22 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 22052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கலி புங்கிலி கதவ தொற ! ஹாரர் – காமெடி என்பது பொங்கல் – வடகறி போல மட்டமான சேர்க்கை. என்னைப்பொறுத்தவரையில். யாமிருக்க பயமே போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம். மேலும் படத்தின் பெயரே அத்தனை ஈர்ப்பாக இல்லை. அடிக்கடி ப்ரொமோக்கள் என் கண்களில் பட்டுத் தொலைக்க, டிரைலர் பார்த்தால் யாமிருக்க பயமே சாயலிலேயே இருந்தது. ஏதோவொன்று உறுத்திக்கொண்டே தான் இருந்தது. தேவி தியேட்டருக்கு போய் சில வாரங்கள் ஆகிவிட்டன, பத்து ரூ. டிக்கெட் இருப்பு பச்சையில் இருந்து, டிக்கெட்நியூவில் ஆஃபர் வேறு இருந்ததால் ஒரு கனப்பொழுது தடுமாற்றத்தில் டிக்கெட் புக்காகிவிட்டது. வழக்கமாக மாலை ஏழு மணி வாக்கில் ஆபீஸில் ஏழரைகள் துவங்கும். (மேனேஜர்கள் வேறு, உன் ப்ளாக்கை லைட்டா படிச்சேன் என்று சொல்லி புளியை கரைக்கிறார்கள். பாட்டாளி வடிவேலுவின் ‘முழுசா படிச்சா செத்துருவ’ நகைச்சுவையை நினைவுகூரவும்). அந்த மாதிரி எந்த தடையும் ஏற்படாததால் ச.பு.க.தொ படத்தை பார்க்கும்படி ஆகிவிட்டது. 

படத்தின் இயக்குநர் ஜக், எம்.ஆர்.ராதாவின் பேரன் என்பது முதல் வியப்பு. இரண்டாவதுதான் கடைசி வரை ஏற்படவே இல்லை. பேய்ப் படங்களுக்கே உரிய வார்ப்புரு. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில், ஒரு தனி பங்களா, அங்கே தங்கியிருக்கும் பெரிய குடும்பம், விசுக்கென கேமராவில் கடந்துபோகும் உருவம், சிரிப்பு வராத காமெடி, அப்புறம் பாழாய்ப்போன செண்டிமென்ட். சொல்வதற்கு ஏதுமில்லை. படம் பார்த்தபிறகு எதேச்சையாக பழைய குங்குமம் இதழில் இயக்குநரின் பேட்டி படித்தேன். இவர் படம் எடுக்கத் துவங்கியபோது காஞ்சனா மட்டும்தான் வந்திருந்ததாக கூறியிருக்கிறார். துயரம்தான். சூரியின் கெட்டப்புக்காக வெளிநாட்டிலிருந்து விக் வரவைத்ததாக கூறியிருக்கிறார். உப்புக்கு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் இவர்கள் மெனக்கெடுவதை பாருங்கள். இதில் காட்டும் கவனத்தை கதை, திரைக்கதையில் காட்டினாலே நமக்கு ஆறுதலாக இருக்கும். சூரியின் ஜோடி மதுமிளா என்பது இன்னொரு பொங்கல் – வடகறி சேர்க்கை. ஆனால் மதுமிளா வடகறியல்ல கோழிக்கறி ! 

தமிழ் சினிமா படங்களில் சில நடிகர்கள் இருந்தால் அந்தப் படத்தை பார்க்கக்கூடாது என்று விளையாட்டாக நினைப்பேன். இனிமேல் நடிகர்களை பட்டியலிட்டு அதனை தீவிர நடைமுறையாக கடைபிடிக்க வேண்டுமென நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய முதல் பட்டியல் :- பரோட்டா சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி. இவர்களில் ஸ்ரீமன், சிங்கம் புலியை தவிர மற்ற அனைவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சங்கிலி புங்கிலி பார்த்ததற்காக நான் செலவு செய்த தொகை வெறும் பதினான்கு ரூபாய். அந்த வகையில் எனக்கு எதுவும் நஷ்டமில்லை. ஆனால் நேரம்தான் நெருடுகிறது. ஏலியன் கொவநென்ட், லென்ஸ் எல்லாம் பார்க்கக் கிடைக்காத நேரம் என் நேரம்.

பிரணிதா சுபாஷ், ஜனனி ஐயருக்குக் கூட சில ரசிகர்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஸ்ரீதிவ்யாவுக்கு யாராவது இருக்கிறீர்களா ? ஓகே, பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறார். நாயகிகளை வர்ணிப்பது என்பது ஒரு உணர்வு. அது மனதின் அடியாழத்திலிருந்து ஊற்றெடுத்து வரவேண்டும். அது ஏனோ ஸ்ரீதிவ்யாவிடம் வரவில்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் முன்னொரு காலத்தில், ஒரு விமர்சகர் இருந்தார். படங்களின் எல்லா துறையையும் அலசி எடுத்துவிடுவார். ஆனால் கதாநாயகியைப் பற்றி மூச்சு விடமாட்டார். கிட்டத்தட்ட அவர் ஒரு குட்டி விவேகானந்தர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் இதை சுட்டிக் காட்டினேன். அவருடைய அடுத்த விமர்சனத்திலிருந்து கதாநாயகியை ஐஸ்க்ரீம், ஃபலூடா என்று விகடத்தனமாக ஒரு கமெண்ட் கொடுப்பார். குறிப்பாக அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏதேனும் டெஸ்ஸர்டாகவே இருக்கும். எனக்கு ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது. இப்பொழுது ஒரு விமர்சகர் இருக்கிறார். உணர்வு ஊற்றெல்லாம் இல்லை, சொட்டு கூட சுரந்திருக்காது. ஆனால் சும்மானாச்சுக்கும் (அநேகமாக தானும் யூத்துதான் என்று நிரூபிப்பதற்கு அல்லது பொதுஜன நீரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக) சமந்தா சம்மந்தமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். வரலைன்னா விட்ருங்களேன் ஆஃபிஸர்ஸ் !

விமல் நடித்த மாப்ள சிங்கம் என்ற பழைய படத்தினை பார்த்தேன். அதிலேயும் மதுமிளா வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பார்த்த ரோமியோ ஜூலியட்டிலும் மதுமிளா. ச.பு.க.தொ.விலும் மதுமிளா. எங்களுக்குள் ஏதோவொரு மானசீக பந்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் பார்க்கும் காலாவதியான படங்கள் எல்லாமே சுமார்தான் என்பதால் அதுகுறித்து சொல்வதற்கு எதுவுமில்லை. இப்படத்தில் ஒரு அரசியல் கூட்டக் காட்சி. ஓட்டு கேட்கும்போது எங்களுக்கு வாக்களித்தால் வறண்டு கிடக்கும் ஊரை செழிப்பாக மாற்றுவோமென உறுதியளிக்கிறார் சூரி (வேட்பாளரின் நண்பர்). உடனே கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் எழுந்து அப்படியிருந்த ஊரத்தான்டா இப்படி நாசம் பண்ணிட்டிங்க என்கிறார். உடனே மேடையிலிருப்பவர்கள் பதற்றமாகி அவனை வெளியனுப்புங்க என்கிறார்கள். இந்தக்காட்சியைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. அது 2006 தேர்தல் சமயம் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கும் முன்பு கூட இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள அளவுக்கு மீடியாக்களின் கவனம் அப்பொழுது கிடையாது. கலைஞர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒருவர் கூட்டத்திலிருந்து எழுந்து கலைஞரின் சொத்துக்கணக்கை கேட்டுவிட்டார். உடனே கலைஞர் கரகரப்பான குரலில் வெளியேத்துங்க, வெளியேத்துங்க என்றார். அநேகமாக எதிர்க்கட்சி ஆட்களுக்குக் கூட இப்படியொரு சம்பவம் நடந்தது நினைவிலிருக்காது. ஆனால் படத்தில் இக்காட்சியை அமைத்தவர் அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் அமைத்திருப்பார் என்பது என் கணிப்பு. படத்திற்கு வசனம் எழுதியவர் டான் அசோக் (தி.மு.க.காரர்) என்பது குறிப்பிடத்தக்கது. முன்பொருமுறை கலைஞரின் ஃபேஸ்புக் கணக்கை நடாத்தும் இரண்டு இளைஞர்கள் வார இதழொன்றிற்கு அப்ரூவர் பேட்டி கொடுத்தது நினைவுக்கு வந்தது. தி.மு.க.வை வெளியாட்களால் அழிக்க அல்ல, அசைக்கக்கூட முடியாது. அதற்கான ஆட்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

செங்கதிரோன் said...

மதுமிளா நல்ல நடிகை . வாய்ப்புகள் கிடைத்தால் சிறப்பாக வருவார் . அச்சம் தவிர் நிகழ்ச்சியில இருந்து தான் மதுமிளாவை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. ����������