10 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 10072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நியூ படத்தில் வரும் மணிவண்ணன் கதாபாத்திரம் (சயின்ஸ்) நினைவிருக்கிறதா ? தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த பாத்திரத்தின் அறிமுகக்காட்சி பிடிக்கும். தினசரி அலாரம் ‘அடித்து’ எழுப்பி, பல் துலக்க வைத்து, நீச்சல் குளத்தில் தள்ளி குளிக்க வைத்து, உலர வைத்து, உடை மாற்றித் தயார் செய்ய ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா. கொசு - தேனீ கலப்பினம், இரட்டை வால் நாய் (அவர்கள் இரண்டாக்க நினைத்தது வேறொன்றை), இரண்டடி தென்னை என்று அதிலே காட்டப்படும் மரபின மாற்றங்களின் காலம் வெகு தொலைவில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்கனவே நிறைய நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு, லைகர் (லயன் + டைகர்) என்கிற ஜந்துவைப் பற்றி கூகுள் செய்து பாருங்கள். விவசாயத்தில் ஏதேதோ மரபின மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. வாழைப்பழத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள், கருப்பு திராட்சைகள் கொட்டையில்லாமல் வருகின்றன. விரைவாக காய்க்கக்கூடிய தென்னைகள் கூட வந்துவிட்டன. நான் சொல்ல வந்தது விவசாயப் புரட்சியைப் பற்றியதல்ல என்பதால் அடுத்த பத்திக்கு சென்றுவிடுவோம்.

எஸ்.ஜே.சூர்யா மேலே குறிப்பிட்ட காட்சியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார் / தவிர்த்துவிட்டார். கொல்லைக்கு போவது. அதனை அப்படியே சொல்வோம். ஏனெனில் இன்னமும் பெருவாரியான இந்திய கிராமங்களில் கொல்லையில் தான் போகிறார்கள். படிப்பறிவு, பணவசதி எல்லாம் வந்துவிட்டால் கூட கொல்லைக்கு போவது என்பதை ஒரு மரபாகவே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நகர்ப்புறங்களில் ஸ்க்வாட் டாய்லெட் எனப்படும் குத்தவைத்து உட்காரும் முறையில் இருந்து முன்னேறி வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாகி வருகிறது. எனக்கு சில வருடங்கள் முன்பு வரை வெஸ்டர்ன் கழிவறை பழக்கமே இல்லை. வெளிப்படையாக சொல்வதென்றால் பயன்படுத்தத் தெரியாது. மேலும் ஸ்க்வாட்டில் உட்கார்ந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துகொள்வதைப் போல வெஸ்டர்ன் சுலபமானதல்ல என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வாட்டர் கன் என்றழைக்கப்படும் ஃபாஸட்டை இஸ்லாமிய மற்றும் ஆசிய நாட்டு மக்கள் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர் இல்லாமல் சுத்தம் செய்வது அவர்களுக்கு அசெளகரியமானது. 

பிடெட்
இப்போது பிடெட் (Bidet) எனும் நவீன கழிவறை வந்திருக்கிறது. நீங்கள் ஒருவேளை விமான நிலையம் அல்லது நட்சத்திர விடுதிகளில் பார்த்திருக்கலாம். ஜப்பானில் பிரபலம். எழுபது சதவிகித ஜப்பான் வீடுகளில் பிடெட் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. பிடெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் உங்கள் மலத்துவாரத்தை நோக்கி இயந்திரம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். மேலும் முன்புறம், பின்புறம், தண்ணீரின் வேகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வெவ்வேறு பொத்தான்கள் உள்ளன. 

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. உங்களுடைய சொந்த மலத்தைக் கூட நீங்கள் தொட வேண்டிய கட்டாயமில்லை. அதே சமயத்தில், உங்கள் மலத்தை மற்றவர் கையாளும் கொடுமையும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிகம். ஐ.ஆர்.சி.டி.சி ரயில்களில் கழிப்பதெல்லாம் என்ன ஆகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ? சட்டப்பூர்வமாக இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை 1993ல் தடை செய்துவிட்டார்கள். சட்டப்பூர்வமாக மட்டும் ! மேலும் மலம் அள்ளுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழிலாகவும், அதுவே அவர்கள் மீதான அடக்குமுறையாகவும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. 

மனிதர்கள் மலம் அள்ளுவதை தவிர்ப்பது சாத்தியமா ? விஞ்ஞானத்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை. விமானத்தில் கழிவறையை பயன்படுத்தினால் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். வாக்யூம் கிளீனர் போன்ற உபகரணம் கழிவுகளை இழுத்துக் கொள்கிறது. இது சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேமித்து வைக்கப்படுகிறது. விமானம் தரையிறங்கிய பிறகு கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. இத்தனை பெரிய செயல்முறையிலும் மனிதர்களின் ஈடுபாடு கொஞ்சம் தேவைப்படுகிறது. உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இந்தியா போன்ற நாட்டில் மனிதர்கள் மலம் அள்ளுவதை முற்றிலுமாக அழித்தொழிக்க இன்னும் நூறு வருடங்கள் கூட ஆகலாம். மாற்றம் என்பது படிப்படியாகத்தான் நிகழும். நான் சொல்லவில்லை. ஒரு மஹான் சொல்லியிருக்கிறார்.

அதுவரையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? 

வெளியிடங்களில் (உ.தா. திரையரங்குகள், பேருந்து நிலையங்கள்) கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு அதனை நம் வீட்டில் செய்வது போல சுத்தப்படுத்திவிட்டு திரும்ப வேண்டும்.

ரயில்களில் பயணம் செய்யும்போது கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். (கவனிக்க, அடக்கிக்கொள்ள சொல்லவில்லை).

மலம் அள்ளும், சாக்கடையை சுத்தம் செய்யும் மனிதர்களை முதலில் சக மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அட்லீஸ்ட் நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி, முதல் படி. என்ன இருந்தாலும் பூஜ்யத்தை விட ஒன்று பெரிது தானே ?

வழக்கம் போல பிற்போக்கு சுபாவம் கொண்ட சிலர் இதற்கும் உங்க வீட்டில் நீங்களே தான் மலம் அள்ளுகிறீர்களா ? என்று ஆரம்பிக்கிறார்கள். இவர்களை பார்க்கும்போது எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் என்று சொல்லும் கவுண்டமணியிடம் அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ் என்று சொல்லும் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார். க்ரோ அப் கய்ஸ் !

திருவொற்றியூர் நூலகத்திலிருந்து மாதமொருமுறை வாசகர் வட்டக் கூட்டம் என்று குறுந்தகவல் வருகிறது. என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமென சென்றிருந்தேன். டிஸ்கவரியில் நடைபெறும் புத்தக வெளியீடு / விமர்சனக் கூட்டங்களில் நீங்கள் அதிகபட்சம் எத்தனை பேரை பார்த்திருப்பீர்கள் ? நூலகத்திற்கு சென்றதும் முதலில் தற்காலிகமாக கொஞ்சம் பிரமித்துவிட்டேன். கிட்டத்தட்ட நூறு பேர் இருந்திருப்பார்கள். ஆனால் அதில் குறைந்தது எண்பது பேர் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து கட்டாயத்தின் பெயரில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் சலசலவென்று பேசிக்கொள்வதும், டீச்சர் வந்ததும் குழுவாக எழுந்து நின்று குட் மார்னிங் (மாலை ஐந்தரை மணிக்கு) சொல்வதுமாக இருந்தார்கள். முன் வரிசைகளில் ஒரு இருபது முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல மைக் வேலை செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர் கத்தி, கத்தி ஒருவழியாக மாணவர்களை சாந்தப்படுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதலில் நான்கைந்து மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக வந்து காமராஜரைப் பற்றி ஒப்புவித்தார்கள். தப்பான இடத்திற்கு வந்துவிட்டது போல உணர்ந்தேன். இதற்கு மேல் எழுந்து போனால் நன்றாக இருக்காது என்பதாலும், என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.

படம்: குங்குமம்
நவநீதகிருஷ்ணன் என்கிற இளைஞர் UPSC தேர்வுகளில் கலந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல என்று மாணவர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருந்தார். நவநீதனின் செயல்பாடு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மாணவர்களுக்கு முதலில் UPSC என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய பரிந்துரை என்னவென்றால் நவநீதகிருஷ்ணன் இன்னும் இரண்டு படிநிலைகள் இறங்கி வந்து பேசியிருக்க வேண்டும். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து அவர்களே, இவர்களே என்று துவங்கி சிறப்புரை ஆற்றினார். காமராஜர் செய்த சமூக மாற்றங்களை எடுத்துரைத்தார். நன்றாக தூக்கம் வரும் சமயத்தில் தேநீரைக் கொடுத்து காப்பாற்றினார்கள். ஆனால், கல்லைப் போட்டு குடிக்கும் அளவில் கொடுத்தது துரதிர்ஷ்டம். ஒருவழியாக, விரிவாகப் பேச ஆசை ஆனால் நேரம் அனுமதிக்கவில்லை போன்ற ஜல்லிகள் எல்லாம் தாண்டி ஏழு மணிக்கு நிகழ்வு முடிவுக்கு வந்தது. அரங்கில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவரிடமும் ஒருங்கிணைப்பாளர் புன்னகையோடு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். 

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வாசகர் வட்டக் கூட்டத்தை நடத்துபவர்களின் நோக்கத்தில் எந்த பாசாங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதனை அவர்கள் நடத்தும் முறை விரயம். முதலில் கட்டாயப்படுத்தி பள்ளி மாணவர்களை அழைத்து வருதல் தவறு. அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களை தொடர்ந்து ஈடுபாடுடன் வைத்துக் கொள்ள வேண்டியது ஒருங்கிணைப்பாளர்களின் கடமை. அதற்காக என்னென்ன புதுமைகளை செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய நூலகம் முன்வர வேண்டும். அவர்களே இவர்களே ரக ஆசாமிகளை எல்லாம் விட்டுவிட்டு இளைஞர்களை பேச வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

ராஜி said...

முதல் கருத்துக்கு ஒத்து போகிறேன். ஜீரோவை விட ஒன்று பெரிதுதான்