Showing posts with label பிரபா ஒயின்ஷாப். Show all posts
Showing posts with label பிரபா ஒயின்ஷாப். Show all posts

24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 03032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

Such an eventful weekend...!

நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால் நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால் சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம் போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.

புகைப்படம்: தி ஹிந்து
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள் அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?

அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும் நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59 வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?

சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம் என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள் செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4, பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில் பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!

பார்க்க: சொம்பு

அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச் சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும், சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர் மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.

முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை, உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.

சமீபத்தில் எழுதியது: தெகிடி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 17022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகக்காட்சியில் நித்தியானந்தா கடையில் நுழைந்து ஆனந்த கீர்த்தன் என்ற ஒலிநாடா வேண்டுமென கேட்டு, அவர்கள் ஒரு கொட்டையை கொடுத்து அனுப்பியதை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி. அடுத்த வாரம் சொல்லி வைத்திருந்த ஒலிநாடா வந்துவிட்டதா என்று கேட்பதற்காக சென்றிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு கொட்டையையும் கொடுக்க முயற்சித்தார்கள். அய்யா, போன வாரமே வாங்கியாயிற்று என்று சொல்லி தப்பித்துவிட்டேன். என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை விடமாட்டார்கள் போல. சென்ற வாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் என்றது ஒரு அம்மையார் குரல். வார்த்தைக்கு வார்த்தை அடியேனை அய்யா என்று விளித்தார். ஏற்கனவே அவர்களிடம் என்னுடைய முகவரி கொடுத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு அய்யா, திருவான்மியூரில் வகுப்பு நடக்குது. வந்தீங்கன்னா வகுப்பில் கலந்துக்கிட்டு சிடியையும் வாங்கிட்டு போயிடலாம் என்றார். என்ன வகுப்பு என்று தெரியவில்லை. அம்மாடி நான் வசிப்பது திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். அது தெற்கு, இது வடக்கு என்று சொல்லி புரியவைத்தேன். அப்படியும் அம்மையார் விடுவதாக இல்லை. விரைவில் மணலியில் வகுப்பு நடைபெற இருப்பதாகச் சொல்லி கலந்துகொள்ள பணித்திருக்கிறார். பேசாமல் ஒரு எட்டு போய்தான் பார்த்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. நகிர்தனா திரனனா னா...!
*

ஐ.பி.எல் ஜூது ஏலத்தை பார்த்து கடுப்பாகிவிட்டது. நிறைய நல்ல வீரர்களை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதே இல்லை. சென்றமுறை நிகழ்ந்த கூத்துகளுக்காக இலங்கை வீரர்களை யாரும் பெரிதாக சீண்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ஏன் தவிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. போனியாகாத வீரர்களில் Rusty Theron என்பவர் எனக்கு முக்கியமானவராக தோன்றுகிறார். அபாரமான மிதவேக பந்து வீச்சாளர். குறிப்பாக இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஏற்கனவே ஹைதரபாத் அணிக்காகவும் (டெக்கான் கிரானிக்கல் வசமிருந்தபோது), பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். அசம்பாவிதமாக தெரான் ஐ.பி.எல்லில் அதிக போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் சில போட்டிகளில் அபாரமாகவும், மற்ற போட்டிகளில் மோசமில்லை என்ற வகையிலும் தான் விளையாடியிருக்கிறார். தற்சமயம் கொள்ளை விலைக்கு வாங்கியிருக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களை விட தெரான் எவ்வளவோ பரவாயில்லை. அதே போல பேட்ஸ்மேன்களில் Richard Levi. ஏற்கனவே மும்பைக்காக விளையாடியிருக்கிறார். லெவிக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்கா அணியைப் போலவே, அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ராசி இல்லையோ என்னவோ...? அவரைத் தவிர்த்து Cameron White, David Hussey, Jesse Ryder போன்றவர்களும் விலை போகவில்லை. ஆசிஷ் நெஹ்ராவை சென்னை வாங்கியிருக்கிறது. ஆனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் போன்றவர்களை யாரும் வாங்கவில்லை. இருக்கட்டும் ப்ரீத்தி ஜிந்தா இருக்கும்வரையில் நமக்கு கவலையில்லை.
*

விஜய் டிவியில் Connexions என்றொரு நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு தவறாமல் பார்க்கிறேன். ஹண்ட் ஃபார் ஹின்ட் பாணியில் ஆனால் அதிக கஷ்டமில்லாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் சுற்றில், இரண்டு புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இரண்டிற்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். வார்த்தை ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம். மற்ற சுற்றுகளும் இதே போல புகைப்படங்களை வைத்து தான். முக்கியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்டு ஜெகன் போட்டியாளர்களை நன்றாக கலாய்த்து தள்ளுகிறார். அதே சமயம் போட்டியாளர்கள் யாராவது டென்ஷன் ஆகிவிட்டால் அந்த சூழ்நிலையை நன்றாக கையாள்கிறார். சென்ற வாரத்தில் தொலைக்காட்சி நடிகை சூசன் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஒரு கட்டத்தில் சூசன் துப்பட்டா அணிந்திருந்த பாங்கை ஜகன் கிண்டலடித்தார். சூசன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே விஜய் டிவியின் வேறு நிகழ்ச்சியாக இருந்தால் இதையே சாக்காக வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பார்கள். ஆனால் ஜகன் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி நிலைமை மோசமாவதை தவிர்த்துவிட்டார். Connexions முடிந்ததும் ஒளிபரப்பாகும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது.
*

இப்போது கனெக்ஷன்ஸ் பாணியில் சில கேள்விகள்.

One by Two: இரண்டு படங்களுக்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

 


Joint Family: இரண்டு அல்லது மூன்று படங்கள் குறித்த வார்த்தைகளை சேர்த்து விடை கண்டுபிடிக்க வேண்டும்.



மொக்கையாக இருப்பின் தனிமடலுக்கு வந்து திட்டவும். நன்றாக இருந்தால் தெரியப்படுத்தவும். வாராவாரம் தொடரலாம்.
*

பிரியாணியில் இடம்பெற்ற மிஸ்ஸிஸிப்பி பாடல் தான் ரீப்பீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒளி வடிவத்தில் மந்தி டக்கராக செய்த வேலையை ஒலி வடிவத்தில் ப்ரியா ஹிமேஷ் செய்திருக்கிறார். கடைசி காலத்தில் வாலி எழுதிய பாடலில் கூட வாலிபால் விளையாடியிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 10022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் ஆசீர்வாதம். பெயரே அதுதான். கடவுள் மறுப்பாளர். என்னை செதுக்கியதில் அவருக்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. படித்து முடித்தபிறகு எல்லா வாத்தியார்களோடும் தொடர்பு விட்டுப் போயிற்று. அதாவது நான் விடுபட்டுக் கொண்டேன். பொதுவாகவே எனக்கு வாத்தியார்கள் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் கூட அதனைவிட பயம் சற்று கூடுதலாக இருக்கும். வாத்தியார்கள் யாரேனும் பெயரைச் சொல்லி அழைத்தாலே கை, காலெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் நீ கழிசடையாத்தான் இருக்கியா...? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது. அதனால் வாத்தியார்களை எல்லாம் சந்தித்து பேசுவதோ, தொடர்பிலிருப்பதோ கிடையாது. ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதம் வாத்தியாரைப் பற்றி கூட ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். தற்சமயம் ஃபேஸ்புக் வந்துவிட்டதால் பழைய வாத்தியார்களை தேடிப் பார்த்தேன் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதர் அந்த காலத்திலேயே, அதாவது சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே ‘பென் ஃப்ரெண்ட்’ என்ற பதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், படிப்பு தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய பேசுவார். நட்பு கோரினேன், ஏற்றுக்கொண்டார். அவருடைய ஃபேஸ்புக் பயன்பாடு அப்படியொன்றும் எதிர்பார்த்த வகையில் இல்லை. தமிங்கிலத்தில் வேறு எழுதிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென சாட்டுக்கு வந்து ‘என்னை நினைவிருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. தற்சமயம் நான் ஒரு தமிழ் வலைப்பதிவர் என்று பெருமையாக சொல்லிக்கொண்டேன். அவருக்கு அது புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு கொஞ்சம் சிரமப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போதே ‘விருப்பப்பட்டால் தொடர்பு கொள்ளவும்’ என போன் நம்பரை அனுப்பி விட்டார். எனக்கு அப்போது வழக்கம்போல உதறல் தொடங்கிவிட்டது. சங்கடமான சூழ்நிலை. அழைப்பதற்கு பயம். அழைக்காமல் விட்டாலும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். சிறிது நேர மனப்போராட்டத்திற்கு பிறகு அழைத்தேன். அவருக்கு என்னை அவ்வளவாக நினைவில்லை. என்னுடைய தந்தையின் பெயர், அவரிடம் தனிவகுப்பு படித்தது, அவர் என்னிடம் ஆசிரியரைப் பற்றி கேட்டு நான் பள்ளிக்கூட ஆசரியர் என்று புரிந்துகொண்டது எல்லாம் சொன்னபிறகு நினைவுக்கு கொண்டு வந்தார். இணையத்தில் தமிழில் எழுதத் தெரியவில்லை என்றார். அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை என்று வழிமுறைகளை கூறினேன். ஒரு வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதியைப் போல அவருடைய கணினியில் கூகுள் ட்ரான்ஸ்லிட்ரெட் மென்பொருளை நிறுவ படிப்படியாக சொல்லிக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொடுத்தாயிற்று. எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அது மட்டுமில்லை. இன்னொரு பெருமையும் எனக்காக காத்திருக்கிறது. அவர் இரண்டு கவிதை புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்லி அதனை மின்புத்தக வடிவில் மாற்றித் தரும்படி கேட்டிருக்கிறார். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக இருக்கும் என்பது எனக்கு திண்ணமாக தெரியும். இருக்கட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. ஆனால் அவருக்காக அதையும் செய்து தர போகிறேன். ஆசீர்வதிக்கப்பட்டதை போல உணர்கிறேன்...!
*
ஆசீர்வாதம் வாத்தியார் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்வத்தை புனைந்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன். அது மீள் பிரசுரமாக :- வாத்தியார் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு மஞ்சக்காட்டு மைனான்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட வாத்தியார் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். அவன் குறிப்பிட்ட வரிகள் - கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”.
*
படவா... கடைசி ரெண்டு போஸ்டுல ஐஸ்வர்யாவைப் பத்தி ஜொள்ளு விட்டிருக்குற... இப்ப என்னடான்னா வாத்தியாரு, மஞ்சக்காட்டு மைனா'ன்னு மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற... நான் ஒருத்தி இருக்குறதே உனக்கு மறந்து போச்சுல்ல...!
*
Freaks படம் பற்றியும், அதில் காட்டப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அதுகுறித்து மேலும் சில வரிகள். அப்படத்தில் ஜோஸஃபீன் ஜோஸப் என்றொரு கதாபாத்திரம். இவர் ஒரு இருபாலின உடலி. (Hermaphrodite என்ற பதத்தை தோராயமாக மொழி பெயர்த்தேன். தவறென்றால் மன்னிக்கவும்). அதாவது இவருடைய உடலை செங்குத்தாக பகுத்தால் ஒரு புறம் பெண்ணாகவும், மறுபுறம் ஆணாகவும் இருப்பார். ஆனால் ஜோ.ஜோ உண்மையாகவே இருபாலின உடலி என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சில சமயங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டும்பொருட்டு ஆண்களே இருபாலின உடலிகளாக சித்தரிக்கப்படுவார்கள். அதாவது ஒரு புறத்தில் மட்டும் ரோமங்களை மழித்து, உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாகவும், மறுபுறம் தொள தொளவென பெண்ணின் மார்பகத்தை போல வளரவிட்டு, ஒருபுறம் ஆணின் ஆடைகளையும் மறுபுறம் பெண்ணின் ஆடைகளையும் அணிந்துக்கொள்வார்களாம். ஜோஸஃபீன் ஜோஸப்ப்பும் அந்த மாதிரி ஒருவராக இருக்கலாம். 

Freaks படத்தின் ஒரு காட்சியில் ஜோஸஃபீன் ஒரு ஆடவரை குறுகுறுவென பார்த்தபடி கடந்துசெல்வார். உடனே அந்த ஆடவருக்கு அருகிலிருப்பவர், ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கிறது ஆனால் அவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் அடிப்பார்.
*
அடிக்கடி சுஜாதா நாவல்களைப் பற்றி எழுதுவதை பார்த்துவிட்டு நண்பர் செந்தில்குமார் சாட்டில் வந்து ரத்தம் ஒரே நிறம் படித்திருக்கிறீர்களா...? என்று கேட்டார். படித்ததில்லை என்று சொன்னதுதான் தாமதம். கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று சொல்லி என்னுடைய விலாசத்தை வாங்கி புத்தகத்தை அனுப்பவே செய்துவிட்டார். அவர் அனுப்பிய புத்தகங்கள் கையில் கிடைத்த நேரத்தில் ஒத்திசைவாக சீனு அதனை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று எழுதிய கட்டுரை படிக்கக் கிடைத்தது. சரித்திர நாவல் என்று தெரிகிறது. சுஜாதா – சரித்திரம் என்ற சேர்க்கையே ஆர்வத்தீயை கிளப்பிவிட்டாலும் அர்பணித்து படிக்க தொடர்ச்சியான சில மணிநேரங்கள் தேவைப்படுகின்றன. தற்சமயம் செந்தில்குமார் அனுப்பிய மற்றொரு சுஜாதா நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் – ஆ...!
*
யாரோ ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் சுரேஷ் பீட்டர்ஸை பற்றி நல்லவிதமாக எழுதி கீழ்காணும் பாடலை பகிர்ந்திருந்தார். அப்படியென்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தேன். அவ்வளவுதான், பாடல் தனக்குள் என்னை வசமாக இழுத்துக் கொண்டது. வித்தியாசமான இசை, நடனம், உடைகள், அதனுடன் ஸ்வர்ணலதாவின் குரல், மீனா எல்லாமுமாக சேர்ந்து காணொளியாகவே தரவிறக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாடலின் இறுதியில் வரும் நாதஸ்வர இசையை கத்தரித்து என்னுடைய மொபைலில் ரிங்டோனாக வைத்துக்கொண்டேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 27012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சயமீஸ் இரட்டையர்களை காட்டியது (நடிப்பில் தான்...!) மாற்றான் என்று சொல்லப்பட்டாலும், மாற்றான் படம் அறிவிக்கப்பட்டபிறகு படப்பிடிப்பை தொடங்கிய இருவன் என்ற லோ பட்ஜெட் படம் ரிலீஸில் முந்திக்கொண்டது. நிறைய பேருக்கு அப்படி ஓரு படம் வந்ததே தெரியாது என்பதால் மாற்றானின் புகழுக்கு பங்கமில்லை என்று நம்பலாம். உலக அளவில் முதன்முதலில் சயமீஸ் இரட்டையர்களை காட்டிய படம் எதுவென்று தெரியுமா...? விடை இறுதியில்...

*************************************************

ஃபர்ஸ்ட் லுக்கில் 'நவீன' இல்லை !
நவீன சரஸ்வதி சபதம் படம் பார்த்தேன். சிவாஜி காலத்திற்கு பிறகு அமைதியாக இருந்துவிட்ட சிவபெருமான் மீண்டுமொரு திருவிளையாடல் செய்கிறார். குடிபழக்க அடிமைகளான நால்வரை ஒரு தீவில் சிக்க வைக்கிறார். அவர்கள் தப்பிக்க சில வாய்ப்புகளையும் கொடுக்கிறார். தப்பித்தார்களா...? என்பது உச்சகாட்சி. நல்ல மனஉரு. அந்த சுவாரஸ்யத்தை திரையிலும் ஓரளவுக்கு காட்டியிருக்கிறார்கள். ஐ-பாடில் பாட்டு கேட்கும் சிவன், டெம்பிள் ரன் விளையாடும் முருகன், த்ரெட் மில்லில் ஓடும் விநாயகன் என்றெல்லாம் பக்தியை நவீன மயமாக்கி காமெடி செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சுப்ரஜா ஸ்ரீதரன் ஒருவர் மட்டும்தான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்ததற்காக ந.ச.ச படத்திற்கு  கண்டனம் தெரிவித்தார். சரி தொலையட்டும். அது என்னுடைய பிரச்சனையில்லை. நிவேதா தாமஸ் அம்மையாரை நாயகி என்று சொல்லிவிட்டு நான்கு ஆண்களையும் தீவையும் மட்டுமே முக்கால்வாசி படத்திற்கு காட்டியிருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************

நேற்று மாலை அந்தமான் ராஸ் – நார்த் பே தீவுகளுக்கு இடையே ஒரு படகு விபத்து. அதில் பயணம் செய்த சுமார் 45 பேரில் 21 பேர் மரணம். மரணம் அடைந்த பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரத்து ஆட்கள். செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் சேதுராமன் அதே படகில் பயணம் செய்திருக்கக்கூடும். சென்ற வாரம் என்னுடைய பெற்றோர், தங்கை உட்பட உறவினர்கள் அதே பாதையில் பயணித்திருக்கிறார்கள். போர்ட் ப்ளேரிலிருந்து மூன்று தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் பேக்கேஜ் அது. சென்ற வாரமே, இரண்டு தீவுகளை பார்த்துவிட்டு மூன்றாவது தீவிற்கு செல்லும் வழியில் காற்று பலமாக வீசியதால் பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். நேற்றைக்கும் கூட அதே போல நிகழ்ந்திருக்கலாம். அந்த படகில் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்திருக்கிறேன், ஆனால் வெறும் சம்பிரதாயத்திற்காக. அதை எப்படி துரிதமாக எடுக்க வேண்டும் என்றோ, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றோ அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. வேறெப்போதும் போல அல்லாமல் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

*************************************************

மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு துயர செய்தியை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்தால் என்ன செய்வீர்கள்...? ஒரு சோக ஸ்மைலி. நாமும் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடையாளமாக அதனை கருதலாம். ஆனால் துயர செய்திகளை லைக் செய்வது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு இது அபத்தம் என்றும் மற்றொரு தரப்பு இதுவும் சோக ஸ்மைலி போல ஒரு பங்கெடுப்பு என்றும் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியாக தமிழை வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது அபத்தமாகத்தான் தெரியும். காரணம் – இன்னார் குறிப்பிட்ட துயர செய்தியை விரும்புகிறார் என்று ஃபேஸ்புக்கே தெரிவிக்கும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஃபேஸ்புக் ஒரு யோசனை வைத்திருக்கிறது. ஏற்கனவே உள்ள ‘ஃபீலிங்’ ஆப்ஷன் மூலம் சோகமாக இருக்கிறேன் என்று தெரிவு செய்தால் போதும் லைக் பட்டன் தற்காலிகமாக சிம்பதைஸ் பட்டனாக மாறிக்கொள்ளும். கூடிய விரைவில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரலாம்.

*************************************************

சென்ற வாரம் என்னுடைய ஒரு இடுகையில் நான் சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையில் வரும் ஜனகராஜ் மாதிரி என்று எழுதியிருந்தேன். அந்த சொற்றொடர் கண்டிப்பாக நிறைய பேருக்கு புரிந்திருக்கும். யாரேனும் அதனை குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ப்ச். நானே தொடர்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் ஒலிப்பேழையில் பாடல்கள் கேட்கும் பழக்கம் உடையவர்களுக்கு நிச்சயம் சிரிப்போ சிரிப்பு என்ற ஒலிப்பேழையை பற்றி தெரிந்திருக்கும். என்னுடைய சிறிய வயதில் அந்த ஒலிப்பேழையை எத்தனையோ முறை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். அச்சமயத்தில் அதில் வரும் பெரும்பாலான நகைச்சுவைகள் எனக்கு மனப்பாடம். இப்போதும் நினைவிலிருப்பது (ஜனகராஜ் ஸ்வீட் ஸ்டால் நகைச்சுவை தவிர்த்து) என்று பார்த்தால் :-

- கிருபானந்த வாரியாரின் கிரிக்கெட் வர்ணனை
- 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் – பட ட்ரெயிலர்
- ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேட்கும் கலைஞர்
- மெஹபூபா பாடும் பாக்யராஜ், டி.ஆர், எம்.ஆர்.ராதா
- எலி பிடிப்பது எப்படி என்று சொல்லித்தரும் ஜனகராஜ்

படம்: அரவிந்த் ரஹ்மேனியாக்
சிரிப்போ சிரிப்பு ஒலிப்பேழையை பற்றி கூகுள் செய்துக்கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம். அரவிந்த் ரஹ்மேனியாக் (ரஹ்மான் தீவிர விசிறியாம்) என்ற புண்ணியவான் சிரிப்போ சிரிப்பு ஆடியோ முழுவதையும் எம்.பி.3 கோப்பு வடிவில் தரவேற்றி வைத்திருக்கிறார். வேண்டுபவர்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று அரவிந்திற்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு பதிவிறக்கிக் கொள்ளவும்.


*************************************************

வருடாவருடம் புத்தகக்காட்சி முடிந்ததும் புத்தகங்கள் படிப்பது தொடர்பாக ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாக சூட்டோடு முடிந்தவரை வாங்கிய புத்தகங்களை படித்துவிடுவது புத்திசாலித்தனம். அப்படி சென்ற வாரத்தில் படித்த புத்தகங்கள் :-

புக் மார்க்ஸ் என்.சொக்கன்
தமிழா ! நீ ஓர் இந்துவா ? – மஞ்சை வசந்தன்
கி.பி.2087இல்... முனைவர் மலையமான்
திசை கண்டேன் வான் கண்டேன் சுஜாதா
குமரிக்கண்டமா ? சுமேரியமா ? – பா.பிரபாகரன்

வாசிப்பானுபவம் பற்றி தனித்தனியாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு இடுகையாக வெளியிடுகிறேன்.

*************************************************

முதல் பத்தி கேள்விக்கு பதில் Freaks (1932). ஒரு சர்க்கஸ், கூத்து, வித்தை வகையறா குழு. அதன் அங்கத்தினர் பெரும்பாலும் உடல் குறைபாடு கொண்டவர்கள். அவர்கள் தவிர்த்து கிளியோபாட்ரா என்று ஒருத்தி. கிளியோபாட்ரா என்று சொல்லிவிட்டதால் அவளுடைய அழகு எப்படி என்று சொல்லத்தேவையில்லை. அவளை ஒரு குள்ள மனிதன் விரும்புகிறான். அவனுக்கு நிறைய சொத்து இருப்பதால் கிளியோபாட்ராவும் அவனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களுடைய திருமண வரவேற்பில் எல்லா ‘ஃப்ரீக்ஸும்’ ஆடிப்பாட கிளியோபாட்ரா கோபப்பட்டு அவர்களை அவமதிக்கிறாள். அதன்பிறகு ஃப்ரீக்ஸ் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு கிளியோபாட்ராவின் உடல் பாகங்களை சிதைத்து அவளை மனிதத்தலை கொண்ட வாத்தாக மாற்றிவிடுகிறார்கள். பொழுதுபோக்குக்காக மக்கள் அவளை வேடிக்கை பார்ப்பதாக படம் நிறைவடைகிறது.

படம்: Gabby Voltron
இத்திரைப்படத்தில் நிஜத்திலேயே சயமீஸ் இரட்டையர்களான டெய்சி & வைல்ட் ஹில்டன் நடித்திருக்கிறார்கள். கதைப்படி வைலட்டுக்கு மட்டும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வைலட்டுடைய வருங்கால கணவன் அவளுக்கு முத்தமிடுகிறாள், அதனை டெய்சி உணருவதாக நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு காட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 January 2014

பிரபா ஒயின்ஷாப் – 13012014

அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீரம் படத்துக்கு டிக்கெட் எடுத்த தள்ளு முள்ளில் தான் கவனித்தேன். செங்கல்பட்டில் லாரெல் மால் என்கிற பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. அடடே, நாம பொரண்டு வளர்ந்த மண்ணாச்சே. செங்கல்பட்டுல எங்க’ன்னு தேடினா இன்னும் ஆச்சரியம். மாமண்டூரில் சரியாக ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிரில் லாரெல் மால் அமைந்திருக்கிறது. அந்த அத்துவானக் காட்டில் யார் மாலுக்கு வந்து ஷாப்பிங் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஈ.சி.ஆரில் இருந்திருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அண்டையில் உள்ள மகேந்திரா சிட்டி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, கற்பக விநாயகர் கல்லூரி, நம்மோட ஆண்டாள் அழகர் அப்புறம் செங்கல்பட்டு பொதுஜனம் போன்றவர்களை நம்பித்தான் காம்ப்ளக்ஸ் இயங்கக்கூடும்.

ஒரு நாள் வண்டி கட்டிக்கொண்டு போய் லாரெல் மாலை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் தான். ஆனால் உள்ளே சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொன் மகேஸ் மாதிரி யாராவது எம்ஜியாரு டைப்பு ஆசாமியை உடன் அழைத்துச் செல்லலாம்.
******************************

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பார்த்தேன். சராசரிக்கு மேல் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம். இதைப்போய் ஏன் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒரு படத்தில் இடையிடையே வரும் இருபது நிமிடக்காட்சிகள் மொக்கையாக இருந்ததென்றால் அந்த படத்தையே மொக்கை என்று சொல்லிவிடலாமா...? ஜில்லா, வீரம் போன்ற அரைத்த மாவு குப்பைகளோடு ஒப்பிடும்போது இ.ஆ.பா நூறு மடங்கு தேவலாம். விஜய் சேதுபதி வட சென்னை ஹவுஸிங் போர்ட் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். ஸ்வாதி, நந்திதா இருவரும் க்யூட். ஸ்வாதிக்கு டப்படித்த மானசிக்கு (டைட்டில் க்ரெடிட்ஸ் ஓடவிட்டு அவருடைய பெயரை கண்டுபிடித்தேன்) குடோஸு. திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் தொடங்கி நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் பார்த்து குபுகுபு’வென சிரித்திருக்கிறேன். ஆனால் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மலையாளியென்ன தமிழனென்ன என்றொரு மேனேஜர் செண்டிமெண்ட் காட்சி செய்திருக்கிறார் பாருங்கள். கண்ணுல வேர்த்துவிட்டது.

******************************

ஓவர் டூ ஒய்.எம்.சி.ஏ...!

சனிக்கிழமை ஸோலோவாக சென்றிருந்தேன். டிஸ்கவரி வாசலில் வா.மணிகண்டன் நின்றுக்கொண்டிருந்தார். அடித்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. அவர் கண்ணில் படாமல் தப்பித்து வந்துவிட்டேன். நிறைய பேரை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்த வினை. காலச்சுவடு (என்று நினைக்கிறேன்) அரங்கில் இருந்தவரை எங்கேயோ நினைவிருக்க, அவரிடமே கேட்டு அவர்தான் கிருஷ்ண பிரபு என்று உறுதி படுத்திக்கொண்டேன். அவருக்கு என்னை அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை. சினிமா பத்தியே நிறைய எழுதுவீங்களோ...? என்றார். அங்கிருந்த சில எளிய இலக்கிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதென்ன இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர் என்றாலே ஒருவித கேலி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் சினிமாவை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. சினிமாவையே தொடாமல் எழுதும் எழுத்தாளர் கூட ஜனவரி பத்தாம் தேதி வேண்டுமென்றே தன்னுடைய பதிவிற்கு வீரம் என்று பெயர் சூட்டுகிறார். சினிமாவையே ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் (!!!) கூட அவருடைய வலைப்பூவிற்கு சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை வைத்திருந்தார். கடைசியில், சினிமா என்பதும் எழுத்தைப் போல கலையின் ஒரு வடிவம்தானே...?

லெக்கின்ஸ் அணிந்த தோழி ஒருவர் கார்க்கி மனோகரன் சாயலில் தெரிந்தார். கோயமுத்தூர் மோனி சாயல், சரவணக்குமார் சாயல் என சிலரிடம் அடையாளங்கள் தெரிந்தாலும் நாமாகவே போய்ப் பேசி அவர் வேறு யாராகவோ இருந்து பல்பு வாங்கிவிட வேண்டாமென அடக்கியே வாசித்தேன். ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு வந்தபின்பும் வா.ம டிஸ்கவரி வாசலிலேயே இருந்தார். மனிதர் கிளம்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பித்தேன். இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று, அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். இரண்டாவது, அவர் இணையத்தில் எழுதுவது போல அடாவடியாக தெரியவில்லை. தட் அந்த கொழந்தையே நீங்கதான் சார் மொமண்ட். அவரை சந்தித்த மற்ற நண்பர்களும் அதையே வழிமொழிந்தனர். இணையத்தில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு அக்செஸிபிளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தது தான் அவர் மீதான தவறான புரிதல்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

யாராவது கொலைப்பசியில் இருந்துவிட்டு சாப்பிடுவதை கவனித்திருக்கிறீர்களா ? வள்ளு வதக்குன்னு அள்ளிச் சாப்பிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடத்தை ரணகளமாக்கி விடுவார்கள். இன்னொரு உதாரணமாக, யானை வெண்கலக்கடைக்குள் புகுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆரூர் மூனா புத்தகங்கள் வாங்கியது அப்படித்தான் இருந்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். பாய்ந்து பாய்ந்து முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை என்னுடைய பரிந்துரைகள். சில புத்தகங்கள் வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும், சில புத்தகங்கள் படிக்க ஆசையாக இருந்தாலும் கொள்ளைக்காசு கொடுத்து வாங்க வேண்டுமா என்று தோன்றும் அப்படிப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஆரூரார் ஜஸ்ட் லைக் தட் வாங்கிவிட்டார். நல்ல மனுஷன்.

நேற்று சிங்கம் உடன் வந்திருந்தார். சில விளம்பரங்கள் காரணமாக, மினி மெல்ட்ஸ் ஐஸ்க்ரீமுடன் இனிதே துவங்கினோம். சிங்கம் தேடித் தேடி அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கினார். மாலைக்கு மேல் வழக்கம் போல நண்பர்கள் கூடி கும்மியடிக்க தொடங்கியாயிற்று. இத்தோடு அடுத்த வாரயிறுதியில் தான் புத்தகக் காட்சிக்கு செல்ல முடியும்.

நித்யானந்தாவின் பம்ம பம்மதான் பாடலின் முழு பதிப்பை நான் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். புத்தகக் காட்சியில் அவர்களுடைய ஸ்டாலை பார்த்ததும் சட்டென உள்ளே புகுந்து அந்த ஆல்பத்தின் பெயரைச் சொல்லி அது இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை. ஆனால் ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொண்டார்கள். அடுத்த வாரம் கிடைக்கும் என்றார்கள். இப்போதைக்கு நித்தியானந்தா படம் பொறிக்கப்பட்ட ஒரு கொட்டையை கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரையில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 30122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். 2013 முழுவதும் அப்படி நான் படித்து பிடித்து பகிர்ந்த இடுகைகளின் இணைப்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த சேமிப்பில் இருந்து முத்தான பத்து இடுகைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன். நல்ல எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் பயன் பெறட்டும். அதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் :- இந்த செக்ஷனில் லக்கி, அதிஷா, சமுத்ரா, வா. மணிகண்டன், சேட்டைக்காரன் போன்ற ஜாம்பவான்களின் (ராஜன், டுபுக்கு மன்னிக்க) இடுகைகளை நான் ஏதோ பரிந்துரைப்பது போல வெளியிடுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, அவர்களுடைய பதிவுகள் நீங்கலாக என்னுடைய முத்து பத்து (வரிசை படுத்தவில்லை, ஷார்ட் லிஸ்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது) :-


இரண்டு படங்கள் பார்த்தேன். பிரியாணி, கல்யாண சமையல் சாதம். இரண்டும் இணைய விமர்சகர்களின் கூற்றை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம். அல்லது விமர்சனங்களை படித்துவிட்டு பார்த்ததால் எதிர்பார்ப்பு விகிதம் குறைந்து, படம் நன்றாக இருப்பதாக தெரிந்திருக்கலாம்.

முதலில் கல்யாண சமையல் சாதம். இது ஒரு மாதிரி கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும், மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) வர்க்கத்திற்கும் மட்டும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. காசுக்கு கஷ்டப்படுபவர்கள் படத்தைப் பார்த்தால் வயிற்றெரிச்சலுக்கு உத்தரவாதம். என் போன்ற ஏழைகளுக்கும், பழைய பஞ்சாங்க ஆசாமிகளுக்கு ஒத்துவராது. அந்த வகையில் எனக்கு நிறைய காட்சிகள் எரிச்சலூட்டியது. ஆயிரத்தெட்டு கதாபாத்திரங்கள். சதா லொட லொடவென்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நிறைய மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. பிரசன்னாவிற்கு முக்கியமான கட்டத்தில் எழுச்சி ஏற்பட மறுக்கிறது. அந்த சிக்கலை வைத்தே வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேகா வாஷிங்க்டன் முகம் க்ளோசப்பில் மட்டுமல்ல, லாங் ஷாட்டில் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அட்லாஸ்ட், மனதுவிட்டு சிரிக்க வைத்ததால் க.ச.சா ஒரு ஃபீல் குட் படம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அடுத்து பிரியாணி. வெளியான சமயம் சென்னையில் இருந்திருந்தால் முதல் நாளே பார்த்திருப்பேன். அதன்பிறகு, விமர்சனங்களை படித்து சற்று சுதாரித்துக்கொண்டாலும், மந்தி டக்கர் மட்டும் மனதிற்குள் குடிகொண்டு மக்கர் செய்துக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்துவிட தயாரானோம். ‘னோம்’ என்றால் நானும் சிங்கமும். அவரும் மந்தி டக்கருக்கு விழுந்திருப்பாரோ என்னவோ...? பிகு பண்ணாமல் வந்துவிட்டார். படம் ஃபிகரு, ஜொள்ளு என நன்றாகத் துவங்கி ஆங்காங்கே சில சுமார் ஜோக்குகள் என நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மந்தி டக்கர் வருகிறார். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கலாம். கிறங்கடித்துவிட்டு போய்விட்டார். மந்திக்கு குரல் கொடுத்தவர் யாரென்று விசாரிக்க வேண்டும். அப்புறம், படம் அசுர வேகத்தில் தடதடக்கிறது. எல்லாம் சரி, இறுதி இருபது நிமிடங்கள் மட்டும் படு கேவலமான சொதப்பல். க்ளைமாக்ஸில் யாருமே யூகிக்கமுடியாத ஒரு ட்விஸ்டை வைக்க வேண்டுமென வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். அதற்காக இப்படியா பூமாலையை போட்டு குதறுவது...? பிரேம்ஜி நாசராக நடிப்பதை எல்லாம் ஸ்கூல் பசங்க கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி இருபது நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரியாணி சரோஜா லெவலுக்கு இல்லையென்றாலும் ஒகே ரகம்.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 23122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிசம்பர் பத்து தொடங்கி ஒரு வாரத்திற்கு இணையம் வேலை செய்யவில்லை. BSNL அலுவலகத்தை அழைத்தால் சம்பந்தப்பட்ட லைன்மேன் ஊருக்கு போயிருப்பதாகவும் (அதுவும் எங்கே...? சாத்தூருக்கு...!) திரும்பிவர மூன்று நாட்களாகும் என்றும் பதில் வந்தது. ஒருவழியாக அவர் திரும்பி வந்து இணைய கோளாறை சரி செய்துக் கொடுத்த நேரம் புனே பயணத்திற்கு கிளம்ப வேண்டியதாக ஆயிற்று.

இணையம் வேலை செய்யாதது கூட ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்டது. பாரதியார், தலைவர் பிறந்தநாள் தொடர்பான ஜல்லிகளை தவிர்த்தாயிற்று. வருடா வருடம் நடைபெறுகிற கூத்துதான். ஒன்று, பாரதியார் பிறந்தநாளை மறந்துவிட்டு தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று கூப்பாடு போடும் கூட்டம். இரண்டு, பாரதியார், தலைவர் என இருபெரும் சகாப்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததை எண்ணி சிலாகிக்கும் கூட்டம். மூன்று, உண்மையில் பாரதியின் பால் ஈடுபாடு இல்லையென்றாலும் முதல் கோஷ்டியிடமிருந்து தப்பிக்க வேண்டி, பாரதிக்கு ஒரு சம்பிரதாய வாழ்த்து சொல்லிவிட்டு தலைவர் பிறந்தநாள் கும்மியடிப்பவர்கள். அப்புறம், வழக்கம்போல தலைவர் சமூகத்துக்காக என்ன செஞ்சு கிழிச்சாரு’ன்னு ஒரு குரூப் கேட்கும். அதுக்கு நடிகரிடம் ஏன் சமூக அக்கறையை எதிர்பார்க்குறீங்க’ன்னு தலைவரின் அடிபொடிகள் கேட்கும். இதுல பியூட்டி என்னன்னா – மத்த லொட்டு லொசுக்கு நடிகர்களிடமெல்லாம் எதிர்பார்க்காத சமூக அக்கறையை ஏன் தலைவரிடம் மட்டும் எதிர்பார்க்கிறார்கள்...? என்ற கேள்விக்கு அவருடைய ரசிகர்களுக்கே மிக நன்றாகத் தெரியும். இருந்தாலும் வேறென்ன செய்வது...? திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கிட்டு இருந்துதானே ஆகணும்...!

ஒரு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு ஆறு நாட்கள் புனே பயணம். மஹாராஷ்திரா, மொழிப்பற்றில் தமிழகத்தை மிஞ்சிய மாநிலம் போல. பெரும்பாலும் கடைகளுடைய பதாகைகளில் மராத்தி மட்டுமே காணப்படுகிறது. ஆட்டோக்களில் எல்லாம் பயங்கர சின்சியராக மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அதுவும் எப்படி என்றால் மீட்டரில் ஐம்பத்தி நான்கு ரூபாய் காட்டினால் கர்ம சிரத்தையுடன் மீதி ஆறு ரூபாய் சில்லறை தேடித் தருகிறார்கள். அதேபோல மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. பெருநகரம் இல்லை என்பதாலோ என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்து விதிகள் சகஜமாக மீறப்படுகிறது. போகிறபோக்கில் யாருடைய வாகனத்தையாவது தட்டிவிட்டு போனால் ஒரு மன்னிப்பு கூட கேட்பதில்லை. வள்ளுவரின் வாக்குப்படி கண்டபடி துப்பார்க்கு துப்பாய துப்பி வைக்கிறார்கள். துப்புவதில் படித்தவர் / படிக்காதவர், பாலின பேதமெல்லாம் கிடையாது. நிறைய மல்டிப்ளக்ஸ்கள் உள்ளன. ஆனாலும் சினிமாப்பட போஸ்டர்களை பார்க்க முடிவதில்லை. 

வந்ததுக்கு ஏதாவதொரு லோக்கல் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்றால் எங்கு பார்த்தாலும் சன்னி லியோனின் ஜாக்பாட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நஷா’ கண்ட வரலாறு நமக்கிருந்தாலும் போனது உறவினர் வீட்டுக்கு என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியதாக போய்விட்டது. வெள்ளி வரை காத்திருந்து அப்சரா சினிமாஸில் தூம் 3 பார்த்தேன். பக்கா லோக்கல் தியேட்டர். ஹிந்தியில் டிக்கெட் விலை எழுதியிருந்ததை பார்த்துவிட்டு ஒரு நைண்டி ருபீஸ் டிக்கெட் என்று நூறு ரூபாயை நீட்டினேன். டிக்கெட்டுடன் மீதி ஐம்பது ரூபாய் கிடைத்தது. என்னடா இது என்று பார்த்தால் ஹிந்தியில் ஐம்பதைத் தான் தொண்ணூறு போல எழுதுகிறார்கள். அரங்கில் படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் போடுகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் எந்தவித கிண்டலோ கேலியோ இல்லாமல் அனைவரும் எழுந்து அட்டேன்ஷனில் நிற்கிறார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘பாரத் மாதாகி ஜே’ என்று கோஷம் எழுப்பிவிட்டு சமத்தாக அமர்ந்துக்கொண்டார்கள். தூம் 3யில் தம், தண்ணி காட்சிகள் இல்லாததால் முகேஷ் ஹரானே செய்திப்படம் காட்டவில்லை.

ஏற்கனவே தூம் வரிசை படங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்ததால் படம் எப்படியிருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பிற்கு எந்த ஏமாற்றமும் கொடுக்காமல் அமீர் கான் மூன்று காட்சிகளிலும் அபிஷேக் ஒரு காட்சியிலும் முறையே பைக், ஆட்டோ வைத்து கொரளி வித்தை காட்டுகிறார்கள். அமீருடன் ஒப்பிடும்போது அபிஷேக் வேடம் மிகவும் டம்மி போல தெரிகிறது. கத்ரினா கைப் அமீர் கானை முன்னே உட்கார வைத்துவிட்டு ஒரு ஸ்ட்ரிப் டீஸிங் பாணி நடனமாடுகிறார் பாருங்கள்... அபாரம்...! இருந்தாலும் பிபாஷா பிசாசு இல்லாதது வருத்தம் தான். ஓரளவுக்கு உடல்மொழியை வைத்து ஹிந்தி வசனங்களை புரிந்துக்கொண்டாலும், உதய் சோப்ரா அடித்த சோக்குகள் எதுவும் புரியவில்லை. சும்மா ஹிந்திக்காரர்களுடன் சேர்ந்து கடமைக்கு சிரித்து வைத்தேன். படம் முடிந்து வெளிவந்தபோது அடுத்த காட்சிக்கு பேய்க்கூட்டம் கூடியிருந்தது. படம் சூப்பர்ஹிட் போல.

பயண நேரத்தில் படிப்பதற்கென சுதாகரின் 6174 எடுத்துச் சென்றிருந்தேன். நாவலை வெறுமனே படிக்க முடியவில்லை. படிக்கும்போதே குறைந்தபட்சம் ஐம்பது விஷயங்களையாவது கூகுள் செய்யவேண்டும் போலிருக்கிறது. சில விஷயங்களை உள்வாங்கும்பொருட்டு மறுமுறை படிக்க வேண்டும். படித்துவிட்டு அதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.

அதற்கு முன்பு ஒரு சம்பவம். 6174 படித்துவிட்டு தோழர் சிங்கம் என்னிடம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் / ஃபேண்டஸி நாவல் குறித்த ப்ளாட் சொன்னார். என்னுடைய நேரம், நான் அப்போது 6174 படித்திருக்கவில்லை. படித்தபின்பு சிங்கம் சொன்ன கதையும் 6174 கதையும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியாக இருந்தது. ஒருவேளை சிங்கம் அக்கதையை நாவலாக்கினால் அது 6174-ன் காப்பியாகவே காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவருடையது 6174-ஐ விட அட்டகாசமான கதை. அடுத்தடுத்த ஸ்டோரி டிஸ்கஷன் சிட்டிங்குகளில் கலந்துக்கொண்டு அக்கதையை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment