26 December 2020

வர்கலா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம் 

வர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.
 
முதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அணுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.

வாடகை சைக்கிள்
இரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.

வர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1
குன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2
அடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1
பாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது. 
 
பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2
ஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார். 
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment