6 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 06112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மெர்சல் படம் பற்றியும் அதையொட்டிய சர்ச்சைகள் குறித்தும் எழுத வேண்டும் என்று நினைத்து முடிப்பதற்குள் அந்த டாபிக் எக்ஸ்பயரானது மட்டுமில்லாமல் அதன்பிறகு மட்டுமே நான்கைந்து டாபிக்குகள் மாறியாயிற்று !

மெர்சல் பார்த்ததும் எனக்கு இவனை போடுறதுக்கெல்லாம் எதுக்குடா கிரிக்கெட் பேட்டு, ஹாக்கி ஸ்டிக் என்றுதான் தோன்றியது. மெர்சல் வெற்றிப்படம் என்று பேசிக்கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ? ட்ரோல் செய்வதற்கான அளவிற்கு போதுமான கண்டென்ட் அதில்  இல்லை. அதே சமயம் த்தா என்னமா எடுத்திருக்கான்யா என்று சிலாகிக்கவும் எதுவுமில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், மண்ணு மாதிரி இருக்கிறது.

மெர்சல் படத்தின் கதை ஒரு பார்த்து, பார்த்து, பார்த்து, பார்த்து சலித்த மஹா திராபையான கதை. அப்பாவை கொன்றவர்களை மகன்(கள்) பழிவாங்கும் கதை. இதை எழுதுவதற்கே எனக்கு சலிப்பாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் எப்படி இதையெல்லாம் ஒரு கதை என்று நம்பி அதனை வேலையத்து போய் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதைதான் இப்படி என்றால், திரைக்கதை அதற்கு மேல். ஒரு காட்சி கூட புதிது கிடையாது. குறைந்தது நூறு படங்களையாவது நினைவூட்டும் காட்சிகள். சில ஆட்களை கடத்திக் கொல்கிறார், ஏனென்று ஒரு வறட்டு மொக்கை ஃபிளாஷ்பேக், சரி அப்புறம். பிரதான வில்லனான எஸ்.ஜே.சூர்யா சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது செய்கிறாரா என்றால் அவசர அவசரமாக தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஸ்பாட்டான பின்னி மில்லுக்கு வந்து ஹீரோக்களுடன் சண்டையிட்டு மடிகிறார். அதன்பிறகு என்னாங்கடா என்றால் படம் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, ஷங்கரின் சிஷ்யராயிற்றே. அதனாலேயே அவரைப் போலவே அங்கங்கே பூனையைப் பிடித்து சிரைத்து வைத்திருக்கிறார். உதாரணமாக, ஒரு காட்சியில் ஒரு கோவில் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதன் அருகில் உயரமாக ஒரு தண்ணீர் டாங்கி அமைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சிறியதுதான். அதிலிருந்து கொஞ்சம் தள்ளி ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்ம ஆள் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டதும் விறுவிறுவென்று லாரியை எடுத்துவந்து ராட்டினத்தை சாய்க்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் அதனை கையாலேயே இழுத்து (இவரு பெரிய புஜபல பராக்கிரமசாலி), அதனை தண்ணீர் டாங்கியின் மீது தள்ளி, டாங்கியிலிருந்த தண்ணீர் நெருப்பின் மீது கொட்டி, பிற்பாடாவது நெருப்பு அணைந்ததா என்றால் இல்லை. இக்காட்சியைக் குறித்து இரண்டு விஷயங்கள் :-

1. இதனை பாகுபலியோடு ஒப்பிடாதீர்கள். அதன் கான்டெக்ஸ்ட் வேறு. நம் மன்னர்களின் வீரத்தைப் பற்றிய அதீத புனைவுகளின் திரை வடிவம் அது !
2. ஏற்கனவே இதே போன்ற காட்சியைக் கொண்ட அநேகனை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே இப்படி தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்க மாட்டார்கள். மேலும் கதைப்படி அது கற்பனைக் காட்சி !

இப்போது இந்த அட்டு சீனுக்காக எத்தனை ஆயிரம் பேர் வேலை மெனக்கெட்டு எத்தனை நாட்கள் உழைத்திருப்பார்கள் என்று நினைத்தாலே கிறுகிறுவென்று வருகிறது. இதைத்தான் இவர்கள் அடிக்கடி ஒரு சினிமா எத்தனை பேருடைய உழைப்பு தெரியுமா என்று கோபப்படுகிறார்கள். கடல் நீரை வாளியில் அள்ளிக்கொண்டு கரையில் ஊற்றுவதற்கு பெயர் உழைப்பு அல்ல, முட்டாள்த்தனம்.

படத்தில் சின்னச் சின்னதாக பிடித்திருந்த சில சுவாரஸ்யங்கள் :-

1. வடிவேலுவின் சில்லாக்கி டும் !
2. ரோஸ் மில்க் கான்செப்ட்
3. சமந்தாவின் ஸ்லாங் (சொந்தக்குரல் என்று கேள்வி)
4. சத்யராஜின் விளையாட்டுகள்

எவ்வளவு யோசித்தாலும் அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை. காஜல் அகர்வாலை எல்லாம் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. 

சர்ச்சைகள் செக்ஷனுக்கு வருவோம். வாட்ஸப் நம்ம ஆட்களை எப்படி கெடுத்து வைத்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெர்சல். இருந்துவிட்டு போகட்டும். ப்ளாகில் ஒரு ஐநூறு வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதினாலே அதில் ஏதாவது தகவல் / எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா என்று கூகிள் செய்து கவனமாக சரி பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமா எடுப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் ? அதுவும் இது ஜாலியான லவ் படமோ, காமெடி படமோ கிடையாது. நேரடியாக இந்திய அரசை விமர்சிக்கிற முக்கியமான விஷயம். அதைப் போய் அசிங்கமாக வாட்ஸப்பில் இருந்து திருடி அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

GST பற்றிய பிழையான வசனம், டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனம் போன்ற ஒன்றிரண்டை தவிர்த்துப் பார்த்தால் மத்திய அரசை கோபப்படுத்தும் வகையில் எல்லாம் எதுவுமில்லை. (அப்படிப் பார்த்தால் ஜோக்கர் படத்திற்காக நம் திருவாளர் ஐம்பத்தியாறு அங்குலம் இந்நேரம் தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்). தேவையில்லாமல் தூக்கிவிட்டு படத்தைக் கொஞ்சம் கூடுதலாக ஓட வைத்துவிட்டார்கள்.

மருத்துவத் துறையை பற்றி சொன்ன விஷயங்களில் ஓரளவிற்கு உண்மை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருமுறை மதுரை போயிருந்த சமயம், ஆட்டோகாரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். மதுரையில் எங்கே சாலை விபத்து நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டுமென அவர்களுக்கு ரகசியமாக அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம். அதற்காக அவர்களுக்கு கமிஷன் உண்டாம். சிஸேரியன் கட்டாயங்களை நிறைய மருத்துவமனைகளில் கண்கூடாக பார்க்கிறோம். இதில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் எல்லா மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இப்படி இல்லை என்பதுதான். நம் எல்லோருக்கும் ஐந்து ரூபாய் டாக்டரைப் போன்ற ஒரு மருத்துவரையாவது தெரிந்திருக்கிறது. நாம்தான் ஏனோ அவர்களை மருத்துவராகவே மதிப்பதில்லை. இன்னமும் சுகப்பிரசவத்திற்காக காத்திருக்கும் மருத்துவமனைகள் நிறைய இருக்கின்றன. 

மெர்சலில் காயப்படுத்தப்பட்ட அரசியல், மருத்துவம் இரண்டு விஷயங்களும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய படங்களில் அடித்து துவைக்கப்பட்டவையே. அரசியலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதுள்ள எல்லா பெரிய நடிகர்களும் அரசியல்வாதியின் சட்டையைப் பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் மாஃபியா என்பது சமீபத்திய வருடங்களில் ஒரு புது ஜான்ராவாக உருவெடுக்கும் வகையில் நிறைய எடுத்துவிட்டார்கள். ஆனாலும் மெர்சலுக்கு மட்டும் இத்தனை அழுத்தம் கொடுக்க வேண்டிய காரணம் அரசியல்.

இன்னொரு விஷயம் இருக்கிறது. நீண்ட வருடங்களாகவே நம் ஷங்கர், மணிரத்னம், முருகதாஸ், கேவி ஆனந்த் வகையறாக்களின் போலி சமூக உணர்வு. உதாரணத்திற்கு, கத்தி என்கிற படத்தை எடுத்துக்கொள்வோம். கத்தி வெளியாகியிருந்த சமயம் ஒரு நண்பர் அதனை பார்த்துவிட்டு வந்து முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சோஷியல் காஸுக்காக எடுத்திருக்கிறார்கள் என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. கத்தி படத்தின் அதிநாதம் கார்ப்பரேட் எதிர்ப்பு. ஆனால் அப்படத்தை தயாரித்தது பக்கா கார்ப்பரேட் நிறுவனம். அரசியல்வாதிகளை விமர்சித்த கோ என்கிற படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின். இதைத்தான் போலித்தனம் என்கிறேன். நேரடியாக சொல்வதென்றால் எச்சைத்தனம். திரைக்கு வெளியே சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இணக்கமாகவே இருக்கிறார்கள். திரையில் மட்டும் சும்மா உள்ளுளாயி காட்டுகிறார்கள். அதனால் நாம் இதற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஐ லவ் ஜோசப் விஜய் என்றெல்லாம் ஹாஷ்டாக் போட வேண்டியதில்லை. அநீதியும், அநீதியும் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதையும் தாண்டி மெர்சலுக்கு ஆதரவாக களமாடியவர்கள் ஒன்று, பிஜேபி எதிர்ப்பாளர்கள் அல்லது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள் என்று விஜய்யும் அட்லியும் புரிந்துகொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

குரங்குபெடல் said...

மிக அருமையான பதிவு
இந்த இயக்குனர்களுக்கு சமுகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல்
போலியான சமூக அக்கறையுடன்
ஹீரோவின் ப்ரோமோஷனுக்காக செயல் படுவதின் விளைவே இது மாதிரியான திரைப்படங்கள் .

Ponmahes said...

WOW.....