 

ஹர்ஷத் மேதா
ஹர்ஷத் மேதா ஒரு காலத்தில் ஸ்டாக் மார்க்கெட்டில் கொடிகட்டிப் பரந்த இளம் தொழிலதிபர். பொருளாதார பத்திரிகைகள் அவரை ‘ஸ்டாக் மார்க்கெட்டின் அமிதாப் பச்சன்’ என்றும், ‘தி பிக் புல்’ (The Big Bull’) என்றும் வருணித்து எழுதின. வோர்லியில் பகட்டான வீடு, ஸ்விம்மிங் பூல், மினி கோல்ஃப் கோர்ஸ், வெளிநாட்டு கார்கள் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேதாவின் வாழ்க்கை திடீரென ஒருநாள் புரட்டிப் போடப்படுகிறது. ஸ்டாக் மார்க்கெட் சட்டங்களில் உள்ள துளைகளை பயன்படுத்தி சுமார் இரண்டாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஹர்ஷத் மேதா செய்தது ஒரு பொருளாதார விளையாட்டு. தனது துணை நிறுவனங்களின் மூலமாக தனது நிறுவன ஷேர்களை வாங்குவது, இதனால் ஏற்படும் டிமாண்ட் காரணமாக அவரது நிறுவன ஷேர் விலை உயர்கிறது (மூன்றே மாதங்களில் இருநூறு ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை). தக்க சமயத்தில் ஷேர்களை பணமாக்கிக் கொள்வது. 1992ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சுசித்ரா தலால் என்கிற ஊடகவியலார் ஹர்ஷத் மேதாவின் போசடி குறித்து எழுதுகிறார். தொடர்ச்சியாக ஹர்ஷத் மீது 72 வழக்குகள் பதியப்பட்டது. இம்மோசடியில் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், நரசிம்ம ராவுக்கும் கூட தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஏழு வருடங்களுக்குப் பிறகு ஹர்ஷத் மேதா வழக்கில் அவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்தது. 2001ம் ஆண்டு நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்ஷத் மேதா உயிரிழந்தார். 

ஹர்ஷத் மேதா மட்டுமல்ல. இந்திய பொருளாதார சந்தையில் கேதான் பரேக், சத்யம் ராமலிங்க ராஜு, ரூப் பன்சாலி, சுப்ரதா ராய், ஷாரதா ஸ்காம் என்று ஏராளமான பொருளாதார மோசடியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் காற்றில் கூட... சரி வேண்டாம். விடுங்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 February 2018

பிரபா ஒயின்ஷாப் – 05022018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டில் முதன்முதலாக திரையரங்கில் பார்த்த படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். படம் எப்படி இருக்குமோ என்று உள்ளூர ஒரு பயம் இருந்தாலும், ஒரு மாதம் தியேட்டருக்கு போகவில்லை என்பது ஒரு மாதிரி நெருடலாக இருந்ததால் சென்றுவிட்டேன். (எஸ்கேப் தியேட்டரில் இன்னமும் தேசிய கீதம் ஒலிபரப்புகிறார்கள்). படம் துவங்கி ஐந்தே நிமிடங்களில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகிறது.

1. நாம் வித்தியாசமான ஒரு படத்தை பார்க்கப் போகிறோம்.
2. நம் பொறுமையை ரொம்ப சோதிக்கப் போகிறார்கள்.

பயங்கரமான சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி படம் போல பல்லண்டம், அண்டம், பால் வீதி, சூரியக் குடும்பம் என்று நீட்டி முழக்கிவிட்டு கடைசியில் ஒரு கிராமத்துல என்று சப்பையாக முடிக்கும்போதே நமக்கான ஏமாற்றம் துவங்கிவிடுகிறது. நகைச்சுவையில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, நகைச்சுவை நன்றாக இருந்து நம்மை சிரிக்க வைக்கும் ரகம். இன்னொன்று, தாத்தா என்னங்கடா பண்ணி வச்சிருக்கீங்க என்று நம்மை காண்டாக்கி சிரிக்க வைக்கும் ரகம். ஒ.ந.நா.பா.சொ. இரண்டாவது ரகம். ஆனால் நிறைய தருணங்களில் மனது விட்டு சிரித்தேன் என்பது மட்டும் உண்மை. அதே சமயம், நிறைய தருணங்களில் வெறுப்பாகவும் உணர்ந்தேன். இப்படத்தின் ஐரணி அதுதான். இவ்வளவு மனம் விட்டு சிரித்துவிட்டு இது மொக்கை என்று சொல்வதற்கு எனக்கு மனது வரவில்லை. மற்றபடி இன்னமும் பட்டக்ஸில் குத்துவதை எல்லாம் ஒரு காமெடி என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி துவங்கியபிறகு மிகவும் சோதிக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் ஒரு முக்கால் மணிநேர படத்தை வெட்டி வீசியிருக்க வேண்டும். 

விஜய் சேதுபதியையும், சிவ கார்த்திகேயனும் முறையே அடுத்த அஜித் / விஜய் என்று சினிமா ரசிக வட்டாரத்தில் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் ஒருவேளை விஜய் சேதுபதிக்கே இருந்தால் அவர் உடனடியாக அதனை கைவிடுவது நல்லது. சும்மா ஸ்லோ மோஷனில் நடந்து வருவது, புது கெட்டப் போடுவது என்று தியேட்டரில் கிளாப்ஸ் / விசில் வரும் என்று நம்பி சில ஷாட்டுகளை வைத்து ஏமாந்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் பங்காரு கோடிபெட்டா பாடலை எங்காவது சொருக வேண்டும் என்று பிரயாசப்பட்டு அதற்காக வேறு ஒரு காட்சி. யாரு ஸ்வாமி மியூஸிக் ? இவர் வேறு ஒரு பக்கம், பேரிரைச்சலைக் கொடுத்து காண்டைக் கூட்டுகிறார். கெளதம் கார்த்திக்குக்கு புத்திசாலித்தனமான, கூலான இளைஞன் வேடம். தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேடங்கள் அவருக்கு கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். கூடுதலாக இம்முறை அவரை அப்பா வாய்ஸில் மிமிக்ரி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பதற்றமடையாத, உணர்ச்சிவசப்படாத அவரது கதாபாத்திரம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

காயத்ரியின் முகத்தை டீஸரில் எங்கேயோ பார்த்திருக்கிறேன். அதனால் ஹீரோயின் யாரென்று எதுவும் யோசிக்காமல் போய் திரையரங்கில் உட்கார்ந்தால் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் – நிஹாரிகா. சிரஞ்சீவியின் தம்பி மகளாம். தெலுங்கு சினிமாவில் சுற்றிச் சுற்றி எல்லோரும் உறவுக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. இந்த நிலையில் போனால் ஹீரோ, ஹீரோயின் புக் செய்யும் முன்பு அவர்களுக்குள் முறை வருகிறதா என்று பார்த்துதான் புக் செய்ய வேண்டும். ஏற்கனவே இப்படியிருக்க நிஹாரிகாவுக்கும், பிரபாஸுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று தெலுங்கு சினிமா தொழிற்சாலையில் ஒரு புரளி பரவிக்கொண்டிருக்கிறது. படத்தில் நிஹாரிகாவின் கதாபாத்திரப் பெயர் அபாயலட்சுமி. படம் முழுக்க சிடுசிடுவென இருக்கிறார் என்றாலும் அவரது க்யூட்டான முகபாவனைகளால் திணறடித்துவிடுகிறார்.

**********

புத்தகக் காட்சியில் கிடைத்த இரண்டு சர்ப்ரைஸ்கள். முதலாவது, பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை. பூம்புகார் பதிப்பகத்தில் பார்த்ததும் பழைய நினைவுகள் வர, வாங்கிவிட்டேன். பதினோராம் வகுப்பு துணைப்பாடத்தில் வந்த சிறுகதைகளில் ஒன்று. செவ்வாழை என்கிற சிறுகதை உங்களுக்கு நினைவில் இருப்பது உங்களுக்கு வாய்த்த தமிழாசிரியரை பொறுத்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இக்கதையை மிகவும் விஸ்தாரமாக, காட்சிகளை கண் முன் நிறுத்தும் வகையில் வர்ணனைகளோடு சொன்னார் எனது அப்போதைய தமிழாசிரியர் பத்மநாபன். அவரது விவரணையின் காரணமாக இப்போது செவ்வாழையை படிக்கும்போது மொத்தக் கதையும் இவ்வளவுதானா என்று தோன்றுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு சிறுகதை பூபதியின் ஒருநாள் அலுவல். இவ்விரு கதைகளில் வரும் உரையாடல்களையும் அக்காலத்தில் மனப்பாடமாக வைத்திருந்தேன். (ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர் !)

இரண்டாவது சர்ப்ரைஸ் – கலைஞரின் ஒரே இரத்தம். ஸ்டாலின் நடித்த இரண்டு திரைப்படங்களில் ஒன்றான ஒரே ரத்தத்தைப் பற்றி கடந்த வாரம் எழுதியிருந்தேன். அதன் முகப்பு உரையில் குங்குமத்தில் தொடராக வந்த கதை என்று கலைஞர் குறிப்பிடுகிறார். எனின் அது சூரியன் பதிப்பக வெளியீடாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன், ஆனால் கிடையாது. அப்புறம் எதார்த்தமாக பார்த்தால் கலைஞர் கருவூலம் என்கிற ஸ்டாலை யாருக்கும் தெரியாமல் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அங்கே கிடைத்தது ஓர் இரத்தம். வெளியீடு: பாரதி பதிப்பகம். நாவல் – சினிமா இரண்டாகவும் வெளிவந்துள்ள கதைகளில் முதல்முறையாக இவ்வளவு ஒற்றுமைகளைக் காண்கிறேன். எழுத்தில் என்ன இருக்கிறதோ அது எழுபத்தைந்து சதவிகிதம் சினிமாவில் எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான சில வசனங்கள் அப்படியே மாறாமல் வருகின்றன. இருப்பினும் சில மாற்றங்கள். நாவலில் பிரசார நெடி அதிகம், ஸ்டாலின் கதாபாத்திரம் சாகவில்லை, கிஷ்மு கதாபாத்திரம் ரசனையாக இல்லை, பாண்டியன் – சீதா பிட்டு கிடையாது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment