அன்புள்ள வலைப்பூவிற்கு,
கிழக்கு புண்ணியத்தில் புத்தகங்களாக வாங்கி குவித்துவிட்டேன். இப்போது வீட்டில், “வாங்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை... படிக்கிறதுக்குத்தான் வழியக்காணோம்...”ன்னு கரைச்சல் கொடுக்குறாங்க. எனவே, எப்படியாவது வாரத்திற்கு ஒரு புத்தகமாவது படித்துவிட வேண்டுமென எனக்கு நானே கட்டளையிட்டிருக்கிறேன். (இந்த பாழாய்ப்போன பொறுப்புணர்ச்சி படிக்கிற காலத்துல இருந்திருந்தா இந்நேரம் வெள்ளைக்காரனுக்கு கால் அமுக்கிவிடாமல் இருந்திருக்கலாம்). புத்தக அடுக்கில் இருந்ததிலேயே பழைய புத்தகத்தை உருவி எடுத்தேன். அது புத்தக சந்தையில் 1990ம் ஆண்டு விலையில் (வெறும் 18ரூ மட்டுமே) வாங்கிய சுஜாதாவின் “மனைவி கிடைத்தாள்”. (உபயம்: பாரதி பதிப்பகம்).
திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதன் பாடல்களை கேட்பதிலும், நாவல் படிப்பதிலும் இருக்கின்ற சுவாரஸ்யம் என்னவென்றால் அதன் காட்சிகளையும் கதைமாந்தர்களையும் நம் விருப்பம் போல கற்பனை செய்துக்கொள்ளலாம். இவற்றில் முன்னதற்கும் பின்னதற்கும் உள்ள வித்தியாசம், முன்னதில் படம் வெளியான பின்பு நம் மனதின் கற்பனை பிம்பங்கள் மறைந்து திரைக்காட்சிகள் குடிபுகுந்துக்கொள்ளும். நாவல்கள் படிக்கும்போது கிடைக்கும் கற்பனைகள் ஆண்டாண்டு காலத்திற்கும் நிலைத்து நிற்கும். சமயங்களில் நாவல்களை திரைப்படமாக எடுத்தால் நாவலில் இருந்த உயிர்த்துடிப்பு திரைப்படத்தில் இல்லை என்று பெரும்பாலானவர்கள் சலித்துக்கொள்வதற்கும் இதுவே காரணம்.
“பழக்கடை நிறைய ஆப்பிள்கள் வெட்கப்பட்டன. ஆரஞ்சுகள் விழித்தன. நூறு பத்திரிகைகள் தொங்கின. ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை கலைக்கிற அளவிற்கு சோடா பாட்டில்கள். நன்னாரி சர்பத்தைச் சுற்றிலும் ஈக்கள் விளையாடிக்கொண்டிருந்தன. பெரிய சட்டையைப் போட்டுக்கொண்டு ஒரு பையன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்” என்று படிக்க படிக்க நம் கற்பனையில் ஒரு கடைத்தெரு எட்டிப்பார்க்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கொஞ்சம் பரிட்சயமான செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டாக தெரிந்தது. மற்றவர்களுக்கு திருநெல்வேலி சந்தையாகவோ, வேலூர் கடைத்தெருவாகவோ ஏன் துபாய் குறுக்குத்தெருவாகவோ கூட தெரியலாம்.
என் தலைமுறையினர் எத்தனை பேருக்கு இந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. அவர்களுக்காக ஒரு சின்ன ட்ரைலர். அன்னாசாமி, அவருடைய மனைவி வேணி மற்றும் அவருடைய நண்பர் மூர்த்தி இவர்கள் மூவரைச் சுற்றியே பயணிக்கிறது கதை. மூர்த்திக்கு நண்பனின் மனைவி மீது ஒரு கண். கண்ணுக்கு எட்டியது கைகளுக்கு எட்டியதா என்பதே மீதிக்கதை. இதற்கிடையே அன்னாசாமிக்கும் வேணிக்கும் கொஞ்சம் ரொமான்ஸ். இந்தப்பத்தியை படித்துவிட்டு என்ன ஒரு வக்கிரமான கதை என்று நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிட்டும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் நெருடியது. இருப்பினும் அதை உள்வாங்கிக்கொள்ளாமல் எனக்கு பிடித்த முடிவை கற்பனை செய்துக்கொண்டேன்.
வேணி அழகான மணப்பெண்ணாக அறிமுகம் செய்யப்படுகிறாள். இவளுடைய பாத்திரத்தை வரி வரியாக விவரிக்க அப்படியே மனதிற்குள் காஜல் அகர்வால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கொண்டாள். ஒருவேளை, விவரிப்பை “தீர்க்கமான மூக்கு” என்று ஆரம்பித்ததால் ஏற்பட்ட விளைவாக இருக்குமோ...? அல்லது அலங்காரம் செய்யப்பட மணப்பெண் என்றதும் மேலே இருக்கும் இந்தப்புகைப்படம் என் நினைவுக்கு வந்திருக்குமோ....? இருக்கலாம். எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். 1980ல் எழுதிய ஒரு கதை, அப்போது காஜல் அகர்வால் பிறந்திருக்கவே இல்லை. (காஜல் அகர்வால் பிறந்த தேதி 19.6.1985). அதை இப்போது படிக்கும்போது எனக்கு காஜல் நினைவுக்கு வந்தது ஆச்சர்யம்தான். அந்த காலத்தில் இதைப் படித்தவர்களுக்கு ஸ்ரீதேவியோ, ஸ்ரீப்ரியாவோ அல்லது மீண்டும் கோகிலா படத்தின் “சின்னஞ்சிறு...” பாடலோ நினைவுக்கு வந்திருக்கலாம்.
அதே புத்தகத்தின் முதல் பாதியை கடந்தபின்னர் விளிம்பு என்று மற்றொரு குறுநாவல். இது தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டாக இருந்து ஒருவழியாக இப்போது ஓய்ந்திருக்கும் ஸ்பிளிட் பர்சனாலிட்டி பற்றிய கதை. (கவனிக்க: எழுதப்பட்டது 1980களில்) முக்கால்வாசி கதையை படிக்கும்போதே இதுதான் முடிவு என்று புரிந்துவிட்டதால் அதிகம் கவரவில்லை. தவிர, கதையில் காஜல் அகர்வால் போல யாரும் நினைவுக்கு வரவில்லை.
அடுத்ததாக சுஜாதாவின் “பெண் இயந்திரம்” அல்லது பட்டுக்கோட்டை பிரபாகரின் “மிஸ் இந்தியா மிஸ்ஸிங்” இரண்டில் ஏதேனும் ஒன்றை எடுக்க இருக்கிறேன்.
இந்த பதிவை படித்துவிட்டு என்னடா தலையும் புரியல... காலும் புரியலைன்னு முழிக்க வேண்டாம்... ச்சும்மா என்னுடைய படிப்பானுபவத்தை ஷேர் செய்துக்கொண்டேன். அம்புட்டுதேன்.
பவர் ஸ்டார் வெறியர்களுக்காக: ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|

