21 September 2015

சினிமா வியாபாரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப வருடங்களாக சினிமா ரசிகர்கள் பரவலாக படங்களின் வசூல், நடிகர்களின் மார்க்கெட் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ரசிகன் என்ன கூந்தலுக்கு படத்தின் வசூலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். வசூல் மட்டுமல்ல. படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்ட காலம், சிரத்தை உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகனுக்கு அவை மீது ஆர்வமில்லாத பட்சத்தில் அவசியமற்ற விஷயங்கள். பல வருடங்கள் உழைத்து, பல கோடிகள் கொட்டி உருவாக்கிய ஒரே காரணத்திற்காக ரசிகர்கள் ஒரு படத்தை பாராட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அதே சமயத்தில் ஒரு ரசிகன் கோச்சடையானையும் அவதாரையும் கூட கூச்சப்படாமல் ஒப்பிடலாம். ஏனெனில், அவன் இரு படங்களையும் அதே 120ரூ கொடுத்துதான் பார்க்கிறான். In fact, முந்தயதிற்கு அதிக பணம்.

என் எண்ணங்கள் இப்படியிருக்க, முழுக்க முழுக்க சினிமாவின் backend தகவல்கள் அடங்கிய புத்தகமொன்று என்னை விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கேபிள் சங்கர் எழுதியிருக்கும் சினிமா வியாபாரம். இரண்டு பாகங்கள். முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பெயர் ‘இலவச விளம்பரம்’. சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு அது தாராளமாக கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு ‘இதெல்லாம் தெரியணும்ன்னா நீ சினிமா வியாபாரம் படிச்சிருக்கணும்’ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சொல்ல முடியாது இதுபோன்ற ஆசாமிகளை எல்லாம் கேபிளே கூட செட் பண்ணியிருக்கலாம். எதற்கு வம்பு என்று இரண்டு பாகங்களையும் வாங்கி படித்துவிட்டேன்.

முதல் பாகத்தில் பெரும்பாலும் திரைப்பட விநியோகம் பற்றியும் பல்வேறு வகையான உரிமைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில் சிட்டி, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு என்று தொடங்கி FMS வரை என்று முடிப்பார். இவைதான் தமிழ் சினிமாவின் விநியோக ஏரியாக்கள். விநியோகம் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், டிவிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங், ரீ-மேக் ரைட்ஸ் உட்பட நாமெல்லாம் கேள்விப்பட்டிராத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் பரிவர்த்தனைகள் என்ன மாதிரியெல்லாம் நடைபெறுகிறது, என்ன மாதிரியான படங்களுக்கு யாருடைய கை ஓங்குகிறது போன்ற விவரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது முதல் பாகம். என்ன ஒன்று, பாதி புத்தகத்திற்கு பிறகு ஹாலியுட்டுக்கு தாவி அங்குள்ள தொழில்நுட்பங்கள், பெருநிறுவனங்கள், அவற்றின் அரசியல் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொன்னாலும் கூட ஏனோ அந்நியமாக தெரிகிறது.

முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் எனக்கு மிகவும் நெருக்கமாக படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்துவது பற்றியது. நான் திரையரங்குகளை உணர்வுப்பூர்வமாக கருதுபவன். ஒரு படம் என்னுள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துமோ, அதற்கு இணையான தாக்கத்தை திரையரங்குகளும் என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு திரையரங்கில் என்ன பிராண்ட் ‘ரூம் ஸ்ப்ரே’ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதே ரூம் ஸ்ப்ரேயை என் வீட்டிற்கு வாங்கும் அளவிற்கு பைத்தியக்காரன் நான். திரையரங்குகள் குறித்து நான் எழுதத் துவங்கினால் தனி புத்தகம்தான் போட வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். சிட்டி பார்டரில் உள்ள ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்திய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் கேபிள். திரையரங்கத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் எழுதியதால் எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக போயிற்று. உதயம், காசிக்கு அருகில் என்று எழுதியிருக்கிறார். பிட்டுப்படம் ஒட்டிய தியேட்டர் என்றும் சொல்கிறார். ஜோதி என்று நினைத்தால் அதனை வேறொரு திரையரங்கமாக பாவித்தும் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது கண்டிப்பாக கே.கே.நகர் விஜயா தான் என்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். விஜயா திரையரங்கம் கேபிளின் இல்லத்தில் இருந்து நடைதொலைவு. ஆனால் கே.கே.நகர் சிட்டி லிமிட்டிற்குள் தானே வரும் என்று யோசித்து, கடைசியாக ஆலந்தூர் எஸ்.கே என்று முடிவு கட்டியிருக்கிறேன். உண்மையில் அது எந்த திரையரங்கம் என்பது கேபிளுக்கே வெளிச்சம்.

பாடாவதியான அந்த திரையரங்கை லீசுக்கு எடுக்கிறார்கள். புதுப்பிக்கிறார்கள். தடைகளை கடந்து முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு ஒரு திரையரங்க உரிமையாளராக என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நூல் பிடித்ததை போல தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லை, திரைப்படங்களுக்கென போஸ்டர் ஓட்டுவது என்பது நாம் அன்றாடம் சாலையில் பார்த்துவிட்டு கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று. அதற்குப் பின்னால் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது என்றெல்லாம் தெரியும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. 

இன்று சென்னையில் வசிக்கும் மூவி பப்ஸ்கள் பெரும்பாலானாவர்களுக்கு ஆதர்ஸ திரையரங்கம் என்றால் அது சத்யம் தான். ஒரு கட்டத்தில், சத்யம் திரையரங்கத்திற்கு மூடுவிழா நடத்த முடிவாகியிருந்ததும், அதிலிருந்து சத்யம் மீண்டுவரக் காரணம் நக்சலைட்டுகள் தான் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஆனால் ஒன்று, சினிமா வியாபாரம் பாகம் இரண்டினை வாங்க விரும்புபவர்கள் தயவு கூர்ந்து முதல் பாகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே ‘இது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதல் பாகம் படித்திருக்க வேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

சினிமா வியாபாரம் – பாகம் 1
கேபிள் சங்கர்
மதி நிலையம்
144 பக்கங்கள்
ரூ.90

சினிமா வியாபாரம் – பாகம் 2
கேபிள் சங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
88 பக்கங்கள்
ரூ.70

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 August 2015

7.83 ஹெர்ட்ஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2015ம் ஆண்டு துவங்கியதிலிருந்து ஜூன் மாதம் வரை இருபது புத்தகங்களுக்கு மேல் படித்துவிட்டேன். ஆனால், கிட்டத்தட்ட ஜூன் மாதக்கடைசியில் படிக்கத் துவங்கிய 7.83 ஹெர்ட்ஸை இப்பொழுது தான் முடித்திருக்கிறேன். அதற்கு புத்தகத்தின் தன்மை மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு, கொஞ்சம் மன அழுத்தம், அது போதாதென்று காரோட்டும் பயிற்சி, திடுக்கென எதிர்ப்புற சாலையிலிருந்து யூ-டர்ன் அடிக்கும் ஷேர் ஆட்டோக்களை சமாளிக்க வேண்டும், ஹாரன் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாலையைக் கடக்கும் எருமைகளை இடிக்காமல் பிரேக் போடவேண்டும், க்ளட்ச்சில் இருந்து காலை எடுக்கும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும், மாடு வேற இழுத்துனு போகுது, பாம்பு கழுத்துல ஊருது, பிளாடரை வேற கரெக்டா அமுக்கி கங்கையில தண்ணி வர வைக்கணும், இதுக்கு மேல டயலாக்கும் சொல்லணும்னா எப்படி ?

சுதாகருடைய 6174 எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். சுதாகர் எனக்கும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 6174 படித்த சமயத்தில், நாமளும் எப்படியாவது ஒரு பெரிய ‘சம்பவம்’ செய்யணும் என்ற வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். (இன்னமும் அந்த கங்கு அணையாமல் தான் இருக்கிறது). அவருடைய இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ்.

7.83 ஹெர்ட்ஸ் ஒரு அறிவியல் புனைவு நாவல். ஆனால், கணினி, ரோபோக்கள் என்று இல்லாமல் பயோ-டெரரிஸம், பாலி பாஸ்பேட், ஸை-ஆப்ஸ் (Psyops) என்று வேறு தளத்தில் பயணிக்கும் ஸை-ஃபை !

ஓநாய்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனைக் கண்டால் விலகிச் செல்பவை. ஆனாலும் அவற்றைக் கொடிய விலங்கு என்றே கருதுகிறோம் என்ற சுவாரஸ்ய வரிகளுடன் தான் நாவல் துவங்கியது. ஆனால், சில பக்கங்கள் தாண்டியதும் ஒருவித அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்கான சில காரணங்கள் –

- ஒரு நபர் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி படிக்கும்போது அந்த விஷயம் அப்படியே நம் முன்பு காட்சியாக விரிய வேண்டும். 7.83 ஹெர்ட்ஸின் அத்தியாயங்களை அதுபோல என்னால் காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதே சிக்கல் எனக்கு 6174ன் பிற்பகுதியிலும் இருந்தது. அது இங்கே பதினெட்டாம் பக்கத்திலேயே துவங்கிவிடுகிறது. 


- ஓவர் டீடெயிலிங்: உண்மையில் சுதாகரின் டீடெயிலிங் பிரம்மிப்பாக இருக்கிறது. அநியாயத்துக்கு தகவல்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார். நிறைய டாபிக்கைப் பற்றி நாவலில் மேலோட்டமாகவே சொல்லியிருந்தாலும் அதற்கான தகவலை சேகரிக்க சுதாகர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. ஆனால், இவ்வளவு டீடெயிலிங் தேவையா ? தொடர்ச்சியாக தகவல்கள், தகவல்கள், தகவல்கள் என்பதே அயர்ச்சி தருகிறது. 

- ஜார்கன்ஸ்: சாமானியர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் எளிமையாக இருக்க வேண்டுமென்பது எனது கருத்து. ஐ.சி.பி ஸ்பெக்ட்ரோமீட்டர், ATC ஆக்ஸி டெட்ராசைக்கிள், கேனிட்ஸ் ஜீனோடைப்பிங் என்று புரியாத மொழியில் ஏதேதோ எழுதிக்கொண்டே போகும்போது தொடர்வதற்கு சிரமமாக இருக்கிறது. சுஜாதாவும் ஸை-ஃபை எழுதினார். ஆனால், எல்லோருக்கும் புரியும் மொழியில். பாய்ஸ் படத்தில் நிலநடுக்கம் வந்ததும் எல்லோரும் வீதிக்கு வந்து கூடிப் பேசிக்கொள்வார்கள். அங்கே ஜெனிலியாவின் அப்பாவும் ஒரு காமன் மேனும் ‘ரிக்டர்’ அளவை எப்படி கணக்கிடுவார்கள் என்று பேசிக்கொள்வார்கள். சுஜாதாவின் வெர்ஸடைலிட்டிக்கு அது ஒரு நல்ல உதாரணம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, சுதாகர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லாத சப்ஜெக்ட். அதனாலேயே பல கொட்டாவிகளுக்கு மத்தியில் படிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் தடையில்லாத வாசிப்புக்கு திரும்ப வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 March 2015

ஜே.கே & ராஜதந்திரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் படமும் பார்த்தேன்.

பொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.

ஏதோ வண்டி ஓடுது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர், ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

அபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.

ராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர் மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள். திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.

தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம் ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள் என்கிறார்கள்.

ராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது ? பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும் இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.

மற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா ? இங்கே என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின் துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா சிவா.

விமர்சனங்களை படித்துவிட்டு நல்ல படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 March 2015

எனக்குள் ஒருவன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வருடங்களுக்கு முன் இணையவெளியில் பரபரப்பாக பேசப்பட்ட படம் – லூஸியா (கன்னடம்). பொதுவாக இதுபோல ஊரே சிலாகித்து கொத்து பரோட்டா போட்டுவிடும் படங்களை பார்க்கும் ஆர்வம் மொத்தமாக வடிந்து விடுவதுண்டு. நான் இன்னமும் ‘திருஷ்யம்’ பார்க்கவில்லை. லூஸியாவை தமிழில் எடுக்கிறார்கள் என்பதில் எனக்கிருந்த ஒரேயொரு ஆர்வம் அதன் தமிழ் தலைப்பு. (கமலின் எனக்குள் ஒருவன் சிறுவயதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்களுள் ஒன்று). என்னதான் இருக்கிறது என்று லூஸியாவின் விக்கிபீடியா பக்கத்தை திறந்தேன். சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று தொடங்கியது. அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்வது உத்தமம்.

-- SPOILER ALERT –-

புராதன கால திரையரங்கு ஒன்றில் பணிபுரியும் கடைநிலை ஊழியன் விக்னேஷ் தூக்கமின்மையால் அவதிப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் லூஸியா என்கிற போதை மாத்திரைகள் அவனுக்கு கிடைக்கிறது. அதனை உட்கொண்டால் நமக்கு விருப்பமான வாழ்க்கையை கனவுலகில் வாழலாம். அப்படி திரையரங்க ஊழியன் திரைப்பட கதாநாயகனாக கனவு காண்கிறான். போதும். கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. குறிப்பாக, ஜான் விஜய் அரை கிறுக்கன் போல அறிமுகமாகும் காட்சியை பார்த்ததும் எனக்கு எரிச்சலாகிவிட்டது. லூஸியாவை தொட்டதும் தான் நிமிர்ந்து உட்கார முடிகிறது. அங்கிருந்து இரண்டு கிளைகளாக ஒரே சீராக நகரும் கதை இறுதியில் சில ஆச்சர்யங்களுடன் நிறைந்த உணர்வை கொடுக்கிறது.

சித்தார்த்துக்கு இரண்டு பறக்கோடி வேடங்கள். இரண்டிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் இடையே காட்டும் வித்தியாசம் வியப்பூட்டுகிறது. அதில் சினிமா ஹீரோ வேடம் சித்தார்த்துக்கு ஹோம் கிரவுண்ட் மாதிரி. நிதானமாக அசத்தியிருக்கிறார்.

தீபா சன்னிதிவிற்கு ஒடுங்கிய கன்னங்கள். பார்ப்பதற்கு வெகு சுமாராகவே இருக்கிறார். மேகா படத்தின் கதாநாயகி ஸ்ருஷ்டி சில காட்சிகளில் வருகிறார். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேனும், (ஆஃபீஸ் புகழ்) உதயபானு மகேஸ்வரனும் கச்சிதம்.

இசை சந்தோஷ் நாராயண்தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. பாடல்கள் அப்படியொன்றும் பிரபலமானதாக தெரியவில்லை. பிரபலமாகவே பாடலும் ஏண்டி இப்படி பாடலும் நன்றாக இருக்கின்றன. மற்றவை உறுத்தாமல் வந்து போகின்றன.

பவன் குமார்
எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் பிரதான அம்சம் அதன் கதை. எல்லாப் புகழும் பவன் குமாருக்கே. ஒரு கனவு எப்படி இருக்கும் என்பதை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நிஜத்தில் எஜமானராக வருபவர் கனவில் அதற்கு நேர்மாறாக பணியாளராக வருகிறார் (அல்லது வைஸ் வெர்ஸா). ‘பேரடாக்ஸ்’ என்ற சித்தாந்தத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

குறைகள் என்று பார்த்தால் முதலில் வருவது அடிக்கடி டைம் பார்க்க வைக்கும் மெதுவான திரைக்கதை. ஆடுகளம் நரேனின் குடும்பக்கதை எல்லாம் தேவையில்லாதது போல தோன்றியது. கமர்ஷியல் மூவி பப்ஸுகளுக்கு கண்டிப்பாக பிடிக்காது. திரையரங்கம் விட்டு வெளியே வரும்போது நிறைய பேர் சலம்பிக்கொண்டே வெளியேறுவதையும், வற்புறுத்தி அழைத்து வந்த நண்பனை கடிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது.

மற்றபடி, நல்ல சினிமாவை தேடுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம். நம்மவர்கள் அடிக்கடி ‘ஹாலியுட் தரத்தில்’ என்பார்கள். அதாவது தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு. எனக்குள் ஒருவன் அதைவிட ஒரு படி மேலே போய் கதையம்சத்தில் ஹாலியுட் தரத்தில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 February 2015

எஸ்.எஸ்.ரஜூலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிறு வயதிலிருந்தே கப்பல்கள் மீது எனக்கு ஒரு ‘க்ரேஸ்’ உண்டு. நான் அந்தமானுக்கு கப்பலில் செல்ல முடிவு செய்தபோது அனுபவஸ்தர்கள் எச்சரித்தார்கள். சில மணிநேரங்களில் கப்பல் போரடித்துவிடும் என்றார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று நான் உறுதியாக நம்பினேன். யாருடைய பேச்சையும் கேட்காமல் கப்பலில் பயணித்தேன். கப்பல் என்னை ஏமாற்றவில்லை. குறிப்பாக, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு தம்முடன் நண்பர்களுடன் அரட்டை அடித்த அந்த இரண்டு நாட்களை நினைத்தால் இப்போதும் கூட இன்னொரு முறை கிடைக்காதா ஏக்கமாக இருக்கிறது. முழுமையாக இரண்டரை தினங்கள் நம்மைச் சுற்றி வெறும் கடல் மட்டும் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரவச அனுபவம்.

அப்போதிலிருந்தே கப்பல் மீதான எனது ஆவல் ஒரு சுற்று கூடுதலாகிவிட்டது. பின்பொரு நாள் எதார்த்தமாக ஆயிரத்தில் ஒருவன் (புதியது) படம் பார்த்தபோது அதில் இடம்பெற்ற கப்பல் நான் பயணம் செய்தது என்று நினைவுகூர்ந்து சிலாகித்துக்கொண்டேன். துப்பாக்கி க்ளைமாக்ஸ் நினைவிருக்கிறதா ? அது படமாக்கப்பட்ட கப்பலின் பெயர் சாகர் சந்தானி. ஆராய்ச்சிக் கப்பல். சமீபத்தில் பார்த்த அனேகன் படத்தில் ஒரு கப்பல் காட்சி வருகிறது. பக்கா இந்திய பயணிகள் கப்பல். பார்த்ததும் பரவசமாகி கப்பலின் பெயரை திரையில் தேடினேன். நான் எதிர்பார்த்த கப்பல் இல்லை. கப்பலின் பெயர் எஸ்.எஸ்.ரஜூலா. (உண்மையில் ரஜூலா கப்பல் தற்சமயம் அழிக்கப்பட்டுவிட்டது என்று பின்னர் தெரிந்துக்கொண்டேன். எனவே படத்தில் இடம்பெற்றது என்ன கப்பல் என்று தரமான பிரதி வந்ததும் கண்டுபிடிக்க வேண்டும்).

எஸ்.எஸ்.ரஜூலா. வரலாற்று சிறப்புமிக்க கப்பலாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு தான் கூகுள் செய்தேன். அவ்விதமே. டாக்டர் எஸ்.ஜெயபாரதி என்கிற பேராசிரியர் ரஜூலா கப்பலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

ரஜூலா கப்பல் 1923ம் ஆண்டு பார்க்லே நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கப்பலின் பெயரில் உள்ள எஸ்.எஸ் என்பது ஸ்டீம் ஷிப் (நீராவிக் கப்பல்) என்பதை குறிக்கிறது. 

முந்தைய தலைமுறை மலேசிய / சிங்கை வாழ் இந்தியர்களுக்கு ரஜூலா கப்பலை கண்டிப்பாக நினைவிருக்கும். சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பர்மா, பினாங்கு (மலேசியா), சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பல். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாய்மரக்கப்பல்களில் பயணம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட நீராவிக்கப்பல்கள் அறிமுகமாயின. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான கூலிகள் மலேசியா, சிங்கப்பூருக்கு (அப்போது பிரிட்டிஷ் மலாயா) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் போக்குவரத்துக்காக ரஜூலா உட்பட சில கப்பல்கள் செயல்பட்டு வந்தன. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் கல்கத்தா இந்திய தலைநகராகவும், பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டு வந்தது. 

தினசரி அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ பயணிப்பவர்கள் வாடிக்கையான சக பயணிகளின் முகங்கள் பரிட்சயம் ஆகியிருக்கும் அல்லவா ? இதே போல கப்பலிலும் ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமான பயணிகள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ? கப்பலின் கடைசி வகுப்பில் இதுபோன்ற வாடிக்கையான ஆசாமிகளை காண முடியும். பெரும்பாலும் வியாபாரிகளாக இருப்பார்கள்.

இன்றைய இந்திய பயணிகள் கப்பல்களில் டீலக்ஸ், இரண்டாம், மூன்றாம் மற்றும் பங்க் வகுப்புகள் உள்ளன. பங்க் என்பது ரயிலில் உள்ளது போல மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட ஒரு நீண்ட அறை. ரஜூலாவில் இவை தவிர்த்து ‘டெக்’ என்ற வகுப்பும் இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரயிலில் உள்ள முன்பதிவு செய்யாதவர்களுக்கான பகுதியைப் போன்றது. தனியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது. சீக்கிரமாக ஏறி கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது குறித்து உற்சாகமாக குறிப்பிடுகிறார் ஜெயபாரதி. அந்தக்கால திரையரங்குகளில் முக்கால்வாசி தரை டிக்கெட்டுதான், அப்புறம் பெஞ்ச் வரிசைகள், கடைசியாக இருக்கைகள். இருக்கை ஆட்கள் எல்லாம் இறுக்கமாக அமர்ந்து படம் பார்க்கும்போது தரை டிக்கெட் பகுதியில் கொண்டாட்ட மயமாக இருக்கும். அதுபோல டெக்கில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், வியாபாரிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்குள் பயண நேரத்திற்குள் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார்களாம்.

ரஜூலா போக்குவரத்து காரணமாக நாகப்பட்டினத்தில் அந்திக்கடை என்ற சந்தை பிரபலமாக இருந்தது. சென்னையின் பர்மா பஜார் போன்றது. சாக்லேட்டுகள், சிகரெட்டுகள், சிறிய ட்ரான்ஸிஸ்டர்கள் உட்பட நம்மவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் பல வெளிநாட்டு பொருட்கள் அந்திக்கடையில் விற்பனையாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவை ஜப்பான் கைப்பற்றியது. அந்த சமயத்தில் பர்மாவை மீட்கும் பொறுப்பு லார்ட் மவுண்ட் பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது கடற்படைக்காக ரஜூலாவை பர்மாவிற்கு வரவழைத்துக்கொண்டார். அது மருத்துவ கப்பலாக செயல்பட்டது.

ரஜூலாவை பழுதாகாத கப்பல் என்று அன்றைய காலகட்டத்தில் சொல்வார்கள். 1966ல் ஏற்பட்ட புயலையும் பேரலைகளையும் தாக்கு பிடித்தது ரஜூலா. ‘ரங்கத்’ என்ற பெயரில் சிலகாலம் ஓடிய ரஜூலா இறுதியாக 1974ம் ஆண்டு மஹாராஷ்திர கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

அனேகன் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சி அது. மேலோட்டமாக பார்த்தால், அந்த காட்சிக்கு கப்பலை பற்றிய டீடெயிலிங் தேவையே இல்லை. எனினும், ரஜூலாவையும், ரஜூலாவிற்கும் பர்மாவுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுகூர்ந்து அதனை காட்சிப்படுத்திய படக்குழுவினரை வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவிய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 February 2015

அனேகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

அனேகனை பொறுத்தவரையில் முதல் ஈர்ப்பு தங்கமாரி பாடல். தனுஷுக்கு மட்டும் எப்படி சென்சேஷனல் ஹிட்ஸ் அமைகின்றன ? அதற்காக படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, சில நாட்கள் முன்பு வரை. ட்ரைலரை பார்த்தால் ஏதோ ஃபேண்டஸி இத்யாதிகள் இருக்கும் போல தோன்றியது. அங்கே தான் சரண்டர் ஆகிவிட்டேன்.

வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் (ஒரே ஜோடியின்) காதல் கதைகள். காதல் என்றதும் எல்லா படங்களிலும் செய்வது தானே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது வேற லெவல். என்னைக் கேட்டால் இங்கேயே நிறுத்திக்கொண்டு திரையரங்கிற்கு செல்வது உத்தமம் என்பேன். மற்றவர்கள் தொடர்க.

தனுஷுக்கு தன்னுடைய பன்திறனை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜஸ்ட் லைக் தட் அஸால்ட் பண்ணியிருக்கிறார். குறிப்பாக காளி கதாபாத்திரம்.

அமைராவை முதலில் பார்க்கும்போது சவசவ என்று ஒரு மாதிரியாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஒரு அழகான குழந்தை போல நம் மடியில் வந்து சமத்தாக அமர்ந்துகொள்கிறார்.

அமைராவை விடுங்கள். ஐஸ்வர்யா என்று ஒருவர் நடித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் ‘தேவன் மகிமை’ என்பார்களே, அது என்னவென்று உணர்ந்துகொண்டேன். முன்னவர் சாத்வீகம் என்றால் இவர் ப்ரச்சோதகம். சங்க இலக்கிய வர்ணனைகளுக்கு ஒப்பான புருவங்கள், கூரான மூக்கு, வரைந்து வைத்த ஓவியம் போன்ற வசீகரமான முகம். தென்னக சினிமாவுக்கு ஒரு பிபாஷா கிடைத்துவிட்டார்.

கார்த்திக் ஒரு MNCயின் பாஸ் என்கிற வகையில் தோரணையாக நடித்திருக்கிறார், ஆனால் வில்லனாக கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கிறார். ஜகன் போன்ற ஆட்களை ஏனோ தமிழ் சினிமா தொடர்ந்து வீணடிக்கிறது. சும்மா உல்லுல்லாயிக்கு இரண்டு பழைய வில்லன் நடிகர்கள்.

அனேகனுடைய பெரும்பான்மையான பாராட்டுகள் சுபாவிற்கு. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் கதையை வில்லென வளைத்திருக்கிறார்கள். எவ்வளவு டீடெயிலிங் ? அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்தின் துவக்கத்திலேயே சுபாவிடமிருந்து இரண்டு அட்டகாசமான கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய வர வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.

தங்கமாரி பாடல் பார்வையாளர்களை ஒரு தெய்வீகநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அனேக மக்கள் இந்த ஒரு பாடலுக்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி தரைக்குத்து பாடலை இசைத்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எனக்கென்னவோ இது மரணகானா விஜிக்கு போகவேண்டிய க்ரெடிட்ஸ் என்று தோன்றுகிறது. கூடவே பாடலை பாடிய மற்றவர்களுக்கும், எழுதியவர்களுக்கும். எல்லா பாடல்களும் தரமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஆத்தாடி ஆத்தாடி பாடலில் பவதாரணியின் குரல் இதமளிக்கிறது. ஒரு தெளிவான நீரோடையை போல நிதானமாக இருக்கிறது தெய்வங்கள் இங்கே பாடல். அது மட்டுமில்லாமல் விஷுவலில் விர்ச்சுவலாக பர்மாவை பார்த்த பரவசம் கிடைக்கிறது. YOLO பாடல் வேறு வகையான விஷுவல் பரவசம். ஒன்றிரண்டு ஷாட்டுகளில் வந்தால் கூட ஐஸ்வர்யாவின் விளைவுகள் செம ஹாட்.

முதலில் படத்தின் குறைகள். பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் தர்க்க ரீதியாக நிறைய கேள்விகள் எழுப்பலாம் தான். ஃபேண்டஸி படம் என்பதால் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.

சமீப படங்களில் டுஸ்டுகள் எளிதில் யூகிக்கக்கூடிய வண்ணம் இருந்தது இல்லையா ? அந்த விஷயத்தில் அனேகன் ஆறுதலாக இருக்கிறது. குருஜி கொடுத்த டேப்லட், ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருக்கும் மாமா கேரக்டர் என்று நம்மை சாமர்த்தியமாக திசை திருப்பிவிட்டு டுஸ்டு கொடுத்திருக்கிறார்கள்.

புனைவு என்ற வார்த்தைக்கு ஒரு அட்டகாசமான உதாரணமாக வெளிவந்திருக்கிறது அனேகன். பர்மாவிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையும் கற்பனையும் கலந்த கச்சிதமான காக்டெயில் அது. அனேகனில் உள்ள ஒரு வசதி. கதையை நமக்கு பிடித்தமான பர்ஸப்ஷனில் புரிந்துக்கொள்ளலாம். மறு ஜென்மம் குறித்த கதையாகவும் நம்பலாம். அல்லது ELOPOMINE என்கிற மாத்திரையால் ஏற்பட்ட மனக்குறைபாடு என்றும் புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் காளி – கல்யாணி கதை தவிர்த்து மற்றவை (முருகப்பா, இளமாறன்) வெறுமனே கதாநாயகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கதையில் பங்கெடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு பல கதவுகளை திறந்து வைத்து காத்திருக்கிறது அனேகன்.

மற்றொரு வசதி, ஒரு தேர்ந்த நாவலில் வருவது போல ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள் கதாசிரியர்கள். பர்மா அரசியல், எஸ்.எஸ்.ரஜூலா, மிங்குன் பகோடா (6174 நினைவிருக்கிறதா ?), அமைராவின் டேபிளில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், தலைவாசல் விஜய் வரைந்துக் கொண்டிருக்கும் ஓவியம் இப்படி நிறைய. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேடித் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். தரை லோக்கல் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது காளி எபிசோட்.. ஹை-டெக் ஆட்களுக்கு கேமிங் அலுவலக காட்சிகள். பாடல்கள், ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், க்ளாஸ், மாஸ். சுருங்கச் சொல்வதென்றால் ஃபுல் மீல்ஸ்.

தமிழில் எல்லாம் இதுமாதிரி படங்கள் வராதா என்று ஏங்குபவர்களுக்கு செமத்தியாக வந்திருக்கிறது அனேகன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 February 2015

என்னை அறிந்தால்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

பரமசிவன் காலத்திலிருந்து அஜித்தின் எல்லா படங்களையும் FDFS பார்த்துவிடும் பரம விசிறி. இந்தமுறை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கே, இங்கேயென்று அலைந்து கடைசியில் படம் பார்க்க முடியாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு ஆபத்பாந்தவர் எக்ஸ்ட்ரா டிக்கெட்டோடு வந்தார். அவருக்கு நன்றி கூறி துவங்குகிறேன்.

கதையை பொறுத்தவரையில் ஐ படத்திற்கு எழுதியதையே டிட்டோ போட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இணையத்தில் வெளியான அதே கதை தான். பழைய கதையும் கூட. அதனாலேயே சஸ்பென்ஸ், ட்விஸ்ட் போன்ற பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை.

சமீப படங்களில் கூலர்ஸ், நடை, பஞ்ச் வசனம் என்றே பார்த்துப் பழகிய அஜித் சற்றே (சற்று தான்) வேறுபட்டிருக்கிறார். இன்னொரு பெரிய ஆறுதல் துணை நடிகர்கள் அஜித்துக்கு முகஸ்துதி போடும் காட்சிகள் வைக்காதது. அஜித் – அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் பது மலர்ச்சியாக இருக்கிறது.

அருண் விஜய்யின் பாத்திர படைப்பில் இன்னொரு டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. பழைய படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் நான்கைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து வசைமொழி பேசுவார்கள். வில்லன் நடிகர்களை பொறுத்தவரையில் வசை தான் பாராட்டு என்று கொள்ளலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார் அருண் விஜய். அஜித்தை மிஞ்சியிருக்கிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். வே டூ கோ அருண் விஜய் !

பேரிளம்பெண் என்ற பதத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய இரு கதாநாயகிகள். கெளதம் மேனனின் கேமரா வழியாக பார்க்கும்போது மட்டும் ஒரு சுற்று கூடுதல் அழகியாக தெரிகிறார் த்ரிஷா. அனுஷ்கா அந்தோ பரிதாபம். சிகையலங்காரம் வேறு சகிக்கவில்லை. 

பேபி அனிகா செம க்யூட். பாந்தமாக முகத்தை வைத்திருப்பது ஒருவித அழகு என்றால், சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல் அதைவிட அழகு. அனிகாவிடம் அனுஷ்காவை பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைக்கும்போது “Of course, அப்பா” என்று ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அது க்யூட்நெஸ்ஸின் உச்சம்.

ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போன்ற வேடத்தில் நடித்திருக்கும் விவேக்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும் நாசரின் வேடம் நேர்த்தியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டு இறக்கிறார். பார்வதி நாயர் வேடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்; நடிகைகளுக்கா பஞ்சம்.

திரைக்கதை சூத்திரங்களில் முக்கியமானதாக ‘SHOW, DON’T TELL’ என்ற விதியை சொல்வார்கள். ஆனால் இயக்குநர் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்பு அதையே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லும் மேஜர் சுந்தர்ராஜன் போல இரண்டையும் செய்கிறார். செய்கிறார் என்றால் செய்துகொண்டே இருக்கிறார். இது சில இடங்களில் ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தாலும்கூட ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துவிடுகிறது.

அதாரு உதாரு, மாயா பஸார் பாடல்கள் ரிப்பீட் மோட் வகையறா. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் மின்னல்கள். வடிவேலு, விவேக் பேசிய நகைச்சுவை வசனங்களை சீரியஸான காட்சிகளில் அஜித் பேசுகிறார். அப்படியும் நமக்கு வேடிக்கையாக தோன்றா வகையில் காட்சியாக்கியிருக்கின்றனர்.

அஜித், த்ரிஷா, அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. பெண்கள் விரும்பக்கூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் அருண் விஜய்க்கும் இடையே நடைபெறும் அந்த சேஸ், நிஜமாகவே நகம் கடிக்க வைக்கும் சிலிர்ப்பான நிமிடங்கள். திரைக்கதைக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு யாருடைய படமாக இருந்தாலும் எப்படியும் சுபம் தான் போடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஈவு இரக்கமில்லாமல் மாயாவையே சாகடித்த இயக்குநர் என்பதாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

வழக்கமாக சினிமா ரசிகர்கள் ஏதோ ஒன்று தெறிக்குது, தெறிக்குது என்பார்களே அது இந்த படத்தில் குறைவாகவே தெறித்திருக்கிறது. சரி, critically acclaimed படமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. படத்தில் வரும் ஒரு வசனத்தின் பாணியிலேயே சொல்வதென்றால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் மாஸ், அந்தப்பக்கம் க்ளாஸ். இரண்டிற்கும் இடையே என்னை அறிந்தால்.

அஜித் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து கொஞ்சூண்டு எட்டிப் பார்த்திருக்கிறார். அவர் அதனை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும். ஆனால் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை நினைக்கும்போது அவர் மறுபடியும் அதே வட்டத்திற்குள்ளேயே சென்று அடைந்துகொள்வார் என்றே உறுதியாகக் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment