16 July 2018

பிரபா ஒயின்ஷாப் – 16072018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது.

கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும்பாலான இந்தியர்களைப் போல உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டும் பார்க்கும் பழக்கம் என்னிடமுண்டு. 2002ம் ஆண்டு உலகக்கோப்பையில் துவங்கிய பந்தம் அது. அந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனும், பிரதான அணியுமான ஃபிரான்ஸை வென்று அதிர்ச்சியளித்தது செனகல் என்ற குட்டி அணி. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. இறுதிப்போட்டியில் ப்ரெஸில், ஜெர்மனி அணிகள் மோதி ப்ரெஸில் வென்றது. அதுமுதல் ப்ரெஸில் அணியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அதன்பிறகு ப்ரெஸில் ஒரு உலகக்கோப்பையைக் கூட வெல்லவில்லை. இம்முறை இறுதிப்போட்டி தவிர்த்து மேலும் சில போட்டிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது (புது டிவி !).

கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரையில் இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்றின் மேல் அபிமானம் இருந்தாலொழிய போட்டியில் ஆர்வம் இருக்காது. இருபது பேர் சேர்ந்து ஒற்றைப் பந்தை அலைக்கழிப்பதை சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். என்னதான் விளையாட்டோ, என்று அரை நொடி நேரம் கவனத்தைத் திருப்பினால் யாரேனும் ஒருவர் கோல் போட்டிருப்பார். போலவே கால்பந்தின் சுவாரஸ்யம் இரண்டு அணிகளில் யாரேனும் ஒருவர் முதல் கோல் போடும் வரைதான். அதன்பிறகு சீக்கிரத்தில் அடுத்த அணி பதில் கோல் போடவில்லை என்றால் போரடிக்கும். மாறாக, முதல் அணியே இரண்டாவது கோலையும் போட்டுவிட்டால் க்ளோஸ். அதே சமயம், நிறைய மாட்சுகளில் கடைசி சில நிமிடங்களில் கூட ஆட்டத்தின் திசை மாறி, அதுவரை அடி வாங்கிக் கொண்டிருந்த அணி வெற்றி பெறும். இரவு பதினொன்றரை மணிக்கு நடைபெற்ற நிறைய போட்டிகளை முதல் கோல் மட்டும் பார்த்துவிட்டு தூங்கி எழுந்து பார்த்தால், முதல் கோல் அடித்த அணி தோற்றிருக்கும். 

கிரிக்கெட் ரசிகர்கள் ஏதேனும் ஒரு கால்பந்து போட்டியை ஒரு பத்து நிமிடங்கள் பார்த்தால் போதும். கிரிக்கெட்டை ஏன் ஜென்டில்மேன்’ஸ் கேம் என்கிறார்கள் என்று புரியும். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் இன்னொருவரை தள்ளிவிடுகிறார். அல்லது தள்ளிவிட்டது போல கீழே விழுகிறார்கள். லேசாக எதிரணி வீரரின் கை பட்டாலே கீழே விழுந்து புழுவைப் போல துடிக்கிறார்கள். (அவ்வளவு வீக் பாடியா பாஸ் ?). பல சமயங்களில் இதுபோன்ற கை டச், கால் டச் களேபரங்களே எதிரணிக்கு பெனால்டி கிக், ஃப்ரீ கிக் போன்ற வாய்ப்புகளை வழங்கி அதன் திசையே மாறிவிடுகிறது. கிரிக்கெட்டை கவனியுங்கள். பெரும்பாலான ஆட்டக்காரர்கள் அவுட் என்று தெரிந்தால் நடுவரின் முடிவுக்காக காத்திராமல் பெவிலியன் திரும்புகிறார்கள். கால்பந்தில், முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடுவரிடம் செவாலியே போல நடித்துக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் வீரருக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எதிரணி வீரர்கள் உட்பட வந்து காயம்பட்ட வீரரை கவனிக்கிறார்கள். ஒருவேளை காயத்திற்கு காரணம் இன்னொரு வீரராக இருந்தால் அவர் வருத்தம் தெரிவிக்கிறார். கால்பந்தில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு கீழே விழுந்தால் கூட மீதமுள்ள பத்தொன்பது வீரர்களும் நடுவர் விசில் ஒலி எழுப்பும்வரை பந்தை துரத்துவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

குரோஷியாவின் மேனேஜர் தலிக் !
விளையாட்டைத் தாண்டி இந்த கால்பந்து உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த நபர், குரோஷியாவின் மேனேஜர் ஸ்லாத்கோ தலிக் (த் கிடையாது). பெரும்பாலும் அணியின் மேனேஜர்கள் என்றால் டக் அவுட்டில் உக்கிரமாக இருப்பார்கள். எதிரணி கோல் அடித்துவிட்டால் குய்யோ, முறையோ என்று கத்துவதும், தங்கள் அணி கோல் அடித்துவிட்டால் ஆவேசமாக கொண்டாடுவதுமாக இருப்பார்கள். ஆனால் நம்ம குரோஷியாவின் மேனேஜரோ செம கூல். இவருடைய அணி கோலடித்தால் கூட, இந்த ஆள் நிஜமாகவே குரோஷியா மேனேஜரா அல்லது எதிரணியின் மேனேஜரா என்று சந்தேகப்படும் அளவிற்கு சாந்தம்.1991ல் யுகோஸ்லாவியாவிடமிருந்து விடுதலை பெற்ற குரோஷியா கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்பது இது ஐந்தாவது முறை. ஒருவேளை குரோஷியா வெற்றி பெற்றிருந்தால் அது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியாக இருந்திருக்கும். ப்ச். ஆனால் குரோஷியாவும், தலிக்கும் மனங்களை வென்றுவிட்டார்கள். எல்லா மேனேஜர்களும் தலிக்கைப் போல சாந்தமாக இருந்துவிட்டால் நாடு சுபிட்சமாகிவிடும்.

********** 

சில படங்களின் அவுட்லுக்கைப் பார்த்தாலே ரொம்ப கேர்ளிஷ்ஷாக இருப்பதால் பார்க்க வேண்டாம் என்று தவிர்த்துவிடுவேன். உதாரணத்திற்கு, முப்பத்தியாறு வயதினிலே, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள். (விதிவிலக்காக மகளிர் மட்டும் ஓரளவுக்கு பிடித்திருந்தது). அந்த வகையில் நடிகையர் திலகம் படத்தின் மீது ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக குடும்பத்தில் உள்ள மகளிரின் காரணமாக அமேஸான் ப்ரைமில் நடிகையர் திலகம் பார்க்க நேர்ந்தது. பத்து நிமிடங்களுக்குள் நாம் ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. முதலில் இந்த பை-லிங்குவல், மல்டி-லிங்குவல் படம் எடுக்கும் ஓலர்களுக்கு கோலிவுட்டில் ரெட் கார்டு போட வேண்டும். டப்பிங் படமென்றால் டப்பிங் என்று சொல்லித் தொலையுங்களேன். அது என்ன பை-லிங்குவல். கீர்த்தி சுரேஷ் தானே சாவித்திரி. சமந்தாவை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து காண்டாகும் அளவிற்கு சமந்தாவுக்கு போர்ஷன் அதிகம். ஹவ் டூ பிக்கப் கேர்ள்ஸ் என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இத்திரைப்படத்தின் துல்கர் சல்மான் போர்ஷனை ஒரு கட்டாய பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி முழுப் படத்தைப் பார்க்காமல் படத்தைப் பற்றி குறை சொல்வது தவறு என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Ponmahes said...

அருமையான பதிவு... வாழ்த்துகள். எனக்கும் நடிகையர் திலகம் பார்க்க தோணவில்லை. ஒரு வேளை கீர்த்தி சுரேஷ் காரணமாய் இருக்கலாம்....