10 January 2014

அஜித்தும் காஜலும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் வீரம் படத்திற்கு டிக்கெட் எடுக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்லமுடியாது. பெருமுயற்சி செய்திருந்தால் எடுத்திருந்திருக்கலாம். கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் அவருடைய ஜில்லாவிற்கு அழைத்து நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆக, புது வருடத்தின் முதல் சினிமா கன்னுக்குட்டியினுடையது...! அஜித் படம்தான் பார்க்க முடியவில்லை அவரைப் பற்றி எழுதவாவது செய்யலாமே என்பதால் ஒரு டைம்பாஸ் போஸ்ட்.

எதுக்கு மாமா வளவள'ன்னு ?  புதுவருஷத்துல என் படத்தை தான் மொதல்ல பாக்கணும்'ங்குற ஒன் ஆசையை சொல்லிடேன்
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் சக முன்னணிகளோடு ஒப்பிடும்போது அஜித்துக்கு ஹீரோயின்கள் அமைவதில் அப்படியொன்றும் நற்பேறு கிடையாது பார்த்தீர்களா...? அவருடைய படங்கள் வெளிவரும் சமயம் அந்த படங்களின் நாயகி புகழின் உச்சியிலிருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கிறது. ஆமாம், சிம்ரன், ஜோதிகா, அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற பிரபல நடிகைகளுடன் அஜித் நடித்திருக்கிறார். இருப்பினும் சில விஷயங்களை வைத்து அஜித்துக்கு ஹீரோயின் ராசி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடலாம்.

1. சமகால ஆளுமைகளுடன் நடிக்காதது
விஜய்யை பாருங்கள். துப்பாக்கி, ஜில்லா என இரண்டு படங்களுடன் காஜலுடன் ஜோடி போட்டுவிட்டார். சூர்யா மாற்றானில். நேற்று வந்த கார்த்தி கூட இரண்டு படங்களில் நடித்தாகி விட்டது. ஆனால் அஜித்துக்கு இன்னமும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. போலவே விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என ஆர்யா வரை ரவுண்டு கட்டிவிட்ட அனுஷ்கா இன்னும் அஜித்துடன் நடிக்கவில்லை. அது புறமிருக்க அமலா பால், நஸ்ரியா, சமந்தா என புதிதாக களம் இறங்கியவர்களுடனும் ஜோடி சேர்ந்த பாடில்லை.

2. இறந்தகால ஆளுமைகளுடன் நடிப்பது
உதாரணத்திற்கு வீரத்தில் நடித்திருக்கும் தமன்னாவையே எடுத்துக் கொள்ளலாம். பையா, சுறா படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் தமன்னா உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஜோடி சேர முடியாத தமன்னா இப்போது காலம் கடந்து சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நயன்தாரா, மங்காத்தாவில் த்ரிஷா போன்றவர்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம். சினேகா என்றொரு நடிகை இருந்தார். அவர் ஜனாவில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபலமாக இருந்தார். அஜித் – சினேகா ஜோடி அபாரமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருந்தார்கள், வருடக்கணக்கில். இறுதியில் ஜனா வெளிவந்தபோது சினேகாவின் புகழ் கிட்டத்தட்ட சரிந்து முடிந்திருந்தது.

3. சுமார் மூஞ்சிகளுடன் நடிப்பது
இது கொஞ்சம் பெரிய பட்டியல். தீனாவில் லைலா, ஆஞ்சநேயாவில் மீரா ஜாஸ்மின், அட்டகாசத்தில் பூஜா, திருப்பதியில் சதா, அசலில் பாவனா, சமீரா ரெட்டி என பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் சந்தடி சாக்கில் அஜித்துடன் நடித்துவிட்டார்கள். குறிப்பாக அசல், திருப்பதி படங்களை எல்லாம் நான் சைவ உணவகத்தில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் மனோபாவத்துடனேயே பார்த்தேன்.

4. அதிகம் அறியப்படாதவர்களுடன் நடிப்பது
இதுவும் ஏறத்தாழ முந்தைய லிஸ்டை போன்றது தான். பில்லா 2ல் பார்வதி ஓமனக்குட்டன், வில்லனில் கிரண், சிட்டிசனில் வசுந்தரா தாஸ், ரெட்டில் ஒரு மொக்கை மூஞ்சி போன்றவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருகிறார்கள். ப்ரியா கில் என்பவர் தமிழில் நடித்தது ஒரேயொரு படம் அதுவும் அஜித்துடன் என்றால் அவருடைய நற்பேறை பார்த்துக் கொள்ளுங்கள். பார்வதி ஓமனக்குட்டன் ஒலக அழகி என்றாலும் நம்மூரை பொறுத்தவரையில் புதுமுகம் தானே.

5. கிழவிகளுடன் நடித்தது
இரண்டாவது பட்டியலில் உள்ள த்ரிஷா, நயன்தாரா தவிர்த்து மீனா, தேவயானி, தபு போன்ற ஒப்பீட்டளவில் அஜித்துக்கு அக்கா போல தோற்றமளிக்கக் கூடிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் நடிக்கும்போதே மீனா வயதில் அதிகம் போல தோற்றமளித்தார். அதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து வெளிவந்த வில்லன் படத்திலும் மீனா அஜித்துடன் ஆட்டம் போட்டால் ஒரு ரசிகனுக்கு எப்படியிருக்கும்.

என்னது நான் தலைக்கு ஜோடியா ? பிரபா ஒன் வாய்க்கு சக்கரை போடணும்டா !
எதற்காக இப்படி சமந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கு என்னுடைய கட்டை வேகும் முன் அஜித்தும், காஜலும் ஜோடியாக ஆடுவதை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 January 2014

பேரடைஸ் பிரியாணி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற ? என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.

ரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே !
அதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.

சமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா...? அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது. 

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்....! புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment