3 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 03072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் இடைப்பட்ட ஒரு காலத்தில் தொடர்ந்து சலிக்க சலிக்க மதுரையை பின்னணியாய்க் கொண்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இப்படங்களுக்கு எல்லாம் பொதுவான அம்சம் துவங்கியதும் வாய்ஸ் ஓவரில் ஊரின் பெருமைகளை எடுத்தியம்பி, மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் ஆற்றில் இறங்குவது, நாயக்கர் மஹால், ஜிகர்தண்டா என்று அழகாக செய்திப்படம் காட்டுவார்கள். போகிறப்போக்கில் அரிவாள் கலாசாரம், சாதி ஜல்லியடிப்புகள் (கருப்பாக தேவர் வருடல்கள்) எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சென்னையை விட அதிகம் ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட ஊர் மதுரையாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். மதுர, மதுரை சம்பவம், வர்றேன்டா மதுரைக்கு, மதுரை டூ தேனீ வழி ஆண்டிப்பட்டி, மதுரை விடிஞ்சா போச்சு என மதுரையை பெயரில் கொண்ட படங்கள் ஒரு தினுசாக நீள்கிறது. இதுபோக சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம், கூடல் நகர், திருமங்கலம் பேருந்து நிலையம் என்று ஏரியா பெயர்களைக் கொண்ட படங்கள். அநேகமாக காதல் படத்தில் துவங்கி சுப்ரமணிபுரத்தில் தீவிரமடைந்த மதுரை ட்ரெண்ட் இப்போது கொஞ்சம் குறைந்து சசிகுமார், முத்தையா படங்களில் மட்டும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. 

சமீபத்தில் மதுரையை பின்னணியாய் கொண்ட ஒரு படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் 144. ஹீரோ அசோக் செல்வனும், ஹீரோயின்கள் ஓவியாவும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் (டப்பிங் முறையே கீர்த்திகா, ஐஸ்வர்யா) மாய்ந்து மாய்ந்து மதுரை ஸ்லாங்கில் பேசுகிறார்கள். மற்றபடி முதல் பத்தியில் சொன்னது போல மதுரை பெருமைகள் அதிகமில்லை. சுஜாதாவின் வசந்தகால குற்றங்கள் நாவலிலிருந்து கதையின் ஒரு பகுதி எடுக்கப்பட்டிருப்பதாக கிரெடிட் கொடுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நான் வசந்தகால குற்றங்கள் படித்ததில்லை. படம் பார்க்கும்போது இதில் எந்தப்பகுதி நாவலில் வந்திருக்கும், எப்படி வந்திருக்கும் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ஓவியாவின் கதாபாத்திரம் வரும்.

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக காதலை வைத்தே குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்கள். நட்பு, குடும்பம், சென்டிமென்ட், ஆச்க்ஷன் போன்ற உப வஸ்துகள் ஒருபுறம். (சில விதிவிலக்குகள் இருக்கலாம்). சமீப வருடங்களாகத்தான் புதுப்புது ஜான்ராக்கள் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் அதிலேயும் ஒரு காதல், ஒரு டூயட் என்கிற பண்பாடை விட்டதாகத் தெரியவில்லை. 

144 ஒரு ஹைஸ்ட் படம். கொள்ளை அடிப்பது தொடர்பான படங்களை ஹைஸ்ட் படங்கள் என்கிறார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941) படத்தை தமிழின் முதல் ஹைஸ்ட் படம் என்று சொல்லலாமா ? சந்தேகம் தான். ஹைஸ்ட் படங்களுக்கென சில வழக்குமுறைகள் உள்ளன. தமிழில் வெளிவரும் ஹைஸ்ட் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஹீரோ சின்னச் சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவார். பெரிய கொள்ளை ஒன்றில் ஈடுபட வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கும். கண்டிப்பாக, எவ்வளவு நாளைக்குத்தான் சின்னச் சின்ன வேலையெல்லாம் செய்றது. பெருசா ஒன்னு செய்றோம். செட்டில் ஆகுறோம் என்ற வசனம் இருக்கும்.

ஹைஸ்ட் படங்களின் கதைப்பகுதியை மூன்றாக பிரிக்கிறார்கள். முதலாவது, குழு சேருதல், திட்டமிடுதல். இரண்டாவது, கொள்ளை சம்பவம். மூன்றாவது, கொள்ளைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள். 

மங்காத்தாவில் தொடங்கியிருந்தாலும் சூது கவ்வும் படத்தில் சூடு பிடித்த ஹைஸ்ட் ட்ரெண்ட் மூடர்கூடம், சதுரங்க வேட்டை, ராஜதந்திரம், கள்ளப்படம், 144, ரம் என்று நீண்டு, கடைசியாக வெளிவந்த ஹைஸ்ட் படம் மரகத நாணயம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மேலே சொன்ன அத்தனை ஹைஸ்ட் படங்களும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன. (சில சமயம் மங்காத்தாவில் கண்டெயினரை கடத்தும் காட்சி போன்றவற்றை சகித்துக்கொள்ள வேண்டும்).

ஹைஸ்ட் படங்களை பொறுத்தவரையில் வீட்டில் ஒரு பீரோவில் பணத்தை அல்லது வைரக்கற்களை பூட்டி வைத்திருந்தார்கள். அதன் உரிமையாளரிடம் இருந்து சாவியை அடித்துப் பிடுங்கி கொள்ளை அடித்தார்கள் என்று காட்டினால் அதில் சுவாரஸ்யம் ஏதுவுமில்லை. வரைபடம் பார்த்து திட்டம் வகுக்க வேண்டும், ஒரு அலாரம் சிஸ்டம் இருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும், சாமர்த்தியம் காட்ட வேண்டும். சூது கவ்வும் படத்தில் வரும் ‘ட்ரோன்’ காட்சி போல ஒரு பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும்.

144ல் ஒரு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. கண்ணாடியில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலை. அதற்கு கீழே பெரிய சைஸில் ஒரு சப்பரம். சப்பரத்தின் வால் பகுதியின் அருகே சென்று பாஸ்வேர்ட் சொன்னால் திறக்கும். உள்ளே தொலைக்காட்சி, தொலைபேசி, ஏர் கூலர், உற்சாக பானங்கள் என சகல வசதிகளும் பொருந்திய ஒரு சிறிய அறை. அறையில் உள்ள ஒரு பெண் ஓவியத்தின் உதட்டுப்பகுதியை சிரிப்பது போல குவித்தால் மேலே உள்ள ஒரு ரகசிய கதவு திறக்கிறது. அதற்குள் ஒரு நம்பர் லாக் சிஸ்டம். அதற்குள் ஒரு சாதாரண லாக் சிஸ்டம். உள்ளே களிமண் பிள்ளையார் மூட்டைகள். ஒவ்வொரு களிமண் பிள்ளையாருக்கு உள்ளேயும் தங்கக்கட்டிகள் இருக்கின்றன.

முன்பெல்லாம் அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெறும் நினைவிருக்கிறதா ? நினைவிருந்தால் அத்தகைய சந்திப்புகளில் யாராவது வலைப்பதிவர் அல்லாதவர் வந்து சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகளை கவனித்திருப்பீர்கள். ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் நின்றுக்கொண்டிருப்பார் அந்த மனிதர். போதாத குறைக்கு நம் வலைப்பதிவு நண்பர்களும் அவரை சக வலைப்பதிவர்களிடம் வாசகர் என்று அறிமுகப்படுத்திவிட்டு கொல்லென சிரிப்பார்கள். அதுபோல சமீபத்தில் எனக்கு சம்பந்தமில்லாத ஒரு சந்திப்பில் சிக்கிக்கொண்டேன். பைக்கர்ஸ் மீட் ! பிரதி ஞாயிறு காலை ரைடர்ஸ் எல்லாம் தங்களுடைய எம வாகனத்தை முறுக்கிக்கொண்டு ஈ.சி.ஆரை நோக்கி பயணிக்கிறார்கள். சென்னையிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில், மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள முதலியார்குப்பத்தில் (சுருக்கமாக MDK) கூடுகிறார்கள். உன்து எவ்ளோ தருது, உன்னுதை நான் கொஞ்சம் ஓட்டிப் பார்க்கட்டுமா ?, என்து பெருசு என்று சங்கேத மொழியில் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். திடீரென யாரேனும் ஒரு ரைடர் அருகில் உள்ள பாலத்தில் சப்தம் எழுப்பியபடி வீலிங் செய்து காட்ட எல்லோரும் ஆச்சர்யமாக திரும்பிப்பார்க்கிறார்கள். சில ரைடர்கள் தங்களுடைய கேர்ள்ஃபிரண்டை அழைத்து வருகிறார்கள். சிலருக்கு ரைடரே கேர்ள்ஃபிரண்டாக அமைந்திருக்கிறார்கள். நான் அசடு வழிந்தபடி நின்றுக்கொண்டு, ஒருவகையில் நானும் ரைடர்தாங்க. பில்லியன் ரைடர் என்று மொக்கை போட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணிநேரம் சிறு சிறு குழுக்களாக கூடி நின்று, தத்தம் பைக்குகளை பற்றி விவாதித்துவிட்டு கலைகிறார்கள். இதிலே கொஞ்சம் தீவிரமான மெக்கானோபிலியாக்கள் இருக்கிறார்கள். கானத்தூர் செக்போஸ்ட் தாண்டி வண்டியை ஓரம் கட்டிவிட்டு போகிற வருகிற சாகஸ பைக்குகளையும், கார்களையும் பார்த்து ஜொள்ளு விடுகிறார்கள். விர்ரூம் என்று சப்தமெழுப்பியபடி ஏதேனும் ஒரு வாகனம் கடந்தால், செக்ஸியான பெண்ணைப் பார்த்துவிட்டதுபோல திகைப்படைகிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: