29 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 29052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு கிழக்கில் (உண்மையான) அதிரடி தள்ளுபடி தந்தார்கள் நினைவிருக்கிறதா ? அப்போது வாங்கிய புத்தகங்கள் படிக்காமல் இருக்கின்றன. செக்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கூட நான்கைந்து வாங்கியிருந்தேன். (கிழக்கில் ஸாஃப்ட் எராட்டிக் புத்தகங்கள் வெளியிடும் உத்தேசம் இருப்பதாக பத்ரி ஒரு ஃபேஸ்புக் உரையாடலில் சொல்லியிருக்கிறார்). அவற்றிலிருந்து ஓம் ஷின்ரிக்கியோ எனும் புத்தகத்தை எடுத்தேன். ஜப்பான் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹிரோஷிமா, நாகசாகி. பின்பு டெக்னாலஜி. அவர்களின் உழைப்பு, உயர்வு. ஜப்பானில் ஒரு வருடகாலம் ஆன்சைட் அனுபவித்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் ஜப்பானிய பெண்கள் தான் என்றார். அதைப் பற்றியெல்லாம் இல்லாமல் ஜப்பான் – மத தீவிரவாதம் என்ற வித்தியாசமான காம்பினேஷனில் இருந்ததால் வாங்கி வைத்திருந்தேன். அநேகமாக இந்த வருடம் படித்த முதல் அபுனைவு. நூறு பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம். ஆனால் தொட்டதும் வழுக்கிக்கொண்டு போகிற சுவாரஸ்யம். 

ஜப்பானில் ஒரு சாமியார். முழுப்பெயர் உச்சரிப்பதற்கு சிரமம் என்பதால் ஷோகோ என்று சுருக்கமாக வைத்துக்கொள்வோம். ஷோகோ ஹிந்து மதத்தையும், பெளத்த மதத்தையும் கலந்து, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குகிறார். அதுதான் ஓம் ஷின்ரிக்கியோ ! உண்மையான மதம் என்று பொருள். ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் துவங்கிய ஷோகோவின் சாமியார் வாழ்க்கை சில வருடங்களிலேயே அபார வளர்ச்சி பெறுகிறது. ஷோகோவின் ஆசாமியிலிருந்து சாமி கதையில் இந்திய சாமியார்களிடம் உள்ள சில பண்புகள் ஒத்துப்போகின்றன. ஷோகோ சாமியாராக ஃபார்ம் ஆனபிறகு செய்த முதல் காரியம், தன் அமைப்பின் பெயரில் சத்துபான விற்பனையில் இறங்கியது. பாபா ராம்தேவின் பதாஞ்சலி பிஸினஸ் நினைவுக்கு வருகிறதா ? அடுத்த காரியம், ஒரு பெரிய சிவலிங்கத்தை தன் ஆசிரம அறையில் அமைத்தது. இது ஈஷா ஜக்கி வாசுதேவ். ஆனால் இந்த ஷோகோ ஒரு மனநோயாளி போல தெரிகிறது. ஏதோ ஆசிரமம் அமைத்தோம் ஜாலியாக இருந்தோம் என்றில்லாமல் உலகத்தையே அழிக்க நினைத்திருக்கிறார். ஒரு பக்கம் ஆன்மிக இயக்கத்தை வளர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் ரஷ்யாவிலிருந்து கள்ளத்தனமாக ஆயுதங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார். ஆயுதங்கள் என்றால் கத்தி, துப்பாக்கி அல்ல. ஹெலிகாப்டரெல்லாம் வாங்கி மறைத்து வைத்திருக்கிறார். 

ஜப்பானில் Religious Corporation Status என்று ஒன்று உள்ளது. மத இயக்கம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் சட்டரீதியாக அதன் மீது கை வைப்பது அத்தனை எளிதல்ல. அது ஷோகோவுக்கு சாதகமாய் அமைந்துவிட்டது. ஆய்வுக்கூடம் அமைத்து ரசாயன ஆயுதங்கள் தயார் செய்திருக்கிறார். 1994ம் ஆண்டு ஸாரின் (Sarin) எனும் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் ஏழு பேர் இறந்து போயிருக்கிறார்கள். அப்போது பல கோணங்களில் ஆராய்ந்த ஜப்பானிய காவல்துறைக்கு இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உற்சாகமடைந்த ஷோகோ அடுத்த வருடமே டோக்கியோ சுரங்க ரயில்பாதையில் ஒரு ரசாயன தாக்குதல் நிகழ்த்துகிறார். பதினான்கு பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஏராளமானவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட ஜப்பான் காவல்துறை நூல் பிடித்துப்போய் ஷோகோவை பிடித்துவிட்டது. விசாரணையின் இறுதியில் ஷோகோவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதிலே நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் ஷோகோவை இன்னமும் தூக்கிலிடவில்லை. ஷோகோவின் வயது 62. இன்னும் சில வருடங்களில் அவரே கூட இயற்கை எய்திவிடலாம். 

ஓம் ஷின்ரிக்கியோ புத்தகத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். முழுக்க படித்துப் பாருங்கள். சில இடங்களில் சமீபத்தில் வெளிவந்த இருமுகன் படத்தை நினைவூட்டுகிறது.

பெர்முடா முக்கோணம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்களையும், கப்பல்களையும் காவு வாங்கியிருக்கிறது. சென்னையிலேயே ஒரு பெர்முடா முக்கோணம் இருக்கிறது தெரியுமோ. சென்டிரல் ரயில் நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், பீச் ஸ்டேஷன் – இவை மூன்றுக்கும் உட்பட்ட நிலப்பரப்புதான் சென்னையின் பெர்முடா முக்கோணம். இப்பகுதியைக் கடக்கும்போது மர்மமாக உங்கள் செல்போன்கள் தொலைந்து போகலாம். என்னுடைய பிரசித்தி பெற்ற நோக்கியா 3110c மாடல் போன் பீச் ஸ்டேஷனில் வைத்துதான் தொலைந்துபோனது. இவர்களுடைய டார்கெட், பேருந்தைக் கண்டதும் அவசர, அவசரமாக நெரிசலில் நுழைந்து பேருந்து ஏறுபவர்கள்தான். சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள், சென்டிரலில் நெரிசல் மிகுந்த ஒரு பேருந்தில் விடாப்பிடியாக ஏறிவிட்டேன். என்னுடையது பாதுகாப்பாக இருந்தது. இன்னொரு இளைஞரின் போனைக் காணவில்லை. பேருந்து நகரத்துவங்கிவிட்டது. அந்த நபர் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் சந்தேகப்பார்வை பார்க்கிறார். சக பயணிகள் ஆளாளுக்கு ஒரு இலவச அட்வைஸ் கொடுக்கிறார்கள். ஒரு ஆசாமி அதெல்லாம் அஷ்டு அப்பயே இறங்கியிருப்பான் சார். கீழே இறங்கிப் போய் தேடுங்க என்கிறார். அதற்குள் இன்னொருவர் தன்னுடைய போனிலிருந்து டயல் செய்துகொள்ளச் சொல்கிறார். டயல் செய்துக்கொண்டிருக்கும் போதே கீழே இறங்கித் தேடச் சொன்ன ஆசாமி நைஸாக படியில் இறங்குகிறார். செல்போனை தொலைத்தவர் குரல் எழுப்பி, எல்லோருமாக சேர்ந்து அந்த ஆளை பிடித்து மொத்தப்போகும் போது, போனை எடுத்து என் காலுக்கருகே போட்டுவிட்டு அங்கே இருக்கு பாருங்க என்று யோக்கியத்தனமாக எஸ்கேப் ஆகப்பார்த்தார் மிஸ்டர்.திருடர். அவர்தான் எடுத்தார் என்பது தெரிந்தாலும் செல்போன் கிடைத்துவிட்டதால் திருடரை அடிக்காமல் விட்டுவிட்டோம். வெளியூரிலிருந்து வருபவர்கள் அதிகம் புழங்கக்கூடிய பகுதி இது. வெளியூர்க்காரர்கள் சென்னை வரும் சமயங்களில் முக்கோணத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும். எனக்குத் தெரிந்து பெர்முடா முக்கோணம், சென்னை முக்கோணம் என்றில்லை. எல்லா முக்கோணங்களையுமே ஜாக்கிரதையாகத்தான் கடக்க வேண்டும்.

வேலு பிரபாகரனின் காதல் கதை மீண்டும் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான சமயத்தில் நான் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் பார்த்தேன். நான் சிறு வயதிலிருந்த போது வே.பி. கடவுள் என்று ஒரு படம் எடுத்திருந்தார். கமர்ஷியல் கலந்த பிரச்சாரப்படம். அப்பொழுதெல்லாம் அம்மன் படங்கள் அடிக்கடி வெளிவரும். கடவுள் படத்தில் அதே போன்ற ஒரு பாடல் உண்டு. அதன் காரணமாக நிறைய பெண்கள் தெரியாமல் கடவுள் படத்திற்கு வந்துவிட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்து சில வருடங்கள் கழித்து புரட்சிக்காரன் எடுத்தார். சுத்தமான பிரச்சாரப்படம். அந்த சமயத்தில் திராவிடர் கழக விழாக்களில் புரட்சிக்காரன் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதில் மண்ணுக்கு நாமதான் சொந்தக்காரங்க, தூங்கும் புலியை (பாரதிதாசன் பாடல்) ஆகிய பாடல்களை இப்போது கூட சில சமயங்களில் கேட்பதுண்டு. வித்யாசாகர் இசை. சில வருடங்கள் கழித்து, ஞான ராஜசேகரன் பெரியார் படத்தை இயக்கினார். அப்போது அப்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்கக் கேட்டு, அவர் பெரியாருக்கு இசையமைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதே சமயத்தில் வே.பி.யின் காதல் கதை (காதல் அரங்கம்) எனும் பிட்டு படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். வே.பி.யின் காதல் கதை படத்தின் துவக்கத்தில் ஒரு நீண்ட பிரசங்கம் செய்கிறார் இயக்குநர். அதன்பிறகு இடையிடையே சில பிரச்சார / புரட்சி வசனங்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வே.பி.யின் காதல் கதை ஒரு சுத்தமான பிட்டுப்படம். குறிப்பாக அதில் வரும் வேலைக்கார பெண்மணி போர்ஷன் எல்லாம் சரோஜா தேவி ரக பிட்டு. பிட்டுப்படம் என்பதாலேயே அதில் இடம்பெற்ற ஒரு அபாரமான பாடல் (காட்டுக்குள்ளே தொடங்கியதே காதல் வேள்வி) வெளிச்சத்திற்கு வராமல் போய்விட்டது. இப்போதும் நான் அடிக்கடி முனுமுனுக்கும் அந்தப்பாடல் உங்களுக்காக –

வே.பி.யின் காதல் கதையில் இன்னொரு பாடலை இளையராஜாவே பாடவும் செய்திருக்கிறார். ரசத்த ஊத்து பங்காளி அதுல பூனை கெடக்குதான்னு பாப்போம் என்பதுபோல அடுத்து வெளிவரவிருக்கும் வே.பி.யின் காதல் டைரியையும் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

ராஜி said...

ஜப்பான் கதைக்க்கு போயாச்சா

Anonymous said...

எல்லா முக்கோணங்களையுமே ஜாக்கிரதையாகத்தான் கடக்க வேண்டும்.- ultimate....