4 May 2020

நள்ளிரவின் நடனங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஊரடங்கிற்கு முன் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேருந்து பயணத்தில், கிண்டிலில் நள்ளிரவின் நடனங்கள் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். முதல் கதையே கோவா செல்லும் திருமணமான நான்கு பேச்சுலர்களைப் பற்றியது. இரண்டாவது கதை ஊட்டியில் தொடங்கியது. ஒரு நிமிஷம். இது பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் போலிருக்கிறதே என்று எடுத்து கமுக்கமாக உள்ளே வைத்துக் கொண்டேன்.

அத்துடன் வர்கலாவில் ஒரு சிம்பாவையும், ஒரு பீராவையும் உள்ளே சாத்தியிருந்த ஒரு நள்ளிரவில் நடனங்களைத் தொடங்கினேன்.

மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். எழுத்தாளருடைய சுருக்கமான, அடக்கமான முன்னுரை. வீம்புக்காக ஒரு குழந்தை எழுதிய கதைகள் என்று தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார் அராத்து. மேலும் முன்னுரையில் புது முயற்சி, தனித்துவம் போன்ற சில குறிச்சொற்களையும் கவனித்தேன்.

வழக்கமாக அராத்துவின் புத்தகங்களில் சாருவின் முன்னுரை இருக்குமில்லையா ! அது இந்த புத்தகத்தில் இல்லை. அதனால் மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடிந்தது. 

பெரும்பான்மை கதைகள் நவீன உலகின் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. அப்பர்-மிடில் கிளாஸ் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. அவ்வளவு கதைகளும் டிராவல் சம்பந்தப்பட்டவை இல்லை என்றாலும் கோவா, ஊட்டி, புவனேஷ்வர், லங்காவி, புக்கட் என்று பயணிக்கின்றன. பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் என்ற கருத்தில் மாற்றமில்லை.

பொதுவாக தமிழ் புனைவுகளில் உவமைகளுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் வைத்திருப்பார்கள். அவற்றை மொத்தமாக காலி செய்து, முற்றிலும் வேறொரு கோணத்தில் உள்ளது அராத்தின் உவமைகள். சில உதாரணங்கள் - தெலுங்கு சினிமாவின் பாடல் காட்சியில் முதல் வரிசையில் ஆடுபவளைப் போல் இருந்த ஒருத்தி – மாபெரும் லேடீஸ் ஹாஸ்டலில் அழகிய இளம்பெண்கள் அனைவரும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டதைப் போல கூடுதல் பச்சையுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன செடிகள்.

அதே போல சின்னச் சின்னச் கிண்டல்கள். வேலைக்காரி, வேலைக்காரி என்று தொடர்ந்து சொல்ல வேண்டாம். பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் ஆசாமிகள் படையெடுப்புக்கு ஆளாக வேண்டி வரும் – ஃபில்டர் காஃபி குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனாலும் கிரீன் டீ. குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பதால் மற்ற அனைத்திலும் ஹெல்த்தியாக இருந்தாக வேண்டி இருக்கிறது – இலக்கியம் என்றால் டி.ராஜேந்தர் பொண்ணுதானே என்று கேட்கும் அளவுக்கு சமர்த்தனாக தன்னை வளர்த்தெடுத்து இருந்தான். ஒரு சிறுகதைக்குள் குட்டிக்கதையாக வரும் நவ் ஹீன் முழுக்கவே பட்டாசு.

இந்திய நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பற்றிய ஒரு மெல்லிய நையாண்டி அராத்துவின் கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஒரு இடத்தில் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் பற்றிய வர்ணனை வருகிறது. எண்பது சதவிகிதம் வெளிநாட்டினரால் நிரம்பி வழியும் ரெஸ்டாரண்ட் அது. ஒவ்வொருவரும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே வருகிறார். சில ரஷ்யர்கள் கஞ்சாவோ ஏதோ புகைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கிடார் வாசித்துக்கொண்டிருந்தான். இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் என்று நீளும் அந்த வர்ணனை கடைசியாக ஒரு இந்தியன் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருந்தான் என்று முடிகிறது.

அதே சிறுகதையில் இன்னொரு இடத்தில் வகதூர் பீச்சில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தது என்று வருகிறது.

அராத்துவின் ஒரு சில கதைகளில் ஒரு பிரபல எழுத்தாளரின் சாயல் தெரிவதாக யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென எழுத்தாளரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ம்ஹும். சார்லஸ் புக்கொவ்ஸ்கி, ழார் பத்தாயெல்லாம் இல்லை. அவர்களை நான் படித்தது இல்லை என்பதால் அராத்து, அவர்களின் சாயலில் எழுதுகிறாரா அல்லது அவர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டாரா என்பது குறித்து என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. நான் கவனித்தது வாமு கோமுவின் சாயல். குறிப்பாக வெடுக் ராஜா, அபாயம் ஆகிய இரண்டு கதைகளும் வாமு கோமு ஸ்டைல். வெடுக் ராஜா கதையை படிக்கும்போது களவாணி விமல் நினைவுக்கு வந்தார்.

இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை எழுத்தாளரின் சொந்த மற்றும் நண்பர்களுடைய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை என்று உணர முடிகிறது. உறைவிடப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றிய கதை ஒரு உதாரணம். இன்னொரு கதையில் ஹீரோ ஒரு பீச் ரெசார்ட் பார்ட்டிக்கு போகிறான். அந்தப் பார்ட்டியைப் பற்றி குறிப்பிடுகையில் – கண்டிப்பாக மறக்காமல் அவசியம் தங்களுக்கான மதுவை தாங்களே எடுத்து வாருங்கள் என காலில் விழாத குறையாக அந்தக் குழுவின் அட்மின் பல போஸ்ட்டுகள் மூலம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் என்று எழுதியிருக்கிறார். 

ஆங்காங்கே சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் முக்கியமான பரிசோதனை புக்கட் என்கிற சிறுகதை. மல்டிபிள் பர்ஸன் நரேடிவ் முறையில் பயணிக்கிறது இக்கதை. ஒரு தாய்லாந்து லோக்கல் ஆள், ஒரு விலைமகள், ஒரு இந்திய இளைஞன். ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லை. அக்கதையில் ஒரு கட்டம் இப்படிப் போகிறது –

அவளை அழைத்து இந்திய நண்பனிடம் கை காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். லவ் யூ டார்லிங்க்என்றாள். 

லவ் யூ டார்லிங்க்என்று சொல்லி அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதய துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது. 

லவ் யூ டார்லிங்க்என்று அவள் சொன்னது எனக்கு இதமாக இருந்தது. ஒரு ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள்.

ஒரு சின்ன சம்பவம். அதனை மூவரும் அவரவர் பார்வையில் சொல்கிறார்கள். இக்கதை வாசகர்களுக்கு ஒரு சிறிய சவாலையும், வாசிப்பின்பத்தையும் வழங்குகிறது.

முன்னுரையில் எழுதியிருப்பது போலவே புது முயற்சியும், தனித்துவமும் அராத்துவின் கதைகளில் நிரம்பியிருக்கின்றன. அதே சமயம் ஒருவித அலட்சியமும் தென்படுகிறது. அராத்து தன்னுடைய கதைகளை ரொம்ப கேஷுவலாகவும், சில சமயம் வாய்ஸ் டைப்பிங் மூலம் எழுதுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளன் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது தான். அதே சமயம் எழுத்தாளனுக்கு டிலிஜென்ஸ் மிக மிக அவசியம். எழுத்தாளர் கூடுதலாகக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதே புத்தகத்தை இன்னும் மேம்பட்ட வடிவில் தந்திருக்கலாம்.

கடைசியாகத்தான் கவனித்தேன். சாருவின் சுருக்கமான ஒரு முன்னுரை பின்னட்டையில் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

”நீரின்றி அமையது உலகு” “சாருவின்றிஅமையாது அராத்து”

Anonymous said...

தென்னையின் கீற்று விழவில்லை என்றால் தென்னைக்கு ஏது வளர்ச்சி?
தென்னையின் கீற்று விழுந்துவிட்டதென்றால் பாடைக்கு நல்ல பயிற்சி!
தங்கத்தை தீயில் இடவில்லை என்றால் இன்கம் டேக்ஸ்காரனுக்கு நல்ல வளர்ச்சி!