16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

சீனு said...

நீங்கள் குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக நானும் கால்களை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே இரண்டு 500 பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அவற்றை முடிப்பதே பெரும்பாடு. அதுபோக பட்டியலும் கொஞ்சம் பெரிது, அதனால் கால்களை வாங்கவில்லை. அதே சமயம் ரசிகன் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. மீண்டும் அதே பிரச்சனை பக்க எண்ணிக்கை. பின்பொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

தற்போது ஜெமோவின் காடு நாவல் வாசித்துக் கொண்டுள்ளேன் முழுக்க முழுக்க எழுத்துக்களால் நிரம்பிய நாவல் என்று கூறுவதைவிட காடுகளால் நிரம்பிய நாவல். நாவலின் கட்டமைப்பு குறித்து தெளிவு பெற காடு ஒரு சிறந்த உதாரணம் என்று நினைக்கிறன். நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்...

அனுஷ்யா said...

நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதுப்போல நான் மிகத் தீர்மானமாக வாசித்தே தீரவேண்டுமென்ற பட்டியலில் வைத்திருந்த நாவல் 'கால்கள்'. நான் கொஞ்சம் எமோஷனல் ஆசாமி என்பதால் இப்போதும் அந்த தீர்மானம் சிறிது மிச்சமிருக்கிறது. ஆனால் இந்த விமர்சனத்தால் கொஞ்சம் நீர்த்துப்போய்விட்டது என்று சொல்லவேண்டும். ஒரேயடியாக போரான நாவல் என்று நீங்கள் முத்திரை குத்தியிருப்பதுதான் காரணம்.

அப்றம் எத்தனை காலத்திற்குதான் பிரபா விமர்சகராகவே இருப்பது? சீக்கிரம் pad-up பண்ணுங்க..

Philosophy Prabhakaran said...

சீனு,

என்ன பெரிய பக்க எண்ணிக்கை. தினசரி ஐம்பது பக்கங்கள் என்கிற குறிக்கோளோடு படியுங்கள். பத்தே நாளில் ஒரு குண்டு நாவலை முடித்துவிடலாம். determination தான் முக்கியம்.

Philosophy Prabhakaran said...

மயிலன்,

எனக்கென்னவோ இது உங்களுக்கு பிடிக்கும் என்று தோன்றியது. நீங்கள் எமோஷனல் ஆசாமி என்று சொல்வதை பார்க்கும்போது அது இன்னும் உறுதியாகிறது.

அது மட்டுமில்லாமல் இது கொஞ்சம் உங்களுடைய அப்பா - மகள் பற்றிய சிறுகதையை நினைவூட்டியது. முயற்சித்து பாருங்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் pad-up செய்ய முடியாது. நிறைய prepare செய்ய வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த தீவிர வாசிப்பு. எனக்கு இன்னும் வயசிருக்கு. நீங்கள்லாம் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வருவேன்.

அனுஷ்யா said...

அப்டினா, கிட்டத்தட்ட இதே தாக்கத்தைதான் அந்த சிறுகதையும் உங்களுக்கு உண்டாக்கியிருக்கனும். என்னமோ போங்க.. நமக்கு அதுதான் வரவும் செய்யுது. வெச்சுக்கிட்டா வஞ்சன பண்றோம்..?

ரெண்டாவது இந்த விமர்சனத்தை மறக்கும் வரை நா இந்த நாவலை ட்ரை பண்ணக்கூடாது. நிச்சயம் அது என்னோட இயல்பான வாசிப்பை அனுமதிக்காது. அதுனாலதான்.

அப்றம், தீவிர வாசிப்பு'க்கு அப்றம்தான் எழுத ஆரம்பிக்கனும்'ன்னு இல்ல. நிறைய வாசிக்கும் போது நம்ம சிந்தனையில் சுருக்கமோ பயமோ வந்துடும்'ன்னு நெனைக்கிறன். நம்ம ஸ்டைல் மாறிப்போகும் வாய்ப்பும் இருக்கு. வாசிப்பை குறைக்க சொல்லல. ரெண்டையும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

அதென்ன உமக்கு வயசிருக்கு...? யோவ் ஒரு ஆறு மாசம் முன்னப்பின்ன பொறந்திட்டு நம்மள என்னமோ கூன் உழுந்த கெழவன் ரேஞ்சுக்கு அடிச்சுவிட்றீரு.. ஹ்ம்ம்..