27 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 27052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புதிய மத்திய அரசாங்கத்தில் வெளியாகும் முதல் ஒயின்ஷாப் !

தேர்தல் முடிவுகள் என்பது பெரும்பாலும் ஒரு புதிராகவே அமைந்துவிடுகிறது. மக்களுக்கு மட்டுமல்ல. பல வருடங்கள் அரசியலில் பழம் தின்று கொட்டையடித்து பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கே கூட. ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று மோடியாருக்கு முன்பே தெரிந்திருந்தால் கடைசி நேர பிரஸ் மீட், கேதர்நாத் தியான ஸ்டண்ஸ் எல்லாம் செய்திருக்க மாட்டார் இல்லையா ? தற்போது மோடியாருக்கு தான் அப்படி செய்ததை எல்லாம் நினைத்தால் சங்கடமாக இருக்கக்கூடும். நூறு சதவிகித தமிழகமும் பா.ஜ.க. வேண்டாம் என்று நினைத்திருந்தால் கூட பா.ஜ.க.வை தவிர்த்திருக்க முடியாது என்பதால் அது குறித்து வருந்துவதற்கு ஒன்றுமில்லை. அதே சமயம் தமிழகத்தின் முடிவுகளைக் கண்டு வியக்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.

குறிப்பாக தி.மு.க. ஆதரவாளர்கள் எல்லோரும் நிஜமாகவே சந்தோஷமாகத்தான் இருக்கிறார்களா அல்லது தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்களா என்று புரியவில்லை. 38 MP தொகுதிகள், இடைத்தேர்தலில் 13 MLA தொகுதிகள் என்பது மகிழ்வான செய்திதான், இதுவே வேறொரு சமயமாக இருந்திருந்தால். ஒருபுறம் தி.மு.க.விற்கு கிளீன் ஸ்வீப் என்கிற சந்தோஷத்தை கெடுத்த தேனி தொகுதி. அதுகூட பரவாயில்லை. 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் இன்னமும் (அதாவது நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற டிஸாஸ்டர்களுக்குப் பிறகும்) தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இதற்கு மேல் இது பெரியார் மண் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது ? இது இடைத்தேர்தல் தான். முழுமையான சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் ஒரு பேச்சுக்கு இதே பாங்கில் சென்றால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 138 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 96 இடங்களையும் கைப்பற்றும். அப்போதும் தி.மு.க.வினர் மண்ணைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதிலே தி.மு.க. மட்டும் தனியாக 150+ இடங்களையும், கூட்டணி கட்சிகள் சேர்த்து 180+ இடங்களையும் பெற்றால் மட்டுமே அது வெற்றி.

மீண்டும் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி என்பதால் குறைந்தது அடுத்த சில ஆண்டுகளுக்கு நாம் சந்திக்கப்போகும் டிஸாஸ்டர்கள் :-

  • நீட் தேர்வுகள். அது அதன் நீட்சியாக மற்ற படிப்புகளுக்கும் கொண்டு வரப்படலாம்.
  • சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை செயல்படுத்தப்படும்.
  • ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.
  • காவிரியைத் தர மாட்டார்கள். வேண்டுமானால் சின்னம்மாவைத் தருவார்கள்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான மின்சார சீண்டல்களுக்கு ஆளாகப்போகிறோம். ஒருவகையில் தி.மு.க.விற்கு இப்போது கிடைத்திருக்கும் வெற்றி ஒரு முள்கிரீடம். இனி தமிழ்நாட்டில் உள்பாவாடை தொலைந்தால் கூட அதற்கு தி.மு.க. தான் காரணம் என்று கேஸ் எழுதுவார்கள். துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க.வே மனமுவந்து எதிர்த்தால் கூட அவர்களால் தடுக்க முடியாது. வேண்டுமானால் நாம் திருமா பாராளுமன்றத்தில் கர்ஜித்தார் என்றோ, கனிமொழி ‘என்ன அநியாயங்க இது ?’ என்று கேள்வி எழுப்பினார் என்றோ கருப்பு, சிகப்பு, நீல நிற ஹார்டின்களை போட்டு சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

இப்படித்தான் கந்தர்வ ராத்திரி என்கிற மலையாள படத்தில் வைராக்கியமாக இருக்கும் விசித்திராவை... வேண்டாம் விடுங்கள்.

***************

துக்கத்தில் இருக்கும் மனதைக் கொஞ்சம் தும்பாடு பற்றி பேசி ஆற்றிக்கொள்வோம். கெட்டவார்த்தை இல்லை. தும்பாடு (Tumbadd) என்பது கடந்த வருடம் வெளியான ஹிந்தி திரைப்படம். 

பூர்த்தி தேவி என்னும் பெண் கடவுள். அளவிலா தங்கமும், தானியமும் கொண்டவள். இப்பூமியானது அவளது வயிற்றில் தான் அமைந்துள்ளது. ஏராளமான கடவுள்களை உருவாக்கிய தேவியின் மூத்த குழந்தையின் பெயர் ஹஸ்தர். ஹஸ்தர் பேராசை கொண்டவன். அவன் தேவியின் தங்கத்தையும், தானியத்தையும் முழுமையாக அடைய நினைக்கிறான். நினைத்தபடி தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்கிறான். ஆனால் தானியத்தை நெருங்கும் முன் மற்ற கடவுளர்களால் தாக்கப்படுகிறான். அவர்களிடம் இருந்து அவனைக் காக்கும் தேவி, அளவிலா தங்கம் அவனுக்கே சொந்தம், ஆனால் அவனுக்கு தானியம் (அதாவது உணவு) மட்டும் கிடைக்காது என்கிற சாபத்துடன் அவனை தன் வயிற்றில் வைத்து காப்பாற்றுகிறார். இது முன்கதை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டம். தும்பாடு அரண்மனையில் ஹஸ்தருக்கு அமைக்கப்பட்டுள்ள கோவிலில் அளவிலா தங்கத்துடனும், தீராத பசியுடனும் ஹஸ்தர் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவேளை தங்கக்காசை எடுக்கச் செல்கையில் ஹஸ்தரின் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டால் அவர்களுக்கு மரணமே ஏற்படாத சாபம் கிடைத்துவிடும். அதற்கு சாட்சியாக அந்த ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறார்.

ஹஸ்தர்
இப்போது ஹஸ்தரைப் போலவே பேராசை கொண்ட கதாநாயகன் விநாயக். அவனது சிறு வயதிலிருந்தே அவனுக்கு அந்த புதையலின் மீது ஒரு கண். இதற்கு மேல் கதையை எழுதிப் படித்தால் சுவாரஸ்யமில்லை. ப்ரைமில் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் டப்பிங் உள்ளது.

ஒரு கைவினைப் பொருளை உங்களுக்காக பிரத்யேகமாக தயாரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படத்தின் விஷுவல்ஸ். சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய கதை என்பதால் தேவதாசி, சதி, மன்னராட்சி முறை, சுதந்திரப் போராட்டம், அதை மக்கள் அணுகிய விதம் போன்ற விஷயங்களை லேசாகத் தொட்டுச் செல்கிறது.

படம் பார்த்தபிறகு தும்பாடு படுத்தும் பாடு ஏராளம். ஒரு விஷயம் உறுதி, இரண்டு மணிநேர படம் – அதைப் பார்த்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் அதனை மறந்துவிட முடியாது. குறைந்தது இரண்டு நாட்களுக்காவது தும்பாடின் தாக்கம் இருக்கும். இதனை ஒரு mind-bender என்கிறார்கள். படம் பார்த்த பிறகும் உங்கள் மனதில் ஏராளமான கேள்விகள் எழும் என்பதற்கு நானும் கோராவும் சாட்சி.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Anonymous said...

"மின்சார சீண்டல்களுக்கு"
Nice...

Ponmahes said...

//இதற்கு மேல் இது பெரியார் மண் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது ?
சரி தான் . மதவாதத்தை எதிர்த்து வென்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக, பெரியாரியவாதிகள், திமுக தேர்தலில் நேரடியாகவே ஜாதிய கட்சித் தலைவர்களுக்கு சீட் கொடுத்ததை பற்றி மருந்துக்குக் கூட விமர்சிக்க வில்லை . அப்பறம் ராகுல் காந்தி தன்னை கவுல் பிராமணன் ன்னு சொல்லி பெருமை பட்டதை கூட ஜஸ்ட் லைக் தட் ஆக விட்டு சென்றார்கள் .... கேட்டால் தேர்தல் அரசியல் என்று வீணா போன காரணத்தை சொல்வது ...

பெரியாரிய பெண்ணிய வாதிகள் கூட சீமான்பெண்களுக்கு பாதிக்கு பாதி சீட் குடுத்ததை பெயரளவுக்குக் கூட பாராட்டாமல் இழிவு படுத்தினார்கள் . இதற்குப் பின்னால் வேறு ஏதோ அஜெண்டா இருப்பதாக தோன்றுகிறது. இப்போது பெரியார் உயிரோடு இருந்தால் சீமானைத் தான் தூக்கி பிடிப்பார் .ஏனென்றால் பெரியார் நினைத்த சமத்துவம் அங்கு தான் இருக்கிறது ....

வாழ்த்துக்கள் .....