23 February 2021

மியாவ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மியாவ் என்றால் என்ன ? பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடைய குரல்தான் மியாவ். Voice of Pussies ! 2018ம் ஆண்டு எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் எழுத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு!
 
சமீப நாட்களாகத் தொடர்ந்து சில அபுனைவுகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும் படித்து வந்ததாலோ என்னவோ மியாவை படிக்கத் துவங்கியதும்தான் “ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்” என்கிற ஒரு விஷயத்தின் இருப்பு குறித்து நினைவுக்கு வந்தது.
 
மொத்தம் ஒன்பது சிறுகதைகள். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகளைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன். அதற்கு முன்னால் மற்ற கதைகள் பற்றி சுருக்கமாக -

முதல் சிறுகதை – நியூட்டனின் மூன்றாம் விதி. இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அறிவியல் புனைவு. அவளை அணு அணுவாய் காதலிக்கிறேன், அவளை நினைக்கவே ஃப்ரக்டோஸ் ருசித்தது போல இருக்கிறது, அவளை வர்ணிக்கத் தமிழ் போதாது, பைனரியிலும் ஹெக்ஸாடெசிமலிலும் கூட முயன்றுவிட்டேன் என்று சுஜாதாயிஷ் சிறுகதை.

மோகினியாட்டம், அழியாக்கோலம் ஆகிய இரண்டு கதைகள் சமூக வலைதள உறவுகளைப் பற்றியது. இன்பாக்ஸில் யாரிடமும் ஃப்ளிர்ட் செய்து பழக்கமில்லாததால் இவையிரண்டும் கொஞ்சம் அந்நியமாகவே தெரிந்தன. இரண்டும் சாட்டில் வளரும் காதல் பற்றிய கதைகள். ஒன்று, ஃபேஸ்புக் சாட். மற்றொன்று, ட்விட்டர். ட்விட்டரை மையப்படுத்திய கதை அத்தளத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் நாட்களை நினைவூட்டியது.

பொதுவாகவே புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய தனிமம் இருக்கிறது.

நான்காம் தோட்டா என்கிற சிறுகதை காந்தியின் கொலையில் கோட்ஸேவின் மூன்று தோட்டாக்கள் தவிர்த்து, நான்காவது தோட்டா (இரண்டாவது ஆள்) என்று ஒன்று இருக்கிறது என்ற கான்ஸ்பிரஸி தியரியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அணங்கு என்கிற சிறுகதை NEET தேர்வு (சரியாகச் சொல்வதென்றால் அதன் ஒரு பகுதி மட்டுமே) எளிய மனிதர்களின் கனவை எப்படியெல்லாம் சீர்குலைக்கிறது என்பதைப் பற்றியது.

திரைப்படங்களில் ஆந்தாலஜி எடுப்பவர்கள் காதல், காமம், கெளரவக் கொலைகள் என்று ஏதாவது ஒரு தீம் வைத்துக்கொண்டு அது தொடர்பான படங்களை திரட்டுவது போல எழுத்தாளர்கள் சிறுகதைத் தொகுப்புகளில் ஒரே தீம் கொண்ட சிறுகதைகள் எழுதுவது குறித்து பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம், சீரியஸ் கதைகளையும் ஜாலி கதைகளையும் தனித்தனி தொகுப்பாக கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து கதைகளை படிக்கும்போது ஏற்படும் “மூட் ஸ்விங்கை” தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன்.

பெட்டை மற்றும் நீதிக்கதை ஆகிய இரண்டும் நல்ல, அதே சமயம் ஒரு எதிர்மறைத் தொனி கொண்ட கதைகள். இதில் பெட்டை என்கிற சிறுகதை பற்றி எழுத்தாளரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். நீதிக்கதை என்பது நீலத்திமிங்கலம் (blue whale) விளையாட்டைப் பற்றியது. இக்கதை எனக்குக் கொடுத்த உணர்வு வேறு மாதிரியானது. இதனை படிக்கும்போது மணி நள்ளிரவு ஒன்று. ஒரு பதின்பருவ வயதினனின் நீலத் திமிங்கல நாட்களை விவரிக்கிறது கதை. படிக்கப் படிக்க ஒரு மெல்லிய பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது. இம்மாதிரி கதைகள் கம்பி மேல் நடப்பது போன்றது. இவற்றை இளம் பருவத்தினர் படிக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாகக் கூட அமையலாம்.

சரி, இப்போது எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்.

முதல் கதை, காமத்தாழி. இது ஒரு நல்ல எராடிக்கா ! முதலில் நம் சூழலில் (அதாவது ஒரு எழுத்தாளர் ஏதாவது எழுதினால் அதை எழுத்தாளரின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கக்கூடிய சூழலில்) இப்படி ஒரு கதை எழுதுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் போனால் இது செக்ஸ் கதை. மற்ற கதைகளுக்கு இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கும் Three Act Structure உண்டு. அவற்றில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யம் சேர்த்தால் அதுதான் காமத்தாழி. செக்ஸ் கதைகளில் லஸ்ட் என்ற உணர்வின் கை ஓங்கியிருக்கும். இதில் அதனுடன் காதலும் சேர்வதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. இக்கதையின் ஒரு பகுதியில் அதன் நாயகி மாதொரு பாகன் படிக்கிறார். மாதொரு பாகனை எதிர்த்தவர்கள் கைகளுக்கு இப்புத்தகம் கிடைத்திருந்தால் சிக்கல் ஆகியிருக்கும் !

இரண்டாவது கதை, சகா – சில குறிப்புகள் (கதையின் தலைப்புப்படி மியாவ்).

ஒரு ஆணின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அவனது பிரஸ்தாபங்களை பேசும் இக்கதையில் அநேக சுவாரஸ்யங்கள். இக்கதையை முழுக்கவே ஒரு புன்னகையுடன் தான் படித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.

ஸ்கூல் படிக்கும்போது ப்ரேயருடன் சேர்த்து pledge என்று ஒன்று எடுப்போம் நினைவிருக்கிறதா ? அதனிடையே All indians are my brothers and sisters என்ற வாக்கியத்தை சொல்லி முடித்ததும் ரகசியமாக உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் except “உங்கள் அப்போதைய காதலியின் பெயர்” என்று சொல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா ? (90ஸ் கிட்ஸுக்கு மட்டுமான கேள்வி).

முன்னொரு காலத்தில், தினசரி காலை வேலைக்கு போகும்போது, பீச் ஸ்டேஷனை கடக்கையில், அங்கே ஒரு கடையின் பதாகையில் சோனி சைபர்ஷாட் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் தீபிகா படுகோனின் சித்திரத்தை தவறாமல் பார்த்துவிட்டு ஒரு நொடி அகமகிழ்ந்து கொள்வேன். அதனை ஒரு கணம் நினைவூட்டுகிறார் சகா. (டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப்பக்கம் பார்த்தாலும் தொண்ணூறு தீபிகா படுகோன்கள் !)

நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா என்று சொல்லக்கூடிய நிறைய குறிப்புகள் இக்கதையில் உண்டு.

எழுத்தாளரின் கன்னித்தீவில் கவனித்த ஒரு விஷயம் இக்கதையிலும் தொடர்கிறது. கதையில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பின்னால் ஒரு சிறிய ஆய்வு செய்திருக்கிறார் எழுத்தாளர், அதன் பின்னால் ஒரு reference இருக்கிறது. எதையுமே போகிறபோக்கில் எழுதிவிடவில்லை.

உதாரணமாக, இக்கதையில் தண்ணீரில் கரையக்கூடிய பிகினி உடையைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. அதுகுறித்து கூகுள் செய்தால் நிஜமாகவே அப்படி ஒரு பிகினி இருக்கிறது. அதைப் பற்றி கதையில் எழுதியிருக்கும் தரவுகள் நிஜத்துடன் ஒத்துப்போகிறது.
 
அதே போல கதையினூடே நிறைய டேட்டா ! ஜப்பானில் உள்ள நயோடைமோரி (NYOTAIMORI) என்கிற உணவுப் பழக்கம் குறித்து எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஜப்பானிய போர்னோ பார்த்துவிட்டு ஜப்பானியர்களுக்கு கலாரசனை சுத்தமாக இல்லை என்ற முடிவை எடுத்திருந்தேன். இதைப் படித்ததும் அதனை மாற்றிக் கொண்டேன்.

இத்தொகுப்பில் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் சகாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சகா சில குறிப்புகளை (போலவே மதுமிதா சில குறிப்புகள்) மட்டும் தனியாக ஒரு நாவலாகக் கொண்டு வரலாம். வர வேண்டும் !

மியாவ் அச்சுப்பதிப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூ. 130 (புத்தகம் வாங்க) (தற்சமயம் ஸ்டாக் இல்லை)

மியாவ் மின்பதிப்பு கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ. 65 (புத்தகம் வாங்க)

கூடுதல் தகவல் – எழுத்தாளரின் மற்றொரு புத்தகமான கன்னித்தீவு கிண்டிலில் இன்று ஒருநாள் மட்டும் (நள்ளிரவு வரை) சலுகை விலையில் (ரூ. 49) கிடைக்கிறது. (புத்தகம் வாங்க)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: