25 September 2017

பிரபா ஒயின்ஷாப் – 25092017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எனக்கும் செர்லாக்குக்குமான தொடர்பு மூன்று வயதுடன் முடிந்துவிட்டது. துப்பறிவாளன் பார்க்கும் எண்ணமும் இருக்கவில்லை. விமர்சன அலைகள் என்னை திரையரங்கிற்கு கொண்டு சேர்த்தது. 

ஏதேதோ படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு துப்பறிவாளனை ஆறாவது நாளில் பார்த்தது என் பாவக்கணக்கில் சேர்ந்துவிடும். துவக்கத்தில் குறிப்பாக விஷால் அறிமுகமாகும் காட்சியில் கிறுக்குத்தனமாக தோன்றும் துப்பறிவாளன் இடைவேளை வரை காமோ சோமோ என்று முன்னேறி, அதன்பின் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளாக அவிழ்க்கப்பட்டு படம் முடியும் வேளையில் ங்கொம்மாள என்னமா எடுத்திருக்கான்யா என்று வியப்பு ஏற்படுகிறது. சுஜாதாவின் கணேஷ் – வசந்த்தை நினைவூட்டிய திரைப்படம். இன்னும் சிலமுறை பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. நேரம்தான் பிரச்சனை. 


துப்பறிவாளனிடம் என் மனம் கவர்ந்த விஷயங்கள் :-

1. மரண தொழில்நுட்பங்கள். விபத்தாக முன்னிறுத்தப்படும் கொலைகள் என்பது தமிழ் சினிமாவில் சில வருடங்களாக டிரென்டில் இருக்கிறது. அது எப்படி என்பதில் தான் சுவாரஸ்யம். செயற்கையாக மின்னலை வரவழைப்பது, லாஃபிங் கேஸை காரின் ஏர் ஃபிரெஷனரில் கலப்பது, ரைஸின் எனும் நச்சுப்பொருளை உடலில் செலுத்தி உறுப்புகளை செயலிழக்க வைப்பது என்று ஒவ்வொன்றும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. 

2. டெவிலின் கதாபாத்திர வடிவமைப்பு. பெரிய பெரிய தப்பு காரியங்களை எல்லாம் கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாமல் சாதாரணமாக செய்யும் ஆள். அறுவை இயந்திரத்தால் பிணத்தை அறுத்துவிட்டு, ரத்த வெள்ளத்தில் இருக்கும்போது கூட காபியை ஒரு மிடறு சுவைத்துவிட்டு அதன் சுவையை கண்களை மூடி சிலாகிக்கும் ஆள். 

3. சண்டைக் காட்சிகள். ஒருவேளை அயல்நாட்டு சினிமாக்களில் இருந்து எடுத்திருக்கலாம். மவுத் ஆர்கன் சண்டைக்காட்சி, சீன உணவக சண்டைக்காட்சி, சற்றே நீளம் என்றாலும் மாங்க்ரூவ் காட்டு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என்று ஒவ்வொன்றும் தரம். குறிப்பாக சீன உணவக சண்டைக் காட்சி !

துப்பறிவாளன் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்ற வைத்த விஷயங்கள் :-

1. விஷால் கதாபாத்திரம். கணியன் பூங்குன்றன் புத்திசாலித்தனமான துப்பறிவாளன். ஆனால் ஒருவனுக்கு முதுகில் எல்லாம் மூளை இருக்கக்கூடாது. க.பூ நிறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் தன்னுடைய பார்வை கோணத்திலேயே இல்லாத விஷயங்களை எல்லாம் எப்படி அவரால் கண்டுபிடிக்க முடிகிறது ? சினிமாவில் துப்பறிவாளராக இருப்பது சுலபம். இயக்குநர் சொல்லும் விஷயங்களை செய்தால் போதும். அப்புறம், விஷால் ஏன் கிறுக்கன் போல நடந்து கொள்கிறார் ? (முதலில் பாடி மவுண்ட் கேமராவை தடை செய்ய வேண்டும் ?)

2. பிரசன்னா கதாபாத்திரம். பிரசன்னாவின் மீது உங்களுக்கு அப்படியென்ன கோபம் மிஷ்கின் ? பிரசன்னாவின் மனோஹர் கதாபாத்திரம் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுகிறது. ஒன்று க்ளைமாக்ஸ், இன்னொன்று பார்வையாளர்களிடம் விஷாலை உரையாட வைப்பது. மற்றபடி சுத்த டம்மி. அடிக்கடி விஷால் கதாபாத்திரத்தால் அவமானப்படுத்தப்படுகிறார். ஒருவேளை பிரசன்னாவையும் புத்திசாலியாக காட்டியிருந்தால் இது கணேஷ் – வசந்த்தே தான் !

3. காஸ்டிங் அபத்தங்கள். யார் யாரோ நடிக்க வேண்டிய வேடங்களில் யார் யாரோ நடிக்கிறார்களே என்றே கவலையாக இருக்கிறது. பிரசன்னாவின் வேடம் ஒரு துயரம் என்றால் வினய்யின் வேடம் பெருந்துயரம். எப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு அதனை போயும் போயும் வினய்யிடம் கொடுத்திருக்கிறீர்களே அய்யா.

4. காதல் காட்சிகள். எதை வேண்டுமானாலும் விடுவார்கள் ஆனால் காதலை மட்டும் விட்டுத்தொலைக்கவே மாட்டார்கள். முதலில் கதாநாயகி என்பதே துப்பறிவாளனுக்கு தேவையில்லை. அதிலே ஒரு காதல் வேறு. குறிப்பாக தன் சட்டையை அனு அணிந்தார் என்பதற்காக கோபப்படுவதும், ஷாப்பிங் மால் விபத்துக்குப் பின் அனுவிடம் விஷால் உளறுவதும் எரிச்சலூட்டும் காட்சிகள்.

5. கதை சொல்வதில் உள்ள வேகம். ஒவ்வொருமுறை கணியன் தான் கண்டுபிடித்ததை விவரிக்கும்போது மனப்பாடச் செய்யுளை மறந்துவிடுவதற்கு முன்பு ஒப்புவித்துவிடும் தொனியிலேயே பேசுகிறார். பொதுவாக மற்ற படங்களில் இதுபோன்ற சமயங்களில் இண்டர்கட் காட்சி வைப்பார்கள். மிஷ்கின் தன் படங்களுக்கு வரும் எல்லோரும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்.

ஒரு வகையில் துப்பறிவாளனின் பலம், பலவீனம் இரண்டும் அதன் வினாதத்தன்மை என்று சொல்லலாம். மிஷ்கின் ஏராளமான குறியீடுகள் வைத்து படம் எடுக்கும் நபர். பிசாசு படத்தின் குறியீடுகளை இணையத்தில் பலரும் டீகோட் செய்து எழுதியபோது நான் அரண்டு போயிருக்கிறேன். பிசாசு படத்தை நான் அப்படியொரு கோணத்தில் பார்க்கவே இல்லை. அதே போல துப்பறிவாளனையும் சிலர் டீகோட் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். காட்சிகளின் பின்னணியில் வரும் ஓவியங்களைப் பற்றி ஒரு பதிவில் படித்தேன். பின்னணியில் ஓவியங்கள் வருகின்றன என்பதையே நான் கவனிக்கவில்லை. 

ஒரு காட்சியில், ஒரு டிராவல் அலுவலகத்தில் ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருக்கிறார். ஜான் விஜய் வந்து கிறுக்கன் மாதிரி சோபா வந்திருக்கு என்கிறார். உடனே அவசர அவசரமாக கடை சாத்தப்படுகிறது, படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருந்தவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படுகிறார், இன்னொரு அறையில் எல்லோரும் அவசர அவசரமாக குழுமி... பாஸ்தா சாப்பிடுகிறார்கள். வினய் சமைக்கிறார், மற்றவர்களுக்கு பங்கு வைத்து பரிமாறுகிறார் என்பதை ஒருவகையில் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது. ஆனால் அந்த படிவம் பூர்த்தி செய்பவரை வெளியேற்றுவது எல்லாம் நெருடுகிறது. 

கொஞ்சம் லேட் பிக்கப் என்றாலும் சாயிஷா சேகல், அனு இம்மானுவெல் போன்ற அழகிய நடிகைகள் தமிழ் தயாரிப்பாளர்கள் கண்களில் படத் துவங்கியிருக்கிறார்கள். கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் அணுகினால் கொடுக்கிறேன்.

ராதா ஜோகேந்திரனுக்காக நான் ஆணையிட்டால் பார்க்கவேண்டிய சூழலுக்கு ஆளானேன். எப்படி இதுமாதிரி படங்களை எல்லாம் எடுக்கிறார்கள் என்று திகைத்துப் போனேன். ஆர்வம் தாங்காமல் இயக்குநரை கூகுள் செய்தேன். பெயர் தேஜா. கடந்த பதினேழு வருடங்களில் பதினைந்து, இருபது படங்களை இயக்கியிருக்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் ஹரி, சுராஜ், லிங்குசாமி, தரணி, அட்லி, பூனை சிவா போன்றவர்களை கிட்டத்தட்ட தேஜாவின் வகையறாவிற்குள் அடைக்கலாம். ஆனால் தேஜா அதைவிட கீழே பேரரசு லெவலில் இருக்கிறார். வித்தியாசம் என்னவென்றால் தமிழில் பேரரசுவை மறந்துவிட்டார்கள், தெலுங்கில் தேஜா இன்னும் சர்வைவ் ஆகிக்கொண்டிருக்கிறார். டோலிவுட் ஒரு பத்து வருடங்கள் கோலிவுட்டை விட பின்தங்கியிருக்கிறது.

நான் ஆணையிட்டாலில் தமிழுக்காக நாசர், மயில்சாமி, நண்டு ஜகனை வைத்து சில காட்சிகளை மட்டும் படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் இரண்டே இரண்டு பாஸிட்டிவான விஷயங்கள். 

ஒன்று, வசனங்கள். உதட்டுல சூடு பட்டவனுக்குத்தான் சிகரெட் பிடிக்கிற தகுதி இருக்கு, பாம்புக்கு புத்து வேணும்ன்னா எறும்புதான் வேலை செய்யணும், காசு இருக்குறவன் திருப்பதிக்கு போனாலும் மொட்டைதான் அடிச்சு விடுவாங்க, கிரீடம் வச்சு விடமாட்டாங்க – இப்படி நிறைய வசனங்கள். அப்புறம் தமிழக அரசியலை ஒத்து சில வசனங்கள் வருகின்றன. 

இரண்டாவது, காஜல் அகர்வால். பச்சைக்கிளி முத்துச்சரம் என்று பழைய எம்.ஜி.ஆர் பாடல் பின்னணியில் காஜல் அறிமுகமாகும் காட்சி அதகளம். அதைத் தொடர்ந்து ஒரு ரொமாண்டிக்கான பாடல். அதன்பின் படம் அது இஷ்டத்துக்கு நாராசமான திசைக்குப் போய் காஜலை காணாமல் ஆக்கிவிடுகிறது. என்னென்னவோ நடந்து கடைசியில் காஜலாலேயே இக்கொடுமைகளை எல்லாம் தாளமுடியாமல் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் டியூப் இணைப்பை துண்டித்துக் கொள்கிறார். அதன்பிறகு கடைசி அரைமணிநேர படத்தில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. காஜல் மூச்சு நின்றதும், எழுந்து தடதடவென திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டேன்.

காஜல் அகர்வால் அவருடைய கேரியரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது. போதாத குறைக்கு குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாராம். பொதுவாக நடிகைகள் இம்மாதிரி படங்களில் நடித்ததும் ஒரு பெண்ணியவாதி இமேஜ் வந்து சேர்ந்துக்கொள்ளும். அதன்பின் எல்லாம் சுபம் தான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: