27 November 2017

பிரபா ஒயின்ஷாப் – 27112017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தீரன் அதிகாரம் ஒன்று பார்த்தாயிற்று. இரண்டு தடவை. சில படங்களை இரண்டாவது முறை பார்க்க வேண்டிய நிர்பந்தம் என்பது திருமணமானவர்களுக்கே உண்டான சங்கடங்களில் ஒன்று. எனினும் நானும் சில விவரங்களுக்காக தீரனை மீண்டும் பார்க்க விரும்பியிருந்தேன். 

சிறுகுறிப்பாக, தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படம். தீரனிடம் எல்லோரையும் கவனிக்க வைத்த விஷயம் அதன் கதை. அடிக்கடி நினைப்பேன். சினிமாக்காரர்கள் போலீஸ் ரெகார்டுகளையும், மனநல மருத்துவமனை கேஸ் வரலாறுகளையும் புரட்டினாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான கதைகள் கிடைக்கும். ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கு என்றெல்லாம் ஆபாசமாக உளற வேண்டியதில்லை. அப்படி போலீஸ் கேஸ் கட்டுகளிலிருந்து ஒரு சுவாரஸ்யமான கதையை முந்திக்கொண்டு எடுத்திருக்கிறார் வினோத். அது மட்டுமல்ல தீரன் என்கிற ஃப்ரான்ச்சைஸை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார். இனிவரும் காலங்களில் தீரன் அதிகாரம் 133 வரை கூட எடுக்கலாம் என்னும் அளவிற்கு நம்மிடம் விஷ ஊசி வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. 

தீரனைப் போலவே இந்த ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட இன்னொரு ஃப்ரான்ச்சைஸ் துப்பறிவாளன். என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு ஃப்ரான்ச்சைஸ்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள தங்க முட்டையிடும் வாத்துகள். ஆனால் சினிமாக்காரர்கள் அவற்றை கண்ணும் கருத்துமாக கையாள்வார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் வாத்துகளை கழுத்தறுத்துப் போடுவதில் சினிமாக்காரர்கள் ஸ்பெஷலிஸ்டுகள். எப்போதும் சீக்வெல் படங்கள் எடுக்கும்போது அது முந்தைய பாகத்தைப் போல சிறப்பாக இல்லை என்று பேச்சு வந்துவிட்டாலே அது அதன் குறிக்கோளில் தோல்வியடைந்துவிட்டதாக பொருள். அந்த வகையில் தீரன், துப்பறிவாளன் படங்களின் அடுத்த பாகங்களை எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துப்பறிவாளன் அடுத்த பாகத்தை மிஷ்கினும், தீரனின் அடுத்த பாகத்தை வினோத்தும் இயக்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் மாற்றி இயக்கிப் பார்க்கலாம். எல்லாம் வெற்றிகரமாக அமைந்தால் இன்னொரு பத்து வருடங்களுக்குப் பிறகு தீரனும், துப்பறிவாளனும் ஒருசேர தோன்றும் படத்தை யாரேனும் இயக்கலாம். கொஞ்சம் அளவிற்கு அதிகமாக ஆசைப் படுகிறேனோ ?

இவ்வளவு சிலாகிப்பதால் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான படம்தான். ஆனால் பார்வையாளர்கள் அதனை செமத்தியான படம் என்று சொல்லும் அளவிற்கு அதன் இயக்குநர் காட்சிகளை தந்திரமாக கட்டமைத்திருக்கிறார். படத்தின் கதையை சில அத்தியாயங்களாக பகுத்து, ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக தயார் செய்கிறார் வினோத். இதனை இயக்குநரின் முதல் படமான சதுரங்க வேட்டையிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பாகங்களை தனித்தனியாக பார்த்தால் கூட ஒரு சிறுகதை படித்தது போல துண்டாகப் புரியும். மேலும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் பார்வையாளர்களை அக்காட்சிக்கு தயார் செய்கிறார், காட்சியின் இறுதியில் அது ஒரு பயங்கரமான காட்சி என்று நிறுவியும் விடுகிறார்.

ஸ்பாய்லர்கள் கவனம் ! பனே சிங் கைதாகும் காட்சியை எடுத்துக் கொள்வோம். சமாதானம் பேசப்போகும் தீரனுக்கு கொள்ளைக் கும்பல் பற்றிய ஒரு தகவல் கிடைக்கிறது. அது என்ன என்பது பார்வையாளர்களுக்கு முதலில் சொல்லப் படவில்லை. ஆனால் அவன் சமாதானம் பேசுவதை விடுத்து வேறு ஏதோ விவகாரமாக செய்யப் போகிறான் என்று மட்டும் புரிகிறது. தகவல் கிடைக்கும் இடத்திற்கு தன் அணியுடன் போய் காத்திருக்கிறான். தகவல் வருகிறது. பெரிதாக ஒன்றுமில்லை. பனே சிங் எனும் முக்கிய குற்றவாளி அவ்வழியாக வரும் பேருந்தொன்றில் பயணிக்கிறான். தீரனின் அணி அவனை கைது செய்கிறது. எப்படி ? கைது வாரண்டை காட்டி, மிஸ்டர் பனே சிங், யூ ஆர் அண்டர் அரெஸ்ட் என்று கிடையாது. பனே சிங்கை பலவந்தமாக கைது செய்ய முற்படும்போது அவன் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிக்க முயல்கிறான். தீரனின் அணி அவன் தப்பித்துவிடாமல், அதே சமயம் உயிரிழந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறது. பனே சிங்கிற்கும் தீரனின் அணிக்கும் ஒரு நீண்ட போராட்டம் காட்சிப் படுத்தப்படுகிறது. அந்த நீண்ட காட்சியின் முடிவில் பார்வையாளர்களின் மனதில் அடேங்கப்பா என்றொரு போலியான ஆச்சர்யம் ஏற்பட்டுவிடுகிறது. இதே போல பவாரியா கொள்ளையர்கள் ஆய்வாளர் சத்யாவின் வீட்டை கொள்ளையடிக்கும் காட்சி, பனே சிங்கை அவனுடைய கிராமத்தில் வைத்து கைது செய்ய முயலும் காட்சி, இறுதியில் ராஜஸ்தானிய கிராமத்தில் நடைபெறும் ஓநாய் சண்டைக்காட்சி என்று ஒவ்வொரு நீளமான காட்சியிலும் வினோத் ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறார். ஆச்சர்யமில்லை, படம் வெற்றியடைகிறது. 

மற்றபடி இயக்குநர் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சொல்லப்போனால் தீரன் ஒரு பீரியட் படம். ஆனால் அதற்குண்டான உழைப்பு அவ்வளவாக தெரியவில்லை. வசந்த மாளிகை டிஜிட்டல் வெர்ஷன், பளபள அட்டை காமிக்ஸ் எல்லாம் எப்போது வந்தது ஸ்வாமி ? மேலும் ஒரு ரயில் சண்டைக்காட்சியில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொருவராக பரவியிருக்கும் காவல்துறையினர் ப்ளூடூத் அல்லது அது போன்றதொரு சாதனத்தில் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். கதை நடைபெறும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அத்தனை வளர்ந்திருக்கவில்லை.

சில காட்சிகளை பார்க்கும்போது அதனை தியேட்டரில் ரசிகர்கள் எல்லாம் விசிலடிக்க வேண்டும் என்ற நோக்கில் படம் பிடித்திருப்பார்கள் போல தெரிகிறது. இக்காட்சிகளில் எல்லாம் கார்த்தியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு காட்சியில் கொள்ளை கும்பலிடம் பிடிபட்ட லாரியை சோதனை போடுகிறார்கள். அதற்கு என்னவோ கார்த்தி லாரியின் மீது ஏறி நின்றுக்கொண்டு ‘புல் !’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா ? இன்னொரு காட்சியில் பயங்கரமாக ஏதோ செய்யப்போகிறார் என்று நாம் யூகிக்கும் தருணத்தில் ‘லத்தி சார்ஜ்’ என்று அதே தொனியில் கத்துகிறார். மொத்த படத்தில் நான்கைந்து முறை இதே தொனியில் கத்துகிறார் கார்த்தி. பீஸ் ப்ரோ !

வழக்கமாக கமர்ஷியல் ஆக்ஷன் படமென்றால் அதில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது அல்லவா. பெரும்பாலான படங்களில் இரண்டாம் பாதியில் ஹீரோயின் காணாமல் போய்விடுவார். அத்தோடு க்ளைமாக்ஸில் உறுத்தும்படியாக திடீரென தோன்றி, அய்யர் வந்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஹீரோ ஹீரோயினிக்கு தாலி கட்டுவதாக சுபம் போடுவார்கள். நம் இயக்குநர் தந்திரமாக முதல் பாதியின் இறுதியில் ஹீரோயினை காலி செய்கிறார். அத்தோடு நில்லாமல் ஹீரோயின் மீதான ஹீரோவின் காதலை ஒரு எமோஷனல் அஸ்திவாரம் அமைத்து அதிலேயே ஜம்மென்று படுத்துக்கொள்கிறார். 

ஆனால் பாருங்கள் காதல் காட்சிகள் அப்படியொன்றும் செல்ஃப் எடுக்கவில்லை. ரகுல் நல்ல அழகிதான். ஆனால் அவருடைய பயன்பாடு என்னவென்று பாவம் இயக்குநருக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும் கார்த்தியும் ரகுலும் காதல் செய்யும்போது அவர்கள் நிஜமாகவே காதல்தான் செய்கிறார்களா என்றே சந்தேகப்படும்படியாக அழுத்தமில்லாமல் இருக்கின்றன காட்சிகள். பேசாமல் இருவருக்கும் வீட்டில் பார்த்து மணமுடித்து வைப்பதாக காட்டியிருந்தால் இவ்வளவு தொந்தரவுகள் இருந்திருக்காது. ரகுல் வேறு கார்த்தியை பழங்கால அத்தையைப் போல மாமா மாமா என்று அழைத்து கடுப்பேற்றுகிறார்.

இரண்டாம் பாதியில் வரும் டிங்கட் டிங்கட் டிங்கனா பாடல் தரம். ரகுலின் பயன்பாடு தெரியாத இயக்குநருக்கு ஸ்கார்லெட்டின் பயன்பாடு தெரிந்திருப்பது ஆச்சர்யம். வேற்று மொழி ஆட்கள் பேசும் வசனங்களுக்கெல்லாம் சப்டைட்டில் போட்டு சோதனை செய்யாமல், அதே சமயம் உறுத்தாமல் தமிழ் பேச வைத்தது நல்ல துவக்கம். தீரனின் பிரதான பலம் அதன் கதைதான். படம் பார்த்தபிறகு ஒரிஜினல் தீரன் ஜாங்கிட்டின் தீரச் செயல்களை இணையத்தில் படித்தேன். சினிமாவுக்காக கொஞ்சம் ஜிகினா காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மை கதையும் நிஜமும் ஒத்துப்போகிறது. நடந்த சம்பவத்தைத் தான் படமாக்கியிருக்கிறார்கள், இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான படம் என்றெல்லாம் சீரியஸாக முறுக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Ponmahes said...

அருமையான பதிவு...ரசகுல்லாவ சாகாம காட்டியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்....கெரகம் புடிச்ச டைரக்டரு.....

Hold my Point said...

Greeat reading your blog post