30 November 2011

ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஞாநி என்னுடைய மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆனந்த விகடனில் வெளிவந்த கண்ணகி சிலை – கரடி பொம்மை கட்டுரையில் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு வாசிக்க ஆரம்பித்தேன். திடீரென ஒருநாள் எனக்கு இன்ப அதிர்ச்சி. நண்பரின் நண்பர் மூலமாக ஞாநியின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு பக்கத்தில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது மறக்க முடியாத நிகழ்வு. அடுத்த ஒருவாரத்திற்கு ஒருவித பரவச நிலையிலே தான் இருந்தேன். இன்றும் எனது மொபைலில் அந்த போட்டோவை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் அவரைப் பற்றி சிலாகிப்பதை அவரே கூட விரும்பமாட்டார். அதுதான் ஞாநி.

அன்பே சிவம் படத்தில் கமல் மண்சோறு சாப்பிடும் பக்தனை மடக்கி, மண்ணும் கடவுள் சோறும் கடவுள் ரெண்டையும் ஏன் குழைச்சு அடிக்கிறன்னு கேக்குற மாதிரி, புத்தக சந்தையில் தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ஒரு இளைஞனை மடக்கி நானும் மனிதன், நீயும் மனிதன். என்னிடம் ஏன் ஆட்டோகிராப் வாங்குற....? என்று கேட்டார். ஒருவேளை அந்த இளைஞன் அவரிடம் அன்று ஆட்டோகிராப் கேட்காமல் இருந்திருந்தால் அவருடைய கேள்வி எனக்கானதாக இருந்திருக்கும். ஏனென்றால் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கையெழுத்து கேட்கலாமா என்று தயங்கியபடியே அருகில் நின்றிருந்தவன் அடியேன்தான்.

சரி, Coming to the matter. ஞாநி சமீபத்தில் எழுதிய ஒய் திஸ் கொலவெறி...? இடுகையிலிருந்து ஒரு பத்தி:
“இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். அருண், அகல்யா, ஷோபா லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும்...!”

தொடர்ந்து இந்த இடுகையை படிக்க படிக்க யாரோ என் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவது போலிருந்தது. காரணம் – இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒய் திஸ் கொலவெறி...? பாடலை ரிப்பீட் மோடில் வைத்து கேட்டுக்கொண்டிருப்பதாக என்னுடைய பதிவொன்றில் சிலாகித்திருந்தேன். ஞாநியின் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும். (ஞாநியின் தளத்தில் லாகின் செய்தால் மட்டுமே படிக்க முடியும் என்பதால் வடக்குப்பட்டி ராம்சாமி லிங்க்). இதை படித்ததும் எனக்கு என்ன கேட்க தோன்றியதோ அதையே வாசகர் ஒருவர் கேள்வி கேட்க, அந்த கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தால் நான் என்ன பதில் சொல்லியிருப்பேனோ அதே பதிலை வ.ராம்சாமியும் சொல்லியிருந்தார்.

மேட்டர் இதுதான். எனக்கு அந்த பாடலை பிடித்திருக்கிறது. நான் ரசிக்கிறேன். நாளைக்கு வேறு புதிய பாடல் வந்ததும் இதை மறந்துவிட்டு அதை கேட்பேன். அவ்வளவே. மற்றபடி இந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்த சென்ட்டிமென்ட்டும் கிடையாது, நானும் தனுஷும் ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் கிடையாது. இந்தப்பாடலை ரசிக்கும் பெருவாரியான இளைஞர்களின் கருத்தும் இதுவே. இதை ஏன் ஞாநி இவ்வளவு சீரியஸா சொல்றாரு என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அந்தாளுக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு அவங்களோட கலெக்டர் வேலையை கண்டின்யூ பண்ண போயிடுறாங்க.

பாடலை வெறும் பாடலாக எடுத்துக்கொண்டு கடந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அடித்தட்டு ரசிகர்களின் மனது அப்படி இருப்பதில்லை. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை எனது பதிவுகளில் வேதனை பட்டிருப்பேன். என்னுடைய தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள் என்ற இடுகையின் சாரமே இதுதான். இதே கருத்தை ஞாநி தன்னுடைய கட்டுரையிலும் வலியுறுத்தியிருக்கிறார். இதுபோன்ற பாடல்கள், படங்களை கடக்கும் அடித்தட்டு ரசிகர்கள், தனுஷை மாதிரியே அப்பா, அம்மாவை எதிர்த்து பேசுகிறார்கள், பெண்களை கேவலப்படுத்துகிறார்கள், பொறுக்கித்தனம் செய்கிறார்கள், குடித்து சீரழிகிறார்கள். தனுஷ் நிஜவாழ்க்கையில் அவருடைய அப்பாவின் பேச்சை கேட்டு முன்னுக்கு வந்துவிடுவது பாவம் ரசிகனுக்கு தெரிவதில்லை.

இங்கே தனுஷ் என்று குறிப்பிட்டிருப்பது தனுஷ் மட்டுமல்ல. எல்லா மாஸ் ஹீரோக்களும் தான்.
****************************************************
அடுத்ததும் தனுஷ் நடித்த ஒரு படத்தைப் பற்றிதான்.

மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதில் நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நிகர் யாருமில்லை. அதாவது, தன் வீட்டில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துக்கொண்டு கருப்பு பணத்தின் தீமைகளை பற்றி படம் எடுப்பார்கள் (ஷங்கரின் சிவாஜி), தான் காப்பி அடித்து படம் எடுத்துவிட்டு காப்பி அடிக்கும் இயக்குனர்களை கிண்டலடிப்பார்கள் (கே.வி.ஆனந்த் – அயன், கோ). இப்போது அந்த வரிசையில் Plagiarism (அறிவுதிருட்டு) பற்றிய ஒரு படத்தை எடுத்திருப்பவர் செல்வராகவன் ஆச்சர்யக்குறி.

நிற்க... இதுவரைக்கும் செல்வராகவன் காப்பியடித்து படமெடுப்பவர் என்று நான் நினைக்கவில்லை. சில பதிவர்களும் பின்னூட்டவாதிகளும் மயக்கம் என்ன படம் “A Beautiful Mind” படத்தின் காப்பி என்று சொல்கிறார்கள். நான் இதுவரைக்கும் அந்த “Beautiful Mind” படத்தை பார்க்கவில்லை. இயக்குனரின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் காட்சிகள் கூட பல படங்களில் இருந்து உருவப்பட்டதாக கூறினர். என்னுடைய தனிப்பட்ட கருத்து, செல்வராகவன் Comparatively Better. கிகுஜிரோவை பிரதி எடுத்த மிஷ்கின், ஐயாம் சாமை காப்பியடித்த இயக்குனர் விஜய் போன்றவர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் புத்திசாலி திருடன்தான் செல்வராகவன்.

ஒரே படத்தில் திருடாமல் பல படங்களில் இருந்து பல காட்சிகளை திருடுவது. சந்தேகமே இல்லாமல் செல்வராகவன் ஒரு புத்திசாலி தான். ஆனால் யோக்கியனா...? Coming back to ஞாநி. ஞாநி அவருடைய அயோக்கியர்களும் முட்டாள்களும் என்ற புத்தகத்தில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் புத்திசாலிகள், ஆனால் அயோக்கியர்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் நல்லவர்களாக இருப்பினும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். இதே “அயோக்கியன்-முட்டாள்” சொல்லாடலைத்தான் என்னுடைய கோ படம் பற்றிய கோபமான இடுகையில் பயன்படுத்தியிருந்தேன். அதை தவறாக புரிந்துக்கொண்ட நண்பர்கள் சிலர் யாரை முட்டாள் என்று சொல்கிறாய் என்று கோபம் காட்டினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்த செல்வராகவன், காப்பியடிக்கும் இயக்குனர்களுக்கு காயடியுங்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதுதான் இந்த கோபத்திற்கு காரணம். ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்திருந்த சமயம் நான் காப்பியடிப்பதாக நிரூபித்தால் சினிமா எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன் என்று சவால் விட்டவர். திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கொண்டு இருந்திருக்கலாம். What a beautiful mind...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 November 2011

பிரபா ஒயின்ஷாப் – 28112011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பிரபா ஒயின்ஷாப் - இருபாத்தி நாண்கு மனிநேரம் முப்பத்திநாளு நிமிடங்கால் தாம்தமகா... (சரி விடுங்க... சும்மா முயற்சி பண்ணி பார்த்தேன்... நம்மளால எல்லாம் முடியாதுப்பா...)

சமீபத்தில் “கருங்காலி” என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. ரொம்பவும் மோசமான ஒரு கதைக்களன். வக்கிரமான ஒரு காட்சியில் பெண்ணினத்தையே கேவலப்படுத்தியிருந்தார் இயக்குனர். (அவ்வளவு நல்லவனாடா நீ என்று கேட்காதீர்கள்). நானும் பிட்டுப்படங்கள் பார்க்கும் ஒரு சராசரி இளைஞன்தான். ஆனால் “தாய்மார்களின் பேராதரவுடன்”, “பெண்கள் பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம்” போன்ற அடைமொழிகளோடு வெளிவந்த கருங்காலி படத்தில் ஏனிந்த வக்கிரம் என்பதுதான் என்னுடைய கோபம். இரண்டரை மணிநேர படத்தில் இல்லாத நாதாரித்தனங்களை காட்டிவிட்டு கடைசியில் இப்படி எல்லாம் செய்யக்கூடாதுன்னு பாடம் நடத்துறது அயோக்கியத்தனம்.
நீதி: நல்லவங்கள நம்பலாம்... (என்னை மாதிரி) கெட்டவங்கள கூட நம்பலாம்... ஆனால் நல்லவங்க மாதிரி நடிக்கிற கெட்டவங்கள மட்டும் நம்பவே நம்பாதீங்க...!

உங்க வீட்ல எல்லாம் குருமா எதை வச்சி செய்யுவாங்க...? பாகிஸ்தானில் ஒருத்தங்க வீட்டில் புருஷன் குருமா செஞ்சிருக்கார். புருஷன் குருமா செய்றது சகஜம்தானே அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா அந்த வீட்டு பெண்மணி புருஷனையே கொலை செய்து குருமா செய்திருக்கிறார். ஜைனப் என்ற பாகிஸ்தான் பெண்மணி தன்னுடைய முதல் கணவனுக்கு பிறந்த பதின்ம வயது மகளுடனும் இரண்டாவது கணவனுடனும் வாழ்ந்து வந்திருக்கிறார். குடிகார கணவன் அவருடைய மகளிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட மனைவி கணவனை கொன்றுவிட்டு பின்னர் பிணத்தை அப்புறப்படுத்த வழி தெரியாமல் குருமா செய்திருக்கிறார். (இந்த செய்தியில் தவறு கணவனின் மீதா...? மனைவியின் மீதா...? நீங்களே சொல்லுங்கள்)

மயக்கம் என்ன படம் பார்த்தபோது திரையரங்கில் வரிசையாக ட்ரைலர்களின் அணிவகுப்பு. போராளி, ராஜபாட்டை, ஒஸ்தி, நண்பன், 3 என்று ட்ரைலர் மட்டுமே பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஓடியது. நண்பன் பட ட்ரைலர் பார்க்கும்போது சத்யராஜ் கேரக்டருக்காகவே படம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. மூன்று பட ட்ரைலரில் ஸ்ருதி ஹாசனை ஸ்கூல் பொண்ணு மாதிரி காட்டினார்கள். சரி ஏதோ துள்ளுவதோ இளமை காட்சி ஒன்றினை ஸ்பூப் செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சீரியஸாகவே பள்ளிக்கூட மாணவியாம். (ஒய் திஸ் கொலவெறி...?) எல்லா படத்துக்கும் ட்ரைலரெல்லாம் நல்லாத்தான் இருக்கு. படம்தான் ம்ஹூம்.

சென்ற வாரம் அலுவலகத்தில் பெரிய தல ஒருத்தர், என்ன தம்பி நக்மாவை பத்தி ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க என்றார். எனக்கு தூக்கி வாரிபோட்டது. இன்னொருத்தர் சிறுகதை முயற்சியை படித்ததாக சொன்னார். இப்படியே போனால் கூடிய விரைவில் தெருவில் நிற்க வேண்டி வரும் என்பதால் இத்தோடு ஆபீஸ் அளப்பறைகள் ஸ்டாப். பழைய ஆபீஸில் பணிபுரிந்தபொது இப்படித்தான் டீம் லீடரை நக்கலடித்து ஒரு பதிவு போட, செய்தி காட்டுத்தீயாக பரவி டீம் லீடரின் காதிற்கு எட்டிவிட்டது. அப்புறம் டீம் லீடருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி சமாதானம் செய்ய வேண்டியதாக போய்விட்டது.

ஜொள்ளு:
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது...! மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது...!!
ட்வீட் எடு கொண்டாடு:
Nambiyaaru நம்பியாரு
கருணாநிதியின் அறிக்கைகள் கி.வீரமணி பெயரில் வந்த மாதிரி, ஜெ;-வின் அறிக்கைகள் சரத்குமார் பெயரில் வருகிறது!

arattaigirl sowmya
ஆண் ஆளுமையுடன் துவங்கி அன்பிற்கு அடிமையாகிறான்! பெண் அன்புடன் துவங்கி ஆணை ஆளுமை செய்கிறாள் #காதல்

thoatta ஆல்தோட்டபூபதி
சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறை கற்பனை வறட்சியில் உள்ளதற்கு நல்ல சான்று, குஷ்பூ இட்லி போல இன்னமும் ஹன்சிகா பூரி வராததே.!

thoatta ஆல்தோட்டபூபதி
ஹீரோ ஒரே பாட்டுல பணக்காரனாகிறான்; ஹீரோயின் ஒரே பாட்டுல அம்மா ஆகுறாங்க; தமிழ் சினிமா சோ சிம்பிள் மாமு.!

iamkarki கார்க்கி
அஷ்வின்கிட்டஅவர் மனைவி பாடியது "மாமா. பால் எடுத்துக்கோ.அப்படியே கைலபேட்டையும் எடுத்துக்கோ. ப்பப்பான் ப்பப்பான்..ப்பப்பான்

அறிமுகப்பதிவர்: அகமும் புறமும்
யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...! என்ற பின்நவீனத்துவ இலக்கிய தலைப்பை பார்த்ததுமே கோவாலு... கோவாலு... என்று பயந்துக்கொண்டே தான் உள்ளே நுழைந்தேன். கார்ப்பரேட் சாமியார்கள் பற்றிய இவரது இடுகை சாமான்யர்களும் படிக்கலாம் என்று நம்பிக்கையை வரவழைத்தது. ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்த கதையை எளிமையாக பகிர்ந்திருக்கிறார். ரஜினிக்கும் கமலுக்கும் வயசாயிடுச்சு. இனிமே வயசுக்கு தகுந்த கேரக்டரில் தான் நடிக்கனும்ன்னு சொல்றார். ரஜினி, கமல் ரசிகர்கள் போய் கொஞ்சம் கும்மிட்டு வாங்க.

கேட்ட பாடல்:
தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்தில் கொலைகாரா... கொலைகாரின்னு கொலவெறியில்லாத ஒரு பாடல். இசைக்காக கொஞ்சம் பிடித்தது. பாடல் வரிகளுக்காக ரொம்பவும் பிடித்துவிட்டது.
அனுபவசாலி வைரமுத்து வரிகளில் காமத்துப்பால் பொங்கி வழிகிறது. தலைவி தலைவனைப் பார்த்து “பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா... முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா...” என்று பாடுகிறார். அடுத்த வரியில் “ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சுநாளா தூக்கமில்ல... மீசை வச்ச ஆம்பிளைக்கு மெத்தை வாங்க நேரமில்லை...” இப்படி போகிறது இந்தப்பாடல். வீடியோவாக பார்க்கும்போது அஞ்சலியையும் ரசிக்கலாம். ஆனால் என்ன இயக்குனர் இந்தப்பாடலை மிகவும் ரசனைக்குறைவாக காட்சிபடுத்திவிட்டார்.

பார்த்த காணொளி:
ஹி... ஹி... அமெரிக்க கைக்கூலி “பிரியாணி” புகழ் அஜீத் நடித்த முதல் விளம்பரப்படம்...

ரசித்த புகைப்படம்:
பத்த வச்சிட்டியே பரட்டை...!
தத்துவம்:
“Dont cry because its over, Dont smile because its happened...” – Dr.Seuss

படித்த ஜோக்:
டாக்டர்: உங்களுக்கு தலைவலி இருக்கா...?
நோயாளி: இருக்கு டாக்டர்... வெளியே தான் வெயிட் பண்றா...
(ஃபேஸ்புக்கில் மஸ்கட் மான்குட்டி)

ஃபைனல் கிக்:
தமிழ் சினிமாவையும் ஆயா சென்டிமென்ட்டையும் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் பிரிக்க முடியாது போல... #மயக்கம் என்ன EFFECT

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 November 2011

மயக்கம் என்ன...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய எதிர்பார்ப்பு லிஸ்டில் நீண்ட நாட்களாகவே இருந்த படம். ஆணிகள் காரணமாக கொஞ்சம் தாமதமாகவே பார்க்க முடிந்தது. ராயபுரம் ஐட்ரீம் திரையரங்கில் நேற்று மாலை பார்த்தேன்.

இதுவரைக்கும் படத்தின் கதை என்ன என்று தெரியாதவர்களுக்கு: தனுஷ் ஒரு போட்டோகிராபர். அவர், அவருடைய தங்கை, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குடியும் கும்மாளமுமாக வாழ்ந்து வருகிறார்கள். நண்பனின் பெண் தோழியாக (சரியாத்தான் சொல்றேனா...?) அறிமுகமாகும் ரிச்சா தனுஷிடம் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்து கை பிடிக்கிறார். (கை மட்டும்தான் பிடிக்கிறாரான்னு கேட்கக்கூடாது). தனுஷ் தனது ஆதர்சன போட்டோகிராபரான மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராக சேர முயல்கிறார். ஆனால் அவர் தனுஷை போட்டோவை “காப்பி-பேஸ்ட்” செய்து புகைப்படக்கலையில் உயரிய விருதினை வாங்கிவிடுகிறார். இந்த செய்தியை படித்த அதிர்ச்சியில் தனுஷ் மாடியில் இருந்து கீழே விழுகிறார். அதிர்ச்சியிலும், அடிபட்டதாலும் மனப்பிறழ்வு ஏற்பட்ட தனுஷ் இறுதியில் என்ன ஆனார்...? தனுஷின் மனைவி ரிச்சாவின் நிலை என்ன என்பதே மீதிக்கதை.

தனுஷ் எப்போதும் போலவே அசால்ட்டான கேரக்டர். தண்ணியடித்துவிட்டு புலம்புவது, ஹீரோயினை சகட்டுமேனிக்கு திட்டுவது, காதல் தோல்வி பிலாசபி பேசுவது என தனுஷ் ஒரு இமேஜ் வட்டத்தில் சிக்கிவிட்டார். இப்போதைக்கு இளைஞர்கள் அவரை ரசிக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இதே மாதிரியே நடித்து வந்தால் வேலைக்கு ஆகாது. (அதாவது தனுஷ் நடிப்பை பார்க்க பிடிக்கும். ஆனால் பார்க்க பார்க்க பிடிக்காது) 

ரிச்சாவிற்கு (ஹீரோயினி சர்நேம் என்னன்னு யாராவது கேட்டா கடிச்சு வச்சிடுவேன்) முதல் படத்திலேயே கனமான வேடம். (அதனால தான் க்ளைமாக்ஸுல தனுஷ், இரும்பு மனுஷின்னு சொல்றாரு போல) கொடுத்த கனத்தை தூக்க முயற்சி செய்திருக்கிறார். (Comparatively better) வேறு யாராவதாக இருந்தால் சொதப்பியிருப்பார்கள். அழகைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் மணிஜி சொன்னதுபோல “பொன்னுக்கு வீங்கி” வந்தது மாதிரி இருக்கிறார். சதா கொஞ்சம் சதை போட்டால் இப்படித்தான் இருப்பார். சிரித்தால் நன்றாக இருக்கிறார். ஆனால் படத்தில் சிரிக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஹீரோவின் நண்பர்கள், நண்பிகளாக வருபவர்கள் ஹீரோவை தாங்கோ தாங்கென்று தாங்குகிறார்கள். இந்தமாதிரி நண்பர்கள் நிஜத்தில் எங்கேயாவது இருந்தா சொல்லுங்கப்பா. அந்த நண்பர்கள் குழுவில் பத்மினியாக நடித்திருப்பவர் Selena Gomez மாதிரி செம அழகாக இருக்கிறார். வழக்கமாக ஹீரோயினின் ப்ரெண்ட்லி அப்பாவாக நடிக்கும் அந்த நடிகர் (பெயர் தெரியவில்லை) இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் வேற கதை உள்ளதால் ஹீரோ, ஹீரோயினின் அப்பா அம்மா போன்ற டம்மி பீஸ் கேரக்டர்கள் படத்தில் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தீம் மியூசிக்கில் வரும் கிடார் இசையை சரியான இடத்தில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். “காதல் என் காதல்...” பாடலை படமாக்கிய விதம் செம காமெடி. (சோழ மன்னன குத்தாட்டம் ஆடியதை விட காமெடின்னா பாத்துக்கோங்க). ஆடியோவில் இருந்த “என்னென்ன செய்தோம் இங்கே...” என்ற பாடல் மிஸ்ஸிங். இருந்தாலும் திணிக்கப்பட்டது போல் இருந்திருக்கும். 

ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பணியாற்றிய ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போட்டோகிராபி சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒளிப்பதிவாளருக்கு செம தீனி என்று சொல்லலாம். “ஓட... ஓட...” பாடலின் ஒளியாக்கம் பிரமாதமாக இருந்தது.

இளைஞர்களின் உணர்ச்சியை உசுப்பேற்றுவதில் கில்லாடியான செல்வராகவன் அவர்களுக்கு தகுந்தபடி வசனங்களையும் எழுதி தள்ளியிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினை “திருட்டு மூதேவி, முண்டகலப்பை” என்று திட்டினால் கூட தியேட்டரில் பயங்கர ஆரவாரம். அதே சமயம் நிறைய நல்ல வசனங்களும் இருக்கின்றன. ஹீரோவும் நண்பனும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது தனுஷ் நண்பரிடம் “கேமை ரீஸ்டார்ட் பண்ணு... அப்படியே முடிஞ்சா லைபையும் ரீஸ்டார்ட் பண்ணு...” என்று சொல்லும் வசனம் ஒரு நல்ல உதாரணம். “வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யனும்... இல்லைன்னா செத்துடனும்...” என்ற வசனத்தை ஆட்டோக்களுக்கு பின்னால்கூட எழுதலாம். ஹீரோயினிடம் தனுஷின் நண்பன் தவறாக பேசும்போது, “ஆம்பிளை இல்லையா... அதான்...” என்று சொல்லும்போது அந்த வசனத்தை விட வசனத்திற்கு இடையே கொடுக்கும் இடைவெளி, ஏற்ற இறக்கம் செம ஷார்ப்.

சில காட்சிகள் கொஞ்சம் எல்லை மீறுகின்றன. ஹீரோயினை தனுஷ் நிர்வாணமாக போஸ் கொடுக்கச் சொல்லி அடிக்கும் காட்சி சாட்சி. கர்ப்பிணியாக இருக்கும் ஹீரோயினை கீழே தள்ளிவிட்டு ரத்தம் கொட்டும் காட்சி – இரண்டாவது முறை படம் பார்க்கும்போது உச்சா போகும் சாக்கில் வெளியே வந்துவிட்டேன். படத்தில் ஒன்றிரண்டு விரசமான காட்சிகள் வந்தாலும் செல்வா படம்ன்னாலே இப்படித்தான் என்று சலித்துக்கொள்வது தவறு. 

படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவரவர் செய்கிற வேலையை ரசித்து செய்யச் சொல்லியிருக்கிறார் செல்வராகவன். Plagiarism பற்றி சொல்லியிருக்கிறார்கள். (இதைப் பற்றி நெல்லை நண்பனின் விரிவான விமர்சனம்). இறுதிக்காட்சியில் மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் தனுஷ் Thanks சொல்வது. இதைவிட அவருக்கு மிகப்பெரிய தண்டனை என்ன இருக்க முடியும்.

ஏதோ ஒரு திசையில் குத்துமதிப்பாக போய்க்கொண்டிருக்கும் படம் கடைசி இருபது நிமிடத்தில் ஓவர்நைட் டர்ன் அடிக்கிறது. ஒரு பாட்டுல ஹீரோ பெரிய ஆளாகுற மாதிரி ஒரு குமுதம் அட்டைப்படத்தில் அடிங்.... இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய படம் சராசரி படமாக வெளிவந்திருக்கிறது. ஒரு முறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

27 November 2011

பாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு முறை மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது வலியச்சென்று ஆப்பில் அமர்ந்துக்கொண்டு அய்யய்யோ குத்துதே... குடையுதே... என்று புலம்புவதாலும், அதே சமயம் சில நல்ல படங்களை (தென்மேற்கு பருவக்காற்று, வெங்காயம்) தவற விடுவதாலும் என் மேலேயே எனக்கு ஒரு கோபம் உண்டு. நேற்று வரை இந்த படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்கேயோ ஒரு விளம்பரத்தில் “சங்ககாலத்திற்கு ஒரு பயணம்” என்று வாசித்ததின் விளைவாக திடுமென படம் பார்க்க முடிவு செய்து கிளம்பினேன். தண்டையார்பேட்டை எம்.எம்.திரையரங்கம், சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. மழை வேறு பெய்துக்கொண்டிருந்ததால் சொற்ப நபர்களே வந்திருந்தார்கள். இருப்பினும் வந்திருந்தவர்கள் அனைவருமே எங்கேயோ எப்படியோ படத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் பேசியபோது தெரிந்துக்கொண்டேன்.

மனித இனம் வீடு கட்ட, சமைக்க, ஆடை நெய்ய கற்றுக்கொள்ளாத காலத்தில் அத்தனை பெருமையோடு வீடு கட்டி, ஆடை உடுத்தி, சமைத்து நாகரிகமாக ஆயர்குடி எனும் பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள் தமிழ் பேசும் ஒரு குழு மக்கள். அவர்கள் ஒரு சமயத்தில் வடக்கில் இருந்து (தமிழ் அல்லாத பிறமொழி பேசும்) வந்தேறிகளால் முல்லைக்குடி என்ற பகுதிக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். முல்லைக்குடி பகுதியில் கிடைத்த வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாலை எனும் கொடிய வாழ்வாதார சூழல் வந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. இப்போது ஒன்று கொள்ளையடித்து பிழைக்க வேண்டும், அல்லது இழந்த ஆயர்குடியை மீட்க வேண்டும். இறுதியில் ஆயர்குடியை மீட்பது என்று முடிவாகி போரில் இறங்கும் தமிழர்கள் வென்றார்களா...? என்பதே மீதிக்கதை.

இந்தக்கதையை படித்ததுமே உங்களுக்கு ஒரு இனத்தின் வரலாறு நினைவிற்கு வரக்கூடும். அதை உறுதிப்படுத்தும் விதமாக “அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதன் பிறகு வந்த காட்சியமைப்புகளை, வசனங்களை, போர் தந்திரங்களை அப்படியே வரிவரியாக எழுத வேண்டுமென்று அத்தனை ஆசையாக இருக்கிறது. இருந்தாலும் அதை திரையில் பார்க்கும்போது இன்னும் இன்னும் பரவசப்படுவீர்கள். எனவே தயவு செய்து இந்த படத்தை (தூக்குவதற்கு முன்பு) திரையரங்கிற்கு சென்று பார்க்கவும். திரையரங்குகள் லிஸ்ட்.

பயங்கர ஷார்ப்பான வசனங்கள். “பிழைப்போமா... அழிவோமா... என்று தெரியாது. வாழ்ந்தோம் என்று பதிவு செய்ய விரும்புகிறோம்...” என்ற வசனத்தில் ஆரம்பித்து, “போரில் வெல்ல வீரம் மட்டும் போதுமானதல்ல... சூழ்ச்சியும் அவசியம்...” என்று தொடர்ந்து, “நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள்...” என்று முடிவது வரை நிறைய பளிச் டைப் வசனங்கள். 

இது மட்டுமில்லாமல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள், சமூகநிலை, அவர்களின் காதல், காமம், திருமணம் செய்யும் முறை போன்றவற்றை போகிறபோக்கில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பாலை. 

காஞ்சிவரம் படத்தில் நடித்த ஷம்மு – காயாம்பூ என்ற பெண் போராளி பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் கூட நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல நாயகனாக நடித்திருக்கும் சுனிலும் தன் பங்கிற்கு சிலம்பம் கற்று, ஈட்டி எரியப் பயின்று படத்தில் நடித்திருக்கிறார்.

இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல. அந்த வகையில் இயக்குனர் செந்தமிழன் வெற்றி பெற்றிருக்கிறார். 

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment