30 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 30102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்குகளில் சமீபத்திய கட்டண உயர்விற்குப் பிறகு டிக்கட் எடுக்கவே ஒருமாதிரி குற்ற உணர்வாக இருக்கிறது. மெர்சலுக்கு தேவியில் மொத்தமாக பதினெட்டு டிக்கட்டுகளுக்கு நான்காயிரத்து முன்னூற்றி சொச்சம் ஆனபோது அது என் பணம் இல்லை என்றாலும் கூட சங்கடமாக இருந்தது. கட்டண உயர்விற்குப் பிறகு ஆதர்ஸ திரையரங்கான தேவியிலிருந்து எனது திட்டங்களை சத்யம் / எஸ்கேப்பிற்கு மாற்றிக் கொள்ள முடிவெடுத்துவிட்டேன். சில காரணங்கள். ஒன்று, தேவியில் அது பத்து ரூபாய் டிக்கெட்டாக இருந்த சமயத்திலாவது அதன் புக்கிங்கை திடீரென அகாலவேளையில் திறந்து துரிதமாக மூடிக்கொள்வார்கள். இப்போது குறைந்தபட்ச டிக்கட் விலை ஐம்பது. வரிகள், இணையக் கட்டணம், லொட்டு, லொசுக்கு எல்லாம் சேர்த்து நூறு ரூபாய்க்கு கொஞ்சம் அதிகம் வருகிறது. ஆனாலும் ஏனோ தேவியில் அதன் புக்கிங்கை திறப்பதே கிடையாது. அதே சமயம், முன்பு மலிவுவிலை டிக்கட்டுகளை ரகசியமாக வைத்திருந்த சத்யம் / எஸ்கேப் தற்போது அதனை இணையத்திலும் / நேரிலும் விற்பனை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். விலை: இணையத்தில் 94, நேரில் 64.

தேவியோடு ஒப்பிடும்போது சத்யத்தில் சில தொந்தரவுகளும் இருக்கின்றன (இவ்வகை டிக்கெட்டில் சத்யத்தில் மேயாத மானும், எஸ்கேப்பில் சோலோவும் பார்த்தேன்). 

1. இருக்கை: சத்யத்தில் தரமும், அளவும் மோசம். உங்கள் அருகில் சற்று வாட்ட சாட்டமான ஆள் வந்தால் உங்களை ஈஷிக்கொண்டு தான் அமர வேண்டும். எஸ்கேப்பில் வேறொரு பிரச்சனை. சீட்டில் தலை சாய்க்குமிடத்தில் புடைப்பாக ஒரு குஷன் வைத்திருக்கிறார்கள். அது நமக்கு வசதி செய்வதற்கு பதிலாக பெரும் கழுத்து வலியை உண்டு பண்ணுகிறது. நிச்சயமாக இது முதல் வரிசையில் அமர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி அல்ல என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

2. திரை: தேவி மற்றும் தேவி பாரடைஸின் பிரம்மாண்ட திரை, தேவி கலா மற்றும் தேவி பாலாவின் மனதிற்கு நெருக்கமான குட்டி திரை இரண்டையும் மிஸ் செய்கிறேன். சத்யம், எஸ்கேப் இரண்டிலும் திரையின் அளவு நடுத்தர அளவில் இருக்கின்றன.

3. அரங்கின் வாயில்: தேவியின் எல்லா அரங்குகளிலும் வாசல் பின்புறம் அமைந்திருக்கும். அதனால் மற்ற பார்வையாளர்களின் வருகையால் நமக்கு அதிகம் தொந்தரவு ஏற்படாது. சத்யம் / எஸ்கேப்பில் உல்டாவாக முன்னாலிருந்து ஆட்கள் வருகிறார்கள். அதுவும் படம் துவங்கி சுமார் இருபது நிமிடங்கள் வரை எருமை மாடுகள் போல வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

4. பார்வையாளர்கள்: தேவியின் பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம். அவர்கள் தரும் தொந்தரவுகள் என்றால் சப்தம் எழுப்புவது, மொபைலில் உரக்கப் பேசுவது, ஆபாசமாக கத்துவது போன்றவை. சத்யம் / எஸ்கேப்பில் பெரும்பான்மை மேட்டுக்குடி. இவர்களுடைய உருட்டு வேறு தினுசாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஜோடியாக வந்து ஒரு வாளி நிறைய பாப் கார்ன் வாங்குகிறார்கள். பெண் அதற்குள் ஏதோ ஒரு மசாலாத்தூளை போங்கெடுத்துப்போய் மொத்தமாக சாய்த்துக்கொள்கிறார். பின்பு ஆண் அந்த வாளியை வாங்கி பத்து நிமிடத்திற்கு குலுக்கிக்கொண்டே நிற்கிறார். படம் முடியும் வரை அதனை வதக் வதக்கென சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

சத்யத்தில் DND ஷோ என்று ஒன்று இருக்கிறது. அதில் மொபைல் பயன்படுத்தக்கூடாது. பேசக்கூடாது, தாமதமாக வரக்கூடாது என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதிலாவது இந்த பாப்கார்னுக்கும் தடை விதிக்கும்படி நிர்வாகத்திடம் கோர வேண்டும்.

குறிப்பாக இந்த மசாலாத்தூளை மொத்தமாக பாப்-கார்ன் வாளியில் கொட்டிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து எலைட் ஆட்களிலும் எச்சைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக்கொண்டேன். இன்னொரு காட்சி. ஸ்டார்பக்ஸ் எனும் காபி கடையில் பயங்கரக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்தால் ஆண்டுவிழாவை முன்னிட்டு சலுகை விலையில் காபி தருகிறார்களாம். சலுகை விலை எவ்வளவு தெரியுமா ? நூறு ரூபாய். ஒரு காபியின் விலை நூறு ரூபாய் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்டார்பக்ஸின் வழக்கமான காபி விலையை நான் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. இவ்வளவு இளவயதில் மாரடைப்பு வந்தால் கஷ்டம்.

இனி பார்த்த படங்களைப் பற்றி -

மேயாத மான். PBS-ன் வெள்ளித்திரை அறிமுகம், வடசென்னை கதை போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு சென்றேன். காதல் கதைதான். ஆனால் ஏனோ மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்திருந்தது. நிறைய காட்சிகளில் மெய்மறந்து சிரித்துக்கொண்டும், சில காட்சிகளில் ரகசியமாக கண்களை துடைத்துக்கொண்டும் ரசித்தேன். மேயாத மானின் மூலமாக கோலிவுட்டிற்கு நடிப்பில் நான்கு புதிய வரவுகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக இந்துஜா ! 

PBS, PBS என்று திரையரங்கிற்கு சென்றால் அங்கே இந்துஜா சுடர் எனும் கதாபாத்திரம் மூலம் தன் இயல்பான அழகாலும், பாவனைகளாலும் நம்மை காலி செய்துவிடுகிறார். வினோத் துவக்கத்தில் சுடரை தங்கையாக நினைக்கிறான். அதிலிருந்து தன் மனதை மாற்றிக்கொள்ள அவனுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நமக்கோ ஆரம்பத்திலிருந்தே சுடரை தங்கையாக நினைக்க முடியவில்லை. என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்துஜா ராஜூமுருகன் வகையறாக்களின் டார்லிங்காக சிலகாலம் வலம் வருவார். எங்க வீட்டு குத்துவிளக்கு கானா, தங்கச்சி பாட்டு, எஸ்.மது பாட்டு மூன்றும் அதகளம். புதிய இயக்குநர் ரத்னகுமார் கம்பீரமாக வருகை புரிந்திருக்கிறார். இப்படம் மெர்சலுடன் மோதியது துரதிர்ஷ்டம். தப்பான சமயத்தில் வந்திருக்கிற நல்ல படம். மேயாத மானை பார்த்துவிட்டு மெர்சல், விவேகம் போன்ற படங்களை நினைத்தாலே உவ்வேக் என்று வருகிறது.

மார்க் மை வேர்ட்ஸ் இன்னொரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவை திரும்பிப் பார்த்தால் அதில் கார்த்திக் சுப்பராஜின் பங்கு கணிசமாக இருக்கும்.

சோலோ. வாகான ஷோ நேரம் அமையாமல் இரண்டு வாரங்களாக போக்கு காட்டிக்கொண்டிருந்தது. நான்கு தனித்தனி கதைகளை உள்ளடக்கிய படம். தட்டையாக சொல்வதென்றால் நான்கு சிறுகதைகளை படித்த உணர்வு ஏற்படுகிறது. பொறுமையை நிறைய சோதிக்கிறார்கள். ஆனால் இதில் சிவனின் நான்கு முகங்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு என்று ஏதேதோ சொல்கிறார்கள். சோலோவிற்கு யாரேனும் கோனார் நோட்ஸ் எழுதியிருக்கிறார்களா என்று தேட வேண்டும். டைட்டிலில் துல்கர் சல்மான் பெயரைக் கண்டபோதும், அவருடைய அறிமுகக் காட்சியிலும் பின்வரிசையிலிருந்து சில யுவதிகள் கோரஸாக கத்தினார்கள். அதன்பிறகு அவர்களுடைய குரலை நான் படம் முடியும் வரை கேட்கவே இல்லை. நான்காவது கதையில் ருத்ரா தோன்றும் போதெல்லாம் ஒரேயொரு பெண் மட்டும் வீல், வீலெனே கத்திக்கொண்டிருந்தார். அவருடைய காலுக்கடியில் கரப்பான் அல்லது பெருச்சாளி ஓடியிருக்கும் என்று யூகிக்கிறேன். மற்றபடி பெண்களுக்கு துல்கர் மீதிருக்கும் பற்றைக் கண்டு எனக்கு பொறாமையெல்லாம் கிடையாது. 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு அழகான நடிகையை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். முதல் கதையில் – தன்ஷிகா ஒரு கவிதையைப் போல அறிமுகமாகிறார். ஆனால் இருப்பதிலேயே அதிகம் பொறுமையை சோதிக்கும் கதை அதுதான். இரண்டாவது கதையில் ஆர்த்தி வெங்கடேஷை பார்த்து ஜொள்ளிவிட்டு வாயை மூடுவதற்குள்ளாகவே மறைந்துவிடுகிறார். நான்காவது கதையில் வருபவர் ஹ்யுமா குரேஷி என்று நினைத்திருந்தேன். பின்பு ஏஸ்தெட்டிக்ஸ் பார்த்துவிட்டு இது ஹ்யுமா கிடையாதே என்று விக்கி செய்தால் அவரது பெயர் நேஹா ஷர்மாவாம். 

என்னுடைய ரசனையில் கதைகளை வரிசைப்படுத்தினால் – 4, 2, 3, 1. புத்திசாலித்தனமாக தன்ஷிகா கதையை முதலில் வைத்துவிட்டார்கள். அதனால் படம் முடியும்போது மற்ற மூன்று கதைகளை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள முடிகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 23102017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

கண்ணடிக்கல... கை பிடிக்கல...
உள்ளவந்து ஓட்டிக்கிட்ட காதல்...
தாலாட்ட... மெல்ல வாலாட்ட... 

என்று பின்னணிப் பாடகி கிசுகிசுப்பான குரலில் கவிதை வாசிக்க, விஷ்ணு விஷாலும், ஸ்ரீதிவ்யாவும் ஒரு மரத்தின் இருவேறு புறங்களில் நின்றுக்கொண்டு காதல் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி திரையின் மேற்பகுதியில் ‘மாவீரன் கிட்டு’ என்று படத்தின் பெயர் ஒளிர்கிறது. எப்படிப்பட்ட போராளியின் பெயரை வைத்துக்கொண்டு டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்பா வருத்தப்பட்டார். 

யார் இந்த மாவீரன் கிட்டு ? 

1979. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அடித்தளமிட்ட காலகட்டம். அச்சமயத்தில் கிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளுள் ஒருவர். அப்போது அவருக்கு பத்தொன்பது வயது. இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். இயக்கப்பெயர் வெங்கிட்டு. பின்னாளில் கேணல் கிட்டு என்று ஈழ மக்களால் செல்லமாக அழைப்பட்டவர். கிட்டு வேகமும் விவேகமும் கொண்ட துடிப்பான இளைஞர். தேசியத்தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக போர்ப்பயிற்சி பெற்றவர்.  

1983ம் ஆண்டு புலிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார். ராணுவப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு வந்து சென்றவர்களில் ஒருவர். அதன்பிறகு அப்போதைய யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் வீரமரணம் அடைகிறார். அப்பொறுப்பு கிட்டுவிடம் வந்து சேர்கிறது. தொடர்ச்சியாக பல தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்ட கிட்டு 1987ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற கைக்குண்டு தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். மன உறுதியை இழக்காத கிட்டு மருத்துவத்திற்காக இந்தியா வந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தப் போதாமைகளை இந்தியாவிலிருந்தபடியே எழுதி வெளியிட்டார். அதனால் இந்திய அரசு அவரை முதலில் வீட்டுக்காவலிலும், பின்னர் சிறையிலும் அடைத்தது. சிறையிலிருந்து போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப்போராட்டங்களை நிகழ்த்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  

தாயகம் திரும்பிய கிட்டு இலங்கை உடனான பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றார். பின்னர் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளாராக அறிவிக்கப்பட்டு லண்டனுக்கு பயணமானார். புலம்பெயர் தமிழர்களுக்கு போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உள்ளே மாணவர் அமைப்பு, கலைப் பண்பாட்டு கழகம் போன்றவற்றை அமைத்துச் செயல்பட்டார்.  

1993 ஜனவரி 7. கிட்டு மற்றும் சில விடுதலைப்புலிகள் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்கின்றனர். ஜனவரி பதிமூன்றாம் தேதி, இந்தியக் கடல் எல்லையை அவர்களது கப்பல் நெருங்குகிறது. இதனை முன்கூட்டியே அறிந்த இந்திய கடற்படை பதினாறாம் தேதி காலை ஆறு மணிக்குள் சரணடையுமாறு அவர்களுக்கு கெடு விதிக்கிறது. கிட்டுவும் மற்றவர்களும் சரணடையவில்லை. பதினாறாம் தேதி சரியாக காலை ஆறு மணிக்கு இரண்டு ஹெலிகாப்டர்களும், மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலை சுற்றி வளைக்கின்றன. கிட்டு சரணடையாததால் இந்திய கடற்படை கப்பலை தாக்குகிறது. கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலிகள் வீரமரணம் அடைகின்றனர். கிட்டுவிற்கு அப்போது வயது 33. 

இப்போது நாம் சுசீந்திரனின் மாவீரன் கிட்டுவிற்கு வருவோம். 

சாதிய ஒடுக்குமுறைகள் கொண்ட ஒரு கிராமம்தான் கதைக்களம். அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால் அவர்களின் பிணங்களைக் கூட உயர்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல முடியாது. கிராமத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய காளிமுத்து என்கிற எழுத்தாளர் மரணமடைகிறார். காளிமுத்து ஐயாவுக்கு தோள் கொடுத்து போராடிய சின்ராசு காளிமுத்துவின் உடலை பொதுவழியில் எடுத்துச் செல்ல வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுகிறார். இருப்பினும் உயர்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காவல்துறையும் இணக்கமாக இல்லை. இறுதியில் உடலைக் கொண்டு செல்ல மட்டும்தான் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதனை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துச் செல்ல வேண்டுமென குறிப்பிடப்படவில்லை என்று காவல்துறையே காளிமுத்துவின் உடலை கொண்டு சென்று தகனம் செய்கின்றனர். பொதுவழியில் உயிருள்ள தாழ்த்தப்பட்டவர்களும் நடமாட வேண்டும் என்பது சின்ராசுவின் லட்சியங்களில் ஒன்று. 

அச்சமயத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த கிட்டு (எ) கிருஷ்ணகுமார் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். கிட்டு கலெக்டராக வேண்டுமென சின்ராசு விருப்பப்படுகிறார். கிட்டுவும் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். இப்படியாக படம் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் முயற்சிகள் அதற்கு உயர்த்தப்பட்ட மக்கள் ஏற்படுத்தும் இடர்பாடுகள் என்று போகிறது. குறிப்பாக கிட்டுவின் கலெக்டராக முயற்சிக்கு தொடர்ந்து இடர்களை ஏற்படுத்துகிறார் உயர்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹரிஷ் உத்தமன். இறுதியில் தான் கலெக்டராகி செய்ய வேண்டியதை எல்லாம் உயிர்த்தியாகத்தால் நடக்க வைக்கிறார் கிட்டு. 

கிட்டுவாக விஷ்ணு விஷால், சின்ராசுவாக பார்த்திபன். மாவீரன் கிட்டுவின் உண்மையான ஹீரோ பார்த்திபன் தான். பார்த்திபன் படம் முழுக்க கருப்புச்சட்டை அணிந்து வருகிறார். அச்சகம் வைத்திருக்கிறார். தன் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையம் வரை சென்று தோள் கொடுக்கிறார். க்ளோஸ் எனஃப் ! ஒருவேளை அப்பா மாவீரன் கிட்டு பார்த்திருந்தால் அவருக்கு நிச்சயமாக பிடித்திருக்கும்.  

மாவீரன் கிட்டுவின் இரண்டாம் பாதி மெதுவாக அமைந்ததாலும், ஏதோ பெருசாக செய்யப்போகிறார்கள் என்று நினைக்கையில் சப்பையாக முடித்ததாலும் வசூலில் வெற்றி பெறவில்லை. இல்லையென்றாலும் வெற்றி பெற்றிருக்காது என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் மாவீரன் கிட்டு போன்ற படங்கள் ஒரேயொரு சாதிப் பற்றாளரை மனம் மாற்றினால் கூட அது வெற்றிதான் ! அந்த வகையில் அது ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்புகிறேன். மற்றபடி உயிர்த்தியாகம் என்பது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய டாபிக். பொதுவாக தற்கொலை தப்பு என்று இதனை அணுக முடியாது. அதனை யார் செய்துகொள்கிறார், எதற்காக செய்துகொள்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதைப் பொறுத்தே அது சரியா தவறா என்று சொல்லமுடியும். 

என்னுடைய கவலையெல்லாம் படத்தின் தலைப்பைப் பற்றித்தான். வேறு தலைப்பா அய்யா இல்லை. ஒருவேளை இயக்குநர் சுசீந்தரன் கிட்டுவிற்கு ட்ரிப்யூட் கொடுப்பதற்காகக் கூட இப்படி பெயர் வைத்திருக்கலாம். (இவரது இன்னொரு படத்தின் பெயர் ஜீவா !). ஆனால் கேணல் கிட்டுவுக்கும் இப்படத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. பழனி பக்கமுள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம் என்கிறார் இயக்குநர். இப்போது என்ன பிரச்சனை என்றால் நாளை கேணல் கிட்டுவைப் பற்றி யாராவது தெரிந்துக்கொள்ள வேண்டி கூகுள் செய்தால் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா முகங்கள் தான் வந்து நிற்கும். ஒருவகையில் இது கேணல் கிட்டுவின் வரலாற்றை சிதைக்கிறது. 

போலவே தற்போது பழைய படங்களின் பெயர்களை எல்லாம் புதிய குப்பைகளுக்கு வைக்கும் பழக்கம் பரவலாகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா என்றொரு போஸ்டர் பார்த்தேன். கண்றாவி ! எது எதையோ தடை செய்பவர்கள் முதலில் இதைத் தடை செய்ய வேண்டும். 

பதினெட்டு பேர் கொண்ட ஒரு பெரிய குழுவுடன் தேவி பாரடைஸில் மெர்சல் பார்த்தேன். கடந்த மூன்று நாட்களாக தினசரியை புரட்டினால் குறைந்தது ஏழெட்டு செய்திகளாவது மெர்சலைப் பற்றி வருகிறது. மெர்சல் படமும், அதையொட்டிய சர்ச்சைகளும் பெரிய டாபிக் ! எழுதத் துவங்கினால் நீண்டுவிடும் என்பதால் கொஞ்சம் சூடு தணிந்ததும் அதைப்பற்றி பேசிக் கொள்ளலாம். 

இப்போதைக்கு மெர்சலைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் ரொம்ப சுமாரான பொழுதுபோக்கு படம். ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 16102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் ஏழெட்டு தமிழ் படங்கள் வெளியாகும். அவற்றில் மூன்றாவது பெரிய நடிகர்களின் படமாக இருக்கும். பண்டிகைகளுக்கு முந்தைய ஒரு வாரம் திரையரங்குகளில் பழைய அல்லது பி-கிரேடு படம் ஓட்டுவார்கள். சில திரையரங்குகள் அந்த இடைவெளியில் அரங்கை புதுப்பித்து தயாராக வைத்துக்கொள்வார்கள். அதுமாதிரி ஒரு இரண்டு வார பிரேக்கை தற்போது தியேட்டர்க்காரர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிடைத்த கேப்பில் ராஜ லீலை என்கிற தமிழ்ப்பட போஸ்டர்களில் தபு அபாயகரமான முகபாவனைகளை எல்லாம் காட்டிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த நண்பர் போய் பார்த்துவிடலாமா என்றார். இந்தக் காலத்தில் ரொம்ப பேரிடம் இல்லாத கெட்டப்பழக்கம் ஒன்று என்னிடம் உள்ளது. எந்த பி-கிரேடு / டப்பிங் பட போஸ்டரை பார்த்தாலும் அது குறித்து கிரவுண்ட் வொர்க் செய்து, அப்படத்தின் பூர்வீகத்தை தெரிந்துக்கொள்வேன். இவர்கள் என்னதான் ராஜலீலை, காமயோகம், இளமை உணர்ச்சிகள், பருவ மொட்டு என்று பெயர் வைத்தாலும் கீழே சின்னதாக டைரக்டரின் பெயரை போடாமல் விடுவதில்லை. என்ன இருந்தாலும் படைப்பாளிக்கு செய்ய வேண்டிய மரியாதை இல்லையா ? தபுவின் ராஜ லீலை போஸ்டரில் கீழே குட்டு தனோவா என்று இயக்குநரின் பெயர் இருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்து தபு ஃபில்மோகிராஃபிக்கு போய் அதிலே குட்டு தனோவா இயக்கிய மூன்று படங்களை சலித்தால் அதிலே எது ராஜலீலை என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

2003ல் வெளிவந்த ஹவா என்கிற பாலிவுட் படத்தின் டப்பிங் தான் இந்த ராஜலீலை. இளம் விதவையான தபு நகர்ப்பகுதியில் வீடெடுத்து வசிக்கும் வசதி இல்லாததால் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு பகுதியில் தன் இரு மகள்களுடன் தங்கியிருக்கிறார். அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு உருவமில்லா உருவத்தால் தபு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார். புரியும்படி செய்வதென்றால் ரேப் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொள்ளும் தபு இதன் பின்னணியை ஆய்வு செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் தவறு செய்பவர்களை அங்கிருக்கும் கிணற்றில் தள்ளி மரணதண்டனை நிறைவேற்றுவதாகவும், அப்படி கொலை செய்யப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு காற்றின் உருவில் வருவதாகவும் கண்டுபிடிக்கிறார். இறுதியில் VFXல் கெட்ட சக்தி உறுமுவதும், அதை நல்ல சக்தி வந்து அழிப்பதுமென சுபம். இப்படத்தில் நம் ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக, தபுவின் மகளாக நடித்திருக்கிறார். 

தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்திருக்கும் இந்த ராஜலீலையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்ன தெரியுமா ? இதன் விளம்பரத்தில் தினசரி செக்ஸுவல் வயலன்ஸ் என்று கொட்டை எழுத்தில் போட்டு வைக்கிறார்கள். இது ஒரு ஆக்ஸிமொரான். செக்ஸில் ஏன் வயலன்ஸ் ? இதன் உளவியலை நீங்கள் கொஞ்சம் ஆக்ட்ரெஸ் மீம்ஸ் போன்ற பக்கங்களிடம் ஒதுங்கினால் புரிந்துக்கொள்ளலாம். பெரும்பாலான நபர்கள் எழுதும் பின்னூட்டமெல்லாம் மூஞ்சியில அடிச்சு ஊத்தணும், கதறக் கதற போடணும் என்கிற ரீதியிலேயே இருக்கிறது. இவர்களுடைய இன்பமெல்லாம் அப்யூஸ் செய்வதிலேயே இருக்கிறது. அதுவே அவர்களுக்கென ஒரு பெண் கிடைக்கும்போது வயலன்ஸாகவும் மாறுகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஏற்கனவே நிறைய செக்ஸ் சைக்கோக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தமாதிரி படங்கள் வேறு. முதலில் இந்தியர்கள் திருமணம் எதற்காக செய்துகொள்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி. நீயா நானா பாணி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் பங்கேற்பாளராக கலந்துகொண்டேன். பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. முதல் முறையாக சினிமாவுக்கு இத்தனை நெருக்கமான இடத்தில் நுழைகிறேன். அமானுஷ்ய கதைகளில் ரெட் டோர் என்கிற திறக்கப்படாத கதவு ஒன்று வரும். அதுபோல நீலநிற கதவொன்றை திறக்க, அதனுள்ளே ஏராள விளக்குகள் ஒளிர, தற்காலிக வரவேற்பறை, அலங்காரங்கள், இரண்டு பக்கங்களும் கொலு படிக்கட்டுகள் அமைத்து அதிலே மனித பொம்மைகள் அமர்ந்து ஒரு தனி உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே பைக்கில் பில்லியன் ரைடராக ஒன்றரை மணிநேரம் அமர்ந்ததில் கண்ணிரண்டும் பொங்கிப்போய் ஓ’வென இருந்தேன். இதிலே கூடுதலாக மின்விளக்குகள் தரும் வெக்கை ஒரு வாதை. விவாதத்தின் தலைப்பு என்ன என்றால் யாரும் சொல்வதாக இல்லை. திடீரென தேவையில்லை என முன்வரிசையில் அடித்த ஆணியெல்லாம் புடுங்குகிறார்கள். புதிதாக ஒரு கதவு சேர்க்கிறார்கள். மறைவாக அங்கே இங்கே என ஏழெட்டு காமிராக்கள் தெரிகின்றன. போதாதென செட்டுக்கு வெளியே இருந்து டைனோசர் கரங்களாக ஒரு காமிரா நீள்கிறது. உள்ளே நுழைந்து பத்தாவது நிமிடமே தவறான இடத்திற்கு வந்துவிட்டோமென தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

சில விஷயங்கள் இருக்கின்றன. விவாதிக்கத் துவங்கினால் அதற்கு முடிவே கிடையாது. இரவு முழுக்க விவாதித்து தீர்த்தபிறகும் விடிந்தபிறகு அவரவர் அவரவர் இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். உதாரணமாக, கடவுளின் இருப்பு. அதுபோல ஒரு அனுமார் வால் டாபிக்கை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது அது இஷ்டத்துக்கு எங்கே எங்கேயோ போய் விவாதம் சூடு பிடிக்கும் தருணத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்கள். 

முதலில் விவாத நிகழ்ச்சிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே போனால் தலைப்பு நம்ம சிலபஸாக இருந்ததால் சில கருத்துகளை சொல்ல நினைக்க, மைக் அங்கே இங்கே என அலைந்து என்னிடம் மட்டும் வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. போதாத குறைக்கு முன்வரிசையில் ஒருவர் மைக்கை வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்காமல், தானும் பேசாமல் மைக்கை தன் கால்களுக்கிடையே அதக்கிக்கொண்டே உட்கார்ந்திருந்தார். ஒரு டாபிக் பேசத் துவங்கினால் அதுகுறித்த கருத்தை யோசித்து வைத்தபிறகு, மைக் கிடைக்காமல் கடைசியில் அடுத்த டாபிக், அடுத்த டாபிக் என்று போய் ஒரு கட்டத்தில் போங்கடா உங்க மைக்கே வாணாம் என்று வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டேன்.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் குறித்து எழுத நிறைய இருக்கிறது. அது நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு, அதிலே கட்ஸ் போக என்னென்ன வருகிறது, ஷோ எப்படி ப்ரொஜெக்ட் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பார்த்துக்கொள்ளலாம். இந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் என்னை மகிழ்ச்சியடைய வைத்த ஒரு விஷயம் – நிகழ்ச்சியின் ப்ரொட்யூஸரின் பெயர் நிலா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 09102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷகிலாவின் சுயசரிதையை படித்ததன் நீட்சியாக ஒரு படம் பார்த்தேன். பெயர் – கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா. ஆனால் இப்படத்திற்கும் ஷகிலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. விக்கிபீடியாவில் தவறுதலாக இப்படம் ஷகிலா ஃபில்மோகிராஃபியில் இடம் பெற்றிருக்கிறது.

1937ல் ஷீனா (Queen of the Jungle) என்கிற புதிய காமிக்ஸ் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. காட்டில் வளரும் ஆதரவற்ற பெண் ஷீனா. ஏறத்தாழ டார்ஜானின் பெண் வெர்ஷன். விலங்குகளுடன் பழகுவதிலும், கத்தி, அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் சாகசக்காரி. சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் காமிக்ஸிற்கு ஷீனா மீள்வருகை புரிந்திருக்கிறார். ஆகஸ்டில் வெளியாகத் துவங்கிய ஷீனா தோன்றும் புதிய காமிக்ஸ் இதுவரை நான்கு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஷீனா
1984ல் ஷீனா கொலம்பியா பிக்சர்ஸால் வண்ண சினிமாவாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மை பகுதி கென்யாவில் படமாக்கப்பட்டது. கடைசியில் படம் படுதோல்வி.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஷீனாவின் அடியொற்றி கன்னடத்தில் ஆப்ரிக்காடல்லி ஷீலா என்கிற படம் எடுக்கப்பட்டது. இது பின்னர் ஹிந்தியிலும், தமிழிலும் மறுவுருவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் பதிப்பின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா !

இது ஷகிலா ஃபில்மோகிராஃபியில் இடம்பெற்ற காரணம் இதில் கதாநாயகியாக நடித்தவருடைய பெயரும் ஷகிலா (சரியான உச்சரிப்பு: சஹிலா). முழுப்பெயர் சஹிலா சத்தா. மேலும் சஹிலாவும் தோற்றமும் ஏறத்தாழ இளவயது ஷகிலாவைப் போலவே இருக்கிறது. படம் பார்க்கத் துவங்கிய கொஞ்ச நேரம் வரை இது கன்னட டப்பிங் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிழல்கள் ரவி, சாருஹாசன், சுரேஷ், செந்தில், கோவை சரளா என்று முழுக்க நம்மவர்களாக இருக்கவே மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.

கதையைப் பொறுத்தவரையில் ஷீனாவிலிருந்து நிறைய மாற்றியிருக்கிறார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்கிற வகையில் நல்ல கதை. மருத்துவப்பணியை சேவை மனப்பான்மையோடு செய்து வரும் ஒரு மருத்துவரும், அவரது மனைவியும் ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அங்கே பயணிக்கிறார்கள். போன இடத்தில் மனிதர்களற்ற காட்டுப்பகுதியில் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. கொஞ்ச காலத்தில் கணவன், மனைவி இருவரும் இறந்துவிடுகிறார்கள். (எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள். கதைப்படி அவர்கள் அதற்கு மேல் தேவையில்லை). அதன்பிறகு அக்குழந்தையை மனிதக்குரங்கு ஒன்று கண்டெடுத்து வளர்க்கிறது. வருடங்கள் கடந்தபிறகு இவர்களைத் தேடி ஒரு கும்பல் செல்கிறது. கும்பலில் நற்குணம் கொண்ட கதாநாயகன் சுரேஷ், மிருகங்களை வேட்டையாடும் வில்லன் மற்றும் சகாக்கள், கவர்ச்சிக்கு டிஸ்கோ சாந்தி, காமெடிக்கு செந்தில். 

படம் முழுக்க நிறைய அவல நகைச்சுவைகள், அபத்தங்கள் ! ஆனால் ஒன்று, தற்போது யாரேனும் ஷீலாவை மறுவுருவாக்கம் செய்ய முன்வந்தால் அதன் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து செமத்தியாக எடுக்கலாம் (கதாநாயகி: அனுஷ்கா அல்லது நயன்தாரா).

ஜான் ஹோல்ட் எழுதிய How Children Learn என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் ? புத்தகத்தை கொஞ்ச பக்கங்கள் படித்தேன். முன்னுரையை படித்ததும் இரண்டு விஷயங்கள் தரை தட்டின. ஒன்று, இது ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம். இரண்டாவது, இதனை எழுதிய ஜான் ஹோல்ட் என்பவர் ஹோம்ஸ்கூலிங்கை ஆதரிக்கும் ஒரு கல்வியாளர். 

இவற்றைக் கடந்து படிக்கத்துவங்கினால் வறட்டு மொக்கையாக போகிறது உரைநடை. உலகில் குழந்தைகளின் கற்கும் திறனை என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள், அவற்றில் உள்ள குறைகள் என்னென்ன, ஜான் ஹோல்ட் செய்த மாற்று ஆராய்ச்சி என்ன என்று நீள்கிறது. அவ்வப்போது நான் எனது மகளுக்கு எழுதிவரும் டைரியை நினைவூட்டியது மட்டும்தான் ஒரேயொரு ஆறுதல். நடைமுறைக்கு உகந்த வகையில் இப்புத்தகத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்புத்தகத்தால் எனக்குத் தெரிந்து ஒரு அனுகூலம் இருக்கிறது. மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, இப்புத்தகத்தை கையில் எடுத்து சரியாக ஐந்து நிமிடங்கள் ஆழ்ந்து படித்தால் போதும், நிச்சய தூக்கம் கிடைக்கும். ஆங்கிலத்தில் என்னென்னவோ புத்தகங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதைப்போய் ஏன்தான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார்களோ ?

ஒரு ரஜினி பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா’ என்று வரிகள் வரும். ஒரு பவுன் இல்லை, ரஜினியும் தமிழும் சேர்ந்து எனக்கு ஒருமுறை ஒரு கிராம் தங்கநாணயம் கிடைக்கச் செய்தார்கள். அது கபாலி டிரைலர் வெளிவந்திருந்த சமயம். வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் ஸ்லோகன் கான்டெஸ்ட் வைத்திருந்தார்கள். அக்கடையைப் பற்றி நல்லவகையில் ஸ்லோகன் எழுதிப் போடவேண்டும். சிறந்த ஸ்லோகனுக்கு ஒரு கிராம் தங்கக்காசு பரிசு. என் மனைவி ஸ்லோகன் எழுதிப்போடும் சீட்டை என்னிடம் கொடுத்தது கூட பரவாயில்லை. நீங்கதான் நல்லா எழுதுவீங்களே என்று சொன்னதுதான் துயரம். என்னைப்போன்ற அமெச்சூர் இணைய எழுத்தாளர்கள் இதுபோன்ற சூழலை சந்தித்திருக்கக்கூடும். கொஞ்சநேரம் யோசித்தேன். கபாலி நினைவுக்கு வந்தார். கபாலியின் அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியா வசனத்தை கொஞ்சம் ட்வீக் செய்து, கபாலிக்கு பதிலாக கடையின் பெயரை எழுதி போட்டுவிட்டு வந்தேன். பரிசு கிடைத்துவிட்டது.

இம்முறை மீண்டும் ஸ்லோகன் கான்டெஸ்ட். பரிசு இருபத்தைந்து கிராம் வெள்ளி. இம்முறை அதிகம் யோசிக்கவில்லை. சட்டென, விவேகத்தின் இந்த உலகமே உன் முன்னாடி வந்து கதறுனாலும் வசனத்தை கடையின் பெயர் வரும் வகையில் கொஞ்சம் மாற்றியமைத்து எழுதிப் போட்டேன். பரிசு கிடைத்துவிட்டது. கடைசியில் விவேகம் பார்த்ததில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 02102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தோழர் ஷகிலாவின் சுயசரிதையை படித்தேன். மலையாளத்தில் வெளிவந்த இந்நூலை ஸ்ரீபதி பத்மநாபா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து தேவையில்லாமல் பயப்படத் தேவையில்லை. பார்ப்பன நெடி அறவே கிடையாது.

நடிகைகளின் சொந்தக்கதைகள் என புத்தகமாகவும், சினிமாவாகவும் நிறைய படிக்கவும், பார்க்கவும் செய்திருக்கிறோம். விக்ரம் வேதாவில் மாதவன் வி.சே.விடம் சொல்வது போலதான். எல்லா நடிகைகளுக்கும் ஒரே கதைதான். ஆண்கள் கேடுகெட்டவர்கள், சமூகம் சீரழித்தது என்று எல்லா குற்றச்சாட்டுகளையும் சுற்றி இருப்பவர்கள் மீது போட்டுவிட்டு லாவகமாக தப்பிக்கும் பாணி. ஷகிலாவின் சுயசரிதையிலும் அப்படி சில இடங்களில் வருகிறது. ஆனால் முழுக்க அல்ல.

தன்னை மரியாதையாக நடத்திய, நேசித்த ஆண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார் ஷகிலா. அவரது சினிமா பாகத்தை விட சொந்த வாழ்க்கையே அதிகம் வருகிறது. இப்புத்தகத்தை மூன்றாக (அல்லது நான்காக) பிரிக்கலாம். ஒன்று, தனிப்பட்ட வாழ்க்கை. இரண்டாவது, புகழ்பெற்ற வாழ்க்கை. மூன்று, புகழ் ஓய்ந்த பிறகான வாழ்க்கை. இதற்கிடையே பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பகுதி வருகிறது. இவையனைத்தும் நேரியிலின்றி வருவதால் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்கிறது.

புகழ், புகழ் என்கிறார்களே ஷகிலா புகழின் உச்சியில் இருந்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா ? மூன்றே ஆண்டுகள். 2000த்தில் தொடங்கி 2002 வரைதான். அதன்பிறகு மலையாள சூப்பர்ஸ்டார்கள் உட்பட கூட்டு சேர்ந்து திட்டமிட்டு ஷகிலாவை ஓரம் கட்டிவிட்டார்கள். 

புத்தகத்தின் துவக்கத்தில் இதுகுறித்து நிறைய புலம்பல்கள். என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள், எனக்கென யாருமில்லை என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதன்பிறகு மெல்ல கதைக்கு போகிறார். சிலவற்றை படிக்கும்போது ஷகிலா உண்மையிலேயே இவ்வளவு அப்பாவியா என்று கேட்கத் தோன்றுகிறது. கின்னாரத்தும்பிகள் என்கிற மலையாள சினிமா ஷகிலாவை உச்சத்தில் ஏற்றிய படம். அதன் பிரதான கதை என்பது ஒரு பேரிளம் பெண்ணின் மீது இளவயது பையனுக்கு ஏற்படும் ஈர்ப்பு. (இந்த வயது வித்தியாச தீமிற்கு கின்னாரத்தும்பிகள் ஒரு டிரென்ட் செட்டர்). நான் கேள்விப்பட்ட வரையில் அது ஒரு சாதாரண சாஃப்ட் போர்னோ. ஷகிலாவோ அதனை ஏறத்தாழ ஒரு கலைப்படைப்பு என்கிற தொனியில் சிலாகிக்கிறார்.

பி-கிரேடு படங்களில் நடித்தது குறித்த வருத்தமிருந்தாலும், தனக்குக் கிடைத்த புகழுக்கு காரணமான ரசிகர்கள் மீது ஒரு நன்றியுணர்வு அவரிடம் இருக்கிறது. உண்மையோ பாசாங்கோ ஷகிலா அவரது ரசிகர்கள் மீது இத்தனை நன்றியுணர்வு கொள்ளத் தேவையில்லை என்பது என் எண்ணம். ரசிகர்கள் தான் ஷகிலாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பக்கூடாது’ என்கிறார். மலையாள சினிமாவை விட தமிழ் சினிமா மீது ஷகிலாவுக்கு நல்லபிப்ராயம் உள்ளது. தமிழ் சினிமா மீது கூட அவருக்கு அத்தனை மதிப்பு தேவையில்லை. கவனித்துப் பாருங்கள். ஷகிலா குணச்சித்திர / நகைச்சுவை வேடங்களில் நடித்த தமிழ் படங்களில் கூட அவர் அறிமுகமாகும்போது யானை பிளிரும் அல்லது குதிரை கனைக்கும் சப்தத்தை பின்னணியில் ஒலிக்கவிடுவார்கள். ஷகிலா உதட்டை சுழித்துக்கொண்டோ. முந்தானையை சரிசெய்துக் கொண்டோ தோன்றுவார். ஒரு வகையில் அவை கூட ஷகிலாவின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைதான். இதற்கு மலையாள படங்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை. நான் கேள்விப்பட்ட வரையில் ஷகிலாவின் பெரும்பாலான மலையாளப் படங்களில் அவர் வாழ்ந்து கெட்ட, ஏமாற்றப்பட்ட, அனுபவமுள்ள, இளைய தலைமுறைக்கு அறிவுரைக்கும் வேடங்களிலேயே நடித்தார்.

நிறைய இடங்களில் ஷகிலாவின் தொனி (அல்லது மொழிபெயர்ப்பாளரின் தொனி) எனக்கு நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவூட்டியது. 

சில விஷயங்களை மேலோட்டமாக சொல்கிறார். அப்பா ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்து வந்தார் என்கிறார். தனது அம்மாவைப் பற்றிய பத்திகள், அக்காவின் மகளை கொல்ல முயன்றது, சில்க் ஸ்மிதாவுடனான நட்பு, மரியாவின் மீதான நட்பு என்று நமக்கெல்லாம் காட்டாத பாகங்களை எல்லாம் ஷகிலா காட்டியிருக்கிறார். எல்லா பெண்களையும் போல திருமணம் செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும் என்பது போன்ற ஏக்கங்கள் அவருக்கு இருந்திருக்கிறது. புத்தகத்தை படித்து முடித்ததும் நான் ஷகிலாவின் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். ஒருவேளை ஷகிலாவை நேரில் பார்த்தால் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு நாங்கள்லாம் இருக்கோம் என்று ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

ஒரு கோணத்தில் ஷகிலாவை நினைத்து சுயமைதுனம் செய்தவர்கள் யாரேனும் இப்புத்தகத்தை படித்தால் அவர்களுக்கு குற்ற உணர்வாக இருக்கக்கூடும். எனக்கு இல்லையா என்று கேட்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் எனக்கு ஷகிலாவைப் பார்த்து காம உணர்வு தோன்றியதே இல்லை. பருத்த உடலைக் கொண்ட ஷகிலா எப்படி மலையாளத்தில் பிரபலமானார் என்பதே எனக்கு புதிராக இருக்கிறது. ஷகிலாவின் பிரபலமான படங்கள் ஒன்றைக் கூட நான் பார்த்ததில்லை.

பலான படங்களைப் பொறுத்தவரையில் நான் நேரடியாக ஹார்ட்கோர் படங்களுக்கு தாவியவன். (அதனாலோ என்னவோ எனக்கு பிற்பகுதியில் சாப்ட் போர்னோ படங்களின் மீது அலாதியான ஈர்ப்பு ஏற்பட்டது). முதன்முதலாக திரையில் பார்த்த பாலியல் காட்சியே ஒரு புணர்வுக் காட்சி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே எனக்கு வெகுகாலம் ஆனது. அப்போதெல்லாம் சென்னை பர்மா பஜார் பக்கமாக நடந்து போனாலே சிம்ரன் இருக்கு, ஜோதிகா இருக்கு என்று அழைப்பார்கள். அதை விட்டால் தமிழ் இருக்கு, மலையாளம் இருக்கு, இங்கிலீஷ் இருக்கு என்று மொழிகளை வரிசைபடுத்துவார்கள். பயந்த சுபாவமுள்ளவர்கள் என்றால் கூட பர்மா பஜார் வியாபாரிகள் தரும் தன்னம்பிக்கையில் ஒதுங்கிப் பார்ப்பார்கள். ஒரு வகையில் ஏராளமான தமிழக இளைஞர்களுக்கு கலவியறிவு பயிற்றுவித்தவர்கள் பர்மா பஜார் வியாபாரிகள். அப்படியொரு முறை சிம்ரன் படம் என்று சொல்லப்பட்ட சிடி எங்களுக்கு கிடைத்தது. உண்மையில் அப்படத்தில் தோன்றிய நடிகை மோனல் சாயலில் கூட இல்லை. (இப்போது யோசித்துப் பார்த்தால் அவருக்கு அபிராமி சாயல் என்று தோன்றுகிறது). ஆனாலும் அவரை சிம்ரனாக கற்பனை செய்துகொண்டு, சிம்ரன் நிஜத்தில் கண்ணாடி அணிவாரா என்றெல்லாம் தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.

அதன்பிறகு ஒரு சனிக்கிழமை இரவு சூர்யா தொலைக்காட்சியில் ஒரு ஆச்சர்யம் கிடைத்தது. ஆச்சர்யத்தின் பெயர் ப்ரேமாக்னி என்று பிற்பாடு தெரிந்துக்கொண்டேன். அதன்பிறகு நிறைய மலையாள துண்டுக்காட்சிகளை தேடித்தேடி பார்க்கவும், சேகரிக்கவும் செய்தேன். எனக்கு விருப்பமான மலையாள நடிகை என்றால் அது மரியாதான். முக லட்சணமும் உடல்வாகும் பொருந்திய நடிகை மரியா. மரியா மழைக்கு ஒதுங்கும் பிட்டு ஒன்று இருக்கிறது. அது எனக்கு பல இரவுகளில் உதவியிருக்கிறது. 

யோசித்துப் பார்த்தால் மற்ற விஷயங்களில் இருக்கிறார்களோ இல்லையோ பிட்டு விஷயத்தில் மட்டுமாவது நம்மவர்கள் மதபேதமின்றி நடந்துக்கொண்டிருக்கிறார்கள். ஷகிலா ரேஷ்மா மரியா... அன்பே கடவுள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment