31 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 31072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மீண்டும் புத்தகக் காட்சி ! இம்முறை மாதவனின் (ஸ்ரீரங்கம்) பிறழ், ஷான் கருப்பசாமியின் வெட்டாட்டம் உட்பட சில புதிய புத்தகங்கள் வெளியாகியிருந்தன. ஜீவா படைப்பகம் ஸ்டாலில் நண்பர் கார்த்திக் புகழேந்தி கண்ணும் கருத்துமாக சார்ட் பேப்பரில் இருபத்தைந்து சதவிகித தள்ளுபடி (இன்று மட்டும்) என்று எழுதிக்கொண்டிருந்தார். நான் ஏற்கனவே வாங்கிப் படித்து முடித்துவிட்ட சில நல்ல புத்தகங்கள் அதில் இருந்ததை கவனித்தேன்.

ஹாலிடே நியூஸ் என்னும் தமிழ் சுற்றுலா இதழ் சார்பாக ஒரு ஸ்டால் போட்டிருக்கிறார்கள். தமிழில் லோன்லி பிளானெட், அவுட்லுக் டிராவலர் போல ஒரு இதழ் வராதா என்பது எனது நீண்டகால ஏக்கம். ஹாலிடே நியூஸ் அதனை பூர்த்தி செய்துவிடும் போலிருக்கிறது. அட்டகாசமான, வழவழப்பான தாளில், தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடு என்று கலந்துகட்டிய தகவல்களுடன் வருகிறது. 68 பக்கங்கள். விலை ரூ.50. உள்ளே புரட்டினால் கரந்தை ஜெயகுமார், (கடல் பயணங்கள்) சுரேஷ்குமார், (வீடு திரும்பல்) மோகன் குமார் என்று எல்லோரும் நம்மவர்கள். இதழ் குறித்து விசாரித்தேன். மதுரையில் இருந்து வெளிவருகிறது. இது புதிய இதழ் கிடையாது. 2013லேயே தொடங்கப்பட்டு இடையிடையே ப்ரேக் எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு வருடங்களாக சீராக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. ஒரேயொரு இதழின் பிரதிகளை கடை முழுக்க வைத்திருந்தார்கள். பழைய இதழ்கள் ஒன்றுகூட இல்லாதது ஏமாற்றம். சந்தா கட்டுவதற்கு வசதி (எனக்கு) இல்லாததால் அந்த ஒரு இதழை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்பினேன். 

மாசக்கடைசியில் புத்தகக்காட்சி நடாத்துபவர்களுக்கு ஒரு வகையில் சாடிஸ மனோபாவம் இருக்கக்கூடும். நீண்ட நேரம் அரங்கைச் சுற்றி வந்து, அலசி ஆராய்ந்தபிறகு நான்கு புத்தகங்கள் மட்டும்தான் வாங்க முடிந்தது.

1. டாக்ஸி டிரைவர் (சிறுகதைகள்) – ஆனந்த் ராகவ் – கிழக்கு பதிப்பகம்
2. சிவந்த கைகள் (நாவல்) – சுஜாதா – கிழக்கு பதிப்பகம்
3. கனவுராட்டினம் (நாவல்) – மாதவன் ஸ்ரீரங்கம் – யாவரும் பப்ளிஷர்ஸ்
4. கலை உலக சக்ரவர்த்திகள் பாகம் 2 – எஸ்.எம்.உமர் – அல்லயன்ஸ்

கடைசியாக கலை உலக சக்ரவர்த்திகள் வாங்கியபோது கார்டில் பணம் தீர்ந்துபோக, பையில் இருந்த சில்லறைகளை எல்லாம் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டு, இன்டர்வெல் ப்ளாக் ரஜினி போல பரிதாபமாக அரங்கத்தை விட்டு வெளியேறினேன். 

கலை உலக சக்ரவர்த்திகள், குறிப்பாக பாகம் இரண்டு வாங்கியதற்கு ஒரு பின்னணி உண்டு. பழம்பெரும் சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பாவைப் பற்றி முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில் படித்திருக்கிறேன். எம்.கே.தியாகராஜ பாகவதர் காலகட்டத்தில் அவருக்கு இணையாக புகழ் பெற்றிருந்தவர். இருவரும் அக்கால ரஜினி – கமல் மாதிரி. சின்னப்பா பற்றிய எக்ஸ்க்ளுசிவ் புத்தகங்கள் ஏதாவது கிடைக்குமா என்று சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருக்கிறேன். ஒருமுறை பி.யு.சின்னப்பாவின் ஜகதலப்பிரதாபன் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படத்தில் ஒரே ஃப்ரேமில் ஐந்து பி.யு.சின்னப்பாவை காட்டுவார்கள் (அப்போது அதுவே பிரம்மாண்டம்). மற்றபடி பி.யு.சி மீது எனக்கு பெரிய ஆர்வம் என்று சொல்ல முடியாது. இப்போது எம்.ஜி.ஆர், சிவாஜியே விண்டேஜ் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். எம்.கே.டி பற்றி கூட ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் பி.யு.சி பற்றிய விவரங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. காவ்யா பதிப்பக விலைப்பட்டியலில் பி.யு.சி பற்றிய புத்தகமொன்றை பார்த்திருக்கிறேன். கேட்டால் அச்சில் இல்லை என்கிறார்கள். கிடைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களும் காணாமல் போய்விடுவதற்கு முன் அவற்றை வாங்கி ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம். அவ்வளவுதான் !

இந்நூலை எழுதிய கலைமாமணி எஸ்.எம்.உமர், எம்.கே.டி, பி.யு.சி., என்.எஸ்.கே., போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். புத்தகத்திலிருந்து பாகவதர் – சின்னப்பா பற்றிய ஒரு சுவாரஸ்யமான குறிப்பு – ஒருமுறை பாகவதரும், சின்னப்பாவும் ஒரே மேடையில் பங்கேற்றார்கள். காரைக்குடி சண்முக விலாஸ் தியேட்டரில் ‘பவளக்கொடி’ நாடகம். அப்போது சினிமா நடிகர்கள் மீதிருந்த க்ரேஸ் பற்றி சொல்லவே வேண்டாம். கட்டுக்கடங்காத கூட்டம். அர்ஜுனனாக பாகவதர் ஒரு பாடலைப் பாடிக்கொண்டு மேடையில் தோன்றினார். பாடல் முடியும் வரை மக்கள் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். அப்படியொரு வரவேற்பு. கிருஷ்ணர் வேடமிட்டு தயார் நிலையில் இருந்த சின்னப்பாவிற்கு பாகவதரை மீறி ரசிகர்களை திருப்தி படுத்த முடியுமா என்று நம்பிக்கை தளர்ந்துவிட்டது. ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு மேடையில் தோன்றி பாடினார் சின்னப்பா. மக்கள் ரசித்து, கைதட்டினார்கள். ஆனால் பாகவதர் அளவுக்கு இல்லை. சின்னப்பாவும் விடுவதாக இல்லை. அர்ஜுனனை விஷ வண்டு கடித்து மரணமடைந்ததாக வரும் காட்சியில் மாயப்பெண் உருவில் வந்து மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்துப் பாடி அழுது புரண்டு அமர்க்களப்படுத்திவிட்டார் சின்னப்பா. ரசிகர்களின் கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது. தியாகராஜ பாகவதரும் இதை இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை. உள்ளே வந்தபின் கட்டித்தழுவி அபாரம் என்று பாராட்டினார்.

மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குடும்பத்துடன் வந்திருக்கும் அந்தப்பெண், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அம்மனிடம் பிள்ளைவரம் கேட்கிறார். கேட்டு இரண்டாவது நிமிடம் அப்பெண் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு சரிகிறார். தொடரும். வருடங்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வாணி ராணியின் கடந்தவார எபிஸோடு தான் இது. 1328வது எபிஸோடு. அநேகமாக என் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மாமனார் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம்  இத்தொடரை பார்க்கும் பாக்யம் பெறுகிறேன். இப்பொழுது சனி இரவும் போட ஆரம்பித்துவிட்டார்கள். நவ்யா ஸ்வாமிக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 24072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுஜாதாவின் நேர்காணல்கள், விமர்சனங்கள், கட்டுரைகள் கலந்து கட்டிய தோரணத்து மாவிலைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து இரண்டு புதிய சொற்பதங்களை கற்றுக்கொண்டேன். அவருடைய வாசகர்களுக்கு பரிட்சயமானவைதான். அவற்றிற்கு என்று ஒரு பெயர் இருப்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

முதலாவது, யுஃபொனி (EUPHONY). சுஜாதா, போன் செய்தான் என்பதை போனினான் என்பதுபோல அவ்வப்போது சில புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தினார். இதன் உடனடி பலன் என்பது வார்த்தை விரயத்தை தவிர்ப்பது. இது குறித்து நேர்காணல் செய்பவர் கிண்டலாக கேட்கிறார். இப்படியே போனால் இட்லித்து, சாம்பாரித்து விட்டு ஆபீஸினான் என்று எழுதுவீர்கள் போலிருக்கிறதே ? இதற்கான பதிலில் யுஃபொனி பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. வார்த்தையின் ஒலி காதுகளில் நாராசமாக ஒலித்தால் அதனை வாசகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்கிறார். போனினான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் ஏதோ ஒரு வகையில் அதன் ஒலி நமது காதுக்கு தகுந்தபடியும், எளிதாக புரிந்துக்கொள்ளும்படியும் இருப்பதால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் தமிழிலேயே போனினான் என்கிற சொல் கம்ப ராமாயணத்திலும், கந்த புராணத்திலும் வருகிறது.

இரண்டாவது, கேடலாகிங் (CATALOGUING). ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது அதன் பிராண்ட் பெயரை குறிப்பிட்டு எழுதுவது. உதாரணமாக ஸ்கூட்டரில் வந்தான் என்பதை லாம்ப்ரெட்டாவில் வந்தான் என்று எழுதுவது. இதில் இரண்டு, மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில், பிராண்ட் பெயரை எழுதுவதில் ஒரு கிக் இருக்கிறது. குடித்துக்கொண்டிருந்தான் என்பதை விட ஓல்ட் மாங் அடித்துக்கொண்டிருந்தான் என்பதில் கிக் கூடுதல். இரண்டாவது, கேடலாகிங் வழியாக கதாபாத்திரத்தின் ரசனை, நிதி நிலைமை மற்றும் கதை நடைபெறும் காலகட்டம், கதை சார்ந்த சமூகத்தின் கலாச்சாரம் என்று நிறைய விஷயங்களை சிக்கனமாக சொல்லிவிட முடிகிறது. சுஜாதாவின் சில கதைகளிலேயே படித்த, மேட்டிமை மனோபாவப் பெண் என்றால் ஃபெமினா படிப்பதாக எழுதியிருக்கிறார். இதன்மூலம் நாம் அந்த கதாபாத்திரம் ஆங்கிலம் சரளமாக படிக்கத் தெரிந்த பெண், நவநாகரீகமான பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறோம். மேலும் அக்காலத்தில் ஃபெமினா என்ற பத்திரிக்கைக்கு இருந்த மரியாதையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. 

புகை பிடிப்பதை எடுத்துக்கொண்டால், காஜா பீடி குடித்தான் என்றால் அவனது நிதி நிலைமை மோசம் என்று பொருள். சிஸர்ஸ் என்றால் சுமார். கிங்ஸ் என்றால் ஆள் வெயிட் என்று புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐடி ஊழியர்களை எடுத்துக்கொண்டால் தொண்ணூறு சதவிகித புகைப்பாளர்கள் கிங்ஸையே புகைக்கிறார்கள். எனக்கு இந்த கிங்ஸ் என்ற பெயரே நீண்டநாள் பிடிபடாமல் இருந்தது. பெட்டியில் கோல்ட் ஃப்ளேக் என்றுதானே போட்டிருக்கிறது. அது சைஸ் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். சில பழைய காலத்து மாமாக்கள் மட்டும் இன்னும் வில்ஸ் நேவி கட் (அதுதான் கெத்து என்று நினைத்துக்கொண்டு) புகைத்துக்கொண்டிருக்கிறார்கள். NRI மாமாக்களை பொறுத்தவரையில் எப்போதும் லைட்ஸ் தான். இந்த லைட்ஸ் என்னும் குழலை நாபிக்கமலத்திற்கு பன்னிரண்டு அங்குலம் கீழேயிருந்து இழுத்தால் கூட ஒரு உணர்வும் ஏற்படாது. என்ன எழவுக்கு இதையெல்லாம் குடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வித்தியாச விரும்பிகள் ப்ளாக், குடாங் கரம் போன்றவற்றில் இறங்குகிறார்கள். ப்ளாக், குடாங் கரம் புகைப்பவர்கள் மீது கிங்ஸ் ஆசாமிகளுக்கு எப்போதும் ஒரு காண்டு இருக்கிறது. அதனால் ப்ளாக் / குடாங் கரம் குடித்தால் பிள்ளைப்பேறு வாய்க்காது என்று விபரீதமாக பரப்பிவிடத் துவங்கிவிட்டனர். இதனாலேயே ப்ளாக் / குடாங் கரம் பிஸினஸ் குறைந்துவிட்டது. நம்மாட்கள் ஒரு விஷயத்தை புறக்கணிக்க வேண்டும் என்றால் அதனால் ஆண்மை போய்விடும் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் !

ராயப்பேட்டை YMCAவில் மூன்றாவது வருடமாக மினி புக் ஃபேர் போட்டிருக்கிறார்கள். வருடாந்திர தை மாத புக் ஃபேருக்கு மத்தியில் இப்படி சின்ன புக் ஃபேர் என்பது தற்காலிக ஆக்ஸிஜன். ஆனால் அரங்கின் வெக்கை தாள முடியவில்லை. வெக்கை என்றால் உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடமே எப்போது வெளியே செல்லலாம் என்று நினைக்கும் அளவிற்கு வெக்கை. அரங்கில் ஏஸி செய்வதற்கான வசதிகள் கூட இருக்கின்றன. விழாக்குழுவினரிடம் தான் வசதியில்லை. வலைப்பதிவுகள் தான் அருகி வருகின்றன என்றால் வலைப்பதிவர்கள் என்ன ஆனார்கள் ? இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சுற்றியும் ஒரு வலைப்பதிவரைக் கூட பார்க்க முடியவில்லை. புக் ஃபேர் என்பது மோனோடோனஸாக தோன்றத் துவங்கிவிட்டது. அதே புத்தகங்கள், அதே பிக் ஃபோர் ஃபார் டூ ஹண்ட்ரட் ஆங்கில நாவல்கள், அதே போட்டோஷாப் பயிற்சி மென்பொருள் (இப்ப நான் மூக்கை பெருசாக்கப் போறேன்), அதே கண்மணி பாப்பா பாடல்கள், அதே குரான் இலவசம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும், அதே பொன்னியின் செல்வன் மலிவு விலை, அதே மணிமேகலை பிரசுரம், அதே நக்கீரன். இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் புக் ஃபேர் செல்வதையே நிறுத்திவிடுவேனா என்று அச்சமாக இருக்கிறது. ஒரேயொரு ஆறுதல் ஒவ்வொரு வருடமும் என்னுடைய சிலபஸிற்கு உட்பட்டு சுமார் இருபது புதிய வெளியீடுகள் வருவதுதான். இம்மாதம் 31ம் தேதி வரை புக் ஃபேர் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

விக்ரம் – வேதா ! முன்னோட்டம், விளம்பர வடிவமைப்பு, நிறத்தொனி எல்லாமே ஈர்ப்புடையதாக இருந்தன. ஒருவேளை படம் தரை மொக்கை என்று எல்லோருமாக சேர்ந்து தீர்ப்பு எழுதியிருந்தால் கூட புஷ்கர் – காயத்ரிக்காக பார்த்திருப்பேன். அவர்களுடைய பாணியின் ரசிகன் நான் ! படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே செமத்தியாக இருக்கப் போகிறது என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது. தங்களுடைய முந்தைய இரண்டு படங்களிலிருந்த க்வெர்க்கி அடையாளங்களை எல்லாம் துறந்துவிட்டு சீரியஸாக படம் எடுத்திருக்கிறார்கள். 

படத்தின் முதல் பலம் காஸ்டிங். ஒரு பக்கம் மாதவன், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி அதகளம் செய்திருக்கிறார்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் ஷ்ரதா தொந்தரவு செய்கிறார். அப்புறம் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த அத்தனை பேரும் பொருத்தம். சேட்டா மட்டும் கொஞ்சம் உறுத்தல். இரண்டாவது பலம் திரைக்கதை. ரஜினி – கமல், அஜித் – விஜய் போன்ற பெருந்தலைகள் நடிக்க வேண்டிய ஸ்க்ரிப்ட் சார் இது ! படத்தின் பிற்பகுதிக்கான குறிப்புகளை துவக்கத்திலேயே துருத்தாமல் கொடுத்துவிட்டு, பார்வையாளர்களுக்கு புதிர் போட்டு விடுவிக்கும் அந்த பாணி அபாரம். மூன்றாவது பலம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் கலையலங்காரம். விஜய் சேதுபதிக்காக போட்ட அந்த தனனனன னா பின்னணியிசை படம் பார்த்ததிலிருந்து மனதிலிருந்து அகல மறுக்கிறது. சைமன் இறப்பின்போது வரும் இசைத்துணுக்கு சிறப்பு. ஒட்டுமொத்தமாகவே விக்ரம் வேதாவில் ஒளிப்பதிவாளரின் பங்கு மகத்தானது. சுமாராக இருக்கும் ஷ்ரதாவை க்யூட்டாக தெரியும்படி செய்தது கூட ஒளிப்பதிவாளரின் வித்தைதான். நெஞ்சாத்தி பாடலில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் கலையலங்காரம் மூவரும் சேர்ந்து ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

பொதுவாக விமர்சகர்கள் சுமாரான படங்களை ஒருமுறை பார்க்கலாம் என்பார்கள். விக்ரம் வேதா குறைந்தது இரண்டு முறை பார்க்க வேண்டிய படம். அதனாலேயே குடும்பத்தினர் அழைத்தபோது ஆசையாக ஓடினேன். ஆனால் படம் துவங்கி இரண்டு நிமிடங்களில் நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 17072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

யுவல் நோவா ஹராரியின் சேபியன்ஸ் புத்தகத்திலிருந்து சில விஷயங்களைப் பார்ப்போம்.

மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது தெரியுமா ? கம்ப்யூட்டரோ, ராக்கெட்டோ, பிரியாணியோ, ஐஸ்வர்யா ராயோ அல்ல. கடவுள் ! சிம்பன்ஸிகள் சிறுசிறு குழுக்களாக வாழும் பழக்கமுடையவை. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆண் சிம்பன்ஸி தலைமை தாங்கும். (பெண்ணிய பிஸினஸ் எல்லாம் சிம்பன்ஸியில் கிடையாது). ஒரு குழுவில் அதிகபட்சம் ஐம்பது அல்லது அறுபது சிம்பன்ஸிகள் வரை சேர்ந்து வாழும். அதற்கு மேலே எண்ணிக்கை பெருகினால் குழுவின் அமைதி சீர்குலையும். அக்குழுவிலிருந்து இன்னொன்று உருவாகும். மனிதர்களை பொறுத்தவரையில் அதிகபட்சம் நூற்றியைம்பது பேர் வரை இணக்கமாக இருக்க முடிந்தது. (நான் சொல்வது அப்போது ! இப்போது பதினைந்து பேரால் கூட இணக்கமாக இருக்க முடிவதில்லை). ஆதியுலகில் இவ்வுலகில் நம்மோடு வேறு மனித இனங்களும் இருந்தன. ஒரு நியாண்டர்தாலும் மனிதனும் ஒண்டிக்கு ஒண்டி மோதினால் நியாண்டருக்குத்தான் நிச்சய வெற்றி. அதுவே ஒரு நூறு பேர் கொண்ட குழுக்கள் மோதினால் கூட நியாண்டர்தால்கள் வெல்லவே வாய்ப்பு அதிகம். ஆனால் நூறுக்கு மேலே போனால் நியாண்டர்களால் ஒற்றுமையாக போராட முடியாது. இங்கேதான் மனிதர்களுக்கு கடவுளின் துணை தேவைப்படுகிறது. கடவுள்களைப் பற்றிய புனைவுக் கதைகள் ஆயிரக்கணக்கான அந்நியர்கள் ஒற்றுமையாக வாழவும், மற்ற இனங்களை எதிர்த்து போரிடவும் வழி செய்தது. இன்றைக்கு உலகிலுள்ள ஒரே மனித இனம் நாம் மட்டும்தான் ! ஒரு பேச்சுக்கு கடவுள் பற்றிய புனைவுக் கதைகளை ஒரு தனி நபர் உருவாக்கியிருந்தால் அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்க வேண்டும். பெரியார் சொன்னது போல முட்டாள் அல்ல.

சேபியன்ஸ் - புத்தகம்
கடவுளுக்குப் பிறகு மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு – நெருப்பு. நெருப்பைப் பொறுத்தவரையில் மனிதர்கள் மட்டுமல்ல, நியாண்டர்தால்களும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் நிமிர்ந்த மனித இனங்களும் அதனை பயன்படுத்தின. ஆரம்பத்தில் நெருப்பினால் மனிதர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் – இரவில் வெளிச்சம், குளிருக்கு இதமான வெப்பம் மற்றும் கொடிய விலங்குகளுக்கு எதிரான ஆயுதம். அம்மூன்றையும் தாண்டி நெருப்பு நமக்குத் தந்த சிறப்பான விஷயம் சமையல். சமைத்து சாப்பிடத் துவங்கியதால் உணவில் கிருமிகள், நுண்ணுயிர்கள் அழிந்தன. மேலும் உணவை மென்று சாப்பிட வேண்டிய நேரம் குறைந்தது. உதாரணமாக, சிம்பன்ஸிகள் நாளொன்றிற்கு உணவை மென்று சாப்பிடுவதற்கு மட்டும் தோராயமாக ஐந்து மணிநேரங்கள் செலவிடுகின்றன. சமைப்பதால் மனிதர்களுக்கு நாளொன்றிற்கு ஒரு மணிநேரம் மட்டும் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் மனிதர்களுக்கு பற்களின் பயன்பாடும், நீண்ட குடலுக்கான தேவையும் குறைந்தன. இதனால் அவனுக்குக் கிடைத்த ஆற்றல் மூளை வளர்ச்சிக்கு உதவியது. அன்றைய பரிணாம வளர்ச்சியால் நமக்குக் கிடைத்த மூளை பின்னாளில் நமக்கு பெரிய பலன்களை கொடுத்தன. ஆயுதங்கள் கண்டுபிடித்தோம். சக்கரம் கண்டுபிடித்தோம். மின்சாரம், ஏரோப்ளேன், கம்ப்யூட்டர், செல்போன் என்று என்னவெல்லாமோ கண்டுபிடித்துவிட்டோம். குறிப்பாக காகிதம் என்ற விஷயத்தைக் கண்டுபிடித்தோம். அதனால் தான் குண்டு குண்டு இலக்கியங்களை எல்லாம் படைக்க முடிகிறது. வெண்முரசு எழுத முடிகிறது. பக்கத்துக்கு மூன்று வரி (ஒன்றின் கீழ் ஒன்று) மட்டும் அச்சிட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட முடிகிறது.

மீண்டும் ஆதியுலக விஷயத்திற்குள் செல்வோம். நம்மோடு வாழ்ந்த நியாண்டர்தால்களும், டெனிசோவன்களும் மற்ற மனித இனங்களும் இப்போது உலகில் இல்லை. இதுகுறித்து இரண்டு முக்கியமான கோட்பாடுகள் உள்ளன. 

முதலாவது கலப்பினச் சேர்க்கை கோட்பாடு. முதன்முதலில் ஹோமோ சேபியன்ஸ் எனும் நமது மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் ஐரோப்பியாவிற்கு பயணம் செய்தார்கள். நியாண்டர்தால்களை கண்டார்கள். அவர்களுடன் உடலுறவு கொண்டார்கள். ஒரு புதிய கலப்பினம் உருவானது. சேபியன்ஸ் கிழக்காசியாவிற்கு பயணம் செய்தனர். ஹோமோ எரக்டஸுடன் உறவு கொண்டார்கள். ஒரு புதிய கலப்பினம் உருவானது. விபரீதமான இக்கோட்பாட்டின் படி பார்த்தால் தற்போது ஐரோப்பியாவில் வசிப்பவர்கள் நியாண்டர்தால் வழி வந்தவர்கள். ஆசியர்கள் எரக்டஸ் வழி வந்தவர்கள். ஆஸ்திரேலியர்கள் டெனிசோவன்கள். 

இரண்டாவது, மாற்றுக் கோட்பாடு. இதன்படி மனிதர்கள் நியாண்டர்தால்கள் மற்றும் மனித இனங்களோடு உறவுக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. சேபியன்ஸ் இனம் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தது. நியாண்டர்களோடு போரிட்டு அவர்களை அழித்தொழித்தனர். பூமியின் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள சக மனித இனங்களை அழித்தனர். பூமியின் ஒரே மனித இனமாக தலையெடுத்தனர். மாற்றுக் கோட்பாடு உண்மையென்றால் இப்போது பூமியில் வசிக்கும் எல்லோரும் சேபியன்ஸ் !

தர்க்கரீதியாக மாற்றுக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது தான் சரியான முடிவு. ஏனென்றால் கலப்பினச் சேர்க்கை மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும். ஆனால் உண்மை என்னவோ வேறுவிதமாக இருக்கிறது. 2010ம் ஆண்டு நமக்கு படிமங்களிலிருந்து நியாண்டர்தால் DNA கிடைத்தது. அதனை மனித DNAவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஐரோப்பிய ஜனத்தொகையில் நான்கு சதவிகிதம் வரை ஒத்துப் போகிறது. சில மாதங்களுக்குப் பிறகு படிமங்களிலிருந்து டெனிசோவ மனிதனின் விரல் கிடைக்கிறது. அதன் DNA, ஆஸ்திரேலியர்களுடன் ஆறு சதவிகிதம் வரை ஒத்துப் போகிறது. ஆக, கலப்பினச் சேர்க்கை நடந்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் முழுக்க அதுவே நடந்தது என்றும் சொல்ல முடியாது. நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் என்பது மட்டும் உண்மை.

இப்போது 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் கதையை கவனியுங்கள். பிரிட்டிஷ் ராணுவத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்த சர் வெலிங்டன் தன் ஓய்வுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கல்லூரி துவங்குகிறார். நியாண்டர்தால் ஆராய்ச்சி என்பது அவரது நீண்டநாள் கனவு. அதாவது நியாண்டரின் மரபணுவை மனிதக்கருவில் செலுத்தி, அதன்மூலம் மனிதர்களை நூற்றியைம்பது ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்கான முயற்சி. ஆதரவற்ற கர்ப்பிணிப்பெண் ஒருவரை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். துரதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி கிரகணத்தின்போது வெளியே வருகிறாள். கதிர்வீச்சு தாக்கத்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்கப்படுகிறது. அம்புலி பிறக்கிறான். 

ஒருவேளை உமா காமேஷ் கிரகணத்தின் போது வெளியே வராமலிருந்தால் அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருக்கும் இல்லையா ? அம்புலி இரட்டையர்கள் இரண்டாம் பாகத்தை இந்த கோணத்திலிருந்து கூட துவங்கலாம். 

மாதிரி நியாண்டர் பெண்
ஒருவேளை நிஜமாகவே நம் விஞ்ஞானிகள் நியாண்டர்தால் ஆராய்ச்சியில் இறங்கலாம். அப்படி செய்யும் பட்சத்தில் நமக்கு நீண்டநாள் வாழக்கூடிய, அதிக உடல் பலம் கொண்ட, மனிதர்களை விட புத்திசாலித்தனமான ஒரு இனம் கிடைக்கும். நியாண்டர்தால்களைக் கொண்டு மனிதர்களால் செய்ய முடியாத, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படக்கூடிய காரியங்களை செய்துக்கொள்ளலாம். நியாண்டர்தால் பெண்களுடன் நம் ஆண்கள் உறவுக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். (உடல்ரீதியாக நியாண்டர்தால் ஆணும், மானுடப்பெண்ணும் உறவு வைத்துக்கொள்வது சாத்தியக்குறைவு). முதலில் சொன்ன வாக்கியத்தில் நியாண்டர்தால்கள் நம்மை விட புத்திசாலித்தனமானவர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 10072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நியூ படத்தில் வரும் மணிவண்ணன் கதாபாத்திரம் (சயின்ஸ்) நினைவிருக்கிறதா ? தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த பாத்திரத்தின் அறிமுகக்காட்சி பிடிக்கும். தினசரி அலாரம் ‘அடித்து’ எழுப்பி, பல் துலக்க வைத்து, நீச்சல் குளத்தில் தள்ளி குளிக்க வைத்து, உலர வைத்து, உடை மாற்றித் தயார் செய்ய ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா. கொசு - தேனீ கலப்பினம், இரட்டை வால் நாய் (அவர்கள் இரண்டாக்க நினைத்தது வேறொன்றை), இரண்டடி தென்னை என்று அதிலே காட்டப்படும் மரபின மாற்றங்களின் காலம் வெகு தொலைவில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்கனவே நிறைய நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு, லைகர் (லயன் + டைகர்) என்கிற ஜந்துவைப் பற்றி கூகுள் செய்து பாருங்கள். விவசாயத்தில் ஏதேதோ மரபின மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. வாழைப்பழத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள், கருப்பு திராட்சைகள் கொட்டையில்லாமல் வருகின்றன. விரைவாக காய்க்கக்கூடிய தென்னைகள் கூட வந்துவிட்டன. நான் சொல்ல வந்தது விவசாயப் புரட்சியைப் பற்றியதல்ல என்பதால் அடுத்த பத்திக்கு சென்றுவிடுவோம்.

எஸ்.ஜே.சூர்யா மேலே குறிப்பிட்ட காட்சியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார் / தவிர்த்துவிட்டார். கொல்லைக்கு போவது. அதனை அப்படியே சொல்வோம். ஏனெனில் இன்னமும் பெருவாரியான இந்திய கிராமங்களில் கொல்லையில் தான் போகிறார்கள். படிப்பறிவு, பணவசதி எல்லாம் வந்துவிட்டால் கூட கொல்லைக்கு போவது என்பதை ஒரு மரபாகவே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நகர்ப்புறங்களில் ஸ்க்வாட் டாய்லெட் எனப்படும் குத்தவைத்து உட்காரும் முறையில் இருந்து முன்னேறி வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாகி வருகிறது. எனக்கு சில வருடங்கள் முன்பு வரை வெஸ்டர்ன் கழிவறை பழக்கமே இல்லை. வெளிப்படையாக சொல்வதென்றால் பயன்படுத்தத் தெரியாது. மேலும் ஸ்க்வாட்டில் உட்கார்ந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துகொள்வதைப் போல வெஸ்டர்ன் சுலபமானதல்ல என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வாட்டர் கன் என்றழைக்கப்படும் ஃபாஸட்டை இஸ்லாமிய மற்றும் ஆசிய நாட்டு மக்கள் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்வது அவர்களுக்கு அசெளகரியமானது. 

பிடெட்
இப்போது பிடெட் (Bidet) எனும் நவீன கழிவறை வந்திருக்கிறது. நீங்கள் ஒருவேளை விமான நிலையம் அல்லது நட்சத்திர விடுதிகளில் பார்த்திருக்கலாம். ஜப்பானில் பிரபலம். எழுபது சதவிகித ஜப்பான் வீடுகளில் பிடெட் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. பிடெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் உங்கள் மலத்துவாரத்தை நோக்கி இயந்திரம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். மேலும் முன்புறம், பின்புறம், தண்ணீரின் வேகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வெவ்வேறு பொத்தான்கள் உள்ளன. 

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. உங்களுடைய சொந்த மலத்தைக் கூட நீங்கள் தொட வேண்டிய கட்டாயமில்லை. அதே சமயத்தில், உங்கள் மலத்தை மற்றவர் கையாளும் கொடுமையும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிகம். ஐ.ஆர்.சி.டி.சி ரயில்களில் கழிப்பதெல்லாம் என்ன ஆகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ? சட்டப்பூர்வமாக இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை 1993ல் தடை செய்துவிட்டார்கள். சட்டப்பூர்வமாக மட்டும் ! மேலும் மலம் அள்ளுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழிலாகவும், அதுவே அவர்கள் மீதான அடக்குமுறையாகவும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. 

மனிதர்கள் மலம் அள்ளுவதை தவிர்ப்பது சாத்தியமா ? விஞ்ஞானத்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை. விமானத்தில் கழிவறையை பயன்படுத்தினால் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். வாக்யூம் கிளீனர் போன்ற உபகரணம் கழிவுகளை இழுத்துக் கொள்கிறது. இது சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேமித்து வைக்கப்படுகிறது. விமானம் தரையிறங்கிய பிறகு கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. இத்தனை பெரிய செயல்முறையிலும் மனிதர்களின் ஈடுபாடு கொஞ்சம் தேவைப்படுகிறது. உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இந்தியா போன்ற நாட்டில் மனிதர்கள் மலம் அள்ளுவதை முற்றிலுமாக அழித்தொழிக்க இன்னும் நூறு வருடங்கள் கூட ஆகலாம். மாற்றம் என்பது படிப்படியாகத்தான் நிகழும். நான் சொல்லவில்லை. ஒரு மஹான் சொல்லியிருக்கிறார்.

அதுவரையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? 

வெளியிடங்களில் (உ.தா. திரையரங்குகள், பேருந்து நிலையங்கள்) கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு அதனை நம் வீட்டில் செய்வது போல சுத்தப்படுத்திவிட்டு திரும்ப வேண்டும்.

ரயில்களில் பயணம் செய்யும்போது கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். (கவனிக்க, அடக்கிக்கொள்ள சொல்லவில்லை).

மலம் அள்ளும், சாக்கடையை சுத்தம் செய்யும் மனிதர்களை முதலில் சக மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அட்லீஸ்ட் நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி, முதல் படி. என்ன இருந்தாலும் பூஜ்யத்தை விட ஒன்று பெரிது தானே ?

வழக்கம் போல பிற்போக்கு சுபாவம் கொண்ட சிலர் இதற்கும் உங்க வீட்டில் நீங்களே தான் மலம் அள்ளுகிறீர்களா ? என்று ஆரம்பிக்கிறார்கள். இவர்களை பார்க்கும்போது எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் என்று சொல்லும் கவுண்டமணியிடம் அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ் என்று சொல்லும் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார். க்ரோ அப் கய்ஸ் !

திருவொற்றியூர் நூலகத்திலிருந்து மாதமொருமுறை வாசகர் வட்டக் கூட்டம் என்று குறுந்தகவல் வருகிறது. என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமென சென்றிருந்தேன். டிஸ்கவரியில் நடைபெறும் புத்தக வெளியீடு / விமர்சனக் கூட்டங்களில் நீங்கள் அதிகபட்சம் எத்தனை பேரை பார்த்திருப்பீர்கள் ? நூலகத்திற்கு சென்றதும் முதலில் தற்காலிகமாக கொஞ்சம் பிரமித்துவிட்டேன். கிட்டத்தட்ட நூறு பேர் இருந்திருப்பார்கள். ஆனால் அதில் குறைந்தது எண்பது பேர் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து கட்டாயத்தின் பெயரில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் சலசலவென்று பேசிக்கொள்வதும், டீச்சர் வந்ததும் குழுவாக எழுந்து நின்று குட் மார்னிங் (மாலை ஐந்தரை மணிக்கு) சொல்வதுமாக இருந்தார்கள். முன் வரிசைகளில் ஒரு இருபது முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல மைக் வேலை செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர் கத்தி, கத்தி ஒருவழியாக மாணவர்களை சாந்தப்படுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதலில் நான்கைந்து மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக வந்து காமராஜரைப் பற்றி ஒப்புவித்தார்கள். தப்பான இடத்திற்கு வந்துவிட்டது போல உணர்ந்தேன். இதற்கு மேல் எழுந்து போனால் நன்றாக இருக்காது என்பதாலும், என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.

படம்: குங்குமம்
நவநீதகிருஷ்ணன் என்கிற இளைஞர் UPSC தேர்வுகளில் கலந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல என்று மாணவர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருந்தார். நவநீதனின் செயல்பாடு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மாணவர்களுக்கு முதலில் UPSC என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய பரிந்துரை என்னவென்றால் நவநீதகிருஷ்ணன் இன்னும் இரண்டு படிநிலைகள் இறங்கி வந்து பேசியிருக்க வேண்டும். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து அவர்களே, இவர்களே என்று துவங்கி சிறப்புரை ஆற்றினார். காமராஜர் செய்த சமூக மாற்றங்களை எடுத்துரைத்தார். நன்றாக தூக்கம் வரும் சமயத்தில் தேநீரைக் கொடுத்து காப்பாற்றினார்கள். ஆனால், கல்லைப் போட்டு குடிக்கும் அளவில் கொடுத்தது துரதிர்ஷ்டம். ஒருவழியாக, விரிவாகப் பேச ஆசை ஆனால் நேரம் அனுமதிக்கவில்லை போன்ற ஜல்லிகள் எல்லாம் தாண்டி ஏழு மணிக்கு நிகழ்வு முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவரிடமும் ஒருங்கிணைப்பாளர் புன்னகையோடு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். 

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வாசகர் வட்டக் கூட்டத்தை நடத்துபவர்களின் நோக்கத்தில் எந்த பாசாங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதனை அவர்கள் நடத்தும் முறை விரயம். முதலில் கட்டாயப்படுத்தி பள்ளி மாணவர்களை அழைத்து வருதல் தவறு. அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களை தொடர்ந்து ஈடுபாடுடன் வைத்துக் கொள்ள வேண்டியது ஒருங்கிணைப்பாளர்களின் கடமை. அதற்காக என்னென்ன புதுமைகளை செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய நூலகம் முன்வர வேண்டும். அவர்களே இவர்களே ரக ஆசாமிகளை எல்லாம் விட்டுவிட்டு இளைஞர்களை பேச வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 03072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் இடைப்பட்ட ஒரு காலத்தில் தொடர்ந்து சலிக்க சலிக்க மதுரையை பின்னணியாய்க் கொண்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்படங்களுக்கு எல்லாம் பொதுவான அம்சம் துவங்கியதும் வாய்ஸ் ஓவரில் ஊரின் பெருமைகளை எடுத்தியம்பி, மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் ஆற்றில் இறங்குவது, நாயக்கர் மஹால், ஜிகர்தண்டா என்று அழகாக செய்திப்படம் காட்டுவார்கள். போகிறப்போக்கில் அரிவாள் கலாசாரம், சாதி ஜல்லியடிப்புகள் (கருப்பாக தேவர் வருடல்கள்) எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சென்னையை விட அதிகம் ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட ஊர் மதுரையாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். மதுர, மதுரை சம்பவம், வர்றேன்டா மதுரைக்கு, மதுரை டூ தேனீ வழி ஆண்டிப்பட்டி, மதுரை விடிஞ்சா போச்சு என மதுரையை பெயரில் கொண்ட படங்கள் ஒரு தினுசாக நீள்கிறது. இதுபோக சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம், கூடல் நகர், திருமங்கலம் பேருந்து நிலையம் என்று ஏரியா பெயர்களைக் கொண்ட படங்கள். அநேகமாக காதல் படத்தில் துவங்கி சுப்ரமணிபுரத்தில் தீவிரமடைந்த மதுரை ட்ரெண்ட் இப்போது கொஞ்சம் குறைந்து சசிகுமார், முத்தையா படங்களில் மட்டும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. 

சமீபத்தில் மதுரையை பின்னணியாய் கொண்ட ஒரு படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் 144. ஹீரோ அசோக் செல்வனும், ஹீரோயின்கள் ஓவியாவும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் (டப்பிங் முறையே கீர்த்திகா, ஐஸ்வர்யா) மாய்ந்து மாய்ந்து மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்கள். மற்றபடி முதல் பத்தியில் சொன்னது போல மதுரை பெருமைகள் அதிகமில்லை. சுஜாதாவின் வசந்தகால குற்றங்கள் நாவலிலிருந்து கதையின் ஒரு பகுதி எடுக்கப்பட்டிருப்பதாக கிரெடிட் கொடுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நான் வசந்தகால குற்றங்கள் படித்ததில்லை. படம் பார்க்கும்போது இதில் எந்தப்பகுதி நாவலில் வந்திருக்கும், எப்படி வந்திருக்கும் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ஓவியாவின் கதாபாத்திரம் வரும்.

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக காதலை வைத்தே குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்கள். நட்பு, குடும்பம், சென்டிமென்ட், ஆச்க்ஷன் போன்ற உப வஸ்துகள் ஒருபுறம். (சில விதிவிலக்குகள் இருக்கலாம்). சமீப வருடங்களாகத்தான் புதுப்புது ஜான்ராக்கள் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் அதிலேயும் ஒரு காதல், ஒரு டூயட் என்கிற பண்பாடை விட்டதாகத் தெரியவில்லை. 

144 ஒரு ஹைஸ்ட் படம். கொள்ளை அடிப்பது தொடர்பான படங்களை ஹைஸ்ட் படங்கள் என்கிறார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941) படத்தை தமிழின் முதல் ஹைஸ்ட் படம் என்று சொல்லலாமா ? சந்தேகம் தான். ஹைஸ்ட் படங்களுக்கென சில வழக்குமுறைகள் உள்ளன. தமிழில் வெளிவரும் ஹைஸ்ட் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஹீரோ சின்னச் சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவார். பெரிய கொள்ளை ஒன்றில் ஈடுபட வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கும். கண்டிப்பாக, எவ்வளவு நாளைக்குத்தான் சின்னச் சின்ன வேலையெல்லாம் செய்றது. பெருசா ஒன்னு செய்றோம். செட்டில் ஆகுறோம் என்ற வசனம் இருக்கும்.

ஹைஸ்ட் படங்களின் கதைப்பகுதியை மூன்றாக பிரிக்கிறார்கள். முதலாவது, குழு சேருதல், திட்டமிடுதல். இரண்டாவது, கொள்ளை சம்பவம். மூன்றாவது, கொள்ளைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள். 

மங்காத்தாவில் தொடங்கியிருந்தாலும் சூது கவ்வும் படத்தில் சூடு பிடித்த ஹைஸ்ட் ட்ரெண்ட் மூடர்கூடம், சதுரங்க வேட்டை, ராஜதந்திரம், கள்ளப்படம், 144, ரம் என்று நீண்டு, கடைசியாக வெளிவந்த ஹைஸ்ட் படம் மரகத நாணயம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மேலே சொன்ன அத்தனை ஹைஸ்ட் படங்களும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன. (சில சமயம் மங்காத்தாவில் கண்டெயினரை கடத்தும் காட்சி போன்றவற்றை சகித்துக்கொள்ள வேண்டும்).

ஹைஸ்ட் படங்களை பொறுத்தவரையில் வீட்டில் ஒரு பீரோவில் பணத்தை அல்லது வைரக்கற்களை பூட்டி வைத்திருந்தார்கள். அதன் உரிமையாளரிடம் இருந்து சாவியை அடித்துப் பிடுங்கி கொள்ளை அடித்தார்கள் என்று காட்டினால் அதில் சுவாரஸ்யம் ஏதுவுமில்லை. வரைபடம் பார்த்து திட்டம் வகுக்க வேண்டும், ஒரு அலாரம் சிஸ்டம் இருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும், சாமர்த்தியம் காட்ட வேண்டும். சூது கவ்வும் படத்தில் வரும் ‘ட்ரோன்’ காட்சி போல ஒரு பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும்.

144ல் ஒரு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. கண்ணாடியில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலை. அதற்கு கீழே பெரிய சைஸில் ஒரு சப்பரம். சப்பரத்தின் வால் பகுதியின் அருகே சென்று பாஸ்வேர்ட் சொன்னால் திறக்கும். உள்ளே தொலைக்காட்சி, தொலைபேசி, ஏர் கூலர், உற்சாக பானங்கள் என சகல வசதிகளும் பொருந்திய ஒரு சிறிய அறை. அறையில் உள்ள ஒரு பெண் ஓவியத்தின் உதட்டுப்பகுதியை சிரிப்பது போல குவித்தால் மேலே உள்ள ஒரு ரகசிய கதவு திறக்கிறது. அதற்குள் ஒரு நம்பர் லாக் சிஸ்டம். அதற்குள் ஒரு சாதாரண லாக் சிஸ்டம். உள்ளே களிமண் பிள்ளையார் மூட்டைகள். ஒவ்வொரு களிமண் பிள்ளையாருக்கு உள்ளேயும் தங்கக்கட்டிகள் இருக்கின்றன.

முன்பெல்லாம் அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறும் நினைவிருக்கிறதா ? நினைவிருந்தால் அத்தகைய சந்திப்புகளில் யாராவது வலைப்பதிவர் அல்லாதவர் வந்து சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகளை கவனித்திருப்பீர்கள். ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் நின்றுக்கொண்டிருப்பார் அந்த மனிதர். போதாத குறைக்கு நம் வலைப்பதிவு நண்பர்களும் அவரை சக வலைப்பதிவர்களிடம் வாசகர் என்று அறிமுகப்படுத்திவிட்டு கொல்லென சிரிப்பார்கள். அதுபோல சமீபத்தில் எனக்கு சம்பந்தமில்லாத ஒரு சந்திப்பில் சிக்கிக்கொண்டேன். பைக்கர்ஸ் மீட் ! பிரதி ஞாயிறு காலை ரைடர்ஸ் எல்லாம் தங்களுடைய எம வாகனத்தை முறுக்கிக்கொண்டு ஈ.சி.ஆரை நோக்கி பயணிக்கிறார்கள். சென்னையிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில், மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள முதலியார்குப்பத்தில் (சுருக்கமாக MDK) கூடுகிறார்கள். உன்து எவ்ளோ தருது, உன்னுதை நான் கொஞ்சம் ஓட்டிப் பார்க்கட்டுமா ?, என்து பெருசு என்று சங்கேத மொழியில் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். திடீரென யாரேனும் ஒரு ரைடர் அருகில் உள்ள பாலத்தில் சப்தம் எழுப்பியபடி வீலிங் செய்து காட்ட எல்லோரும் ஆச்சர்யமாக திரும்பிப்பார்க்கிறார்கள். சில ரைடர்கள் தங்களுடைய கேர்ள்ஃபிரண்டை அழைத்து வருகிறார்கள். சிலருக்கு ரைடரே கேர்ள்ஃபிரண்டாக அமைந்திருக்கிறார்கள். நான் அசடு வழிந்தபடி நின்றுக்கொண்டு, ஒருவகையில் நானும் ரைடர்தாங்க. பில்லியன் ரைடர் என்று மொக்கை போட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணிநேரம் சிறு சிறு குழுக்களாக கூடி நின்று, தத்தம் பைக்குகளை பற்றி விவாதித்துவிட்டு கலைகிறார்கள். இதிலே கொஞ்சம் தீவிரமான மெக்கானோபிலியாக்கள் இருக்கிறார்கள். கானத்தூர் செக்போஸ்ட் தாண்டி வண்டியை ஓரம் கட்டிவிட்டு போகிற வருகிற சாகஸ பைக்குகளையும், கார்களையும் பார்த்து ஜொள்ளு விடுகிறார்கள். விர்ரூம் என்று சப்தமெழுப்பியபடி ஏதேனும் ஒரு வாகனம் கடந்தால், செக்ஸியான பெண்ணைப் பார்த்துவிட்டதுபோல திகைப்படைகிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment