16 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 17022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகக்காட்சியில் நித்தியானந்தா கடையில் நுழைந்து ஆனந்த கீர்த்தன் என்ற ஒலிநாடா வேண்டுமென கேட்டு, அவர்கள் ஒரு கொட்டையை கொடுத்து அனுப்பியதை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி. அடுத்த வாரம் சொல்லி வைத்திருந்த ஒலிநாடா வந்துவிட்டதா என்று கேட்பதற்காக சென்றிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு கொட்டையையும் கொடுக்க முயற்சித்தார்கள். அய்யா, போன வாரமே வாங்கியாயிற்று என்று சொல்லி தப்பித்துவிட்டேன். என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை விடமாட்டார்கள் போல. சென்ற வாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் என்றது ஒரு அம்மையார் குரல். வார்த்தைக்கு வார்த்தை அடியேனை அய்யா என்று விளித்தார். ஏற்கனவே அவர்களிடம் என்னுடைய முகவரி கொடுத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு அய்யா, திருவான்மியூரில் வகுப்பு நடக்குது. வந்தீங்கன்னா வகுப்பில் கலந்துக்கிட்டு சிடியையும் வாங்கிட்டு போயிடலாம் என்றார். என்ன வகுப்பு என்று தெரியவில்லை. அம்மாடி நான் வசிப்பது திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். அது தெற்கு, இது வடக்கு என்று சொல்லி புரியவைத்தேன். அப்படியும் அம்மையார் விடுவதாக இல்லை. விரைவில் மணலியில் வகுப்பு நடைபெற இருப்பதாகச் சொல்லி கலந்துகொள்ள பணித்திருக்கிறார். பேசாமல் ஒரு எட்டு போய்தான் பார்த்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. நகிர்தனா திரனனா னா...!
*

ஐ.பி.எல் ஜூது ஏலத்தை பார்த்து கடுப்பாகிவிட்டது. நிறைய நல்ல வீரர்களை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதே இல்லை. சென்றமுறை நிகழ்ந்த கூத்துகளுக்காக இலங்கை வீரர்களை யாரும் பெரிதாக சீண்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ஏன் தவிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. போனியாகாத வீரர்களில் Rusty Theron என்பவர் எனக்கு முக்கியமானவராக தோன்றுகிறார். அபாரமான மிதவேக பந்து வீச்சாளர். குறிப்பாக இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஏற்கனவே ஹைதரபாத் அணிக்காகவும் (டெக்கான் கிரானிக்கல் வசமிருந்தபோது), பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். அசம்பாவிதமாக தெரான் ஐ.பி.எல்லில் அதிக போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் சில போட்டிகளில் அபாரமாகவும், மற்ற போட்டிகளில் மோசமில்லை என்ற வகையிலும் தான் விளையாடியிருக்கிறார். தற்சமயம் கொள்ளை விலைக்கு வாங்கியிருக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களை விட தெரான் எவ்வளவோ பரவாயில்லை. அதே போல பேட்ஸ்மேன்களில் Richard Levi. ஏற்கனவே மும்பைக்காக விளையாடியிருக்கிறார். லெவிக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்கா அணியைப் போலவே, அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ராசி இல்லையோ என்னவோ...? அவரைத் தவிர்த்து Cameron White, David Hussey, Jesse Ryder போன்றவர்களும் விலை போகவில்லை. ஆசிஷ் நெஹ்ராவை சென்னை வாங்கியிருக்கிறது. ஆனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் போன்றவர்களை யாரும் வாங்கவில்லை. இருக்கட்டும் ப்ரீத்தி ஜிந்தா இருக்கும்வரையில் நமக்கு கவலையில்லை.
*

விஜய் டிவியில் Connexions என்றொரு நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு தவறாமல் பார்க்கிறேன். ஹண்ட் ஃபார் ஹின்ட் பாணியில் ஆனால் அதிக கஷ்டமில்லாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் சுற்றில், இரண்டு புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இரண்டிற்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். வார்த்தை ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம். மற்ற சுற்றுகளும் இதே போல புகைப்படங்களை வைத்து தான். முக்கியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்டு ஜெகன் போட்டியாளர்களை நன்றாக கலாய்த்து தள்ளுகிறார். அதே சமயம் போட்டியாளர்கள் யாராவது டென்ஷன் ஆகிவிட்டால் அந்த சூழ்நிலையை நன்றாக கையாள்கிறார். சென்ற வாரத்தில் தொலைக்காட்சி நடிகை சூசன் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஒரு கட்டத்தில் சூசன் துப்பட்டா அணிந்திருந்த பாங்கை ஜகன் கிண்டலடித்தார். சூசன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே விஜய் டிவியின் வேறு நிகழ்ச்சியாக இருந்தால் இதையே சாக்காக வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பார்கள். ஆனால் ஜகன் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி நிலைமை மோசமாவதை தவிர்த்துவிட்டார். Connexions முடிந்ததும் ஒளிபரப்பாகும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது.
*

இப்போது கனெக்ஷன்ஸ் பாணியில் சில கேள்விகள்.

One by Two: இரண்டு படங்களுக்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

 


Joint Family: இரண்டு அல்லது மூன்று படங்கள் குறித்த வார்த்தைகளை சேர்த்து விடை கண்டுபிடிக்க வேண்டும்.



மொக்கையாக இருப்பின் தனிமடலுக்கு வந்து திட்டவும். நன்றாக இருந்தால் தெரியப்படுத்தவும். வாராவாரம் தொடரலாம்.
*

பிரியாணியில் இடம்பெற்ற மிஸ்ஸிஸிப்பி பாடல் தான் ரீப்பீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒளி வடிவத்தில் மந்தி டக்கராக செய்த வேலையை ஒலி வடிவத்தில் ப்ரியா ஹிமேஷ் செய்திருக்கிறார். கடைசி காலத்தில் வாலி எழுதிய பாடலில் கூட வாலிபால் விளையாடியிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 February 2014

பண்ணையாரும் பத்மினியும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மறுபடியும் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ஜோடியில் ஒரு படம். சென்ற வாரமே பண்ணையாரும் பத்மினியும் பார்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. திரையில் ஐஸ்வர்யாவின் பெயர் நான்காவதாய் தோன்றியபோது ஏதோ உறுத்தலாக இருந்தது.

ஒரு பத்மினி கார். அதனுடன் அதன் உரிமையாளருக்கும் ஓட்டுநருக்கும் உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பு தான் கதை.

டைட்டிலில் விஜய் சேதுபதியின் பெயர் முதலாவதாக வந்தாலும் கூட ஜெயபிரகாஷ், துளசி, அப்புறம் அந்த கார் எல்லோருக்கும் அடுத்தபடியாகத்தான் விஜய் சேதுபதி. பாலசரவணனுக்கு படத்தில் பீடை என்று பட்டப்பெயர். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். பல காட்சிகளில் எரிச்சல். ஜெயபிரகாஷ், துளசி இருவரும் தான் படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். கெளரவ தோற்றங்களில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சினேகா.

நாயகி வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ரம்மி, ப.ப தோற்றங்களில் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கடினம். ரம்மியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டு, அதற்கு மேல் சிறிய திருநீர்க்கீற்று. ப.ப.வில் கொஞ்சம் பெரிய சைஸ் பொட்டு, திருநீர் கிடையாது. ரம்மியில் நேர் வகிடு. ப.ப.வில் பக்க வகிடு, ரம்மியை விட ப.ப.வில் கழுத்துமணி நீளம் அதிகம். என்னுடைய தேர்வு ரம்மிதான்...! ஒன்று மட்டும் நிச்சயம், எந்த படமாக இருந்தாலும் சரி. ஐஸ்வர்யாவின் கண்கள் விரியும்போது மட்டும் நான் காணாமல் போய்விடுகிறேன்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு நல்வரவு. பின்னணி இசையைக் கேட்டால் புதியவர் என்று சொல்ல முடியாது. பாடல்களில் ஒனக்காக பொறந்தேனே நின்று பேசக்கூடிய ஒன்று.

பீரியட் படம் எடுப்பவர்கள் சுவரொட்டி, சுவர் விளம்பரங்கள் விஷயத்தில் மட்டும் மிகவும் கவனமாக செயல்படுகிறார்கள். பழைய சிவாஜி, எம்ஜியார் பட போஸ்டர், அண்ணாமலை போஸ்டர் என்று காட்டுவதெல்லாம் சரி. ஆனால் வேறு சில விஷயங்களில் கவனத்தை தவறவிடுகிறார்கள். ப,ப.வை எடுத்துக்கொண்டால் ஊருக்குள் முதன்முறையாக கார் வருகிறது. ஊர்க்கார சிறுவர்கள் காருக்கு பின்னே ஓடிவந்து ஆரவாரிக்கிறார்கள். ஊருக்கு முதன்முறையாக பேருந்து வரும்போதும் ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் அதே ஊரில் மகேந்திரா வேன் ஒன்று கவனிப்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக காரில் பயணிப்பவர்கள் நிறைய பேருக்கு அதன் கதவை எப்படி திறப்பது, எப்படி மூடுவது என்பது இரண்டொரு நாட்களுக்கு புரியாத புதிராக இருக்கும். ஜெயப்பிரகாஷ் முதல்முறை பத்மினியில் ஏறும்போதே பழக்கப்பட்டவர் போல ஏறி அமர்கிறார். 

படத்தின் பலம் ஜெயபிரகாஷ் – துளசி பாத்திரங்களுக்கு இடையே உள்ள காதல் தான். குறும்படத்தில் கூட அந்த பகுதி கிடையாது. ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக் கொள்வது, தமது இணை வருத்தமாக இருக்கும்போது தமது வருத்தத்தை மறைத்துக்கொண்டு ஆறுதலாக பேசுவது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது என்று கணவன் மனைவியின் மன உணர்வுகளை அபாரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அதிலும் நிறைய வசனங்கள் இல்லாமல் சின்னச் சின்ன முகபாவனைகளிலேயே சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. பண்ணையாரின் மனைவியாக நடித்த துளசி விருது பெறத் தகுதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினி படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், அப்படத்தில் காட்டப்படும் உணர்வுப்பூர்வமான தருணங்களில் ஒன்றையாவது நீங்கள் உங்களுடைய நிஜவாழ்க்கையில் பெற்றிருந்தால் தான் அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவும். இல்லையென்றால் சிரிப்புதான் வரும். உதாரணத்திற்கு, உங்கள் கிராமத்து பெரியவர் ஊரிலேயே முதன்முறையாக கார் வாங்கியிருக்கிறாரா...? நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அந்த காருக்கு பின்னே ஓடியிருக்கிறீர்களா...? அதில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டுமென ஏங்கியிருக்கிறீர்களா...? இவையெல்லாம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்த்திருக்காது. குறைந்தபட்சம் கார் வாங்க வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய நெகிழ்ச்சியோடு அதனுள் அமர்ந்து கண் கலங்கியிருக்கிறீர்களா...? ஏதாவது ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக பண்ணையாரும் பத்மினியும் உங்களுக்கு ஒரு உணர்ச்சிக்குவியலாக இருக்கக்கூடும். தவற விடாதீர்கள்...!

மற்றவர்களை பொறுத்தவரையில், இயக்குநர் மன்னிப்பாராக. இரண்டரை மணி நேரம் அரங்கில் அமர முடியவில்லை. ஒரு குறும்பட அளவு கதையை முழுநீளப்படமாக எடுப்பது மிகப்பெரிய சவாலான காரியம் தான். ஆனால் ஏன் குறும்பட இயக்குநர்கள் இரண்டரை மணி நேரங்கள் நீட்டி முழக்கி தங்களை மென்மேலும் சிரமப்படுத்திக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலப்பட பாணியில் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக முடிக்கலாம் இல்லையா....? நிறைய பேர் சீக்கிரமா படத்தை முடிங்கடா என்று புலம்புவதை காதார கேட்க முடிந்தது. 

அடுத்தடுத்து வெளியானதால் ரம்மி, ப.ப. படங்களைப் பற்றிய சிறிய ஒப்பீடு. இரண்டுமே பீரியட் படங்கள். முந்தையது 1987. இது 1992. செல்போன் என்ற சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடியாத காரணத்திற்காக பீரியட் படங்கள் எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. ரம்மியில் காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், வன்முறை எல்லாமிருக்கிறது. ப.ப.வில் அப்படியில்லை மற்றவை இருந்தாலும் கூட நெகிழ்ச்சிகள் மட்டும் பிரதானமாக நிரம்பியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரம்மி ஒரு மோசமான படம். ஆனால் அதன் காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தன. ப.ப நேரெதிர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம். ஆனால் காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றன. மொத்தத்தில் இரண்டும் சராசரி படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2014

ரம்மி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொங்கல் படங்களுக்குப் பிறகு கோலி சோடா தவிர்த்து சொல்லிக்கொள்ளும் வகையில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்பட்டாலும் ஏனோ கோ.சோ பார்க்கத் தோன்றவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து விருந்து கொடுப்பதுபோல அமைந்திருக்கிறது பிப்ரவரி மாதம்.  ரம்மி சேர்ந்தாற்போல விஜய் சேதுபதியும் – அட்டகத்தி ஐஸும் அடுத்தடுத்து இரண்டு படங்களில். முதலாவது ரம்மி. அடுத்தது பண்ணையாரும் பத்மினியும்.

கதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் ஐஸ்வர்யாவைப் பற்றி சொல்லிவிடுகிறேன். நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். இல்லையேல் அவருடைய கண்களை பெர்முடா வட்டங்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட வேண்டும். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சரக்கை போட்டுவிட்டு அவளோட ரெண்டு கண்ணும் அப்படியே வயித்துக்குள்ள பாயுது மச்சி என்பார். தெளிவாகவே சொல்கிறேன், அதே தான். ஆனால் ஒரு விஷயம், இதுவரை ஐஸ்வர்யா நடித்த நான்கு படங்களிலும் அவருக்கு கதைப்படியோ அல்லது என்ன எழவோ சரியான அலங்காரம், உடையமைப்பு வாய்க்கவில்லை. ம்ம்ம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா கடக்க இருக்கிற தூரம் நம் கண்களுக்கு எட்டாதது. காத்திருக்கலாம்.

1987ல் நடைபெறுகிற கதை. சிவகங்கை மாவட்ட அரசு கல்லூரியில் பயிலும் நாயகர்கள். ஆளுக்கொரு காதல். காமெடிக்கு பரோட்டா சூரி. சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் கதையில் ஆங்காங்கே அரிவாளை காட்டி அலர்ட் செய்கிறார்கள். கதையின் பிற்பகுதியில் காதல்களுக்கு சிக்கல்கள் துவங்குகின்றன. அது எப்படி ரத்தக்களறியாகி நிறைவு பெறுகிறது என்பதை முடிந்தால் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

துவக்கத்தில் கொஞ்சம் சலிப்பூட்டாமல் நகர்கிறது படம். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள், (வழக்கமாக மொக்கை போடும்) பரோட்டா சூரியின் சுமாரான நகைச்சுவை, கல்லூரி, விடுதி சம்பந்தமான இயல்பான காட்சியமைப்புகள், விஜய் சேதுபதி – இனிகோ பிரபாகரின் நட்பு என்று எல்லாம் சேர்த்து ஒரு தடவை பார்க்கலாம் என்பது போல இருந்தது. படம் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும்வழியில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு கூட தொற்றிக்கொள்கிறது. ஆனால் பெரிதாக ட்விஸ்ட் எதுவுமில்லாமல் அதே சமயம் மிகப்பெரிய ட்விஸ்டை வைத்துவிட்ட நினைப்பில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரம்மியை ஒரு முழுமையான திரைச்சித்திரமாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இனிகோவிற்கு முதல் நிலை நாயகனாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி இரண்டாம் நாயகனாக வந்தாலும் கூட அரங்குகளில் விசில் பறக்கிறது. காயத்ரி மொக்கை மூஞ்சி. பரோட்டா சூரியை சந்தானத்திற்கு இணையான நகைச்சுவை நடிகர் என்று முன்னிறுத்தும்பொருட்டு ஆரவாரமான தொடக்கக்காட்சியெல்லாம் வைக்கிறார்கள். ஜோ மல்லூரியும் அவருடைய தம்பிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். டைகர் கார்டன் தங்கதுரை, சென்றாயன் போன்ற நல்ல மனித வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. 

கூட மேல கூட வச்சு என்ற பாடல் வந்தனாவின் குரலில் மனதிற்குள் ஐஸ்க்ரீமாய் கரைகிறது. மற்ற பாடல்கள் அரங்கை விட்டு ஓடவைக்கும் வகை. பாடல் காட்சிகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் அபாரம். ஆனால் எல்லா பாடல்களிலும் ஒரே இடத்தையே காட்டுவது போல இருக்கிறது.

கதைப்படி ஐஸ்வர்யா செல்வச்சீமாட்டி. ஆனால் அவருடைய கழுத்துமணியும், உடையும் இன்னபிறவும் ஏழைப்பெண்ணை பிரதிபலிக்கின்றன. ஒருவேளை அவர் பெரிய வீட்டுப்பெண் என்பதையே ஒரு ட்விஸ்ட் என்ற நினைப்பில் வைத்திருக்கலாம். 

நான்கு பிரதான வேடதாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் கூட ஏனோ அவர்களுடைய கதைகளை சரிவர பிணைக்க தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, தன்னை சகோதரன் போல நினைக்கும் இனிகோவிடம் விஜய் சேதுபதி தன்னுடைய காதலைப் பற்றி சொல்லவில்லை. போலவே, இனிகோ காதலை காயத்ரி ஏற்றுக்கொண்ட விஷயமும் விஜய் சேதுபதிக்கு தெரிந்திருக்காது. ஐஸ்வர்யாவும் காயத்ரியும் ஒன்றுவிட்ட அக்காள் தங்கைகள். ஆனால் க்ளைமாக்ஸில் மட்டும்தான் பேசிக்கொள்கிறார்கள்.

காதலும் சரி, வன்முறையும் சரி மனதில் அழுத்தமாக பதியவில்லை. கடைசியில் ஐஸ்வர்யா எடுக்கும் உணர்வுப்பூர்வமான முடிவு கூட சிரிப்பையே வரவழைக்கிறது.

ரம்மி – காதல், சுப்ரமணியபுரம் போன்ற புலிகளை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை. கொஞ்சம் விலகியிருந்தாலும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற அபத்த சினிமாக்களில் சேர வேண்டியது. கடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய படமும் கூட.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment