24 August 2010

மீண்டு வந்த சோழன்...!

வணக்கம் மக்களே...

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ எனது இந்த வலைப்பதிவு உறவினர்களிடம் அறிமுகம் பெற்றுவிட்டது. அமெரிக்காவில் இருந்தெல்லாம் வாழ்த்துச் செய்தி வருவதாக ஊருக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். ஒரு வகையில் என் உறவினர்கள் இப்பொழுதாவது என் எண்ணங்களையும் கொள்கைகளையும் தெரிந்துக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனால், கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்தபோது இனி எல்விராவையும் நெப்போலியனையும் பற்றியெல்லாம் எழுத முடியாதே என்று அடிவயிற்றில் ஓர் கலக்கம் ஏற்பட்டது. எனது கருத்து சுதந்திரத்தில் நானே கல்லடித்துக்கொண்டது போல தோன்றியது. மேலும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தும், கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வந்தேன். எழுதுவேன். என்னவெல்லாம் என் மனதில் தோன்றுகிறதோ, எல்லாவற்றையும் எழுதுவேன். யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை.

ஆகட்டும்... சில வாரங்களுக்கு முன் என் தந்தையின் உடல்நிலை சரியில்லாதது பற்றியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பற்றியும் எழுதியிருந்தேன். இப்போது வாசகர்களாகிய உங்கள் வார்த்தைகள் பலிக்க, உறவினர்களின் பிரார்த்தனைகள் பலிக்க நோய்வாய்ப்பட்டிருந்த ராஜேந்திர சோழனாகிய (!!!) என் தந்தை மீண்டு வந்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போலவே கருப்புச்சட்டையில் கம்பீரமாகவே வீடு திரும்பினார் தந்தை. அதுமட்டுமில்லாமல் டிஸ்சார்ஜ் ஆவதற்கு முந்தய நாளே தங்கையாரிடம் வீட்டு மொட்டைமாடியில் புத்தம் புதிய திராவிடர் கழக கொடியை ஏற்றச் சொல்லிவிட்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அய்யம்மா (என் தந்தையின் தாயார்) ஆரத்தி எடுக்க அப்பா புதிய பூமி படத்தில் வரும் எம்.ஜி.ஆர் போல முரண்டுபிடித்தார். அடுத்த பத்து நாட்களுக்கு அடுத்ததடுத்து உறவினர்களும் நண்பர்களும் வந்து அப்பாவிற்கு தைரியம் சொன்னபோது தான் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்துக்கொண்டேன். அப்பாவிற்கு பிடிக்குமே என்று  ஒரு டி.வி.டி முழுக்க எம்.ஜி.ஆர் ஒளிப்பாடல்களை தேடித்தேடி சேகரித்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர் பாடல்களை பார்த்த உற்சாகத்திலா என்று தெரியவில்லை, அப்பா எதிர்பார்த்ததைவிட வேகமாகவே இயல்புவாழ்க்கைக்கு திரும்பிவிட்டார். இப்போது சாத்துக்குடி பழங்களையும் ஆப்பிள்களையும் யாருக்கு கொடுப்பது என்று தெரியவில்லை.

(சிறிய எழுத்துக்கள் தெரியாவிடில் வலது க்ளிக் செய்து தனித்திரையில் பார்க்கவும்)
நடந்து முடிந்த இந்த சம்பவங்களில் இருந்து நான் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். நீங்களும் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளையாட்டுப்பிள்ளையாகவே சுற்றித்திரிந்த நான் இனியாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்று உச்சிமண்டைக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது. குடும்பத்து பெரியவர்களுக்கு நான் புத்திமதி சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தந்தையை இந்நிலைக்கு ஆளாக்கியதில் முக்கிய பங்கு புகைக்கு இருக்கிறது. வயதில் மூத்தவர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கும் நீங்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். சிலர் உயிரை மயிராக நினைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆனால் உங்களை சுற்றி இருக்கும் நாலு பேருக்கு நீங்கள் தான் உலகம் என்று உணர்ந்து செயல்படுங்கள். நான் எழுதும் இந்த வார்த்தைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நாயர் கடையிலும், சதர்லேண்ட் வாசலிலும் ஊதித்தள்ளும் பெருமக்களுக்கும் மேற்கூறிய வார்த்தைகள் பொருந்தும். நாற்பது வயது தாண்டியபிறகு ஞானம் பெற்று பயனில்லை. கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தகண்ணீர்" படத்தை ஒரு முறை மறக்காமல் பார்த்துவிடுங்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் அப்பாவிற்கு ஊன்றுகோலாய் இருந்து உதவிய உறவுகளையும் நட்பையும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. ஆனால் சிலருடைய பெயரை சொல்லியே ஆகவேண்டும். நான் இருக்க வேண்டிய இடத்தில் வாரிசாக இருந்து உதவிய மைத்துனர் அசோக், ரத்தத்தின் ரத்தமாக இருந்து உதவிய அருண் அண்ணன், அம்மா வீட்டில் இல்லாத் சமயங்களில் மீண்டும் எனக்கும் என் தங்கைக்கும் தாயாக இருந்து அன்பை பொழிந்த அய்யம்மா, தந்தைக்கு பசியாற்ற பாசத்தோடு உணவு கொண்டுவந்த சுப்புலட்சுமி அத்தை, "ஜோதிடசிகாமணி" திருமதி. அவல்பொரி மரகதமணி அத்தை, கேட்ட போதெல்லாம் விடுமுறை கொடுத்து ஒத்துழைத்த அணித்தலைவர் ராஜகோபால் (பேசாமல் பெயரை ராஜபக்சே என்று மாற்றிக்கொள்ளலாம்), மற்றும் பாசம் படைத்த உறவுகள், நலம் நாடிய நட்புக்கள், வர்த்தகர் சங்க, அச்சக உரிமையாளர் சங்க மற்றும் திராவிடர் கழக தோழர்கள் உங்கள் அனைவரின் பொற்பாதங்களையும் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

அடையாறு மருத்துவமனை பற்றிய எனது கடந்த பதிவை படிக்காதவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம் :-

Post Comment

14 comments:

Unknown said...

அப்பாவின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது .. அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட நீங்களும் பாராட்டுக்குரியவரே ..

ஸ்ரீ.... said...

தங்கள் தந்தை நலமடைந்ததில் மகிழ்ச்சி. உதவிய உள்ளங்களை சரியான நேரத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள். இன்னலையும் நகைச்சுவையுடன் சொல்லமுடியும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ஸ்ரீ....

சஞ்சயன் said...

இன்று தான் உங்கள் பதிவுலகத்தினுள் வந்தேன். உள்ளே வர சோழச் சக்கரவர்ததியின் பெயரே காரணம். உள்ளே மீண்ட தந்தையினால் நீங்கள் பட்ட மகிழ்ச்சியை நானும் அனுபவித்தேன். நல்ல பதிவு.
ராஜேந்திர சோழனை அன்புடன்விசாரித்ததாகக் கூறுங்கள். நேரமிருப்பின் எனது பதிவுலகத்திற்கு வந்து போங்கள். நன்றி. visaran.blogspot.com

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில் & ஸ்ரீ....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்வின் ஆதாரமே நகைச்சுவை தானே நண்பர்களே... அதில்லாமல் இருக்க முடியுமா...

@ விசரன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சோழன் என்ற விளிப்பு கொஞ்சம் ஓவராக இருந்திருக்கலாம்... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... கண்டிப்பாக வருகிறேன்...

மோகன்ஜி said...

உங்கள் தந்தை நலம் பெற்று மீண்டிருப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி. சிகரெட்டின் பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. சிகரட் பற்றி என் பழைய கவிதை ஒன்று.உங்கள் தந்தை படிப்பாரெனில் காண்பிக்கவும்.

உடன் கட்டை

புகையிலைப் பெண்ணே !
வெள்ளைத்தாள் சேலை கட்டி
முனை நெருப்பில் நீ கனியும் போது,
வாயாலும் மூக்காலும்
உன் சிதையை புகைய விட்டு
தவணை முறையில்
உடன்கட்டை ஏறுகின்ற
எங்களுக்கும்
கற்புண்டு.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் தந்தை நலம் பெற்று மீண்டிருப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி.

Chitra said...

உங்கள் தந்தை குணமாகி வருவது குறித்து மகிழ்ச்சி.... பூரண நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன். நல்ல பதிவுங்க....

Philosophy Prabhakaran said...

@ மோகன்ஜி
வருகைக்கும், கருத்துக்கும், கவிதைக்கும் நன்றி ஜி...

@ சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... ஆனால் நீங்கள் காப்பி பேஸ்ட் செய்ததில் மட்டும் உடன்பாடில்லை...

@ Chitra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வெட்டிபேச்சு பேசாமல் வாழ்த்தியதில் மகிழ்ச்சி சித்ரா...

சுஜா செல்லப்பன் said...

’உறவுகளுக்கு,நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்தமாட்டேன்’ சொன்னது ரொம்ப பிடிச்சிருக்கு..உன்னதமான உறவுகள்..மீண்டு வந்த தந்தை நலம் வாழ வாழ்த்துகிறேன் !

Philosophy Prabhakaran said...

@ சுடர்விழி

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடர்... உறவுகளின் உன்னதத்தை கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்திருக்கிறேன்...

ஜில்தண்ணி said...

அப்பா வழக்கம் போல் உடல் நலம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது

ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் உன் பதிவை வீட்டிலும் படிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று,ம்ம்ம்ம் இனி நாங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்

எல்விரா போன்ற பதிவுகள் இனி வராதா ???

உன் உறவுகள் மென்மேலும் வளரட்டும் பிரபா :)

Matangi Mawley said...

உங்கள் தந்தை குணமடைந்து வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. அதை அத்தனை அழகான படைப்பாக எழுதிய தங்களின் எழுத்தும் மிக அருமை.

அலைகள் பாலா said...

ரொம்ப மகிழ்ச்சி பிரதர்... சந்தோசமாக இருக்கிறது.

MJ said...

எல்லாம் நன்மைக்கே


--Mj