26 November 2020

வர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: தொடக்கம்

வர்கலா பயணத்தில் உண்ண, உறங்க, உற்சாக பானம் அருந்த என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். ஏற்கனவே வர்கலா சென்று வந்த சில நண்பர்களிடம் தகவல்கள் கேட்டிருந்தேன். அதில் ஒரு அண்ணன் செளத் வேணாம் நார்த் போ, கீழே இருக்காதே மேலே போயிடு என்று சில சங்கேத குறிப்புகள் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. நான் கீழே மேலே பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. மகிழ்ச்சிதான் முக்கியம். பின்னர், வர்கலாவின் புவியியலை ஆராயும்போது தான் அண்ணன் சொன்னது புரிய வந்தது.

கோவாவைப் போலவே வர்கலாவையும் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதே போல வடக்கு ஆரவாரமானது, தெற்கு அமைதியானது. இரண்டுக்கும் மத்தியில் வர்கலா ஹெலிபேட். வர்கலாவைப் பற்றி கூறும்போது க்ளிஃப் (cliff) என்று குறிப்பிடுகிறார்கள். Cliff என்றால் செங்குத்தாக இருக்கக்கூடிய சிறிய குன்று (குறிப்பாக கடற்கரைக்கு அருகில்) என்று பொருள். மேலே குன்று, கீழே கடல். அண்ணன் சொன்னது இதுதான் !

நான் எனது நான்கு நாள் பயணத்தை இரண்டாக வகுத்துக் கொண்டேன். முதலிரு நாட்கள் தெற்கு, அடுத்த இரு நாட்கள் வடக்கு. தெற்கில் நான் சல்லடை போட்டு தேடிச் சலித்து முன்பதிவு செய்த விடுதியின் பெயர் ஆதாமிண்ட ஸ்வர்க்கம் (Adam’s Paradise). எனக்காகவே பிரத்யேகமாக தயார் செய்தது போலிருந்தது அவ்விடுதி !
 
விடுதி கட்டிடம்
ஹெலிபேடில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், கிட்டத்தட்ட வர்கலாவின் தென்மூலையில், ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கிறது விடுதி. தனிப்பயணி என்பதால் ஒருவர் மட்டும் தங்கும் சிறிய அறையை பதிவு செய்திருந்தேன். வாடகை நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய். 
 
நீச்சல் குளம்
குன்றின் உச்சியில் விடுதி, முதல் மாடியில் அறை, கீழே நீச்சல் குளம், அதையொட்டி சிறிய லான், அங்கிருந்து கீழே பார்த்தால் பிரம்மாண்டமான அரபிக்கடல், விடுதியிலிருந்து கடற்கரைக்கு இறங்க இரும்பால் செய்யப்பட்ட படிக்கட்டுக்கள். நல்ல வாரநாட்களாக பார்த்து பயணம் செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்க விடுதியில் என்னைத் தவிர வேறு விருந்தினர்கள் யாருமில்லை !

லானிலிருந்து கடல் !
அறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் ஒரு கனவு அறை இருக்குமல்லவா. என்னுடைய கனவு அறை என்பது ஒருவர் மட்டும் படுக்கும் சிறிய கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு அலமாரி, சுத்தமான குளியலறை, கழிப்பறை. அது அத்தனையும் கச்சிதமாக அமைந்திருந்தது அந்த அறையில். தொலைக்காட்சி மட்டும் இருந்திருந்தால் பரிபூரணம் ! 

அறையில் மேஜை நாற்காலி
இந்த கோவிட், கீவிட் எல்லாம் வந்தபிறகு, தீவிரமாக WFH செய்துக் கொண்டிருந்த சமயத்தில் வர்கலாவில் நான் தங்கிய அந்த அறையை நினைத்துக் கொள்வேன். நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. மொத்தமாக நீண்ட நாட்களுக்கு வாடகைக்குப் பிடிப்பதென்றால் இன்னும் குறைவான தொகைக்குக் கூட கிடைக்கும். மேஜை, நாற்காலி, நல்ல காற்று, கடற்கரை, கேரள உணவு. BEVCO சரக்கு, அப்படியே வைக்கம் முகம்மது பஷீரைப் படித்துக்கொண்டு, வாரம் ஒருநாள் ஃபஹத் ஃபாஸில் படமோ, பார்வதி படமோ பார்த்துக்கொண்டு மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழித்திருக்கலாம் என்று தோன்றும்.

அந்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் ஏதோ அந்தப்புரத்தில் தங்கியிருந்தது போல ஒரு அணுக்கம். கட்டோடு குழலாட ஆட என்று ரிலாக்ஸ்டாக நீச்சல் குளத்தில் மிதப்பது, லானில் அமர்ந்து அரபிக்கடலை ரசிப்பது, இரவில் மதுவுடன் லானில் அமர்ந்து கடலில் சின்னச் சின்ன படகுகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளின் தொகுப்பைப் பார்ப்பது என்று ரம்மியமாகக் கடந்தன அந்நாட்கள்.

இரவு நேரத்து கடல்

குறைகள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் இலைகள் மிதக்கும். லக்ஸுரியை விரும்பும் ஆட்களுக்கு ஒத்து வராது. இரவு நேரத்தில் வெளியே பூச்சிகள் தொந்தரவு (அநேகமாக இது எல்லா விடுதிகளிலும் உண்டு). நான் ஒரே ஒரு கெஸ்ட் என்பதால் விடுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கவில்லை. நல்ல உணவகம் வேண்டுமென்றால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள டவுனுக்கு செல்ல வேண்டும் அல்லது அதே அளவு தொலைவில் உள்ள வடக்கு வர்கலாவுக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் மாலை. சுமார் ஆறரை மணி இருக்கும். சைக்கிளை எடுத்துக் கொண்டு வர்கலா டவுனுக்கு கிளம்பினேன். BEVCO சென்று மது வாங்க வேண்டும், மதுவுடன் சாப்பிட பழங்கள் மற்றும் இரவு உணவு வாங்க வேண்டும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாங்கி முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு அரை கி.மீ. வரை டவுன் கடைகளும் வெளிச்சங்களும் உதவின. அதன் பிறகு வெறும் இருட்டும் காடும் தான். ஆளரவமற்ற குறுகிய சாலைகள். திடீர் திடீரென ஒளியை பாய்ச்சியபடி கடந்து செல்லும் வாகனங்கள். ஒரு மாதிரி ஹாண்டட் அனுபவமாகிவிட்டது.

அடுத்த நாள் அதே தவறை செய்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். விடுதியில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஒரு உணவகம் இருப்பதை பகலிலேயே குறித்து வைத்துக்கொண்டேன். பக்கத்தில் தானே என்று எட்டு மணி வரைக்கும் விடுதியில் இருந்து உ.பா. அருந்திவிட்டு சாவகாசமாகக் கிளம்பினேன். நடைதொலைவு என்பதால் சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. ஊர் ஓய்ந்துவிட்டது. ஆள் நடமாட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது. யோசித்துப் பாருங்கள், இருள் சூழ்ந்த சாலை, தூரத்தில் ஒரே ஒரு வீடு, அதிலிருந்து வரும் வெளிச்சம், அங்கிருந்து கேட்கும் தொலைக்காட்சி சத்தம் ஒரு மனிதனை எவ்வளவு தொந்தரவு செய்யும். இது போதாதென்று தெரு நாய்கள் வேறு. இத்தனையையும் கடந்து உணவகத்திற்கு சென்றால் அதன் வாயிலுக்கும் உணவகம் இருக்கும் பகுதிக்குமே முன்னூறு மீட்டர் இருள் பாதை. ஆக, அன்றைய இரவும் திகிலாகவே கழிந்தது.

இவையெல்லாம் தனிப்பயணத்தின் சாதகங்களா பாதகங்களா என்றால் இரண்டும் தான் ! தனியாகச் சென்றதால் தான் இவ்வளவு த்ரில் கிடைத்தது. ஆனால் நண்பர்களுடன் சென்றிருந்தால் இது அப்படியே வேறு மாதிரி உற்சாகமான நிகழ்வாக மாறியிருக்கும்.

முக்கால் கி.மீ. நடந்து சென்றடைந்த அந்த உணவகத்தில் மூன்று மேல்நாட்டு சீமாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கிட்டாரோ ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் பஃபலோ சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ தேனிசைத் தென்றல் தேவாவும், கெளசல்யாவும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அடுத்த பதிவு: வடக்கு கடற்கரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Murali said...

Interesting 😆