Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

24 January 2014

பண்பலை குரல்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

2004ம் ஆண்டு வாக்கில் சென்னையில் ரேடியோ மிர்ச்சியும் சூரியன் பண்பலையும் அடியெடுத்து வைத்து புகழ் பெற்றிருந்த சமயம். அச்சமயத்தில் பேருந்துகளில், கடைகளில், உணவகங்களில், சிறிய தொலைக்காட்சிகளில் என எங்கும் பண்பலைகள் மயமாக இருக்கும். நிறைய பேர் மிர்ச்சி சுச்சியின் விசிறிகளாகியிருந்தனர், நான் உட்பட. நானெல்லாம் சிறிய ரேடியோ ஒன்றை கையோடு வைத்திருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு கூட எடுத்துச்சென்று திருட்டுத்தனமாக கேட்டது நினைவிலிருக்கிறது. ஞாயிறு தோறும் மாலை ஆறிலிருந்து எட்டு வரை மிர்ச்சியில் டாப் 20 பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதனை எங்கிருந்தாலும் தவறாமல் கேட்டுவிடுவேன். நாளடைவில் வதவதவென நிறைய பண்பலை வரிசைகள் வந்துவிட்டன. தொழில்நுட்பங்களும் நிறைய வளர்ந்துவிட்டதால் பண்பலைகள் மறந்து போயிற்று. எனினும் இன்றளவும் பல சிறிய தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பண்பலையில் பாடல்கள் கேட்டபடியே களைப்பு தெரியாமல் பணிபுரிகிறார்கள்.

என்னுடைய அலுவலகத்தில் பணியாளர்கள் வீடு திரும்ப தினசரி வாடகை சீருந்து வசதி உண்டு. அப்படி நான் பயணம் செய்கிற வண்டியில் எப்போதும் பண்பலை ஒலித்துக்கொண்டிருக்கும். ஆரம்பத்தில் எனக்கும் அது பிடித்திருந்தது. நாளடைவில் தினசரி ஒரே மாதிரியான குரல்கள், ஒரே மாதிரியான பேச்சு, ஒரே மாதிரியான பாடல்கள் என்று சலித்துவிட்டது. ஆனால் வாகன ஓட்டுநருக்கு சலிக்கவில்லை. உண்மையில் அவர் வாகன ஓட்டுநர் மட்டுமல்ல, உரிமையாளரும் கூட. அவருடைய வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டு ரேடியோ பொட்டியை கொஞ்சம் நிறுத்த முடியுமா ? என்று கேட்பது எனக்கு அவ்வளவு நாகரிகமாக படவில்லை. அதுவுமில்லாமல் இரவு பன்னிரண்டு மணி வரை தூக்கத்தை கட்டுபடுத்திக் கொண்டு உழைக்கும் மனிதரிடம் போய் பாடலை நிறுத்துங்கள் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும். அதனால் இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு என்று கேட்டுக்கொள்ள பழகிவிட்டேன். ஆனால் புலம்பலாம் இல்லையா...?

முதலில் ஒரு முன்ஜாமீன் போட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் நான் குறிப்பிட இருக்கின்ற மூவருமே உண்மையில் சிறப்பான வானொலி தொகுப்பாளர்களே. லபோ திபோ என்று கத்துபவர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் மூவரும் ஆயிரம் மடங்கு பரவாயில்லை. இருப்பினும் மோனோடோனஸாக அவர்களுடைய குரல்களையே கேட்டுக்கொண்டிருந்ததின் விளைவே இக்கட்டுரை. உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...!

அன்பான அருண்
தினசரி இரவு பத்திலிருந்து பதினோரு மணிவரை சூரியன் பண்பலையில் ஒலிபரப்பாகும் இனிய இரவு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவருடைய குரல் கேட்டதும் பிடித்துவிடக் கூடியது, கேட்கக் கேட்க பிடிக்காமல் போகக்கூடும். மெட்ராஸ் பவன் சிவகுமார் குரல் போலவே இருக்கும். அருண் ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவராக இருக்கக்கூடும். யாரையும் விளையாட்டுக்காக கூட கிண்டலடித்து பேசமாட்டார். தொலைபேசி நேயர்களை லைட்டா கலாய்க்கக்கூட மாட்டார், அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் என்று நினைக்கிறேன். வெறுமனே தடவிக்கொடுத்துக்கிட்டே இருந்தா பூனை கூட செத்துப்போயிடும்’ன்னு ஜேஜே படத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல இவருடைய பேச்சை கேட்டால் என்னடா இந்தாளு எப்பப்பாரு கொழைஞ்சுக்கிட்டே இருக்கான்னு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அருணுடைய இன்னொரு சிக்கல் பொதுபுத்தி வார்த்தைகள். அதாவது நிகழ்ச்சியின் இடையில் அருமையான கிளைமேட், மண் வாசனை வீசுற இந்த இனிய இரவு நேரத்துல ராஜா சார் பாடல்களை கேட்குறது ஒரு சுகம்தான்ல்ல...? அப்படின்னு ஒரு ‘ல்ல’ போட்டு கேள்வியா முடிப்பார். உண்மையில் நாம் அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அவருடைய கேள்விக்கு ஆம் சொன்னதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்.

லவ் குரு
அதே இரவு பத்து மணிவாக்கில் ரேடியோ சிட்டியில் ஒலிபரப்பாகும் லவ் குரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இவரும் கிட்டத்தட்ட அருண் போல தான். யாருக்கும் வலிக்காமல் பேசக்கூடியவர். எப்போதாவது தொலைபேசி நேயர்களிடம் மட்டும் லைட்டா... ரொம்ப லைட்டா... கிண்டலடிப்பார். அருணுடைய குரல் பதிவர் சிவகுமார் போன்றது என்றால் இவருடைய குரல் நடிகர் சிவகுமார் போன்றது. அதாவது ஒருமாதிரி தழுதழுத்த குரலில் பேசுவார். கெரகம் அவர் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சி அப்படி. தினசரி இரவு யாராவது ஒரு காதலன் / காதலியுடைய உருக்கமான கடிதத்தை ஹஸ்கி வாய்ஸில் படித்துக்காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் தீம். ஆனால் அந்த காதல் கடிதங்களை நிலையத்தினரே உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. நாட்டில் என்ன அத்தனை கிறுக்கர்களா இருக்கிறார்கள்...? மேலும், மனமுதிர்ச்சியடையாத காதலர்களை நன்றாக கிண்டிவிடக்கூடிய அளவில் லவ் குரு என்னைப்பொறுத்தவரையில் ஒரு மோசமான நிகழ்ச்சி. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு ஒலியிடுகை வெளியிட்டேன். மிகவும் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் பேசும் காதல் தோல்வி ஆசாமிகள் எப்படி கனகச்சிதமாக பேசுகிறார்கள்...? தொடர்ந்து கேட்டால் லவ் குரு ஒரு நல்ல ஜோடனை நிகழ்ச்சி என்று தெரிந்துவிடும்.

யாழ் சுதாகர்
அப்படியே இரவு பதினோரு மணியளவில் மீண்டும் சூரியன் பண்பலைக்கு திரும்பினால் யாழ் சுதாகரை கேட்கலாம். ரயில் நிலையத்தில் அறிவிப்பு குரலை கேட்டிருக்கிறீர்களா....? வண்டி எண், செல்லும் இடம், பிளாட்பார எண், புறப்படும் நேரம் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வரும். அதுபோல யாழ் சுதாகரின் குரல் டெம்ப்ளேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அதில் படத்தின் பெயர், பாடலின் முதல் வரி, பாடகர்கள் பெயர், பாடலின் ராகம் போன்றவற்றை உள்ளீடு செய்கிறார்களோ என்பது என்னுடைய ஐயப்பாடு. பயணிகள் கவனத்திற்கு என்று துவங்கும் சொற்றொடர் நம்மை எவ்வளவு வெறுப்பேற்றுமோ அதற்கு இணையாக வெறுப்பேற்றக்கூடிய சொற்றொடர் நாதகலாஜ்ஜோதி இளையராஜ்ஜாவின் இசை வார்ப்பில். சூரியன் பண்பலையின் தாரக மந்திரமான கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்ற வரிகளை நம்மாளு தூயதமிழில் பொறுமையாக வாசிக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிடுவார். அடிக்கடி சுதாகர் உச்சரிக்கும் இன்னொரு சொற்றொடர் பழைய பாடல்கள் தங்கம் என்றால் புதிய பாடல்கள் தகரம் என்பேன். அப்படியென்றால் சூரியன் பண்பலையில் நாளின் மற்ற இருபத்தி மூன்று மணிநேரங்கள் ஒலிபரப்பாகும் பாடல்கள் அனைத்தும் தகரம் என்று அவரே ஒப்புக்கொள்கிறாரா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2013

பெண் பார்க்கும் படலம்

அன்புள்ள மனைவிக்கு,

அது ஒரு ஞாயிறு மாலை. நான் என்னுடைய குடும்பத்துடன் உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தேன்.

“ஹே........ மாப்ள வந்துட்டாரு....!” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டே சில வாண்டுகள் எங்களை முந்திச் சென்றன. எங்களுடைய வருகையை உள்ளே இருப்பவர்களுக்கு முன்னறிவிப்பு செய்திருக்கக்கூடும். எட்டுத் திக்கிலிருந்தும் யாரோ எங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பதை போன்றதொரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இதமான மாலைத்தென்றலில் கூட வியர்த்துக் கொட்டியது. அண்டை வீட்டு வாசல்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் என்று எங்கெங்கிலிருந்தும் மனித கண்கள் எங்களை, குறிப்பாக என்னை நோட்டமிட்டபடி இருந்தன. அவற்றில் பெரும்பாலும் பெண்கள். ஒருத்தி நைட்டி மீது குற்றால துண்டு ஒன்றினை தற்காலிக துப்பட்டாவாக சூடியிருந்தாள். அவள் முகத்தில் அர்த்தம் புரியாத ஒரு சிரிப்பு வியாபித்திருந்தது. அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து “வாங்க... வாங்க... வாங்க... வாங்க...” என்று ஒரு ஹை-பிட்ச் குரல் எகிறி வந்தது. உன்னுடைய தந்தை தான். கார்டனுக்குள் நுழைந்த அமைச்சர் போலவே பம்மியபடி வந்து எங்களை உள்ளே அழைத்தார். உன் தந்தையைக் கண்டதும் ஏனோ என் மனக்கண்ணில் ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம் தோன்றி மறைந்தது.

கதவைச் சுற்றி கோவில் வாசல் போல செருப்புகள் இரைந்து கிடந்தன. உன்னுடைய அப்பா யாரையோ கூப்பிட்டு செருப்புகளை ஓரம்தள்ளி வைக்காதமைக்காக கடிந்துக்கொண்டார். மிகவும் கண்டிப்பாக பேர்வழியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்றினாலும் கூட ஒரு நமுட்டுச்சிரிப்பும் கூடவே வந்துத்தொலைத்தது. வாசற்காலில் தலை இடித்துவிடாதபடி கவனமாக உள்ளே நுழைந்தேன். அந்த குறுகிய அறைக்குள் சுமார் ஐம்பது மனித தலைகளாவது தென்பட்டிருக்கும். நாங்கள் நுழைந்ததும் சட்டென வாத்தியார் நுழைந்த வகுப்பறை போல நுன்னமைதி. எங்களுக்கென சோபாவில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்யாத தரைப்பகுதியில் லட்டு, பாதுஷா, மைசூர் பாகு போன்ற லெமூரியா காலத்து பட்சணங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.

என் கண்கள் என்னையே அறியாமலும் வேறு வழியில்லாமலும் உன் வீட்டுச் சுவற்றை மேய்ந்துக் கொண்டிருந்தன. ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒருத்தர் கோட்டு-சூட்டு போட்டு டையெல்லாம் கட்டி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். உன்னுடைய மூதாதையராக இருக்கக்கூடும். இதயவேந்தன் ரசிகர் மன்றம் சார்பாக கொடுக்கப்பட்ட தினசரி நாட்காட்டி பல மாதங்களாக தேதி கிழிக்கப்படாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பீரோ கண்ணாடியில் கர்த்தர் ஜீவித்துக்கொண்டிருந்தார். நானில்லாத உங்களுடைய குடும்ப புகைப்படம். அதில் உன்னுடைய வெட்கச்சிரிப்பு. ஷோ கேஸ் சாயலில் இருந்த அலமாரியில் சில கைவினை பொருட்கள். இன்னொரு அலமாரியில் ஒருக்களித்து சாத்தி வைக்கப்பட்டிருந்த தடிமனான மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். அருகிலேயே உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையிலிருந்து கொஞ்சம் மின்விளக்கு வெளிச்சம் கசிந்துக்கொண்டிருந்தது. சர்வநிச்சயமாக நீ அந்த அறைக்குள்ளே தான் இருக்கவேண்டுமென எனக்குள்ளிருக்கும் விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். ஒரு முழு சுற்றை முடித்துக்கொண்டு என் பார்வை தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, கீழே அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டார்கள். ஏதாவது ஜோக் அடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதற்குள் உன் அப்பாவிற்கு அருகில் அமர்ந்திருந்த உறவினர் உன்னைப்பற்றிய பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பிக்க, என்னுடைய கவனம் ஆங்கே நிலை கொண்டது. நீ சின்ன வயதிலிருந்தே படிப்பில் ரொம்ப சுட்டியாமே ! டீச்சருக்கே சொல்லிக் கொடுப்பியாம். பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் நீதான் பாத்துப்பியாம். ஒருமுறை ஸ்கூலுக்கு அப்துல் கலாம் வந்தபோது உன்னைப் பாராட்டி பேனா பரிசளித்ததை உன் தந்தையார் உறவுக்காரருக்கு நினைவூட்டும் தொனியில் என்னிடம் தெரிவித்தார். நீயே எம்ப்ராய்டரி போட்டது என்று ஒரு ஃப்ரேம் செய்த மயில் படத்தையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் தலையணை உரையையும் காட்டி சிலாகித்துக்கொண்டிருந்தார் உன் தந்தை. மேலும், உன்னை மருத்துவச்சியாக்க வேண்டுமென நீ பிறந்தபோதே முடிவெடுத்து விட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த கனவு நினைவான சந்தோஷமும் பெருமையும் அவருடைய கண்களில் தெரிந்தன. சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஒரு சிநேகமான புன்னைகையை உதிர்த்தார் உன்னுடைய அம்மா. அநேகமாக என்னுடைய காத்திருப்பின் வலியை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.

நம்மவர்களுக்கு பேச்சை எங்கே தொடங்கினாலும் சினிமாவிலோ அரசியலிலோ கொண்டுவந்து விடும் கெட்டப்பழக்கம் எப்பொழுதும் உண்டு. கப்பலோட்டிய தமிழனில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி உன்னுடைய அப்பாவும், நாடோடி மன்னனில் எம்.ஜி.யாரின் கத்தி சண்டையைப் பற்றி என்னுடைய அப்பாவும் சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் மொக்கை போட்டுக்கொண்டிருந்தது எனக்கு அசுவாரஸ்யத்தையும் அசவுகரியத்தையும் ஏற்படுத்தியது. சண்டை போடாதீங்க ஏட்டய்யா என்று ஆட்டையை கலைக்க எத்தனித்தாலும் நாகரிகம் கருதி அடக்கியே வாசித்தேன். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி ? பொண்ண வரச்சொல்லுங்கப்பா என்று சபையில் எனக்காக ஒரு மீசை குரல் எழுப்பியது. மீசைக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்க முடியாவிட்டாலும் ஒரு குவாட்டராவது வாங்கித்தர வேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

அடர் சிகப்பு நிற பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் நீ அன்னநடை போட்டு அறையிலிருந்து வெளிவந்த தருணம் மின்சார கனவு போல இருந்தது. பிண்ணனியில் ஸ்ட்ராபெர்ரி கண்ணே... விண்வெளி பெண்ணே... என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு மட்டும் ஏற்பட்டது. வீட்டு வாசலில் ஏன் கோவில் போல செருப்புகள் இரைந்து கிடந்தன ?, பட்சணங்களுக்கு மத்தியில் ஏன் ஜாங்கிரியை வைக்கவில்லை ? போன்ற உண்மைகள் புரிந்தன. “Hi... Im Prabhakar...” என்று கம்பீரமாக எழுந்து நின்று உன்னுடன் கைகுலுக்க வேண்டுமென என் வீட்டுக்கண்ணாடி முன்பு இருபத்தேழு முறை ஒத்திகை பார்த்திருந்தேன். ஆனால் உன்னைக் கண்டதும் நாக்கு குறழ... ச்சே... குழற ஆரம்பித்துவிட்டது. நான் உன்னை பார்க்கிறேனா என்று என்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பா, “டேய்... பொண்ணை சரியா பாரேன்டா...” என்று என் காதில் கிசுகிசுத்தார். “நான் பாத்துக்குறேன் பா... நீங்க மொதல்ல அந்தப்பக்கம் திரும்புங்க...” என்று பெருசை ஆஃப் செய்தேன். பையன், பொண்ணுக்கிட்ட தனியா நாலுவார்த்தை பேசணும்ன்னு ஆசைப்படுறான் மறுபடியும் அதே மீசைதான். டேய் நான் எப்படா சொன்னேன் மீசைக்கு குவாட்டர் கேன்சல். உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும்கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது.

நேர்முகத் தேர்விற்கு செல்லும் பணியாளனின் மனநிலையில் தான் அறைக்குள் நுழைந்தேன். நான் உன்னைப் பார்க்கும்போது நீ மண்ணையும், நான் மண்ணைப் பார்க்கும்போது நீ என்னையும் பார்ப்பதிலேயே பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன. யார் முதலில் பேச்சை துவங்குவது என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய மரணப்படுக்கையில் பக்கம் அமரப்போவது நீயேதான் என்று மட்டும் உள்ளுணர்வு ஆணித்தரமாக சொல்கிறது. அருகில் வந்து உன்னை இறுக்கி அனைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்து எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ? என்று கேட்டுவிட்டேன். அதை உன்னுடைய காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லாத அளவிற்கு மெதுவாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவு திரும்பிய போது மீண்டும் சோபாவில் அமர்ந்து உன்னுடைய பதிலுக்காக காத்திருந்தோம். நீ என்னம்மா சொல்லுற ? என்றார் என் மாமனார். சரி என்ற சொல்லுக்கேற்ப ஒரு மெல்லிய தலையசைப்பு. சட்டென்று மக்காவ் டவரிலிருந்து பஞ்ஜி ஜம்ப் அடித்தது போன்றதொரு ஜில்லிப்பு. அந்த நொடியிலிருந்து நான் வாழத் துவங்கியிருந்தேன்.

அன்று உங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது உன் அப்பாவின் கையை பற்றிக்கொண்டு “தேங்க்ஸ் மாமா...” என்று சொன்னேன். ஒரு அழகு பதுமையாய் பெற்றெடுத்து எனக்கே எனக்காக கொடுத்ததற்குத்தான் தேங்க்ஸ் சொல்கிறேன் என்ற பேசிக் நாலேஜ் கூட இல்லாத என் மாமனார் ஒன்றும் புரியாமல் தலை சொறிந்தபடி சரிங்க மாப்ள என்று அசடு வழிந்தார்.

இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment