Showing posts with label sanchitha. Show all posts
Showing posts with label sanchitha. Show all posts

15 November 2013

வில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீட்ஸா பாகம் 2 என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் அரசியலை சில மாதங்களுக்கு முன்பாகவே கேபிள் சங்கர் மூலமாக அறிந்துக்கொள்ள முடிந்தது. வில்லா படத்திற்கு பீட்ஸாவின் பெயரை சூட்டுவதை கார்த்திக் & தீபன் இருவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு நல்ல படைப்பாளியாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வியாபாரி...? அதுதான் நடந்திருக்கிறது. படத்தின் ட்ரைலரில் “இது சீக்வலா...?” என்று ஒரு கதாபாத்திரம் கேட்க, “இல்ல சார், டோட்டலா வேற கதை” என்று கதாநாயகன் வாயிலாக மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார் இயக்குநர். அப்போதே வில்லாவில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறந்துவிட்டது. இருப்பினும், வில்லா பார்க்கப் போகிறவர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும்.

1. பீட்ஸா என்பதை சுத்தமாக மறந்துவிடுங்கள். யாராவது பீட்ஸா என்றால் என்னவென்று கேட்டால் கூட சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிடக்கூடிய வஸ்து என்று சொல்லுமளவிற்கு மறந்துவிடுங்கள்.

2. எல்லா ஹாரர், ஃபேண்டஸி படங்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு பகுத்தறிவு என்று ஏதாவது இருந்தால் தயவு செய்து அதனை இரண்டு மணிநேரங்களுக்கு செயலிழக்கச் செய்துவிடுங்கள்.

அசோக் தொழில் நட்டம், தந்தையின் உயரிழப்பு ஆகியவற்றைக் கடந்து பாண்டிச்சேரியில் தந்தையின் பெயரிலிருக்கும் ஒரு வில்லாவிற்கு அதனை விற்கும் நோக்கத்துடன் செல்கிறான். அசோக்குடைய காதலி சஞ்சிதாவிற்கு வில்லா மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அசோக் சஞ்சிதாவின் முடிவுடன் சமாதானமாக இருக்கும்போது வில்லாவில் ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் ஓவியங்களில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும், நடக்க இருக்கிற சம்பவங்களும் காணப்படுகின்றன. அதன்பிறகு நடப்பவற்றை பார்வையாளர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

முதலில், ஹாரர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கவனித்துவிடலாம். ஹாரர் என்ற சொல்லுக்கு அதீத பயம் என்று பொருள். ஒரு ஹாரர் படம் என்பது பார்வையாளர்களுக்கு பயமூட்டுவதாக அமைய வேண்டும். ஆனால் பொதுவாகவே, வேறு சில ஜானர்களையும் ஹாரர் படங்களோடு சேர்த்துவிடும் பழக்கம் விக்கிபீடியா காலம் தொட்டே இருந்துவருகிறது. இது ஒரு புறமிருக்கட்டும் படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றாலே வேலைக்காரி விநோதமாக சிரிப்பது, வாட்ச்மேன் முறைத்து பார்ப்பது, அப்புறம் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சொல்வாரே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். வில்லா அத்தகைய படங்களிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த படம் குறுக்கெழுத்து புதிரை நிரப்புவது போல சுவாரஸ்யமானது என்று நண்பர் ஒருவர் விளக்கினார். வில்லாவும் கிட்டத்தட்ட அதுபோல தான். படத்தின் துவக்கத்திலிருந்தே ஆங்காங்கே நமக்கான ஹிண்ட்ஸ் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதனை புரிந்துக்கொள்ளும்போது பரவசமடைகிறோம். கதை மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே நகர்கிறது. அதுதானே கிக் ! ரகசிய அறையில் உள்ள ஓவியங்களை கதாநாயகன் கண்டுபிடித்ததும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு ஒரு அதிரடியை காட்ட வேண்டுமென்பதற்காக கிராபிக்ஸில் பொருட்கள் எல்லாம் விழுவதும், பறப்பதுமாக காட்டுகிறார்கள். அங்குதான் துவங்குகிறது வினை, படத்திற்கு !

தமிழ் சினிமா ஹாரர் படங்களில் இன்னொரு பொதுவான விஷயம் உள்ளது. ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் பெனஞ்சு அடிச்சு ஆன்மிகமும் அறிவியல் தான் தெரியுமோ ? குனிஞ்சு நிமிந்து கோலம் போட்டா பூர்வாங்க உட்கட்டாசனா என்றெல்லாம் க்ளாஸ் எடுக்க துவங்கிவிடுவார்கள். அதுபோக யாராவது ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு கபடியெல்லாம் ஆடுவார்கள். சமகாலத்தில் சாமியாரை எல்லாம் காட்டினால் போங்கடா நொன்னைகளா என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் ஃபிரெஞ்சு சூனியக்காரன், witchcraft என்றெல்லாம் பாலிஷ்டாக சொல்லி அங்கிருந்து பில்லி, சூனியம், மாந்திரீகம் என்று படிப்படியாக இறங்கி வருகிறார்கள். அதாவது விடுதலைக்கு முன்பு பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நரபலியெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கொடூரமான ஃபிரெஞ்சு சூனியக்காரன் கட்டிய வில்லா அது. அதனால் அந்த வீடு முழுக்க நெகடிவ் சக்தி நிறைந்து கிடக்கிறது. நெகடிவ் சக்திகளை அழிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு வருவது கிளைமேக்ஸ்.

ஹீரோ அசோக் செல்வனை பார்த்துவிட்டு நிறைய பேரு யாரு ? என்றே கேட்கிறார்கள். சூது கவ்வும் படத்தில் பொட்டி தட்டுபவராக நடித்தாரே என்று சொல்லி விளக்க வேண்டியிருக்கிறது. அதிகம் நடிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம். உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார். அவதார் முக நாயகி சஞ்சிதாவை மறுபடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு இதுவே கடைசி படமாக அமையக் கடவது.

ஒரு கதாபாத்திரம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக காட்டும்போது பார்வையாளர்களுக்கு கதை சொல்ல ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அதற்கு அந்த கதாபாத்திரம் யாரிடமாவது போன் பேசுவது போலவோ, டைரி எழுதுவது போலவோ வைப்பார்கள். அது மாதிரியோ என்னவோ ஒரு ஹீரோ நண்பன் கதாபாத்திரம் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 7G ரெயின்போ காலணி உட்பட சில படங்களில் நடித்தவர். பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறேன். படத்தை தன் பங்குக்கு எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்திருக்கிறார். அப்புறம் நாசர், சில குறும்பட முகங்கள், ஒரே ஒரு காட்சிக்காக எஸ்.ஜே.சூர்யா !

இயக்குநர் தீபன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு நல்வரவு. சில தகவல்களை மேலோட்டமாக தூவிவிட்டு விருப்பமிருந்தால் நீயே தேடி தெரிந்துக்கொள் என்று பார்வையாளர்களின் கையில் விட்டுவிடுவது இவருடைய சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை நன்றாகவே கடத்தியிருக்கிறார் அதன் பிறகு தான் தடுமாற்றங்கள் துவங்குகின்றன. குறிப்பாக அடுத்த பாகத்திற்கு எப்படி தொடுப்பு கொடுப்பது என்று யோசித்து யோசித்தே அதனை மட்டும் திறம்படச் செய்துவிட்டு இந்த பாகத்தின் முடிவை கோட்டை விட்டிருக்கிறார். அப்புறம், சஞ்சிதாவின் கேரக்டர் என்ன மாதிரியானது என்று சரிவர சொல்லப்படவில்லை. அவருக்கு அந்த வில்லா மீதும் அதன் மர்மங்கள் மீதும் ஆசையா அல்லது பணத்தாசையா அல்லது உண்மையில் அசோக்கை காதலிக்கிறாரா ? என்று கடைசி வரை புரியவே இல்லை.

இறுதியாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பொதுவாக, ஹாரர் படங்களில் ஒரு முடிச்சு இருக்கும், பின்பு அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு சிக்கல்கள் துவங்கும், இறுதியில் அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் அல்லது தீர்க்கப்பட்டது போல தோன்றி அடுத்த பாகத்திற்கான தொடுப்பு வைத்து முடிக்கப்படும். ஆனால், வில்லாவில் இறுதிவரை தீர்வு என்பதே இல்லாமலிருப்பது தான் மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை அதுதான் மாற்று சிந்தனை என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ...? அல்லது விஸ்வரூபம் போல அடுத்த பாகத்தையும் சேர்த்துதான் ஒரு கதையாக பார்க்க முடியுமோ என்னவோ...?

இரண்டு, படத்தின் எந்த காட்சிகளும் பயமூட்டுவதாக இல்லை. முதல் பத்தியில் படம் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வலியுறுத்தினேன் அல்லவா...? அதனோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வில்லா ஒரு ஹாரர் படம் கிடையாது. வேண்டுமென்றால், மிஸ்ட்ரி வகையறாவில் வைக்கலாம். அந்த எண்ணத்தோடு வில்லா’வை பார்த்தால் ரசிக்கலாம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதற்காக வரவேற்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 May 2013

சூது கவ்வும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.

அரைகுறை கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.

நயன்தாராவுக்கு கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது. படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள் இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.

குறும்பட இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில் அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில் படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம் நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய் சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும் பின்பற்றிவிடக் கூடாது.

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும் இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.

மற்ற காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத் தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில் அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில் சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி. இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள். அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.

பாடல்கள் இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான் முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும் மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.


ஆள் கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை. டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.

டிராவிட் போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும் சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment