20 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 20112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிறைய சொதப்பல்களுடனும் நிறைய ஆச்சர்யங்களுடனும் கோவா பயணம் முடிந்திருக்கிறது. மற்றபடி ஜனவரி 22 வரை கோவா பயணம் குறித்து எழுதுவதற்கு தடை உத்தரவு இருப்பதால் 2018ல் விரிவாக பார்க்கலாம்.

இப்போது ஒரு பாடல் பற்றி...

நீண்ட ப்ளேலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட பட்டினத்தாரின் கரும்பு போன்றது. எல்லாப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் இடையே திடீரென ஒரு பாடலில் மனது நின்றுவிடும். கரும்பு இனிக்கும். அக்குறிப்பிட்ட பாடல் மட்டும் ரிப்பீட்டில் ஒலிக்கும். அப்படி சமீபத்தில் இனித்த கரும்பு தீக்குருவி. படம்: கண்களால் கைது செய்.

இப்பாடலை இத்தனை வருடம் தவறவிட்டதற்காக வருந்துகிறேன். எதோம்மா எதோம்மா என்று ஏதோ மாதிரிதான் தொடங்குகிறது பாடல். தொடர்ந்து ஹரிணியின் குரலில்

தீக்குருவியாய்
தீங்கனியினை
தீக்கைகளில்
தீஞ்சுவையென
தீப்பொழுதினில்
தீண்டுகிறாய்

மனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் பாயும் முறையை எப்படியோ கண்டுணர்ந்து அதனை இசை வடிவமாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழுக்கென இருக்கும் தனித்துவமான ஒலிச்சுவையை இப்பாடலில் உணரலாம். இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் ! கவிஞரின் வரிகள் ஒரு வகையான ரசனை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதன் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. ஹரிணியின் குரல் கேக்கின் மீது வைக்கப்பட்ட செர்ரி !

அடுத்தது சரணம். கடந்த ஒரு வாரத்தில் இந்த முதல் சரணத்தை மட்டும் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.

சில்லிடவா சீண்டிடவா
கிறங்கிடவா கிறக்கிடவா
கை தொடு தந்திரா !
அடி யாழ் உடலிலே
வாள் இடையிலே
நுரையாய் மறையாதா
நிறைத்திடு நந்திதா !
இடையோர மூன்றாம்பிறையே
முத்தம் ஏந்தி வா வா...
இமையோரத் தூவல் சிறையே
துயில் தூக்கிப் போ போ...

ஆண்குரல் முகேஷ் ! அவருடைய முதல் பாடல். பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு போக வேண்டிய பாடலை ரஹ்மான் முகேஷிற்கு கொடுத்ததாக முகேஷே ஒரு பேட்டியில் சொல்கிறார். இவருடைய குரலில் வரும் இறக்கங்களும் கிறக்கங்களும் பயங்கரம் ! இரண்டாவது சரணத்தில் சொல்லிடு நந்திதா என்று கெஞ்சலாக / கொஞ்சலாக பாடுமிடம் அபாரம்.

ஒருவேளை நீங்களும் என்னைப்போல இப்பாடலில் மயங்கி இதன் ஒளிப்பிரதியை பார்க்க நினைத்தீர்கள் என்றால் செத்தீர்கள். மொத்தமாக கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் வசீகரனும், ப்ரியா மணியும் டாம் & ஜெர்ரி போல ஸ்விஸ் தெருக்களில் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடுகிறார்கள். இன்னொரு பக்கம் பழைய தூர்தர்ஷன் காண்டம் விளம்பரங்களில் எல்லாம் வருவது போல ஹீரோவும் ஹீரோயினும் அரை நிர்வாணமாக வந்து போகிறார்கள். உச்சபட்ச வன்கொடுமை என்பது வசீகரனின் முகபாவனைகள் தான். ப்ரியா மணி போன்ற அல்வாவோடு ஜல்ஸா பண்ணும்போது கூட க்ரீன் டீ குடித்த மிஸ்டர் பீன் மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்.

தேன்மொழி தாஸ்
இப்பாடல் உருவான விதம் பற்றி கவிஞர் தேன்மொழிதாஸ் (பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்) கூறியிருப்பது -

பாரதிராஜா அவர்களின் 'கண்களால் கைது செய்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது, ரஹ்மான் சாரின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பாடல் கம்போசிங்கின்போது செல்வேன். ஒருநாள் சிறிய பாடல் மெட்டைக் கொடுத்து 'இதற்கு வரிகளை எழுதுங்கள்' என்றார். அந்தப் பாடலை ஹெட்போனில் கேட்டேன். அந்தப் பாடலுக்கு 'கப குபா'ன்னு பின்னணியில் ஒரு இசை வந்தது. அதற்கு மூன்று பக்கத்துக்கு வரிகளை எழுதிக் காட்டினேன். பின்னணி சத்தத்துக்கு இத்தனை வரிகளை எழுதியுள்ளீர்களே! என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே? நீங்கள் எழுதுங்கள் பார்ப்போம்!என்று மெட்டைக் கொடுத்தார். ஒரு மெட்டல் புளூட்டில் இடைவெளி விடாமல் அந்த இசை வாசிக்கப்பட்டிருந்தது. அது, சவாலான மெட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்கு நான் 'தீக்குருவியாய் தீங் கனியினை தீக் கைகளில் தீஞ் சுவையென தீப் பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே தந்திரனே பூமந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியில் தேடுகிறாய் தந்திரா' என்று பாடல் வரிகளை எழுதி அவரிடம் காண்பித்தேன். படித்த ரஹ்மான் சார் 'இன்றே இந்தப் பாடலை பதிவாக்கிவிடுவோம்' என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் இறங்கினார். அவருடைய குருநாதர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜான்சன், அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாடினார். 'ஏதோமா ஏதோ மாதிரி போதே என்ன வழியில்லையா' என்று ஜான்சன் தொடங்க, முகேஷும் ஹரிணியும் 'தீக்குருவியாய் தீங் கனியினை' பாடலைப் பாட ஆரம்பிக்க அருமையான மெலடி பாடலை கேட்க முடிந்தது.

கண்களால் கைது செய் படத்திற்கு வசனம் எழுதியது நம் சுஜாதா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். படம் குறித்தும், தீக்குருவி பாடல் குறித்தும் சுஜாதா அவருக்கே உரிய பாணியில் எழுதியவை –

கோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டும்போது தினம் ஒரு ஸ்வர்ண மாளிகைக்கான வினைல் விளம்பரத்தில் ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்ப்பேன். என்னையே விழுங்குவதுபோலப் பார்வை. இந்தப் பெண்ணைக் கோடம்பாக்கம் விட்டு வைக்காதே என்று யோசித்தேன். கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தி  விட்டார். பெயர் ப்ரியாமணி. கண்களால் கைது செய் என்னும் கவிதைத்தனமான தலைப்பு கொடுத்துவிட்டு ஒரு க்ரைம் கதை பண்ண விரும்பினார் பாரதிராஜா. அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்த ப்ரேம் கொடுத்த ஐடியா. ஹோப் டைமண்ட் போன்ற ஒரு மிகப் பெரிய வைரத்தை ஒரு கண் காட்சியில் திருட்டுப் பழக்கம் உள்ள பணக்காரக் கதாநாயகன் திருடிவிடுவதாகவும் கண்காட்சியில் அதற்குப் பொறுப்பேற்றிருந்த விற்பனைப் பெண்ணான கதாநாயகி மேல் பழி விழுவதாகவும் போலீஸ் விசாரணையில் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போலக் கதாநாயகனுடன் சுவிட்சர்லாந்து சென்று அவன் எங்கே வைரத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று கண்டு பிடிக்க நாய்க்குட்டியின் கழுத்திலும் மீன் தொட்டியிலும் தேடி…  இப்படிக் காமா சோமா என்று கதை சென்றது. அதைக் கூடிய வரையில் இஸ்திரி போட்டு நேராக்க முயன்றேன்.

ஒரு கட்டத்தில் எல்லாம் செட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்விஸ் போகவேண்டிய கெடுவில் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார். சித்ராலட்சுமணன் கோ-டைரக்டர். தோத்தாத்திரிதேன்மொழி என்று இரண்டு அசிஸ்டண்டுகள். தேன்மொழி புதுக்கவிதை எழுதும் பெண் கவிஞர். ஏ.ஆர்.ரெஹ்மான் மெட்டு ஒன்றுக்கு அவர் எழுதிய பாடல் வரிகள் (தீக்குருவி) இன்று வரை யாருக்காவது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

ப்ரியாமணி அந்தப் படத்தில் பஸ் ஸ்டாண்டில் காணாமற்போன குழந்தைப் போலத்தான் தெரிந்தார். மாடலிங் உலகமும் சினிமா உலகமும் வேறு என்று தெரிந்துகொள்ளவே அவருக்கு நாளாயிற்று. கதாநாயகனும் புது நடிகர். கோயமுத்தூரிலிருந்து வந்த அழகான முஸ்லிம் இளைஞர். அவர் பெயரை மாற்றி கொச்சைச் தமிழில் அவரையே பேச வைத்தது படத்துக்குப் பெரிய பின்னடைவாயிற்று. ப்ரியாமணியின் குரல் சரியில்லை என்று அவருக்குத் தமிழ் சினிமாவின் அனைத்துக் கதாநாயகிகளுக்கும் குரல் தரும் சவீதாவோ ஜெயகீதாவோ டப்பிங் குரல். கண்களால் கைது செய் தமிழ் மக்களின் கவனத்தைக் கைது செய்யவில்லை.  மறுபடியும் இது ஒரு த்ரில்லரா, காதல் கதையா என்கிற குழப்பத்தில் தவித்தது கதை.

சுஜாதாவின் வரிகளை படித்ததும் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆறுதல் – கதாநாயகனுக்கு வசீகரன் என்கிற பெயரை தலைவர் தான் சூட்டியிருக்கிறார் !

தகவல்கள் உதவி:
விஜய் மகேந்திரன் (மின்னம்பலம்)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

சூப்பர் சுந்தரி said...

நல்ல பதிவு