30 January 2017

பிரபா ஒயின்ஷாப் – 30012017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு சினிமாவை அது வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து திரையரங்கில் பார்ப்பதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லை. இன்னொன்று, இப்பொழுது வெளியாகும் படங்களின் நிச்சய ஆயுள் ஏழு தினங்கள் மட்டுமே. ஒன்றிரண்டு சில வாரங்கள் வரை தாக்கு பிடிக்கின்றன. வெளியாகி ஒரு மாதமாகியும் திரையரங்கில் படம் ஓடுவதும், அரங்கு நிறைவதும் ஆச்சர்யம் தான் !

உண்மையில், போட்டு வைத்திருந்த திட்டம் ஒன்று தள்ளிப் போய்விட கிடைத்த நேரத்தை நிரப்புவதற்காக துருவங்கள் பதினாறு பார்த்தேன். தேவிபாலாவில் ஒரேயொரு காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நிறைய பேர் பைரவா பார்க்க வந்துவிட்டு டிக்கட் கிடைக்காமல் து-16க்கு வந்திருந்தார்கள். ஆனால் படம் முடியும்வரை திரையரங்கில் மரண அமைதி. அவ்வளவு லயித்துவிட்டார்கள் படத்தோடு. வேறொரு படத்தை பார்க்க வந்துவிட்டு, டிக்கட் கிடைக்காமல் உள்ளே நுழைந்தவர்களை இப்படி வியப்பில் ஆழ்த்துவதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அசத்தியிருக்கிறார். வெல்கம் கார்த்திக் :) உங்களுக்காக இன்னும் பெரிய களங்கள் காத்திருக்கின்றன.

இப்படத்தில் ரஹ்மான் செய்திருக்கும் ரோல் சந்தேகமே இல்லாமல் அஜித்தின் கேக் துண்டு. ரஹ்மான் வேடத்தை அஜித்தும், அந்த புது போலீஸ்காரர் வேடத்தை ‘மங்காத்தா’ அஷ்வினும் செய்திருந்தால் செமத்தியாக இருந்திருக்கும். இதுபோன்ற புது இயக்குநர்களுக்கு கிடைக்கும் பட்ஜெட்டிற்கு எட்டாக்கனியாக இருப்பது பெரிய நடிகர்களின் சாபக்கேடு. நல்லவேளையாக து-16ஐ திரையரங்கில் பார்த்துவிட்டேன். இல்லாவிட்டால் அனாவசியமாக குற்றவுணர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்திருக்கும்.

காலைக்காட்சி தேவிபாலாவில் து16 பார்த்துவிட்டு மேட்னி தேவிகலாவில் அதே கண்கள் பார்த்தேன். கிட்டத்தட்ட பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரியான கதை. ஆனால் படம் ரொம்ப டிராமாட்டிக். இப்படித்தான் நடந்துச்சு என்று டைரக்டர் சொன்னால் கேள்வி எதுவும் கேட்காமல் நம்பிவிட வேண்டும். மேலும் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை மிக எளிதாக யூகிக்க முடிகிறது. ஒரு பாதி படம் முடிந்ததும், மீதிக்கதையை புரிந்துக்கொண்டு திரையரங்கில் இருந்து நடையை கட்டிவிடலாம். ஒரு காட்சியில், ஹீரோ சிக்கலான ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அப்பொழுது பழைய ப்ளாக் & ஒயிட் படங்களில் போலீஸ் விசில் அடிப்பார்களே அதுபோல சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதும் என்ன ஏது என்று கூட யோசிக்காமல் ஹீரோ அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுகிறார். ரோஹின் வெங்கடேசன், அடுத்த வாய்ப்பில் அசத்துங்கள் !

தேவிபாலாவில் து16 முடிந்ததற்கும், தேவிகலாவில் அதே கண்கள் தொடங்கியதற்கும் இடையே ஒரு மணிநேர இடைவேளை கிடைத்ததும் சட்டென நினைவுக்கு வந்தது ரிச்சி ஸ்ட்ரீட் பீஃப் பிரியாணி ! நான் பணிபுரியும் அலுவலகம் ஸ்பென்ஸரில் உள்ளது. வாரத்தில் ஒருமுறையாவது அங்கிருந்து பஸ் பிடித்து, அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு வந்துவிடுவேன். பீஃப் பிரியாணிக்காக ! பீஃப் சமைப்பதெல்லாம் ஒரு தனி கலை. இதுவரை நிறைய இடங்களில் நான் பீஃப் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். நான்கு கடைகளில் சாப்பிட்டால் ஒரு கடையில் நன்றாக இருக்கும். அந்த ஒரு கடையிலும் எல்லா நாட்களும் பக்குவம் தவறாமல் வராது. ரிச்சி ஸ்ட்ரீட்டில் இதுவரை பத்து முறையாவது சாப்பிட்டிருப்பேன். ஒருமுறை கூட பக்குவம் தவறியதில்லை. ஒவ்வொருமுறையும் அதே ருசி. இன்னொரு சிறப்பம்சம், இந்த பிரியாணி கடையில் இரண்டாயிரம் நோட்டை நீட்டினால் கூட நொட்டை சொல்லாமல் பொறுமையாக பத்தொன்பது நூறு ரூபாய் தாள்களுடன் சில்லறை தருகிறார்கள்.

நீண்ட வாரயிறுதிக்கு வயநாட் செல்வதாக திட்டமிட்டிருந்தோம். கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டு திட்டத்தை மசினகுடியாக மாற்றிக்கொண்டோம். பதிமூன்று மணிநேர பைக் பயணம், பந்திப்பூர் வனச்சாலையை கடந்து சென்றது, மோயர் பள்ளத்தாக்கு மற்றும் சிகூர் அருவியைக் கண்டது, ஊட்டி மேகங்களை தொட்டுவிட்டு வந்தது என்று நிறைய இருக்கிறது. தனியாக எழுத வேண்டும்.

ராகவா லாரன்ஸின் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை கவனித்தால் ஒரு பேட்டர்ன் தெரிகிறது. அநேகமாக லாரன்ஸுக்கு வெள்ளைத்தோல் கொண்ட பெண்கள் மீது ஒரு ஈடுபாடு என்று நினைக்கிறேன். இவருடைய முனியில் வேதிகா, காஞ்சனாவில் லக்ஷ்மி ராய் (இப்படத்தில் இந்த மாற்றுநிற ஈர்ப்பு குறித்து ஒரு பாடலே வருகிறது), காஞ்சனா 2ல் டாப்ஸி, மொட்ட சிவா கெட்ட சிவாவில் நிக்கி கல்ராணி (முதலில் பேசப்பட்டவர் காஜல் அகர்வால்), சிவலிங்காவில் ரித்திகா சிங் என்று அடித்து ஆடுகிறார். போலவே அவருடைய சமீப படங்கள் எல்லாமே ஏறத்தாழ ஒரே டெம்ப்ளேட் தான். தெரியாத்தனமாக முனி ஹிட்டாகிவிட அதே ரூட்டில் படங்களை எடுத்து தள்ளிக்கொண்டிருக்கிறார். (முதலில் கோவை சரளா நடிப்பதற்கு தடை போட வேண்டும்). சிவலிங்கா மற்றும் மொ.சிவா கெ.சிவா படங்களின் டிரைலர்களை பார்த்தேன். எப்படியும் நான் இப்படங்களை எல்லாம் பார்க்கப் போவதில்லை. மற்ற சினிமா ரசிகர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.

இன்னொரு கவலை சிவலிங்காவில் செல்லக்குட்டி ரித்திகா நடித்திருப்பது. இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை என்று இரண்டு அல்வா மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார். இரண்டுமே வசூல்ரீதியாக வெற்றி பெற்று, அதே சமயம் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற படங்கள். கதாநாயகிகளை பொறுத்தவரையில் இப்படி தொக்காக இரண்டு படங்கள் கிடைப்பது அபூர்வம். அந்த ரூட்டைப் பிடித்துக்கொண்டு அப்படியே நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்திருக்க வேண்டும். தெரியாமல் போய் சிவலிங்கா என்றொரு புதைகுழியில் காலை விட்டிருக்கிறார். அதிலே ரங்கு ரக்கர ரங்கு ரக்கர என்று குத்தாட்டம் போட வைத்திருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக இருக்கிறது. பாவத்துக்கு படம் தெலுங்கில் வேறு வெளியாகிறது. சொல்லவே தேவையில்லை. ரித்திகாவை யாராவது தமிழ் இயக்குனர்கள்தான் மனது வைத்து காப்பாற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 January 2017

பிரபா ஒயின்ஷாப் – 23012017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நாற்பதாவது சென்னை புத்தகக் காட்சி நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. மூன்று நாட்கள் பு.கா சென்று வந்தேன்.
முன்பெல்லாம் பு.கா.வில் ஒரு சுற்று சுற்றி வந்தால் ஐம்பது இணைய பிரபலங்களையாவது தரிசித்துவிட முடியும். இந்தமுறை ஏனோ நிறைய பேரைக் காணவில்லை.

பயங்கர மர்மநாவல்
பு.கா. நடைபெற்ற பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள பழைய புத்தகக்கடைகளில் எண்பது சத புத்தகங்கள் குப்பை. நன்றாக கையை விட்டுத் துழாவினால் உள்ளேயிருந்து சில பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. முதல்நாள் ‘பயங்கர மர்மநாவல்’ என்கிற அடிக்குறிப்புடன் ‘இன்று சவராத்திரி’ என்ற துப்பறியும் நாவல் கிடைத்தது. 54 பக்கங்கள். ஒரே கழிவறை அமர்வில் முடித்தாயிற்று. அத்தனை சுவாரஸ்யமில்லை. இரண்டாம்நாள் ‘திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக்கட்டுரை வகையறா புத்தகம் கிடைத்தது. இன்னும் படிக்கவில்லை. உயிர்மை அரங்கில் நின்றபடியே இளம் எழுத்தாளரின் இரண்டு புதிய வெளியீடுகளை படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது வெளியீடு இதோ வருகிறது, அதோ வருகிறது என்றார்கள். பு.கா. முடியும் வரை அச்சுப்பிரதியை கண்ணில் பார்க்க முடியவில்லை. 700 அரங்குகளை அலசி, பல கட்ட ஸ்க்ரீனிங் தாண்டி, நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் –

  • நைலான் கயிறு (சுஜாதாவின் முதல் நாவல்) – சுஜாதா – கிழக்கு
  • அனிதா இளம் மனைவி (சுஜாதாவின் இரண்டாவது நாவல்) – சுஜாதா – கிழக்கு
  • மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம் (கட்டுரைகள்) – சுஜாதா – கிழக்கு
  • கானகன் (யுவபுரஸ்கார் பெற்ற நாவல்) – லக்ஷ்மி சரவணகுமார் – மலைச்சொல்
  • திரு.மஹ்ராஜின் மைதானம் (சிறுகதைத் தொகுப்பு) – லக்ஷ்மி சரவணகுமார் – மோக்லி
  • அஜ்வா (நாவல்) – சரவணன் சந்திரன் – உயிர்மை
  • காதல் வழியும் கோப்பை (சிறுகதைத் தொகுப்பு) – யுவகிருஷ்ணா – உயிர்மை
  • நீர் (நாவல்) – விநாயகமுருகன் – உயிர்மை
  • நீருக்கடியில் சில குரல்கள் (நாவல்) – பிரபு காளிதாஸ் – உயிர்மை
  • டர்மரின் 384 (நாவல்) – சுதாகர் கஸ்தூரி – கிழக்கு
  • உயிர்மெய் (நாவல்) – அராத்து – மின்னம்பலம்
  • ஃபேண்டஸி கதைகள் – செல்வகுமார் – சூரியன்
  • மோகினி – வ.கீரா – யாவரும்
  • டிரங்குப்பெட்டி கதைகள் – ஜீவ கரிகாலன் – யாவரும்
  • ஊருக்கு செல்லும் வழி – கார்த்திக் புகழேந்தி – ஜீவா

இவற்றில் கடைசி நான்கு தவிர மற்றவை அபார நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கியவை. கடைசி நான்கு சோதனையின் அடிப்படையில் வாங்கியவை. 

இவை தவிர்த்து கிழக்கில் திராவிட இயக்க அரசியல் இரண்டு பாகங்கள் வாங்கினேன். விடியலில் பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நிச்சயமாக ஒரு பம்பர் பரிசு ! கழிவு போக நானூறு ரூபாய். முதல் ஆயிரம் பிரதிகள் முன்னூறு ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார்கள். பூம்புகார் பதிப்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை பார்த்தேன். உடனே பள்ளிக்கால நினைவுகள் வர, வாங்கிக்கொண்டேன்.

அஸால்ட் எழுத்தாளருடன் (PC: பிரபு காளிதாஸ்)
அஜ்வா வாங்கியபோது எனது நற்பேறாக அதன் எழுத்தாளர் சரவணன் சந்திரன் அரங்கில் இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். ஆளவந்தான் படத்தில் நந்து, ‘நான் சொன்னாலே கவிதை வரும்’ என்பார் அதுபோல உங்களுக்கு அஸால்ட்டாக எழுத்து வருகிறது என்றேன். அஸால்ட்டாக சிரித்துக்கொண்டார். மேற்கூறிய தருணத்தை த(ந்தி)ரமாக படம் பிடித்து வைத்திருக்கிறார் அஸால்ட் புகைப்படக்காரர் !

ஒருபுறம் புத்தகக்காட்சி, பொங்கல் வெளியீடாக பைரவா, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட், டிரம்ப் பதவியேற்பு என்று இணையத்தில் வைரலாகக்கூடிய பல விஷயங்கள் நடந்துக்கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஜல்லிக்கட்டு போராட்டங்கள். முதலில் இதனை ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதே அபத்தம். குழந்தைகள் அழும்போது சில சமயங்களில் நம்மால் எதற்காக அழுகிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. அதுபோல கடந்த ஐந்தரை ஆண்டுகால ஆட்சியில் அடக்கி வைத்திருந்த மொத்த கோபத்தையும் தமிழக இளைஞர்கள் காட்டத் துவங்கிவிட்டனர். ஒரு வகையில் இந்தப் போராட்டம் சந்தோஷம் தருகிறது. ஆனால் ஏராளமான கேள்விகளும், விமர்சனங்களும் உள்ளன. தமிழக இளைஞர்கள் இப்பொழுது ஒருமாதிரியான கொதிப்பான மனநிலையில் இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியங்களை விவாதிக்கவோ, விமர்சனங்களை தாங்கிக் கொள்ளவோ அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சநாள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு புரட்சி தொடர்பான மீம் பரிமாற்றங்களின் போதுதான் மாற்றான் திரைப்படத்திலிருந்து இந்த திரைச்சொட்டு காணக்கிடைத்தது. கதைப்படி ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. முதல்வர் என்று ஏதோவொரு பெயரை போட்டுக்கொள்ளலாம் இல்லையா ? ‘சுரேந்திர லோடி’ குஜராத் முதலமைச்சர் என்று இன்-டைரெக்டாக (!!!) போட்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். கே.வி.ஆ. படங்களில் இதுபோன்ற அக்குரும்புகளை அடிக்கடி பார்க்கலாம். இவருடைய அயன் படத்தில் பர்மா பஜாரில் கடை வைத்திருப்பார் ஹீரோ. அங்கே அடிக்கடி உலக சினிமா டிவிடி வாங்க வரும் ஒரு இயக்குநர் ‘வங்கிக்கொள்ளை’ சம்பந்தமான பட டிவிடிகளை வாங்கிச் செல்வதாக காட்டியிருப்பார். கே.வி.ஆ.வின் அடுத்த படமான ‘கோ’வில் முதல் காட்சியே வங்கிக்கொள்ளை தான். போலவே கோ படத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் பியா ஒருவருடன் கோபமாக போனில் பேசிவிட்டு அவன் படத்துல ஹீரோ கடத்தல் பண்ணுவானாம், ஆனா கடைசியில கஸ்டம்ஸ் ஆபிசர் ஆயிடுவானாம், அதுக்கு நாலு ஸ்டார் போடணுமாம் என்று திட்டுவார். அவர் குறிப்பிடுவது அயன் படத்தின் கதையை. மாற்றான் படத்தில் இருவேறு குணம் கொண்ட சயாமீஸ் இரட்டையர்களான ஹீரோக்கள் தியேட்டரில் கோ படம் பார்க்கிறார்கள். ஒருவன் படத்தை மொக்கை என்று பழிக்கிறான், இன்னொருவன் யூத் பாலிடிக்ஸ் பற்றி பேசியிருப்பதாக பாராட்டுகிறான். அநேகன் படத்தின் பர்மா பாகம் கே.வி.ஆ.வின் நகாசு வேலைகளின் உச்சபட்சம். ஒரு காட்சியில் கதாநாயகியின் வகுப்பறை வருகைப் பதிவேடை காட்டுகிறார்கள். அதில் பர்மிய அரசியல் தலைவரான ஆங் சான் சூகி பெயர் வருகிறது. பர்மாவின் ராணுவ ஆட்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏறத்தாழ ஒரு ஆவணப்படம் போலவே காட்டியிருப்பார். அதில் வரும் காட்சிகள் மட்டும்தான் புனைவு. செய்திகள் அத்தனையும் வரலாற்றில் அப்படியே உள்ளது. அப்புறம் ரஜூலா கப்பல். இதைத்தான் திரைத்துறையில் மெனக்கெடல் என்கிறார்கள். லவ் யூ கே.வி.ஆனந்த் 💓

குறிப்பிட்ட இந்த மாற்றான் படக்காட்சியில் மோடி அதாவது சுரேந்திர லோடி கார்ப்பரேட் முதலாளியான வில்லனின் எனர்ஜியான் நிறுவனத்தின் பூமி பூஜையில் கலந்துகொள்கிறார். அப்போது வில்லனை கைது செய்ய தமிழக போலீஸ் வருகிறது. மேடையில் உள்ள மோடிக்கு இந்த தகவல் சொல்லப்படுகிறது. உடனே அவர் விழா மேடையிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டபடி வில்லனை உடனடியாக கைது செய்யச் சொல்கிறார். லாஜிக் இடிக்கிறதல்லவா ? தமிழ் சினிமாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் வில்லனாக சித்தரிக்கலாம். ஆனால் முதல்வர், பிரதமர் மட்டும் நல்லவராக இருப்பார்கள். அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் செய்யும் தவறுகள் தெரியாதவராக இருப்பார்கள். அல்லது பூசி மொழுகியிருப்பார்கள். இது ஏனென்றால் படம் நல்லபடியாக வெளியாக வேண்டுமில்லையா ?

நம் நாட்டு மாடு இனங்களை அழித்து, ஜெர்ஸி பசுக்களை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து நாமெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் மலையாள திரையுலகம் அமைதியாக ஒரு காரியத்தை செய்துக்கொண்டிருக்கிறது. நாம் கேரள நடிகைகளை கொணர்ந்திங்கு சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் நடிப்பாற்றல் கொண்ட தமிழக நடிகைகளை நைச்சியம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் குழும தொலைக்காட்சி நமக்களித்த கொடையான ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் துல்கருடன் ஒரு படத்தில் நடித்துவிட்டார். அடித்து நிவின் பாலியுடன் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். போலவே நம் சினிமா அதிகம் கண்டுகொள்ளாத ஆளுமை லக்ஷ்மிப்ரியா சந்தரமெளலியையும் ஏற்கனவே அபகரித்துவிட்டார்கள். நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 January 2017

பிரபா ஒயின்ஷாப் – 16012017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது. நேரமில்லை என்பதுதான் சாக்கு / காரணம். மீண்டும் எழுதத் துவங்கியதற்கும் அதேதான் காரணம். எழுதுவதற்கு சில தடைகள் ஏற்படும்போது அவற்றிலிருந்து மீண்டு வந்து எழுதத் தோன்றுகிறது, ஸ்டைலா, கெத்தா !

ராஸ லீலா படித்துக்கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் நாளொன்றிற்கு சாதாரணமாக ஐம்பது பக்கங்கள் வரை படித்துவிடுவேன். கதை நாவல்களாக இருந்தால் சில சமயம் ஆர்வம் தாங்காமல் ஒரே சிட்டிங்கில் கூட படித்துவிடுவேன். இப்போது அது முடிவதில்லை. காரணம், பீக் ஹவர்ஸில் பயணிப்பதால் பேருந்துகளில் உட்கார இடம் கிடைப்பதில்லை. என்னை விட்டால் கூட்ட நெரிசலில் நின்றுக்கொண்டே கூட படித்துவிடுவேன். என்ன ஒன்று சகபயணிகள் ஒருமாதிரி பார்ப்பார்கள். ராஸ லீலாவில் சாருவும் இதே பிரச்னையை சந்திக்கிறார் – இன் திஸ் சேப்டர். ‘இப்படி விழுந்து விழுந்து படிக்கிறீர்களே, ஏதாவது பரீட்சையா ?’. பரீட்சை எதுவுமில்லாமல் என்ன படிப்பு ? சிலர் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். 

இருக்கை கிடைக்காமல் நின்றுக்கொண்டே போவதால் சக மனிதர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. முக்கால்வாசி பேருந்து பிரயாணிகள் (சில சமயங்களில் என்னையும் சேர்த்து) எதிர்மறை எண்ணங்களோடு தான் பயணம் செய்கிறார்கள். அல்லது பேருந்தில் பயணம் செய்து, செய்து இப்படி ஆகிவிட்டார்களா என்று தெரியவில்லை. முகத்தை எப்போதும் கடுகடுவென வைத்திருக்கிறார்கள். எப்போது யார் மீது எரிந்து விழலாம் என்று காத்திருக்கிறார்கள். நெரிசலில் காலை லேசாக மிதித்துவிட்டால் உயிரே போய்விட்டது போல கத்தி வசைபாட துவங்கிவிடுகின்றனர். அதிலே பாருங்கோ, இரண்டு பார்ட்டிகளும் எவ்வளவுதான் மாறி மாறி திட்டிக்கொண்டே வந்தாலும் யாரும் சண்டையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாக மட்டும் தெரிவதே இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான். 

ஒருநாள் ஒரு இளைஞரை நெரிசலான பேருந்தில் வைத்து பெண்களிடம் ஏராளமாக திட்டு வாங்கிக்கொண்டிருந்தார். நான் கவனித்த வரையில் அந்த இளைஞர் மீது தவறில்லை. ஆனால் எதுவும் பேசாமல் பொறுத்துக்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், த்தா இந்த பஸ்ல போய் ஏறினேன் பாரு என்று சன்னமாக முனங்கினார். அவ்வளவுதான். இதுகாறும் யாரிடமாவது சண்டை போட வேண்டுமென காத்துக்கொண்டிருந்த ஒரு ஆசாமி எழுந்து, ‘ண்ணோவ்... தேவையில்லாம வார்த்தைய விடாத’ என்று ஆரம்பித்து ‘நீ சொன்ன வார்த்தைய இப்ப நான் சொல்லிக் காட்னா அசிங்கமாயிடும்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘த்தா’ என்பது அவ்வளவு பெரிய கெட்டவார்த்தையா ? தமிழ் மக்களை, குறிப்பாக சென்னை மக்களைப் பொறுத்தவரையில் 'ஓத்தா' என்பது அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சாதாரண ஒன்று. பெரும்பாலும் வாக்கியத்தின் துவக்கத்தில் உதவும். இதற்கா இவ்வளவு கூச்சலிடுகிறார். அன்னார் கெளதம் மேனன் படங்கள் / டிரைலர் எல்லாம் பார்ப்பதில்லை போலிருக்கு. இத்தனைக்கும் ஆசாமி எண்ணூர். த்தா உனக்கெல்லாம் சென்னையில் வாழத் தகுதியே இல்லடா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

புத்தாண்டில் பார்த்த முதல் சினிமா – இருவர். தமிழக அரசியலை இந்த அளவிற்கு உண்மைக்கு மிக நெருக்கமாக யாரும் சினிமாவில் காட்டியதில்லை என்று நினைக்கிறேன். சொல்ல முடியாத சில விஷயங்களைக் கூட சில காட்சிகளில் / வசனங்களில் பூடகமாக சொல்லியிருக்கிறார். மல்டிப்பிள் ஆர்கஸம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருவர் பார்க்கும்போது தான் அனுபவித்தேன். படத்தின் நிறைய தருணங்களில் ரோமங்கள் சிலிர்த்தெழுந்து கொண்டன. கதையில் ஒருவர் தன்னுடைய மொழி வளத்தையும், பேச்சாற்றலையும் கொண்டு மக்களை தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார். இன்னொருவர் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் என்னும் வசீகரத்தால் மக்களின் அன்பை சம்பாதிக்கிறார். 

அதே போன்ற இன்னொரு இருவர் கூட்டணி. ஒருவர் தன்னுடைய சாமர்த்தியமான திரைக்கதையால் பார்வையாளர்களை சிலிர்ப்படையச் செய்கிறார். இன்னொருவர் தன்னுடைய இசைக்கருவிகளுடன் உதவியுடன் நமக்கு எழுச்சியூட்டுகிறார். ஒருவேளை மணிரத்னமும், ரஹ்மானும் இல்லாமல் போயிருந்தால் இந்த சமூகம் என்னவாகியிருக்கும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நந்தினி ஸ்ரீகரை பார்த்தால் அவர் இந்தப்பாடலை பாடியிருக்கவே மாட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது. பார்ப்பதற்கு பக்கா வெஸ்டர்ன் பாடகி போல இருக்கிறார். ஆனால் பாடியிருப்பது தமிழ் கிளாஸிக் ! சும்மா கின்னென்று இருக்கிறது இவருடைய குரல். ஆளவந்தானில் ஆஃப்ரிக்கா காட்டுப்புலி பாடியதும் இதே நந்தினி தானாம் ! பாடலில் வரும் சீஜா சினேகாவின் முக வசீகரத்தையும் ஜோதிகாவின் பாவனைத் திறன்களையும் ஒருங்கே பெற்றிருக்கிறார். ரேர் பீஸ் ! ஏன்ப்பா டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா ! என்ன ஒன்று இப்பொழுதெல்லாம் இந்த பாடலைக் கேட்டாலே ஸ்மைல் சேட்டை ஞாபகம் தான் வருகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment