11 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 11092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த வாரத்தில் ஒருநாள் நீலநிற சதுர முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரமெங்கும் ஆங்காங்கே நின்று துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவசரமாக அவர்களை புறக்கணித்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தால் ஒரு சக பணியாளர் அத்துண்டு பிரசுரத்தை கொண்டு வந்து எல்லோரையும் அதிலுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஏன் ? ஏனென்றால் மிஸ்டு கால்கள் கொடுத்தால் நதிகள் இணையுமாம். யார் ? காடுகளை அழித்து ஆசிரமம் கட்டிய ஒரு ஆசாமியார். புல்ஷிட் ! நாட்டில் எது நடந்தாலும் ஒரு குரூப் சிரத்தை எடுத்து சேஞ்.ஆர்க் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கும். நானும் கூட அப்பாவியாக அதில் ஒருமுறை இணைந்திருக்கிறேன். இதுவும் கிட்டத்தட்ட ஆன்லைன் பெட்டிஷன் வகையறா தான். இதன் கான்செப்ட் என்னவென்றால் நீங்கள் பெட்டிஷன் கையெழுத்திட்டாலோ, மிஸ்டு கால் கொடுத்தாலோ நீங்கள் அவ்விஷயத்திற்கு ஆதரவு கொடுத்ததாக கணக்கில் கொள்ளப்படும். இறுதியில் குறிப்பட்ட எண்ணிக்கை ஆதரவு கிடைத்ததும் அது மொத்தமாக சம்பந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கப்படும். ஒரே கோரிக்கையை இப்படி ஒரே சமயத்தில் ஏராளமான பேர்கள் கோரும்போது அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை பரிசீலனை செய்யலாம். சேஞ்.ஆர்கை பொறுத்தவரையில் சில சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி கண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மீனவப் பிரச்சனையோ, ஈழப் பிரச்சனையோ பெட்டிஷன் கையெழுத்திட்டு ஒரு துரும்பு கூட நகரவில்லை என்பதே நிஜம். நதிகளை இணைக்கும் கேம்பெயினில் கோடிகளை இறைக்கும் ஜக்கி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம் என்பது ஒருபுறம் தோன்றினாலும், ஜக்கி ஏதோ பெருசாக திட்டம் போடுகிறது என்பதை நினைத்து கலக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் நீட் எதிர்ப்புக் குரல்களுக்கு இடையில் சன்னமாக சில புரியாத புதிர், குரங்கு பொம்மை விமர்சனங்களை கவனித்திருப்பீர்கள். இரண்டு படங்களையும் தேவி திரையரங்கில் அடுத்தடுத்த காட்சிகள் பார்த்தேன். 

குரங்கு பொம்மை வணிக சினிமாவிற்கும், கலைப் படைப்பிற்கும் இடையே ஊசலாடுகிறது. ஆமாம், கு.பொ.வின் மினிமலிஸ போஸ்டர்களைப் பார்த்து அது ஒரு கலைப்படைப்பாக இருக்கும் என்று நம்பிவிட்டேன். ஒரு குரங்கு பொம்மையின் படம் அச்சிட்ட பயணப்பையைச் சுற்றியே கதை நகர்கிறது. இறுதியில் அப்படி அந்தப்பையில் என்னதான் இருக்கிறது என்பதை ஒரு சிறிய திருப்பத்துடன் கொடுத்திருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் கு.பொ.வின் கதையை அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் சுருக்கிவிடலாம். நடுவில் ஹீரோயின் வேண்டும், டூயட் வேண்டும் என்பதற்காக ஒரு காதல் (கதாநாயகி டெல்னா டேவிஸ் அழகு !), போலீஸ் ஸ்டேஷன் காட்சி என்று நீள்கிறது. ஒரேயொரு போலீஸ் ஸ்டேஷன் காட்சி மட்டும்தான். அதன்பிறகு இப்படத்தில் காவல்துறையையே மறந்துவிட்டு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கொடூர குற்றங்கள் புரிகிறார்கள்.

குரங்கு பொம்மையில் பாரதிராஜா
விதார்த்தை எனக்குத் தெரிந்து மூன்றாவது படத்தில் இதே மாதிரியான வேடத்தில் பார்க்கிறேன். இரண்டு பேருடைய நடிப்பு, கதாபாத்திரம் இப்படத்தில் ரசிக்க வைக்கிறது. ஒருவர், பாரதிராஜா. அவருடைய கடைசி காட்சியில் அவர் சொல்லும் அந்த குட்டிக்கதையும், பாவனைகளும் பிரமாதம். ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்த முயலும் காட்சி அது. இரண்டாமவர், குமரவேல். இவர் எப்படிப்பட்டவர் என்பதை சுருக்கமாக அறிமுகக்காட்சியிலேயே காட்டிவிடுகிறார்கள். அதன் பிறகு இவர் நேக்காக செய்யும் காரியங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. 

புரியாத புதிர் ஒரு நான்கு வருடங்களாக கோடம்பாக்கத்தில் சாந்தியடையாத ஆவியாக உலாவி ஒரு வழியாக வெளியாகியிருக்கிறது. டிரைலரை பார்த்து சைக்கோ திரில்லர் போலிருக்கிறதே என்று நம்பி கண்ணியில் கால் வைத்துவிட்டேன். செக்ஸ் ஸ்கேண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கதை நகர்ந்து, பழி வாங்கும் படலத்தில் முடிகிறது. ம்ஹூம் நான்கு வருடங்கள் இல்லை. சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம் என்பதை மனதில் இருத்திக்கொண்டே படம் பார்ப்பது நல்லது. ஸ்கேண்டல்கள் பார்ப்பது தவறு என்று சினிமாக்காரர்கள் நமக்கு பாடமெடுக்கும் துர்பாக்கிய சூழலில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

புரியாத புதிர்
புரியாத புதிரில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு நல்ல விஷயம் அதன் அழகியல். இயக்குநர் நிச்சயமாக ஒரு ரசனையான ஆளாக இருக்கக்கூடும். கலை அலங்காரம், படமாக்கப்பட்ட இடங்கள் போன்றவை அதனை உறுதி செய்கின்றன. வசனங்கள் ஒரு சினிமாவுக்காக எழுதப்பட்டவை போலில்லாமல் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதல் உணர்வு அத்தனை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் காயத்ரி. அவரது நலனுக்காக டிஸ்சார்ஜுக்குப் பின் தனியாக தங்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். எனவே விஜய் சேதுபதி காயத்ரியை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். காதலருடைய வீட்டில் முதல்முறையாக நுழைகிறார் காயத்ரி. அப்போது அவருடைய கண்களும், கால்களும் காட்டும் காதல் அடடா ! காயத்ரி நீங்கள் கொஞ்சம் நன்றாக தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல டப்பிங் கலைஞரை பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். மேலும் ஒப்பனை, உடை சமாச்சாரத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான களம் காத்திருக்கிறது.

இவ்விரு படங்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. படைப்பாளிகள் என்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருக்கும் என்பார்கள். இவ்விரு திரைப்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்தக் கிறுக்கு சற்றே கூடுதலாக இருக்கிறது. குரங்கு பொம்மையின் ஒரு காட்சியில் நரிக்குறவர்கள் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்னால் குழந்தைக்கு தொட்டில் கட்டி படுக்க வைத்ததாகவும் விடிந்தபிறகு லாரி அங்கே இல்லையென போலீஸில் புகார் செய்கிறார்கள். கதைக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத காட்சி இது. அடுத்த காட்சியிலேயே நகர சாலையொன்றில் பின்புறத்தில் தொட்டில் குழந்தையோடு ஒரு லாரி விரைவதாக காட்டுகிறார்கள். பாரதிராஜா – விதார்த் – குரங்கு பொம்மை படம் போட்ட பை இவை மூன்றிற்கும் உள்ள தொடர்பு எத்தனை குரூரமானது ? குறிப்பாக ஒரு ஷாட்டில் அப்பையை நாயொன்று முகர்வதாக காட்டுவதற்கு எப்படி அய்யா உங்களுக்கு மனது வந்தது ? இன்னொரு புறம் பெண்களை ஜஸ்ட் லைக் தட் கேவலப்படுத்தவும் தவறவில்லை. இப்படத்திற்கு சென்ஸார் கொடுத்திருப்பது யூ / ஏ !

குரங்கு பொம்மைக்காவது பரவாயில்லை, புரியாத புதிர் யூ சான்றிதழ் பெற்ற படம். உண்மையில் புரியாத புதிர் சொல்ல வந்தது நல்ல விஷயம்தான், ஆனால் அதைச் சொன்ன விதம் அதனை அதற்கு நேரெதிராக மாற்றிவிட்டது. ஸ்கேண்டல் பார்ப்பதும், பகிர்வதும், அப்படிச் செய்யும் உங்கள் நண்பர்களை மெளனமாக ஆதரிப்பதும் தவறு என்பதே இயக்குநர் சொல்ல வந்தது. ஆனால் என்ன நடக்கிறது. ஒருவரை பழி வாங்க வேண்டுமென்றால் அவர் பைக்கில் போகும்போது அருகிலுள்ள ஏசி பேருந்தில் பயணம் செய்து அதன் கண்ணாடி மாய்ஷரில் கோலம் போட வேண்டும். அவரை காதலிப்பது போல நடித்து வலையில் வீழ்த்த வேண்டும். அப்புறம் தன்னைத்தானே ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து யாரோ அனுப்புவது போல அவருக்கே அனுப்பி அவரை மன உளைச்சலில் தள்ள வேண்டும். தற்கொலை முயற்சி செய்ய வேண்டும். முடிந்தால் கடைசியாக ஒருமுறை அவருடன் ஜல்ஸா செய்துகொள்ள வேண்டும். கடைசியாக உனக்கு பிரிவின் வலி புரிய வேண்டும் என்று அவரிடம் தத்துவார்த்தமாக பேசி தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அப்பப்பா. ஒரு சிம்பிளான விஷயத்தை சொல்ல ஏன் இப்படி யூ டர்ன் போட்டு, டேபிளை எல்லாம் நொறுக்குகிறீர்கள் ரஞ்சித் ? உங்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது. ஆனால் செய்துகொள்ள பயம் என்றால் உடனே புரியாத புதிர் பார்க்கவும். அத்தனை டீடெயிலிங். உங்கள் டீடெயிலிங்கில் தீயை வைக்க. ரத்தம் சொட்டச் சொட்ட கை நரம்பைக் காண்பிப்பதை முதலில் தடை செய்ய வேண்டும். இத்தனை குரூரமாக படங்கள் எடுக்கக்கூடாது என்றில்லை. குடும்பங்கள் கொண்டாடும் என்று தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்துவிட்டு ரத்தம் காட்டக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.

இவ்விரு படங்களும் ஒரு வகையில் பொதுபுத்தி மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. குரங்கு பொம்மை, ‘இந்த மாதிரி செய்பவர்கள் எல்லாம் அவ்வளவு ஈஸியா சாகக்கூடாது சார்’ என்கிற பொதுபுத்தி. புரியாத புதிர், ‘உங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா என்ன சார் செய்வீங்க’ என்கிற பொதுபுத்தி.

இவ்விரு படங்களில் சொல்லப்படும் அறம், அதாவது மாரல் சயின்ஸ் ஒருமாதிரி போலியாக இருக்கிறது. குரங்கு பொம்மையில் வில்லன் கோடிகளை சம்பாதிக்கிறான். வாழ்க்கையை ஒரு சுற்று அனுபவிக்கிறான். ஆனால் கை, கால்கள் இழந்து துயரப்படுகிறான். கிட்டத்தட்ட குற்றமே தண்டனை க்ளைமாக்ஸை நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாதவன் என்று காட்டப்படும் வில்லன், க்ளைமாக்ஸில் மனம்வருந்தி கண்ணீர் விடுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. புரியாத புதிரில் ஸ்கேண்டல் ஒரு பெண்ணின் உயிரை பறிக்கிறது. அதற்கு காரணமான ஆண்களை பழி வாங்கும் படலத்திலும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். நியாயமாக அதுவும் ஸ்கேண்டலில் தானே சேர வேண்டும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: