Showing posts with label oru. Show all posts
Showing posts with label oru. Show all posts

2 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 02122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிங்கம் 2 அவ்வப்போது பிட்டு பிட்டாக பார்த்ததை முன்னிட்டு சில வரிகள். இப்பொழுதெல்லாம் முனுக்குன்னா ஏதாவதொரு அமைப்பு கேஸ் போட்டுவிடுகிறார்களே. அதனை தவிர்க்க ஹரி எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். ஒரு வில்லனை இஸ்லாமியராக சித்தரித்ததை சரி கட்டுவதற்காக மன்சூர் அலிகான் கதாபாத்திரம். ஒரு கிறிஸ்தவ தலித் ராஜேந்திரனுக்கு பதிலாக சந்தானம் கதாபாத்திரம். மன்சூர் அலிகானை உருவத்தை முன்னிட்டு ‘காட்டெருமை’ என்று அழைக்கவேண்டிய வசனத்தை வேண்டுமென்றே ‘பைசன்’ என்று மாற்றியிருக்கிறார். இன்னொரு காட்சியில் ‘பொட்டை’ என்று வரவேண்டிய வசனம் ‘பேடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில் யாராவது கோபத்தில் இருக்கும்போது ‘பேடி’ என்று திட்டி பார்த்திருக்கிறீர்களா...? எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தவர்கள் டேனி விஷயத்தில் மட்டும் கவனக்குறைவாக விட்டிருக்கிறார்கள். சூர்யா ஒரு காட்சியில் டேனியை ‘African Animal’ என்று திட்டுகிறார். ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் தமிழ் படம் பார்த்து கேசெல்லாம் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ...?

பழைய தமிழ் சினிமாக்களில் மெயின் ஹீரோயின் ஒருவர் இருக்கும்போது இரண்டாவதாக ஒருவர் ஹீரோவை ஒருதலையாக காதலிப்பார். ஹீரோவுடன் ஒரு கனவுப்பாடலில் ‘திறமை’ காட்டுவார். ஹீரோவுக்கு உதவிகள் செய்து, படம் முடியும் தருவாயில் அற்பாயுசில் போய்ச் சேர்ந்துவிடுவார். அந்தமாதிரி ஒரு வேடம் ஹன்சிகாவுக்கு. சித்தப்பாவின் ஐபோன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி சூர்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். ஹன்சிகாவுக்கு பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டது என்ற காரணத்திற்காக குடும்பத்திலேயே அவரை விஷம் வைத்து கொன்றுவிடுகிறார்கள். அடப்பாவிகளா...! ஐபோன் பாஸ்வேர்ட் தெரிஞ்சிடுச்சு’ன்னா மாத்திக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன்டா ஹன்சிகாவை போட்டீங்க...? பச்ச மண்ணுடா அது...!

மறுபடியும் சுஜாதாவிடமே திரும்பியாயிற்று. முதலில், கொலை அரங்கம். அப்புறம், ஒரு நடுப்பகல் மரணம். இரண்டும் க்ரைம் த்ரில்லர்கள். முதலாவதில் கணேஷ் – வசந்த் வருகிறார்கள். ஒரு சொத்து, நான்கு வாரிசுகள். ஒருவர் மட்டும் சொத்தை முழுமையாக அபகரிக்க முயற்சிக்கிறார். அது யாரென்பதை சஸ்பென்ஸ் கலந்து, எண்பதுகளில் நடைபெற்ற இலங்கைத்தமிழர் போராட்டத்தை லேசாக உரசி சொல்லியிருக்கிறார். கணேஷ் – வசந்தை படிக்கும்போது ‘அந்த’ இரட்டையர்கள் நினைவுக்கு வந்தார்கள். குறிப்பாக வசந்த் கணேஷை ‘பாஸு’ என்று விளிப்பதும், ஃபிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதும் பைலட்டை நினைவூட்டியது. உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு கணேஷும் ஒரு வசந்த்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் இண்டலிஜென்ஸ், கொஞ்சம் ஜொள்ளு, கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் விளையாட்டுத்தனம் எல்லாம் கலந்தவன் தானே மனிதன். ஒரு நடுப்பகல் மரணம் அதைவிட சுவாரஸ்யமான கதை. புதுமண ஜோடியொன்று தேனிலவுக்கு செல்கிறது. கணவன் கொல்லப்படுகிறான். வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு முன்னூறு பக்கங்களில் க்ளைமாக்ஸை எட்டுகிறது. 

க்ரைம் த்ரில்லர் நாவல், க்ரைம் த்ரில்லர் சினிமா என்றெல்லாம் பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாக இருக்கிறது. யாரும் நம்மை டாட்டா சுமோவில் அரிவாளோடு துரத்துவதில்லை...? யாரும் நம்மை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைப்பதில்லை...? ஒரு போலீஸ் விசாரனையில்லை. ஒரு கோர்ட், கேஸ் இல்லை. தூங்கி விழிப்பது, சாப்பிடுவது, அலுவலகம் செல்வது. ச்சே என்ன வாழ்க்கை இது...?

6174 நாவலுடன் தொடர்புடைய மிங்குன் ஆலயம்
அலுவலகத்தில் தோழி ஒருவர், அவரிடம் யவன ராணி முதல் பாகம் மட்டும் இல்லையென்று ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொண்டிருந்தார். புத்தகத்தின் விலை 210ரூ. 250க்கு மேல் வாங்கினால் இலவச டோர் டெலிவரி. என்ன செய்வது என்று யோசித்தவரிடம் 6174 என்ற நாவலைப் பற்றி நான் கேள்விப்பட்ட அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி வாங்க வைத்துவிட்டேன். வேறெதற்கு...? இரவல் வாங்கி படிக்கத்தான். புத்தகம் தற்போது என் கைவசம்...!

இரவல் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சாட்டில் அறிமுகமானார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் கடந்து, ‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா...?’ என்றொரு கேள்வியை கேட்டார். எனக்கு புரியவில்லை. ‘ஏன் கேட்கிறீர்கள்...?’ என்றேன். ‘இரவல் வாங்கி படிக்கத்தான்...!’ என்று பதிலளித்தார். எனக்கு பக்’கென்று ஆகிவிட்டது. அத்துடன் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். சென்ற வாரத்தில் ஒருநாள் ராஜ் குமார் என்ற வாசகர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்களிடம் நிறைய புக்ஸ் இருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். அதே ‘பக்’. அதெல்லாம் இல்லைங்க. ரீடிங்கில் நானொரு பிகினர் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய புத்தகங்களை நான் இரவல் கொடுப்பதில்லை. கூடாது என்றில்லை. இரவல் வாங்கும் 99.9 சதவிகிதக்காரர்கள் அதனை திருப்பிக்கொடுப்பதில்லை. அதுகூட பிரச்சனையில்லை. கொடுத்து சிலநாள் கழித்து புத்தகத்தை கேட்டால் அதுவா..? அது இங்கதான் எங்கேயோ இருந்துச்சு... தெரியல மச்சான்... என்று அலட்சியமாக பதில் வரும். அட்லீஸ்ட் படிச்சியா...? என்று கேட்டால் எங்க மாப்ள...? வண்டி கழுவுறதுக்கு கூட நேரமில்லை என்று சலித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன மா’ன்னாவுக்குடா புக்கை வாங்கின’ன்னு கடுங்கோபம் வரும். இப்படித்தான் சென்ற புத்தகக்காட்சியில் சிங்கம் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்த மூன்று புத்தகங்களை வாங்கினார். அதை இரவல் வாங்கி படித்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்குள் அவருடைய நண்பர் யாரோ முந்திவிட்டார். இப்ப புக்கு எங்கடா’ன்னா என் சின்னாத்தாளோட மாமியா பொண்ணு கட்டிக்கிட்ட பையனோட சித்தப்பன் வீட்டுல இருக்குங்குறார். எங்க போய் முட்டிக்கிறது...? புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்...!

நீ மட்டும் இரவல் வாங்கலாமா...? என்று கேட்கலாம். இரவல் வாங்குவதில் நான் மற்றவர்களிடம் என்ன மாதிரியான டீசன்ஸியை எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களிடமும் பின்பற்றுகிறேன். இரவல் வாங்கிய புத்தகத்திற்கு ப்ரையாரிட்டி கொடுத்து படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆரூர் மூனா வீட்டிலிருந்து பத்து, பதினைந்து புத்தகங்கள் எடுத்து வந்திருப்பேன். அவற்றில் இன்னும் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி. முடித்ததும் வீடு தேடிச்சென்று கொடுத்துவிடுவேன். அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. திரும்பக் கொடுத்தால் தான் அடுத்த செட்டு புத்தகங்கள் இரவல் கிடைக்கும்.

தீபிகாவுக்காக சில சமயங்களில் யூடியூபில் பார்க்கிற பாடல். அப்படியொரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது பாடலின் மீதான ஈர்ப்பிற்கு பாடகியும் ஒரு காரணம் என்று புரிந்தது. கணீரென்ற குரல். யாரென்று கூகுள் செய்தேன். சுநிதி செளஹான். தமிழில் கூட சில பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் எதுவும் ‘டில்லி வாலி’ போல வசீகரிக்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 March 2013

சென்னையில் ஒரு நாள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


சென்னையில் ஒரு நாள் - படம் பார்க்கும் ஆவலை பெரிதாக ஏற்படுத்தவில்லை. நண்பர் ஒருவர் டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்ததால் சென்றேன். சிலசமயங்களில் எதிர்பார்ப்பின்றி பார்க்கும் படங்கள் அதிகம் பிடித்துவிடுகிறது.

சென்னையில் ஒரு இளைஞன் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைகிறான். அதேசமயம், வேலூரில் ஒரு சிறுமிக்கு உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். ஒன்றரை மணிநேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியமானது என்பதை மற்றும் சில கிளைக்கதைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.


மலையாள ட்ராபிக்கின் மறுபதிப்பு என்பதால் படம் பார்க்கும்போது நியாயமாக நமக்கு ஏற்படவேண்டிய த்ரில் தவறிவிடுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை விட எப்படி நடக்க போகிறது என்ற எண்ணமே மேலிடுகிறது.


பல்முனை பயண திரைக்கதையில் கிட்டத்தட்ட மையப்புள்ளி சேரனுடைய வேடம் என்று நினைக்கிறேன். ஒரே அடியில் பத்து பேரை தூக்கி வீசவில்லை, ஆனால் அப்படியொரு ஹீரோயிசம் சேரனுடைய வேடத்தில். ஆனால் சேரனுடைய நடிப்பு ? திங்கட்கிழமை காலை அலுவலகம் செல்வது போலொரு முகபாவனை. சகல உணர்ச்சிகளுக்கும் அதே தான்.


பூ படத்தில் நடித்த கருவாச்சி பார்வதியா ? பளீரென இருக்கிறார். கதையின் போக்கு அவரை அழவைப்பது துயரம். பிரசன்னாவின் மனைவி வேடத்தில் சினேகாவே நடித்திருக்கலாமே என்று முதலில் தோன்றியது. ஏன் நடிக்கவில்லை என்று படம் பார்த்தபின் தெரிந்துக்கொண்டேன். வெள்ளித்திரை நட்சத்திரமாக பிரகாஷ்ராஜ். அவருடைய மனைவியாக ராதிகா. ராதிகாவின் வேடம் லலிதகுமாரியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். காவல்துறை அதிகாரியாக சரத்குமார். ஆட்டோகிராப் மல்லிகா, மனோ பாலா, ப்ளேடு தினா, கிருஷ்ணன் பஞ்சு என்று நிறைய நடிகர்களுடன் சில அறிமுகங்கள். யார்றா இவன் என்கிற மாடுலேஷனுடன் ஒரே ஒரு காட்சியில் பாலா சிங் ரசிக்க வைக்கிறார்.


ஒரு தாய் - தந்தை, தன்னுடைய மகனின் காதலியை முதன்முதலாக சந்திக்கும் தருணம் எத்தகைய உணர்வுப்பூர்வமானது. ஆனால் கதையின் சூழ்நிலைப்படி அது அதற்கு எதிர்மறையான தருணமாக அமைந்துவிடுகிறது. அந்த உணர்வை ஜேபியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் கண்களில் காட்டிய விதம் அபாரமான நடிப்பு. அடுத்த காட்சியில் காருக்குள் அமர்ந்து மகனுடைய மரணத்தை நினைத்து உடைந்து கதறுவது நடிப்பை கடந்தநிலை. ஒட்டுமொத்த படத்தில் சிறந்த நடிப்பு ஜே.பி லக்ஷ்மி ஜோடியுடையது.


படத்தின் மொத்தக்கதையையும் இருபது நிமிட குறும்படத்தில் சொல்லிவிடக்கூடியது தான். அதை இரண்டு மணிநேர சித்திரமாக சொல்லியிருப்பது முதல் பாதியில் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. தவிர, பல காட்சிகளில் செயற்கைத்தனம் இழையோடுகிறது. மிஷன் இஸ் ஆன் என்று சரத்குமார் சொன்னதும் காவல்துறையினர் வெற்றிக்குறி போட்டுக்கொள்வதெல்லாம் டூ மச். ஜிந்தா காலனிஎபிசோடு முழுவதும் உச்சக்கட்ட சினிமாத்தனம். மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்; ராதிகா அவரது கணவரின் பொறுப்பற்ற தன்மையை அழுத்தம் திருத்தமாக கடிந்துக்கொள்கிறார்; அழுது அரற்றியிருக்க வேண்டாமா ?


படத்தின் இறுதியில் இனியா - பிரசன்னா ஜோடியின் மனமுடிவை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொள்கிறார்கள் என்பது வரைக்கும் மட்டுமே புரிகிறது. இனியாவும் பிரசன்னாவின் நண்பரும் சேர்ந்து பிரசன்னாவிற்கு சின்ன ஷாக் கொடுப்பதற்காக விளையாடினார்கள்; அதை புரிந்துக்கொள்ளாமல் பிரசன்னா அவரசப்பட்டுவிட்டார் என்று வைத்திருந்தால் பெண்மைக்கு பொடலங்காய் கூட்டு வைத்து பெருமை சேர்த்திருக்கலாம். போலவே, பிரகாஷ்ராஜ் அவருடைய மனைவி, மகளை புரிந்துக்கொண்டாரா ? சேரனுக்கு மீடியாவின் கவனத்தை தாண்டி வேறென்ன பெருமைகள் கிடைத்தன ? முதலில் மகனின் இதயத்தை தர மறுத்த ஜேபி - லக்ஷ்மி தம்பதி இன்னொரு உயிர் காப்பாற்ற பட்டதை நினைத்து எப்படி உணர்ந்தார்கள் ? என்று பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் நிறைய இருந்தும் அவசர அவசரமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.


திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ நல்ல படமாகவே தோன்றுகிறது. பெண் வாகன ஓட்டிகளுக்கு தரவேண்டிய மரியாதை, தன்னுடைய மகன் தன் உதவியின்றி தானே காலூன்றி எழ விரும்பும் தந்தையின் மனப்பான்மை, தன்னுடைய தவறை உணர்ந்து கலங்கும் போக்குவரத்து காவலாளி, புகழ் போதையில் மயங்கிக்கிடக்கும் நடிகர், எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைக்கவேண்டிய தன்னம்பிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகன் உயிரைப் போல இன்னொரு பெற்றோருக்கு அவர்களுடைய மகள் உயிர் எவ்வளவு முக்கியம் என்கிற புரிந்துக்கொள்ளுணர்வுடன் கூடிய தியாகம் என்று படம் முழுக்க நெகிழ்ச்சிகளின் குவியலாகவும், கலியுக மனிதர்களுக்கு பாடமெடுக்கும் வகுப்பறையாகவும் விளங்குகிறது. பொழுதுபோக்கு படம் என்கிற வகையில் அந்த தரப்பினரையும் திருப்திப்படுத்திவிடுகிறது. இருப்பினும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று உரிமையுடன் கூடிய ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment