30 May 2012

மீண்டும் லியோ...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மார்ச் 23, 2003. ஞாயிற்றுக்கிழமை. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உலககோப்பை இறுதிப்போட்டி நடந்தநாள். ஞாயிறு தவறாமல் மாஸ்கான் சாவடிக்கு சென்றுவரும் தந்தை அன்று திரும்பிவரும்போது எங்களுக்கெல்லாம் அளவுகடந்த ஆனந்தத்தையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்தார். அப்பா கொண்டுவந்த கூடைக்குள்ளிருந்து அழகாக எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி. நானும் என் தங்கையும் அண்டை வீட்டு குழந்தைகளும் மாறி மாறி புது நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தோம். அடுத்ததாக நாய்க்குட்டிக்கு பெயர்சூட்டுவிழா. உலககோப்பை இறுதிப்போட்டியன்று வந்ததால் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி பெயரை வைக்கலாமா என்றுகூட விளையாட்டாக பேசிக்கொண்டோம்.

உண்மையில் எங்களுக்கு நாய்க்குட்டி என்பது புதியதல்ல. விவரம் தெரிய ஆரம்பித்திருந்த புதிதில் கறுப்பு நிற நாய்க்குட்டி ஒன்றை இதேபோலதான் அப்பா வாங்கி வந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே சாலை விபத்தில் உயிர் நீத்துவிட்டது ப்ளாக்கி. யாராவது இறந்துவிட்டால் வருத்தப்பட வேண்டும் என்றுகூட தெரியாத வயது எனக்கு. அதற்கடுத்து ஒரு பிரவுன் கலர் நாய்க்குட்டி. லியோ என்று அழைத்தால் எங்கிருந்தாலும் நம்முன் வந்து காதை உயர்த்தி சிக்னல் காட்டும். பிற்காலத்தில் லியோவிடம் நகக்கீறல் வாங்கியவர்கள் கடித்துவிட்டது என்று பயந்ததாலும், அண்டை வீட்டு வாசல்களில் சிறுநீர் கழித்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டுகளினாலும் வேறு வழியின்றி லியோவை பாதுகாப்பான ஒரு இடத்தில் விடவேண்டியதாகி போய்விட்டது.

இப்போது வந்திருக்கும் நாய்க்குட்டிக்கும் அச்சு அசலாக லியோவின் சாயல். எனவே, லியோ என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நாய்களின் வளர்ச்சி அபாரமானது. சுமார் ஆறுமாத காலத்திலேயே லியோ நன்றாக வளர்ந்துவிட்டது. அதன் அறிவும்தான். சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால் ரொம்பவும் விவரமாக மொட்டைமாடிக்கு ஓடும். அப்படியே கட்டிப்போடப்பட்டிருந்தால் கூட சன்னமான குரலில் குரைத்து அதன் நிலைமையை நமக்கு புரிய வைக்கும். முந்தய லியோவைப் போல அண்டைவீட்டார்களிடம் அளவாகவே வைத்துக்கொள்ளும். மூன்றாவது வீட்டில் குடியிருந்த அம்மையார் மட்டும் பைரவ சாமி என்று லியோவிற்கு அடிக்கடி படையல் போடுவார்.

சுஜாதாவின் என் இனிய இயந்திரா படித்துவிட்டு ஒரு வாரத்திற்கு லியோவை ஜீனோ... ஜீனோ... என்று கொஞ்சிக்கொண்டிருந்தேன். ஜீனோ அளவிற்கு இல்லையென்றாலும் லியோவும் ஜீனியஸ்தான். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் லியோ தன்னுடைய அதிநவீன செயலாற்றல் கொண்ட மூக்கினால் சோதித்தபிறகே உள்ளே அனுப்பும். சமயங்களில் அதற்கு திருப்தி இல்லையென்றால் அதகளம் தான். இருந்தாலும் லியோ பேசாம இருன்னு சொன்னா போதும், பிரச்சனை எதுவுமில்லை என்று புரிந்துக்கொண்டு அமைதியாக தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்துக்கொள்ளும். அவ்வளவு சாந்தமான லியோ சகநாய்களை மட்டும் எக்காரணம் கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்காது. திடீரென ரோட்டில் இருந்து நாய் அடிப்பட்டு அலறும சத்தம் கேட்கும். லியோவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறும்போதே சில நொடிகள் கேப் கொடுத்து கம்பீரமான குரலில் குரைத்துக்காட்டும் லியோ. பாதிக்கப்பட்ட நாய் பம்மியபடியே ஏரியாவை கடந்துபோகும்.

ஒரே வீட்டில் புறா, லவ் பேர்ட்ஸ், மீன்கள் ஆகியவற்றையும் வளர்த்து லியோவையும் நாங்கள் வளர்த்தது மற்றவர்களுக்கு பிரமிப்பாகவே இருக்கும். காலை, மாலை புறாக்களின் உணவு நேரங்களில் லியோவிற்கு இயற்கையின் அழைப்பு வந்தாலும் கூட புறாக்கள் மிரளாதபடி பூனைநடை நடந்து மொட்டைமாடிக்கு செல்லும். அதேசமயம் புறாக்களை வாசம் பிடித்து பூனைகள் வந்தால் அந்தர் பண்ணிவிடும். 

வீட்டுப்பெரியவர்களுக்கெல்லாம் பாசக்காரபிள்ளை லியோ. நாள் ஒன்றிற்கு ஆறு டீயாவது குடிக்கும் தாத்தா, அளந்துபார்த்தால் அவற்றில் மூன்றையாவது லியோவுக்குத்தான் ஊற்றியிருப்பார். அடுப்படியில் இருந்த ஆட்டுக்கறியை ஆட்டையைப்போட்டு தின்றாலும் கூட கோபப்படவேமாட்டார் அய்யம்மா. எங்கள் தலையணைகளில் பாதியை உரிமையோடு பரித்துக்கொள்ளும். எங்களைப்போலவே எங்கள் தாயோடு பாசமொழி பேசும். நாங்கள் அம்மாவோடு அதிக நெருக்கம் காட்டினால் கூட அதன் முகத்தில் பொறாமை அப்பட்டமாக தெரியும். சில சமயங்களில் அம்மா மடியில் படுத்துக்கொண்டு எங்களையும் பொறாமை படவைக்கும்.

நாய் என்றால் பால், பிஸ்கெட் சாப்பிடும் என்பது பாடப்புத்தகங்களில் படித்ததோடு சரி. மற்றபடி எங்கள் லியோவிடம் எதைக் கொடுத்தாலும் ஒருபிடி பிடித்துவிடும். முக்கியமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் லியோ கரும்பு சாப்பிடும் ஸ்டைலை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இரண்டு கைகளாலும் கரும்பை அசையாதபடி லாவகமாக பிடித்துக்கொண்டு கடவாய்ப்பல்லால் துவம்சம் செய்துவிடும். சோளக்கட்டை கிடைத்தாலும் அதே டெக்னிக்தான். டீ, காபி, பாதாம் மில்க், ஃபேண்டா, பால்கோவா என்று படோடோபமாகவே இருக்கும். தண்ணீரில் கூட Pure it தண்ணீர் தான். அதற்கென்று தனி மெத்தை இருந்தாலும் கூட மக்களோடு மக்களாக உறங்க ஆசைப்படுவதில் லியோ ஒரு ராகுல்ஜி.

இப்படியெல்லாம் கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக எங்களோடு வாழ்ந்து எங்கள் கவலைகளை மறக்கடித்த லியோ, மே 14ம் தேதி நள்ளிரவோடு தன்னுடைய மூச்சை நிறுத்திக்கொண்டது. அதன் கடைசி நிமிட வேதனைகளை நினைத்தால் இப்பொழுதும் கதறி அழத்தோன்றுகிறது. அன்றிரவு எங்கள் வீட்டில் யாரும் உறங்கவில்லை. உறங்குவது போல நடித்துக்கொண்டுதான் இருந்தோம். எப்படியாவது திரும்பவும் உயிர் வந்துவிடாதா என்று அதன் சடலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னமும் எங்களுக்கு விடியவில்லை. மீண்டுமொரு லியோ எங்களுக்காக பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

கலங்கிய கண்களுடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 May 2012

பிரபா ஒயின்ஷாப் – 28052012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய அலுவலக கார் டிரைவரின் மகன் +2 முடித்திருக்கிறார் போல. அடுத்ததாக எந்த படிப்பில் சேர்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி ஆலோசனை கேட்கிறார். உங்க பையன் என்ன படிக்க விரும்புறாருன்னு கேட்டேன். “அவனுக்கு கெமிக்கல் எஞ்சினியரிங் படிக்கணும்ன்னு ஆசை”. அப்படின்னா அதையே படிக்க வையுங்க என்றேன். “இல்ல... அந்த படிப்பு படிச்சா வேலை கிடைக்காதாமே...” என்று இழுத்தார். மற்றொரு நாள் மறுபடியும் ஆலோசனை கேட்க என்னுடைய கலைந்த கனவான மெரைன் எஞ்சினியரிங்கை பரிசீலித்தேன். “அய்யய்யோ... அதெல்லாம் படிச்சா வெளிநாட்டுகெல்லாம் போகணுமே... எனக்கு இருக்குறதே ஒரே புள்ள...” என்று ராகம் பாடினார். “அப்படின்னா என்னதான் செய்யணும்ன்னு ஆசைப்படுறீங்க” கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். “என் பையனுக்கு கைநிறைய சம்பளம் வாங்குற ,மாதிரி வேலை கிடைச்சா போதும்” என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் பதில் சொன்னார். அதெல்லாம் பெரிய கம்பசூத்திரமில்லை...அவர் என்ன ஆசைப்படுறாரோ அதையே படிக்க வையுங்க என்று அழுத்தமாகவே சொன்னார். ஆனாலும் அவர் இறுதியில் ஏதோவொரு எஞ்சினியரிங் கல்லூரியில் ஐடி கோர்ஸ் தான் சேர்ப்பார் என்று தெளிவாக தெரிகிறது. குஸ்காதான் வேணும் ஆனா லெக்பீஸ் இருக்கணும்ன்னு சொல்றவங்கள என்ன செய்வது...???

“அவனை அடிக்கிற அடியில உலகத்துல எந்த மூலையிலும் இருட்டுல கூட ஒரு தமிழன் மேல கை வைக்க ஒவ்வொருத்தனும் பயப்படணும்...” – இது ஏழாம் அறிவு படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் (அல்லது அவருக்கு டப்பிங் கொடுத்தவர்) பேசிய பொங்கல் வசனம். பெங்களூரை சேர்ந்த மாடலான தன்யா சமீபத்தில் வெளியிட்ட ஃபேஸ்புக் நிலைச்செய்தி: - dear chennai, you beg for water, we give! you beg for electricity, we give! ur people come n occupy our beautiful city and kocha paduthify it , we allow and nw u were at our mercy to go to playoffs, n we let be!! like this u begging – we givin! dai ungalukku vekkame illaiya da??

இவர்களைச் சொல்லி குற்றமில்லை. அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு தமிழ்ப்படங்களில் வெட்கமே இல்லாமல் வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களைச் சொல்ல வேண்டும். 

இந்த IPL / கிரிக்கெட் நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கை மாதிரி ஆகிவிட்டது. சிலர் கர்மசிரத்தையோடு கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள், சிலர் எல்லாம் சூதாட்டம் என்று ஒதுங்கிக்கொள்வார்கள். கடவுள் பக்தியில் ஒரு பிரிவினர் உண்டு. கடவுள் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. ஆனால் கடவுளை நினைத்தால் நிம்மதியடைகிறேன் என்று கூறுவார்கள். அதுமாதிரி தான் நானும். கிரிக்கெட்டில் சூதாட்டம் நடக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. நடந்துக்கொண்டிருக்கும் போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்று தெரியாத வரைக்கும் கிரிக்கெட் எனக்கு சுவாரஸ்யம் தான். BTW, வாழ்த்துகள் KKR. 

இதனை படிப்பவர்கள் யாராவது ஹைதராபாத்தில் வசித்தால் அல்லது ஹைதராபாத் சென்று வருவதாக இருந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். உதவி ஒன்று தேவைப்படுகிறது.

ட்வீட் எடு கொண்டாடு:
விமலுக்குள்ள ஒரு இங்கிலீஷ் மீடியம் ராமராஜன் ஒளிஞ்சிட்டு இருந்திருக்காரு. இந்த படத்துலதான் வெளிய 'கமிங்' #இஷ்டம்

இரண்டு இளையராஜா ரசிகர்கள் ரூம்மெட்டாக கிடைத்தால் ........................... !!!!!!! ரும் காலி பண்றத தவிர வேறு வழியில்லை #whyRajaIsGod

போதையில் வரும் நண்பனை நெறிப்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு அறையிலும் ஒரு நண்பன் இருக்கிறான்.. #நண்பேண்டா

ஃபிரெஞ்ச் பியர்ட் தாடிய பாக்கும்போதெல்லாம் மேற்கத்திய நீல பட நாயகிகள் ஞாபகம் வர்றவுங்கள்லாம் RT செய்யவும்! கமான் குவிக்!

'அப்புறம்' என்று உன் நண்பன் கூறினால் நீ அவனை ரொம்ப நேரமா பேசியே கொல்றனு அர்த்தம்

கனடாவில் வசிக்கும் நண்பர் ரவி பரமன், சென்னைக்கு வரும்போது என்னுடன் ஒரு கப் காபியாவது சாப்பிடவேண்டும் என்று மெயில் அனுப்பி இருந்தார். சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறை. இரண்டு நாட்களுக்குப்பின் Hi Prabhakaran, You’ve won $500,000 பாணியில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. மறுபடியும் இரண்டு நாட்களுக்குப்பின் என்னுடைய Fuel Card-க்கு யாரோ ரீ-சார்ஜ் செய்துவிட்டதாக குறுஞ்செய்தி. ஒன்றும் புரியவில்லை. என்னிடம் Fuel Card என்ற சமாச்சாரமே இல்லை. என் மொபைலுக்கு யாரோ சிம்கார்டு சூனியம் வைத்துவிட்டார்களோ என்று எண்ணிக்கொண்டேன். மேற்கண்ட மூன்று சம்பவங்களையும் இணைக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர் ரவி பரமன் சென்னையில் இருக்கும் அவருடைய நண்பரின் மூலமாக சத்யம், எஸ்கேப் திரையரங்குகளில் டிக்கெட் எடுக்கப் பயன்படும் Fuel Card வாங்கி அனுப்பியிருந்தார். நிச்சயமாக என்னை பெருமகிழ்ச்சி அடைய வைக்கும் பரிசுப்பொருள். தேவி திரையரங்கே கதி என்று கிடந்தவன் இனி சத்யம், எஸ்கேப் திரையரங்குகளுக்கும் போகலாம். மிக்க நன்றி என்பது சாதாரண வார்த்தை ரவி பரமன். உங்களைப் போன்றவர்களின் உந்துதலால்தான் ஏதாவது உருப்படியாக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு’ன்னு ஆடுச்சாம். கர்நாடக மாநில, முதோல் கிராமத்தில் உள்ள மருதேஸ்வரர் கோவிலில் ஒரு விசித்திரமான சடங்கு நடைபெறுகிறது. அதாவது பச்சிளம் குழந்தையை கோவிலின் கூரையிலிருந்து அர்ச்சகர் வீசுவார், கீழே உள்ள சேவகர்கள் ஒரு கம்பள விரிப்பில் குழந்தையை பிடிக்கிறார்கள். இந்த சடங்கிற்கு ஒக்காலி என்று பெயராம். (சரியாகத்தான் வைத்திருக்கிறார்கள்). இந்தமாதிரி செய்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம்பிக்கையாம். ஒரே ஒரு ஆச்சர்யம், இந்த சடங்கை நிறைவேற்றுவதில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களாம். 

தமிழில் உள்ள நாட்டுப்புற டூயட் பாடல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான தீமில் இருக்கும். தலைவன் தலைவியிடம் உனக்கு அது வாங்கித் தரேன் இது வாங்கி தரேன் ஒதுக்குப்புறமா வா என்று தாஜா பண்ணுவார். தலைவி எனக்கு அது இது எதுவுமே வேணாம், ஒரே ஒரு மஞ்சக்கயிறு மட்டும் கட்டு நீ எங்க கூப்பிட்டாலும் வருவேன் என்பார். (FYI, அந்த மாதிரி பெண்கள் லெமூரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போய்விட்டார்கள்). பார்பி கேர்ள் பாடலில் “Come on Barbie... Lets go party...” என்று அழைக்கும் கென்னிடம் “You can touch... You can play... if you say im always yours” என்று பதில் சொல்லுவதையும் நாட்டுப்புற பாடல்வகையில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.

வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த கேரக்டர் திலீப்புடையது தான். அவருடைய ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம் இப்போதும் கூட என்னுடைய இன்ஸ்பிரேஷன்களுள் ஒன்று. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப்படத்தில் ஏதாவது களவாணித்தனம் பண்ணிட்டு யாருடா இதெல்லாம் சொல்லிக்கொடுக்குறதுன்னு கேட்டா, என் ஃப்ரெண்ட் திலீப் கொடுத்த ஐடியா என்று சொல்வார். காலப்போக்கில் திலீப்பை மறந்துவிட்டோம். இப்போதுகூட திலீப்பின் மரணச்செய்தி ஊடகங்களில் வராமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 May 2012

பதிவர் சந்திப்பு தருணங்கள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தாநாள் இரவு சக சாப்ட்வேர் ஊழியர்களுடன் கு.கு.கு அடித்துவிட்டு ஹேங் ஓவரில் படுத்திருந்தவனை பலவந்தப்படுத்தி பதிவர் சந்திப்பிற்கு அழைத்தவர் அஞ்சாசிங்கம் செல்வின். அவசர அவசரமாக கிளம்பி அவருடைய அலுவலகத்திற்கு சென்றால் அங்கே ரமணா பட விஜயகாந்த் மாதிரி சிவந்த கண்களுடன் மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தார். (அவசரப்படாதீங்க இது அந்த மானிட்டர் அல்ல) பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக அவர் மடிக்கணினியை தயார் செய்து என் கையில் கொடுக்க, பட்ஜெட் தாக்கல் செய்யும் ப.சிதம்பரம் மாதிரி அதனை கையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டோம். ஓவர் டூ டிஸ்கவரி புக் பேலஸ்...!

சக விழா அமைப்பாளர்கள் சிவகுமார், ஆரூர் மூனா செந்தில் மற்றும் உணவு உலகம் சங்கரலிங்கம் சார் ஆகியோர் தீயாக வேலை செய்துக்கொண்டிருந்தனர்.

நம் பதிவுலக நண்பர்களின் நேரம் தவறாமை குறித்து ஏதுமறியாமல் சரியாக நான்கு மணிக்கே வந்திருந்தார்கள் அப்பாவி சத்தியம் தொலைக்காட்சி நண்பர்கள். பின்னர் பொறுமையாக காத்திருந்து தங்கள் தொலைக்காட்சிக்கான செய்தியை சேகரித்துச் சென்றார்கள்.

வழக்கமாக பதிவர் சந்திப்புகளை தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கும் சுரேகா தமிழகத்து எல்லைக்குள் இல்லாத காரணத்தினால் எவர்யூத் (எவர் யூத்?) பதிவர் கேபிள் சங்கருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது அல்லது அவராகவே எடுத்துக்கொண்டார்.

கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்களை நட்டு வளர்த்துவரும் பசுமைப்போராளி யோகநாதன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். CNN-IBN சேனலுடைய ரியல் ஹீரோஸ் அங்கீகாரம் பெற்ற அவர், தான் கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக பேசினார். யோகநாதனுடைய இணையதளம்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக ஐ.க்யு லெவல் 225 கொண்ட கின்னஸ் சாதனை சிறுமி திருநெல்வேலியின் பெருமை விஷாலினி வந்திருந்தார். உலக அரங்கில் தன்னுடைய மகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்தார் விஷாலினியின் அம்மா. விஷாலினியின் அறிவாற்றலை சோதிக்கும் விதமாக (!!!) நுண்ணறிவு கொண்ட பதிவர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டு தெளிவு பெற்றார்கள்.

எதிர்பாரா இன்ப அதிர்ச்சியாக நண்பர் கோகுல் அவர்களுக்கு சிறந்த இளம் பதிவர் விருது வழங்கப்பட்டது. அதுகுறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய திருமண அழைப்பிதழையும் அனைவருக்கும் கொடுத்து வரவேற்றார். 

சர்ச்சை நாயகன் ஜாக்கி சேகர் தன்னுடைய படை பரிவாரங்களுடன் அல்லாமல் சிங்கிளாக கூட பதிவர் சந்திப்பிற்கு வராதது மாபெரும் ஏமாற்றம்தான். இருப்பினும் தன்னுடைய சிஷ்யகேடி சதீஷ் மாஸை அனுப்பி வைத்திருந்தார்.

கடந்த பதிவர் சந்திப்பில் இந்த சதீஷ் மாஸ், ஜாக்கி சேகரை கூச்சத்தில் நெளிய வைத்தது நினைவிருக்கலாம். அதேபோல இந்தமுறை பாலகணேசன் என்ற பாலகனை கேபிள்ஜி செட்டப் செய்து அழைத்து வந்திருந்தார். சும்மா சொல்லக்கூடாது பையனும் கொடுத்த காசுக்கு மேலேயே வேலை செய்யுறான்.

நான்கைந்து மொபைல் போன்களை தன்னுடைய உடலில் ஆங்காங்கே சொருகிக்கொண்டு ஒரு மனித வெடிகுண்டு போலவே ஆபத்தாக வந்திருந்தார் நாய் நக்ஸ். அவர் என்னை பார்த்து “நான் உன் மேல கோபமா இருக்கேன்... பேசமாட்டேன்...” என்று சொன்னதும் எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. (உபரித்தகவல்: வழக்கமாக எல்லோரையும் First Name சொல்லி அழைக்கும் அஞ்சாசிங்கம் ஒரு ஃப்ளோவில் அந்த நாயை கூப்பிடுங்கப்பா என்று சொன்னது செம காமெடி)

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய ப்ரோபைல் படமாக பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையே வைத்திருக்கிறார்கள் புலவர் சா.ராமானுசம் உட்பட. வீடு சுரேஷ் அண்ணனை முதல்முறையாக சந்தித்ததும் ஏனோ எனக்கு மேலே உள்ள புகைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. என்னுடைய வலைப்பூவை டாட் காமாக மாற்றிக்கொடுத்த போர்வாள் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் அவர்களுக்கு என்னுடைய நன்றிக்கடனை செலுத்தினேன். 

பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடியே தானொரு ஒரிஜினல் யூத் என்று நிரூபிக்கும் பொருட்டு மீசை, தாடி ட்ரிம் செய்து, ஒரு வாரம் “ஒர்க் அவுட்” செய்து உருக்குலைந்து போய் வந்திருந்தார் தண்டோரா மனிஜி.

அரங்கு வாயிலில் யாரோ குத்தவைத்து அமர்ந்திருப்பது போல தென்பட, யாரென்று பார்த்தால் அட நம்ம யூத்து பதிவர்களின் விடி(யாத) வெள்ளி அண்ணன் அப்துல்லா. உள்ளே வரத்தயங்கிய அண்ணனை அன்புக்கரங்கள் கொண்டு அடக்க வேண்டியதாகி போய்விட்டது.

இந்தியாவின் நம்பர் ஒன் ட்விட்டர் என்பது “பிரபல பதிவர்” என்ற பதத்தை போலவொரு அலங்கார வார்த்தை என்றே நினைத்திருந்தேன், பிரபல பதிவர் கேபிள் சங்கர் அதுபற்றி விளக்கிச் சொல்லும்வரை. அப்பேர்ப்பட்ட பெருமைகொண்ட கார்க்கி வழக்கம்போல தன்னுடைய மொக்கை ஜோக்குகளால் அரங்கினை மசாலா கபே ஆக்கிக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே நான் பிதாமகருடைய ஹைடெக் மொபைலை பார்த்து புகைந்துக்கொண்டிருக்க, தன்னுடைய புத்தம்புதிய ஐ-பேட் மொபைலை எடுத்துக்காட்டி என்னுடைய அடிவயிற்றில் நெருப்பை பற்ற வைத்தார் உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் (மொபைல் வால்பேப்பராக) வைத்திருந்த கிழக்கு பார்த்த வீடு பட ஹீரோயின் தமளியை பார்த்து நானும் மணிஜியும் வாயை வாட்டர்ஃபால்ஸ் ஆக்கினோம்.

சென்னை பித்தன், மின்னல் வரிகள் கணேஷ், புலவர் சா.ராமானுசம் போன்ற மூத்த, மூத்த மூத்த பதிவர்களும் யூத் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். புலவர் இந்த தள்ளாத வயதிலும் எப்படி தளராமல் கீ-போர்டை தட்டுகிறார் என்று தெரியவில்லை. உண்மைத்தமிழனுக்கே வெளிச்சம்.

வழக்கமாக அக்கப்போரை தன்னுடன் அழைத்துவரும் பழைய பதிவர் இந்தமுறை அதிரடி பதிவர் ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் அவர்களை அழைத்துவந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் “ஓ நீங்கதானா அது” என்று அரங்கம் முழுவதும் சலசலப்புகள். என்னா கொலவெறி...!

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தன்னுடைய அன்புப்பரிசாக ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்கிற விலையில்லா புத்தகத்தை கொடுத்து பிறவிப்பயன் அடைந்தார் அரங்க உரிமையாளர் வேடியப்பன்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசாக பேச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய கேடயமும் நல்லதொரு புத்தகமும் வழங்கப்பட்டது.

கடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்து இந்தமுறை ஆப்சென்ட் ஆன சர்புதீன், குடந்தை அன்புமணி, கவிதை வீதி செளந்தர், வேடந்தாங்கல் கருண், தம்பி கூர்மதியான், நா.மணிவண்ணன், நரேன், யுவகிருஷ்ணா, ஜாக்கி சேகர், ந.ர.செ.ராஜ்குமார், ரதியழகன், எல்கே, மயில் ராவணன், சாம்ராஜ்ய பிரியன், ரெட்ஹில்ஸ் பாலா, சுரேகா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு எங்கள் குழுவின் சார்பாக கடும் கண்டனங்கள்.

விழா முடிந்ததும் என்னிடம் நிறைய பேர் வந்து “இது வழக்கமான பதிவர் சந்திப்பை போல வெட்டியாக இல்லாமல் உருப்படியாக இருந்தது... கலக்கிட்டீங்க...”என்று கைகுலுக்கினார்கள். அதாவது நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவன் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் விழாவின் பின்புலத்தில் இருந்து முழுமையாக செயல்பட்டவர் சிவகுமார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விழைகிறேன். அவரோடு இணைந்து செயலாற்றிய ஆரூர் மூனா, செல்வின், சங்கரலிங்கம், சம்பத், வீடு சுரேஷ் ஆகியோருக்கும் பழைய தலைமுறை பதிவர்கள் கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய பெயரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. மன்னிச்சூ...!

கு.கு.கு - குழுவாக குடித்துவிட்டு கும்மியடித்தல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 May 2012

மச்சினி மேல – இஷ்டம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மச்சினிக்கு தமிழில் முதல்படம் என்பதாலும், சந்தானம் இருப்பதால் மினிமம் கியாரண்டி என்பதாலும் இஷ்டம் படத்தை பார்க்க இஷ்டப்பட்டேன். மொக்கைப் படங்களை தெரிந்தே போய் பார்ப்பது எனக்கு புதுசில்லை என்றாலும் இந்தப்படத்திற்கெல்லாம் இதுவே ஜாஸ்தி என்று பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு தேவி பாரடைஸ் திரையரங்கின் முதல் வரிசையில் சென்று அமர்ந்துக்கொண்டேன். உள்ளே நுழையும்போதே பிங்க் நிற ரொமாண்டிக் பேக்ரவுண்டில் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

இது எமைந்தி ஈ வேலா என்கிற தெலுகு படத்தின் தமிழ் பதிப்பாம். ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து டைவர்ஸ் செய்துகொள்கிறார்கள். அப்புறம் தங்கள் தவறை உணர்ந்து மறுபடியும் சேருகிறார்கள். இதுதான் படத்தின் கதை.

Actually, இது ஃபீல் குட் படங்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட சித்தார்த் மாதிரியான ஹீரோ நடிக்க வேண்டிய படம். விமலிடம் போய், “பெட்ரோல் விலை ஏழு ரூபாய் ஐம்பது பைசா ஏறிவிட்டதாம்” என்று சொன்னால் கூட அப்படியா என்று ஆற அமர ஆரவாரமே இல்லாமல் கேட்பார் போல. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மாவு மாதிரி நடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் இவருடைய “ரியாக்சன்ஸ்” துணை நடிகர் ராஜ் கபூரை நினைவூட்டுகிறது. இந்த கொடுமையில் கதைப்படி விமல் ஐஐடியில் படித்த, சாப்ட்வேர் என்ஜினீயராம். இங்கிலிபீஸ் அவருடைய வாயில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறது. கெட்ட கேட்டுக்கு தெலுகு பதிப்பில் நடித்தவரை இமிடேட் செய்வதற்கு வேறு முயற்சிக்கிறார்.

கன்னுக்குட்டி காஜல் அகர்வாலின் தங்கை நிஷாதான் ஹீரோயின். இரண்டு காட்சிகளில் தேவி பேரடைஸின் விசாலமான திரையில் பறந்து விரிந்து தெரிந்த நிஷாவின் தொப்புளை பார்ப்பதற்கு பரவசமாகத்தான் இருந்தது. ஆனால் காஜல் அளவிற்கு முகப்பொலிவு இல்லை. காஜலின் சிறப்பே அவருடைய உதடுகள்தான். அவற்றில் பாதி கூட நிஷாவிடம் இல்லை. Lip augmentation ஏதாவது செய்துகொண்டால் தேவலை. பனிப்பிரதேசத்தில் ஆட்டம் போடும் ஒரு பாடல்காட்சியில் சூடேற்றுகிறார். மற்றபடி நடிப்பையெல்லாம் இனிவரும் படங்களில் காட்டினால்தான் உண்டு. ஆங்... விமலுடைய அம்மா ஒரு காட்சியில் சொல்வது போல சேலையில்தான் அழகாக இருக்கிறார் மச்சினி...!

கலிகால மொக்கை திரைப்படங்கள் பலவற்றையும் ஒற்றை ஆளாக காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். ஆஹா ஓஹோ என்று இல்லையென்றாலும் சந்தானம் நகைச்சுவை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தமிழ்ப்படம் என்று அவ்வப்போது நினைவூட்டிவிட்டு செல்கிறது. “துணிக்கடை ஓனரா இருந்தாக்கூட குளிக்கும்போது அம்மணமா தான் குளிக்கணும்”, “கடவுள் கண்ணத் தொறந்துட்டார்ன்னா இவ்வளவுநாள் அவரென்ன கோமா ஸ்டேஜ்லயா இருந்தாரு” போன்ற தத்துபித்தூஸ், “எட்டாம் கிளாஸுக்குள்ள ஹெட்மாஸ்டர் நுழைஞ்ச மாதிரி” போன்ற உவமை நகைச்சுவைகள், “டியூப் லைட்டா குண்டு பல்பா” போன்ற ஷார்ப் டயலாக்ஸ் என்று வெரைட்டியாக கலக்குகிறார்.

ஹீரோயினின் தோழிகளாக வருபவர்கள் படுமொக்கையான செலக்ஷன்ஸ். பூ விற்கும் அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களை கண்முன் நிறுத்துயிருக்கிறார்கள். (ஹரே பகவான்... இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்காங்க....) இவர்கள் தவிர ஹீரோ, ஹீரோயினுடைய இரண்டாவது செட்டப்ஸ், பெற்றோர்கள், ஹீரோயினுடைய அத்தை என்று இன்னும் சில கேரக்டர்கள் இருந்து தொலைத்து படத்தின் கடைசி அரைமணிநேரத்தில் மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என்று எழவெடுக்கிறார்கள்.

எந்த நேரத்தில் பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டே திரையரங்கில் அமர வேண்டி இருக்கிறது. “தினக்கு தின தினா...” என்ற பாடல் மட்டும் ஓரளவுக்கு ஓகே அதுகூட நிஷாவுக்காக மட்டும். டைரக்டரும் படக்குழுவினரும் ப்ரொட்யூசர் காசில் நல்லா OATS சாப்பிட்டிருக்காங்கன்னு தெரியுது. “ஒரு தேநீரில் காணாத சுவை உன் பெயரில் கண்டேன்” என்று சம்பந்தமே இல்லாத ஏதேதோ வரிகளுக்கு கூட வெளிநாட்டு தெருக்களில் அரைடிராயர் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள்.

படத்தின் ஒளி ஓவியம் ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படத்துடைய ரீ-பிரிண்ட் மாதிரி சொறி சொறியாக இருக்கிறது. டப்பிங்கும் நடிகர்களின் வாயசைவுக்கு பொருந்தாமல் இருக்கிறது. முக்கியமாக முதல் பாதி முழுக்கவே ஏதோ லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பி-கிரேடு பிட்டுப்படத்திற்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது.

நான் எழுதியிருக்குறத வச்சி படம் பாக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு மட்டும் பயந்துடாதீங்க. இந்தமாதிரி படங்கள் தான் நமக்கு ஜாலிலோ ஜிம்கானா. நிறைய காட்சிகளில் மனம்விட்டு சிரிக்க முடிந்தது. போதாத குறைக்கு பின்வரிசையில் இன்னொரு ஜாலி கும்பல் அமர்ந்துக்கொண்டு கமெண்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆயிரம் பேர் அமரக்கூடிய திரையரங்கில் வெறும் ஐம்பது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். அதிலும் முப்பது பேர் பத்து ரூபா டிக்கெட். 

மொத்தத்துல இஷ்டம் – மொக்கைப் பட விரும்பிகளுக்கு சத்தியமா ஃபீல் குட் படம்தானுங்க...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment