1 November 2019

கோவா – நிறைவு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – தெற்கின் அழகு

கோவா பயணத்தின் கடைசி நாள் வந்தது. இறுதிக்கட்டம் என்றாலே சொதப்பலாக அமையும் என்பது எழுதப்படாத விதி. 

முந்தைய இரவில் டெஸ்மாண்ட்ஜி என்னும் அரக்கனை கொன்று வீழ்த்திய களைப்பில் கொஞ்சம் அயர்ந்துவிட்டோம். மாலையில் தான் விமானம் என்பதால் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் கடைசி நாளுக்காக இரண்டு கடற்கரைகளையும், கடற்படை அருங்காட்சியகத்தையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நம் ஆட்கள் சாவகாசமாகக் கிளம்பி, ஷாப்பிங் ப்ளான் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது போய் நான் அருங்காட்சியகம் செல்ல வேண்டுமென்று சொன்னால் உதைப்பார்கள். அதனால் எனது ஆசையை புதைத்துக் கொண்டேன். 

ஷாப்பிங் பற்றி எங்கள் ஐரோப்பிய விடுதி உரிமையாளரை விசாரித்தோம். அவர் பிக்-ஜி (BIG G)  என்ற வளாகத்தைப் பற்றி சொன்னார். பயணித்தோம். இம்முறை தெற்கிலிருந்து மத்திய கோவாவிற்கு. இறுதியில் அந்த பிக்-ஜி மால் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. கோவா என்றில்லை. மதுரையோ, கோவையோ, பொள்ளாச்சியோ எங்கு சென்றாலும் இவர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸைத் தான் மால் என்கிறார்கள். அதை இவர்கள் உறுதியாக நம்பவும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கோவா விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம்
பின் வாஸ்கோவில் உள்ள சின்னச் சின்ன தெருக்களில் இறுதிநேர ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து விமான நிலையம் சென்றோம். விமான நிலையம் டாபோலிம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. வாஸ்கோவிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. கோவா விமான நிலையத்தின் கட்டமைப்பு அப்படியே சென்னை விமான நிலையத்தை நினைவூட்டுகிறது. உள்நாடு, வெளிநாடு பயணங்களுக்கு ஒருங்கிணைந்த நிலையம். நிறைய ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விமானங்கள் ஸீஸன் சமயங்களில் மட்டும் கோவாவுக்கு வந்து செல்கின்றன. 

ரஷ்யா என்றதும் சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. எப்படி போர்த்துகேயர்களுக்கும் கோவாவுக்கும் ஒரு இணைபிரியா தொடர்பு உள்ளதோ அதே போல ரஷ்யர்களுக்கும் கோவாவுக்கும் உள்ளது. கோவாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை லிட்டில் ரஷ்யா / மினி மாஸ்கோ என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யர்கள் இப்பகுதியில் வந்து மாதக்கணக்கில் தங்கிவிட்டு போகிறார்கள். இப்பகுதிகளில் உணவகத்தின் பெயர் பலகைகள், மென்யூ கார்டு எல்லாம் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. 

அப்படியென்ன ரஷ்யர்களுக்கு கோவாவின் மீது காதல் ? நிறைய காரணங்களை பட்டியலிடுகிறார்கள். அதில் முக்கியமான காரணம் தட்பவெப்பம். ரஷ்யாவில் குளிர்காலம் என்பது கொடூரமானது. அக்டோபர் துவங்கி ஏப்ரல் மே வரை ரஷ்யாவின் தட்பநிலை மைனஸ் முப்பத்தைந்துக்கும் கீழ் செல்கிறது. சில பகுதிகளில் இது மைனஸ் அறுபது, எழுபது வரை செல்கிறது. சில அயல்தேசப் பறவைகள் வருடாவருடம் சீஸன் சமயத்தில் நம்மூர் வேடந்தாங்கலைத் தேடி வருவது போல இவர்களும் குளிர் தாளாமல் கோவா வந்துவிடுகிறார்கள். 

அத்தனை குளிரில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இந்திய வெய்யில் எப்படி இருக்கும் ! நேரே கடற்கரைக்கு வந்து பிகினியில் படுத்துவிடுகிறார்கள். ஒரு வகையில் இவர்களின் வருகையும், தாராள கவர்ச்சியும் தான் கோவாவிற்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை தருகிறது.

வேறெங்கோ செல்லாமல் குறிப்பாக கோவாவுக்கு ஏன் வருகிறார்கள் என்றால் இங்கு செலவு குறைவு என்பதும், இங்கே செக்ஸ், போதை போன்ற விஷயங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதே காரணம். இத்தனைக்கும் அவ்வப்போது ரஷ்ய பயணிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும், கொலை செய்யப்படுவதும், பணம் ஏமாற்றப்படுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

லிட்டில் ரஷ்யாவில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். நாங்கள் வடக்கு கோவாவில் தங்கியிருந்த விடுதி வரவேற்பறையில் ஒரு பெரிய அலமாரி முழுக்க புத்தகங்கள் கேட்பாரின்றி கிடந்தது. நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்று புரட்ட ஆரம்பித்தேன். அலமாரி முழுக்க புரட்டிப் பார்த்துவிட்டேன். அத்தனையும் ரஷ்ய புத்தகங்கள். குறிப்பாக நிறைய விண்வெளி சம்பந்தப்பட்ட அறிவியல் புனைவுகள் என்று அட்டைப்படங்களை வைத்து உணர முடிந்தது. ஒரு பக்கம் அந்த அட்டைப்படங்கள் ஈர்க்கிறது. இன்னொரு பக்கம் ரஷ்யமொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அது ஒரு அவஸ்தை.கடைசியில் ஒரேயொரு ஆங்கில புத்தகம் கேரளா மற்றும் கோவா பற்றிய டிராவல் கைடு அது மட்டும் ஆங்கிலத்தில் கிடைத்தது.

போர்த்துகீஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள், சோவியத் கூட்டுறவு நாடுகள் போன்ற தொடர்புகளால் கோவாவில் ஒரு முக்கியமான மாற்றத்தை காண முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் பெரும்பான்மை மதம், சச்சின் விருப்ப தெய்வம். ஆனால் கோவாவில் கால்பந்தின் மீதுதான் மக்களுக்கு காதல். 2016ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கோப்பையை போர்ச்சுகல் கைப்பற்றியபோது அதனை கோவா கொண்டாடித் தீர்த்தது என்கிறது ஒரு குறிப்பு. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கிளப் வைத்து கால்பந்து ஆடிய பெருமை கோவாவுக்கு உண்டு. ஐ.பி.எல் பாணியில் கால்பந்திற்கென இந்திய பிரிமியர் லீக் துவங்கப்பட்டபோது கிரிக்கெட்டில் பட்டியலில் கூட இல்லாத கோவாவிற்கு தனி ஃப்ராஞ்சைஸ் கொடுக்கப்பட்டது.

கோவா விமான நிலைய ரன்வே
அரக்கப் பறக்கச் சென்று கடைசியில் விமான நிலையத்தில் நீண்ட நேர காத்திருப்பின் பிறகு எங்கள் விமானம் புறப்படத் தயாரானது. இந்தியாவின் அபாயகரமான ரன்வேக்களில் கோவாவும் ஒன்று. அரபிக்கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் பார் என்று நம்மை பயமுறுத்திவிட்டு பறக்கத் துவங்குகிறது விமானம். 

ஒரு பந்தக்காலில் துவங்கிய நீண்ட பயணம் இன்னொரு பந்தக்காலில் வந்து நிறைவடைகிறது. 

விமானம் சென்னை வந்திறங்கியது !

அடுத்து வருவது: கோவா – சில தகவல்கள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 October 2019

கோவா – தெற்கின் அழகு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – மிதக்கும் கஸினோ

கோவா தொடரில் மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின் முதல் பகுதியின் சுட்டி தொடக்கம்.

இதுவரை கோவாவின் பிரதான அடையாளங்களான கர்லீஸ், டிட்டோஸ் லேன், கஸினோ போன்றவற்றை பார்த்தோம். இக்கட்டுரையில் முற்றிலும் வேறொரு கோவாவை பார்க்கப்போகிறோம். தெற்கு கோவா !

கோவா தொடர் முதல் பகுதியில் வடக்கு கொண்டாட்டம், தெற்கு அமைதி என்று எழுதியிருந்தேன். கோவாவில் வடக்கு, தெற்கு என்பது ரஹ்மான். ராஜா போன்ற இரு துருவங்கள், முறையே. முதலாவது துவண்டு போயிருக்கும் மனிதனை துள்ளி எழுந்து ஆட வைக்கும் என்றால், இரண்டாவது அம்மனிதனை அரவணைத்து ஆறுதல்படுத்தும். இதை ஏன் வெகு குறிப்பாக ரஹ்மான், ராஜாவோடு ஒப்பிடுகிறேன் என்றால் ரஹ்மானின் இசையும் சமயங்களில் ஆறுதல்படுத்தும். போலவே ராஜாவின் இசையும் உற்சாகமூட்டும். ஆனால் இருவரது இசையின் பிரதான குணமும் முதலில் சொன்னதுதான். கோவாவும் அதுமாதிரி தான். வடக்கில் அமைதியான கடற்கரைகளும் உண்டு. தெற்கில் கொண்டாட்டமான கடற்கரைகளும் உண்டு.

நாங்கள் முதலிரு தினங்களை வடக்கில் களித்துவிட்டு, தெற்கை நோக்கி பயணித்தோம். பஞ்சிம் நகரத்தைக் கடந்ததும் ஆரவாரங்கள் குறைந்து தெற்கின் ஆதிக்கம் துவங்குகிறது. தெற்கின் அழகை புரியும்படி உதாரணத்தோடு சொல்ல வேண்டுமென்றால் ‘தெறி – ஈனா மீனா டீக்கா’ பாடலைப் பாருங்கள். கதைப்படி கேரளா என்று சொல்லப்பட்டாலும் இந்தப்பாடலின் பெரும்பகுதி தெற்கு கோவாவில் தான் படமாக்கப்பட்டுள்ளது. குறுகிய அகலம் கொண்ட நீண்ட சாலைகள், இருமருங்கிலும் சீரான இடைவெளியில் தென்னை மரங்கள், இடையிடையே சிற்றூர்கள், போர்த்துக்கேய கட்டிடமுறையில் கட்டிய வீடுகள் என்று ரம்மியமாக வரவேற்கிறது தெற்கு. 

தெற்கு கோவாவின் சாலைகள்
பொதுவாக தெற்கு கோவா ஒரு ஃபீல் குட் பகுதி. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு தெற்கு ஒரு மன உளைச்சலைத் தந்தது. ஒரு வெறுமை உணர்வு. பள்ளிப்பருவத்தில் வெள்ளி மாலை துவங்கி இரு தினங்கள் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்துவிட்டு ஞாயிறு மாலை இருளத்துவங்கியதும் மனதில் ஒரு மென்சோகம் சூழும் இல்லையா ? அதுதான் எனக்கு ஏற்பட்டது. அதுவும் நாங்கள் வடக்கிலிருந்து தெற்கு பயணிக்கும் போது வழியில் மத்திய கோவாவில் அமைந்துள்ள தேவாலயம், அருங்காட்சியகம் எல்லாம் பார்த்து களைத்திருந்தோம். தெற்கில் போய்தான் உணவு என்று மதியம் சாப்பிடக்கூட இல்லை. ஆளரவமற்ற சாலைகள். தெற்கு கோவாவை சென்றடையும் போது மாலை நான்கு மணி. பிற்பகலின் இளவெயில் வேறு, 'நான் கிளம்புகிறேன்' என்று சதாய்க்கும் புதுக்காதலியைப் போல வாட்டியது. இவையெல்லாம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது எனது தனிப்பட்ட உணர்வு. அநேகமாக மற்றவர்களுக்கு தெற்கு கோவா மகிழ்வான உணர்வையே கொடுக்கும் என்று நம்புகிறேன்.

கோல்வா கடற்கரை
ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதால் அறைக்கு செல்வதற்கு முன்பு நல்ல பீச் ஒன்றிற்கு சென்று மதிய உணவை முடித்துவிடலாம் என்று முடிவானது. கோல்வா கடற்கரையைச் சென்றடைந்தோம். இக்கடற்கரை மர்கோவா ரயில் நிலையத்திலிருந்து நேர்க்கோட்டில், ஒப்பீட்டளவில் மிக அருகிலிருப்பதால் வந்திறங்கி, “நேரா பீச்சுக்கு வண்டியை விடுப்பா” என்பவர்கள் இங்குதான் வருகிறார்கள். பெரியப் பெரிய ‘ரக்ஸாக்’ பைகளை சுமந்தபடி சுற்றும் பயணிகளை இங்கு பார்க்கலாம். வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கின்றன. கடைத்தெரு உள்ளது. கடற்கரை மணலில் நடந்தபடி உணவகங்களைப் பார்வையிட்டோம். ஒவ்வொரு உணவகத்தின் வாயிலிலும் பணியாளர் ஒருவர் நின்று நடந்து செல்பவர்களை அழைத்தபடி இருந்தனர். ஒரு உணவகத்தை கடக்கும்போது மட்டும் தமிழ்க்குரல் எங்களை அழைத்தது. தெற்கிலிருந்து ஒரு குரல் ! அங்கே அடைக்கலமானோம். கோவாவின் அடையாள பியரான கிங்ஸ் பருகியபடி மதிய உணவை முடித்துவிட்டு, விடுதியை நோக்கி பயணித்தோம்.

அதற்கு முன் கோவா – போர்த்துகீஸ் இடையே உள்ள உறவு பற்றி ஒரு சிறுகுறிப்பு. 1498ம் ஆண்டு, போர்த்துகேய பயணி வாஸ்கோடகாமா இந்தியாவை அடையும் கடல் வழியைக் கண்டுபிடித்து கேரள மாநிலம், கோழிக்கோடை வந்தடைந்தார். அதுமுதல் போர்த்துகேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வணிகம் துவங்கிற்று. குறிப்பாக இந்தியாவின் மிளகு, லவங்கம், கிராம்பு போன்றவற்றை இங்கிருந்து ஏற்றுமதி செய்தனர். இவற்றிற்குண்டான மருத்துவ குணங்களை கண்டுணர்ந்திருந்த போர்த்துகேயர்கள் அவற்றை தங்கம், வெள்ளியை விட மதிப்பாகக் கருதினர். அதற்கு மாற்றாக அங்கிருந்து ஆடைகள், வெள்ளி, செம்பு பாத்திரங்களை இறக்குமதி செய்தனர். 

வணிகப் போக்குவரத்து வழக்கமாகி ஒரு கட்டத்தில் போர்த்துகேயர்கள் தங்கள் முகாமிற்கு தோதான இடமாகக் கருதிய கோவாவில் கால் பதித்தனர். அப்போது கோவா முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது. கோவாவை படையெடுத்த போர்த்துகேயர்கள் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் திம்மய்யா உதவியுடன் போரில் வென்று கோவாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்பிறகு நான்கரை நூற்றாண்டுகள் கோவாவில் போர்த்துகேயர்கள் ஆட்சி தொடர்ந்தது, இந்திய விடுதலையின் பிறகும் கூட. 1961ம் ஆண்டு இந்திய அரசு ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் கோவாவை மீட்டெடுத்தது. இந்திய ஆட்சியின் கீழ் வந்த பிறகு கோவாவின் பழைய தடயங்களை மாற்றி அதனை ஒரு சுற்றுலா தலமாக அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தை வடக்கு ஏற்றுக்கொண்டாலும் தெற்கு மட்டும் இன்னமும் விடாப்பிடியாக அதன் பழைய அடையாளங்களைக் கொண்டுள்ளது. தெற்கிற்கு எப்போதும் அந்தக் குணம் உண்டு !

கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது. இன்னமும் கோவாவில் போர்த்துகேய தாத்தாக்களும், மாமாக்களும் சின்னதாக ஒயின்ஷாப்போ, ஹோட்டலோ, ஹோம் ஸ்டேயோ வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். போர்த்துகேயர்கள் மட்டுமல்லாமல் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பல ஐரோப்பிய நாட்டினர் இங்கு வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். இந்த ஐரோப்பியர்களுக்கு இந்தியர்கள் என்றால் ஏதோவொரு ஒவ்வாமை இருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் கோவா பயணத்தில் ஒருநாள் தெற்கு கோவாவின் தெருக்கள் வழியாக ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தோம். மேப்பில் பாதையைத் தேடுகையில் கவனம் பிசகி ஸ்கூட்டர் தெருவோர கால்வாயில் லேண்டாகி இருவரும் கீழே விழுந்தோம். சத்தம் கேட்டு தெருவில் வசிக்கும் ஐரோப்பியர்கள் பலர் வெளியே வந்தனர். வந்து வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட எங்களையும் ஸ்கூட்டரையும் தூக்கவோ, உதவி செய்யவோ இல்லை. 

ஹோட்டல் செக்-இன் இன்னொரு படி மேல். டோனா ஸா மரியா (Dona Sa Maria) என்ற விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தோம். தெற்கு கோவாவில் கார்மோனா என்ற சிற்றூரில் ஒதுக்குபுறமாக அமைந்திருந்தது அந்த விடுதி. உரிமையாளர் ஒரு இத்தாலியர். எங்களைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. தயங்கித் தயங்கி எங்களை அழைத்து, தனக்கும் மேக் மை ட்ரிப்புக்கும் ஏதோ பஞ்சாயத்து இருப்பதாகவும், அதனால் அதன்மூலம் பதிவு செய்பவர்களைத் தன்னால் தங்க வைக்க முடியாது என்றும் கூறினார். மாற்றாக அருகில் அவரது நண்பருடைய ஹோம் ஸ்டே ஒன்றில் தங்க வைப்பதாகக் கூறினார். அதே சமயம் அங்கே வந்த வெளிநாட்டு இணையருக்கு அறை ஒதுக்குவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். 

விடுதி (மிச்செட்'ஸ் ஹோம் ஸ்டே)
அப்போது நாங்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தோம். அவருடன் வாதம் செய்யும் அளவிற்கு தெம்பில்லை. அதனால் அவர் அழைத்துச் சென்ற ஹோம் ஸ்டேவில் தஞ்சமடைந்தோம்.

கார்மோனா கடற்கரை
ஒரு இரவு முழுக்க கஸினோவில் ஆட்டம் போட்ட களைப்பில், தெற்கு கோவாவின் பகல் பொழுதை தூக்கத்திடம் பறிகொடுத்தோம். எஞ்சியிருந்த ஒரு இரவை டக்கீலாவிடம். கடைசியாக எங்கள் ஹோம் ஸ்டேயில் இருந்து நடை தூரத்தில் அமைந்திருந்த கார்மோனா கடற்கரைக்கு சென்றோம். நீளமான கடற்கரை. துவக்கத்தில் நான்கைந்து குடில் உணவகங்கள். அவற்றைத் தாண்டி ஆளரவமற்ற, சுத்தமான, அமைதியான கடற்கரை. ஒரு கொண்டாட்டமான சினிமாவைப் பார்த்து முடித்தபிறகு அமைதியாக ஸ்க்ரால் ஆகும் எண்ட் க்ரெடிட்ஸ் போல அமைந்திருந்தது அது !

படங்கள்: இணையம்

அடுத்து வருவது: கோவா - நிறைவு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 June 2019

கோவா – மிதக்கும் கஸினோ

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோக்கள் உள்ளன. தோராயமாக பதினைந்து என்று அறிகிறேன். அவற்றில் சில மட்டும் மண்டோவி நதியில் மிதந்தபடி உள்ளன. மற்றவை நிலப்பகுதியில். சூதாட்டத்தில் பெரிய ஆர்வமில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கஸினோக்களின் கிக்கே அவை தண்ணீரில் மிதக்கின்றன என்பதும் நாம் அங்கே தண்ணீரில் மிதக்கலாம் என்பதும்தான். அதனால் எங்கள் வரைவுத் திட்டத்தில் மிதக்கும் கஸினோக்களை மட்டும் கணக்கில் கொண்டோம்.

அது ஏன் கஸினோக்கள் மிதக்கின்றன என்பதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. இந்தியாவின் PUBLIC GAMBLING ACTன் படி சூதாட்டத்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை. ஆனால் எல்லா சட்டத்திலும் ஒரு லூப்ஹோல் இருக்குமில்லையா ? அதன்படி இந்திய ‘மண்ணில்’ சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமயோஜிதமாக இதனை பயன்படுத்தி 1999ம் ஆண்டு, மண்டோவி நதியில் கப்பலில் மிதக்கும் கஸினோ துவங்கப்பட்டது. அதே சமயம் விரைவிலேயே கோவாவின் மண்ணிலும் கஸினோக்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. 

மிதக்கும் கஸினோக்களை பொறுத்தவரையில் இரு பெரும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை பரப்பி வைத்திருக்கின்றன. முதலாவது கஸினோ ப்ரைட் குரூப். இவர்கள் சார்பாக கஸினோ ப்ரைட் மற்றும் கஸினோ ப்ரைட் 2 ஆகிய இரண்டு கப்பல்கள் இயங்குகின்றன. இரண்டாவது, டெல்டின் குரூப். இவர்கள் சார்பாக டெல்டின் ராயல், டெல்டின் ஜாக் மற்றும் டெல்டின் கேரவெல்லா ஆகிய கப்பல்கள் இயங்குகின்றன. 

நாங்கள் யாரும் இதுவரை கோவாவுக்கும் சென்றதில்லை, கஸினோவுக்கும் சென்றதில்லை என்பதால் எங்களுக்கு அது குறித்து நிறைய சந்தேகங்களும், தயக்கங்களும் இருந்தன. நேரக் கட்டுப்பாடு உள்ளதா, உணவும் மதுவும் டிக்கட் விலையில் அடக்கமா, சூதாடாமல் உணவுக்காகவும் மதுவுக்காகவும் செல்லலாமா, சூதாடாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் இலவச மது கிடைக்குமா, சூதில் ஜெயித்தால் பணம் கொடுப்பார்களா இப்படி நிறைய சில்லறை சந்தேகங்கள். பார்த்துப் பார்த்து அலசினோம். சில கேள்விகளுக்கு இணையத்தில் கூட தெளிவான பதில்கள் இல்லை. விலையைப் பொறுத்தவரையில் கஸினோ ப்ரைட் குரூப்பின் இரு கப்பல்களிலும் வார நாட்களில் ரூ.1500, வார இறுதியில் ரூ.2000, டெல்டின் குரூப் கப்பல்களில் ரூ.2500 முதல் ரூ.3500 வரை இருந்தன. கஸினோ ப்ரைட் கப்பல்கள் பற்றி பயணிகளின் விமர்சனக் குறிப்புகள் மோசமாகவே இருந்தன. கூட்டமாக இருக்கும், பயணிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்று நிறைய பேர் எழுதியிருந்தார்கள். நாங்களும் இருப்பதிலேயே குறைவான கட்டணம் கொண்ட கஸினோவைத் தேடிச் செல்ல விரும்பவில்லை. ஒற்றைமுறை அனுபவம் தானே ! அதனால் டெல்டின் குரூப்பில் உள்ள டெல்டின் ராயல் கஸினோவிற்கு செல்வதென்று தீர்மானித்திருந்தோம். இருப்பினும் நேரடியாக டெஸ்கிற்கு சென்று கூடுதல் சந்தேகங்களைக் கேட்க வேண்டும் என்றும் நினைத்திருந்தோம்.

இந்த மிதக்கும் கஸினோக்கள் அனைத்தும் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு செல்லும் பாதையில் தான் அமைந்துள்ளன. அதனால் அவற்றைக் கடந்து செல்லும் போதே விசாரித்துவிடலாம் என்று சென்றோம். விசாரணையின்போது எங்கள் பட்டியலிலேயே இல்லாத ஆடைக்கட்டுப்பாடு என்கிற புதிய விதியை தெரிந்துக்கொண்டோம். பொதுவாக க்ளப்களில் உள்ள விதிகள்தான். 

டெல்டின் குரூப் என்பதை ஒரு மனதாக தீர்மானித்துவிட்டோம். ஆனால் டெல்டின் ராயலா அல்லது கேரவெல்லாவா என்று குழப்பமாக இருந்தது. இரண்டிலும் டிக்கட் விலை அதே ரூ.3000. கொஞ்ச நேரம் வெளியே நின்று கண்காணித்தோம். வருகிற கூட்டம் பெரும்பாலும் டெல்டின் ராயலையே தேர்வு செய்தனர். கேரவெல்லா பக்கம் யாரும் ஒதுங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் எனது உள்ளுணர்வோ கேரவேல்லா பக்கம் ஒதுங்கியது. இந்த மொத்தக் கூட்டமும் ராயலுக்குப் போய் கும்மியடிக்கும், நசநசவென்று அவர்களுக்கு மத்தியில் இருப்பதை விட, தனியாக கேரவெல்லாவிற்கு போய்விடலாமே என்பது என் எண்ணம். எதற்கு குழம்புவானேன் என்று நேரடியாக டெல்டின் குரூப் வரவேற்பு மேஜைக்கு சென்று, சுற்றி வளைக்காமல் ஒரு முக்கியமான கேள்வியை நேரடியாக முன்வைத்தோம். அந்த கேள்வி – நாங்கள் முதல்முறை கஸினோவுக்கு வருகிறோம். எங்களுக்கு கஸினோ பற்றி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் வெளியிலிருந்து கவனித்தபோது பெரும்பாலானோர் டெல்டின் ராயலையே தேர்வு செய்கிறார்கள். இரண்டும் உங்களுடைய கஸினோக்கள், இரண்டுக்கும் ஒரே கட்டணம் என்று அறிகிறோம். இரண்டுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம் ?. அதற்கு வரவேற்பு மேஜையிலிருந்த சிப்பந்தி கூறிய பதிலின் சாராம்சம் என்னவென்றால் டெல்டின் ராயலில் ஆட்டம், பாட்டம், சினிமா பாட்டு என்று கொண்டாட்டமாக இருக்கும். கொள்ளளவு அதிகம். அதே சமயம் டெல்டின் கேரவேல்லாவில் டான்ஸ், சினிமா பாட்டு எல்லாம் இல்லாமல் லைவ் மியூஸிக் மட்டும் இருக்கும். கொள்ளளவு குறைவு. பொதுவாக குழுவாக வருபவர்கள் டெல்டின் ராயலைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றார். அவர் சொன்னதில் இருந்து சுருக்கமாக டெல்டின் ராயல் – மாஸ், டெல்டின் கேரவெல்லா – கிளாஸ் என்று புரிந்துகொண்டோம். இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு, நீங்கள் டெல்டின் ராயலைத் தானே தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றார் சிப்பந்தி. நாங்கள் இல்லை என்றோம். கிட்டத்தட்ட படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூலர்ஸைக் கழட்ட, ரஜினி கூலர்ஸை மாட்டும் காட்சிக்கு இணையான கெத்தான தருணம் அது !

அன்றிரவு கிட்டத்தட்ட ஒன்பது மணியளவில் கஸினோவுக்கு சென்றோம். முடிந்தால் விடியும்வரை அங்கேயே நேரம் செலவிட வேண்டும் என்று திட்டம். கட்டணம் ரூ.3000. OTPC எனும் ஒருமுறை மட்டும் விளையாடக்கூடிய டோக்கன் ரூ.5000 மதிப்புக்கு டிக்கட்டுடன் தருகிறார்கள். இதனை பணமாக்க முடியாது. சிப்பந்தி ஒருவர் கப்பலுக்கு தகவல் கொடுக்க, நம்மை அழைத்துச் செல்வதற்காக ஒரு சிறிய படகு வருகிறது. சில நிமிடப் பயணம். மீன்வடிவ கப்பலில் கஸினோ இயங்குகிறது. கப்பலின் நுழைவாயிலிலும் நம்மை வரவேற்பதற்காக சிப்பந்திகள் காத்திருக்கிறார்கள். ராயலான வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். கீழ் தளம் சூதாட்டக்கூடம். மேல்தளம் உணவகம். இடையில் உள்ள இரு தளங்கள் சூட் அறைகள். வெளியூரிலிருந்து வரும் வி.ஐ.பி. சூதாடிகள் இங்கேயே அறை எடுத்துத் தங்கி சூதாடுவார்கள் என்று கேள்வி. உணவகம் நள்ளிரவு இரண்டு மணிக்கு மூடப்பட்டு விடும் என்று விசாரித்து வைத்திருந்ததால் நேராக மேலடுக்கில் உள்ள உணவகத்திற்கு சென்றோம். கண்ணாடியில் மூடப்பட்ட ஒரு அறை, திறந்தவெளி என்று இரண்டு பகுதியாக அமைந்திருந்தது. கூட்டம் அதிகமில்லை. கண்ணாடி அறையில் ஒரு வெள்ளைக்காரர் ஹிந்தியில் சிதார் என்று சொல்லப்படக்கூடிய ஒரு இசைக்கருவியை மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க ஒரு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார்கள். திறந்தவெளியில் யாருமில்லை. நாங்கள் திறந்தவெளியை ஆக்கிரமித்துக்கொண்டோம். அளவில்லா உணவும், மதுவும். சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், பிரதான உணவு, உப உணவு என்று கலவையாக ஒரு இருபது ஐட்டம் கொண்ட மெனு தருகிறார்கள். அவற்றில் நமக்கு எது வேண்டுமோ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், எவ்வளவு வேண்டுமென்றாலும். உணவே இப்படி என்றால் மது வேற லெவல். உள்நாடு வெளிநாடு பாரபட்சமில்லாமல் அத்தனையும் நுழைவு கட்டணத்திற்குள் உட்பட்டது. இதுபோக மாக்டெயில், காக்டெயில், ப்ரீஸர் என்று அத்தனையும். 

மேல்தளம்
பகட்டான ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு சில்லறைத்தனமாக சரக்கடித்து மட்டையாகும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் நிதானமாகவே நடந்துகொண்டோம். இட்லிய சாம்பார்ல பெனஞ்சு அடிடா லெவலுக்கெல்லாம் இறங்காமல் மெதுவாக சாப்பிட்டோம். அதே சமயம் நிறைவாகவும். கிட்டத்தட்ட இரவு ஒன்பதரை மணிக்கு தொடங்கிய ஆட்டம், இரண்டு மணிக்கு உணவகம் மூடும் சமயம்தான் முடிவுக்கு வந்தது. அதுவரை பொறுமையாக உண்டும், குடித்தும் தீர்த்தோம்.

உண்மையில் அதுவரையில் எங்களுக்கு சூதாடும் எண்ணம் இல்லை. ஏனென்றால் எங்களுக்கு சூதுவாது தெரியாது. இருந்தாலும் விடியும் வரை நேரம் செலவிட வேண்டும் (ஹைவேயில் இருட்டில், போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க) என்பதாலும், OTPCயை காலி செய்ய வேண்டும் என்பதாலும் சூதாட்டத் தளத்திற்கு சென்றோம். சுற்றி பத்து, பதினைந்து மேஜைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விளையாட்டு, மற்றும் அதனை சொல்லித்தரவும், கண்டக்ட் செய்யவும் வடகிழக்கு யுவதிகள். அங்கேயும் சிப்பந்திகள் மது மற்றும் மது அல்லாத பானங்களை செர்வ் செய்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் மூவர் என்பதால் மொத்தம் 15000 ரூபாய்க்கு டோக்கன் கைவசம் இருந்தது. அங்கே இருப்பதிலேயே ஒரு எளிய விளையாட்டைக் கண்டுபிடித்தோம். எங்களிடம் உள்ள டோக்கன் வைத்து சில ஆட்டம் விளையாடுவோம், அதில் ஒன்றிரண்டு வெல்வோம், அப்புறம் வந்து ஓரமாக உட்கார்ந்து ப்ரீஸர் குடிப்போம். இப்படியே அதிகாலை ஐந்து மணிவரை விளையாடிக்கொண்டிருந்தோம். இறுதியில் ரூ.10500 வென்றிருந்தோம். இங்கே ஒரு விஷயம், பொதுவாக சூதில் பணம் வெல்பவர்கள் அதனை சூதிலேயே முழுக்க தொலைத்துவிட்டு தான் வீடு போய் சேர்வார்கள். (விதிவிலக்குகள் உண்டு). நாங்கள் அப்படி வென்ற பணத்தை, அங்கேயே தொலைக்காமல் உடனடியாக கவுண்ட்டருக்கு சென்று அதனை பணமாக மாற்றிக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம். ஆக, டிக்கட் கட்டணம் மூவருக்கும் சேர்த்து ரூ.9000, வென்ற தொகை – ரூ.10500. ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம் மற்றும் ஒரு இரவு முழுக்க உணவு, மது, கேளிக்கை அத்தனையும் இலவசம் ! ஒருவேளை நாங்கள் அந்த பணத்தை வென்றிருக்காவிட்டால் கூட உணவுக்கும், மதுவுக்கும், அங்கே கிடைக்கும் ரம்மியமான அனுபவத்திற்கும் மூன்றாயிரம் ரூபாய் வொர்த்து !

பொதுவாக கஸினோ பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் :-

- 21 வயதிற்குட்பட்டவர்கள் அனுமதி இல்லை.
- டிக்கட் வாங்கும்போது புகைப்படத்துடன் கூடிய அரசாங்க அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
- டிக்கட் விலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் கஸினோவைப் பொறுத்து ரூபாய் ஆயிரத்து ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை ஆகிறது. வார இறுதியில் வார நாட்களை விட ஐநூறு கட்டணம் அதிகம்.
- கண்டிப்பான டிரஸ் கோட் உண்டு. ஷார்ட்ஸ், பெர்முடாஸ், ஸ்லீவ்லெஸ், ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்ஸ் அனுமதி இல்லை. ஷூ கட்டாயம்.
- லக்கேஜ், முதுகுப்பை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவற்றை வெளியே வரவேற்பறையில் வைத்திருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் ஒரு பைக்கு ரூ.500 கட்டணம்.
- நேரக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து, எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் ஒருமுறை வெளியேறிவிட்டால் டிக்கட் காலாவதியாகிவிடும்.
- அளவில்லா உணவும், மதுவும் டிக்கட் கட்டணத்திற்கு உட்பட்டது.
- உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்றாலும் உணவகப் பகுதியில் இதனை அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

எங்களுடைய கோவா பயணத்தில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்த இடமென்றால் அது கஸினோதான். குறிப்பாக, கேரவெல்லா அல்லாமல் வேறு கஸினோவைத் தேர்ந்தெடுத்திருந்தால் இவ்வளவு நல்ல அனுபவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கோவா செல்லும் அனைவரும் ஒருமுறையாவது கஸினோ செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை. அடுத்த கட்டுரையில் கோவாவின் இன்னொரு முகமான தெற்கு கோவாவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

அடுத்து வருவது: கோவா - தெற்கின் அழகு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 June 2019

பிரபா ஒயின்ஷாப் – 17062019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் ஒயின்ஷாப் எழுத, சிந்திக்க இணக்கமான சூழல் அமையாததால் கடந்த வாரம் ஒயின்ஷாப் வெளியாகவில்லை. ப்ச்... திங்கட்கிழமைக்கும் ஒயின்ஷாப்பிற்கும் உள்ள மரபு உடைந்ததில் கொஞ்சம் வருத்தம்.

********************

ஒரு சிறிய கதையுடன் (சிறுகதை ?) இவ்வார ஒயின்ஷாப்பை துவங்கலாம். 

ஒரு பதின்பருவ பெண். அவளது அம்மா இறந்துவிட்டார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சித்தியை அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் தனது அப்பா மற்றும் சித்தியுடன் புதுவீட்டில் குடியேறுகிறாள். ஆனால் புதுவீட்டில் நடக்கும் சில வினோத சம்பவங்கள் அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. கீழ் தளத்தில் இருக்கும்போது மேல் தளத்தில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது. இவர்கள் வெளியே போய்விட்டு வரும்போது வீட்டிற்குள் யாரோ வந்துபோன தடயங்கள் தெரிகின்றன. உச்சகட்டமாக ஒருநாள் அவள் உடை மாற்றுகையில் யாரோ ஒருவன் அவளை வீட்டிற்குள் மறைந்திருந்து பார்ப்பதை உணர்கிறாள். உடனே தன் அப்பாவிடம் சென்று முறையிடுகிறாள். அப்பாவும் சித்தியும் இதுகுறித்து ஆலோசிக்கிறார்கள். மகளுக்கு புதுவீடு பிடிக்காததால் தான் இப்படியெல்லாம் புகார் சொல்கிறாள் என்று முடிவுக்கு வருகிறார்கள். 

வினோத நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த வீட்டில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் மகள் வீட்டைப் பற்றியும், அங்கே இதற்கு முன்பு குடியிருந்தவர்களைப் பற்றியும் பக்கத்து வீடுகளில் விசாரிக்கிறாள். அந்த வீட்டில் இதற்கு முன்பு ஒரு கணவன், மனைவி அவர்களது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவர்கள் ஒருநாள் மர்மமான முறையில் இறந்துபோனதாகவும் தெரிந்துகொள்கிறாள். வீடு திரும்பியதும் வீட்டிலுள்ள பழைய ஸ்டோர் ரூமில் இதற்கு முன் குடியிருந்தவர்களுடைய சில பொருட்கள் இறைந்து கிடப்பதை கவனிக்கிறாள். அதிலிருந்த ஒரு குடும்ப புகைப்படத்தை பார்க்கிறாள். அக்கம் பக்கத்து வீடுகளில் சொன்ன கணவன், மனைவி, மகள் குடும்பம். அவளது பயம் அதிகமாகிவிடுகிறது. அதே வீட்டில், அதே போல குடும்பமாக வசிக்கும் இவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைக்கிறாள். அதே சமயம் அப்பாவிடமும், சித்தியிடமும் எப்படி புரிய வைப்பது என்று தவிக்கிறாள். அவளுக்கு அந்த சிரமம் ஏற்படாமல், அடுத்தடுத்த வினோத அனுபவங்கள் அப்பாவுக்கும், சித்திக்குமே ஏற்படுகின்றன. அவர்களுக்கோ பக்கத்து வீட்டிலுள்ள வினோதமான ஆசாமியின் மீது சந்தேகம். அவனது பார்வையே சரியில்லை என்கிறாள் சித்தி. அப்பா மின்னணு பூட்டு இயந்திரங்களை நிறுவி வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். இனி எந்த பயமும் இல்லையென ஆசுவாசம் அடைகிறார்கள்.

ஒருநாள் அப்பாவும், சித்தியும் வெளியூர் சென்றிருக்க மகள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள். அத்தருணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள விழையும் மகள் அவளது காதலனை வீட்டிற்கு விளையாட அழைக்கிறாள். அப்பா, அம்மா விளையாட்டு ! பாவம், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த காரணத்தினால் அவர்களை ஒருவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சுற்று சுமூகமாக முடிந்து அடுத்த சுற்றுக்காக அவர்கள் காத்திருக்கும் வேளையில் அப்பாவும், சித்தியும் வந்துவிடுகிறார்கள். அவசர அவசரமாக காதலனை அலமாரியில் மறைந்துகொள்ளச் சொல்கிறாள். அப்பாவும், சித்தியும் வந்திருந்து கொஞ்ச நேரம் கழித்து அவர்களுடைய அறைக்கு சென்றுவிடுகிறார்கள். மகள் தனது அறைக்கு விரைந்து அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். காதலனைக் காணவில்லை. புத்திசாலி காதலன், கிடைத்த சமயத்தில் சாமர்த்தியமாக வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டான் என்று நினைக்கிறாள். ஆனால் உண்மையில் காதலன் அங்கிருந்து கிளம்பியிருக்கவில்லை.

ஒரு இரண்டு, மூன்று நாள் கழித்து காதலனிடம் இருந்து எந்த குறுந்தகவலோ, அழைப்போ வராததால் அவனை போனில் அழைக்கிறாள். இப்போது அழைப்பு மணி அவளது அலமாரியில் ஒலிக்கிறது. ஒருவேளை அலைபேசியை அலமாரியிலேயே மறந்திருப்பானோ என்று நினைத்துக்கொண்டே மெல்ல அலமாரியைத் திறந்தால் காதலனின் பிணம் உள்ளேயிருந்து சரிந்து விழுகிறது ! போலீஸுக்கு தகவல் சொல்லப்படுகிறது. போலீஸ் அந்த குடும்பத்தையே சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறது. அப்பாவும், சித்தியும் வேறு மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். பிரச்சனை தீரும்வரை மகளை வீட்டுச்சிறையில் வைக்க முடிவு செய்து ஸ்டோர் ரூமுக்குள் தள்ளி கதவைப் பூட்டி விடுகிறார்கள். அங்கே அவளுக்கு ஒரு மருத்துவ கோப்பு கிடைக்கிறது. ஒரு பதின்பருவ இளைஞனின் மனநோய் பற்றிய குறிப்பு அது. அவனை பீடித்திருக்கும் அந்த மன நோயின் பெயர் – AGORAPHOBIA ! அதாவது வீட்டிலிருந்து வெளியே செல்வது குறித்த அதீத பயம். அந்த மருத்துவ கோப்பில் இளைஞனின் தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதற்கு முன் அந்த வீட்டில் குடியிருந்த குடும்பத் தலைவனின் பெயர் என்று அக்கம் பக்கத்தினர் சொன்னது நினைவுக்கு வந்து போகிறது. அவளுக்குள் ஏதோவொரு புதிர் விடுபட்டது போல தோன்றியது. முன்பொரு முறை அந்த ஸ்டோர் ரூமில் பார்த்த குடும்ப புகைப்படத்தை தேடியெடுத்து அதனை உற்று நோக்குகிறாள். வீட்டின் முன்புறம் கணவன், மனைவி, மகள் மூவரும் சிரித்தபடி போஸ் கொடுக்க, பின்னால் வீட்டின் ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஒரு முகம் தெரிந்தது. புகைப்படத்தில் அந்த முகத்தை கவனித்த வேளையில், அந்த அறையில் அவள் மட்டும் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள் ! முற்றும்.

********************

மேலே எழுதியிருப்பது 2016ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான வித்தின் (WITHIN) என்கிற படக்கதையின் சாரம். அதாவது அப்படத்தின் கதையை கொஞ்சம் முன்னும், பின்னும் மாற்றி, இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில விஷயங்களை மாற்றி எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யமாக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழில் எடுப்பதற்கான அம்சங்கள் பொருத்தமாக இருந்தாலும் கூட ஒரு முக்கியமான லாஜிக் இடிக்கிறது. அது – CRAWLSPACE. சில மேலை நாட்டு கட்டிட முறைகளில் ஒரு தளத்திற்கும் மற்றொரு தளத்திற்கும் இடையே சுமார் ஒரு அடி உயரத்தில் இடத்தை விட்டு வைப்பார்களாம். மின்சரடுகள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டுவர இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்வார்களாம். கதைப்படி நம் சைக்கோ நாயகன் இந்த இடைவெளியில் தான் ஒளிந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த CRAWLSPACE (தமிழில் தவழ்வெளி என்று வைத்துக் கொள்ளலாமா ?) ஒரு பெரிய டாபிக். இந்த ஒயின்ஷாப் தாங்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் படத்தில் சொல்லப்படும் தவழ்வெளி சம்பவம் வெறும் கதைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் அல்ல. மெக்ஸிகோவில் கடுமையான பஞ்சம் நிலவிய சமயத்தில் அங்கே வீடற்ற பல மனிதர்கள் இம்மாதிரி தவழ்வெளிகளில் மறைந்திருந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நவீன உலகில் நடைபெற்ற இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை RANKER மற்றும் LISTVERSE போன்ற தளங்கள் பட்டியலிட்டுள்ளன. இவையெல்லாம் பிஸார். சுவாரஸ்யத்துக்காக கற்பனை கலந்து தயாரிக்கப்பட்ட பட்டியல் என்று கூட நினைக்கலாம்.

கைது செய்யப்பட்டவர்
அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அண்மைச்செய்தி – அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தில் தனது பதினான்கு வயது மகளின் அறைக்கு மேலிருக்கும் இடைவெளியில் ஒரு மனிதன் வசிப்பதாக மகளின் தாயார் புகார் அளித்து அந்த ஆளை கைது செய்திருக்கிறார்கள். அந்த மனிதன் அந்த பதினான்கு வயது பெண்ணின் முன்னாள் காதலன் என்பது உபரித்தகவல்.

சரி, இப்போது WITHIN படத்தை தமிழில் யார் எடுக்கப் போகிறீர்கள். CRAWLSPACE என்பதை வேண்டுமானால் ஸ்டோர் ரூம் அல்லது அலமாரியின் பின்னால் மறைந்திருக்கும் ரகசிய அறை என்று மாற்றிக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment